ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

just for youi...

பொதுவாக என் வீட்டில் இரண்டு இட்லிகளுக்குத் தொட்டுக் கொள்ள குறைந்தது மூன்று வகைச் சட்னிகள் இருக்கும். அது போக பொடி, எண்ணெய், இலசுமணன் கடை வடை என்று சாதாரண நாளில் கூட ராஜபோக விருந்தாகவே இருக்கும். ஏதாவது விசேஷம் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்காக நான் ஏதோ பிறக்கும் போதே தங்கக் கரண்டிகளைச் சப்பிக் கொண்டு பிறந்தவனில்லை. என் அப்பாவின் சாப்பாட்டு ரசனை அத்தகையது. ஏன் இப்படி எடுத்தவுடன் எங்கள் வீட்டுச் சமையற்கட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். போகப் போக உங்களுக்குப் புரியதானே போகிறது .




இன்றோடு என் நாக்கு செத்து ஒரு வருடம் ஏழு மாதம் இருபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன. அட ஆமாங்க நான் நொய்டா வந்த நாளை வச்சுதான் சொல்றேன்.



இங்கு நொய்டாவுக்கு வந்ததும் அலுவலகம் சார்பாக வரவேற்பு நிகழ்சிகள், அதை ஒட்டி கார்பரேட் பயிற்சி வகுப்புகள் என்று முதல் வாரம் நொய்டாவைச் சுற்றிக் கொண்டிருந்தோம். அன்று அப்படி ஒரு வகுப்பிற்கு வர தாமதமாகிவிட்டதால் எனக்கு முன்னால் எல்லோரும் வந்து அமர்ந்திருக்கவே ஆண்கள் பக்கத்தில் இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். அதுவோ " வாங்க பழகலாம் " வகுப்பு. எங்களுக்கு அதைச் சொல்லித் தர வந்த நல்லவர் என்னை பெண்களுடன் சேர்ந்து உட்காரச் சொன்னார். மற்ற எல்லோருடைய வயிற்று எரிச்சலைக் கொட்டியவாறு அங்கு அமர்ந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் அவ்வளவு அழகு. முன்தினம் பார்த்தேனே பாட்டிற்கு முன் சூர்யா வர்ணிப்பாரே அப்படி ஒரு அழகு. அழகான பெண்களை பார்ப்பது எளிது. அவர்களுடன் பேசுவது கடினம். அதிலும் அருகில் அமர்ந்துவிட்டு அவர்களைப் பார்க்காதவாறு நடிப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. அது ஒரு குழு நடவடிக்கை என்பதால் அவர்களுடன் பேசியே ஆக வேண்டும். காலேஜில் நான் படிச்ச மெகானிகல் இன்ஜினீரிங்க்ல எக்ஸாம் ஹால்ல கூட பொண்ணுங்க பக்கம் உக்கார்ந்தது கிடையாது. என் அதிர்ஷ்டம் அத்தகையது. நல்ல வேளை அந்த பெண்ணே பேச்சை ஆரம்பித்தாள். ஊர்,பேர் கேட்டாள். சொன்னேன். நானும் கேட்டேன். அவளுடைய பெயர் தீபிகா. அழகான பெண்களின் பெயர் மறக்கிற அளவுக்கு முட்டாள் இல்லை நான். அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியாம்.



என்னை நொய்டாவில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டது போல் அவளை சென்னையில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டிருந்தார்கள் போல. அதனால் அவள் சென்னையைப் பற்றி விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தாள். காலையில் உண்ண என்ன கிடைக்கும் என்றாள். இட்லி, வடை, சாம்பார், தோசை, ஊத்தப்பம், பூரி என்று சரவண பவன் சர்வர் போல அடுக்கிக் கொண்டிருந்தேன். மதியம் ? சாதம், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, தயிர், மோர் என்று மறுபடியும் அடுக்கினேன். சப்பாத்தி கிடைக்காதா என்றாள். கிடைக்குமே. சாயும்கால வேலைகளிலும், இரவிலும் கிடைக்குமென்றேன். முகம் மலர்ந்தாள்.



இப்போ என்னோட டர்ன். இங்க காலையில் என்ன கிடைக்கும் என்றேன் ? ரொட்டி என்றாள். என் ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல் மதியம் என்றேன். ரொட்டி, தயிர், ஆலு (உருளைக் கிழங்கு ) என்றாள். நீங்கள் சாதமெல்லாம் சாப்பிட மாடீர்களா என்றேன். ஏன் இல்லை ? சாப்பிடுவோமே வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாள். எனக்கு கஜினியில் அசினை அடித்தது மாதிரி பின் மண்டையில் யாரோ என்னை அடிப்பது போன்று ட்ங்கென்று ஒரு ஒலி கேட்டது. இப்படி தாங்க ஆரம்பிச்சது இந்த ஊரின் சாப்பாட்டுக் கொடுமை.



என்னோட முதல் எதிரி இந்த உருளைக் கிழங்கு தாங்க. உருளைக் கிழங்கை ஒரு வேளை சாப்பிடலாம் இரண்டு வேளை சாப்பிடலாம். ஆனா அதையே மூணு வேளையும் முப்பது நாளும் சாப்பிடச் சொன்னா என்னங்க பண்றது. காலையில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு. மதியம் அதே உருளைக்கிழங்கை உள்ளே வைத்து சப்பாத்தி. இரவில் உருளைக்கிழங்குடன் கொஞ்சம் கோபி (காலி பிளவர்). இன்னும் இங்கு உருளைக்கிழங்கு ஜூஸ் கிடைக்காததுதான் மிச்சம்.



சரி ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று பார்த்தால், நம்மூரில் முக்குக்கு முக்கு வடை சுடுவது போல இங்கு சமோசாவும், ஜிலேபியும் சுடுவார்கள். நம் ஊர் சமோசாக்களில் எல்லாம் கொஞ்சமே என்று உருளைக் கிழங்கு இருக்கும். இங்கோ உருளைக் கிழங்கிற்கு இடையில் கொஞ்சமே என்று சமோசா ஒளிந்திருக்கும். ஏற்கனவே இங்கு வழங்கப்படும் டீ குறித்து கூறியிருக்கிறேன்.



இவ்வளவுதான் இவர்களின் வெரைட்டியா என்று கேட்டால், இல்லை. தலைப்பில் சொன்னது போல அண்டா பரோட்டா எனில் உருளைக் கிழங்கு இருந்த இடத்தில் முட்டையை வைத்து நிரப்பித் தருவார்கள். அவ்வளவு தான். இந்தியில் அண்டா என்றால் முட்டை என்று அர்த்தம்.



சரி இவர்களது உணவுகள் தான் நமக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் இவர்கள் உண்ணும் முறை கூட நமக்கு ஒத்து வருவதில்லை. எதைச் சாப்பிட்டாலும் கரண்டி(ஸ்பூன்) வைத்தே சாப்பிடுகிறார்கள். நாமும் அப்படியே சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சாதம் என்றால் ஏதோ முயற்சி செய்து ஸ்பூனில் சாப்பிட்டு விடலாம். ஆனால் நம்மூர் தோசையையும் அவ்வாறு சாப்பிட வேண்டும் என்று சொன்னால் என்ன செய்ய இயலும் மக்களே ? ( அவர்கள் தோசையையும் ஸ்பூனில் தான் சாப்பிடுகிறார்கள்). இங்கே டில்லியில் எனது அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் வட இந்தியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறார் என்ற போதும் அவர் சொல்லும் ஒரு குறை என்ன தெரியுமா? எங்க வீட்டுக்காரர் என்னை என் கையால சாப்பிட விட மாட்டிக்கிறார் என்பதே. அதுபோக இவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்கள். என் அக்காவிற்கோ தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்டபடியே இருக்கும். என்ன செய்வது அவரது கணவர் இல்லாத சமயங்களில் தரையில் உட்கார்ந்து ஒரு கட்டு கட்டுகிறார்.



அப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் அங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். " பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர் ". நான் மட்டும் என்ன விதிவிலக்கா?. இன்னும் எவ்வளோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் யாராவது தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வட இந்தியர் ஒருவர் இதைப் படிக்க நேரிட்டால் என்னை ஆள் வைத்து அடிக்க ஏற்பாடு செய்யலாம். அதனால் இத்துடன் என் சாப்பாட்டு புலம்பல்களை முடித்துக் கொள்கிறேன்.



பி.கு : இதே போன்று வட இந்தியாவில் இருந்து சென்னை வந்து ரொட்டி கிடைக்காமல் புலம்பும் ஜீவன்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.