“இந்தியாவில்
கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நான், சாலையிலிருந்த ஒரு
கடையில் ஒரு பழச்சாறு வாங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் கையேந்தினான்.
அவனிடம் பழச்சாறைக் கொடுத்து விட்டு, அவன் என்ன செய்கிறான் என்று
கவனித்தேன். அவன் சாலையைக் கடந்துபோய், எதிரிலிருந்த திண்டில் ஒரு
செய்தித்தாளை விரித்துப் போட்டு, கால் மேல் கால் போட்டு ஒரு ராஜாவைப்போல
உட்கார்ந்து கொண்டு, புறக் காட்சிகளை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே அந்தப்
பழச்சாறைப் பருகினான்.
அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை
நிச்சயமாக இருக்கிறது. அதுதான் சினிமா. உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத்
தணிக்கை விதிகள் இருந்தபோதும் ஈரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன்
காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள்...”
என்று பேசிக் கொண்டேயிருக்கிறார் புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர்
மக்மல்பஃப்.
(நேர்காணல்: செழியன், நன்றி: ஆனந்த விகடன்)
அப்படியான ஒரு சிறுவனைப் பின்தொடர்ந்த நிகழ்வு எனக்கும் நடந்திருக்கிறது.
எங்கள்
ஊரில் ஒரு குளக்கரை இருக்கிறது. வெயில்சாயும் அந்தி நேரங்களில் அங்கு
காலாற நடந்து வருவேன். அங்குள்ள குடைவேலா மரங்களின் நிழலில் அமர்வதே இதமாக
இருக்கும். ட்வீட் ட்வீட் என்று ஓசையெழுப்பியபடி கிகைளகளில் தாவிச்
செல்லும் தேன்சிட்டுக்களின் உடலசைவை ரசித்தபடி அமர்ந்திருப்பேன். எதிரில்
ஊமத்தம் பூக்களின் பிம்பங்கள் அசைய, அசைந்து கொடுத்துக் கொண்டிருக்கும்
நீர்நிலை. அதில் முங்கிக் காணாமல் போய் வேறொரு இடத்தில் தலை தூக்கும்
கானாங்கோழிகளின் கண்ணாமூச்சி விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நான்
அதைக் கண்களால் தொடர்ந்து கொண்டேயிருப்பேன். ஒரு சச்சதுரமான சிறுகல்லை
எடுத்து குளத்து நீரில் விட்டெறிந்தால், தண்ணீரில் பட்டு மேலெழும்பி,
மீண்டும் தண்ணீரில் உராய்ந்து, மேலெழும்பி... ஒரு சக்கர வளையத்தைத்
தண்ணீருக்குள் ஏற்படுத்திக் கொண்டே போகும் அழகான காட்சி, கண்கொள்ளாக்
காட்சி அது.
அப்போதுதான் அந்தச் சிறுவனைக் கவனித்தேன். எனக்கு
வலப்புறத்தில் சில அடிகள் தள்ளி குளத்தைப் பார்த்துக் கொண்டு
நின்றிருந்தான். அவனது முகத்தில் அந்திச்சூரியனின் மங்கும் கதிர்கள்
இறங்கிக் கொண்டிருந்தன. தோளில் தொங்கிக் கொண்டிருந்த பள்ளிப் புத்தகங்கள்
நிரம்பிய பை, அரசுப் பள்ளி மாணவன் என்று அடையாளப்படுத்தியது. குளத்தையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வெகுநேரமாக ஆடாமல் அசையாமல் எதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்?
ஆர்வத்துடன் மெதுவாக எழுந்து அவனருகில் சென்று நோட்டம்
விட்டேன். நான் அருகில் வந்து நிற்பதை இன்னும் உணரவில்லை அவன். தன்
கையிலிருந்த ஜ்யோமெட்ரி பாக்ஸை (தமிழ்க் கல்வி ஆர்வலர்களே இதற்குத் தமிழில்
என்ன பெயர்? வடிவியல் கருவிப் பெட்டி?) தண்ணீரில் பிம்பம் படுமாறு மேலும்
கீழும் ஆட்டினான். நீரில் அசைந்த அந்தப் பெட்டியின் பிம்பம் அவனுக்குள் ஏதோ
ஒருபெரிய அற்புதத்தை இனம் காட்டியிருக்க வேண்டும் என்று என்னை யூகிக்க
வைப்பது போல அவன் முகத்தில் சலனங்கள் அலையடித்தன.
மெதுவாக அந்தப் பெட்டியைத் திறந்து, சிறியதாயிருந்த
அளவுகோலை எடுத்து, அதை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப்
பார்த்தவன், எதிரிலிருந்த குளத்துநீரை நோக்கி வீசினான். சரேலென்று காற்றைக்
கிழித்துக் கொண்டு போன அந்த அடிக்கோல், தண்ணீரில் பட்டு அசைந்து அசைந்து
ஒரு மீனின் லாவகத்துடன் எம்பி நீருக்குள் கீழிறங்கியது. அது அடிஆழம்
போகும்வரை அதன் நீச்சலை வெகுவாக ரசித்துப் பார்த்தான்.
சில நிமிஷங்கள் கழித்து, பாகைமானியை பெட்டியிலிருந்து
எடுத்தான். அதைக் கையில் வாகாக வைத்து ஆட்டி, லாவகமாய் வீசியெறிந்தான். ஒரு
சக்கரத்தைப் போல காற்றைக் கிழித்துக் கொண்டு நீர்நிலையில் பாய்ந்தது அது.
அவன் அந்தக் காட்சியை பூரணமாய் அனுபவித்தான். தண்ணீருக்குள் அலைமேடுகளை
எழுப்பியபடி அலையோட்டத்துடன் நீருக்குள் நீச்சல்போட்டது அது.
அதன்பிறகு, முக்கோண விட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து
வீசினான். அவைகளும் அசைந்து அசைந்து நீருக்குள் மூழ்கும் காட்சியை ஆனந்தமாக
ரசித்தான். அடுத்து, கவராயத்தை எடுத்து வீசினால் அதுகூட அழகான தட்டாம்
பூச்சியின் பாய்ச்சலில் நளினமான அசைவுடன் நீந்திச்செல்லும் அழகியல்.
இறுதியாக, காலியாகியிருந்த அந்தப் பெட்டியைத்
திருப்பித் திருப்பிப் பார்த்தான். அவனது கண்களில் ஆசையும் நிராசையும்
மின்னியதை உணர்ந்தேன். பட்டென்று அதை மூடி, தண்ணீரை நோக்கி விட்டெறிந்தான்.
ஒரு சிறு பதட்டம் அந்த இடத்தில் நிலவியது. இறுதிக் காட்சியைக் கவனிக்கும்
தன்மையுடன் அந்தப் பதட்டத்துடன் இயைந்து போய் நின்றான். பெட்டி அசைந்து
அசைந்து நீச்சலிட்டபடி நீருக்குள் முங்கியது.
நான் அந்தக் காட்சிகளை மிகமிகமிக, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன்
மெதுவாக அந்த ரசிப்பிலிருந்து விலகி, சடக்கெனத் திரும்பி நடக்க
யத்தனித்தபோதுதான், அவனுக்குப் பின்புறமாக நான் நின்று கொண்டிருந்ததைக்
கவனித்தான். நான் இத்தனை நேரமும் அருகாமையிலேயே இருந்து அவன் செய்த
செய்கைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்னும் நினைப்பு
அவனுக்குள் ஏற்பட்டதும் ஒரு வெட்கம் கலந்த பதட்டம் ஏற்பட்டது. மலங்க மலங்க
முழித்தான்.
நானும் சுயப்ரக்ஞைக்கு வந்தேன். அவனது தோளில்
கைபோட்டவாறு அவனை வேலாமரத்தின் குடைநிழலுக்கு அழைத்துப் போனேன். சாவகாசமாய்
சாய்ந்து கொண்டு மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
எங்களூர்த்
தம்பிதான் அவன். “அந்தப் பெட்டியைக் குளத்தில் வீசியெறிந்த காட்சி மிக
நன்றாக இருந்தது” என்றேன். சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தாலும் பதில் ஏதும்
சொல்லாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான். நான் மேற்கொண்டு அந்த விஷயத்தைக்
கேட்காமல் சுற்றி வளைத்து அவனை அதே புள்ளிக்கு அழைத்து வந்தேன்.
எங்களூர் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்
மாணவன் அந்தத் தங்கசாமி. கணிதப்பாடம் சம்பந்தமாக சிறந்த மாணவர்களைத் தேர்வு
செய்வதற்காக, அவனது பள்ளியில் எல்லா உயர் வகுப்புகளுக்குமான சிறப்புத்
தேர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் கலந்து கொள்ள கணிதவியல்
ஆசிரியரிடம் மாணவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கணிதவியல் சம்பந்தமானதால், கலந்து கொள்கிற மாணவர்கள் வடிவியல் கருவிப்
பெட்டி வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தெரிவிக்கிறார். நம் ஆளிடம்
பெட்டி இல்லை. ஒவ்வொரு முறையும் தனது சக மாணவனிடம் இரவல் வாங்கிப்
பாடங்களைச் செய்வான். அதைக் கணித ஆசிரியர் ஒத்துக் கொள்ளவில்லை.
“சரி ஐயா, தேர்வு தேதிக்குள் பெட்டியுடன் வந்து கலந்து கொள்கிறேன்” என்று தெரிவிக்கிறான்.
வீட்டுக்கு
வந்தாலோ, கடும் பொருளாதார நெருக்கடி. அவனது பெற்றோர் இன்னும் ஒருவாரத்தில்
வாங்கித் தந்து விடுவதாக சால்ஜாப்பு சொல்கின்றனர்.
நாட்கள் நகர நகர அவனுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.
அத்தருணத்தில்,
சக நண்பனொருவன், ‘நமது குளத்தில் மீன்பிடித்து விற்கலாம் என்றும்,
அதில்வரும் பணத்தை வைத்து பெட்டி வாங்கிக் கொள்ளலாம்’ என்றும் யோசனை
தெரிவிக்கிறான். கூடவே தனது மீன்பிடி தூண்டிலையும் தந்துதவுகிறான்.
அடுத்த நாள் பள்ளிக்கு விடுமுறை போட்டு விட்டு,
காலையிலேயே நாய்க்கர் வாழைத் தோட்டத்தில் போய் மண்புழுக்களைத் தோண்டி
எடுத்துக் கொண்டு, மீன் பிடிக்கப் போகிறான் அவன். பெரிய மீன்கள்
தூண்டிலைத் துண்டித்து விடும் என்பதால், சிறியமீன்கள் அதிகம் உலாவருகின்ற
கிழக்குப் பக்கமாக மீன் பிடிக்கும் நுட்பம் சொல்லி அனுப்பிய நண்பனின்
ஆலோசனைக்கேற்ப சிறு சிறு மீன்களாகப் பிடிக்கிறான்.
ஒவ்வொரு முறையும் தூண்டிலில் மீன் மாட்டும் போதெல்லாம்
ஆனந்தமாகவும் இருக்கும், அதேசமயம் மீன் துள்ளிக் குதித்து
உயிர்ச்சுவாசத்திற்கு ஏங்கும்போது பாவமாகவும் இருக்கும். ஒருவழியாக அந்தி
சாயும் நேரத்திற்குள்ளாக மீன்களைப் பிடித்து கவுந்தப்பாடி கடைவீதியில்
கொண்டு வந்து விற்று, பெட்டி வாங்கி விடுகிறான்.
விடியும் வரை தேர்வு குறித்து, விதவிதமான கனவுகள் கண்டு, அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் போனால்...
தேர்வை நேற்றைக்கே முடித்து விட்டார்களாம்.
வெறுத்துப்
போய்விட்டது அவனுக்கு. மேற்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வகுப்பறையில் நடத்திய பாடங்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. மனதில் ஒரு
பெரும் சுமையாக இருப்பது போலவே இருந்திருக்கிறது. பள்ளிக்கூடம் விட்ட உடன்
வீட்டிற்குக் கூடப் போகாமல் நேராகக் குளத்தங்கரைக்கு வந்து விட்டான்.
அந்தப் பெட்டியையும், கருவிகளையும் ஒவ்வொன்றாக
வீசியெறிய எறிய, அவை மீன்களைப் போல நீச்சல் போட்டுக் கொண்டே நீருக்குள்
போகும் அந்தக் காட்சி, அர்த்த பூர்வமான ஒரு சடங்கைப் போல அவனுக்குள்
இறங்கியிருக்கிறது. துயரத்தை ஆனந்தமாக மாற்றும் அந்த அழகியலை இதமாக
ரசித்தான். இப்போது மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரம்
இறங்கிவிட்டதாய் உணர்ந்தான்.
அவன் இந்தக் காட்சிகளைச் சொல்லச் சொல்ல, அவனது முகத்தில் மீனத்தின் பரவசம் அலையடித்தது.
அன்புள்ள மக்மல்பஃப், எங்கள் நாட்டிலும் ஈரானிய சினிமா இருக்கிறது. இயக்குனர்கள் தான் இல்லை.