புதன், 22 ஜூன், 2011

Kanimozhi.

கனிமொழி தின்ற உப்பு !


Wednesday, June 08, 2011

மக்களாட்சி அரசியலும், அரசு பதவிகளும் குடும்பச் சொத்தாக மாற்றி கையகப்படுத்தும் முயற்சியின் குறுக்கு வழிகள் எவ்வளவு பேராபத்தானவை என்பதை இந்தியாவிற்கு பாடமாக வைக்கும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் பற்றி இந்திய ஊடகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுவருகிறது. திராவிட அரசியலில் வெற்றிகரமாக 5 முறை முதல்வர் பதவியையும், பல்வேறு மத்திய அமைச்சர் பதவிகளை தன் கட்சியினருக்குப் பெற்றுத் தந்த கருணாநிதி இன்று வேதனையில் இருக்கிறார், இந்த சூழலில் அவரது நாக்கும், எழுத்து இலக்கிய நடையின் சுவை மாறாது அந்த வேதனையை 'திகார் சிறையின் கடும் வெப்பம் பறித்து வைக்கும் அன்றைய மலர்களைக் கூட 10 நிமிடத்தில் கறுக்கி விடும்' என்று பேச முடிகிறது.



கருணாநிதி நான்கு முறை முதல்வராக இருந்தும் கூட (இரண்டாம்) துணைவி திருமதி ராசாத்தி அம்மாளும் அவரது மகளும் அரசியல் சார்ந்த பதவிகளுக்கு உரிமை கோர கருணாநிதி அனுமதித்து இருக்கவில்லை அல்லது அவர்களே ஆசைப்படவில்லை. கருணாநிதியின் வயோதிகம் மற்றும் தனக்கன எதிர்காலப் பாதுகாப்பு என்ற வகையில் கருணாநிதியின் அரசியல் (சொத்துக்களின்) வாரிசுகளில் ஒருவராக தன்னையோ தன் மகளையோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல் காரணமாக ராசாத்தி அம்மாளின் தூண்டுதல் மூலமாகவோ கனிமொழி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. 'என்னால் தானே இத்தனையும் ?' என்று கனிமொழியிடம் சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்த போது இராசாத்தி அம்மாள் வேதனையுடன் அழுது கொண்டே கூறினாராம் (ஜூவி) இது கற்பனையென்றாலும் கூட மெய்பிக்கும் வண்ணம் தேர்தலுக்கு முன்பே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் இராசாத்தி அம்மாளின் கட் அவுட்டுகள் இருந்ததை மறுப்பதற்கில்லை.



கருணாநிதியின் வழிகளில் ஒன்றாக இலக்கியம், கவிதை என்ற ரீதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இலக்கிய வட்டத்தில் வளர்ந்த கனிமொழி, கருணாநிதியின் அரசியல் வாரிசாக மாற்றிக் கொண்டு வளர்ந்தவிதம் முழுக்க முழுக்க இராசாத்தி அம்மாளின் நச்சரிப்பினால் தான் நடந்திருக்க வேண்டும். தயாளு அம்மாவின் ஆண் வாரிசுகள் (ஸ்டாலின், அழகிரி) அரசியலில் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கும் போது இராசாத்தி அம்மாள் தான் பெற்ற ஒரே ஒரு வாரிசு அவ்வாறு உச்சத்தை அடைய நினைத்தது அவரது எண்ணப்படி தவறு இல்லை, ஆனால் கனிமொழி மீதான அவரது அரசியல் திணிப்பு அவரை நீராராடியாவின் நெருக்கம் அளவிற்கு செல்ல வைத்து, குறுக்கு வழியில்ர ( அன்பு மணி / இராமதாஸ் ஆசைப்படும்) மேலவை உறுப்பினர் ஆக்கி, ஊழலில் முகாந்திரம் இருந்து விசாரணைக்கு சிறையில் அடைக்கும் அளவுக்கு ஆக்கியுள்ளது.



என்ன தான் மாட மாளிகை தங்கத்தில் இழைத்த வீடு என்றாலும் ஒருவர் அதில் தனியாக இருப்பது கொடுமையான ஒன்று தான், அதே நிலையை சற்று எதிராக திகார் சிறை பற்றி நினைத்துப்பாருங்கள், பத்து - பத்து சதுர அடியில் ஒற்றை கழிவரை, இவ்வளவு நாள் குடும்பம், கட்சியினர், மகன் என்று தன்னைச் சுற்றிலும் யாராவது இருந்து கொண்டே இருந்த ஒருவர் சிறையில், எப்போதும் எதிர்கால அரசியல் வளர்ச்சி பற்றி சிந்தனையில் இருந்த ஒருவர் இரவுப் பொழுதை தனிச்சிறையில் கழிப்பதென்பது எவ்வளவு கொடுமையான ஒன்று.



இதை எழுதும் போது எனக்கு கருணாநிதியின் ஈழம் குறித்த செயல்பாடுகள் கூட நினைவுக்கு வரவில்லை, நான் இதை திமுக எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலையில் இருந்து கூட எழுதவில்லை. இன்று கனிமொழிக்கும், கலைஞர் தொலைகாட்சி இயக்குனர் சரத் குமாருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாம். இதன்படி மீண்டும் திகாருக்குச் செல்கிறார்கள், இனி எப்போது கனிமொழி வழக்கில் இருந்து மீண்டுவருவாரா அல்லது தண்டனையின் தொடர்ச்சியாக தொடர்வாரா என்பது கேள்விக்குறி ? கனிமொழியின் இன்றைய நிலைக்கு திருமதி ராசாத்தி அம்மாளின் பேராசையும், அதற்கு தடை போட வக்கிலாமல் இன்றும் இலக்கிய சுவை மாறாது பேசும் கருணாநிதியும் தான் காரணம். கனிமொழியும் தெரிந்தே தவறு செய்திருக்கிறார் காரணம், அரசியல் அதிகாரம் தன் தந்தையின் கட்டுப்பாட்டை மீறிவிடாது என்ற நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இதில் பரிதாப்பபட வேண்டிய இருவர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் அவர்களது வாரிசு ஆதித்யா தான், வேறு எவரையும் விட கனிமொழியின் அன்பும் அரவணைப்பம் இவர்கள் இருவருக்குத்தான் தேவைப்படும். இவர்களுக்காக கனிமொழி மீதான அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.



தாயார் இராசாத்தி அம்மாள் காய்ச்சியை உப்பை, தந்தை கருணாநிதியிடம் கொடுத்து ஊட்டிவிடச் சொல்ல கனிமொழியும் ஆசை ஆசையாக தின்றுவிட்டார்.