வெள்ளி, 20 ஜூலை, 2012

RishanSherif.

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான்.

    "எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது."

    "எங்கே போகலாம்?"

    "எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்."

    சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட நானும் நண்பனும் பிரதான பாதையில் நுழைந்தோம்.

    "எங்கே போகிறாய்?" - கேள்வி என்னுடையது.

    " சும்மா இருக்கும் நாட்களில் போவதற்கு நல்லதொரு இடம் இருக்கிறது. எனது பல்கலைக்கழகத் தோழன் இப்ப ஒரு டொக்டர். எங்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தவன். வா..வா என்று ரொம்ப காலமாகக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்."

    வெலிவேரிய பிரதேசத்தைக் கடந்து கொஞ்ச தூரம் சென்று குறுக்குத் தெரு சிலவற்றில் எனது நண்பன் அடிக்கடி வந்து செல்லும் ஒருவனைப் போல வண்டியைத் திருப்பினான். எனினும் நண்பன் வழி தவறியிருந்தான். நாம் மீண்டும் பிரதான பாதைக்கு வந்து நண்பன், யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பெற்ற அறிவுருத்தலின் படி வேறொரு குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தோம். விசாலமானதொரு நுழைவாயில் கதவருகே மோட்டார் சைக்கிள் நின்றது. நண்பனின் தொலைபேசி அழைப்புக்கிணங்க அப் பெரிய நுழைவாயில் கதவு திறந்தது.

    "ஐயா ஒரு சின்ன வேலையில் இருக்கிறார். உங்களுக்கு அங்கே வரச் சொன்னார்."

    எனது நண்பனின் வைத்தியத் தோழன், நாங்கள் போகும்போது வீட்டினுள்ளேயே அமைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை அறைக்குள் பெரியதொரு வேலையில் ஈடுபட்டிருந்தார். எனவே வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிரண்டில் அமர்ந்து நாம் காத்திருந்தோம். வைத்திய நண்பனின் சேவகன் தந்த தேனீரைச் சுவைத்தபடி அவர் வரும்வரையில் ஒரு பரவசத்தோடு நான் இருந்தேன்.

    நாங்கள் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் கழிந்த பின்னர், எனது நண்பனின் தோழன் கைகளிரண்டையும் துடைத்தபடி, மிகுந்த சாரமுள்ள மதுபான போத்தலொன்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார்.

    "தாமதத்துக்கு மன்னிக்கவும்..தெரியாதா இனி? "

    எனச் சொன்ன வைத்தியத் தோழன், நான் யாரென வார்த்தையேதுமின்றித் தலையசைத்து வினவினார். நான் யாரெனத் தெரிந்துகொண்ட பிற்பாடு என்னை வரவேற்றதோடு, தான் எடுத்து வந்திருந்த மதுபான போத்தலின் மூடியை அகற்றி, பருகத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பின்னர் மதுபானத்தின் வெறியில் அவர் உளர ஆரம்பித்தார். ஆரம்பமும் முடிவும் அற்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    "எனக்கு இது இப்ப வேணாம்னு போயிடுச்சுடா.. செய்றதுக்கு ஒண்ணுமில்லாம செஞ்சுட்டிருக்கேன். நிறுத்தவும் முடியாதுதானே.விஷயம் வெளியே தெரிஞ்சுடுச்சுன்னா.... தெரியும்தானே."

    நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.

    "அதிகமா வாறது ஸ்கூல் பொண்ணுங்க..வேலையை சிக்கலாக்கிக் கொண்டு கடைசிக்கட்டத்துல வந்து அழுதுட்டிருப்பாங்க."

        ஆச்சரியத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்த நான் அக் கேள்வியைக் கேட்டேன்.

    " எதைப் பற்றிச் சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல."

    நன்கு வெறியேறியிருந்த வைத்தியத் தோழன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார்.

    " உனக்கு தெரிஞ்சுக்க வேணும்னா இதோ.... எல்லாத்தையும் கேட்டுக்கோ. ரொம்பக் காலம் கடந்தாப் பிறகுதான் எமக்கு வேலை கிடைச்சுது. அதுவும் ரொம்பத் தூரப் பிரதேசம் ஒண்ணுல..கட்டடம் ஒண்ணு கூட இல்லாத பிரதேசம்.. கொஞ்ச நாள் போனாப் பிறகு எனக்குச் சொந்தமா ஒரு டிஸ்பென்ஸரியைத் தொடங்கினேன். இதற்கிடையில எனது நண்பனொருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கைவிட்டிருந்தான். அவளைத் திருமணம் முடிக்க விருப்பமில்லை எனச் சொன்னான். அவன், அப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தான். நான் பயந்து பயந்து அம் மோசமான செயலைச் செய்தேன். அதன் பிறகு அவன், அவனைப் போன்ற அவனது நண்பனொருவனையும் என்னிடம் அனுப்பியிருந்தான். இப்படி இப்படித்தான் நான் அபார்ஷன் டொக்டர் ஆனேன். இந்த இரண்டு கரங்களினாலும் நான் இதுவரை 32 உயிர்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறேன்."

வைத்தியத் தோழன், எம்மை அவரது சத்திரசிகிச்சையறைக்கு அழைத்துச் சென்றார்.

        "இதோ பாரு."

    அவர், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து எமக்குக் காட்டினார். விதவிதமான மதுபான போத்தல்கள் அங்கு நிறைந்திருந்தன.
   
    "நான் பெரியதொரு குற்றவாளின்னு எனக்குத் தெரியும். ஆனா கைவிடப்பட்டு வர்ற பெண்களுக்கு நான் ஒரு தெய்வம். எனக்கு இப்ப இது போதுமாகியிருக்கு. ஆனா என்னால இதை நிறுத்த முடியாது. நிறுத்துற அன்னிக்கு நான் மாட்டிக்குவேன். எல்லா வேலைக்கும் முன்னாடி நான் நல்லாக் குடிச்சுக்குவேன். வேலை முடிஞ்ச பின்னாடியும் நல்லாக் குடிப்பேன். 'செத்தாக் கூடப் பரவாயில்ல..செய்'ன்னு இதோ இவள் சொன்னாள். செத்துடுவாள்னுதான் நான் நெனச்சேன். ஆனா அதிர்ஷ்டசாலி.. ஆறு மாசக் கருவை அப்புறப்படுத்தியும் கூட இவள் ஆரோக்கியமா இருக்கா..அந்த ஆறு மாசக் கருவப் பார்த்தப்ப எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணிச்சுடா."

    வைத்தியத் தோழன் கதறியழத் தொடங்கினார். நிறைய நேரம் மேசையின் மீது தலையை மோதியபடி விக்கி விக்கியழுத வைத்தியத் தோழன் இன்னும் நிறையக் கதைகளைச் சொன்னார். எனினும் நிறைய நேரம் கடந்திருந்ததால் அவரிடமிருந்து விடைபெற்று நாம் வெளியேறினோம். நானும், நண்பனும் மீண்டும் அறைக்குத் திரும்பும் வழியில் ஒரு வார்த்தை கூடக் கதைத்துக் கொள்ளவில்லை. இரவில் எங்களைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் ஒளிக் கீற்றுக்கள் ஹெல்மட்டின் கண்ணாடியினூடு, இன்னும் பிறவாத குழந்தைக் கருக்களின் உருவமாகத் தோன்றி மறைந்தன.

- தேஷான் ருவன்வெல்ல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

Rishan Sherif.

பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்


            டந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று வந்தது. சுகவீனமுற்று இருந்திருக்கிறார். நீரிழிவும் இன்னும் அனேக வியாதிகளும் இருந்திருக்கின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்துத்தான் மரணம் சம்பவித்ததென உடலைக் கொண்டு வந்த உறவினர்கள் கூறினர். இருக்கலாம். காவல்துறை அதிகாரிகள் அதிகமாகக் கோபப்படுவார்கள் அல்லவா? கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா என்ன?
            'எம்பாம்' பண்ணுவதற்காக உடலை வெட்டிய பிறகுதான் காரணம் புரிந்தது. இரத்த அழுத்தம் எனச் சொன்னதற்கு மேலதிகமாக வயிற்றிலும் இரைப்பையிலும் அதிகளவிலான நீர் இருந்தது. சாதாரணமாக அவ்வாறு தண்ணீர் உருவாவது மதுபானப் பாவனையால்தான். இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த போத்தல்கள் இல்லாமல் தொடர்ந்து கடமை புரிய முடியாதே. அவர்கள் கேட்பதுவும் பணம் இல்லையென்றால் போத்தல்கள்தானே (எல்லோரையும் சொல்லவில்லை.) அவ்வாறிருக்கையில் இவ்வாறான நோய்கள் வருவது புதுமையும் இல்லை.
            காவல்துறை அதிகாரியொருவரை 'எம்பாம்' செய்ய நேரும் எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்ணும் அசிங்கங்களுக்கேற்ப அவர்களுக்கு வருவதும் அசிங்கமான நோய்களே என எனக்குத் தோன்றும். 'தெய்வம் நின்று கொல்லும்' எனச் சொல்வது இதற்குத்தான்.
            ன்று பதினான்கு வயதேயான சிறுமியொருத்தியைக் கொண்டு வந்தார்கள். துணியால் உடலைச் சுற்றி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டு இறந்து போயிருந்தாள். உடல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. முழுதாக எரிந்து போயிருந்தது. தோட்டமொன்றில் வேலை செய்யும் தமிழ் தாயொருவரதும் தந்தையொருவரதும் மூன்றாவது பிள்ளை.
            காதல் தொடர்பொன்று இருந்து அது முறிவடைந்ததால் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாள் என அவளது உடலைக் கொண்டு வர லயன் அறைக்குச் சென்றிருந்தபோது அவளது தந்தை கூறினார். பாதிக் கரிக்கட்டையாக இருந்த உடலை வாகனத்தில் ஏற்றும்போது பிள்ளைகள் இவ்வாறு செய்துகொள்வதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாரென்ற கேள்வி எனக்குத் தோன்றியது.
            விசாரித்துப் பார்க்கையில் இந்தச் சிறுமி தொலைக்காட்சிக்கு அடிமையாக இருந்திருக்கிறாள் என்பது தெளிவாகியது. மாலையில் ஒளிபரப்பாகும் தொடர்நாடகங்களுக்கு அடிமையாக இருந்திருக்கிறாள். காதலிப்பது எப்படி என்பது பற்றித்தானே அதில் இருக்கிறது. தாத்தாக்கள், பாட்டிகள், அம்மாக்கள், அப்பாக்கள், பிள்ளைகள் எல்லோருமே ஒன்றாக அமர்ந்திருந்து காதலிப்பது எப்படி எனப் பார்க்கிறார்கள். இதுதான் வாழ்க்கையென இப் பிள்ளைகள் நினைத்துக் கொள்கிறார்கள். பதினான்கு வயதுச் சிறுமியொருத்தி காதல் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதென்பது சாதாரணமானதொரு விடயமாக ஆகி விட்டது.
            கடந்த வாரமும் இதே வயதையுடைய ஒரு சிறுவனை 'எம்பாம்' செய்ய நேர்ந்தது. விஷம் உண்டதால் அம் மரணம் நிகழ்ந்திருந்தது. *இத் தொடர் நாடகங்கள் ஏற்படுத்தும் பாரியதொரு அழிவை கண்டுகொள்ளாத, தேசத்தை வழிநடத்திச் செல்லும் பெருந்தலைகளுக்கு 'நீ' , 'உனது' போன்ற வசனங்கள் மட்டும் மோசமான சொற்களாகத் தோன்றுவதுதான் புதுமையாக இருக்கிறது.  இப் பெருந்தலைகளின் உடல்களை வெட்டக் கிடைக்குமெனில் என்னால் சொல்ல முடிந்திருக்கும் 'இவர்களது மூளை எங்கிருக்கிறது? எவ்வளவு சிறியதாக இருக்கிறது' என்பது பற்றி.
*இலங்கையில் ஒளிபரப்பப்படும் சிங்களத் தொடர் நாடகங்களில் 'நீ', 'உனது' போன்ற வசனங்களை உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தில்ஷான் எகொடவத்த
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி

வியாழன், 19 ஜூலை, 2012

charu..

the making of bhoos: na mile hai…

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  கிராமிய இசை என்ற பெயரில் வந்த பாடல்கள் எல்லாம் வெறும் ரொமாண்டிக் தன்மையை மட்டுமே கொண்டிருந்தன.  பருத்தி வீரனில் வரும் முதல் பாடலில் உண்மையான நாட்டுப்புற இசை இருந்தாலும் அதில் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே இருந்தது.  கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.  இந்தியா ஒரு வல்லரசு என்று சொன்னவர்களின் பொய்யை அம்பலப்படுத்துகிறது இந்தப் பாடல்.  இந்த நாட்டில் நமக்கு ஒன்றும் கிடையாது; இங்கே நேருவும் இந்திராவும் சொன்ன கனவுகள் வெறும் சொற்களாக மட்டுமே எஞ்சி விட்டன.  இப்படிப்பட்ட ஒரு political statement தான் இந்தப் பாடல்.  அதனால்தான் டெக்கான் கிரானிகிள் கட்டுரையில் இந்தப் பாடலை விசேஷமாகக் குறிப்பிட்டேன்.  இந்தப் பாடலை எழுதியவர் வருண்.  இவ்வளவு துணிச்சலாக எழுதக் கூடிய ஒரே ஒரு பாடலாசிரியர் தமிழ் சினிமாவில் உண்டா என்று எனக்குச் சொல்லுங்கள்.  நான் அவருக்குத் தலை வணங்குகிறேன்.    பாடலைப் பாடும் முன்னாவின் குரலைப் போல்  இந்திய சினிமாவில் இதுவரை கேட்டதுண்டா என்று சொல்லுங்கள்.  இவ்வளவு துயரத்தைச் சொல்லும் பாடலில் எங்காவது அழுமூஞ்சித்தனம் இருக்கிறதா என்று பாருங்கள்.  ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.    நம் தமிழ் சினிமாவின் சீரியஸ் சினிமா பார்க்கப் போனால் நாலைந்து கர்ச்சீஃப் அல்லவா எடுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது?  அந்த அளவுக்குப் பிழியப் பிழிய அழ வைத்து சாகடிக்கிறார்களே?  ஐயா, துயரத்தைக் கூட வேறு வகையில்தான் சொல்ல வேண்டியிருக்கிறது; அதுதான் கலை என்றால் நம்மை அடிக்க வருகிறார்கள் தமிழ் இயக்குனர்கள்.  வழக்கு எண் ஓடவில்லை என்று கருப்புக் கண்ணாடி இயக்குனருக்குத்தான் என்னே ஒரு கோபம், ஆவேசம்?  இந்தப் பாடலைப் பாருங்கள்…  கலை என்றால் என்ன என்று தெரியும்…
தமிழ் சினிமாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=yZ6yfdp6w00
Comments are closed.

Bhrathivasan.

காதல் கவிதைப் புத்தகம் வெளியீடும், புரோட்டாவும்

உலகத்தமிழ்ச்சிற்றிதழ்ச் சங்கத்தலைவரும், மகாகவி இதழாசிரியருமான வதிலை பிரபா கேட்டுக்கொண்டதனாலேயே குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் இயக்குநர் நண்பர் ராஜமோகனை ஏற்பாடுசெய்திருந்தேன். 11/10/09 ஞாயிறு காலை தேனியில் தேனி இன்டர்நேசனல் ஓட்டலில் கவிஞர் விஜயராஜ்காந்தியின் அழகியலே காதல் கவிதைநூல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி. திரைப்பட இயக்குநர் கலந்து கொள்கிற நிகழ்வு. பிரமாதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பெரிய ஓட்டலில் நிகழ்ச்சி வைத்திருப்பதாகவும், தங்குவதற்கு குளிரூட்டப் பட்ட அறை போட்டிருக்கிறோம் என்றும் பிரபா கைபேசியில் முன்னமே கூறியிருந்தார். நிகழ்வுக்கு முந்தைய நாளே வந்துவிடுங்கள் என்றும் பணித்திருந்தார். இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டியதில்லை, இயக்குநர் மிகவும் எளிமையை விரும்பக் கூடியவர், சாதாரண அறை, சாதாரண உணவுவகையே போதும் என்றும் கூறியிருந்தேன். கவிஞர் விரும்புகிறார். செய்யட்டும் விடுங்கள் என்றார், பிரபா. அதேபோல் இயக்குநருக்கு தொகை எதுவும் தரவேண்டியதில்லை. ஆனால் நல்ல வாசிப்பாளர். நிறைய புத்தகங்கள் பரிசளிக்கலாம். அதேபோல் வந்துபோவதற்கான பயணப்படி கொடுத்துவிடலாம் என்றும் பேசியிருந்தேன். சரியென்றார்கள்.
10/10/09 இரவு 9மணிக்கு நானும் குணாவும் (துணைக்குத்தான்) தேனி ஓட்டலுக்கு சென்றுவிட்டோம். பிரபாவும், சொர்ணபாரதியும் இருந்தார்கள். குளிரூட்டப்பட அறையாதலால், நடுநடுங்கியது. வரவேற்றார்கள். பேசிக்கொண்டிருந்தோம். இடையில் தமிழ்முதல்வனும் (மதுரைக்காரராதலால் அவரையும் நிகழ்வுக்கு நான் தான் வரச்சொல்லியிருந்தேன்.)வந்துவிட்டார். கொஞ்சநேரம் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்தமுதல்வன் தனது ஆயுதக்கோடுகள் கவிதைநூலை பிரபாவிடமும், சொர்ணபாரதியிடமும் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் இயக்குநர் கைபேசியில் அழைத்து தான் வந்துவிட்ட செய்தியைச்சொன்னார். பேருந்து நிலையம் சென்று அவரை அழைத்துவர நானும் குணாவும் சென்று அழைத்துவந்து, அனைவரிடமும் அறிமுகப்படுத்தினேன். பின் அவருக்கான அறைக்குச்சென்றோம். நேரம் கடந்துகொண்டிருக்க, அவருக்குப்பிடித்த புத்தகங்களை அவரையே தேர்வுசெய்யச் சொல்லலாம் எனறு முடிவெடுத்து, அவரையும் அழைத்துக்கொண்டு புத்தகக்கடைக்குப்போனோம். மணி 10க்கு மேலாகிவிட்டிருந்தது. புத்தகங்கள் தேர்வுசெய்ததில் சில புத்தகங்களே அமைந்தன. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் பிறர்தர வாரா, எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாத்திரி, பெருமாள் முருகனின் ஏறுவெயில், ஜெயகாந்தனின் கங்கை எங்கே போகிறாள், ஜானின் ஆணிவேர் திரைப்படத்திரைக்கதைத் தொகுப்பு, இன்னும் சில புத்தகங்கள் என தேர்வுசெய்து வாங்கிக்கொண்டோம். மணி 11 ஆகிவிட்டிருந்தது. குணாவும், தமிழ்முதல்வனும் வயிறு கடிக்கிறது, சாப்பிடப்போகலாம் என்றனர். இயக்குநரைப்பார்த்தேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் வரும்போதே சாப்பிட்டு வந்தேன் என்றார். பிரபாவைவும், சொர்ணபாரதியையும் முன் சாப்பிட அனுப்பிவிட்டு, இயக்குநரிடம் சாப்பிடலாமா என்றேன். சரி என்றார். அறைக்குப்போகலாம் என்று முடிவானது. அறைக்குப்போவதற்கு முன்னமே ஓட்டல் காவலாளியிடம் தேவையானவற்றை சொல்லிவிட்டு, அறைக்குச்சென்றுவிட்டோம். எல்லாம் தயார். பிரபா கைபேசியில் கூப்பிட்டார். ஏதாவது வாங்கிவரவா? என்றார். புரோட்டாவும், தோசையும் வாங்கிவரச்சொல்லிவிட்டு பேசிக்கொண்டிந்தோம். புரோட்டாவும் தோசையும் வந்தது. அனைவரும் சாப்பிட்டோம். இலக்கியம், சினிமா, அரசியல் என நிறைய பேசிக்கொண்டிருந்தோம். சினிமா அனுபவங்களை ராஜமோகன் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். நல்லதொரு நண்பராக, சினிமாஎனும் மாயவலைக்குள் சிக்காத ஒரு எதார்த்த படைப்பாளியாக, வெள்ளந்தியாக பேசியது அனைவரையும் கவர்ந்தது. மணி 1 ஆகிவிட, கண்கள் சுழல, உறங்கப்போனோம்.
11/10/09 காலை 10மணிக்கு நிகழ்ச்சி. 8,30வரை தூக்கம். எழுந்து குளித்துத்தயாரான போதுதான் யோசனைக்குள் மூழ்கினேன். காதல் கவிதைநூல் வெளியீட்டு விழா, அதுவும், தபுசங்கர் பாணிக்கவிதைகள, சுத்தமாக உடன்பாடே இல்லாத கவிதைகள், சும்மா போனேன் / வந்தேன் கவிதைகள், இதைஎப்படி பாராட்டிப்பேசுவது..? அல்லது இதெல்லாம் கவிதையே இல்லை என்று கிழித்துவிடலாமா..? குழப்பத்தின் முடிவில், பிரபா! கவிதைகுறித்து நான் எதுவும் தயாரிப்புடன் வரவில்லை. முன்னிலை என்று என்பெயர் போட்டிருக்கிறீர்கள். என்னை பேச அழைக்க வேண்டமே..! என்றேன். ஏதாவது பேசுங்கள் என்று கட்டாயப்படுத்தினார். 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. கவிஞருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவராக வந்துசேர அரங்கம் நிறைந்தது. கவிஞர் பள்ளிஆசிரியராக இருப்பதால் முழுக்க சக ஆசிரியர்களே கூடுதலாக வந்திருந்தனர். நிகழ்ச்சிநிரலில் இருந்தவர்களே அரங்கத்தில் இருந்த பாதிப்பேருக்கு மேலிருக்கும். இலக்கியவாதிகளை விட கல்லூரி முதல்வர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் ( இலக்கிய விழாவென்றால் இலக்கியவாதிகள் நிறைந்திருப்பர். இதுவொரு குடும்ப விழாபோலதானே! இங்கே இலக்கியவாதி களையோ, இலக்கிய ஆர்வலர்களையோ தேடுவது தவறுதானே..?) என்று நிறைந்திருந்தனர். சொர்ணபாரதி தான் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார், பிரபா வரவேற்புரையாற்றினார். முன்னிலைவகித்து (?)நானும் கடனேவென இரண்டு வார்த்தை பேசினேன். வாழ்த்தவந்தவர்களெல்லாம் கவிஞரையும், காதலையும் அநியாயத்திற்கு வாழ்த்தினர். (பின்னென்னங்க நிகழ்ச்சிக்கு அழைத்தவரை கன்னாபின்னவென்று வாழ்த்தாமல் குற்றங்குறை கூறமுடியுமா)அதற்கு மனம் இடம் தருமா?) ஆசிரியப்பெருமக்கள்… சொல்லவா வேண்டும்.. அருவியாய்… கொட்டித்தீர்த்தனர். ( நூலாசிரியர் இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார். இருக்காதாபின்ன? நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணினவனுக்குத்தானே தெரியும் அதன் துயரம்? நேரம் போகப்போக அரங்க வாடகை கூடும்… மைக்செட்காரனுக்கு பணம் படடுவாடா பண்ணனும், காதல்கவிதை எழுதியவரின் முகத்தில் புன்னகையே இல்லை. சிரிக்கக்கூட இயலாதவர் எப்படி காதல் கவிதை எழுதினாரென தெரியவில்லை.) எதுஎப்படியோ நிகழ்ச்சி இறுதிவடிவம் பெற்றது. வேண்டாமெனச் சொல்லியும் கேட்காமல் மூன்று நட்சத்திர ஓட்டலில் தான் மதிய உணவு முடிக்க வேண்டுமென்று கூறிவிட்டார்.( இயக்குநருக்கு நம்ம ஸ்டென்த்த காட்டவேண்டாமா என்ன) உணவு முடிந்து அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தோம். மாலை 5 மணியாகிவிட்டது. இப்ப புறப்பட்டால்தான் குறித்தநேரத்திற்கு திருப்பூர் போய் சேரமுடியும். பிரபாவை அழைத்து இயக்குநருக்கான பயணப்படியை வாங்கிக்கொடுங்கள், கொடுத்துவிட்டு நான் செல்கிறேன் என்றேன். சிறிது நேரத்திற்குப்பின் இன்னொரு அறைக்கு அழைத்தார். கவிஞர் விஜயகாந்திராஜ் இருந்தார். என்னசெய்ய ? என்றார். பயணப்படி? என்றேன். ஒருதொகையைக்கொடுத்தார். பெற்றுக்கொண்டேன். திட்டமிடாமல் நிறைய செலவுசெய்துவிட்டார் நண்பர்.எனவே சிறிய தொகைமடடும் இயக்குநருக்கு அளித்துவிடலாம் என்றார். எதுவும்பேசவில்லைநான். கிட்டத்தட்ட நானூறுரூபாயிற்கு மேல் செலவு செய்திருந்தேன் நான். உங்களுக்கு எதாவது வேண்டுமா என்றுகூட கேட்கவில்லை. குறைந்த பட்சம் பயணப்படியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். விடைபெற எழுந்தோம். ராஜமோகனிடம் தொகையைக்கொடுத்துவிட்டுப்புறப்பட தயாரானோம், நானும் குணாவும். நண்பர் வாழை குமார் பேருந்துநிலையம் வரை வந்தார். திருப்பூர் பேருந்து ஏறினோம். திருப்பூரிலிருந்து தேனிக்கு சொந்த காசில் வந்து, நிகழ்ச்சியில் கலந்துவிட்டு சொந்தக்காசிலேயே ஊர்திருப்ப யார் சொன்னது? அப்படி நம்ம இலக்கியம் வளர்த்தவில்லையெனில் அதுவளராதா ? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதையெல்லாம் ஏன் கவனத்தில் கொள்வதில்லை? குறைந்தபட்சம் பயணப்படிகூட கொடுக்காமல் / மூன்று நட்சத்திர அறையும், உயர்வகை உணவும் யார் கேட்டது? அதிலெல்லாம் பிரமாண்டாம் காட்டுகிறவர்கள் ஏன் சின்னச்சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்தாது இருக்கின்றனர்? மனம் ஆயிரம்கேள்விகளுடன் ஆளாய்ப்பறந்தது. நமது நேரத்தை செலவளித்து இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். பணத்தையும் இழக்கவேண்டுமா…! எத்தனை பட்டாலும் புத்திவராது நமக்கும். தெரிந்தோ தெரியாமலோ இரவு சாப்பிட்ட புரோட்டாவும் குருமாவும் நினைவுக்கு வந்தது. மிச்சம் அதுதான். இரவு மணி ஒன்றுக்கு மேலாகியும் உறக்கமின்றி பேருந்தின் / திரைப்படத்தின் இரைச்சலில் கரைந்துகொண்டிருந்தேன். மீண்டும் நாளையோ நாளை மறுநாளோ பொள்ளாச்சி, உடுமலை, கோவை இப்படி ஏதாவதொரு பகுதியிலிருந்து ஒருவர் கைபேசியில் அழைத்து தோழர் ஒரு கவிதைப்புத்தகம் வெளியீட்டுவிழா இருககிறது. அவசியம் நீங்கள் வரவேண்டும் எனலாம். அப்படியா அவசியம் வருகிறேன் என்று நானும் கூறலாம். அப்போது மறுபடியும் இப்படியான ஒரு அனுபவப்பதிவை எதாவதொரு வலைபூவில் எழுதிக்கொண்டிருப் பேன், நான்.

திங்கள், 16 ஜூலை, 2012

Singala theevil...

சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
-மகாகவி
Welcome to delegates of Bharathi International
நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் sujatha_3 பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.
"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."
"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"
"பேரறிஞர் அண்ணாங்களா?"
"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்று’ன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"
"அவரு எல்லாவிதத்திலும் புரட்சியாளருங்க, ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்து இருபதுகளில் ஒரு பார்ப்பனர் இந்த மாதிரி சொல்றதுக்கு எத்தனை தைரியம் வேணும்"
டாக்டர் நல்லுசாமி அவர்களை அணுக "வாங்க, வாங்க, வாழ்த்துக்கள்."
"எதுக்கு?" என்றார் டாக்டர்.
"அ. தெரியாத மாதிரி கேக்கறிங்க."
"உண்மையிலேயே தெரியாதுங்க"
"பாரதி பல்கலைக் கழகத்துக்கு உங்களைத்தான் துணைவேந்தராப் போடப் போறாங்களாம்."
"ஓ. அதுவா? எத்தனையோ பேர்களில் என் பேரும் இருக்குது."
"இல்ல. நீங்கதான்னு சொல்றாங்க. அமைச்சர் உங்களைக் கவனிக்கத்தான் இன்னிக்கு உங்க கூட்டத்துக்கே வராருன்னு சொல்றாங்க"
"சேச்சே. அமைச்சருக்கு பாரதி மேல அப்படி ஒரு ஈடுபாடுங்க"
"உங்களை விட்டாப் பொருத்தமா வேற யாருங்க...?"
"எதோ பார்க்கலாம். அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைங்க. அரசியல் வேற கலக்குது.." டாக்டர் நல்லுசாமி அவர்களை விட்டு விலக..
"வள்ளுவர் சொல்லிக்காரு-
`மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`னு.
இப்ப யாருங்க பார்ப்பான்? யாரும் கிடையாதுங்க. அந்த அர்த்தத்தில் தான் பாரதி சொல்லியிருக்காரு..."
ரிஸப்ஷனில் அவர் தன் அறைச் சாவியை வாங்கிக் கொள்ளும்போது அந்தப் பெண், "ஸர் யூ ஹேவ் எ மெஸேஜ்" என்று புறாக் கூட்டிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொடுத்தாள். "செல்வரத்னம் மூன்று முறை உங்களுக்காக போன் செய்தார்" நல்லுசாமிக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. யார் இந்த செல்வரத்னம்? புரியவில்லை. "தாங்க்ஸ்" என்று அவளைப் பார்த்தபோது "யூ ஆர் வெல்கம்" என்று புன்னகைத்தபோது அவள் உடுத்தியிருந்த ஸன்ன ஸாரி டாக்டர் அவர்களைப் படுத்தியது. தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக மனைவி (டாக்டர் மணிமேகலை)யை விட்டு வந்திருக்கிறார். இந்தப் புன்னகையில் நிச்சயம் வரவேற்பிருந்தது.
கூடிப் பிரியாமலே - ஓரிராவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி...
"டாக்டர் வணக்கம்"
"ஓ. பெருமாள். வாங்க, எங்க இருக்கிங்க இப்ப?"
"உத்கல்ல. புதுசா டமில் செக்ஷன் ஆரம்பிச்சுருக்காங்க..."
"உத்கல் எங்க இருக்குது?"
பக்கத்தில் பச்சைக் கண்களுடன் ஒரு பெண் பிள்ளை இவர்களைப் பார்த்துச் சிரித்து `ஹலோ` என்று சொல்ல, டாக்டர் பெருமாள் அறிமுகப்படுத்தி வைத்தார்.
"இது வந்து கத்தரினா. ரஷ்யாவில் இருந்து பாரதி ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க. திஸ் இஸ் டாக்டர் நல்லுசாமி"
"ஆ. ஐ ஸீ" என்று பெண்மணி அவர் கையைப் பற்றிக் குலுக்கினாள். சற்று வலித்தது. டிராக்டர் ஓட்டும் பெண் போல ஏராளமாக இருந்தாள். ஒல்லி இடையில்லை. ஓங்கி முன்னிற்கும் மார்பையும் சரியாக மூடாமல் ததும்பினாள்.
"யூர் ரீடிங் பேப்பர், ஆர்ன்ட்யூ?"
"நோ... ஐம் பிரிஸைடிங். மத்தியானம்... ஆஃப்டர்நூன். யூ நோ டாமில்?"
"எஸ். காண்ட் ஸ்பீக்."
"இந்தம்மா பாரதியை வறுமைல ஏன் வாடவிட்டாங்க தமிழங்கன்னு கேக்குது"
"அவர் காலத்து தமிழங்க அவர் பெருமையை உணரலை.."
"டாக்டர்.. உங்களுக்குத் துணைவேந்தர் ஆயிருச்சாமே?"
"சேச்சே. இன்னும் எதும் தீர்மானிக்கலைப்பா?"
"ஆயிட்டுதுன்னுதான் சொல்றாங்க. உங்களைத்தான் நம்பியிருக்கேன். என்னை உத்கல்ல இருநது எப்படியாவது ரீடரா கொண்டு வந்துருங்க. சப்பாத்திச் சாப்பாடு. சூடு அதிகமா....? என்னுடைய பைல்ஸுக்கு ஒத்துக்கிடலை."
"பாக்கலாங்க. முதல்ல ஆகட்டும்" செல்வரத்னம்... எங்கேயோ கேட்ட மாதிரி பேராக இருக்கிறதே. ரஷ்யியைப் பார்த்து மறுபடி புன்னகைத்து விட்டு டாக்டர் மெத்தென்ற மாடிப்படிகளில் ஏறும்போது உற்சாகமாகத்தான் சென்றார்.
மணிமேகலைக்குச் செய்தி சொல்லதான் வேண்டும். அவளுக்குத்தான் சந்தோஷமாக இருக்கும். சே. அதற்குள் எத்தனை கோட்டைகள்.
மெஸ்ஸனைன்னைத் தாண்டியதும் இங்கிருந்தே மாநாட்டு முதல் ஹால் தெரிந்தது. அதன் வாசல் ஏர்கண்டிஷனுக்கு அடைத்திருந்தால் உள்ளே பேச்சுக் கேட்கவில்லை. அவ்வப்போது உள்ளேயிருந்து டெலிகேட் ஒருவர் டாய்லெட் போகவோ அல்லது முந்திரிபருப்பு கேக்குடன் தயாராக இருந்த காபி சாப்பிடவோ கதவைத் திறந்தபோது "அவன் சர்வதேசக் கவிஞன். பிஜி மக்களுக்காக இங்கிருந்து கண்ணீர் வடித்தான். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்.. என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிப் பாடினான் அவனன்றோ" என்று மாநாடு கசிந்தது. பல பேர் டாக்டரை வணங்கினார்கள். பரிச்சயமில்லா முகங்கள். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். துணைவேந்தர் என்றால் சும்மாவா? அமைச்சர் அதற்குத்தான் பிற்பகல் கூட்டத்துக்கு வருகிறார். என்னைக் கணிக்கத்தான். நல்லுசாமிக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. திறமைப்படி கொடுக்க வேண்டுமானால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அவரைக் காட்டிலும் பாரதி கவிதைகளில் பரிச்சயமுள்ளவர்கள் யாரும் கிடையாது. `பாரதி கவிதைகளில் சமத்துவம்` என்று டாக்டர் பட்டத்துக்கு அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இன்னும் ஒரு மைல் கல். மத்தியானக் கூட்டம் தொடங்க இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது. ஆனால், திறமை மட்டும் போதாதே. அறைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வரலாம். முடிந்தால் மணிமேகலைக்குத் தொலைபேசி மூலம் விவரம் தெரிவித்து விடலாம்.
டாக்டர் லேசாக,
`காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்...`
என்று பாடிக் கொண்டே அறைக் கதவில் சாவியைப் பொருத்தும் போது அறை வாசலில் நின்று கொண்டிருந்தவனைக் கவனித்தார்.
"வணக்கம் ஐயா"
"வணக்கம். நீங்க"
இருபத்தைந்து சொல்லலாம். ஒல்லியாக இருந்தான். உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்குச் சற்று அவசரமான நிழல்கள். தோளில் பை மாட்டியிருந்தான். அதில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
"கண்டு கன காலம்" என்றான். டாக்டர் அவனைத் தன் ஞாபக செல்களில் தேடினார்.
எங்கோ பார்த்திருக்கிறோம்? மையமாக... "வாங்க. எப்ப வந்தீங்க?"
"இஞ்சாலையா?"
இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சிலோன். இவனைச் சிங்களத்தில் பார்த்திருக்கிறோம்.
"நீங்கதானா செல்வரத்னம்?"
"ஐயாவுக்கு நினைப்பு உண்டு. யாழ்பாணத்தில் சந்திச்சிருக்கிறோம்." இப்போது முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. இவன் வீட்டில் யாழ்பாண உலகத் தமிழ் மகாநாட்டின் போது டாக்டர் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்.
"எங்க வந்தீங்க?"
"சும்மாத்தானாக்கம். இடைசுகம் விசாரிச்சுக் கொண்டு போவமெண்டு வந்தனாக்கம்." மனசுக்குள் மொழிபெயர்த்துக் கொள்ள வேண்டியிருந்த அவன் தமிழ் சற்று நிரடியது. இருந்தும் "வாங்க வாங்க. உள்ள வாங்க." என்றார்.
அறைக்குள் ஆஷ்-டிரே தேடினான். டாக்டர் அவனை நாற்காலி காட்ட அதில் விழுந்தான்.
"விழாவில எண்ட பேச்சும் உண்டு," என்றான்.
"அப்படியா. சந்தோஷம், விழாவில கலந்துக்கறதுக்காக வந்திங்களா சிலோன்ல இருந்து?"
"ஆமாம்."
"ரொம்ப பொருத்தம். சிங்களத் தீவினிக்கோர் பாலமமைப்போம்னு மகாகவி சொன்னதுக்கு ஏற்ப.."
இப்போது அவனை முழுவதும் ஞாபகம் வந்து விட்டது. யாழ்ப்பாணம் மாநாட்டில் இவன் குடும்பமே தமிழில் ஈடுபாடு கொண்டு அவர்கள் வீட்டில் இவருக்கு விருந்து வைத்ததும், இவன் தங்கை இனிமையான குரலில் `நெஞ்சில் உரமுமின்றி` பாடியதும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் பெயர் என்ன...
"உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சௌக்கியமுங்களா?"
"ஊர்ல யாரும் இல்லிங்க"
"அப்படியா? அவங்களும் வந்திருக்காங்களா? உங்க தங்கச்சி வந்திருக்குதோ?"
"தங்கச்சி இல்லைங்க," என்றான். அவன் கண்களில் பளபளப்பு ஏற்பட்டது.
"என்ன சொல்றீங்க?"
"எண்ட தங்கச்சி, அப்பா, அம்மா எல்லாரும் இறந்துட்டாங்க"
"அடப்பாவமே. எப்ப? எப்படி?"
"ஆகஸ்ட் கலகத்திலதாங்க"
"ஐயையோ, எப்படி இறந்து போனாங்க?"
"தெருவில வெச்சு... வேண்டாங்க, விவரம் வேண்டாங்க. நான் ஒருத்தன் தான் தப்பிச்சேன். அதுவும் தற்செயல்."
டாக்டர் மௌனமாக இருந்தார். எப்படி ஆறுதல் சொல்வது? அவன் சிரமப்பட்டுக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்போது எது சொன்னாலும் பிரவாகம் துவங்கிவிடும் என்று தோன்றியது. இருந்தும் ஏதோ பேச வேண்டிய அவசியத்தில்,
"ஏதாவது சாப்பிடறீங்களா?"
"கோப்பி" என்றான்.
"இத்தனை நடந்திருக்குன்னு நினைக்கவே இல்லை, அதும் நமக்குத் தெரிஞ்சவங்க, நாம பழகினவங்க இதில பலியாகி இருக்காங்கன்னா ரத்தம் கொதிக்குது."
"அதைப் பத்தி இப்ப பேச வேண்டாங்க. நான் வந்தது வேற விசயத்துக்காக,"
"சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில என்ன உதவி தேவையா இருக்குது?"
"நிகழ்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில முழுவதும் தெரியாதுண்டுதான் தோணுது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில இருந்த ஒரு லட்சம் தமிழ்ப் புத்தகங்களை போலீஸ்காரங்களே எரிச்சாங்க. அது தெரியுமோ உங்களுக்கு?"
"அப்படியா?"
"அருமையான புத்தகங்கள். பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த `ஸ்வதேச கீதங்கள்` 1908-லேயோ என்னவோ வெளியிட்டது. இதன் விலை ரெண்டணா-ண்டு போட்டு இருந்தது. ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது. 1899-ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணி முதல் பிரதி. லட்சம் புத்தகங் களானா எத்தனை தமிழ் வார்த்தைகள். எண்ணிப்பாருங்க. அத்தனையும் தெருவில எரிச்சாங்க."
"அடடா"
"அதை நான் சொல்ல விரும்பறேன். அப்பறம் நான் இந்தியாவுக்கு வந்து பதினைஞ்சு நாளா தமிழ்நாட்டில பார்த்த சில விஷயங்களையும் சொல்ல விரும்பறேன்."
"எங்க சொல்ல விரும்பறீங்க?"
"இன்றைய கூட்டத்திலதான்"
"இன்றைய கூட்டம் பாரதி பற்றியதாச்சே"
"பாரதி பெல்ஜியம் நாட்டுக்காகவும் பிஜி தீவினருக்கும் அனுதாபப்பட்ட சர்வதேசக் கவிஞன். ருஷ்யப் புரட்சியை வாழ்த் தினவன். இன்றைக்கு இருந்திருந்தா சிங்களத் தமிழர்களுக்காக உருகியிருக்க மாட்டானா?"
"கட்டாயம். கட்டாயம்"
"அதைத்தாங்க சொல்லப் போறேன்."
"அதுக்கு இந்த மேடை சரியில்லைங்களே.."
"இந்த மேடைதான் மிகச் சரியானது. தமிழ் பயிலும் எல்லா நாட்டவர்களும் வந்திருக்காங்க. தமிழக அமைச்சர் வரார். சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், அனைத்திந்திய தமிழறிஞர்கள் எல்லாரும் வர இந்த மேடையிலே எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கத்தான் துக்கத்தையும் மறந்து வந்திருக்கேன்."
டாக்டர் சற்றே கவலையுடன் "குறிப்பா என்ன சொல்லப் போறீங்க?" என்றார்.
"சிங்களத் தமிழர்களை தமிழகம் நடத்தற விதத்தையும் பார்த்தேன். அதையும் சொல்லப் போறேன்."
"புரியலீங்க"
"ஐயா. நான் வந்து பதினைந்து தினம் ஆச்சு. முதல்ல மண்டபம் டிரான்ஸிற் காம்ப்புக்குப் போனேன். இலங்கையைத் துறந்து இங்க வந்த தமிழர்கள் என்ன செய்யறாங்க. அவங்களை எப்படி றீட் (treat) பண்ணறாங்கன்னு பாக்கிறத்துக்கு.. ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அவங்களைத் தமிழகம் எப்படி வரவேற்குது தெரியுமோ? டிரான்ஸிஸ்டர் வெச்சிருக்கியா? டேப்ரிக்கார்டர் கொண்டு வந்திருக்கியா?
தங்கத் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்துட்டோமிண்டு கண்ணில கனவுகளை வெச்சுக்கிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் ரெண்டே மணி நேரத்தில கலைஞ்சு போயிருதுங்க. அந்தக் காம்ப்பைப் பார்த்ததும். சிறைக் கைதிங்க பரவாயில்லை. சன்னல் இல்லாத ஓட்டு வீடு. பிரிட்டிஷ் காலத்தில் க்வாரண்டைன் காம்ப்பா இருந்ததை இன்னும் மாற்றாம வெச்சிருக் காங்க. இரண்டு ரூமுக்கு பத்து பேற்றை அடைச்சு வெச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆளுக்கு இரண்டு வாரத்துக்கு எட்டு ரூபா உபகாரப் பணம். ஆறாயிரம் ரூபா சர்க்கார் கடன் கொடுக்குதுன்னு பேரு. எல்லாம் அப்பிளிகேசனாத்தான் இருக்குது. ஆறு மாதம் காத்திருந்தாலும் லஞ்சமில்லாம வாராது. இவங்க உடமைகளை கொண்டு வந்த அற்பப் பணத் தை ஏமாற்றிப் பறிக்க எண்ணூறு பேர். சிலோன் ரூபாய்க்கு எழுபத்து மூணு பைசா கொடுக்கணும், கிடைக்கிறது நாப்ப த்தஞ்சு பைசாதான். எல்லாரும் திரும்பப் போயிரலாம். அந்த நரகமே மேல்னு சொல்றாங்க. திரும்ப சேர்த்துக்க மாட்டாங் க. போக முடியாது.
1964 வரைக்கும் இலங்கையைத்தான் தாயகம்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க. திடீர்னு `இது உன் தாயகம் இல்லை. தமிழ்நாட்டுக்குப் போன்னு அழையாத விருந்தாளிங்களா பேப்பரை மாற்றிக் கொடுத்துட்டுக் கப்பலில் அனுப்பிச்சுட்டா ங்க. எதுங்க இவங்க தாயகம்? அங்க பொறந்து வளந்து ஆளாகி ஒரே நாளில எல்லாம் கவரப்பட்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம இவங்களைப் பந்தாடிக்கிட்டு இருக்காங்க. இது ஒரு சர்வதேசப் பிரச்சினை இல்லையா?"
"எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்திதான் எனக்கு..."
"வேற எங்கங்க சொல்ல முடியும்? அரசியல்வாதிவாதிங்ககிட்டயா? ஏடிஎம்கே-காரங்க `இதுக்குத்தான் நாங்க தமிழகம் பூராவும் கதவடைப்பு செஞ்சோமே` ங்கறாங்க, டிஎம்கே `இதுக்குத்தான் நாங்களும் தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சமே`ங்கறாங்க"
"இல்லை.. இதைத் தமிழ்ப் பத்திரிக்கைகளில ஒரு கட்டுரை மாதிரி எழுதலாமே நீங்க..."
"சொல்றேங்க. எல்லாப் பத்திரிகையும் போய்ப் பார்த்தேன். விகடன்ல சொன்னாங்க - நாங்க அட்டைப் படமே கண்ணீர் த்துளியா ஒரு இஷ்யூலே போட்டாச்சேன்னாங்க. குமுதம் ஆளுங்களைச் சந்திக்கவே முடியலை. குங்குமத்தில விகடன்லே வந்துருச்சேன்னாங்க. ராணில இதைப் பத்தித்தான் கட்டுரைத் தொடர்ல நாங்களே எழுதுகிட்டிருக் கமேன்னாங்க.."
"நீங்க என்ன எழுதறாதா சொன்னீங்க."
"அந்தப் புத்தகங்களை எரிச்சதைப் பற்றித்தாங்க. ஒரு லட்சம் புத்தகங்க. அத்தனை வார்த்தைகளும் எரிஞ்சு போய் ரா த்திரி பூரா வெளிச்சமா இருந்ததை. ஒருத்தர் மட்டும் சொன்னாரு எழுதுங்கன்னு.. ஆனா அப்படியே உங்க தங்கச்சி றேப்பையும் எழுதுங்க.. அவங்க கலர் ட்ரான்பரன்ஸி இருந்தா கொடுங்க. அட்டையிலே போடுவேம்.. கொஞ்சம் ஹ்யூமன் இன்டரஸ்ட் இருக்கும்னாருங்க. அவர் பேர் சொல்ல விரும்பலை. எனக்கு என் சொந்த சோகத்தை எழுத விருப்பமில்லை. அவளை என் கண் எதிரிலேயே துகிலுரிச்சாங்க. முதல்ல பக்கத்து வீட்டில சிங்களக் குடும்பத்தில்தாங்க அடைக்கலம் கொடுத்தாங்க.. நாள் பூரா கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டு இருந்தது. அவங்க உயிருக்கே ஆபத்து வந்திரும்போல நிலையில பின்பக்கமா ஓடிப் போயிருச்சுங்க. சந்துல வெச்சுப் பிடிச்சுத் தெருவில நடுத் தெருவில.. என் கண் முன்னாலலே.. கண் முன்னாலயே. .." அவன் இப்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதான்.
"ரொம்ப பரிதாபங்க"
கொஞ்ச நேரம் அழுதுவிட்டு "எனக்கு இதைச் சொல்லி அனுதாபம் தேடிக்க விருப்பமில்லைங்க. இந்த மாதிரி வன்முறைங்க உங்க ஊர்லேயும் நிறைய நடக்குது. இங்கயும் றேப்புக்குப் பஞ்சமில்லை. ஆனா அந்தப் புத்தகங்களை எரிச்சது, அது என்னவோ ஒரு சரித்திர சம்பவமாத்தான் எனக்குத் தெரியுது. அந்த நெருப்பில இருந்த வெறுப்பு நிச்சயம் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதுங்க. " சட்டையில் முழங்கைப் பகுதியில் தன் முகத்தைச் சரியாகத் துடைத்துக் கொண்டு, "எனக்கு ஒரு நாட்டுக் குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமா சந்தேகங்கள் வருதுங்க. சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு பேரும் இந்தியாவில இருந்து வந்தவங்க. அவங்க வங்காளம் ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம். நாங்க ஒண்ட வந்த கள்ளத் தோணிங்களாம், சக்கிலியங்களாம், இதையெல்லாம் சொல்ல வேண்டாம்? ஆறு லட்சம் பேர் எங்க போவோங்க? என்ன செய்வோங்க? இதெல்லாம் சொல்ல வேண்டாமா?"
டாக்டர் மூக்கைச் சொறிந்து கொண்டார். "இவ்வளவு விவரமா சொல்ல வேண்டாங்க. ஏன்னா இது இலக்கியக் கூட்டம். இதில அரசியலை நுழைக்கிறது நல்லால்லை. ஒண்ணு செய்யுங்க..."
"அரசியல் இல்லைங்க. மனித உரிமைப் பிரச்சினை இல்லையா?
சொந்த சகோதரர்கள்
துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தாரடீ
-ன்னு பாரதி பாடலையா? இலங்கைத் தமிழர்களைச் சகோதரர்கள்னுதானே நீங்க எல்லாரும் சொல்றீங்க?"
"அதும் ஒரு விதத்துல வாஸ்தவம்தான். இருந்தாலும்.."
"எனக்கு இதை விட்டா வேறு வாய்ப்புக் கிடையாதுங்க. ரத்தினாபுரத்தில நடந்ததைச் சொன்னா கண்ணில ரத்தம் வரும். அதெல்லாம் நான் சொல்லப் போறதில்லை. ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சாங்க. அதுக்கும் பதில் ஒரே ஒரு புத்தகத்தை மேடையில எரிக்கப் போறேன்."
"என்ன புத்தகம்?" என்றார் கவலையோடு.
"இந்த மாநாட்டு மலரை"
"எதுக்குங்க அதெல்லாம்...?"
"பாரதி சொன்னதை எதும் செய்யாம ஏர்கண்டிசன் ஓட்டல்ல சாக்லேட் கேக் சாப்ட்டுக்கிட்டு மாநாடு போடறது எனக்கு என்னவோ பேத்தலாப் படுது. அதனோட சிகரம்தான் இந்த வெளியீடு. இதை மேடையில எரிச்சுட்டு பாரதி சொன்னதை நடைமுறையில செய்து காண்பிங்கன்னு சொல்லப் போறேன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்னு அவன் சொன்னது கான்க்ரீட் பாலமில்லை. முதல்ல மனப்பாலம் அமைங்க. அப்பத்தான் பளிச்சுனு எல்லார் மனசிலையம் பதியும். நேரமாயிடுச்சுங்க. ரெண்டு மணிக்கு இல்ல கூட்டம்?" அவன் எழுந்து வணங்கி விட்டுச் சொன்றான் செல்வரத்தினம்.
டாக்டர் அவன் போன திக்கைத் திகைப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் யோசித்தார். நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார். இரண்டாவதாகப் பேசுவது `செல்வரத்தினம், ஸ்ரீலங்கா` என்றிருந்தது. யோசித்தார். நாய்க்குட்டி போலிருந்த டெலிபோனை எடுத்தார். மதுரைக்கு டிரங்க்கால் போட்டார். "பிப்பி கால்.. டாக்டர் மணிமேகலை"
பத்து நிமிஷத்தில் கால் வந்தது.
"மணி.. நான்தான்"
"என்ன, விசாரிச்சிங்களா? கிடைச்சிருச்சா?"
"ஏறக்குறைய கிடைச்ச மாதிரிதான். செக்ரட்டேரியட்டிலேயே விசாரிச்சுட்டேன். அமைச்சர் கையெழுத்து ஒண்ணுதான் பாக்கியாம்."
"அப்ப இனிப்பு செய்துட வேண்டியதுதான். இந்தக் கணத்தில் உங்ககூட இருக்க..."
"மணி. ஒரு சின்ன சிக்கல்..."
"என்னது? அருணாசலம் மறுபடி பாயறாரா?"
"அதில்லை மணி, இன்னிக்கு கூட்டத்தில் அமைச்சர் வராரு. எனக்கு முன்னால ஒரு சிலோன்காரன் பேசறதா இருக்கு. நாம யாழ்பாணத்தில உலகத் தமிழ் மகாநாட்டில சந்திச்சிருக்கோம். அவன் பேசறான்."
"பேசட்டுமே. உங்களுக்கென்ன?"
"அதில்லை மணிமேகலை. அவன் சமீபத்தில கலகத்தில ரொம்ப இழந்து போய் ஒரு வெறுப்பில இருக்கான். ஏறக்குறைய தீவிரவாதியா கிறுக்குப் புடிச்ச பயலா இருக்கான்."
"என்ன செய்யப் போறான்?"
"யாழ்ப்பாணத்தில் லட்சம் புத்தகங்களை எரிச்சாங்களாம். அதுக்குப் பதிலா மேடையில விழா மலரை எரிச்சுக் காட்டப் போறேங்கறான். கேக்கறத்துக்கே விரசமா இருக்குது. எனக்கு என்னடான்னா கூட்டத்தில கலாட்டா ஆகி எங்கயாவது எனக்கு சந்தர்ப்பம் வரதுக்குள் கலைஞ்சு போச்சுன்னா அமைச்சர் வந்து..."
"த்ரீ மினிட்ஸ் ப்ளீஸ்"
"எக்ஸ்டென்ஷன் பண்ணுங்க"
"என்ன. கேக்குதா?"
"கேக்குது, கேக்குது. இதப் பாருங்க, உங்க பேச்சை இன்னைக்கு அமைச்சர் கேக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீங்க முன்னாடி பேசிடுங்களேன்."
"எப்படி? நிகழ்ச்சி நிரல்ல மாறுதல் செய்யணுமே. தலைமை தாங்கறதால, இறுதியுரைன்னா நானு?"
கொஞ்ச நேரம் மதுரை யோசித்தது.
"என்ன செய்யச் சொல்றீங்க?"
"எப்படியாவது உங்க அண்ணன் கிட்ட அவசரமா போன் பண்ணிச் சொல்லிடு.."
"அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. வெச்சுருங்க"
"எப்படியாவது.."
"வெச்சிருங்கன்னு சொன்னனில்லையா? அதிக நேரம் இல்லை. ஒரு டிமாண்ட்கால் போட்டுர்றேன்."
"சரி மணிமேகலை"
"கவலைப்படாதீங்க. பேச்சு நல்லா பேசுங்க. கிடைச்ச மாதிரித்தான்னு அண்ணனும் சொல்லியிருக்காரு. அமைச்சர் உங்க பேச்சை கேட்டுட்டா போதும்னாரு.."
டெலிபோனை வைத்து விட்டு டாக்டர் சற்று திருப்தியுடன் எழுந்தார். மணிமேகலை செய்து காட்டிவிடுவாள். இவ்வளவு செய்யக் கூடியவள்.. இது என்ன? இப்போதே அவள் விரல்கள் தொலைபேசியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவள் சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலம் காக்கும் மதியே சக்தி
தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி
இரண்டு மணிக்குக் கூட்டம் துவங்கியது. எதிரே ஹால் நிரம்பியிருந்தது. வெள்ளைக்கார முகங்கள் முதல் வரிசையில் பளிச்சென்று தெரிந்தன. பட்டுப் புடவை உடுத்திய நங்கை மைக்கைத் தொட்டுப் பார்த்துவிட்டு "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லதே எண்ணல் வேண்டும்..." என்று இனிமையாகப் பாடினாள். மேடையில் பேச இருப்பவர்கள் வரிசையில் ஓரத்தில் செல்வரத்தினம் உட்கார்ந்திருந்தான். டாக்டரைப் பார்த்துப் புத்தகத்தை உயர்த்திக் காட்டினான். கவலையாக இருந்தது. என்ன. ஒன்றுமே செய்ய முடியவில்லையா? இரு இரு பார்க்கலாம். அமைச்சர் இன்னும் வரவில்லை. எல்லோரும் வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வரவேற்புரைஞர் "தலைவர் அவர்களே. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தங்கத் தமிழர்களே.." என்று துவங்க, சலசலப்பு தொடர, அமைச்சர் அங்குமிங்கும் வணங்கிக் கொண்டு நடுவில் நடந்து வந்தார். டாக்டரைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு உடனே தன் முழுக்கைச் சட்டையை உருவி கடிகாரம் பார்த்தார். டாக்டர் அருகில்தான் உட்கார்ந்திருந்தார்.
இப்போது கேட்கலாமா? இது சந்தர்ப்பமா? இல்லை இல்லை. அவர் கேட்கும் வரை காத்திருப்போம். பின்னால் பார்த்தார். இன்னும் இருந்தான். கவலை சற்று அதிகமாகியது.
"முதற்கண் பிஜித் தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் அவர்கள் பேசுவார்." என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்தார்.
"ரெஸ்பெக்டட் அண்ட் ஹானரபிள் மினிஸ்டர் அண்ட் பெல்லோ டெலிகேட்ஸ். ஐம் எ தர்ட் ஜெனரேஷன் டமிலியன் அண்ட் ஐம் ஸாரி ஐம் நாட் ஏபிள் டு ஸ்பீக் இன் டமில், பட் தி கிரேட் ஸுப்ரமண்ய பாரதி..."
டாக்டர் தன்னை அறியாமல் பின்னால் பார்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு காகிதத்தைப் பின் வரிசையில் ஓரத்தில் இருந்தவரிடம் காட்டி ஏதோ கேட்க, அவர் செல்வரத்தினத்தைக் காட்ட, இன்ஸ்பெக்டர் செல்வரத்தினத்தின் பின் நழுவி வந்து தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல, செல்வரத்தினம் கலவரத்துடன் உடனே எழுந்து அவருடன் செல்வதைப் பார்த் தார்.
பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டார். மணிமேகலை மணிமேகலைதான். ஒரு மணிநேரத்தில் சாதித்து விட்டாள். அவருக்குள் புன்னகை ஒன்று மலர்ந்தது.
"அடுத்து பேசவிருந்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த திரு.செல்வரத்தினம் அவர்களை மேடையில் காணாததால் சோவியத் நாட்டைச் சேர்ந்த கத்தரீனா ஐவனோவாவை அழைக்கிறேன்."
தினமணி நாளிதழில் மறுதினம் செய்தி வந்திருந்தது.
டாக்டர் இரா.நல்லுசாமி தன் தலைமையுரையின் போது "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல, மனப்பாலத்தை.." என்றார். அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாகத் துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.
செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் தாய்நாடு திரும்பிச் செல்லும்படி கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ்கள் எதிலும் வரவில்லை.
*****
பாரதி நூற்றாண்டு நினைவுத் தொகுப்பாக, பாரதி பதிப்பக வெளியீட்டில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய "பாரதி சிறுகதைகள்" முதற்பதிப்பில் (1982) இருந்து.
flow1

Maharajavin rayilvandi. A.Muthulingam

ஒரு விபத்து போலதான் அது நடந்தது.
செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் A.Muthulingam புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும்.
ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் சிரிக்க ஆரம்பித்தவர் போலவே காட்சியளித்தார்.
மிஸஸ் ஜோர்ஜை பார்த்தவுடன் கண்டிப்பானவர் என்பது தெரிந்துவிடும். பொட்டு இடாத நெற்றி கடும் வெள்ளையாக இருந்தது. யௌவனத்தில் இருந்து பாதி தூரம் வரை வந்திருந்தாலும் அவருடைய கண்கள் மூக்குக்கு கீழே தென்படுவதைப் பார்த்துப் பழக்கப்படாதவை. கறுப்புக்கரை வைத்த வெள்ளைச்சேலை அணிந்திருந்தார். சேலையின் ஒவ்வொரு மடிப்பும் கனகச்சிதமாக உரிய இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. நான் அங்கு போனபோது இருவரும் மகளை எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் நின்றனர்.
மூன்று பெண்கள் தூரத்தில் வந்தார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான சீருடை போன்ற ஒன்றை அணிந்திருந்தார்கள். இருந்தும் அவர்களில் இந்தப் பெண் அவள் உயரத்தினால் நீண்ட தூரம் முன்பாகவே தெரிந்தாள். அவள் அசையும்போது இடைக்கிடை அவள் இடை தெரிந்தது; மீதி மறைந்தது. கிட்ட வந்தபோது அவள் கண்கள் தெரிந்தன. அவை அபூர்வமாக ஓர் இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இருபக்கமும் கூராக இருந்தன. கழுத்திலோ காதிலோ வேறு அங்கத்திலோ ஒருவித நகையுமில்லை. ஆனால் மூக்கிற்குக் கீழே, மேல் உதட்டில் ஒரு மரு இருந்தது. இது அவள் உதடுகள் அசையும்போதெல்லாம் அசைந்து எங்கள் பார்வையை அவள் பார்வையை திருப்பியது. அப்படியே அவள் உடம்பை அவதானிக்கும் ஆர்வத்தையும் கூட்டியது. இது ஒரு நூதனமான தந்திரமாகவே எனக்குப் பட்டது.
ரொஸலின் என்று அவளை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அலுப்பாக, கண்களை நிமிர்த்திப் பார்த்தாள். அந்த முகம் பதின்மூன்று வயதாக இருந்தது. ஆனால் உடல் அதை ஒத்துக் கொள்ளாமல் இன்னும் அதிக வயதுக்கு ஆசைப்பட்டது.
என்னுடைய முதலாவது அதிர்ச்சி அந்த வீடுதான். அது எனக்குப் பரிச்சயமற்ற பெரும் வசதிகள் கொண்டது. என்னிலும் உயரமான ஒரு மணிக்கூடு ஒவ்வொரு மணிக்கும் அந்த தானத்தை ஞாபகம் வைத்து அடித்தது. விட்டுவிட்டு சத்தம் போடும். நான் முன்பு தொட்டு அறியாத ஒரு குளிர் பெட்டி இருந்தது. தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் பெரும் சத்தத்தோடு தண்ணீர் பாய்ந்து வரும் கழிவறை இருந்தது. வாழ்நாள் முழுக்க பராமரித்தாலும் ஒரு பூ பூக்காத செடிகலைத் தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள்.
எனக்கு ஒதுக்கப்பட்ட அறை அவசரமாகத் தயாரிக்கப்பட்டது. அலுமாரியும் மேசையும் ஒரு பக்கத்தை அடைத்தன. நிறையப் புத்தகங்களும் வெற்றுப் பெட்டிகளும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அலுமாரிக்குள் அனுமதி கிடைக்காத உடுப்புகள் வெளியே காத்திருந்தன. படுக்கையில் விரிப்பு கலையாத வெள்ளை விரிப்பும், அநீதியாக இரண்டு தலையணைகளும் கிடந்தன. அந்த அறையைத் தொட்டுக்கொண்டு மூன்று கதவுகள் கொண்ட ஒரு குளியலறை இருந்தது. மூன்று பேரு மூன்று வாசல் வழியாக அதற்குள் வரமுடியும். ஆனபடியால் மிகக் கவனமாக உள்பூட்டுகளைப் போடவும், பிறகு ஞாபகமாகத் திறக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குளியல் தொட்டி வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறதா அலல்து பழுப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறுகிறதா என்பதைச் சொல்ல முடியவில்லை. அதில் நீண்டமுடி ஒன்று தண்ணீரில் நனைந்து நெளிந்துபோய் கிடந்தது. இன்னும் பல பெண் சின்னங்களும், அந்தரங்க உள்ளாடைகளும் ஒளிவில்லாமல் தொங்கின.
இரண்டாவது அதிர்ச்சி முத்தம் கொடுக்கும் காட்சி. அந்தப் பெண் அடிக்கடி முத்தம் கொடுத்தாள். சும்மா போகிற தாயை இழுத்து அவள் கன்னத்திலே முத்தம் பதித்துவிட்டுப் போனாள். சிலவேளை பின்னுக்கிருந்து வந்து அவளைக் கட்டிப் பிடித்து ஆச்சரியப்பட வைத்தாள். சிலமுறை கன்னத்தில் தந்தாள்; சிலமுறை நெற்றியில் கொடுத்தாள். தாயும் அப்படியே செய்தாள். சில நேரங்களில் அப்படிக் கொடுக்கும்போது என்னைச் சாய்வான கண்களால் பார்த்தாள். எனக்கு அந்த சமயங்களில் என்ன செய்வதென்று தெரிவதில்லை.
நான் முதல் முறையாக அந்நியர் வீட்டிலே தங்கியிருந்தேன். அதிலும் அவர்கள் கத்தோலிக்கர்கள். அவர்கள் பழக்கவழக்கங்கள் அப்படியாயிருக்கலாம் என்று யோசித்தேன். ஆனாலும் கூச்சமாக இருந்தது. என் கண்களை இது சாதாரணமான நிகழ்ச்சி என்று நினைக்கும் தோரணையில் வைக்கப் பழக்கிக்கொண்டேன்.
சாப்பாடு மேசையில் பரிமாறப்பட்டதும் நான் அவசரமாகக் கையை வைத்துவிட்டேன். பிறகு பிரார்த்தனை தொடங்கியபோது அதை இழுத்துக்கொண்டேன். கடைசியில் ‘ஆமென்’ என்று சொன்னபோது நான் கலந்து கொள்ளத் தவறிவிட்டேன். அதற்கு இந்தப் பெண் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தாள்.
அன்று இரவு நடந்ததுவும் விநோதமான சம்பவமே. பழக்கப்படாத அறை, பழக்கப்படாத கட்டில், பழக்கப்படாத ஒலிகள், வெகு நேரமாக நித்திரை வரவில்லை.
மெள்ள என்னுடைய கதவு திறக்கும் ஒலி. ஒரு மெழுகுவர்த்தியைப் பிடித்தபடி இந்தப் பெண் மெள்ள நடந்து வந்தாள். வந்தவள் என் பக்கம் திரும்பிப் பாராமல் நேராக பெட்டிகள் அடுக்கி வைத்திருக்கும் திசையில் போய் நின்றுகொண்டு அமெரிக்காவின் சுதந்திரச்சிலை போல மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்தாள். நான் திடீரென்று எழுந்து உட்கார்ந்தேன்.
“பயந்துட்டியா?” இதுதான் அவள் என்னுடன் பேசிய முதல் வார்த்தை. நானும் அவள் பக்கத்தில் நின்று என்னவென்று பார்த்தேன். அந்த மரப்பெட்டிக்குள் ஐந்து பூனைக்குட்டிகள் ஒன்றன்மேல் ஒன்றாக மெத்துமெத்தென்று கண்ணை மூடிக் கிடந்தன. ஒவ்வொன்றாக கையிலே எடுத்துப் பூங்கொத்தை ஆராய்வதுப்போல பார்த்தாள். அவள் கைச்சூடு ஆறும் முன்பு நானும் தொட்டுப் பார்த்தேன். புது அனுபவமாக இருந்தது.
“மூன்று நாட்கள் முன்புதான் குட்டி போட்டது. இரண்டு இடம் மாறிவிட்டது. தாய்ப் பூனை இந்த ஜன்னல் வழியாக வரும், போகும். பார்த்துக் கொள்” என்றாள். அதற்கு நான் மறுமொழி சொல்லவில்லை. காரணம் நான் அப்போது அவளுடைய முதலாவது கேள்விக்கு எழுத்துக் கூட்டிப் பதில் தயாரித்துக் கொண்டிருந்ததுதான்.
சற்று நேரம் என்னையே பார்த்துக்கொண்டு நின்றவள், எனக்கு பரிச்சயமானவள் போல ரகஸ்யக் குரலில், “இந்தப்பூனை குட்டியாக இருந்த போது ஆணாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் பெண்ணாக மாறி குட்டி போட்டுவிட்டது” என்றாள். பிறகு இன்னும் குரலை இறக்கி, “இந்தக் கறுப்புக் குட்டிக்கு மாத்திரம் நான் பெயர் வைத்துவிட்டேன். அரிஸ்டோட்டல்” என்றாள்.
“ஏன் அரிஸ்டோட்டல்?”
“பார்ப்பதற்கு அப்படியே அரிஸ்டோட்டல் போலவே இருக்கிறது. இல்லையா?”
இவ்வளவுக்கும் அவள் என் பக்கத்தில் நெருக்கமாக நின்றாள். அவளுடைய துயில் உடைகள் சிறு ஒளியில் மெல்லிய இழை கொண்டதாக மாறியிருந்தன. கேசம் வெப்பத்தைக் கொடுத்தது. என் விரல்கள் அவளுடைய அங்கங்களின் எந்த ஒரு பகுதியையும் சுலபமாகத் தொடக்கூடிய தொலைவில் இருந்தன. ஆள் காட்டி விரலை எடுத்து தன் வாயில் சிலுவை போல வைத்து சைகை காட்டியபடி மெதுவாக நகர்ந்து கதவைத் திறந்து போனாள். அவள் போன திசையில் கழுத்தை மடித்து வைத்துப் படுத்தபடி கனநேரம் காத்திருந்தேன்.
காலை உனவு வெகு அவசரத்தில் நடந்தது. அவர்கள் எல்லோரும் மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தார்கள். மிஸஸ் ஜோர்ஜிடம் இருந்து ஒரு மெல்லிய மயக்கும் வாசனை திரவ நெடி வந்தது. இரவு ஒன்றுமே நடக்காததுபோல ஒரு பூனையாகவே மாறிப்போய் ரொஸலின் உட்கார்ந்திருந்தாள். மயில் தோகை போன்ற உடையும், கறுப்புக் காலணியும், நீண்ட வெள்ளை சொக்ஸும் அணிந்திருந்தாள்.
அவள் வேண்டுமென்றே சாவதானமாக உணவருந்தினாள். மேசையில் நாம் இருவருமே மிஞ்சினோம். ஒருவருமில்லாத அந்தச் சமயத்திற்குக் காத்திருந்தவள் போல திடீரென்று என் பக்கம் திரும்பி, ரகஸ்யத்திற்காக வரவழைத்த குரலில், “என் அப்பாவிடம் ஒரு ரயில் வண்டி இருக்கிறது” என்றாள்.
“ரயில் வண்டியா?” என்றேன்.
“ரயில் வண்டிதான். பதினாலு பெட்டிகள்.”
“பதினாலு பெட்டிகளா?”
“இதுதான் திருவனந்தபுரத்துக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் ஓடும் ரயில் வண்டி. காலையில் ஆறுமணிக்குப் புறப்பட்டு மறுபடியும் இரவு திரும்பி வந்துவிடும்.”
”ரயில் வண்டியை ஏன் உங்க அப்பா வாங்கினார்?”
“வாங்கவில்லை. ஸ்டுபிட். திருவனந்தபுரம் மகாராஜா இந்த லைனை என்னுடைய தாத்தாவுக்கு அவருடைய சேவையை மெச்சி பரிசாகக் கொடுத்தாராம். அவருக்குப் பிறகு அப்பாவுக்குக் கிடைத்தது. அவருக்குப் பிறகு அப்பாவுக்குக் கிடைத்தது. அவருக்குப் பிறகு அது எனக்குத்தான்.”
அவளுக்குப் பிறகு அது யாருக்கு சொந்தமாகும் என்று தீர்மானமாவதற்கிடையில் ஜோர்ஜ் மாஸ்ரர் திரும்பிவிட்டார். அப்படியே அவசரமாக எல்லோரும் மாதா கோயிலுக்குப் புறப்பட்டதில் அந்த சம்பாஷணை தொடர முடியாமல் அந்தரத்தில் நின்றது.
ஒரு பதினாலு வயதுப் பையன் எவ்வளவு நேரத்துக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் அடைந்துகொண்டு வாசிக்க ஒன்றுமில்லாமல் டேவிஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய Heat புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க முடியும். அவர்கள் திரும்பி வந்த சத்தம் கேட்டு வெகு நேரமாகிவிட்டது. துணிவை வரவழைத்துக்கொண்டு மெதுவாக என் அறைக் கதவை நீக்கி எட்டிப் பார்த்தேன். ஒருவருமில்லை.
வெளி வராந்தாவுக்கு நான் வந்தபோது அடியில் ஈரமான ஒரு நீளமான கடதாசிப் பைக்குள் அவள் கையை நுழைத்து ஏதோ ஒன்றை எடுத்து வாய்க்குள் போட்டு மென்று கொண்டிருந்தாள். அவளுடைய கை புற்றுக்குள் பாம்பு நுழைவது போல உள்ளே போவதும் வருவதுமாக இருந்தது. பெயர் தெரியாத ஒன்று அவள் வாய்க்குள் விழுந்தது.
பையை என்னிடம் நீட்டினாள். அவள் முடிச்சு மணிக்கட்டு என் முகத்துக்கு நேராக வழுவழுவென்று இருந்தது. அநாமதேயமான உணவுப் பண்டங்களை நான் உண்பதில்லை. வேண்டாம் என்று தலை அசைத்தேன். ஐஸ் கட்டி வேணுமா என்று திடீரென்று கேட்டாள். என் பதிலுக்குக் காத்திராமல் தானாகவே சென்று குளிர் பெட்டிக் கதவைத் திறந்து ஆகாய நீலத்தில் சிறு சிறு சதுரங்கள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். வில்லை வளைப்பது போல அதை வளைத்தபோது ஐஸ்கட்டிகள் விடுபட்டு துள்ளி மேலே பாய்ந்தன. அவள் அவற்றை ஒவ்வொன்றாகப் பிடித்து வாயிலே போட்டாள். தன் கையினால் ஏந்தி தண்ணீர் சொட்ட எனக்கும் ஒன்று தந்தாள். பிறகு நறுக்கென்று கடித்தாள்.
திரும்பி இரண்டு பக்கமும் பார்த்து, குளிர்பெட்டி கேட்காத தூரத்தில் இருக்கிறது என்பதை நிச்சயித்துக்கொண்டு, மெதுவாகப் பேசினாள். “இந்த தண்ணி கேரளாவில் இருந்து வந்தது. அரைமணியில் ஐஸ் கட்டி போட்டு விடும். இங்கே இருக்கிற தண்ணி சரியான ஸ்லோ. இரண்டு நாள் எடுக்கும்” என்றாள்.
நானும் அவளைப் போல நறுக்கென்று கடித்தேன். பற்கள் எல்லாம் கூசி சிரசில் அடித்தன. தண்ணீர் பல் நீக்கலால் வழிந்து வெளியே வந்தது. என்னையே சிரிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவள், “உனக்கு ஐஸ் கட்டி சாப்பிட வராது” என்றாள்.
அவளைப் பார்த்தேன். ஓர் ஆணைப்போல ஆடை தரித்திருந்தாள். சரி நடுவில் தைத்து வைத்த கால் சட்டை போன்ற பாவாடை. அவள் மேலாடை இரண்டு நாடாக்கள் வைத்து பொருத்தப்பட்டு, தோள்களையும், கழுத்துக் குழிகளையும் மறைப்பதற்கு முயற்சி எடுக்காதததாக இருந்தது. அவளுடைய தோள் எலும்புகள் இரண்டு பக்கமும் குத்திக் கொண்டு நின்றன.
அப்பொழுது பார்த்து ஜிவ்வென்று இலையான் ஒன்று பறந்து வந்து அவளையே சுற்றியது. தானாகவே பிரகாசம் வீசும் பச்சை இலையான். உருண்டைக் கண்கள். தோள் மூட்டில் இருக்க முயற்சித்த போது உதறினாள். நான் பொறுக்க முடியாமல் கையை வீசினேன். நட்டுவைத்த கத்தி போன்ற தோள்மூட்டில் கை பட்டதும் தராசுபோல அது ஒருபக்கம் கீழே போனது.
மறுபடியும், மிகக் கூர்மையான கண்கள் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய உள் வளைந்த அவளுடைய முழங்கால்களில் அது போய் இருந்தது. நான் மீண்டும் கையை ஓங்கியதும் சிரிக்கத் தொடங்கினாள். சுற்று முடிவடையாத சக்கரம் போல அது நீண்டுகொண்டே போனது. மனது பொங்க நானும் சிரித்தேன். அந்தக் கணம் கடவுள் எப்படியும் அதற்கு ஒரு தடை கொண்டு வந்துவிடுவார் என்று எனக்குப் பயம் பிடித்தது. அப்படியே நடந்தது. வேலைக்காரப் பெண் வந்து அம்மா கூப்பிடுவதாக அறிவித்தாள்.
அந்த ஞாயிறு நாலு மணிக்கு நடந்த தேநீர் வைபவமும் மறக்க முடியாதது. பெரிய ஆலாபனையுடன் இது வெளித்தோட்டத்தில் ஆரம்பமானது. மஞ்சளும் பச்சையும் கலந்த பெரிய பழங்களைத் தாங்கி நின்ற ஒரு பப்பாளி மரத்தின் கீழ் இது நடந்தது. தூரத்ஹ்டில் இரண்டு பனை மரங்களில் கட்டிய நீளமான மூங்கில்களில் இருந்து வயர் இறங்கி வந்து ஜோர்ஜ் மாஸ்ரருடைய பிரத்தியேகமான வாசிப்பு அறை ரேடியோவுக்குப் போனது.
மிஸஸ் ஜோர்ஜ் எல்லோருக்கும் அளவாக தேநீரைக் கோப்பைகளில் ஊற்றித் தந்தார். மெல்லிய சீனி தூவிய நீள்சதுர பிஸ்கட்டுகள், ஒரு பீங்கான் தட்டில் வைத்து வழங்கப்பட்டன. அவை கடித்த உடன் கரைந்துபோகும் தன்மையாக இருந்தன.
திடீரென்று ஜோர்ஜ் மாஸ்ரர் மகளைப் பார்த்து கிதார் வாசிக்கும்படிப் பணித்தார். ‘ஓ, டாடி’ என்று அவள் அலுத்துவிட்டு, அதைத் தூக்கி வந்தாள். கால்மேல் கால் போட்டு கிடங்குபோல பதிந்து கிடக்கும் பிரம்பு நாற்காலியில் அசௌகரியம் தோன்ற உட்கார்ந்து கிதாரை மீட்டிக் கொண்டு பாடினாள். அவளுடைய ஸ்கர்ட் மேற்பக்கமாக நகர்ந்து சூரியன் படாமல் காப்பாற்றப்பட்ட உள் தொடையின் வெள்ளையான பாகத்தை கண் பார்வைக்குக் கொண்டுவந்தது. ‘என் கண்களில் நட்சத்திரம் விழ அனுமதிக்காதே’ என்று தொடங்கியது அந்த நீண்ட பாடல். Love blooms at night, in day light it dies (காதல் இரவில் மலர்கிறது; பகலில் மடிந்துவிடுகிறது) என்ற வரிகள் எனக்காகச் சேர்க்கப்பட்டது போல தோன்றின. இசைக்கு முற்றிலும் பொருத்தமில்லாத ஒரு புறாவின் குரலில் அவள் பாடியது ஒருவித தடையையும் காணாமல் நேராக என் மனதில் போய் இறங்கியது.
இப்படி ஓர் அந்நியோன்யமான குடும்பத்தை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. மிஸஸ் ஜோர்ஜ் குறுக்கே போட்ட தாவணியை பனை ஓலை விசிறி மடிப்புபோல அடுக்கி தோள்பட்டையில் ஒரு வெள்ளி புரூச்சினால் குத்தியிருந்தார். ரொஸஸினுடைய கண்கள் முன்பு பார்த்ததிலும் பார்க்க நீளமாகத் தெரிந்தன. முகத்தில் இன்னும் பிரகாசம் கூடியிருந்தது. ஜோர்ஜ் மாஸ்ரர் கைகளை உரசியபடி எதிர் வரப்போகும் நல்ல உணவுகளைப்பற்றிய சிந்தனையில் உற்சாகமாகப் பேசினார். அவர்கள் செய்ததைப்போல நானும் உணவு மேசையைச் சுற்றி அமர்ந்து கொண்டேன். “ஜெபம் செய்வோம்” என்று அவர் ஆரம்பித்தார்.
“எங்கள் ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, உமது அளவற்ற கிருபையினால நேற்றையைப் போல இன்றும் எங்களுக்குக் கிடைத்த ரொட்டிக்காக இங்கு பிரசன்னமாகியிருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அதே போல இந்த ரொட்டிக்கு வழியில்லாதவர்களுக்கும் வழி காட்டும். பாரம் இழுப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருபவரே, எங்கள் பாரங்களை லேசானதாக்கும். எங்களுடன் இன்று சேர்ந்திருக்கும் சிறிய நண்பரை ரட்சிப்பீராக. அவர் எதிர்பார்ப்புகள எல்லாம் சித்தியடையட்டும். உம்முடைய மகிமையை நாம் ஏறெடுத்துச் செல்ல ஆசிர்வதியும். ஆமென்.”
சரியான இடத்தில் நானும் ‘ஆமென்’ என்று சொன்னேன். முதன்முறையாக என்னையும் ஜெபத்தில் சேர்த்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நான் ஆமென் சொன்னபோது குறும்பாகப் பார்த்துவிட்டு அவள் கண்களை இழுக்காமல் அந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாள்.
ஆனால் இப்படி அருமையாக ஆரம்பித்த இரவு மிக மோசமானதாக முடிந்தது.
சாப்பாட்டு மேசையைச் சுற்றி இருக்கும் நேரங்களில் சம்பாஷணை மிக  முக்கியம். அது முழுக்க சுத்தமான ஆங்கிலத்திலேயே நடந்தது. ஒரு வார்த்தை தமிழோ, மலையாளமோ மருந்துக்கும் இல்லை. அவளோ ஆற்றிலும் வேகமாக கதைப்பாள். என்னுடையதோ இருட்டில் நடப்பது போல தயங்கி தயங்கி வரும். ஆகவே வார்த்தை சிக்கனத்தைப் பேண வேண்டிய கட்டாயம் எனக்கு. அப்படியும் பேசும் பட்சத்தில் வார்த்தைகளுக்கு முன்பாக மூச்சுக்காற்றுகள் வந்து விழுந்தன.
இன்னுமொன்று, பீங்கான் தட்டையே பார்த்துக்கொண்டு சாப்பிடுவது இங்கே தடுக்கப்பட்டிருந்தது. சாப்பாட்டு வகைகள் மேசையில் பரவியிருந்தபடியால் “இதைத் தயவுசெய்து பாஸ் பண்ணுங்கள்”, “அந்த ரொட்டியை இந்தப் பக்கம் நகர்த்துங்கள்” என்று சொல்லியபடியே சாப்பிடுவார்கள். இதுவும் எனக்குப் புதுமையே.
அவியல் என்ற புதுவிதமான பதார்த்தத்தின் சுவையில் நான் மூழ்கியிருந்தேன். அப்போது ஜோர்ஜ் மாஸ்ரர் ஏதோ ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு அவள் சிறு குரலில் பதில் சொன்னாள். அந்த வார்த்தைகளின் முக்கியத்துவம் முன்பே தெரிந்திருக்காததால் நான் காது கொடுத்து கவனிக்கத் தவறிவிட்டேன்.
திடீரென்று தட்டையான வெள்ளைக்கூரை அதிரும்படி ஜோர்ஜ் மாஸ்ரர் கத்தினார். நான் நடுங்கிவிட்டேன். கிளாஸில் தண்ணீர் நடனமாடியது. அவள் சற்று முன்பு குறும்பாக கண்களைத் தாழ்த்தி, பிளேட்டை பார்த்தபடியே இருந்தாள். கண் ரப்பைகளில் ஒன்றிரண்டு முத்துக்கள் சேர்ந்து ஜொலித்தன.
மிஸஸ் ஜோர்ஜ் நிலைமையைச் சமாளிக்க கண்களால் சாடை காட்டிப் பார்த்தாள். முடியவில்லை. அப்படியும் ஜோர்ஜ் மாஸ்ரர் முகத்தில் கோபம் சீறியது. சாந்தம் வருவதற்குப் பல மணி நேரங்கள் எடுத்தன.
அன்றிரவு நான் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தேன். காற்றின் சிறு அசைவுக்கும் கதவு திறக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்தேன். திறக்கவில்லை.
எப்படியோ அயர்ந்து பின்னிரவில் திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. கண்ணுக்கு இருட்டு இன்னும் பழக்கமாகவில்லை. காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொண்டேன். ஒரு கிசுகிசுப்பான பெண்குரல், “கொஞ்சம் முயற்சி செய்யுங்கள், ப்ளீஸ்” என்றது. ஆண்குரல் ஏதோ முனகியது. மறுபடியும் நிசப்தம். சிறிது நேரம் கழித்து அதே பெண்குரல் “சரி விடுங்கள்” என்றது எரிச்சலுடன். பிறகு வெகு நேரம் காத்திருந்தும் ஒன்றும் கேட்கவில்லை.
சொன்னபடி அதிகாலையிலேயே செல்வநாயகம் மாஸ்ரர் வந்து விட்டார். பதிவு வேலைகளைச் சீக்கிரமாகவே கவனித்து எனக்கு செபரட்டினம் விடுதியில் இடம் பிடித்துத் தந்தார். எல்லோரும் அது சிறந்த விடுதி என்று ஒத்துக்கொண்டார்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு இன்னும் இரண்டு மாணவர்கள் வருவார்கள் என்றார். உடனேயே ஒரு அந்நிய நாட்டு சைனியம் போல நான் எல்லைகளைப் பிடித்து வைத்துக்கொண்டேன்.
நான் பெட்டியை எடுக்க திரும்பவும் ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டுக்குப் போனபோது அது திறந்திருந்தது. ஒரு வேலைக்காரப் பெண் வெளி மேடையில் ஒரு பெரிய மீனை வைத்து வெட்டிக்கொண்டிருந்தாள். அதன் கண்கள் பெரிதாக ஒருபக்கமாகச் சாய்ந்து என்னையே பார்த்தன. ஆனால் அவள் என் பக்கம் திரும்ப வில்லை.
என் அறைக்கதவு கொஞ்சம் நீக்கலாகத் திறந்திருந்தது. என்றாலும் நான் அங்கே பழகிக்கொண்ட முறையில் ஆள்காட்டி விரலை மடித்து டக்டக் என்று இருமுறை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். படுக்கை அப்படியே கிடந்தது. என்னுடைய பெட்டியும் புத்தகப் பையும் வைத்த இடத்திலேயே இருந்தன. அவற்றைத் தூக்கிய பிறகு இன்னொருமுறை அறையை சுற்றிப் பார்த்தேன். என் வாழ்நாளில் இனிமேல் எனக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைக்காது என்பது தெரிந்தது.
திடீரென்று ஒரு ஞாபகம் வந்து மரப்பெட்டியை எட்டிப்பார்த்தேன். நாலு குட்டிகளே இருந்தன. தாய்ப்பூனை மறுபடியும் குட்டிகளைக் காவத் தொடங்கிவிட்டது. கறுப்புக்குட்டி போய் விட்டது. மற்ற நாலும் தங்கள் முறைக்காகக் காத்திருந்தன. அவை மெத்தென்றும், வெதுவெதுப்புடனும் இருந்தன. ரொ-ஸ-லீ-ன் என்று சொல்லியபடியே ஒவ்வொரு அட்சரத்துக்கும் ஒரு குட்டியைத் தொட்டு வைத்தேன்.
திரும்பும் வழியிலே அவள் பேசிய முதல் வார்த்தை ஞாபகம் வந்தது. ‘பயந்திட்டியா?’ எப்படி யோசித்தும் கடைசி வார்த்தை நினைவுக்கு வர மறுத்தது.
மழைவிட்ட பிறகும் மரத்தின் இலைகள் தலைமேலே விழுந்து கொண்டிருந்தன. பிரம்மாணடமான தூண்களைக் கட்டி எழுப்பிய அந்தப் பள்ளிக்கூடங்களிலும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களிலும், அதற்கப்பால் இருந்த நகரங்களிலும் இருக்கும் அவ்வளவு சனங்களிலும் எனக்கு, என் ஒருவனுக்கு மட்டுமே அந்தக் கறுப்புப் பூனைக்குட்டியின் பெயர் அரிஸ்டோட்டல் என்பது தெரியும். அந்த எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது.
அவளைப் பற்றி அறியும் ஆசையிருந்தது. ஆனால் எனக்கிருந்த கூச்சத்தினால் நான் ஒருவரிடமும் விசாரிக்கவில்லை. யாரிடம் கேட்பது என்பதையும் அறியேன். நான் மிகவும் சிரமப்பட்டு இடம் பிடித்த யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஸன் பள்ளிக்கூடத்தில் அவள் படிக்கவில்லை என்பதை விரைவில் கண்டுபிடித்துவிட்டேன். ரொஸலின் என்ற அவளுடைய அற்புதமான பெயரை Rosalin என்று எழுதுவதா அல்லது Rosalyn என்று எழுதுவதா என்ற மிகச் சாதாரணமான விஷயத்தைக் கூட நான் அறியத் தவறிவிட்டேன்.
வெகு காலம் சென்று அவள் கேரளாவில் இருந்து கோடை விடுமுறையை கழிக்க வந்திருந்தாள் என்றும், பிறகு படிப்பைத் தொடருவதற்குத் திரும்பப் போய்விட்டாள் என்றும் ஊகித்துக் கொண்டேன். வழக்கம்போல மிகவும் பிந்தியே இந்த ஊகத்தையும் செய்தேன்.
நான் புதிதாகச் சேர்ந்த அந்தப் பள்ளிக்கூடத்தில் வேதியியல் ஆசிரியன் வில்லியம்ஸின் கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருந்தது. மெண்டலேவ் என்ற ரஸ்யன் செய்த சதியில் நாங்கள் தனிமங்களின் பட்டியலை மனப்பாடம் செய்யவேண்டும் என்று அடம்பிடித்தான். அப்பொழுது 112 தனிமஙக்ள் இல்லை; 92 தான். இருந்தும் அவற்றை என்னால் மனனம் செய்ய முடியவில்லை. எடையில் குறைந்தது ஹைட்ரஜின் என்பதோ, கூடியது யூரேனியம் என்பதோ ஞாபகத்தில் இருந்து வழுக்கியபடியே இருந்தது. முன்பாகவே பேர் வைத்து பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது ஜெர்மேனியம் என்பதும் என் நினைவுக்கு வர மறுத்தது. இப்படி இரண்டு வருடங்கள் அவன் முழு அதிருப்தியாளனாகவே இருந்தான். இரக்கப்பட்டோ, அல்லது பெருந்தன்மையாக மறந்தோ எனக்கு     E-க்கு மேலான ஒரு மதிப்பெண்ணை இவன் தர முயற்சிக்கவில்லை. இந்தக் கொடுமைகளின் உச்சத்தினால் இரண்டொரு முறை நான் படுக்குமுன் அவளை நினைக்காமல் இருந்ததுகூட உண்டு.
இது நடந்து மிகப்பல வருடங்கள் ஓடிவிட்டன. பல தேசங்கள் சுற்றி விட்டேன். பல வரைபடங்களை பாடமாக்கினேன். பல முகங்களை ரசித்தேன். பல காற்றுக்களை சுவாசித்தேன். பல கதவுகளைத் திறந்தேன்.
ஆனாலும் சில சமயங்களில் கடித்தவுடன் கரையும், மெல்லிய சீனி தூவி மொரமொரவென்று ருசிக்கும், ஒன்பது சிறு துளைகளை கொண்ட நீள்சதுர பிஸ்கட்டை சாப்பிடும்போது ஒரு கித்தாரின் மணம் வருவதை என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.
*******
நன்றி: "மகாராஜாவின் ரயில் வண்டி" - சிறுகதை தொகுப்பு வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
flow1

A .MUTHULINGAM

he Immigration Officer 94/11/ 22
200, St Catherene Street
Ottawa, Ont
K2P2K9
( Please translet Sri Lankan Tamil Language )A.Muthulingam
[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]
கனம் ஐயா அவர்களுக்கு,
சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.
என்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.
என் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.
வாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.
என்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் வேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.
இரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.
இங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.
நான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எஙகள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.
என்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.
பெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய் குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.
எங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.
இங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.
என்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.
ஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்லான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
எங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.
ஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.
இவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.
அவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இது கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.
பின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.
பெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.
தானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.
இதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை
இது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்குள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.
விஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.
இப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.
ஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.
என்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.
அன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)
நான் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.
முந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.
திடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.
அவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.
அவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.
என்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.
இந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.
என்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.
இரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.
என்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.
ஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.
கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.
மேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.
என்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.
இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.
அங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.
நிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் கீழ்ப்படிவான
சண்முகலிங்கம் கணேசரட்டினம்
சிறைக்கூடம் எண் 37
Kingston Penetentiary
555, King Street W
Po Box 22
Kingston, Ontario
K7L4V7

*****
நன்றி: திண்ணை