ஞாயிறு, 11 ஜனவரி, 2015

எட்டயபுரம்: உச்சி வெயில்..

ஒருவர்.முதலில் அவரும் அவரது தம்பியும் சேர்ந்து கடை வைத்திருந்தார்கள், அப்புறம் இரண்டு பேருக்கும் பிடிக்காமால்ப் போனதாலோ என்னவோ கடையை பாகம் பிரித்துக் கொண்டார்கள்.கடை சந்திப் பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் இருந்தது.அப்புறமாக அதை தம்பிக்கு கொடுத்துவிட்டு போத்தி ஒட்டலுக்கு அடுத்த கடையை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.அவரது பழைய கடையின் முகப்பு உயரமாய் இருக்கும்.கடையின் முகப்பில் நீளமான பலகை. கடையினுள் அவர் ஏறிச் செல்ல பலகையின் முடிவில் ஒரு ஆள் நுழைகிற அளவு இடமிருக்கும்.என்னைப் போல் சின்னப் பையன் அதில் உட்கார்ந்து கொள்ளலாம்.நாடோடி மன்னன் நூறாவது நாள் விழாவுக்கு எம் ஜி ஆர் அந்த வழியாகப் போன போது அங்கிருந்துதான் பார்த்தேன்.எவ்வளவோ கெஞ்சியும் அப்பா தியேட்டருக்கு அழைத்துப் போக மறுத்து விட்டார்.சங்கரன் பிள்ளை அண்ணாச்சி, கடையை பாகம் பிரித்த போது, அப்பாவும் உடனிருந்தார்.நிறையப் பொருட்களை தம்பி விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார்.கடையை நான் தான் பெரும்பாலும் பார்த்துக் கொண்டேன் என்பது அவரது வாதம்.கிட்டத்தட்ட சங்கரம் பிள்ளை அண்ணாச்சி புதிதாகத்தான் கடைக்கு பொருட்கள் சேகரிக்க வேண்டி இருந்தது.புதிதாய்ப் பார்த்த இடத்தில் பரமசிவம் பிள்ளை என்றொருவர் கடை வைத்திருந்தார். அது நொடித்துப் போனது. கடை, அட்டம், ஒரு கண்ணாடி அலமார், கல்லாப் பெட்டி எல்லாவற்றையும் சேர்த்தே விலை பேசி இருந்தார். தம்பி, கல்லாப் பெட்டியை தருவதாகச் சொன்னவர் கடைசியில் மறுத்து விட்டார்.அது மட்டும் வருத்தம் அவருக்கு. நொடித்துப் போனவரின் கல்லாப் பெட்டியை வைத்துக் கொள்ளவும் சிறிய தயக்கம்.இதே போல தயக்கம் தம்பிக்கும் இருக்காதா என்று அப்பாவின் நண்பரான குற்றாலிங்கம் செட்டியார் சொன்னார்.அதுவும் சரிதான், என்று அண்ணாச்சி விட்டு விட்டார். ஒரே ஒரு பொருளை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டார். அதைத் தர தம்பி மறுக்கவில்லை. மறுப்பதற்கு அது என்ன காசு பெருமதியானதா என்று குற்றாலிங்கம் செட்டியார் சொன்னார், வாயில் பெர்க்லி சிகரெட்டை வைத்துக் கொண்டே சொன்னார்.சரி அதை வாங்கி தாங்க இந்தா இவனை கூட்டிட்டுப் போங்க என்று புதுக் கடை முன் அப்பாவுடன் நின்று கொண்டிருந்த என்னைக் காட்டினார்.
செட்டியார் அண்ணாச்சி சிகரெட் பிடிப்பதைப் பார்ப்பது எனக்கு அலாதிப் பிரியம்.எழுபது வயது வரை கூட அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.அப்பா இறந்த துக்கம் விசாரிக்க வந்தவர், மாடியில் என் புத்தக மேஜை அருகேயே வந்தார்.கல்லூரிப் புத்தகங்கள் தவிர ஜே. கிருஷ்ணமூர்த்தியின் commentaries on living.புத்தகத்தை பார்த்து விட்டு இது எப்படிப்பா இருக்கு, எல்லாரும் ரொம்பச் சொல்லுதாங்களே.,என்று எடுத்துப் பார்த்தார்.வேணுன்னா படிச்சுட்டு தாங்களேன் என்று கொடுத்தேன், என்னை கூர்மையாகக் கவனித்தார். என்னிடமிருந்து சிகரெட் வாசனையை உணர்ந்திருக்க வேண்டும். வேண்டாண்டே என்றார்.சொல்லிவிட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டார்.அப்புறம் தான் புரிந்தது அவர் சொன்னது சிகரெட்டை என்று.மாடியைச் சுற்று முற்றும் பார்த்தார் ஏயப்பா எப்பிடி கலகலன்னு இருந்த இடம், சீட்டு என்ன, கச்சேரி என்ன.ஆமா இந்த ஃபேனை எங்க, வித்துட்டாரா ச்சேய், அருமையான ஜி யி ஸி ஃபேன்ல்லா, கொலுபொம்மை பீரோ இருக்காடே, வோர்ல்ட் வார் சமயத்தில அதில உங்க அப்பா கோல்ட் ஃப்ளேக் சிகரெட்டா வாங்கி டின் டின்னா அடுக்கியிருந்தாரு பாக்கணும்.சொல்லிக் கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். இது சிஸர்ஸ் சிகரெட். இப்போது பெர்க்லி வழக்கொழிந்திருந்தது..உனக்குத் தெரியுமாடே உங்க அப்பா ரத்தக் கொதிப்பு வந்து கவர்ன் மெண்ட் ஆஸ்பத்திரியில் ரொம்ப சங்கடப் பட்டாரு, அப்பவே போயிருவாருன்னாங்க, தப்பிச்சிட்டாரு, அப்ப அவரு விட்டுட்டாரு சிகரெட்டை, இப்ப நானும் ராமானுஜமும்தான் குடிக்கிறோம்.நீ ஆரம்பிச்சுராதப்பா. எந்த வகையிலாவது விட்டுரு என்று அருமையான ஆங்கிலத்தில் சொன்னார்.தொடர்ந்து, எத்தனை பையங்க ஹாஸ்டல் மாதிரி இருந்து படிச்ச இடம், ஆமா வீட்டையும் விலை பேசியாச்சுல்லா, ச்சே ச்சே என்று தலையை இட வலமாக ஆட்டினார், அப்படியே இறங்கிப் போய் விட்டார். துஷ்டி கேட்க வந்துட்டு விடை சொல்லக் கூடாதுன்னு நினைச்சாரோ, இல்லேன்னா பழைய நினைவுகளோ.
சங்கரம் பிள்ளை அண்ணாச்சி கேட்டது ஒரு புகைப் படத்தை. ஏற்கெனெவே தம்பி அதைக் கழற்றி வைத்திருந்தார்.இந்தாங்க என்று ரெடியாகக் கொடுத்தார். நான் வாங்கிப் பார்த்தேன்.மூன்று பேர் ஒரே போல் மீசையும், தொப்பியும் வைத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.இது என்ன படம் தெரியுதாடா என்று செட்டியார் அண்ணாச்சி கேட்டார்கள்.தெரியாது என்று தலையை ஆட்டினேன். இதுதான் பகத் சிங், சுதந்திரப் போராட்ட வீரன்னாங்க.கட்ட பொம்மன் மாதிரியா என்றேன். ஆமா அவனை விட பெரிய வீரருங்க. என்றார்.நான் சிவகங்கைச் சீமையில வாறவங்க மாதிரியா என்றேன்.அவர் சிரித்தார்.உனக்கு சிவாஜி புடிக்காதுல்லா என்றார். சங்கரன் பிள்ளை அண்ணாச்சி அதை சந்தோஷமாக வாங்கினார்.அவரும் இது யாரு தெரியுமா என்றார். நான், தெரியும் பகத் சிங் என்றேன். பராவாயில்லையே, அண்ணாச்சி இவன் ரொம்ப கெட்டிக்காரன் அண்ணாச்சி என்று அப்பாவிடம் சங்கரம் பிள்ளை சொன்னார். நான் பாவமாக செட்டியார் முகத்தைப் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சங்கரன் பிள்ளை அண்ணாச்சிக்கு என் மீது அபார நம்பிக்கை.அப்பா இழந்ததை எல்லாம் நான் ஒருவனே மீட்டு விடுவேன் என்று. அதை சொல்லவும் செய்வார்.(இப்படியெல்லாம் சொல்லக் கேட்டுக் கேட்டு தலைக் கனம் ஏறியிருந்தது.)சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்தால் போத்தி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அண்ணாச்சி கடையில் ஒரு பாரிஸ் லாக்டோ பான் சாக்லெட் வாங்குவது வழக்கம். அந்தச் சாலெட்டை சுற்றியிருக்கும் பச்சைத்தாளை சிவசங்கரனிடம் கொடுக்க வேண்டும். அவன் அதை சேகரித்துக் கொண்டிருந்தான். நூறு காலி உறைகள் சேர்ந்ததும் கொடுத்தால், பாரி கம்பெனியிலிருந்து ஒரு கேரம் போர்டு பரிசு தருவார்கள் என்று நிறைய பேர் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எண்பது சேர்த்திருந்த நிலையில் தினமணியில் விளம்பரம் வந்தது.காலி யுறைகளைக் கட்டி வைத்திருப்பது போல் படம் போட்டு. இந்த மாதிரி பரிசுத்திட்டம் எதையும் பாரி கம்பெனி அறிவிக்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களும் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும் என்கிற மாதிரி.
அண்ணாச்சி கடையில் அப்போது கல்கத்தாவிலிருந்து ராஃபில் டிக்கெட் வரும்.தமிழ் நாட்டில் அப்போது லாட்டரி டிக்கெட் கிடையாது.அதற்கு பணம் அனுப்ப ஒரு ஃபாரத்தை நிரப்பி மணி ஆர்டர் ரசீது எண்ணைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்.அதை எழுதவும், கவரில் ஆங்கிலத்தில் விலாசம் எழுதவும் நான் உதவி செய்வேன்.ஏதோ ஒரு சாரிட்டீஸ் நடத்திய ராஃபில் டிக்கெட்.சிட்போர் ரோடு என்றோ என்னவோ ஒரு ஞாபகம்.நானும் சிவசங்கரன் மற்றும் தோழர்கள், காமராஜர், விருதுநகரில் தோல்வி அடைந்த செய்தியை ஃபோன் மூலம் கேட்டதும் ஒரு தட்டி போர்டு எழுதி போத்தி ஓட்டல் முன்னாலிருந்த தி.மு.க கொடிக் கம்பத்தில் கட்டினோம்.ஒரே பரபரப் பாகி விட்டது, அந்த இடம்.எங்களை ஒதுங்கிப் போகும்படி மூத்த கழகத்துக்காரர்கள் சொன்னார்கள். நாங்கள் கலையவில்லை.நான் சற்றே ஒதுங்கி சங்கரம் பிள்ளை கடைப் பக்கம் வந்தேன்.அவர் சொன்னார், பாத்துகிட்டே இரு நான் சொல்லற மாதிரி ஜெயப்ரகாஷ் நாராயணன் ஆட்சிதான் வரப் போகுது.இதெல்லாம்தான் அதுக்கு முன்னோடி, என்று. அண்ணாச்சி பிரஜா சோசலிஷ்ட் கட்சி.ஒருமுறை வார்டு கவுன்சிலரா இருந்தவர்.குடிசை சின்னத்தில் நின்று ஜெயித்தார்.எப்போதும் கதர் வேஷ்டியும், காலர் இல்லாத வட்டக் கழுத்து கதர் சட்டையும் தான் போடுவார்.ஜே. பி தலைமையில் ஒரு புரட்சி வெடிக்கப் போவதாகச் சொல்லுவார்.ஜே பி லோகியாவெல்லாம் இந்தி ஆதரவாளர்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். அண்ணாச்சி சொல்லுவார் ஜே பி தான் பிரதமர் பதவிக்கு லாயக்கு.அவர் இந்திக்கு ஆதரவாளர் இல்லை என்று. எம.என் ராய் பற்றிப் பேசுவார்.அவரெல்லாம் சொன்னா யாரு கேக்கா. டாங்கேக்குக்கும், ஈ எம் எஸ்சுக்கும்தான் மரியாதை.ராஜாஜியைப் பிடிக்காது, அவரு சும்ம ஒட்டுக் கட்சி நடத்துதாரு. பாரேன் காங்கிரஸ் கூடச் சேந்துருவாரு ஒரு நாளு என்பார்.
ஆனால் இதெல்லாம் எப்போதாவதுதான்.அநேகமாய் காலையில் கடை திறந்ததும் போய் விடுவேன்.தினமணி பார்ப்பேன்.தினமணியும் express பேப்பரும்தான் வாங்கி விற்பார். மற்றபடி வாரப் பத்திரிக்கைகள் எல்லாம் வரும் .ராணி வராது.தீபம், அணில் எல்லாம் வாங்கிப் போடுவார்.பேப்பரைக் கேட்காமலே தருவார். தள்ளி நின்னுக்க, யாவாரத்தை கெடுக்காத என்பார்.அந்தப் பகுதியில், என்.வி.எஸ் பட்டணம் பொடி அவர் கடையில்தான் கிடைக்கும். அதற்காக வாழைத்தடை வாங்கி வைத்திருப்பார். நாகர் கோயிலிலிருந்து வரும்,நூறோ இரு நூறோ கொண்டது ஒரு சக்கரம். அதை ஒவ்வொன்றாக எடுத்து, அதற்கென்றே இருக்கிற ஒரு வழு வழுப்பான கட்டையால் தேய்த்து சுருக்கங்கங்களை நீக்குவார். இது வியாபாரமில்லாத நேரத்தில் நடக்கும். அப்போது ஏதாவது நாட்டு நடப்பு பற்றி யாரிடமாவது பேசுவார்.மாசப் பிறப்பு என்றால் நான் வருவதை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்.என்னை கடையில் வைத்துவிட்டு சந்திப் பிள்ளையார் கோயிலுக்குப் போவார். மூன்று தேங்காய் உடைப்பார். அது என்ன கணக்கோ. பெரும்பாலும் நான் கடையில் ஏறி உட்கார மாட்டேன்.ஒரு நாள். 1968 நவம்பர் மாதம் கார்த்திகை மாசப் பிறப்பு அன்று நான் தினமணி பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணாச்சி கோயிலுக்குப் போயிருந்தார்,யாரோ பெண்குரல், கடையில் ஆளில்லையா என்று கேட்டது.என்ன வேணும் என்று கேட்டுக் கொண்டே பேப்பரைத் தாழ்த்தினேன்.எக்ஸ்பிரஸ் பேப்பர் வேணும், என்ற பதிலைக் கேட்டதுமே, இரண்டு பேருக்குமே தெரிந்து விட்டது ஒருவருக்கொருவர் யாரென்று. பத்து வருடம் கழித்துக் கேட்கிற குரல்.அதே நாலாம் வகுப்புக் குரல்.நீல நிறத்தில் புடவை கட்டிக் கொண்டு., சசி.(இப்ப தெரிஞ்சுருக்குமே எப்படிடா இவ்வளவு கரெக்டா தேதி மாசம் எல்லாம் சொல்லுதாரு புள்ளையாண்டன்னு.) கடையில் இருப்பது ஒரு பேப்பர். அது யாருக்காவது வழக்கமாக வாங்குபவர்களுக்காக இருந்தால் என்ன செய்வது ஒன்றும் பதில் சொல்லாமல் நின்றேன், அடுத்த கடைக்குப் போய்விட்டாள்.அப்புறம் மாசா மாசமும் தினந்தோறும் தவம் கிடக்க வைத்த காதல் அன்று தான் மறு உதயமாயிற்று.
அண்ணாச்சி கடை அருகே நின்று விகடனோ குமுதமோ பார்த்துக் கொண்டிருந்தேன்.அண்ணாச்சி கூப்பிட்டு நூறு ரூபாய்க்கு சில்லறை மாற்றி வரச் சொன்னார்.போத்தி ஒட்டலுக்குச் சென்று சில்லறை மாற்றி வந்து கொடுத்தேன்.அதில் ஐம்பது ரூபாய் போல எடுத்து இதை வச்சுக்க, போதுமா இல்லேன்னா இந்தா எல்லாத்தையுமே வச்சுக்க என்று ஒருவனிடம் கொடுத்தார். அப்போதுதான் பார்த்தேன்.அவன் எனக்கு நன்கு தெரிந்தவன்.பெயரை நினைவுக்கு கொண்டு வரும் முன்,நீ கிளம்பு என்று அவனிடம் சொன்னார், அண்ணாச்சி.இவன் அப்பாவும் உங்க அப்பா மாதிரி நல்ல பழக்கம் என்று சொன்னார்.சரி பேப்பர்ல ஏதாவது வேலைக்கி வழி இருக்கான்னு பார்த்தியா என்று பேச்சை மாற்றுகிற தொனியில் சொன்னார்.எனக்கு போனவனைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது.அதைப் பற்றி யோசித்தத படியே நகர்ந்தேன்.காலேஜ் வாழ்க்கையெல்லாம் முடிந்து அப்பாவையெல்லாம் வழி அனுப்பிய நேரம்.வீட்டுக்குப் புறப்படும் முன் போஸ்ட் மேன் எதிரே வந்து விட்டார், பஜாரிலேயே பார்த்து விட்டேன். ஒரு புத்தகக் கட்டு கொடுத்தார்.இந்திரா/ இந்தியா 75. தமிழ்நாடன் எழுதிய புத்தகம்.பிரமாதமான அச்சு.அங்கேயே பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தபடியே நடந்தேன். பின்னால் யாரோ வருகிற மாதிரி இருந்தது.திரும்புவதற்குள் சத்தம் கேட்டது. என்னா சோமு, வீட்டுக்குத்தானா.தானாகவே பெயர் நினைவுக்கு வந்து விட்டது. ஏய் வீரவாகு, வா வா என்றேன்.
வீரபாகுவும் மாயாண்டியும் தான் அந்த நோட்டீஸுடன் ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்கள். செண்ட்ரல் டாக்கிஸுக்கு எதிர்த்த சந்திரவிலாஸ்காரரின் காலி மைதானத்தில் வைத்து ஒரு மாநாடு நடக்கிறது, கோல் வால்க்கர் என்று ஒரு பெரிய பேச்சாளர் வருகிறார்.நீ கண்டிப்பா வா என்றார்கள்.நோட்டிசில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் என்று போட்டிருந்தது. முடியுமானால் சாயந்தரம் மந்திரமூர்த்தி ஸ்கூல் கிரவுண்ட் பக்கம் வாயேன் என்றார்கள்.இரண்டு பேருமே ஹைஸ்கூலோடு நின்று விட்டவர்கள்.நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஞாபகம். மாயாண்டி நன்றாகப் படிப்பான்.எப்போதுமே நான் `சி’ செக்‌ஷன் என்றால், அவன் `டி’ செக்‌ஷனாக இருப்பான். நான் இங்கே முதல் ரேங்க் என்றால் அவன் அங்கே.கையெழுத்து அழகாக இருக்கும்.எஸ்.எஸெல் சியில் நானூறுக்கு மேல் வாங்கினான்.ஆனால் கல்லூரியில் சேரவில்லை என்று நினைக்கிறேன். மேலப் பாளையத்தில் ஒரு பீடி கம்பெனியில் வேலை பார்க்கிறான்.வீரபாகு படிப்பில் சுமார். பத்து வரை கூட படித்தானா நினைவில்லை.என்னுடன் சினிமா போட்டு விளையாட வருவான்.
இரண்டு நாள் கழித்து இன்னொரு நண்பனுடன் ரயில்வே பீடர் ரோடிலிருந்த மந்திர மூர்த்தி ஸ்கூலுக்குப் போனேன்.பத்து இருபது பேர் கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எல்லாருமே காக்கி அரை டிரவுசரும் வெள்ளைச் சட்டையும் போட்டிருந்தார்கள்.கண்ணாடி போட்டு ஒல்லியாக நெற்றியில் கோபி போட்ட ஒருவர் ரெஃப்ரியாக நின்று கொண்டிருந்தார்.அவரும் டிரவுசரும் சட்டையும் தான் போட்டிருந்தார்.கபடி கபடி யென்று பாடி விளையாடுவதற்குப் பதிலாக `ர்ராம்ம்ம்ம்’ (ராம்) என்று ஒருஅணியும் `ராவண்ண்ண்ண்’ என்று ஒருஅணியும் விளையாடிக் கொண்டிருந்தனர். வீரபாகு என்னைப் பார்த்ததும் ரெஃப்ரியிடம் சொன்னான்.அவர் சிரித்த படியே நல்வரவு என்றார்.போய் கொடி வணக்கம் செஞ்சுட்டு வாங்க என்றார். என்னுடன் வந்த நண்பனுக்கு அங்கே போய்ப் பழக்கம்.அவன் என்னையும் அழைத்துக் கொண்டு கொடி பக்கம் போனான்.வலது கையை வயிற்றோடு மடித்து வைத்து தலயை சாய்த்து ஒரு மஞ்சள்க் கொடியை வணங்கினான்.அதில் தீபமோ எதுவோ போட்டிருந்தது.நானும் வணங்கி விட்டு, விளையாட்டில் கலந்து கொண்டேன். நல்ல வேளை நான் போன நேரம், விளையாட்டு முடிகிற நேரம். சீக்கிரமே கிளம்பி விட்டோம்.நாங்கள் தெருவுக்குள் வந்து கொஞ்ச நேரத்தில் `போடுங்கம்மா ஓட்டு பானைச் சின்னத்தைப் பாத்து’ என்று ஒரு பத்து இருபது பேர் வந்தார்கள்.எல்லாரும் காக்கி டிரவுசர்.கொஞ்ச நேரம் முன்பு பார்த்தவர்கள்.அப்போதுதான் முனிசிபல் தேர்தல், தி மு க ஆட்சிக்கு வந்து, நடக்கப் போகிறது. ஜன்சங்க் சார்பாக ஒரு ஐயர் எங்கள் வார்டில் தேர்தலுக்கு நிற்கிறார்.நாங்கள் தி.மு.க ஆதரவு சுதந்திரா கட்சிக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தோம்.அவரகளைப் பார்த்து அருகே போவதற்குள் அவர்கள் கொஞ்ச நேரம் சத்தம் போட்டு விட்டு அமைதியாகப் போய்விட்டார்கள்.அந்த கோஷம் எங்களுக்கு புதிதாகவும் , பிடித்தமானதாகவும் இருந்தது.அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.ஆர் எஸ் எஸ் மாநாட்டைப் பற்றி மறந்தே போய் விட்டது.
வீரபாகு தயங்கித் தயங்கி வந்தான்.வீட்டுக்குள் வந்தான்.நாங்கள் பெரிய வீட்டை விற்று விட்டு எதிர்த்தாற் பொல்லிருந்த சின்ன வீட்டில் இருந்தோம். வீர பாகு அந்த வீடு என்னாச்சு என்றான். நான் கதையைச் சொன்னேன்.அவன் கதை பெரிய கதையாய் இருந்தது. பீகாரில் இருந்து வருவதாகச் சொன்னான். தமிழ் நாட்டில்தான் தற்போது சற்று பாதுகாப்பு என்று சொன்னான்.இங்கேயும் திடீரென்று சூழல் மாறிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்.ஓட்டலில் எல்லாம் சாப்பிட முடியாது, வீட்டில் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்றுதான் பின்னாலேயே வந்ததாகச் சொன்னான். அண்ணாச்சியிடம் பணம் வாங்கிக் கொளும்படிச் சொன்னதால் டவுணுக்கு வந்தேன், அவரை எனக்கு பழக்கமே கிடையாது, இல்லையென்றால் அப்படியே கன்னியாகுமரி போகிறவன் என்றான்.கேந்திரத்துக்குள்ள போய்ட்டா கவலையில்லை என்றான். அவன் சொன்ன பிறகுதான், அவசர நிலையின் தன்மை விளங்கிற்று.ஜே.பி கைது பற்றியும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது பற்றியும் சொல்லும் போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டான். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கையில் விலங்கிட்டு சங்கிலியால் பிணைத்திருக்கும் படம் ஒன்றைக் காட்டினான். பார்க்கவே கஷ்டமாயிருந்தது.சாப்பிட ஒன்றுமில்லை என்றாள் தயங்கியபடி அம்மா.ரேஷன் அரிசி வேக நேரம் ஆகுது என்றாள். நம்ம, சினிமா போட்டு விளையாடுற எடம் அப்படியே இருக்கா என்று அவன் பேச்சை மாற்றினான். நானும் ஆமா என்றேன். பெரிய அண்ணன் வந்தான், வீரபாகு, காசு தருகிறேன் சாப்பிட ஏதாவது வாங்கி வரச் சொல்கிறாயா என்றான்.நான் அம்மா அண்ணன் மூன்று பேரும் பேச முடியாமல் இருந்தோம். அவர்கள் இரண்டு பேருக்கும் விஷயமே புரியவில்லை.வீரபாகு கிளம்பிவிட்டான். அண்ணன், வேணுன்னாநான் போய் ஏதாவது வாங்கி வருகிறேன், என்றான். தெருவுக்கு அவசரமாக வந்து பார்த்தேன்.உச்சி வெயிலில் தெருவில் நிழல் கூட இல்லை.

எட்டயபுரம்: உச்சி வெயில்..: .

செவ்வாய், 6 ஜனவரி, 2015

Shaji..

20141213

இணையம் தழுவும் எழுத்து



நமது காலம் நமது ரசனை – 2
உயிர்மை, டிசம்பர் 2014 
இலைகள்
மரப்பட்டை
விலங்குத் தோல்
பருத்தி இழை
செயற்கை இழை....
தடித்த எழுத்துக்களில் வேறு வேறு வண்ணங்களில் எழுதி மகளிடம் கொடுத்தேன்.
“இது போதுமா அப்பா? என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“அது இவ்வளவுதான்டா செல்லம் என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த கீதிப் பாப்பாவின் முகம் வாடிப்போயிருந்தது!
“என்னடா ஆச்சு?
“நேஹா, தியா, நித்தியா, மாதவ், அசுவின்.. அல்லாரும் நெறய பேஜில கலர் போட்டோ அல்லாம் ஒட்டி வச்சு எடுத்தினு வந்தாங்க. அவங்களுக்கல்லாம் மிஸ் அஞ்சு ஸ்டார் தந்தாங்க.. என்னோட புக்கப் பாருங்க!”. நான் அவளது வீட்டுப்பாடப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எதுவுமில்லை! மேலும் எல்லாமே தவறு என்பதுபோல் வெட்டியும் போட்டிருக்கிறார் வாத்தியாரம்மா! மனிதன் அணியும் உடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதத்தானே கேட்டிருந்தார்!
அடுத்தநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது என்ன நடந்தது என்று தெளிந்து விட்டது. வண்ணப்படங்களை ஒட்டி, விரிவான அட்டவணைகளைப் போல் தயாரித்த பல பக்கங்களில் மனித உடைகளின் வரலாற்றை விரிவாக விளக்கியிருந்தனர் பெரும்பாலான குழந்தைகள்! 135000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததிலிருந்து துவங்கும் தகவல்கள்! இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மின் அச்சிட்டவை!
“அதெல்லாம் தப்புடா.. நெட்டிலிருந்து அப்படி டவுண்லோட் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து ஒட்ட யாராலயும் முடியும். அப்பா எழுதிக் கொடுத்தது தான்டா ரைட்டு.... "ஆனால் எனக்கு ஒரு ஸ்டார் கூட கெடைக்கலையே...என்று ஏமாற்றத்தில் சோர்ந்த எனது மகளின் வார்த்தைகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
யோசித்துப் பார்த்தேன்! நான் அவளிடம் சொன்னது உண்மையா? இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பாடங்களை நிரப்புவதில் என்ன தவறு? மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததன் வரலாற்றை அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டுமா? அத்தகவல்கள் கிடைக்குமிடத்திலிருந்து எடுக்கலாமே! எதைவேண்டுமானாலும் எடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்துவது நல்லது தானே? அறிவுஜீவிகளான எழுத்தாளர்களே இணையத்திலிருந்து எண்ணற்ற விஷயங்களை எடுக்கிறார்களே!
இணையம் உலகை முற்றிலுமாக ஆக்கிரமித்திருக்கும் கடந்த பதினைந்தாண்டுகளில் இணையத்திலிருந்து தழுவி எழுதுகிறார் என்கின்ற குற்றச்சாட்டை சந்திக்காத எழுத்தாளர்கள் குறைவே. இணையம் இருப்பதனால் மட்டுமே பலர் எழுத்தாளர்களாகத் தங்களை முன்வைக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் இணையத்தின் வருகைக்கு வெகுகாலத்திற்கும் முன்னரே எழுத்தாளர்களாக தங்களை நிலைநாட்டியவர்களையும் இந்த குற்றச்சாட்டு விட்டபாடில்லை! தழுவல்தான் இங்கு பிரச்சினை என்றால் இணையம் வருவதற்குப் பல பதிற்றாண்டுகளுக்கு முன்பே தழுவி எழுதுவதை மும்முரமாக கையாண்டவற்களில் ஒருவன் நான்!
பத்தாவது வயதில் எனது முதல் எழுத்து பிரசுரமாது. ஒரு கவிதை! அது தந்த ஆர்வத்தில் எழுத்தாளன் ஆகியே தீருவேன் என்று முடிவெடுத்தேன். ஆனால் என்ன எழுதுவது? அப்பா என்னை அடித்துத் துவைத்தார் என்று எழுதினால் அதில் என்ன புதுமை இருக்கிறது? மகன்களை அடித்துக் கொடுமைப்படுத்தாத அப்பாக்கள் அந்த காலத்தில் எங்கிருந்தார்கள்! எழுத்தாளன் ஆகியே தீரவேண்டுமே! என்ன செய்வது?
ஒருநாள் ஜூனியர் விகடனில் தமிழ்நாட்டின் மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான எருமைகளை ஒரு கோவில் சடங்கின் பகுதியாக பலி கொடுத்ததைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். உடனடியாக அதை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துக் கேரள சப்தம் எனும் இதழுக்கு அனுப்பி வைத்தேன். எனது உண்மையான வயதோ தமிழோ தெரியாத ஆசிரியர், சம்பவ இடத்திற்கு நான் விரைந்து எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து எழுதியதாக நினைத்து அதைப் பிரசுரித்து 25 ரூபாய்க்கான காசோலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்! வாழ்க்கையில் முதலில் பார்த்த அந்தக் காசோலையைக் காசாக்க என்னால் முடியவில்லை என்றாலும் எழுதினால் பணம் கிடைக்கும் என்று அப்போது தெரியவந்தது. (அது அவ்வப்போது மட்டுமே நடக்கும் ஓர் அதிசயம் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டேன்!)
பதினாறு வயதிருக்கும்போது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரதியில் முதியவயது உடலுறவுக்கு ஒரு கைப்புத்தகம் எனும் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். அந்த வயதின் காமக் கிளுகிளுப்பில் அதை படிக்க ஆரம்பித்த நான் அக்கட்டுரையை மொழிபெயர்த்து குடும்ப டாக்டர் எனும் ஆரோக்கிய மருத்துவ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பெரிய பீரங்கிக் குழலுக்கு இருபுறமும் ஒரு கிழவனும் கிழவியும் நிற்பதுபோன்ற அட்டைப் படத்துடன் அட்டைக் கட்டுரையாக அதைப் பிரசுரித்தனர்!
சில வாரங்கள் கழித்து அவ்விதழின் ஆசிரியர் மனோகரன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஷாஜிக்கு, பழைய ரீடர்ஸ் டைஜஸ்டிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை சுட்டு எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பும்போது குறைந்த பட்சம் நன்றி – ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஒரு குறிப்பையாவது வைத்திருக்கலாம். இத்தகைய கட்டுரைகளைப் பிரசுரிப்பது பல வகையான  சட்டச் சிக்கல்களை வரவழைக்கக்கூடியது. அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்லை. பயந்து நடுங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துபோனேன்.
இதுபோன்ற எழுத்துக்களின் வழியாக எழுத்தாளனாக வேண்டியதில்லை என்று அன்று முடிவெடுத்தேன். தனது கடிதத்துடன் ஆசிரியர் 50 ரூபாய் காசோலையையும் வைத்திருந்தார்! முழுத்தேங்காய் கிடைத்த நாய் போல் அதைப் பலமாதம் கையில் வைத்திருந்தேன். வறுமை ஒரு மனிதனை எதுவும் செய்ய வைக்கும்! பணமில்லாமல் திண்டாடிய நாளொன்றில் அக்காசோலையை எடுத்து கோட்டயத்தில் உள்ள அவ்விதழின் அலுவலகத்திற்குச் சென்றேன். காற்றில் வளைந்து நிமிர்வதுபோன்ற ஒல்லி உடம்புக்கு மேல் அசைந்து தொங்கும் உடைகளுடன் பலவீனமாக நிற்கும் அந்தப் பதினாறு வயதுப் பையன் எழுதிய முதிவயது உடலுறவுக்கான் கைப்புத்தகத்தை நினைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஜனனி பிரசுரம் என்கின்ற பெயரில் பல இதழ்களை நடத்திக்கொண்டிருந்த அக்குழுமத்தின் தலைவர் தாமஸ் டி அம்பாட் அப்போது மலையாள களிப்புனைவு (Pulp Fiction) இலக்கியத்தின் பேய் மற்றும் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் ஓர் உச்ச நட்சத்திரம். ஒருகாலத்தில் அவர் எங்கள் ஊர்ப் பகுதிகளில் தங்கி கூலிவேலை செய்திருக்கிறாராம்! அந்த நினைவுகளாலோ என்னமோ, என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார். காசோலையைத் திருப்பி வாங்கி வரும்காலத்தில் நீ எழுதப்போகும் அசல் எழுத்துக்களுக்கு இது ஒரு முன்தொகை என்று சொல்லி ஒரு 100 ரூபாய் நோட்டை கையில் வைத்துத் தந்தார். எழுத்துக்காக எனக்கு கிடைத்த முதல் ஊதியம்!
எழுத்தில் அவர் ஒருபோதும் எனது ஆதர்சமாக இருந்தவரல்ல என்றாலும் பின்னர் பலமுறை நான் அவரைச் சந்தித்தேன். புகழும் செல்வமும் வாய்த்திருந்த ஒரு நட்சத்திர எழுத்தாளர் அவர். என்னை வைத்து அவருக்கு எந்த லாபமும் இருந்ததில்லை. ஆனால் நான் நேரில் சந்தித்த அந்த முதன்முதல் எழுத்தாளர் என்னிடம் மிகுந்த கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தினார். கார்கள் இருந்தபோதிலும் இருசக்கர வாகனங்களை நேசித்தவர். தனது புல்லட்டில் நெடுந்தொலைவு பயணம் செய்வதை விரும்பிய அவர் அத்தகைய ஒரு பயணத்திற்கு நடுவே சாலை விபத்தில் சிக்கி பரிதாபமக இறந்துபோனார்.
ஒரு முறை கோழிக்கோட்டின் ஒரு நட்சத்திர விடுதியில் நாவல் எழுதுவதற்காக தங்கியிருந்த அவரைச் சந்தித்த நாள் மறக்க முடியாது. எனக்கு நாரங்ஙா வெள்ளம் வாங்கித் தந்து அவர் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தார். அறை முழுவதும் பலவிஷயங்களைப் பற்றி இதழ்கள், கருப்புப் புத்தகங்கள் (Black Books), ஆங்கிலப் புனைவிலக்கியப் புத்தகங்கள், அறிவுத் தகவல் களஞ்சியங்கள் போன்றவை விரவிக் கிடந்தன. இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் வழியாகவும் அவற்றிலிருந்து தகவல் தேடல் செய்வதன் வழியாகவும் நாம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்றும், நமது எழுத்திற்கான தகவல்களைச் சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.
எழுத்திற்கான தகவல்களை நாம் எங்கிருந்தாவது எடுத்தே ஆகவேண்டும். ஆண்டுகள், இடங்கள், பெயர்கள் போன்ற தகவல்களை படைப்பூக்கத்தால் உருவாக்கிவிட முடியாது. ஒரு காலத்தில் அதற்காக இதழ்களையும் புத்தகங்களையும் களஞ்சியங்களையும் பயன்படுத்தினோம். புத்தகங்கள் ஒருசிலருக்கு மட்டுமே கையெட்டும் தொலைவில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன! ஆனால் இணையம் ஒவ்வொருவரின் விரல் நுனிக்குமே இன்று வந்துவிட்டது! ஒரு தகவலுக்காக தடிமனான பல புத்தகங்களைப் பலமணிநேரம் இப்போது புரட்டவேண்டியதில்லை. இணையம் அனைத்தையும் எளிதாக்கியிருக்கிறது.
இணைய தளங்களிலிருந்து எடுக்கும் தகவல்களை உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த எழுத்துக்களைப் படித்த பின்னர் யோசனை பொங்கும் சில நண்பர்கள் இணையத்தில் அதைப் பற்றி வேறு என்னென்ன இருக்கிறது என்று தேடிப்பிடித்து ‘மார்க் ஷட்டர் பக் என்பவர் 1995லேயே இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதுகூட இவருக்குத் தெரியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்! இதற்கு ஒரு மறுபக்கமும் இருக்கிறது. விஷயமே அறியாத பலர் அங்கும் இங்குமிருந்து கிடைக்கும் குறிப்புச் சொற்களை கூகிள் செய்து தோ ஒன்றைப் படித்து, எல்லாம் தெரிந்தவர்களைப்போல் நடமாடும் அபாயம் நிகழ்கிறது.
சமீபத்தில் ஒரு விளம்பர நிறுவன அலுவலகத்தில் வரப்போகும் விளம்பர வரிசை ஒன்றுக்கான விவாதத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அசாதாரணமான கூற்றுகளுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்று கார்ல் சேகன் (Carl Sagan) சொல்லியிருக்கிறார்... என்று நான் சொன்னபோது அந்த நிறுவனத்தில் அதிகாரியாயிருக்கும் ஓர் இளைஞர் வான் அறிவியலாளர் கார்ல் சேகனைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்? என்று கேட்டார்!
அறிவியல் மேதையும் விண்வெளி ஆய்வாளரும் சிந்தனையாளரும் எழுத்தாளருமான கார்ல் சேகனைப்பற்றி இந்த இளைஞர் தெரிந்து வைத்திருக்கிறாரே! பரவாயில்லையே என்று ஒரு கம் நினைத்துக்கொண்டேன்! ஆனால் நான் பேசுவது எதையும் சரியாகக் கவனிக்காமல் முழுநேரமும் அவர் தனது ஐஃபோனில் நோண்டிக்கொண்டுதானே இருந்தார் என்று யோசித்தபோதுதான், அலைபேசி ஒலகத்துல கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்து தான் கார்ல் சேகன் யாரென்று அவர் கண்டுபிடித்தார் என்பது எனக்கு வெளிச்சமானது!
ஷாஜி என்கின்ற வார்த்தையின் பொருள் உருது மொழியில் தைரியமானவர் என்று. ஆனால் மவோரி மொழியில் அது....ஒரு படத்தில் என்னுடன் நடித்த ஒரு நடிகனின் இணைய விஞ்ஞானம் இப்படித்தான்போகிறது. நாம் எதைச் சொன்னாலும் அவர் அதை நமக்குத் தெரியாமல் கூகிள் பண்ணி தகவல்களை எடுப்பார்! பின்னர் யாருக்குமே தேவையில்லாத அத்தகவல்களை நமக்கு முன் கக்கி உயிரெடுப்பார்!
தனக்குத் தொடர்போ அக்கறையோ இல்லாத விஷயங்களை இணையத்திலிருந்து எடுத்துத் தன்னுடைய கண்டுபிடிப்பைப் போல் வழங்கிப் புகழைக் கோரும் ஆட்களின் எண்ணிக்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக அதிகம். வேடிக்கை என்னவென்றால் பலமுறை சரிபார்க்காமல் இணையத்தில், முக்கியமாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல இணைய தளங்களில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்த முடியாது என்பதுதான். அங்கு தகவல்களைவிடத் தகவல் பிழைகளே நிரம்பி வழிகின்றன.
ஒரு விஷயத்தைப்பற்றித் தனக்கு முன்பின் எதுவுமே தெரியாது, தன்னுடைய சிந்தனைகளுக்கு அத்துடன் எந்தச் சம்பந்தமுமில்லை என்றிருக்கும்போதிலும், வாசகர்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும் வகையில் இணையத்தில் எங்கேயோ பார்த்த சிலவற்றை எடுத்து,பலகாலமாக இதைப்பற்றித்தான் நான் தியானித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பழம்பெரும் பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்துபோனபோது பிரபல மலையாள இசை விமர்சகர் ஒருவர் சமகாலப் பாடகர் ஸ்ரீநிவாஸைப் பற்றிய இணையத் தகவல்களை எடுத்து ஒரு கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின்படி 2008இன் சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்ற பின்னர்தான் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்தார்!
ஃபிலோமினா குட்டி என்று ஒரு பாடகியிருக்கிறாள், கேட்டிருக்கிறீர்களா? என்று ஓர் அன்பர் என்னிடம் கேட்டார்! ஏதோ புதிய மலையாளிக் குட்டி ஒருவள் பாடகியாக வந்திருக்கிறாள் என்று நினைத்தேன்! ஆஃப்ரோ பீட் எனும் ஆப்ரிக்க இசை வடிவத்தை நிறவெறிக்கு எதிரான போராட்டமாக முன்வைத்த நைஜீரிய கருவியிசைக் கலைஞரும் அரசியல் போராளியுமான ஃபெலா குடி (Fela Kuti) குறித்துத்தான் அவர் சொன்னார் என்று பிறகு எனக்குத் தெரியவந்தது. ஃபெலா குடி இறந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகளாபின்னர் அவரை ஃபிலோமினா குட்டி எனும் பாடகி ஆக்குகிறார்கள்!
நீங்கள் பல ஆங்கிலப் பாடகர்களைப்பற்றி சொல்லியிருக்கிறீர்களே..... ஆனால் எர்த்தா கிட்டை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று ஒருபெண்மணி எனக்கு மடல் அனுப்பினார். எர்த்தா கிட்டா? அந்தப் பெயரை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதேயில்லை! உலகில் இருக்கும் அனைத்து பாடகர்களையும் எனக்கு எப்படித் தெரியும்? இணையம் சரணம் கச்சாமி! தேடினேன்.
1950-60களில் அமேரிக்காவில் இருந்த ஒரு காபரே நடனப்பாடகி எர்த்தா கிட்ட். சில பாடல்களை இணையத்திலேயே கேட்டுப் பார்த்தேன். பாட்டு என்பதை விட உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பேச்சுகள் அவை! காமச்சுவை கசியும் பாடல்களைத் தாம் அதிகமும் பாடியிருக்கிறார். அவரைக் கேட்காததில் எனக்கு வருத்தமேதும் தோன்றவில்லை! மடலுக்குப் பதில் அனுப்பினேன். ‘நீங்கள் எர்த்தா கிட்டின் ரசிகையா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?
“எனக்குத் தெரியாது. பிரின்ஸ் ராமவர்மா எழுதியதை நெட்டில் படித்தேன். நெட்டில் பாட்டு கேட்டேன். ஒன்றுமே புரியவில்லை. அதுதான் உங்களிடம் கேட்டேன் என்று பதில் வந்தது! பிரின்ஸ் ராமவர்மா என்ன எழுதியிருக்கிறார் என்று நானும் நெட்டில் பார்த்தேன்.
எனக்கு ஷோப்பாங் பிடிக்கும், பிசெட் பிடிக்கும்
பழையகாலப் பாடல்கள் பிடிக்கும்
நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு பிடிக்கும்
கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை பிடிக்கும்
ஆனால் எண்ணைக் கிணர்கள் பீப்பய்க்களில் எண்ணை நிரப்பும்
சளர்ர்ர்ப்ப் ஒலிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்... அமேரிக்காவின் முக்கியப்பாடகி எர்த்தா கிட்ட் இப்படிப் பாடினார்..என்று எழுதியிருக்கிறார்!
திருவாங்கூர் அரச பரம்பரையைச் சார்ந்தவரும், கர்நாடக இசைப் பாடகரும், இசை ஆசிரியரும், செவ்வியல் இசை ஆய்வாளருமான பிரின்ஸ் ராமவர்மா எதற்காக இதை எழுதினார் என்று அந்த கட்டுரையிலிருந்து எனக்கு விளங்கவில்லை! உழைக்கும் வர்க்க இசையின் முக்கியத்துவத்தை உணர்த்த ந்த வரிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார் என்று குத்துமதிப்பாக வைத்துக்கொண்டேன். ஆனால் அந்த வரிகளை எழுதியவர் எர்த்தா கிட்ட் இல்லையே! மார்வின் ஃபிஷெர் எனும் கறுப்பினப் பாடலாசிரியர் எழுதிய வரிகள் அவை!
பல இணைய தளங்களில் பல மணிநேரம் ஒத்துப்பார்த்துத் தேடித்தான் மேற்சொன்ன தகவல்களைக் கண்டுபிடித்தேன். அந்தப் பெண்மணியும் பிரின்ஸ் ராமவர்மாவும் நானும் இணையத்திலிருந்துதான் இந்த  தகவல்களை எடுத்திருக்கிறோம். ஆனால் தகவல்களை ஒவ்வொருவரும் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஷோப்பாங் (Chopin) மற்றும் பிசெட் (Bizet), மிக முக்கியமான மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர்கள் என்று அறியாத,  நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு (String quartet), கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை (Polynesian carol) போன்றவை என்னவென்று உணராத ஆட்களுக்கு இந்த வரிகள் எப்படிப் புரியும்?
இலைகள், மரப்பட்டை, விலங்குத்தோல், பருத்தி இழை போன்றவற்றிலிருந்து அன்றும் இன்றும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மையைத் தெரியாதவர்களும் இணையத்தின் உதவியால் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தை நிரப்பலாம். அவர்கள் அக்குழந்தைகளின் பள்ளி ஆசிரியர்கள்கூட ஆகலாம். ஆனால் மனித உடைகளின் உண்மையான வரலாற்றை அறிய அவர்களால் ஒருபோதும் முடியாது.
1915 டிசம்பர் மாதத்தின் ஒரு மாலையில் இருட்டும் அழுக்கும் குழைந்த பாரிஸ் நகரத் தெருவொன்றில் ஒரு விளக்குக் கம்பத்தின் கீழ் பிறந்து விழுந்தாள் பிரான்சு நாட்டின் எக்காலத்திற்குமுரிய அதிசயப் பாடகி எடித் பியாஃப். தெருமுனைகளில் நின்றுகொண்டு பலர் பரிதாபமான அந்த மகப்பேற்றை வேடிக்கை பார்த்தனர். ஆடுமாடுகள் குட்டி போடுவதுபோல் பனிகொட்டும் சாலையோர நடைமேடையில் தனது மகளை பெற்றுப் போட்டாள் ஒரு தாய் என்று உள்ளுடைந்து எழுதும் ஓர் எழுத்தாளனை இணையத்தால் உருவாக்க முடியுமா?..