திங்கள், 23 டிசம்பர், 2013
Sindhu thamizh..
சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை
•••
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.
இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
நன்றி : ஆர் பாலகிருஷ்ணன்
சனி, 24 ஆகஸ்ட், 2013
new..
|
|
Vittal Rao./ sramakrishnan
வாழ்வின் சில உன்னதங்கள்
பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், சட்டென எரிந்து விழுவதும் உண்டு,
புத்தகங்களில் அழகிய ஒவியங்கள் இருந்துவிட்டால் கட்டாயம் விலை அதிகமாகிவிடும், படமில்லாத நாவல்கள் என்றால் ஐந்தோ பத்தோ போதும் என வாங்கிக் கொள்வார்கள்,
நான் ஒரு முறை The Thief’s Journal என்ற ஜெனேயின் நூலை பிளாட்பாரக் கடையில் பார்த்தேன், கடைக்காரர் ஐந்து ரூபாய் சொன்னார், அது அச்சில் இல்லாத ஒன்று, ஆனால் அதன் முக்கியத்துவத்தை கடைக்காரர் அறியவேயில்லை, நானாக அதற்கு 25 ரூபாய் தந்தேன், இது முக்கியமான புத்தகம் என்றும் கூறினேன்,
கடைக்காரர் சிரித்தபடியே அதுக்காக ஜாஸ்தி பணம் குடுக்கிறயா, என வாங்கிக் கொண்டார், இந்த ஒரு செய்கை அதன் பிறகு எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் நீயே விலை போட்டுக்குடு என கடைக்காரரைச் சொல்ல வைத்தது,
மழைக்காலம் தான் பழைய புத்தக்கடைக்காரர்களுக்கு சிரமமான மாதம், ஒருமுறை பழைய புத்தக கடைக்காரர் ஒருவர் மழைநாளில் எனது அறையை தேடிவந்து தம்பி ஒரு ஆயிர ரூபா கடனா வேணும், புத்தகம் வாங்கி கழிச்சிக்கோங்க என்றார்,
எனக்கு அவரது கஷ்டம் தெரியும் என்பதால் உடனே தந்து அனுப்பினேன், அடுத்தவாரம் அவர் கடைக்குப் போன போது, அவர் கடையை விற்றுவிட்டு போய்விட்டது தெரியவந்த்து,
என்னை ஏமாற்றிவிட்டரே என நினைத்துக் கொண்டு அவரைத்தேடினேன், ஆளே கண்ணில் படவில்லை, பின்பு அவரை மறந்து போனேன், நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு மதியம் என் அறைக்கு வந்து அவர் கதவைத் தட்டினார், கோபத்துடன் என்ன வேணும் என்று கேட்டேன்,
கடை நடத்தமுடியலை, வித்துட்டேன், அதான் உனக்குப் பணத்தைக் குடுக்க முடியலை, ஒரு வக்கீல் வீட்ல கொஞ்சம் பழைய புத்தகம் கிடைத்தது, உனக்காக கொண்டுவந்தேன் என்று இரண்டு கட்டுப் புத்தகங்க்ளை நீட்டினார், அதில் ஷேக்ஸ்பியர் முழுதொகுதி, மில்டன், கதே, டிக்கன்ஸ், வேர்ட்ஸ்வெர்த் என நாற்பது புத்தகங்களுக்கும் மேல் இருந்தன,
என் கையைப் பற்றியபடியே உன் கடனுக்கு இதை வட்டியா நினைச்சிக்கோ, கடனை திரும்ப குடுத்துருவேன் என்றார், நான் கலங்கிப்போனவனாக பரவாயில்லை, நான் தான் இந்த புத்தகத்துக்கு மிச்சப் பணம் தரணும் என 300 ரூபாய் கொடுத்தேன்,
வேணாம் தம்பி, ஒரு சாப்பாடு மட்டும் வாங்கிகுடு போதும் என்றார், இருவரும் சரவணபவனில் போய் சாப்பிட்டோம், திரும்பி போகும்போது சொன்னார்,
படிக்கிறவனை ஏமாற்றினா நாம உருப்பட முடியாது தம்பி, இப்போ தான் மனசு குளிர்ந்து இருக்கு, பில்லர் கிட்டே தள்ளுவண்டியில சூப் கடை வச்சி நடத்தப்போறேன், எப்பவும் போல வந்து போங்க என்றார்,
சில வாரங்களுக்கு பின்பு பில்லர் பக்கம் போன போது அவரைத்தேடினேன், அப்படி கடை எதையும் காணவில்லை, நகர நெருக்கடிகளுக்குள் எங்கே போனார் என்றே தெரியவில்லை, ஆனால் மனது அவரை இன்றும் தேடிக்கொண்டுதானிருக்கிறது,
பழைய புத்தக கடைகளில் உங்களுக்கு அதிர்ஷடமிருந்தால் தான் நல்ல புத்தகங்கள் கிடைக்ககூடும், பழைய புத்தகங்களைத் தேடி அலைந்து நான் சுவாச ஒவ்வாமையை தேடிக் கொண்டேன், மருத்துவர், நீங்கள் பழைய புத்தகக் கடைப்பக்கமே போக கூடாது, அந்த தூசி உங்களுக்கு அலர்ஜி என்று கறாராகக் கூறிவிட்டார்,
ஆறு மாதங்களுக்கு பழைய புத்தகக் கடை பக்கம் போய் ஆசையோடு தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன், அது போல கொடுமையான அனுபவம் வேறு கிடையாது, எனது தவிப்பை அறிந்த பழைய புத்தக கடைக்காரர் அறையை தேடி வந்து தானே தேர்வு செய்த பத்து இருபது புத்தகங்களை கொடுத்து போவதை வழக்கமாக கொண்டார், அந்த நன்றி மறக்கமுடியாதது, பின்பு மருத்துவ அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் தேடி அலைய ஆரம்பித்தேன், ஒவ்வாமையை பழகிப்போய்விட்டது,
பழைய புத்தகங்களுடன் உள்ள உறவு புதிய புத்தகங்களுடன் ஏற்படுவதில்லை, பலநேரம் அந்த புத்தகங்களை வாங்கியவர் யார், படித்தவர்கள் எத்தனை பேர் என்று யோசித்துக் கொண்டிருப்பேன், ஆஸ்கார் ஒயில்ட் பற்றிய பழைய புத்தகம் ஒன்றில் இரண்டாக மடிக்கபட்ட ஒரு கடிதம் ஒன்றினைக் கண்டு எடுத்தேன்,
அது வக்கீல் பாஷ்யம் என்பவருக்கு அவரது தந்தை எழுதிய ஆங்கில கடிதம், கல்கத்தா என முகவரி எழுதப்பட்டிருந்தது, அந்தக் கடிதத்தில் பிழைக்கப் போன இடத்தில் நல்ல சாப்பாடு, பேச்சுத்துணை , மான அவமானங்களைப் பற்றி யோசிக்க கூடாது, நீ ஜெயிக்க வேண்டும், அந்த ஒன்று எல்லாவற்றையும் தானே தேடி தந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது,
யாரோ, யாருக்கோ எழுதிய கடிதம் எனக்கு மிகுந்த உத்வேகம் தருவதாக அமைந்த்து, ஒருமுறை பழைய புத்தகம் ஒன்றுக்குள் பத்து ரூபாய் ஒன்று ஒளித்து வைக்கபட்டிருந்தது, அது எனது ஒரு நாளைக் காப்பாற்றியது, பி. ஜி. வுட்ஹவுஸ் புத்தகத்தில் அதை வாசித்தவர் ஆங்காங்கே எழுதிய அடிக்குறிப்புகள் புத்தகத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது.
பழைய புத்தகங்களைத் தேடி வாசிக்கின்றவன் என்ற காரணமே விட்டல்ராவின் வாழ்வின் சில உன்னதங்கள் புத்தகத்தை தேடிப்படிக்க முக்கிய காரணமாக இருந்தது, கடந்த பத்து ஆண்டுகளில் நான் படித்த கட்டுரை புத்தகங்களில் மிக முக்கியமானது என்று இந்த நூலைக் கூறுவேன்,
விட்டல்ராவ், சிறந்த எழுத்தாளர், ஒவியர், கட்டுரையாளர், அவரை திருவல்லிகேணி, அண்ணாசாலை பழைய புத்தக கடைகளில் நானே பலமுறை பார்த்திருக்கிறேன், நுண்கலைகள் பற்றி தேர்ந்த அனுபவமும் தெளிந்த ஞானமும் கொண்டவர்,
தான் பழைய புத்தகங்களை எப்படிச் சேகரித்தேன் என்பதையும் பழைய புத்தக கடைகாரர்களின் குணாதிசயங்களையும், இலக்கிய இதழ்களின் முக்கியத்துவம் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார், இது ஒரு அரிய ஆவணப்படுத்துதல்,
விட்டல்ராவின் அனுபவத்தில் பெரும்பான்மை எனக்கும் நேர்ந்திருக்கிறது என்பதால் படிக்கையில் மிகுந்த நெகிழ்ச்சி அடைய நேர்ந்தது, குறிப்பாக மூர்மார்க்கெட் எரிக்கபட்டது பற்றிய கட்டுரை மிக முக்கியமானது.
நான் சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த கல்லூரி நாட்களில் ரயிலை விட்டு இறங்கியதுமே நேராக மூர்மார்க்கெட்டிற்குப் போய்விடுவேன், அங்கே ஒரு பை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு தான் நண்பர்களைக் காணச்செல்வேன், 1952ல் ஹெமிங்வே அட்டையுடன் வெளியான LIFE இதழில் The Old Man and the Sea வெளியாகி இருந்த்து, அந்த இதழை மூர்மார்க்கெட்டில் தான் வாங்கினேன்,
இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, இம்ப்ரிண்ட், எஸ்கொயர், Paris Review. Chimera. Horizon. என நிறைய இதழ்களை அங்கே வாங்கியிருக்கிறேன், 1985 ல் மூர்மார்க்கெட் எரிக்கபட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த இடத்திற்கு போய் நின்ற போது மனது கலங்கிப்போய்விட்டது, உடலின் ஒரு பகுதி துண்டிக்கபட்டது போலவே உணர்ந்தேன், புகைபடிந்த கற்களை வெறித்துப் பார்த்தபடியே நின்றபோது தொண்டை அடைத்தது, திட்டமிட்டு உருவாக்கபட்ட விபத்து என்று சொன்னார்கள், நிஜம் என்றால் அது போல ஒரு அநியாயம் வேறு ஒன்றுமேயில்லை, அந்த மூர்மார்க்கெட்டுடன் தனக்குள்ள உறவைப் பற்றி விட்டல்ராவ் அற்புதமாக எழுதியிருக்கிறார், அவை முற்றிலும் உண்மை என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்,
விட்டல்ராவின் இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கலை இலக்கிய இதழ்களையும், அரிய இலக்கியத் தகவல்களையும், ஒவியங்களையும் உள்ளடக்கியது, ஒவியர் என்பதால் விட்டல்ராவ் ஆங்கில இதழ்களின் கோட்டுப்படங்கள், புகைப்படங்கள் குறித்து நுட்பமாக சிலாகித்து எழுதியிருக்கிறார், இந்த நூலை வாசித்தபிறகு அவர் சொன்ன சில இதழ்களை எடுத்துப்புரட்டி அந்த ஒவியங்களின் அருமையை புரிந்து கொண்டேன்,
விட்டல்ராவின் தந்தைக்கும், பழைய புத்தக கடைக்காரர் ஒருவருக்குமான நட்பு பற்றிய கட்டுரை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது, அக்கட்டுரை குறும்படமாக உருவாக்க வேண்டிய ஒன்று,
அது போலவே பைண்டிங் செய்கின்றவரை பற்றியும், மூர்மார்கெட் ஐயர் பற்றிய கட்டுரையும் ஒளிரும் சித்திரங்களாக உள்ளன , இலக்கியம், ஓவியம், சிற்பம், வரலாறு எனப் பல துறைகளில் வெளிவந்த தொடர்களை விட்டல் ராவ் தேடித்தேடி சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கிறார், இந்த ரசனையும் ஈடுபாடும் தான் அவரை மிகச்சிறந்த எழுத்தாளராக உருமாற்றியிருக்கின்றன
தமிழில் இது போன்று பழைய புத்தக உலகம் குறித்து எவரும் இத்தனை விரிவாக, நுட்பமாக எழுதியதில்லை, அவ்வகையில் விட்டல்ராவின் புத்தகம் ஒரு கொடை என்றே சொல்வேன்,
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவின் வாழ்க்கையாக மட்டுமில்லை, புத்தகங்களை தேடித் திரியும் எல்லோரது வாழ்க்கையின் பகுதியாகவுமிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு
அமெரிக்கன் சென்டர், மேக்ஸ்முல்லர் பவன், அலியான்சே பிரான்சே, அடையார் நூலகம் என்று வெளிநாட்டு இதழ்களை வாசிப்பதற்குத் தேடி அலைந்த நாட்களை நினைவூட்டும் இக்கட்டுரைகள் இணைய யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு வெறும் அனுபவமாக மட்டுமே தோன்றக்கூடும், ஆனால் இது அனுபவம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை, வாழ்த்துபார்த்தவர்கள் தான் அதன் உன்னதத்தை அறிய முடியும், விட்டல்ராவ் அப்படியான ஒருவர்.
••
வாழ்வின் சில உன்னதங்கள் விட்டல்ராவ் நர்மதா பதிப்பகம், சென்னை-17, விலை ரூ. 200/-
வெள்ளி, 31 மே, 2013
new..
|
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)