சனி, 24 ஆகஸ்ட், 2013

new..

யாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு
Thursday, April 18, 2013


நாட்டவிழி நெய்தல்






“எப்படியிருக்கிறது வாழ்க்கை?” என்ற வினாவை வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் பலரிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன். தொழில் நிமித்தம் வாழ்பவரர்கள், ஒரு காலப் பிரிவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளானவர்கள், சுகபோகக் கனவுகளோடு வெளியேறியவரர்கள் போன்ற - தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் எனது பட்டியலில் அடங்குவார்கள். வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைமைகளில் இவ்வினாத் தொடுக்கப்பட்ட போதும் அவர்கள் அனைவரினதும் பதிலின் சாராம்சம் ஒன்றாகவே இருந்ததை நான் அறிய வந்தேன். “நம்ம நாடு போல் வராது!” என்பதே அவர்கள் அனைவரினதும் பதிலாக அமைந்திருந்தது.

ஒரு விமானப் பயணம் மேற் கொண்டு இலங்கைக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் பயணிகளை குறிப்பாக இலங்கையரை அவதானித்தீர்களானால் அவர்கள் அனைவரிடமும் ஒரு வித்தியாசமான அவசரத்தைக் காண்பீர்கள். எவ்வளவு விரைவாகத் தனது இருப்பிடத்தை அடைய முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது உறவுகளைக் காண முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது சூழலைச் சேர முடியுமோ, அவ்வளவு விரைவாக இயங்கி அடைந்து கொள்ளும் மனித மனத்தின் துடிப்பைத்தான் அந்த அவசரம் நமக்கு உணர்த்துகிறது.

நானும் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதிக பட்சம் பத்து நாட்கள் மாத்திரமே அங்கெல்லாம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்க முடிந்திருக்கிறது. நமது தேசத்தை விட எல்லா வகையிலும் முன்னேறிய, பார்த்துப் பரவசப்படக் கூடிய ஏராளமான அம்சங்களைக் கொண்ட நாடுகளாக அவை விளங்கிய போதும் நாட்கள் செல்லச் செல்ல அத்தேசங்களின் எல்லா அம்சங்களும் எல்லா அழகுகளும் எல்லா ஆச்சரியங்களும் எனக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கு அருந்திய தேனீர் கூட வயிற்றைக் குமட்டும் அளவுக்கு என்னை வெறுப்பேற்றியிருக்கிறது. அவ்வாறான நிலைமைகளில் நமதுமண்ணும் நமது உறவுகளும், நமது சூழலும், நமது நட்பும் உலகத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் எல்லாவற்றையும் விட உயர்ந்தவையாக, உன்னதமானவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஏன் நமது மண்ணின் ஒரு மிடர் நீர் கூட உலகத்தில் எங்கும் கிடைக்காத அதியற்புத பானமாக நமது உணர்வில் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனின் சொந்த இடத்துக்கு அவனது சூழலுக்கு இணையாக வேறொரு இடமும் சூழலும் அமைவதில்லை என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் உறவினர் அல்லது உடன்பிறப்பு, அல்லது நெருங்கிய பாசத்துக்குரிய ஒருவரின் நிதமான பிரிவு நம்மை தாங்க முடியாத துயரில் தள்ளிவிடக்கூடியது. என்றாலும் கூட ஒரு மாதத்தின் பின், அல்லது ஆறு மாதங்களின் பின் அந்தத் துயரிலிருந்து நாம் மீண்டு விடுகிறோம். நமது வழமையான வாழ்வுக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வின் போது அவனது மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவனது எண்ணவேட்டங்கள் எல்லோரையும் போல் வாழும் ஒரு மனிதனின் எண்ணவேட்டமாக இருப்பதில்லை. அவனது வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இந்தத் துயரம் ஒரு நுளம்புக் கடி போலவோ ஒரு கட்டெறும்புக் கடிபோலவோ இருப்பதில்லை. நகக் கண்ணுள் சிதைந்த மரப்பலகையின் சிராய் ஏறிவிடுவதுபோல கல்லில் கால் மோதி கால் நகத்தைப் பெயர்த்துவிடுவது போல அவ்வப்போது அவனை வதை செய்து கொண்டேயிருக்கும். இந்த வதை அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்டட மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 22 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.இந்தக் கால் நூற்றாண்டுத் துயரம் அரசியலாக, சமூகவியலாக, பண்பாட்டியலாக, இலக்கியமாகவெல்லாம் இன்று மாற்றம் பெற்று விட்டது. வரலாற்றுக்கும் நாளைய சமூகத்துக்கும் இந்தத் துயரை எடுத்துச் செல்லவும் சொல்லலவும் பயன்படப்போவது இலக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த மகத்தான பங்களிப்பைச் செய்தவராகத்தான் நாம் நண்பர் யாழ் அஸீம் அவர்களைப் பார்க்கிறோம். எல்லா மக்கள் குழுமத்துக்குள்ளும் கவிஞர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வை அவர்களே காலத்துக்குக் காலம் படம் பிடித்து வரலாற்றுக்கும் அடுத்த பரம்பரைக்கும் வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார்கள்.

வடபுல வெளியேற்றலின் வலியை, சுமையை, கஷ்டத்தை, கண்ணீரை, ஏக்கத்தை - எல்லாவற்றையுமே இலக்கியத்தில் பதிந்து வைத்துவிடும் படைப்பாளிகள் தத்தமது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நண்பர் யாழ். அஸீம் ஒரு முக்கிய சாட்சியாக நம்மிடம் இருக்கிறார். அவரது கவிதைகள் உலகிடம் இருக்கின்றன.யாழ் அஸீமின் கவிதைகள் தம்மைத் துரத்தியோர் மீது காறி உமிழவில்லை. உன் இரத்தம் பார்க்காமல் ஓயமாட்டேம் என்று சத்தியம் பண்ணவில்லை. உனது வாழ்வைக் கூறு போடுவேன் என்றோ நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்றோ சாபம் இடவில்லை. நீங்கள் ஏன் முதுகில் குத்தினீர்கள்? எங்கள் சோற்றுப் பானைகளில் ஏன் மண்ணை இறைத்தீர்கள், எங்களை ஏன் உப்புக் கரிக்கும் நீரில் உழல விட்டீர்கள் என்றே கேட்டு நிற்கின்றன. உங்களுக்கு நாங்கள் செய்த எந்த அநீதிக்காக எம்மை நெருப்புக் கிடங்குள் எறிந்தீர்கள் என்று கேட்கின்றன. அவரது கவிதை மொழியின் கேள்விகள் நீதிக்காக நிற்கும் ஓர் ஏழையின் உடைந்த குரல். அநியாயம் இழைக்கப்பட்ட ஒருவனின் ஏந்திய கைப் பிரார்த்தனை. அழகிய பண்பாடும் கலாசாரமும் சகோதரத்துவ உணர்வும் கொண்ட ஓர் இஸ்லாமியனின் வாஞ்சை மிக்க உறுதிக் குரல்.யாழ். அஸீம் எத்தகையவர் என்பதைப் புரிந்து கொள்ள இந்நூலின் 80ம் பக்கம் ‘அகிம்சைப் போராளிக்கு’ என்ற தலைப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை சான்று பகர்கிறது. அஸீம் தந்தை செல்வநாயகத்துக்கு இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

புத்தளத்துப் பள்ளி தனில் புனிதத் தலத்துள்ளே துப்பாக்கிக் குண்டுகள் துயர் விளைத்த வேளையிலும் இனமென்றும் மதமென்றும் பேதங்கள் பாராமல் துடித்தெழுந்து அடலேறாய் துணிந்து குரல் கொடுத்தீர்கள்...பாராளுமன்றத்தில் பலபேரும் மௌனிகளாய் கைகட்டிப் பார்த்திருக்க கர்ச்சித்த சிங்கம் நீங்கள் இஸ்லாமிய இதயங்களில் இனிய பால் வார்த்தீர்கள் இப்போதும் எப்போதும் இதயமதை மறக்காறு!
அன்று எல்லாச் சிறுபான்மைக்குமாகப் பேசிய ஒரு முன்மாதிரிதான் செல்வநாயகம் ஐயா என்ற ஆளுமை. இன்னொரு சிறுபான்மையைக் காவு கொடுத்து விட்டு அல்லது அடக்கியாண்டு அதன்மேல் வாழ்க்கை நிர்மாணித்துக் கொள்ள நினைப்பவர்கள் எஸ்ஜேவி ஐயாவின் பாதைகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களுக்காக அவர் கொடுத்த குரலை அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர் மேற்கொண்ட கலகத்தைப் புகழும் அஸீம் என்றைக்கும் நன்றி தெரிவிக்கும் இடம் போற்றுதலுக்குரியது. ஒரு மனச்சாட்சியுள்ள உண்மைக் கவிஞனாக அவரை நம்முன்னே நிற்க வைக்கிறது.
வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில் ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது - வே. பிரபாகரன்” - இதுதான் அந்த பெனரிலே காணப்பட்ட வாசகம். அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கிள்ளி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். இந்தக் கள்ள மௌனமும் பூசனிக்காய்களை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைக்கும் செயல்பாடுகளும் வடபுலத்து முஸ்லிம்கள் விடயத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.கவிஞன் தன் கவிதைகளாயே போரிடுவான். அந்தக் கவிதைகள் நிறுத்தப்பட முடியாதவை. கவிதைகளுக்காக ஒரு கவிஞன் கொலையுறுவானேயாகில் இன்னொரு கவிஞன் தோன்றுவான். அவன் தனது நியாயத்தை உலகத்தின் தர்மத்தை மதிக்கும் மக்கள் முன்னால் சமர்ப்பித்துக் கொண்டேயிருப்பான்.
உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் மற்றவர்களை மாற்றிக் கொள்ளவும் வரலாற்றைத் தமக்கு ஏற்றவாறு திருப்பி அல்லது திருத்தி எழுதவுமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மனித குல வரலாற்றின் போக்கைத் தீர்மானிப்பது தனி மனிதனோ, ஒரு இனக் குழுமமோ, ஒரு தேசமோ அல்ல என்பதை இறைவன் உணர்திக் கொண்டேயிருக்கிறான். காலம் அவனுடையது; அவனே காலமாயிருக்கிறான். அஸீம் சொல்கிறார்:-
வரலாறு நீயா எழுதுகிறாய்?எழுத்தாணி அவன் கையில் ஏடும் அவன் கையில் வல்லவன் அவன் எழுதும் வரலாற்றின் பாத்திரம் நீ எழுத்தாளன் அவன் எழுதும் வெறும் வெற்றெழுத்துத்தான் நீ வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி நீ வைப்பதா?நீயே அவனிட்ட காற்புள்ளி.எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது!ஆட விடுகிறான் உன் ஆட்டம் தவறினால் அவுடடாக்கி விடுகிறான்.
அஸீம் வெளியிடும் இந்த நூலின் 92ம் பக்கம் இடம்பெற்றுள்ள கவிதை இது. 2006 அக்டோபரில் இந்த முற்றுப் புள்ளிக் கவிதையை அவர் எழுதுகிறார். கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது. ஆகக் குறைந்தது நீ கொஞ்சம் நகரலாம் என்ற முதலாவது நம்பிக்கையை துரத்தப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தியது அந்தப் புள்ளிதான். புண்பட்டுப்போன மனதுக்கு ஓர் சிறிய ஆறுதலைத் தந்தது அந்தப் புள்ளிதான். ஏக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கான பாதையில் நிற்கும் பாறையை அகற்றுகிறேன் என்று அறிவிப்புச் செய்யப்பட்ட புள்ளிதான் அது. அந்தப் புள்ளிதான் துரத்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டுவதற்காகக் காட்டப்பட்ட துருவ நட்சத்திரம்.ஒரு புள்ளிதான் விழுந்திருக்கிறது. அந்தப் புள்ளியை மீண்டும் வைத்திருப்பதற்குப் பலர் முயற்சிக்கிறார்கள்.அதாவது துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது ஜென்ம பூமிக்கு வந்துவிடக் கூடாது என்ற வக்கிர மனத்துடன் இன்னும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பெருந்துயர் தருவது. அதாவது வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை நாம் வழங்கமாட்டோம் என்பதை எல்லா வகையிலும் சிலர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். துரத்தபட்ட முஸ்லிம்களின் அரசியல் பிரமுகர்கள் முதற் கொண்டு சாதாரண வர்த்தகர் வரை மீள முயற்சிக்கும் எல்லோரையும் அதற்கு உதவ முயற்சிக்கும் எல்லோரையும் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அடர்ந்தேற வருவோராகவும் சித்திரித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றிலிருந்த அவர்கள் படிப்பினை பெறவில்லை என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.
பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ் .ஜெயராஜ் இப்படிச் சொல்கிறார்:-“தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,”
ஒரு கவிஞன் நியாய தர்மங்களுக்கு அப்பால் தனது கவிதையில் பேசுவதில்லை. அப்படி ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் உண்மையான கவிஞனும் இல்லை. தனது சொந்த நடத்தையில் போக்கில் கூடுதலோ குறையோ கொண்டவனாக ஒரு படைப்பாளி இருக்கக் கூடும். ஆனால் அவனது படைப்புகளில் அவன் ஒரு போதும் நேர்மை தவறுவதில்லை. அவன் நேர;மையையும் நியாயத்தையும் மக்களிடம்; ஏந்தி வருகிறான். நேர்மையும் நியாயமும் இறைவனின் நியாயத் தராசிலிருந்து அவன் பெற்றுக் கொள்வது. அதைத்தான் மக்களின் மனச்சாட்சியின் முன்னால் வைத்து விடுகிறான். மனச்சாட்சியுள்ள மனிதர்களே இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் கவிஞனின் கவிதை விடுக்கும் செய்தி. மனச்சாட்சியுள்ளவர்கள் தர்ம நியாயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இல்லாதவர்களே மற்றவரின் மரணங்களின் மீது சாம்ராஜயம் எழுப்பவும் அதற்கு ஆதரவு தருவதற்கும் முன்னிற்கிறார்கள்.
2003ம் ஆண்டு வடகிழக்குக்குத் தன்னாதிக்க அதிகார சபையொன்றை வழங்குவதற்கு அப்போதிருந்த அரசு ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அந்த அறிவிப்பு வந்து விடலாம் என்ற நிலையில் கிழக்கில் பாரம்பரியமாக சில ஊர்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு தமிழ் விடுதலைப் போராளிகள் ஒரு செய்தியை அனுப்பியிருந்தனர். ‘நீங்களும் ஷொப்பிங் பைகயோடு எந்நேரமும் வெளியேறுவதற்குத் தயாராக இருங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அவ்வாறானதொரு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் கிழக்கு முஸ்லிம்களும் இன்று மொத்தமாக வடபுல அகதிகள் போல் முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அவ்வாறனதொரு நிகழ்வு நடைபெறாமல் போனமைக்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இடம்பெயர்ந்து வாழும் ஒரு பலஸ்தீனக் கவிஞனுக்கு ஒப்பான நிலையில்தான் துரத்தப்பட்ட வட புல முஸ்லிம்களின் பிரதிநிதியான யாழ் அஸீம் திகழ்கிறார். ஆக துரத்தப்பட்ட எல்லா மக்களினதும் பிரதிநிதியாகவே அவர் குரல் கொடுக்கிறார். இந்த அடிப்படையில் அவர் பலஸ்தீன மக்களுக்காகவும் பேசுகிறார். துரத்தப்பட்ட மக்களின் கவிஞன் என்ற அடிப்படையில் உலகத்தில் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அனைவரினதும் பிரதிநிதியாக அவர் மாறிவிடுகிறார். மத்திய கிழக்கில் அரபுலக ஆட்சியாளர்களின் சின்னத் தனத்துக்கெதிரான அவரது ஆதங்கம் ‘உரத்துப் பேச ஒரு ஒட்டகம் இல்லையே’ என்ற கவிதையில் வெளிவந்திருக்கிறது. ஆழ்ந்த அர;த்தமுள்ள இந்தக் கவிதை தினக்குரல் பத்திரிகை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சமரசம் சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்தது. அந்தக் கவிதையைக் கொண்டே யாழ் அஸீமை யாத்ரா 21வது இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, துரத்தப்பட்டு அகதி முகாம்களில் வாழும் சமூகமாயிருந்தாலென்ன - அந்தச் சமூகங்களுக்குள் இறைவன் கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உலவ விடுகிறான். ஆக ஒரு சமூகத்தின் மொத்த வாழ்வையும் அவர்கள் தங்கள் இலக்கியப் படைப்பூடாகக் கொண்டு வந்து வெளியுலகுக் காட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையில் வடபுலத்துத் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் கவிஞர்களுள் முக்கியமான ஓர் இடம் யாழ். அஸீமுக்கு இருக்கிறது. எனவே நம் எல்லோராலும் அவர் போற்றப்பட வேண்டியவர். இந்த யாழ். சமூகத்துக்குள் செல்வந்தர்கள் இருக்கலாம், பெருந்தொழில் செய்வோர் இருக்கலாம். அவர்களால் பெரும் சமூகப்பணியும் ஆற்றப்படலாம். ஆயினும் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கும் கவிஞனுக்கு யாரும் ஈடாக மாட்டார்கள் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஏனெனில் காலப்போக்கில் யாவும் மறைந்து போகும். கவிதையும் இலக்கியமும் வரலாற்றைச் சொல்லியபடி வாழ்ந்து கொண்டிருக்கும்.இப்போது நம்முன்னால் ஒரு பலஸ்தீனம் உள்ளது. தூரத்தில் உள்ள பலஸ்தீனுக்கு எவ்வாறு நமது ஆதரவைத் தெரிவிக்கிறோமோ அதை விட இரண்டு மடங்கு ஆதரவை நமது வடபுலத்துப் பலஸ்தீனத்துக்கு வழங்க வேண்டியது நமது கடமை என்று உணரவேண்டும். யாழ் அஸீம் உட்பட உலகளாவிய ரீதியில் துரத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் அனைத்துக் கவிஞர்களினதும் வேண்டுகோள் என்னவெனில் துரத்தப்பட்ட மக்களோடு இருங்கள் என்பதுதான். இதைத்தான் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
யாழ் அஸீமின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என்று இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் புதுக் கவிதையும் எழுதுகிறார். மரபுசார் ஓசை நயத்தை நெருங்கியும் எழுதுகிறார். மிகவும் தெளிவான வார்த்தைகளில் நேரடியாக வாசகனுடன் பேசுகிறார். அவர் எந்த வடிவத்தைத் தனக்கெனத் தேர்ந்து கொண்டார் என்பது இப்போது முக்கியமானதல்ல. அவரது எழுத்துக்குள் கவிதை இருக்கிறது, துரத்தப்பட்ட மக்களின் ஏக்கமும் கண்ணீரும் இருக்கிறது. அவர் ஒரு மக்கள் கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்று நம்புகிறேன்.
(06.01.2013 அன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் “ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் யாழ் அஸீமின் “மண்ணில் வேரோடிய மனசோடு” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட கருத்துரை)

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 4/18/2013 10:55:00 AM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
Sunday, January 6, 2013

திரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவும்.
-யோகரட்ணம்-
vayiramuththu-எனது ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ என்ற நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தபோது ஐயா வைரமுத்து மாஸ்டர் அவர்களும் அதில் கலந்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பேறாக நான் கருதுகின்றேன். வெகுவிரைல் இலங்கை சென்று அவரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவல் சிதைந்துபோனது. திரு.வைரமுத்து ஐயா அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகளும், இப்படியான ஒரு மனிதன் எம்மத்தியில் வாழ்ந்தார் என்பதும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது மிக அவசியம் என்பதாக நான் கருதுகின்றேன். அவர் பற்றிய சில தகவல்களை எனது நூலில் பதிவு செய்திருந்தாலும், அவருக்கான எனது இந்த நினைவஞ்சலியிலும் எனது சில மீழ் நினைவுகள்
1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மத்தியிலே நிகழ்ந்த ஒரு ஆயுதப்போராட்டம் பற்றிய தகவல் பலருக்குத்தெரியாத சங்கதி. குறிப்பாக இன்றைய இளைய சந்ததியினர் அறியாத ஒரு வரலாறு. இந்தப்போராட்டமானது சிங்கள அரசிற்கும் தமிழ்போராளிகளுக்கும் இடையில் நிகழ்ந்த ஆயுதப்போராட்டம் அல்ல!மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று பேசிக்கொள்ளும் தமிழ்பேசும் மக்களாகிய நாமே நமக்கெதிராக போராடிய காலம். இந்தப்போராட்டத்தாலும் உயிர் இழப்புகளும், உடைமை அழிவுகளும், இடப்பெயர்வுகளும் கூட நிகழ்ந்தது. யாழ்குடா நாடு பூராகவும் பதட்டம் நிலவிய காலம்அது. இந்து,கிறிஸ்தவ ஒடுக்குமுறைச் சாதியினரிடமிருந்து தம்மை விடுவிப்பதற்காக தலித் மக்களால் நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டம். இதுவே முடியாட்சிகளுக்கு பிற்பாடு இலங்கையில் நிகழ்ந்த முதலாவது ஆயுதப்போராட்டம். இந்தக்காலப்பகுதியில்தான் திரு. வைரமுத்து ஐயாவுடன் நான் அறிமுகமாகின்றேன். அப்போது எனக்கு வயது15 .
பொதுஇடங்களிலும், ஆலயங்கள், பாடசாலைகள், தேனீர்க்கடைகள், சலூன், சலவைக்கடை, சுடலை போன்ற இடங்களிலும் தீண்டாமை நிலவியபோது அதற்கெதிராக நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டமே ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபை,தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவைகளே இந்தப்போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள். இக்காலகட்டத்தில் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினராக இருந்தார்.
திரு. வைரமுத்து அவர்கள் தனது 30வது வயதிலேயே பல்வேறு ஆற்றல் உள்ளவராக திகழ்ந்தார். ஆங்கிலமும்,சிங்களமும் மிக சரளமாக பேசும் ஆற்றல் கொண்டவர். யாழ் ஸ்ரான்லி கல்லூரியின் ஆசிரியரகவும் பணிபுரிந்தார்.கண்டி தியவத்தை நிலமையாகவும், 77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் இருந்தவர் திரு. நிசங்கவிஜயரட்ணா அவர்கள். இவர் திரு. வைரமுத்து மாஸ்டரின் மிக நெருங்கிய நண்பர். நிசங்கவிஜயரட்ணா அவர்களின் நட்பும் ஆலோசனையுமே 1948இல் அகில இலங்கை பௌத்த தமிழ் காங்கிரஸ் எனும் ஸ்தாபனம் தோன்றக் காரணமானது. இதற்கு திரு. வைரமுத்து அவர்கள் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
யாழ்மேலாதிக்க தமிழ் ஒடுக்குமுறை சாதியினரால் கல்வியும், படசாலை பிரயோகமும் மறுக்கப்பட்ட தலித் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் மாற்று வழி கண்டுகொண்டவர் திரு வைரமுத்து அவர்கள். 1966களில் தமிழ் பௌத்த காங்கிரசின் உதவியுடன் பின் தங்கிய தலித் கிராமங்களான கரவெட்டி (கன்பொல்லை), புத்தூர்,அசசுவேலி போன்ற கிராமங்களில் பாடசாலைகள் அமைத்து அதன் திறப்பு விழாவிற்காக மல்வத்தை பீடாதிபதி மகாநயக்கர் வணபிதா விபஸ்தி தேரர் அவர்களும் வரவழைக்கப்பட்டார். கலவரம் ஏற்படலாம் என்ற காரணத்தால் தனது நண்பரான பொலிஸ்மா அதிபர் திரு.இக்த மல்கொட மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார் திரு. வைரமுத்து அவர்கள். இச்செய்தியை அறிந்த யாழ்மேலாதிக்க ஒடுக்குமுறைச் சாதியினருக்கு காதுகளில் ஈயம் உருக்கி ஊற்றிய வேதனையை கொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஜயாத்துரை (வைரமுத்து) தான் இவனுக்கு உதவியாக பொலிஸ்மா அதிபர் இருப்பதையும் அறிந்து கொதித்தனர். அப்போது யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் திரு.வேணன் அபயசேகரா. இவர் யாழ்மேலாதிக்க சக்திகளுக்கு சார்பானவராகவும் இருந்தார். இவரூடாக வைரமுத்து மாஸ்டரின் நண்பரான பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றத்திற்கான பணிப்பு தந்தி மூலமாக அனுப்பப்பட்டது. இதை அறிந்த வைரமுத்து அவர்கள் கொழும்பு சென்று வணக்கத்துக்குரிய கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரை சந்தித்து விபரத்தை கூறினார். (கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரின் உற்ற நண்பராக இருந்தவர் திரு எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்கா) அதன் விளைவாக பொலிஸ்மா அதிபரின் இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டு அதற்கு பதிலாக யாழ் மேலாதிக்க சமூகத்திற்கு சேவகம் செய்து வந்த திரு. வேணன் அபயசேகரா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறான திரு.வைரமுத்து மாஸ்டர் அவர்களின் பணியும், யாழ்மேலாதிக்கத்திற்கு எதிரானபோராட்டத்தின் பின்னணியிலேயே மூன்று தமிழ் சிங்கள பௌத்த பாடசாலைகள் வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இதனூடாகவே பல தலித் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அடிப்படைக்காரணமாக அமைந்தது.
இக்காலகட்டத்தில் தான் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் யாழ் இந்துச் சமூக மேலாதிக்கக் கலாச்சாரத்திற்குள் ஒரு கலகத்தை ஏற்படுத்தினார். 1968இல் படித்த தலித் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காகவும், சிங்களக் கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் அறிந்து 100 தலித் இளைஞர்களை பௌத்த மத மாற்றத்திற்காக காலி, மாத்தறை போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றார். (இது குறித்து அப்போது தந்தைபெரியாரும் பாராட்டியதாக வரலாறு கூறுகின்றது.) இந்த 100இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனக்குப் பெருமையே
பௌத்த மத மாற்றத்திற்காக நூறு இளைஞர்கள் தெற்கு நோக்கிய பயணம் என்ற செய்தி யாழ்மேலாதிக்க அரசியல் தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டமானது சாத்வீகமாகவும், ஆயுதப்போராட்டமாகவும் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வைரமுத்து அவர்களின் பௌத்த மத மாற்றப் போராட்டம் என்பது மூன்றாவது போராட்ட அணுகுமுறையாக இருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதும் பௌத்த மத மாற்ற வழி என்பது வைரமுத்து அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகவே இருந்தது. தனது சொந்த செல்வாக்கையும்,சொந்த பணத்தையும் செலவு செய்து சமூகத்திற்காக உழைத்தவர் திரு.வைரமுத்து அவர்கள்.
வைரமுத்து அவர்களின் இவ்வாறான சமூகம் சார்ந்த பணிகளை பலர் திட்டமிட்டே இருட்டடிப்புச்செய்து வந்துள்ளனர். தீண்டாமைப் போராட்டம் குறித்து எழுதப்பட்ட ஒரு சில நூல்களில் பௌத்த மதமாற்றமும், சிங்கள மொழி அறிவிக்கான அதன்பயன் பாடுகள் குறித்தும் ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அதிலும் சிலர் தாம் சார்ந்த கட்சி நலன் சார்ந்துதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் சம்பவங்களையும் எழுதியுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.நான், வைரமுத்து மாஸ்டரின் இளையமகன் ரவிராஜ்(கனடா), ஜெர்மனியில் இருக்கும் தெய்வேந்திரம், பரிசில் இருக்கும் குணச்சந்திரன், புலேந்திரன், இலங்கையில் இருக்கும் மனோகரன் எல்லோரும் காலியில் உள்ள சிறீ ரட்ண சார யூனிவெசிற்றிப் பிரிவென வில் இருந்தோம். அங்கு அதிபராக இருந்தவர் கலாநிதி பத்தேகம கனேகம சரணங்கர தேரர். இவர் சமசமாயக் கட்சியின் ஆதரவாளர். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த ஒரு நாள் எங்கள் கல்வி எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்பதற்காக திரு.வைரமுத்து மாஸ்டர் அங்கு வந்தார். அப்போதுதான் கலாநிதி பத்தேகம கனேகம சரணங்கர தேரர் அவர்களுக்கும் வைரமுத்து ஐயா அவர்களுக்கும் உள்ள நட்பின் நெருக்கத்தை பார்த்து நாம் வியந்தோம். அதன் பிற்பாடு சந்திரவெல விகாரையில் முன்பிருந்ததைவிட எமக்கு ஆதரவும், மதிப்பும் உயர்ந்ததாகவே நான் கருதுகின்றேன்.
அதேபோல் திரு. நிசங்க விஜயரட்ணவிற்கும், கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில்மத்தியூவிற்கும் உள்ள வைரமுத்து ஐயாவின் நட்பை நான் நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன். வைரமுத்து ஐயாவின் நண்பர்களான யாழ்அரச அதிபராக இருந்த திரு. லால் விஜயபாலாவினதும், யாழ் பொலிஸ் அத்தியேட்சகர் எ.இ.ஆனந்தராசாவினதும் அறிமுகம் எனக்கு பெரிய உதவியாக இருந்தது. என்னை சாதிப்பெயர் சொல்லி திட்டிய இன்ஸபெக்டர் ஒருவரை கண்டிப்பதற்காக இவர்களே எனக்கு உதவியாக இருந்தவர்கள்.
வடமாகாணத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த எவருமே விதானைக்கான பதவியை பெறுவதென்பதை கனவாகக்கூட பார்க்க அனுமதியில்லாத காலத்தில் முதல் முதலாக ஒரு தலித்தை விதானை ஆக்கிய பெருமையும் வைரமுத்து ஐயாவின் சாதனைகளில் ஒன்றாகும். தீவுப்பகுதியில் ஒரு விதானைக்கான வெற்றிடம் இருந்ததை அறிந்த வைரமுத்து அவர்கள் தெற்கு அரசியல் வாதிகளுடன் தனக்கிருந்த நட்பின் காரணமாக வை.சந்திரராசாவிற்கு அப்பதவியை பெற்றுக்கொடுத்தார்.
சமாதான நீதிவானாக பதவி ஏற்பதென்பது அநேகமாக ஒரு நீதிவான் மூலமாகவோ, அல்லது ஒரு சட்டத்தரணி முன்நிலையிலேதான் நடைபெறுவது வழமை. ஆனால் திரு.வைரமுத்து அவர்கள் சமாதான நீதிவானாக பதிவிப்பிரமானம் எடுத்தது திரு.நிசங்க விஜயரட்ணாவின் முன்பாக தலதாமாளிகையில். தமிழர்களில் வேறு எவருமே தலதாமாளிகையில் சமாதான நீதிவானாக பதவிப் பிரமானம் எடுத்ததில்லை. வரலாற்றில் இதுவே முதலும் கடசியுமாக இருக்கும் என்றுதான் நான் கருதுகின்றேன்.
திரு.வைரமுத்து அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகள் ஏராளம். பிரபல்யப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்ததில்லை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரின் தன்னடக்கத்தையும், திறமையையும் அறிந்து கொள்ளமுடியும். சிறுவயதில் சிலகாலம் அவரோடு கைகோர்த்து பயணித்தவன் என்ற பெருமையும் எனக்குண்டு. 94வயது வரை வாழ்ந்த சாதனையாளன். நான் ஒரு முறை தொலைபேசியில் அவருடன் பேசும்போது நீ வரக்கே நான் இருப்பனோ தெரியாது என்று கூறியபோது, இல்லை ஐயா நான் கட்டாயம் உங்களை வந்து பார்ப்பேன் என்று உறுதி அளித்தேன். அவர் எனக்கு கூறிய ‘நீ வரேக்க நான் இருக்கமாட்டேன்’ என்ற உறுதிமொழியை அவர் காப்பாற்றியுள்ளார். நான் அவரை ஏமாற்றிவிட்டேன். இவ்வாறான ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை எமது சமூகம் தலைமுறை தலைமுறையாக கொண்டாடவேண்டும்.
இயற்கையின் நியதியை யாரால் தடுத்துவிட முடியும். அவரின் ஆத்மா சாந்திபெற எமது சமூகம் சார்ந்து பிராத்திக்கின்றேன்.
உங்கள் நினைவு எங்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஐயா
உங்கள் மாணவன்
யோகரட்ணம். (5-01-2013)

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/06/2013 01:23:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
Saturday, December 29, 2012
தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்

வைரமுத்து அவர்கள் (ஐயாத்துரை மாஸ்ரர் )







20 08 1918 26.12 .2012

தலைவர் : அகில இலங்கை தமிழ் பௌத்த காங்கிரஸ் , சிறுபான்மைத் தமிழர் மகாசபை

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 12/29/2012 03:18:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
இந்திய அரசின் சாதிவாரிக் கணக்கீடும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளும் அ.மார்க்ஸ்
Saturday, June 2, 2012



இந்திய அரசின் சாதிவாரிக் கணக்கீடும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளும்
அ.மார்க்ஸ்

சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அரசு இந்திய மக்கள் தொகையைச் சாதிவாரியாகக் கணக்கிடத் தொடங்கியுள்ளது. இறுதியாக இந்திய மக்கள் தொகை சாதிவாரியாகக் கணக்கிடப்பட்டது 1931ல்தான். இரண்டாம் உலகப் போரை ஒட்டி 1941ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மீண்டும் 1951ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தலித் மற்றும் பழங்குடியினர் மட்டுமே சாதிவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டனர். மற்றபடி மதவாரியாகக் குடிமக்கள் கணக்கெடுக்கப்படுவது பிரிட்டிஷ் ஆட்சியைப்போலவே ‘சுதந்திர இந்தியாவிலும்’ தொடர்ந்தது.

இங்கொன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872ம் ஆண்டு பிரிட்டுஷ் ஆட்சியில் ஹண்டர் என்கிற அதிகாரியால் தொடங்கிவைக்கப்பட்டது. 1881 முதல் அது இறுக்கமாக நெறிமுறைப்படுத்தப்பட்டது. தொடக்கம் முதல் இந்தியாவில் மக்களைப் பிரிட்டிஷ் அரசு மதவாரியாகக் கணக்கிட்டு வகைப்படுத்தியது. இதே காலகட்டத்தில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மதவாரியாகக் கணக்கிடுவது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சமீப காலம் வரை இந்நிலை தொடர்ந்தது. 1990களுக்குப்பின் உலகெங்கிலும் மக்கள் மத்தியில் அடையாள அரசியல் வேரூன்றிய பின்னரே மதவாரியாகப் பதிவு செய்வது பிரிட்டனில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1991வரை மேலை நாடுகளில் மரபினமே (race) அதாவது கருப்பரா, வெள்ளையரா இல்லை கலப்பினத்தவரா என்பதே அங்கு முக்கியமாக இருந்தது, 1991ல்தான் பிரிட்டனில் நாட்டினம் (ethnic origin) பதிவு செய்யப்பட்டது. 2001க்குப் பின்பே ஒருவர் விரும்பினால் அவரது மதத்தைப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் பிரித்தாளுதலை ஒரு கொள்கையாகக் கடைபிடித்து வந்த பிரிட்டிஷ் அரசு, காலனிய நடுகளில் மத அடிப்படையில் கணக்கெடுப்பைச் செய்வதற்குத் தயங்கவில்லை. சுதந்திர இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் இக் கொள்கையைத் தொடர்வதற்கு ஒரு நியாயத்தை முன்வைத்தது.

அட்டவணைச் சாதியினர் எனப்படும் தலித்கள் மற்றும் பழங்குடியினரில் இந்துக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என இந்திய அரசு 1950ல் முடிவெடுத்தது. இதன்காரணமாக மத வாரியான கணக்கீடு அவசியமாகிறது என அது காரணம் கூறியது. அதே சமயம் 1931 முதல் பிரிட்டிஷ் அரசு செய்து வந்ததைப்போலவே சாதிவாரிக் கணக்கீட்டை நிறுத்தி வைத்தது. எனினும் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்குச் சற்றே மேல் நிலையிலும், பார்ப்பனர், சத்திரியர், வெள்ளாளர் முதலான சாதிகளுக்குக் கீழ் நிலையிலும் உள்ள “இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு” (other backward classes) இட ஒதுக்கீடு வழங்குவதில் அவர்களது எண்ணிக்கை அதிகாரபூர்வமாகத் தெரியாதது ஒரு சிக்கலாகவே இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கை, கடைசியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட்ட 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 52 சதம் எனக் கொண்டது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27 சத ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சாதிப் படிநிலை அமைப்பில் மேலே உள்ளவர்கள் வழக்குகள் தொடர்ந்தபோது உச்ச நீதி மன்றம் தற்போதைய பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 52 சதம் என எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள் எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே வந்தது, புகழ் பெற்ற இந்திரா சஹானி வழக்கில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதத்தைத் தாண்டக்கூடாது என்றொரு தடையையும் விதித்தது. ஆனால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் தொடங்கி 69 சத ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஆதிக்க சாதியினர் வழக்குத் தொடர்ந்தபோது தமிழ்நாட்டில் 69 சத ஒதுக்கீடு தொடரலாம் எனச் சென்ற 2010 ஜூலை 13 அன்று இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

பிற்படுத்தப் பட்டோரின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் அனுமதியுடன் 50 சதத்தைத் தாண்டியும் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் அத்தீர்ப்பில் சொல்லப் பட்டது. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்று உருவாகியது. இதற்கிடையில் 1990களில், குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் சிதைவை ஒட்டி உலகெங்கிலும் பல்வேறு மக்கட் பிரிவினரும் தத்தம் தனித்துவமான அடையாளங்களை முன் வைத்து இயங்கவும், கோரிக்கைகளை முன்வைக்கவும் தொடங்கியதை நாம் அறிவோம். இதை “அடையாள அரசியல்” எனச் சமூகவியலாளர்கள் அழைப்பர். பல்வேறு இன, மொழி, சாதி, மதத்தினர் வசிக்கும் இந்தியத் துணைக்கண்டத்தில் இது வலுவாக எதிரொலித்தது. இந்த அடிப்படைகளில் உருவான பல்வேறு அரசியல் சக்திகளும் வைத்த கோரிக்கைகளில் கல்வி மற்றும் வேலை வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டொருக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக அமைந்தது. இவ்வாறு ஒதுக்கீடு கோரிய ஒவ்வொரு அடையாளப் பிரிவினரும் தத்தம் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்வது வழக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பல்வேறு சாதிச் சங்கங்கள் இட ஒதுக்கீடு கோரியபோது, அவை கூறிய விகிதாச்சாரங்களை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தபோது அது 200 சதத்தைத் தாண்டியதாகக் கூறுவர்கள். இவ்வாறு சாதிவாரிக் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற அழுத்தம் கடந்த ஆண்டுகளில் அதிகரித்தது. குறிப்பாக 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதியை ஒரு அலகாக வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சிகளாலும் முன்வைக்கப் பட்டது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி, சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி முதலானவையோடு மாயாவதியின் பகூஜன் சமாஜ் கட்சி, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி முதலிய தலித் கட்சிகளும் சாதி வாரிக் கணக்கீட்டை ஆதரித்தன. முதலில் சற்றுத் தயங்கிய திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பின்னர் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரிப்பதாக அறிவித்தது. மேற்தட்டுச் சாதியினரின் வாக்குகளை அதிகம் நம்பியுள்ள காங்கிரசும், பா.ஜ.கவும் வழக்கம்போல தம் இரட்டை நாக்கைச் சுழற்றின. காங்கிரசுக்குள் ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி, பிரணாப் முகர்ஜி முதலான ஒரு சில தலைவர்கள் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரித்தனர். சிதம்பரம், விலாஸ் ராவ் தே‌ஷ்முக், முகுல் வாஸ்னிக் முதலானோர் எதிர்த்தனர். பா.ஜ.க வின் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதைக் கடுமையாக எதிர்த்தது.

வாக்கு வங்கிகளை நம்பி இயங்க வேண்டிய நிலையிலுள்ள பா.ஜ.க கட்சிக்குள் காங்கிரசைப் போலவே இரு குரல்கள் ஒலித்தன. கட்சித் தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ் கருத்தை வழி மொழிந்தார். நாடாளுமன்றக் கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டார். எனினும் பெருந்தொகையாக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பகைத்துக் கொள்ள தேர்தல் அரசியலை நம்பியுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் தயாராக இல்லாததால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இது சாத்தியமில்லாமற் போனாலும் தற்போது இந்தியா முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒட்டி நாடெங்கிலும் சில சர்ச்சைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியும் தன் எண்ணிக்கையை உச்சபட்சமாகக் காட்ட முயற்சிக்கின்றன. இந்தியச் சாதியமைப்பின் ஒரு சில அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம், சாதிகள் பலவும் புவியியல் மற்றும் இதர சில அம்சங்களின் அடிப்படையில் உட்சாதிகளாகப் பிரிந்துள்ளன. வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. பல நேரங்களில் இவற்றுக்கிடையே மண வினைத் தொடர்புகளும் கூட இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக ‘நாடார்’ சாதியை எடுத்துக் கொண்டால் ஆகத் தெற்கே அவர்கள் ‘சாணார்கள்’ எனவும், இடை மாவட்டங்களில் ‘நாடார்கள்’ எனவும், வடக்கே கிராமணிகள் எனவும் அறியப்படுகின்றனர். வன்னியர் சாதியை எடுத்துக் கொண்டால் கவுண்டர், நாயக்கர், வன்னியர், படையாட்சி எனப் பலவாறு அறியப் படுகின்றனர். அதேபோல இடையர்கள் கோனார், யாதவர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர், இந்நிலையில் எல்லா சாதிச் சங்கங்களும், சாதியை மைய்யமாகக் கொண்டு இயங்கும் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி உட்சாதி வேறுபாடுகளை மறக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்கின்றன. ஏதேனும் ஒரு பெயரை அறிவித்து அந்தப் பெயரிலேயே எல்லா உட்சாதிகளும் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றன. முஸ்லிம்களிலும் ராவுத்தர், லெப்பை, தக்கனி என்பதுபோலப் பல உட் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சிலவற்றிற்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தம்மை முஸ்லிம் என்பதோடு இட ஒதுக்கீட்டுக்குரிய உட்பிரிவின் பெயரிலேயே பதிவு செய்யுமாறு கூறுகின்றன. வன்னியர்கள் தம்மை வன்னிய ஷத்திரியர் என்பதுபோலப் பதிவு செய்ய வேண்டுமென அச் சாதிச் சங்கங்கள் சில அறிவிப்புக் கொடுத்தன. ஷத்திரியர் என்பதுபோன்ற வருண அடையாளம் தொனிக்கும் வடபுலப் பெயர்களை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் கூறியபோது கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தேசிய உருவாக்கத்தில் சாதிகள் எத்தனை தடையாக உள்ளன என்பதைத் தமிழ்த் தேசியர்கள் உணர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதற்கிடையில் சாதிவாரிக் கணக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் சாதி உறுதிப்பாட்டை மிகுதிப்படுத்தும், பெரும்பான்மை வாதத்தை உருவாக்கும் என்கிற அச்சத்தை தமிழக தலித் அறிவுஜீவிகள் சிலர் எழுப்பியுள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிராக இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நான் சற்று முன் குறிப்பிட்ட தலித் அறிவுஜீவிகளின் வாதம். மற்றது ப.சிதம்பரம் போன்றோர் முன்வைப்பது. நடைமுறைச் சிக்கல்களை அவர்கள் காரணம் காட்டுகின்றனர். கணக்கெடுப்புச் செய்பவர்களுக்கு சாதிகளிப் பதிவு செய்வது தொடர்பான சமூகவியல் நுண்ணுணர்வு(sociological sensitivity) போதாது எனச் சிதம்பரம் கூறியுள்ளார். இரண்டிலுமே உண்மைகள் உள்ளன. இந்த இரு மறுப்புகளுமே ஆதிமுதல் முன்வைக்கப்பட்டும் வந்துள்ளன. முன்பே குறிப்பிட்டதுபோல இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இடம், காலம் ஆகியவற்றைப் பொருத்து அவை மிக நெகிழ்ச்சி மிக்கவையாகvum உள்ளன. ஒரு சாதியைச் சேர்ந்த குடும்பம் அந்த ஊரை விட்டு வெகு தூரம் இடம்பெயரும்போது அது பழைய தொழிலைச் செய்யாத நிலை ஏற்படலாம். புதிய தொழிலின் ஊடாக அதன் சாதி மரியாதை அல்லது இழிவு கூடவோ குறையவோ செய்யலாம். புதிய ஒரு சாதிப் பெயரில் அது தஞ்சமடையலாம். காலமும்கூட இத்தகைய மார்றங்களுக்குக் காரணமாகலாம்.

காலப்போக்கில் சாணார்கள் மேல்நிலையாக்க்கம் பெற்று நாடார்கள் ஆன வரலாற்றை நாம் ஆறிவோம். 1911ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்த ஈ.ஏ.கெய்ட் இப்படிச் சொன்னார்: “காலம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போலவும், சாதிகள் சின்ன முள்ளைப் போலவும் நகர்கின்றன. சாதாரணமாகப் பார்க்கும்போது சின்ன முள்ளின் இயக்கம் தெரியாமல் போகலாம். ஆனால் அதுவும் இடம் பெயர்ந்து கொண்டுதான் உல்ளது. சாதி மாற்றமும் அப்படியே” 1881ல் அன்றைய சென்னை மாகாண மக்கள் 3208 சாதிகளாகத் தம்மை அடையாளம் கண்டனர். இவற்றை 309 சாதிகளாக அன்றைய ஆணையம் தொகுத்துக் கொண்டது. இந்தத் தொகுப்பு அறிவியல் அடிப்படையில் செய்யப்பட்டதென்று கூற இயலாது. 1991கணக்கீட்டில் 1646 சாதிகளாக இருந்தவை 1937ல் 4147ஆகப் பெருக்கம் கொண்டன. அவ்வளவு விரைவாகச் சாதிகள் பெருகின என்பதல்ல. பல்வேறு ஆரசியல், சமூகக் காரணங்களை முன்னிட்டு உட்சாதி அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டதன் விளைவு இது. சில நேரங்களில் உட்சாதி அடையாளங்களை உறுதி செய்தலும், சில நேரங்களில் அவை பெரிய அடையாளங்களில் தஞ்சம் புகுவதும் நடை பெறுகின்றன. வங்கத்தில் உள்ளூர் வழக்கில் உள்ளவாறு தாழ்த்தப்பட்டவர்களை ‘சண்டாளர்கள்’ எனக் கணக்கெடுப்பாளர்கள் மேற்சாதி உணர்வுடன் பதிவுசெய்தபோது அவர்கள் தம்மை ‘நாமசூத்திரர்கள்’ எனப் பதிவு செய்ய வற்புறுத்தியதை மக்கள் தொகைக் கணகெடுப்பு ஆணையராக இருந்த ஜே.எச்.ஹட்டன் குறிப்பிடுகிறார். இது போன்ற பல எடுத்துக்காட்டுகளைக் கூறி அவை ஏற்படுத்திய குழப்பங்களை அவர் விளக்குவார். இப்படியான சில சிக்கல்கள் ஏற்படும்தான். சாதி என்பது பால், தொழில், ஊர் என்பதுபோல ஒரு புறவயமான(objective) அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு வகையில் தன்னை எப்படி உணர்ந்து கொள்கிறார் என்கிற வகையில் அது ஒரு தன்வயமான (subjective) அடையளமும் கூட. இதைச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது அவசியம். ஏற்படும் சிக்கல்களைக் கணக்கில் கொண்டு போகப் போக அவற்றைச் சரி செய்துகொள்ள வேண்டியதுதான். சாதிவாரிக் கணக்கீடு சாதி உறுதியாக்கத்தை அதிகமாக்கும் என்பது ஒரு வகையில் உண்மையானாலும் அதைத் தவிர்க்க இயலாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பல அரசியல் அதிகாரமோ, சமூக முன்னேற்றமோ இன்றி இருப்பது தொடரும் நிலையில் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது அவசியமாகிறது. இதற்குக் கணகெடுப்பு நிபந்தனையாகிறது. கடந்த நூறாண்டுகளில் சாதிச் சமன்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருபக்கம் சாதிகளுக்கிடையேயான தொடர்புகள் மிகுதியாதல், கலப்புத் திருமணங்கள் அதிகமாதல் என்பன நிகழ்ந்த போதிலும் இன்னொரு பக்கம் சாதிக் கொடுமைகள் தொடருதல், சாதி அடிப்படையில் அரசியல் செயல்பாடுகள் மிகுதல் என்பன ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த எண்பது ஆண்டுகளாக சாதிவாரிக் கணக்கீடு இல்லாதிருந்தும் இப்படி ஏற்பட்டுள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது. தவிரவும் யார் பெரும்பான்மையர், யார் சிறுபான்மையர் என்பது கணக்கெடுப்பிற்குப் பின்தான் உணர்ந்துகொள்ளப்படும் என்பதுமல்ல. இந்த விவாதம் 1930களில் முன் வைக்கப்பட்டபோது ஹட்டன் இப்படிக் கூறினார்: “ஏற்கனவே இருக்கும் ஒரு உண்மையைப் பதிவு செய்வது அதன் இருப்பை உறுதி செய்துவிடுமா என்ன?” ஹட்டனின் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.


சில ‘உண்மைகள்’ சாதிவாரிக் கணக்கீட்டின் விளைவாகவே உருவாக்கப்பட்டன. இந்து, முஸ்லிம் என்கிற அடையாளங்களை உறுதிப்படுத்தி எதிர் எதிராக நிறுத்தியதில் பிரிட்டிஷாரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ஒரு உறுதியான பங்குண்டு. தர்ஹாவை வணங்குதல், இந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளக் கொண்டாடுதல், அதே நேரத்தில் பார்ப்பன புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொள்ளுதல் என்பதுபோன்ற வழமைகளுடன் தான் முஸ்லிமா இல்லை இந்துவா என பிரக்ஞை இல்லாமலே பல சமூகங்கள் இருந்து வந்தன. அப்வர்கள் ‘மோல்சலாம்கள்’ என அழைக்கப்பட்டனர். குஜராத்தில் வாழ்ந்த ‘ஜாலா’ என்கிற சமூகத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் இந்துக்களாகக் கருதப்பட்டு இந்து ரஜபுத்திரர் ஆல்லது கோலி சாதியினரைத் திருமணம் செய்துகொள்வர். பெண்கள் முஸ்லிம்களாகக் கருதப்பட்டு முஸ்லிம்களைத் திருமணம் செய்துகொள்வர். இவர்கள் முன் கணக்கெடுப்பாளர் வந்து நின்று, “நீ இந்துவா, முஸ்லிமா? ஏதாவது ஒன்றைச் சொல்” எனக் கறார் செய்தபோது அவர்கள் ஏதாவதொன்றைத் தேர்வு செய்ய வேன்டியதாயிர்று. கடந்த நூறாண்டுகளுக்க்கும் மேற்பட்ட இத்தகைய நடைமுறைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்பு ஆகியவற்றில் ஏர்பட்டுள்ள மிகப் பெரிய வளர்ச்சி முதலியன இந்த நிலைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. மேற்குறித்த சிக்கல்கள் உருவாவதற்கு இப்போது வாய்ப்புகள் குறைவு. மதம், பாலினம், மொழி, இனம், குலம்(tribe) எனப் பல அடையாளங்கள் மக்கள் தொகைக் கணகெடுப்பில் பதிவு செய்யப்படும்போது சாதி பற்றி மட்டும் இத்தனை சர்ச்சைகள் ஏன் என கர்நாடகத்தில் சாதிவாரிக் கணகெடுப்பை மேற்கொண்ட ஹவானூர் ஆணையம் கேட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. சாதி என்பது ஒரு அநீதி, களைந்தெறியப்பட வேண்டிய கொடுமை, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கே உரித்தான சாபக்கேடு என்பதெல்லாம் எத்தனை உண்மையோ அத்தனை உண்மை சாதி என்பது ஒரு எதார்த்தம், ஒரு வரலாற்று உண்மை என்பதும். இட ஒதுக்கீடு என்பதன் மூலம் இதை ஒழித்துவிட இயலாதெனினும் அதுவும் தேவையாக இருக்கின்றது. சாதி, தீண்டாண்மை முதலானாவற்றிர்கு இத்தகைய இரட்டை முகங்கள் உண்டு. ஒரு பக்கம் அவை ஒழிக்கப்பட வேன்டியவையாக உள்ளன. இன்னொரு பக்கம் அப்படி ஒழிப்பதற்கான கருவிகளில் ஒன்றாகவும் அவையே அமைந்துவிடுகின்றன. தவிரவும் இன்னொன்றையும் நாம் வலிமையாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இப்படியான கணக்கெடுப்புகள் இப்போது நடைபெறுவது இந்தியாவில் மட்டுமே மேற்கொள்ளப்படும் புதுமை அல்ல. உலகெங்கிலும் இப்புத்தாயிரத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கணக்கெடுப்புப் படிவங்கள் மிகவும் சிக்கலாக உருவாக்கப் படுகின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்கள் தொகைக் காணக்கெடுப்புப் படிவங்களில் பல்வேறு அடையாளங்களைக் குறிக்கவும், தேவையானால் இரட்டை அடையாளங்களைப் பதியவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது (பார்க்க: அ.மார்க்ஸ், ”மக்கள் தொகைக் கணகெடுப்பின் அரசியல்”, பயணி வெளியீடு, சென்னை, 2010). மதம், நட்டினம் முதலானவை முதன் முதலாக இங்கெல்லாம் இப்போது பதிவு செய்யப்படுவது பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆக சாதிவாரிக் கணக்கீடு இன்றைய சூழலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. சட்டபூர்வமாகவும் இன்று அதற்கொரு தேவை ஏற்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு அப்பால் இன்று பெரிய அளவில் மக்கள் பங்கேற்புடன் சாதிவாரிக் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 6/02/2012 05:19:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
கவிதை
Monday, May 21, 2012
அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் வந்துசேர்வேன் இந்தக்கோலத்திற்தான் நான் வந்துசேர்வேனென எதிரி எனது தஞ்சக்கேட்டை இப்போதும் சுட்டிக்காட்டவில்லை ஆனால் நான் அவன் அப்படிச்சொல்லவேண்டுமென எதிர்பார்த்தேன் அவனைக் காறித்துப்புவதற்கு எனக்கு ஆயிரங்காரணங்கள் இருக்கின்றன என்னை உதாசீனப்படுத்த அவன் ஒருபோதும் முயல்வதில்லை எனது நேர்மையான எதிரி என்னை முன்னிலைப்படுத்தி அதியற்புதமான ஓவியமொன்றை வரைகிறான்(தோழர் பரா அவர்களின் முதலாண்டு நினைவாக-) 2008 http://www.shobasakthi.com/shobasakthi/?p=223

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 5/21/2012 02:22:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
மேலும் அறிய

Name: NICHAMAM
Home:
About Me:
See my complete profile
QR Code for mobile view

Vittal Rao./ sramakrishnan

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன்,
பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், சட்டென எரிந்து விழுவதும் உண்டு,
புத்தகங்களில் அழகிய ஒவியங்கள் இருந்துவிட்டால் கட்டாயம் விலை அதிகமாகிவிடும், படமில்லாத நாவல்கள் என்றால் ஐந்தோ பத்தோ போதும் என வாங்கிக் கொள்வார்கள்,
நான் ஒரு முறை The Thief’s Journal என்ற ஜெனேயின் நூலை பிளாட்பாரக் கடையில் பார்த்தேன், கடைக்காரர் ஐந்து ரூபாய் சொன்னார், அது அச்சில் இல்லாத ஒன்று, ஆனால் அதன் முக்கியத்துவத்தை கடைக்காரர் அறியவேயில்லை,  நானாக அதற்கு 25 ரூபாய் தந்தேன், இது முக்கியமான புத்தகம் என்றும் கூறினேன்,
கடைக்காரர் சிரித்தபடியே அதுக்காக ஜாஸ்தி பணம் குடுக்கிறயா, என வாங்கிக் கொண்டார், இந்த ஒரு செய்கை அதன் பிறகு எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நீயே விலை போட்டுக்குடு என கடைக்காரரைச் சொல்ல வைத்தது,
மழைக்காலம் தான் பழைய புத்தக்கடைக்காரர்களுக்கு சிரமமான மாதம், ஒருமுறை பழைய புத்தக கடைக்காரர் ஒருவர் மழைநாளில் எனது அறையை தேடிவந்து தம்பி ஒரு ஆயிர ரூபா கடனா வேணும், புத்தகம் வாங்கி கழிச்சிக்கோங்க என்றார்,
எனக்கு அவரது கஷ்டம் தெரியும் என்பதால் உடனே தந்து அனுப்பினேன், அடுத்தவாரம் அவர் கடைக்குப் போன போது, அவர் கடையை விற்றுவிட்டு போய்விட்டது தெரியவந்த்து,
என்னை ஏமாற்றிவிட்டரே என நினைத்துக் கொண்டு அவரைத்தேடினேன், ஆளே கண்ணில் படவில்லை, பின்பு அவரை மறந்து போனேன், நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு மதியம் என் அறைக்கு வந்து அவர் கதவைத் தட்டினார், கோபத்துடன்  என்ன வேணும் என்று கேட்டேன்,
கடை நடத்தமுடியலை, வித்துட்டேன், அதான் உனக்குப் பணத்தைக் குடுக்க முடியலை, ஒரு வக்கீல் வீட்ல கொஞ்சம் பழைய புத்தகம் கிடைத்தது, உனக்காக கொண்டுவந்தேன் என்று இரண்டு கட்டுப் புத்தகங்க்ளை நீட்டினார், அதில் ஷேக்ஸ்பியர் முழுதொகுதி, மில்டன், கதே, டிக்கன்ஸ், வேர்ட்ஸ்வெர்த் என நாற்பது புத்தகங்களுக்கும் மேல் இருந்தன,
என் கையைப் பற்றியபடியே உன் கடனுக்கு இதை வட்டியா நினைச்சிக்கோ, கடனை திரும்ப குடுத்துருவேன் என்றார், நான் கலங்கிப்போனவனாக பரவாயில்லை, நான் தான் இந்த புத்தகத்துக்கு மிச்சப் பணம் தரணும் என 300 ரூபாய் கொடுத்தேன்,
வேணாம் தம்பி, ஒரு சாப்பாடு மட்டும் வாங்கிகுடு போதும் என்றார், இருவரும் சரவணபவனில் போய் சாப்பிட்டோம், திரும்பி போகும்போது சொன்னார்,
படிக்கிறவனை ஏமாற்றினா நாம உருப்பட முடியாது தம்பி, இப்போ தான் மனசு குளிர்ந்து இருக்கு, பில்லர் கிட்டே தள்ளுவண்டியில சூப் கடை  வச்சி நடத்தப்போறேன், எப்பவும் போல வந்து போங்க  என்றார்,
சில வாரங்களுக்கு பின்பு பில்லர் பக்கம் போன போது அவரைத்தேடினேன், அப்படி கடை எதையும்  காணவில்லை, நகர நெருக்கடிகளுக்குள் எங்கே போனார் என்றே தெரியவில்லை, ஆனால் மனது அவரை இன்றும் தேடிக்கொண்டுதானிருக்கிறது,
பழைய புத்தக கடைகளில் உங்களுக்கு அதிர்ஷடமிருந்தால் தான் நல்ல புத்தகங்கள் கிடைக்ககூடும், பழைய புத்தகங்களைத் தேடி அலைந்து நான் சுவாச ஒவ்வாமையை தேடிக் கொண்டேன், மருத்துவர், நீங்கள் பழைய புத்தகக் கடைப்பக்கமே போக கூடாது, அந்த தூசி உங்களுக்கு அலர்ஜி என்று கறாராகக் கூறிவிட்டார்,
ஆறு மாதங்களுக்கு பழைய புத்தகக் கடை  பக்கம் போய் ஆசையோடு தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன், அது போல கொடுமையான அனுபவம் வேறு கிடையாது, எனது தவிப்பை அறிந்த பழைய புத்தக கடைக்காரர்  அறையை தேடி வந்து தானே தேர்வு செய்த பத்து இருபது புத்தகங்களை  கொடுத்து போவதை வழக்கமாக கொண்டார்,  அந்த நன்றி மறக்கமுடியாதது, பின்பு மருத்துவ அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைய ஆரம்பித்தேன், ஒவ்வாமையை பழகிப்போய்விட்டது,
பழைய புத்தகங்களுடன் உள்ள உறவு புதிய புத்தகங்களுடன் ஏற்படுவதில்லை, பலநேரம் அந்த புத்தகங்களை வாங்கியவர் யார், படித்தவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துக் கொண்டிருப்பேன், ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய பழைய புத்தகம் ஒன்றில் இரண்டாக மடிக்கபட்ட ஒரு கடிதம் ஒன்றினைக் கண்டு எடுத்தேன்,
அது வக்கீல் பாஷ்யம் என்பவருக்கு அவரது தந்தை எழுதிய ஆங்கில கடிதம், கல்கத்தா என முகவரி எழுதப்பட்டிருந்தது, அந்தக் கடிதத்தில் பிழைக்கப் போன இடத்தில் நல்ல சாப்பாடு, பேச்சுத்துணை , மான அவமானங்களைப் பற்றி யோசிக்க கூடாது, நீ ஜெயிக்க வேண்டும், அந்த ஒன்று எல்லாவற்றையும் தானே தேடி தந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது,
யாரோ, யாருக்கோ எழுதிய கடிதம் எனக்கு மிகுந்த உத்வேகம் தருவதாக அமைந்த்து, ஒருமுறை பழைய புத்தகம் ஒன்றுக்குள் பத்து ரூபாய் ஒன்று  ஒளித்து வைக்கபட்டிருந்தது, அது எனது ஒரு நாளைக் காப்பாற்றியது, பி. ஜி. வுட்ஹவுஸ் புத்தகத்தில் அதை வாசித்தவர் ஆங்காங்கே எழுதிய அடிக்குறிப்புகள் புத்தகத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது.
பழைய புத்தகங்களைத் தேடி வாசிக்கின்றவன் என்ற காரணமே விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை தேடிப்படிக்க முக்கிய காரணமாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த கட்டுரை புத்தகங்களில் மிக முக்கியமானது என்று இந்த நூலைக் கூறுவேன்,
விட்டல்ராவ், சிறந்த எழுத்தாளர், ஒவியர், கட்டுரையாளர்,  அவரை திருவல்லிகேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் நானே பலமுறை பார்த்திருக்கிறேன், நுண்கலைகள் பற்றி தேர்ந்த அனுபவமும் தெளிந்த ஞானமும் கொண்டவர்,
தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும் பழைய புத்தக கடைகாரர்களின் குணாதிசயங்களையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார்,  இது ஒரு அரிய ஆவணப்படுத்துதல்,
விட்டல்ராவின் அனுபவத்தில் பெரும்பான்மை எனக்கும் நேர்ந்திருக்கிறது என்பதால் படிக்கையில் மிகுந்த நெகிழ்ச்சி அடைய நேர்ந்தது, குறிப்பாக மூர்மார்க்கெட் எரிக்கபட்டது பற்றிய கட்டுரை மிக முக்கியமானது.
நான் சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த கல்லூரி நாட்களில் ரயிலை விட்டு இறங்கியதுமே நேராக மூர்மார்க்கெட்டிற்குப் போய்விடுவேன், அங்கே ஒரு பை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு தான் நண்பர்களைக் காணச்செல்வேன், 1952ல் ஹெமிங்வே அட்டையுடன் வெளியான LIFE  இதழில் The Old Man and the Sea வெளியாகி இருந்த்து, அந்த இதழை மூர்மார்க்கெட்டில் தான் வாங்கினேன்,
இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, இம்ப்ரிண்ட்,  எஸ்கொயர், Paris Review. Chimera. Horizon. என நிறைய இதழ்களை அங்கே வாங்கியிருக்கிறேன், 1985 ல் மூர்மார்க்கெட் எரிக்கபட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு போய் நின்ற போது மனது கலங்கிப்போய்விட்டது, உடலின் ஒரு பகுதி துண்டிக்கபட்டது போலவே உணர்ந்தேன், புகைபடிந்த கற்களை வெறித்துப் பார்த்தபடியே நின்றபோது தொண்டை அடைத்தது, திட்டமிட்டு உருவாக்கபட்ட விபத்து என்று சொன்னார்கள், நிஜம் என்றால் அது போல ஒரு அநியாயம் வேறு ஒன்றுமேயில்லை, அந்த மூர்மார்க்கெட்டுடன் தனக்குள்ள உறவைப் பற்றி விட்டல்ராவ் அற்புதமாக எழுதியிருக்கிறார், அவை முற்றிலும் உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்,
விட்டல்ராவின் இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கலை இலக்கிய இதழ்களையும், அரிய இலக்கியத் தகவல்களையும், ஒவியங்களையும் உள்ளடக்கியது, ஒவியர் என்பதால் விட்டல்ராவ் ஆங்கில இதழ்களின் கோட்டுப்படங்கள், புகைப்படங்கள் குறித்து நுட்பமாக சிலாகித்து எழுதியிருக்கிறார், இந்த நூலை வாசித்தபிறகு அவர் சொன்ன சில இதழ்களை  எடுத்துப்புரட்டி அந்த ஒவியங்களின் அருமையை புரிந்து  கொண்டேன்,
விட்டல்ராவின் தந்தைக்கும், பழைய புத்தக கடைக்காரர் ஒருவருக்குமான நட்பு பற்றிய கட்டுரை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது, அக்கட்டுரை குறும்படமாக உருவாக்க வேண்டிய ஒன்று,
அது போலவே பைண்டிங் செய்கின்றவரை பற்றியும், மூர்மார்கெட் ஐயர் பற்றிய கட்டுரையும் ஒளிரும் சித்திரங்களாக உள்ளன , இலக்கியம், ஓவியம், சிற்பம், வரலாறு எனப் பல துறைகளில் வெளிவந்த தொடர்களை விட்டல் ராவ் தேடித்தேடி சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கிறார், இந்த ரசனையும் ஈடுபாடும் தான் அவரை மிகச்சிறந்த எழுத்தாளராக உருமாற்றியிருக்கின்றன
தமிழில் இது போன்று பழைய புத்தக உலகம் குறித்து எவரும் இத்தனை விரிவாக, நுட்பமாக எழுதியதில்லை, அவ்வகையில் விட்டல்ராவின் புத்தகம் ஒரு கொடை என்றே சொல்வேன்,
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவின் வாழ்க்கையாக மட்டுமில்லை, புத்தகங்களை தேடித் திரியும் எல்லோரது வாழ்க்கையின் பகுதியாகவுமிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு
அமெரிக்கன் சென்டர், மேக்ஸ்முல்லர் பவன், அலியான்சே பிரான்சே, அடையார் நூலகம் என்று வெளிநாட்டு இதழ்களை வாசிப்பதற்குத் தேடி அலைந்த நாட்களை நினைவூட்டும் இக்கட்டுரைகள் இணைய யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு வெறும் அனுபவமாக மட்டுமே தோன்றக்கூடும், ஆனால் இது அனுபவம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை,  வாழ்த்துபார்த்தவர்கள் தான் அதன் உன்னதத்தை அறிய முடியும், விட்டல்ராவ் அப்படியான ஒருவர்.
••
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவ் நர்மதா பதிப்பகம், சென்னை-17, விலை ரூ. 200/-