ஞாயிறு, 24 மே, 2020

ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்


குவளைக் கண்ணன்
”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.
கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”
மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.
பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை athmanamஉமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.
'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.
'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.
குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?
'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.
இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.
முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.
இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.
ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:
முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.
மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.
தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.
இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:
'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.
'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.
இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.
எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.
மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.
ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.
மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.
'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:
தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?
06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.
('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)
ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு வெளியீடு
விலை ரூ. 150/
நன்றி: காலச்சுவடு இதழ்
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
Unnatham Logo

நிஜமும் பொய்யும்

இமையம்

“நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்”

“நீ விசயத்தை பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும் எயிதிப்புட்டு படிச்சிக் காட்டுறன். ஏதாச்சும் வுட்டுப் போயிருந்தா படிச்சிக் காட்டும்போது சொல்லு, சேத்து எயிதிப்புடுறன்”

Woman “இல்லெ தம்பி. மொதல்லெ ‘என்னோட ஆச மவனுக்கு, ஒன்னோட அம்மா எயிதிக்கொண்டது, நான் ஊருலே நல்ல சொவமா இருக்கன். அங்கே ஒன்னோட சொவம் எப்பிடி, ஒடம்பு எப்பிடி’ன்னு எயிதுவ இல்லெ. அதெ எயிதிப்புடு. நான் பொறத்தாலெ சொல்றன்” எதிரில் பித்துக்குளி மாதிரி உட்கார்ந்திருந்த மொட்டையம்மாளை வெறுப்புடன் பார்த்த சேகர் கீழே கிடந்த காலண்டர் அட்டையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அதன்மீது நான்கு பக்கம் கொண்ட வெள்ளை முழு காகிதத்தை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தான். ஆர்வம் பொங்க அவன் எழுதுவதையே அவள் பார்த்துகொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி உண்டாயிற்று. இரண்டு வரிகளை எழுதி முடித்த சேகர் தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே அசட்டைத்தனத்துடன் “சொல்லு” என்றான்.

“நான் சொல்லுறத செத்தெ ஒண்ணு வுடாம எயிது சாமி. ஒனக்குப் புண்ணியமா இருக்கும்”

“சொல்லு”

“நடுப்புற நடுப்புற வுட்டுட்டு வுட்டுவுட்டு எயிதிபுடாத”

“இதனாலதான் மனுசனுக்கு வேகோலம் வரது. எத்தனெவாட்டி ஒனக்கு நான் லெட்டர் எயிதிருப்பன். ஒரு வாட்டியாச்சும் அப்பிடி செஞ்சியிருக்கனா?”

“கோவிச்சுக்காதடா தம்பி. வுட்டுப் போயிடக்கூடாது பாரு, அதுக்காவச் சொன்னேன். ஒன்னெ குத்தம் சொல்லலெ”

“சீக்கிரம் சொல்லு, கட்டு எடுத்துடுவாங்க. ‘திருநாவுச் செலவுக்கு ஐநூறு’ கேட்டதயும் மறந்துப்புடாத”

“என்னாத்தை சொல்லுறது? மனங்கெட்டகேடு, நான் சொல்லுறன். நான் நல்ல சொவமா இருக்கன். நீ எப்பிடி இருக்கன்னு எனக்கு ஒரு சேதி பாதியும் தெரியலெ. மெட்ராசியிலெ இருந்து வந்த நம்ம ஊரு ஆறுவனும் ரெண்டு மூணு மாசமா ஒன்னெ கண்ணால கண்டதில்லன்னு சொல்றாங்க. அதனால எனக்கு ராத்தூக்கமில்லெ. இப்பிடி இருக்கன் அப்பிடி இருக்கன்னு கூடமா எயிதக் கூடாது? அதிலியா காசி செலவாப்பூடும்? ஒங்கிட்டேயிருந்து ஒரு நமோதும் இல்லங்கிற கொறதான் எனக்கு. மத்தது ஒண்ணுமில்லெ” என்று சொன்ன மொம்டையம்மாள் எழுதாமல் உட்கார்ந்து கொண்டிருந்த சேகரை சந்தேகமாகப் பார்த்தாள். எதுவுமில்லை என்பதுபோல் சாதாரணமாக, “மேற்கொண்டு சொல்றதயும் சொல்லிப்புடு. மொத்தமா எயிதிப்புடுறன்”என்று சொன்னான். அதற்கு அவள் கெஞ்சுவதுமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு உடைந்துபோன குரலில் “தவறிப்போவும் தம்பி. செத்த சொல்லச் சொல்ல எயிதிப்புடன்” என்று சொல்லி கட்டாயப்படுத்த ஆரம்பித்ததும் சேகருக்கு வேறு வழியின்றி போனது. வேகவேகமாக இரண்டு மூன்று வரிகளை எழுதிவிட்டு வெறுப்புடன் “அப்புறம்” என்று கேட்டான்.

“அப்பாவோட தெவசத்துக்கு நீ ஏன் வல்லெ. மகத்திலெ பொட்டச்சி அரிசி கொடுக்கக்கூடாது, நீதான் வரனும்ன்னு எத்தனவாட்டி ஒனக்கு எயிதிப் போட்டன். பெத்தவனுக்காக ஒன்னாலெ ஒரு நாளு மெனக்கிட முடியலெ. அம்மாம் பெரிய வேலெயா, நீ பாக்குற வேலெ, நாளக்கி நான் செத்தாலும் நீ இப்பிடித்தானெ செய்வ? நான் ஒரு ஆத்துமா இருந்ததாலெ இன்னிக்கி காரியம் முடிஞ்சிப் போச்சி. இல்லன்னா என்னா ஆவும்? மகத்திலெ அரிசி கொடுக்கிறது, பாப்பான்கிட்டெ நம்ப கருமத்தெ தொலக்கத்தான். இதுகூட தெரியாம என்னா படுப்பு படிச்செ? இதுக்கு மெட்ராசியிலெ வேற வேலெ பாக்குறவன்” என்று சொல்லிவிட்டு சேகர் முகத்தைப் பார்த்தாள். அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எழுதி முடிக்கும்வரை பேசாமல் இருந்துவிட்டு, அவன் எழுதி முடித்தது தெரிந்ததும் தானாகவே சொல்ல ஆரம்பித்தாள்.

“நேத்துத்தான் நம்ப ஊரு சாமிக்கி காப்புக் கட்டுனாங்க. முடிஞ்சா நாலு ஐஞ்சி நாளு இருக்கிறமாரி வா. முடியாட்டி தேர் போடுற அன்னிக்காச்சும் வா. ஊருலெ தேரும் திருநாளுமா இருக்கிறப்ப, சொந்தம் பந்தமின்னு மக்கெ மனுச ஒண்ணா கூடுற நாளயிலே நீவல்லன்ன எம்மனசு என்னா பாடுபடும்? ஊருசனங்கதான் ஒனக்கு வாண்டாம். சாமிகூடமா வாண்டாம். ஊருலெ இருக்கிறவங்க எல்லாரும் சத்ராவிங்கதான். அதுக்காக ஊர வுட்டா ஓடிட முடியும்?” என்று சொன்னவள் சேகரை பார்த்தாள். அவன் எழுத ஆரம்பித்தான்.

“ஊட்டோட மேக்காலெ பக்க செவுரு சரிஞ்சிக்கிட்டு நிக்குது. முட்டுக்கயி கொடுத்திருக்கன். விட்டமும் லேசா மக்குனாப்லெ இருக்கு. பய காலத்து ஊடு. ஊட்ட மேஞ்சா தேவலாம். இந்த வருச கோட காத்துக்கு தாங்காது. நான் ஆம்பளயா, நாலு எடத்துக்கு ஓடி நாலுபேர கொண்டாந்து வேலெய முடிக்க. ஊட்டுலெ கைய வச்சா வல்லிசா ரெண்டாயிரமாவது புடிக்கும். நான் கெய்வி. என்னாலெ என்னா முடியும். ஆளு இல்லாதவன் பொயப்பு அர பொய்ப்புத்தான்” என்று சொன்னாள் மொட்டையம்மாள். எழுதிக்கொண்டிருந்த சேகர் கேட்டான்: “அப்பறம்?”

“காசிய மிச்சப்படுத்தறன்னு சொல்லி வவுத்த கட்டாத. புடிச்சா பாரு இல்லன்னா வந்துடு. வேலெ போனா செருப்பாச்சி. ஒப்பன், பாட்டனெல்லாம் காட்டு வேலெ செஞ்சி இந்த ஊருலெ பொயிக்கிலியா? செத்தா போயிட்டாங்க. வவுத்த காயப்போட்டு சம்பாரிச்சி என்னா செய்யப்போற? அப்பிடித்தான் மெத்த மாளி கட்டலாமின்னா அப்பிடிப்பட்ட மெத்த மாளி நம்பளுக்கு வாண்டாம். நல்லா சாப்புடு. வவுத்துக்கு வஞ்சண வைக்காதெ. ஒடம்ப எளக்க வுடாத. ஒடம்புதான் சொத்து. அது இருந்தா நாலு எடத்துக்கு ஓடிப்போயி பொயிச்சிக்கலாம். காசி பத்தலன்னா சொல்லு, இங்க இருக்கிற ரெண்டு பயிர் ஆட்டெயும் வித்து அனுப்புறன்.”

“சொல்ல மறந்துட்டன் பாரு. போன ஒரு மாசத்திலியே ஒண்ணு வுட்டு ஒண்ணுன்னு மூணு ஆடுவோ குட்டிப் போட்டிச்சி. அதுலெ மூணு கொறா, ரெண்டு கெடா. ஒரு ஆடு மட்டும் சாவு குட்டியாப்போச்சி. அதுவோதான் இப்ப என்னெ புள்ளிவுளாட்டம் சுத்திச் சுத்தி வருதுவோ. குடும்பத்தோட குல தெய்வத்துக்கு மொட்டப்போட்டு பூசப்போடுறன் ஒரு குட்டி கொடுன்னு ஒரு குடித்தெரு ஆளுவந்து கேட்டான். முடியாதுன்னுட்டன். எயிதிறியா தம்பி?”

“எயிதிகிட்டுத்தான் இருக்கன் சொல்லு”

“எம்மவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி நடக்கலியேன்னு சொல்லி நம்ப பொயனப்பாடி ஆண்டவர் கோவுலுக்கு ரெண்டு மூணு வரிசத்துக்கு மின்னாடி ஒரு கெடாவ நேந்து வுட்டன். அது இப்ப என்னடான்னா மாடாட்டம் வளந்துப்போயி நிக்குது. பாக்குற சனமெல்லாம் வித்தப்புடுன்னு சொல்லுதுவோ. நானு வாய்ப்பேச முடியாம கெடக்குறன். ஆட்டே கொண்டுபோயி கோவுல்லெ வுட்டுடலாமின்னு இருக்கிறன். நீ என்னா சொல்ற?”

சேகர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட மொட்டையம்மாள் “என்னா தம்பி என்னியே பாக்குற? நான் சொல்ற எல்லாம் ஊகமாக எயிதிறியா?” என்று லேசாக சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“எயிதிகிட்டுத்தான் வரன் மேலெ சொல்லு... நான் கேட்ட ஐநூறு எப்ப கெடக்கும்” என்றான் சேகர்.

“ஒனக்கு இல்லாமியா?” என்றவள் கசந்து போன குரலில் சொன்னாள், “ஒரு காச்ச தலவலின்னாகூட கேக்கறதக்கு நாதி பிராதி கெடயாது. தனி பொணமா கெடக்குறன். நான் இன்னிக்கி செத்தன்னா எம்பொணத்தோட தலமோட்டுலெ குந்தி ஆயிவறதுக்கு ஒரு ஆளு இல்லெ. பொட்டெ புள்ளையா இருந்தாலும் நான் செத்தாக்க ஐயோ என்னெ பெத்த தாயாரேன்னு சொல்லி மாரடிக்சிக்கிட்டு அயுவும். எனக்கு அந்த கொடுப்பன இல்லெ. தாலி கட்டிக்கிட்டு ஒங்கப்பன் காரன்கூட வந்ததிலிருந்து எனக்கு எந்த கொடுப்பனதான் இருந்துச்சு? அதுக்குத்தான் சொல்றன், என் மூச்சிருக்கவே ஒரு குட்டிக்கி தாலிய கட்டி கொண்டாந்துடு. ஒப்பன் பேர சொல்லலன்னாலும் ஒம் பேர சொல்லவாச்சும் ஒரு நாதி வாணாமா? எம்மாங்காலத்துக்கு இப்பிடி நாடு நாடா, தேசாந்திரம் ஓடிக்கிட்டே இருப்ப? ஒரு நாளக்காச்சும் ஊரு நாடுன்னு வந்து சேர வாணாமா? ஆடு திருடற, மாடு திருடற ஊரா இருந்தாலும் நம்பளுக்கின்னு நாலு மக்கெ மனுச இல்லாமியா போயிடுவாங்க? ஆதியிலெ நடந்ததியே நெனச்சிக்கிட்டிருந்தா முடியுமா? மருந்த மியிங்குறாப்ல எல்லாத்தயும் மியிங்கிப்புட்டு, மறந்துப்புட்டு போவனும். இல்லாட்டி நாளு ஓடாது.

ஊருன்னு இருந்தா, நாலு விதமாத்தான் இருக்கும் மின்னாலெ ஒண்ணு பின்னாலெ ஒண்ணு சொல்வாங்கதான் சனங்கின்னு இருந்தா இப்பிடித்தான். காது கேக்கல, கண்ணு பாக்கலென்னு நாமதான் ஒதுங்கி கால ஜீவனத்த ஓட்டிக்கிட்டுப் போவனும். யாரப் பார்த்தாலும் ஒங்களெப்போல உண்டான்னுட்டுப் போவனும். தண்ணீக்கிப்போன சாந்தி குட்டியோட சடய நீ புடிச்சி இயித்தன்னு சொல்லி நாலு குள்ளேறிப் பயலுவோ பஞ்சாயத்து கூட்டுனதுக்கு ஊரு என்னாப் பண்ணும்? ஊருலெ இருக்கிற நாலு நாதேறிவோ கட்டிவச்ச கங்காட்சியாலெ இன்னா பொயிதின்னு இல்லாம ராவோட ராவா ஊட்ட வுட்டுப்போன புள்ளெய ஒரு வரிசமா காணலியேன்னு எங்கட்டெ காத்தா பறக்குது. ஒரு வேளெக்கி மறுவேளெ சோத்த கண்டா ‘ஆ’ன்னு அமுட்டிக்கிட்டு வருது. ராத்திரியிலெ கண்ணெமூட முடியலெ. ராவும் பவலும் ஒங்கவலெதான் எனக்கு. புள்ளெ இந்நாரம் எங்கெ நிக்குதோ, சோறுதண்ணீ குடிச்சிச்சோ இல்லியோன்னு எங்கொல பதறிப்போவுது. நீ என்னெப் பத்தி ஒண்ணும் நெனக்காத. காடு வா வாங்குது, ஊடு போ போங்குது. இனிமே என்னா கெடக்கு? இருந்த முட்டும் இருந்தோம் வேளெவந்தா போவ வேண்டியதுதானெ. முடியாது இன்னா முடியுமா? காய பூவ தின்னு இனுமே எத்தன காலத்துக்கு சம்பத்தா வாயிந்திடப்போறன். அதனால என்னெ நெனச்சிக்கிட்டு நீ மனச தளரவுடாத”

மொட்டையம்மாள் பேசுவதை நிறுத்திவிட்டு தலையைக் குனிந்து கொண்டு சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தாள். சேகர் எழுதுகிறானா இல்லையா என்றுகூட அவள் பார்க்கவில்லை. “அப்பறம்... அப்பறம்” என்று சேகர் கேட்ட பிறகுதான் தலையைத் தூக்கிப் பார்த்தாள். முந்தானையால் கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு கம்மலான குரலில் சொன்னாள்.

“செத்துப்போன ஒப்பன்காரன் நாள் தவறாம எஞ்சொப்பனத்திலெ வந்துட்டு வந்திட்டுப் போறான். செத்தவங்க சொப்பனத்திலெ வரது குடும்பத்துக்கு நல்லதில்லெ. குடும்பத்துக்கு ஆவாது. குடும்பம் விருத்திக்கி வராது. நம் குடும்பதிலெ என்னா இருக்கு, யார் இருக்கான்னு சொல்லி நீ சிரிக்காத. நான் கெய்வி. நான் சுடுகாட்டுக்குப் போவலாம். ஒன்னெ நெனச்சாத்தான் எம்மனசு ஆறமாட்டங்குது. அதனால் சட்டுசடுக்குன்னு ஒரு குட்டியப் பார்த்து முடிச்சிடலாமின்னு இருக்கன். ஒனக்குன்னு ஒருத்தி வந்துட்டா எங்கவல வுட்டுடும். எங்கட்ட சீக்கிரமா மசானக்கரயிலெ வெந்துடும். மனக்கொறயோட ஆவியா வலயாது. எனக்கு என்னா இருக்கு? ஆனமுட்டும் பாக்குறன், ஆவாட்டி சாவறன். ஒரு கவலயுமில்லெ. பாலு குடிக்கிற புள்ளெய வுட்டுட்டு சாவறமேன்னு கவலயா, இல்லெ நண்டும் சிண்டுமா இருக்கிற புள்ளிவுளெ வுட்டுட்டு சாவறனேன்னு கவலயா? ஒண்ணும்கெடயாது. சாவு வல்லியேங்கிற கவலதான். அது ஒண்ணுதான் மனக்கொறயா இருக்கு... என்ன, எயிதிகிட்டு வரியா தம்பி”

“பின்னே, கொஞ்சம் பொறுமயா சொல்லு”

“எம்மனசுல இருக்கிற கொறயெல்லாம் சொன்னா எயிதுறதுக்கு இந்தமாரி ரெண்டு மாட்டு வண்டி காயிதம் பத்தாது. என்னாப் பண்றது? சரி நீ எயிது.”

“எம்மனசுல ஒரு கோரிக்கப் பண்ணிக்கிட்டு இருக்கன். அது சரி வந்தா சொல்லு, இல்லன்னா வுட்டுடு. நம்ப ஊருலெ இருக்கிறானே கஞ்சிகாச்சி, அவனோட பெரிய மவன் மூக்கன் இருக்கானில்லே, அவனுக்கு நாலும் பொட்டெ. அதுலெ மூணு குட்டிக்கி கண்ணாலமாயிப் போயிட்டாலுவ, கடேசி குட்டி இருக்கிறா, அவப்பேரு என்னா தம்பி?, ம், வனமயிலு. பாக்குறதுக்கு வள்ளமாட்டம் இருந்தாலும் பதக்கமாட்டம் இருப்பா. நம்ப ஊருலெ அவ ஒருத்தித்தான் எடுப்பா கண்ணுக்குப் பொருத்தமா இருக்கிறா. வெகு நாளா மனசிலெ ஆச இருந்தாலும் போன எட்டாம் நாளுதான் கேட்டன். ஆட்டுக்கு தல ஒடிக்க வந்தவகிட்டெ ‘சம்மதமாடி’ன்னு நேராவே கேட்டன். படிச்சவரு. மெட்ராசிலெ வேலெ பாக்குறவருக்கு, கலவெட்டுற, கரும்பு கட்டு தூக்குற என்னெயெல்லாம் புடிக்குமா?ன்னு திலுப்பிக் கேட்டுப்புட்டா. என்னாலெ வதுலு பேச முடியலெ. அவ மனசிலயும் ஆச இருக்குமாட்டம் இருக்கு. அவ ருதுவான சாதகத்தையும் ஒன்னோட ஜாதகத்தயும் போட்டுப் பாத்தன். இந்த மாரி சாதகப் பொருத்தம் நூத்திலெ ஒண்ணுதான் அமயுமின்னு அய்யரு அடிச்சிச் சொல்றான். எல்லாப் பொருத்தத்தயும் விட மொக பொருத்தம் இருந்தா சரிதான், மொக வாட்டமான குட்டிதான் அவ.”

“உள்ளூர்ன்னா பாடுனாலும் பேசுனாலும் எடுத்துவச்சி பாக்கும். நான் நாளக்கி செத்தா நாலு சனம் கூட்டமா வந்து எம்பொணத்தெ எடுத்துப்போடும். இந்த ஊருலெ நம்பிளுக்குன்னு நாலு சனம் வாணாமா? பெரிய கூட்டமுள்ள குடும்பம் அது. மேற்க்கால தெருவே அவ கூட்டம்தான். காசி ஆப்புடுதின்னு பட்டணத்தோட போயிட முடியுமா? பட்டணத்துக்காரனுவோ பகரா வெள்ளச் சட்டத்தான் போட்டிருப்பானுவோ. நெயலு வாட்டத்திலே குந்தி இருக்கிறதாலெ பொட்டச்சிவுலும் கொஞ்சம் வெளுப்பாத்தான் இருப்பாலுவோ. மத்தது ஒண்ணுமில்லெ. ரெண்டு நாளக்கி ஆடுவோகூட நடந்தாளுவோன்னா கூறமேலெ காயப்போட்ட கருவாடுமாரி ஆயிப்போயிடுவாளுவோ. நான் சொல்லுறது நெசம்தான். வெளுத்தத் தோளுக்காகப் பொண்ணு கட்டெ முடியுமா? காசி பணம் என்னா செய்யும்? சனங்களெ சம்பாரிக்கிறதுதான் கஷ்டம். நாளக்கி நான் செத்தா காசி பணமா வந்து மாரடிச்சி அயிவப்போவுது? உத்தெ மனுசாள்தான் ரெண்டு சொட்டு கண்ணு தண்ணீவுடும். காசிப் பணம் நம்பளுக்கு வாணாம். காசிப்பணத்தப் பாத்தா நான் ஒங்கப்பனுக்கு புள்ளெ பெத்தன்? காசி பணம் இருந்தா ஊருமெச்ச துணி கட்டலாம், நாலு நகயப்போட்டுப் பாக்கலாம். வேறென்ன? எல்லா ஆட்டமும் இந்தட்டயிலெ உசுரு இருக்கமட்டும்தான? அப்புறம் இல்லியா?”

“காசிப்பணத்துக்கு ஆசப்பட்டா ஒன்னெ படிக்க வச்சன்? அப்பிடி இருந்தா அப்பறமென்ன? நீ எட்டாவதோ ஒம்பதாவதோ படிக்கிறப்ப ஒப்பன் காயிலாவுல கெடந்தப்ப, ஒங்க பெரியப்பன்காரன் வந்து இனிமே பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வாணாம். எங்கூட அனுப்பு மோளம் கத்துக்கட்டும். சாவு, கண்ணாலமின்னு போய் ரெண்டு தட்டுத்தட்டுனா ரெண்டு காசி வரும்ன்னு சொல்லி ஒங்கையப் புடிச்சி அயிச்சிக்கிட்டுப்போனான். ஒப்பன்காரன் மரமாட்டம் பாத்துக்கிட்டு நின்னான். அண்ணங்கார்னெ எதுத்துப்பேச அவனுக்கு வாய் வல்லெ. ‘என்னடா இது, நம்ப வச்சியிருக்கிறதே ஒரு புள்ளெ, அதெயும் மோளமடிக்க கூப்புட்டுக்கிட்டுப்போறன்னு போறானேன்’னு சொல்லி, பாதி தெருவுக்கு ஓட்டமா ஓடிப்போயி ஒங்க பெரியப்பன்காரன் கால்ல வியிந்து கும்புட்டு, ‘எம்புள்ளெய வுட்டுடு, அது செத்தாலும் சாவட்டும், இந்த வயிசியிலே ஒயச்சி திங்க வாணாம், அதிலயும் சாவு மோளமடிச்சி திங்க வாணாம்ன்னு சொல்லி’ அயிதன். என்னெ எட்டி ஒதச்சிப்புட்டு எப்பிடியாச்சும் போடின்னு சொல்லிப்புட்டுப் போனான். அப்ப நான் ஒங்கால்ல வியிந்து கும்புட்டு பள்ளிக்கூடத்துக்குப் போ சாமின்னு கும்புட்டன்.

மத்த சனங்கமாரி நான் ஒன்னெ அதெ செய், இதெ செய், மாடு மேய்க்க, ஆடு மேய்க்கப் போன்னு சொன்னது கெடயாது. அதெல்லாம் ஒனக்கு நெனவுல இருக்கோ இல்லியோ. என்னால முடியுமா? பெத்தவளாச்சே”என்று சொல்லும்போதே மொட்டையம்மாளுக்கு அழுகை வந்துவிட்டது. முகத்தை கவிழ்த்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு குலுங்கியது. சேகர் எழுதுவதை நிறுத்திவிட்டு அழுது கொண்டிருந்தவளையே பார்த்தவாறு இருந்தவனுக்கு கொஞ்ச நேரத்திற்கு மேல் பொறுமை இல்லை. “அப்பறஞ் சொல்லு” என்று சேகர் முறைத்தான். அதன்பிறகுதான் முகத்தை நிமிர்த்துக் கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் சொல்றன்ங்கிறதுக்காக நீ ஒருத்தியயும் கட்டெ வாணாம். எனக்கு இவளத்தான் புடிச்சியிருக்குன்னு சொல்லி நீ ஒரு நரிகுறத்திய கொண்டாந்தாலும் எனக்கு பரிபூரண சம்மதம்தான். எனக்கென்னா? நானா அவகூட குடும்பம் நடத்தப்போறன்? நான் கண்ணெ மூடிட்டப் பின்னாலெ இந்த ஊடு இருளடஞ்சி கெடக்கக் கூடாது. அதத்தான் ஒங்கிட்டெ வேண்டுறன். நல்லது நடந்துச்சோ கெட்டது நடந்துச்சோ எப்பிடியோ எங்காலம் ஓடிப்போயிடிச்சி. இனி ஒங்காலம்தான் எப்பிடியோ எங்காலமா இருந்தா ஒரு கை புடி சோள நொய்யும் ரெண்டு கொத்து முருங்க தவயும் இருந்தாபோதும். ஒரு நாள் பொயிது ஓடிடும். இன்னிக்கி அப்பிடியா?” என்று சொன்னவள் நிராசையுடன் சேகரிடம் கேட்டாள்: “என்னா தம்பி நாலே நாலு வரிதான் எயிதிருக்க? நான் சொன்னத எல்லாத்தயும் எயிதிலியா?”

“நீ சொன்னதுல ஒண்ணுகூட வுடலெ. வேணுமின்னா படிச்சிக்காட்டுட்டா” என்று சட்டென்று கேட்டதும் “படி” என்று சொல்லத்தான் நினைத்தாள். என்மேல் நம்பிக்கை இல்லையா என்று கேட்டு பாதியிலேயே போட்டுவிட்டு போய்விட்டால் என்ன செய்வதென்ற கவலையில் லேசாக பசப்புச் சிரிப்பு சிரித்து, “ஒம்பேர்ல நம்பிக்க இல்லாமியா? ...இம்புட்டு நேரத்துக்கும் நாலே நாலு வரி எயிதிருக்கியே, கனமா இல்லியேன்னு கேட்டன்” என்று சொல்லி பசப்பினாள்.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு. கடேசிலே படிச்சிக்காட்டுறன். மேலெ சொல்லு” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுதுவதற்கு தயாராக இருந்தான்.

“எந்த எடத்திலெ வுட்டன்?” என்று மொட்டையம்மாள் கேட்டதும், “வனமயில் கண்ணாலம் கட்டுறதப்பத்தி” என்று சேகர் எடுத்துக் கொடுத்தான். அவன் சொன்னதை காதில் வாங்காதவள் போல உட்கார்ந்திருந்தவள் திடீரென்று நினைவுக்கு வந்ததை சொல்வது மாதிரி சொன்னாள்.

“தம்பி ஒன்னோட பேர் நாமத்துக்கு பாத்தன். இன்னம் மூணு மாசத்துக்குள்ளார வெரய செலவு வரும்ன்னு இருக்காம். அதோடவும் நாடு வுட்டு நாடு போவனும்ன்னும் இருக்காம். கேடு காலம் வந்தா மணியடிச்சிக்கிட்டு வராது. போற வர எடத்திலெ வாய் பதனமா கை பதனமா இரு. காரு ரயிலு ஏறயிலெ பாத்து ஏறு பாத்து எறங்கு. ஒனக்கு ஒண்ணு ஆச்சின்னா அவ்வளவுதான். என் உசுரு தங்காது. ராவும் பவலும் ஒங்கவலதான் எனக்கு. ஒங்கூட பொறந்ததெல்லாம் உசுரோட இருந்திருந்தா எனக்கு இம்மாம் மனக்கவல இருக்காது. ஒங்கூட பொறந்தது மொத்தம் ஆறுபுள்ளிவோ. மொத ரெண்டும் செத்து செத்து பொறந்துச்சி. சாவு புள்ளெயா பெக்குறன்னு சொல்லி என் மாமியாக்காரி அதாம் ஒப்பன பெத்த பாட்டியா என்னெ ஒதுக்கி வச்சிட்டா. ஒப்பன் ஊட்டு சனங்களும் எங்கிட்டெ மொவம் கொடுத்து பேசாதுவோ. அந்தக் கெய்வி அம்மாம் கட்டுமானம் பண்ணி வச்சியிருந்தா. மூணாவதா நீ பொறந்த. புள்ளெ பெத்து கிடந்தவள என்னா ஏதுன்னு யாரும் வந்து எட்டிப் பாக்கலெ. நானேதான் பச்ச ஒடம்போட காயம் அரச்சி தின்னன். அப்பறம் பொண்ணு ரெண்டு ஆணு ஒண்ணு பொறந்துச்சி. வரிசியா புள்ளிவோ பொறந்தாலும் ஒண்ணும் நெலச்சி தரிச்சி வாயல. அவசர அவசரமின்னு ஆறுமாசம் ஒரு வருசமின்னு ஒவ்வொன்னும் மண்ணுக்குள்ளாரப் போயிடிச்சிவோ. எல்லாத்தயும் வாரி கொடுத்துட்டன். ஒப்பனும் போயி சேந்துட்டான். இப்ப நீ ஒருத்தன்தான் இருக்க. நீதான் எனக்கு குல குருவா இருக்க. அப்பிடித்தான் நான் எண்ணிக்கிட்டிருக்கன். நீயும் எனக்குக் காம்ப காட்டிப்புடாத”

எழுதிக்கொண்டே, “இன்னம் இருக்கா?”என்று சேகர் கேட்டான். அவன் கேட்ட விதத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்கள் கலங்க உடைந்துபோன குரலில் மொட்டையம்மாள் தரையைப் பார்த்தவாறு சொன்னாள்.

“ஒண்ணே ஒண்ணுதான் எம்மனசிலெ இருக்கு. நான் செத்தா எம்பொணத்த ஊரு மெச்ச எடுக்கனும். தேர் பாடெ கட்டு. ஒப்பனுக்கு கட்டுனாப்ல. உள்ளூர் பற மோளத்தோட பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ கொல்லு காசி பிரிக்காயிலெ கை கூசாம தோட்டி தொம்பன், வண்ணான் கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக்கூடாது. கேட்டெ காசிய கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரூ எடுக்காத. நம்ப ஊட்டுலெ எஞ்சாவுதான் கடேசி சாவு. அதனால வானவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்கு கர்ணமோட்சம் கூத்து வைக்காம வுட்டுப்புடாத. இதுக்கெல்லாம் நீ கையறுத்துக்க வேண்டியதில்லெ. ரெண்டு பயிர் ஆடு இருக்கு. இன்னிக்கி வித்தாக்கூட இருவதனாயிரம் முப்பதனாயிரம் போவும். அப்பப்ப ஆடு வித்தது, குட்டி வித்தது, சாவு ஆடு வித்ததுன்னு வந்த காசியில, ரெண்டு ஊட்டுக்குண்டான சாமான வாங்கிவச்சிருக்கன். ஒரு கூண்டு கோயி இருக்கு. அதெ வித்து காசாக்கிப்புடு. வாரத்துக்கு ஆறு பன்னிக்குட்டிவுளெ புடிச்சி வுட்டிருக்கன். அதுவுளயும் காசாக்கிப்புடு. அதோட வடக்கு தெரு காசியம்மா வல்லியா மூணாயிரம் தரனும். வாங்கி ரெண்டு வருசமாச்சி. பாண்டு பத்திரமின்னு ஒண்ணுமில்லெ. பக்கத்து ஊட்டு வேலாயி மவ வயசிக்கு வந்தப்ப நானூரு வாங்குனா. கேட்டா ‘இந்தா இந்தா’ங்கிறா. காசி கையிக்கு வரல. இந்தமாரி இன்னம் ரெண்டு ஒருத்தர் தரனும். தோட்டி மவன் பெரிய பய கண்ணாலத்துக்கு ஒரு மரக்கா அரிசியும், ஒரு தூக்கு புளியும், ரெண்டு பரங்கி காயும் வச்சன். இப்பிடி ஊரு மூச்சூடும் செய்வின செஞ்சி வச்சிருக்கன். நாளக்கி நம்பப் புள்ளெக்கி நாலு சனம் வரனுமே, செய்யனுமேன்னு, எல்லாத்தயும் ஊகமாக ஒரு சீட்டுலெ எயிதி வச்சியிருக்கன். யாரும் திலுப்பி செய்யலன்னா கேக்கனுமில்லெ. அதுக்காக நாளு கெயமயோட விகரமா எயிதிவச்சிருக்கன்”

“சீட்டு ஆவப்போவுது. சீக்கிரமா சொல்லு”

“ஒரு சீட்டுத்தான் கொண்டாந்தியா?”

“ஆமாம் ஆமாம்”

“அப்ப இதெ மட்டும் எயிதிப்புடு” என்று சொன்னவள் சந்தேகத்துடன் “இன்னம் ரவ எடந்தான் இருக்கா?” என்று கேட்டாள். ஆமாம் என்பதுபோல் சலிப்புடன் தலையை மட்டும் ஆட்டினான் சேகர்.

“ரெண்டே ரெண்டு வாத்ததான். எயிதிப்புடு” என்றவள் சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னாள்.

“அம்மா ஏதாச்சும் நெனச்சுக்குவான்னு பணம் காசி அனுப்பாத. சீல துணியும் வாணாம். நான் என்னெ எளங்குட்டியா புதுத்துணி கட்டிப்பாக்க, ஆசப்படெ. எனக்காக நீ ஒன் ஒயலெ செலவுப் பண்ணாத. ரத்த ஓட்டம் இருக்கமுட்டும் நானே பாத்துக்கிறன்” என்று சொன்ன மொட்டையம்மாள் சிறுபிள்ளைமாதிரி ஏக்கத்துடன் “இன்னம் ரவ எடமிருக்குமா?” என்று கேட்டாள். இல்லை என்பதற்கு சேகர் உதட்டை மட்டுமே பிதுக்கிக் காட்டினான்.

சேகர் எழுதிக்கொண்டிருந்தான். அவன் எழுதுவதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மொட்டையம்மாள். அவன் எழுதி முடித்து காகிதத்தை மடித்து உரைக்குள் போடப்போனபோது ரொம்ப ஆவலாக, “செத்த படிச்சிக்காட்டன்” என்று கேட்டதற்கு எரிச்சல்பட்ட சேகர், “எல்லாம் சரியாத்தான் எயிதிருக்கு. மனுசனுக்கு வேற வேலெ இல்லியா?” என்று வெடுக்கென்று சொன்னவன், காகிதத்தை உறைக்குள்போட்டு ஒட்டி, விலாசம் எழுதினான். அப்போது மொட்டையம்மாளின் முகம் மாறிற்று. வெறுப்புடன் அவனைப் பார்த்து “என்னாத்தெ எல்லாத்தயும் எயிதினெ? நான் இங்க சொவம். நீ அங்க சொவமா? ஊருலெ திருனா போட்டிருக்கு. அவசியம் வா. ஒங்கிட்டெ நிறயா பேசணும். நேர்ல வா. எல்லாத்தயும் பேசிக்கலாமின்னு எயிதிருக்க. அதான? எனக்கு எல்லாமும் தெரியும்டா தம்பி” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து பிடுங்காத குறையாக கடித உரையை வாங்கிக்கொண்டாள். உண்மை வெளிப்பட்டுவிட்ட வெட்கத்தில் சேகர் ஒன்றும் சொல்லாமல் அவசரமாக எழுந்து வெளியே போனான்.
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...
About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com