ஞாயிறு, 27 நவம்பர், 2011

Jayamohan..Aram.

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன்.
எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் மரபின்மைந்தன் முத்தையாவையும் கிளம்பி ஈரோட்டுக்கே செல்லும்படி சொல்லிவிட்டார். செந்தில் நிதானமாகவே குளித்தார். பாட்டுபாடாமல் இத்தனைநேரம் குளிப்பவராக அவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
நான், கிருஷ்ணன், தங்கமணி, அரங்கசாமி ,செந்தில் ஆகியோர் ஒருவழியாகக் கிளம்பி ஈரோட்டுக்கு செல்லும் வழியில் கோவைக்கு வெளியே ஒரு உணவகத்தில் அவர்களைச் சந்தித்தோம். நாஞ்சில்நாடன் புதிதாக இருந்தார். எனக்கு எப்போதுமே அவரைப்போல நேர்த்தியாக உடையணியும் ஆசை உண்டு. மிகையாகவும் போகாமல், குறைவாகவும் ஆகாமல் உடையணிவதென்பது ஒரு கலை. அதற்கு நாம் அவரைப்போல விற்பனைமேலாளராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கவேண்டும்போல.
ஈரோட்டுக்கு செல்லும் வழி முழுக்க விதவிதமான நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சென்றுசேர்ந்தபோது தாமதமாகிவிட்டது. சாலையோரமாக என்னுடைய முகம் கொண்ட வினைல்போர்டு. உள்ளே போனால் சாயரசாயன விற்பனையாளர் சங்கத்தின் புதிய அரங்கில் வாசலில் வசந்தகுமார் கடைவிரித்து தம்பியர் புடைசூழ அமர்ந்திருந்தார்.
பத்துமணிக்கு நிகழ்ச்சி. ஒன்பது ஐம்பதுக்கு அமைப்பாளர் தவிர யாருமே இல்லை. பத்துமணிக்கு ஒரு பத்துபேர் தேறினார்கள். பத்து என்றால் பத்துக்கே ஆரம்பிக்கவேண்டும் என்றார் பாபு. அது ஈரோடு பசுமைபாரதத்தின் கொள்கை என்று சொல்லப்பட்டாலும் உண்மை என்பது சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாத பிற நிகழ்ச்சிகளில் சென்று கலாட்டா செய்த இறந்தகாலம் குறித்த அச்சம்தான்.
அமைப்பாளர் விஜயராகவன் காய்ச்சல்கண்ட முகத்துடன் இருந்தார். ‘என்ன விஜயராகவன்’ என்றேன் ”ஏமாத்திட்டாங்களே சார்…யாருமே வரல்லியே’ என்றார். ‘வந்தவங்க போரும்…இப்ப என்ன?” என்றேன்.
ஆரம்பித்தோம். காலி நாற்காலிகளை நோக்கி பேசுவது எழுத்தாளர்களுக்கு ஒன்றும் புதியவிஷயம் அல்லதானே? முதலில் ஈரோடு வாசிப்பியக்கத்தைச் சேர்ந்த பாபு பம்மிப்போய் வரவேற்புரை அளித்தார். விமரிசகர் க.மோகனரங்கன் ஜெயில்சிங் போன்ற அதிநிதானத்துடன் மேடைக்கு வந்து மென்மையான குரலில் – பாலியல் வழக்கில் சிக்கியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பது போல குனிந்த தலையுடன் – விழாவை அறிவித்தார். ‘இன்றையகாந்தி’  நூலை நாஞ்சில்நாடன் வெளியிட இராசு பெற்றுக்கொண்டார்.
தலைமையுரையாக ஜீவானந்தம் சுருக்கமாகப் பேசினார். தன்னை காந்தியில் ஆர்வம்கொண்டவரே ஒழிய காந்தியவாதி என்று சொல்லிவிடமுடியாது என்றார். காந்தியம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. இடைவிடாத சோதனைகள் கொண்டது. தன் சூழலில் செயல்பட காந்தியம் ஒரு வழிகாட்டு நெறியாக இருந்தது, அவ்வளவுதான் என்றார்.
அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார். காந்தியின் பாலியல் சோதனைகள் குறித்த விவாதத்தை மையமாக்கிய உரை அவருடையது. காந்தியின் சோதனைகளை கிறுக்குத்தனமானவை என்று நூலாசிரியர் சொல்வதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் நாஞ்சில்நாடன். பாலியலை அவதானிப்பதும் அதை கடந்துசெல்ல முயல்வதும் எந்த மனிதனுக்கும் இயல்பான விஷயமே. காந்தி அந்த விஷயத்தில் அப்பட்டமானவராக வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.
அடுத்துப்பேசிய செ.இராசு தமிழகத்தில் ஈரோட்டில்தான் முதன்முறையாக காந்திக்குச் சிலை வைக்கப்பட்டது என்று சொல்லி அந்தப்படத்தைக் காட்டினார். 1932ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டுவிட்டது. காந்திக்கும் ஈவேராவின் குடும்பத்திற்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசினார். காந்தி ஈரோட்டுக்கு இருமுறை வந்திருக்கிறார். முதன்முறை ஈவேரா அவர்களின் இல்லத்தில் தங்கினார். மறுமுறை கிட்டப்பா மறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கெ.பி.சுந்தராம்பாளைப் பார்த்து பொதுப்பணிக்கு வரச்சொல்லுவதற்காக வந்தார் என்றார்.
‘நாஞ்சில்நாடன் என் காதில் ‘ என்ன, கூட்டம் ஒருமணிநேரத்திலே முடிஞ்சிரும் போல இருக்கே’ என்றார். ஆனால் அடுத்து மரபின் மைந்தன் முத்தையா  பேச ஆரம்பித்தபோது மெல்லமெல்ல கூட்டம் அரங்கை நிறைக்க ஆரம்பித்து, பதினொருமணிக்கு அரங்கு முழுமையாக நிரம்பியிருந்தது. ஈரோட்டில் பத்து என்றால் பதினொருமணி என்றுதான் அர்த்தமாம்.
முத்தையா காந்தியின் மகன்களைப்பற்றி பேசினார். காந்தி தன் புதல்வர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற பொதுநம்பிக்கை சூழலில் உள்ளது. ஆனால் காந்தி அவர்களை போராளிகளாக, அதிகாரத்துடன் சமரசம்செய்துகொள்ளாதவர்களாக வளர்த்தார். அதை ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்
காந்தியின் எல்லைகளையும் நாம் கவனிக்கவேண்டும், ஆகவே தனக்கு காந்தி மீது வழிபாட்டுணர்வு ஏதும் இல்லை என்றார் முத்தையா.காந்தி இந்திய அரசியலில் பதவி இல்லாத அதிகாரமையமாக விளங்க விரும்பினார். பதவியில் இல்லாத அவர் இந்திய அரசை பாகிஸ்தானுக்கு கஜனாவை பங்கிட்டுக்கொடுக்க நிர்ப்பந்தித்தது உதாரணம்.
காந்தியின் பிள்ளைகள் என்னும்போது இன்றைய இந்தியர்களையே அப்படிக் குறிப்பிடலாம். இந்தியாவுக்கு காந்தி ஒரு இலட்சியத்தையும் அதை அடைவதற்கான வழிமுறையையும் அளித்தார் என்று ஆசிரியர் சொல்கிறார். காந்தி ஒரு கனவை அளித்தார், ஆனால் அவர் காட்டிய வழி குழப்பமானது. அதுவே இந்தியா சிக்கல்களில் ஆழ்ந்தமைக்கு வழிவகுத்தது என்றார் முத்தையா.
தந்தை பழ.கருப்பையா அவர்களின் குரல், உடலசைவுடன் பேசினார் ஆறுமுகத்தமிழன். காந்தி ஓர் அடையாளமாகவே தனக்குக் கிடைத்தார் என்றவர் அந்த அடையாளம் இன்று செலவேறியதாக ஆகிவிட்டிருக்கிறது என்றார். அவரது தந்தையின் காந்திய நோக்கு காரணமாக அவர் சிறுவயது முதலே கதர் அணிபவர் என்றார். ஆனால் தினம் பத்து ரூபாய் இல்லாமல் கதரை சலவைசெய்து அணிய முடியாது, அது உயர்தர உடையைவிட செல்வேறியது….
இத்த¨கைய அடையாளங்களில் இருந்து காந்தியை விடுவிக்கும் முயற்சியாக  இன்றைய காந்தி நூலை தான் காண்பதாக ஆறுமுகத் தமிழன் சொன்னார். காந்திய வழி என்பது தனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தன்னால் பிரபாகரனையும் விட்டுவிட முடியாது. காந்தி தந்தை என்றால் பிரபாகரன் அண்ணன் போல. இருவருடைய வழிமுறைகள் வேறு ஆனால் அர்ப்பணிப்பும் தியாகமும் சமம்தான். ஈழப்போராட்டம் வன்முறையால் வெல்ல முடியவில்லை, அது காந்தியவழியால் வென்றிருக்கலாம். ஆனால் அதனால் பிரபாகரனின் தியாகம் அர்த்தமற்றது என்று ஆகிவிடாது.
இன்றையகாந்தி நூலில் தேசியம் குறித்து சொல்லப்படும் ஆசிரியரின் கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார் ஆறுமுகத்தமிழன். ஆசிரியர் மொழிவழித்தேசியத்தை பிளவுவாதம் என்று எதிர்க்கிறார், அதை உணர்வுபூர்வமாக ஏற்பவன் நான் என்றார். மொழிவழித்தேசியம் சிலரை அன்னியராக்கும் என்றால் அவர் பேசும் பண்பாட்டுத்தேசியமும் அதேபோல வேறுசிலரை அன்னியர்களாக்க்கும். இந்திய தேசியம் என்பது செயற்கையானது, மொழிவழித்தேசியமே இயற்கையானது என்றார்.
அடுத்துப்பேசிய முருகானந்தம் இன்றையகாந்தி நூல் இளைய தலைமுறைக்கு காந்தியை மீட்டளித்திருக்கிறது என்றார். இன்றைய இளைஞன் காந்தியை இன்றைய வாழ்க்கையில் பொருத்திப்பார்க்க ஆசைப்படுகிறான். அவனுடைய வினாக்களுக்குப் பதிலாக அமையும் நூல் இது. ஆனால் இதில் சில விஷயங்கள் தவறாக உள்ளன. காந்தியின் அழகியலுணர்வின்மை குறித்து ஆசிரியர் சுட்டும் பகுதிகள் உதாரணம். காந்தி  இலக்கியம், இசை குறித்த உணர்வில்லாதவரல்ல. அவர் அவற்றைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.  அவர் போராட்டக்களத்தில் இருந்தார். இந்தியாவையே போராட்டத்தில்  நிறுத்தினார். ஆகவே அவர் கலையிலக்கியங்களை ஊக்குவிக்கவில்லை என்று முருகானந்தம் சொன்னார்.
பவா செல்லத்துரை ஒரு மார்க்ஸியச்சூழலில் வளர்ந்த தனக்கு படத்தில்கூட காந்தி கவரக்கூடியவராக இருந்ததில்லை என்றார். ஆனால் இந்த நூல் காந்தியைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. காந்தியை சாமானிய மக்களுடன் பேசிய ஒரு மக்கள்தலைவராக இது காட்டுகிறது. காந்தியின் எளிமையும் மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் இந்நூலில் ஒரு கட்டுரையில் கூறும் ஆசிரியர் இன்றைய மார்க்ஸிய தலைவர்களிடம் காண்பதாகச் சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்  காந்தியத்தாக்கம் கொண்ட தலைவராக சொல்லும் ஈ.எம்.எஸ் குறித்து அவர் ஒரு நல்ல நூல் எழுதவேண்டும் என்று கோருவதாக பவா சொன்னார்.
கடைசியாக நான் பேசினேன். ‘மூன்று சந்திப்புகள், மூன்று அவதூறுகள்’ என அவ்வுரையை சுருக்கலாம். காந்தியை நானும் எதிர்மறையாகவே புரிந்துகொண்டிருந்தேன். மூன்று சந்திப்புகள் வழியாக காந்தியை புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் சந்திப்பு, எம்.கோவிந்தன். மலையாளச் சிந்தனையாளரான கோவிந்தனைச் சந்தித்தபோது அண்டோனியோ கிராம்ஷி பற்றி சொன்னார். இப்போது ஆளும் ஆட்சியாளர்களை அதிகாரிகளை ஒட்டுமொத்த அதிகாரவற்கத்தை கொன்றழித்தால் என்ன ஆகும்? அதே அதிகார அமைப்பு மீண்டும் உருவாகி வரும். புல்லை வெட்டினால் மீண்டும் முளைப்பதுபோல. அதாவது வேர், உண்மையான அதிகாரம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே இருக்கிறது. அது மக்களிடம் கருத்தியல்வடிவில் உள்ளது.
மக்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்தே அரசு அதிகாரத்தை பெறுகிறது என்று கிராம்ஷி சொல்வதைச் சொன்னார் கோவிந்தன். அந்த ஆதரவு கருத்தியல்ரீதியானது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் உண்மையான அதிகாரம் அன்றிருந்த மக்கள் அதற்கு அளித்த ஆதரவில் இருந்தது. காந்தி அந்த மக்களை நோக்கி பேசியது அதனாலேயே. அரசை வீழ்த்த அவர் முயலவில்லை, மக்களை மாற்றவே முயன்றார். அதுவே காந்தியப்போராட்டம். மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த நல்ல நிர்வாகம்மீது மதிப்பிருந்தது. அதன் மாபெரும் சுரண்டல் தெரிந்திருக்கவில்லை. அதை மக்களுக்குத் தெரிவிக்கவே காந்தி உப்புசத்தியாக்கிரம் போன்ற போராட்டங்களை உருவாக்கினார்.
காந்தியைப்பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது அந்த கருத்துதான். காந்தியை பிரிட்டிஷ் அரசை ‘பிளாக்மெயில்’ செய்பாவ்ர் என்றே நானும் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மாறி அவரை புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
இரண்டாவது சந்திப்பு லாரிபேக்கர். நவீன கட்டிடவரைகலை நிபுணர் அவர். அவர் கார்ட்டூன் வரைவதற்காக காந்தியைப் பார்க்கச் சென்றார். காந்தி அவரிடம் ‘சிறந்த கட்டிடம் என்றால் என்ன?’ என்றார். விடையாக அவரே ‘குறைந்த அளவுக்கு சரக்குப் போக்குவரத்துச் செலவு உடையது’ என்றார். அந்த வரி பேக்கரை மாற்றியமைத்தது. இந்தியாவில் தங்கி ‘தேசிய வீடு’ என்ற கருத்தை உருவாக்க வைத்தது
அப்படி காந்தி அவரைச் சந்தித்த எத்தனையோ பேரை பாதித்திருக்கிறார். சந்தித்தவர்களை எல்லாம் புரட்சிகரமாக மாற்றி அமைத்திருக்கிறார். அவர்களெல்லாம் மாமனிதர்களாக ஆனார்கள். காந்தி வாழ்நாள் முழுக்க காந்திகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார். வெரியர் எல்வின், ஜெ.சி.குமரப்பா என எத்தனையோ பேரைச் சொல்லலாம்.
மூன்றாவது சந்திப்பு ஈ.எம்.எஸ். வாழ்நாள் முழுக்க காந்தியக் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலை நடத்தியவர் அவர். ஆனால் தனிவாழ்க்கையில் காந்தியின் எளிமையை அர்ப்பணிப்பை தானும் கொண்டிருந்தார். எதிரிகளிடம் கூட ஆழமாக ஊடுருவும் காந்தியை அவரிடம் கண்டுகொண்டேன்.
பின்னர் மூன்று அவதூறுகள். ஒன்று ரயிலில் ஒருவர் காந்தி தன் மூத்தமகனை பாரிஸ்டர் படிப்புக்கு அனுப்பாத காரணத்தால் அவன் குடிகாரன் ஆனான் என்றார். மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் ஹரிலால் மெட்ரிகுலேஷனை நான்குமுறை எழுதி தோற்றவர் என்பதை நானே வாசித்து தெரிந்துகொண்டேன்.
காந்தி தகுதியிருந்தும் பட்டேலை விட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் என்ற அவதூறை அடுத்து கேட்டேன். ஆனால் இந்தியா மதவெறுப்பால் அழிந்துகொண்டிருந்த நாட்களில் முற்றிலும் மதச்சார்பற்ற ஒருவர் இந்தியாவை வழிநடத்தவேண்டுமென காந்தி விரும்பியதை வரலாற்றில் இருந்து புரிந்துகொண்டேன்.
கடசியாக, காந்தியின் மூன்றாம் வகுப்பு ரயில்பயணம் முதல்வகுப்பு பயணத்தைவிட செலவேறியது என்று சரோஜினிநாயிடு சொன்ன அவதூறை எதிர்கொண்டேன். அது சொல்லப்பட்ட தருணத்தை அன்றைய சூழலை தேடி அறிந்தேன். லட்சக்கணக்கான தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கக்கு சென்று தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை. ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார்
அந்த அவதூறில் இருந்து காந்தியை பற்றி எழுத ஆரம்பித்ததே இந்நூல். இதில் சமகாலத்தில் காந்தியை எப்படி புரிந்துகொள்வதென்ற தேடல் உள்ளது. இத்தனை அவதூறுகள் ஒரு சிந்தனையாளரைப் பற்றி ஏன் எழுகிறதென்ற கேள்வியே என்னை காந்திக்குள் செல்ல வைத்தது.
இந்திய தேசியம் குறித்த என் கருத்துக்களை நான் பதிவுசெய்திருக்கிறேன். நான் சொல்லும் தேசியம் நேற்றில் இருந்து எடுக்கும் அடையாளங்களால் ஆனதல்ல. இந்தமண்ணில் இப்போது வாழும் அனைவரும் நாளை குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொள்வதனால் வரும் தேசியம் அது. எவரையுமே விலக்குவதல்ல.
இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால், பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள்ப்பரிமாற்றம் நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.
எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது. சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில் நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்! இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள். யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும். பரஸ்பர வெறுப்பை கிளறும்.  அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும். அந்த மனுடப்பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
தேசியம் மயிர் மட்டை என்று கொள்கை பேசி உயிர்களுடன் விளையாடாதீர்கள். அதிகாரவெறியால் உயிர்வாழ மட்டுமே விரும்பும் எளிய மக்களை கொன்றழித்துவிட்டு எண்ணிக்கைக் கணக்கையும் கோட்பாட்டையும் சேர்த்துப்பேசும் திமிரை அறிவுஜீவிகள் இனிமேலாவது கைவிட வேண்டும் என்றேன். ஈ.எம்.எஸ்.குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.
ஈரோட்டுக்கும் வெளியூரில் இருதெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். பெங்கலூரில் இருந்து கார்த்திகேயன் வந்திருந்தார். அனைவரிடமும் தனியாக நிறையவே பேசமுடிந்தது
விழா சரியாக ஒரு மணிக்கே முடிந்தது. மாடியில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களே பரிமாறியது உற்சாகமாக இருந்தது. விஜயராகவன் முகமலர்ச்சியுடன் ”ஈரோடு காப்பாத்திடிச்சு சார்” என்றார்.
மாலை ஐந்து மணிவரைக்கும் அங்கேயே அறையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் இருகார்களிலும் இருசக்கரவண்டிகளிலுமாக வள்ளிபுரத்தான்பாளையம் சென்றோம். எட்டுமணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு நாகர்கோயில் ரயிலை பிடித்தேன். நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். படுத்ததுதான் தெரியும். காலையில் நாகர்கோயில்.
http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html

வெள்ளி, 25 நவம்பர், 2011

vairamuthu sanga kavithaigal

 கவிஞர் வைரமுத்துவின்கவிதைகள் ? இசை
.
   * * * * *
துளைகள் கொண்டது மனிதமனது
எறும்பின் கண்ணினும் நுண்ணிய துளைகள்
விழியினும் சவ்வினும் மெல்லிய துளைகள்
ஆயிரம் லட்சம் கோடித் துளைகள்

பல துளைகள்
பிறந்தது முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை
இறக்கும் வரைக்கும் திறக்காதவை

அத்தனை துளைகளும்
திறத்தல் அரிது

அத்தனை கோடித் துளைகளையும்
ஒரே கணத்தில் திறந்துவைக்கும்
விசை எங்கு கண்டாய்
இசையே!

   * * * * *

காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!

   * * * * *
நாவுக்குச் சிக்காத அமிர்தம்
நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

 
 
நீயே சொல் இசையே
ி ?
ி?
 
மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
மாறுவேடம் போட்டபடி
நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
 
   * * * * *
நதி -
நடந்துபோகும் சங்கீதம்

மழை -
அவரோகண சங்கீதம்

மழலை -
பிழைகளின் சங்கீதம்

மெளனம் கூட
உறைந்துபோன சங்கீதம்

பூமி சுற்றிக் காற்று
காற்று சுற்றி இசை
இசைக்குள் மிதக்குகம்
ஜீவராசிகள்
 
   * * * * *
இசையே!
தூங்கவை எங்களை

உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு

இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு

உள்ளிருக்கும் விலங்குத்தோல்
உரி

மென்குணங்கள் மேம்படுத்து

நாங்கள்
இறுகி இறுகிக்
கல்லாகும்போது
இளகவிடு

குழைந்து குழைந்து
கூழாகும்போது
இறுகவிடு

நீயில்லாத பூமி
மயானம்

மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.

vairamuthu sanga kavithaigal

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் ? காலந்தோறும் காதல
.
 
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன்.

   * * * * *
 1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

   * * * * *
 2 காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

* * * * *
 3 சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
 
   * * * * *
 4 சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
 
   * * * * *
 5 தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
 
   * * * * *
 
 6 திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
 
   * * * * *
 7 திராவிட காலம் - 2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
 
   * * * * *
 8 புதுக்கவிதைக் காலம் - 1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
 
   * * * * *
 9 புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
 
   * * * * *

Vairamuthu..Sangakavithaigal

வியாழன், 24 நவம்பர், 2011

Uyirin osai...

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும், தேசமும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பும் போலியானது என்று உடைத்தெறிந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழாளர்கள்  வழக்கம்போல் இம்முறையும் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப்பேரவையில் தீர்மானமேற்றி சிறிது  நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர், சமச்சீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை.
பரமக்குடி படுகொலைகள்,சமச்சீர் கல்வி, கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது, சட்டமன்றத் தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய் நீதிமன்றதில் பதில்தந்தது, அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது, இறுதியாய் அடிப்படைத் தேவைகளின் விலையேற்றம். 6.25 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கும் பால்விலை, உயரப்போகும் மின்சார கட்டணம், உயர்ந்துபோன பேருந்துக் கட்டணங்கள். விலைஉயர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே. பொது நிறுவனங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்டத் தொடங்கியவையன்று.
அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்கக் கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன் மீதும் நம்பிக்கையில்லை. இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாடாவுக்கும், ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ, சுகாதாரமில்லாத வாழ்க்கை குறித்தோ, தினமும் உண்ணும் ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை.
பன்னாட்டு எசமானர்களுக்கு சேவகம் புரியும் பத்துக் கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக் கிடக்கிறது, தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள், மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களைக்  கொண்டு இப்பணிகளை செவ்வனே செய்கின்றனர் . ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ, இருக்கும் சிறுஅளவு மேல்வர்க்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம்.
பேருந்து பயணக் கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும், குளிரூட்டப்பட்ட சொகுசு தனியார் பேருந்துகளில் செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கி வழியும் பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்.
முந்மைய ஆட்சியினர் இருக்கும் சாதாரணப் பேருந்துகளை டீலக்ஸ் , அல்ட்ரா டீலக்ஸ்  எனும் வழியில் இயக்கி ஒரு தாக்குதலைத் தொடுத்தனர், இன்றைய ஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்துக் கட்டணங்கள் விமானக் கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன. சாதிய அடக்குமுறை, அறிவு அடக்குமுறை, பொருளாதாரத் தாக்குதல் என்று அனைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிகின்றனர்.
நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள், கலாசார இருட்டடிப்புகள் என்று எதையும் உணராமல் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுகொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்துப் போராடத் துணிவின்றி வாழ்கிறோம். ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்.
நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம். உறவுகளின்றி, நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய் அலைந்துகொண்டிருக்கும் காலம் தொலைவிலேயில்லை. இதைத் தமிழ்பெருமை பேசும் முன்னாள் ஆட்சியாளர்களும், ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே செய்வர். பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்.
சில நாட்களுக்குமுன் ஈழத்து நண்பன் இப்படிச் சொன்னான் " நாங்கள் நிலத்தை, லட்சக்கணக்கான மக்களை இழந்திருக்கலாம். ஆனால் தமிழகத் தமிழர்களைப் போல் தன்மானமற்ற அடிமைகளில்லை."