புதன், 10 ஆகஸ்ட், 2011

Prabanchan.

பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது




பிரபஞ்சன்



நானும், என் தங்கை பானுவும், தம்பி மூர்த்தியும் எங்கள் வீட்டு நடையில்தான் விளையாடுவோம். மூன்று இடங்களில் விளையாடுவது எங்களுக்குப் பிடிக்கும். ஒன்று நடை. எத்தனை மணிநேரம் விளையாடினாலும் அம்மா எங்களைத் தடையே பண்ணாது. குழந்தைகள் எப்போதும் தன் கண்முன்னே விளையாடிக்கொண்டு இருக்க வேண்டும். அடிக்கடி துண்டு எடுத்து வந்து, எங்கள் வியர்வையைத் துடைத்துவிட்டுச் செல்லும். அப்பாவின் துண்டு. அதில் வீசும் சுருட்டு மணம் எனக்குப் பிடிக்கும். இரண்டாவது இடம், வீட்டுப் புறக்கடை. பெரிய நிலப்பரப்பு இல்லை. ஒரு கிணறு. வலது ஓரத்தில் கழிப்பறை. கிணற்றை ஒட்டி எட்டுமுழ வேட்டியை அகல விரித்தது மாதிரி ஒரு பிரத்யேக இடம். துவை கல் மிகவும் பெரிசு. ஒளிந்து பிடியாட்டம் விளையாட மிகவும் சௌகர்யம்.



பெரிய கல் எங்களைக் காட்டிக் கொடுக்காது. அடுத்த வீட்டு நுணா மரம், தன் பரட்டைத் தலை முழுதையும் எங்கள் வீட்டுப் பக்கமே சாய்த்துக்கொண்டிருக்கும். அம்மா, ஒரு முல்லைக் கொடி போட்டிருந்தது. அம்மாவுக்குக் கோபம் வர ஒரே காரணம், பந்தல் காலை நாங்கள் தட்டிச் சாய்க்கும் போதுதான். கூடுமானவரை, நாங்கள் எங்கள் அம்மாவுக்குக் கோபம் வருவிப்பதில்லை. மூன்றாவது இடம், எங்கள் தெரு முனையில் இருக்கும் தோட்ட வாசலில் இருந்த கொடுக்காப்புளி மற்றும் மகிழ மரத்தடி. அதிகாலையில், அணில் கடித்துப் போட்ட கொடுக்காப்புளிக்காயைப் பொறுக்க ஓடுவோம். அப்படியே மகிழ மரத்தின் அடியில் சிந்திக் கிடக்கும் மகிழம் பூக்களைத் திரட்டிக் கொண்டு வருவோம். மகிழம் பூக்களைக் கோர்த்து பானுவின் தலையில் வைக்கும் அம்மா.



எனக்கு எட்டு வயதும், பானுவுக்கு ஐந்து வயதும், மூர்த்திக்கு நான்குமாய் இருந்தோம். எங்கள் மூவர் விளையாட்டின் போது, நாலாவதாக ஒருவர் விளையாடுவதை நான் அறியவில்லை. அறிந்து கொள்ளும் வயதும் இல்லை. நாங்கள் ஒளிந்து விளையாடும்போது மரணமும் எங்களோடு ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது. மகிழம் பூக்களை நாங்கள் திரட்டும்போது அது எங்களை வேடிக்கை பார்த்திருக்குமோ? இருக்கும். அதுவும் எங்களோடு சேர்ந்து சுளைகளைத் திரட்டிக் கொண்டு போயிருக்குமோ? இருக்கும். இரவு நேரங்களில் முல்லைப் பந்தல்கால் கீழே விழுந்து கிடப்பதை விடிந்து நாங்கள் பார்ப்போம். பானுதான் சட்டென்று ஓடிப்போய், காலை நிறுத்துவாள். தரை மண் படிந்த கொடியின் முதுகைத் துடைத்துவிடுவாள். பானு, அம்மாவைக் கொண்டு வந்ததாக அம்மா சொல்லும். பானுவுக்கு, இரவில் வந்து பந்தக்காலைத் தள்ளிவிட்டுப் போனது பக்கத்து வீட்டு நுணா மரப் பேய்தான் என்பதில் அசாத்தியமான நம்பிக்கை. நாங்கள் கைரேகை மறையும் நேரத்துக்கு மேல், தோட்டத்துக்குப் போக மாட்டோம். பேய், விளையாடும் நேரம் அது.



பானுவின் புகைப்படம் எங்கள் வீட்டில் வெகு காலம்வரை இருந்தது. ஒரு கழுத்தளவு கிருஷ்ண பொம்மை அவள் பக்கத்தில் இருக்கும். கிருஷ்ணர் தோளில் கைவைத்துக்கொண்டு சிரித்தபடி பானு நிற்பாள். பானுவின் முகம் அம்மாவுடையதல்ல. லேசான அப்பா சாயல். பள்ளம் விழுந்த முகவாய். பெரிய கண்கள். வெற்று மார்பில் சங்கிலி தொங்கும். மூர்த்தியைப் படம் எடுக்க வாய்க்கவில்லை போலும். அன்றைய தமிழர்கள் அனேகமாக இரண்டு முறை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். திருமணத்தில் ஒரு முறை. மரணத்து உடம்போடு ஒரு முறை. என் தம்பி மூர்த்தி படம் எடுக்கப்படவில்லை. தேவைப்படவில்லை போலும். அம்மா, ஒரு இடுப்பில் பானுவையும், ஒரு இடுப்பில் மூர்த்தியையும் வைத்திருக்கும். பழுத்துத் தொங்கும் பலா மரம் போலிருக்கும் அம்மா.



கோடை விடுமுறை வந்தது. கோடை விடுமுறை என்பது முழுப் பரீட்சைக்குப் பிறகு வரும் மூன்று மாத விடுதலை. வாத்தியார்களின் சகல அதிகாரங்களும், மூர்க்கங்களும் பறிக்கப்பட்டு, சற்றேறக் குறைய தெருப்பூனைகள் மாதிரி, வீதிகளில் அலைவார்கள். கோடைவிடுமுறை என்றால், எனக்குத் தாத்தா வீடுதான். விருத்தாசலத்தில் தான் என் தாத்தா வீடு. மேட்டுத் தெருவில் இருந்தது. இந்த வீட்டின் விசேஷம், அதன் தோட்டம்தான்.பிரமாண்டமான தோட்டம். அங்கும் ஒரு கிணறு இருந்தது. துவைகல் இருந்தது. அதன் அருகே, எங்களுக்குச் சொந்தமான பெரிய இலந்தை மரமும், கல்யாண முருங்கையும் இருந்தது. அப்புறம், பறக்கும் வர்ணங்கள், எங்கள் ஊரில் நான் பார்க்காத பறவைகள். முதல் முதலாக அந்தத் தோட்டத்தில்தான் பாம்பைப் பார்த்தேன். அப்புறம் எனக்கு விளையாட்டுத் தோழியாக மாதவியும் அங்கு இருந்தாள்.



விடுமுறைக்கு முதல்நாள் என் தாய்மாமன் பழமலை புதுச்சேரிக்கு வந்திருந்தார். விருத்தாசலத்தில் பழமலை என்ற பேர் பலருக்கும் உண்டு. மன்னார்குடியில் ராஜகோபாலன் மாதிரி. (தி.ஜானகிராமன் இந்தப் பெயர்ப்பன்மையை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார்) கவிஞர் பழமலையின் தாய்மாமன் வீடும், எங்கள் தாத்தா வீட்டுக்குப் பத்துவீடு தள்ளி இருந்தது. அந்த வீட்டுக்கு எதிரில் இரண்டு கறுப்பு நிற வெள்ளாடுகள் எப்போதும் இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. விருத்தாசலத்துக் கோயில் சிவனுக்குப் பழமலைநாதர் என்று பேர்.



மாமா திரும்பும்போது, நானும் அவருடன் தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டேன். உறவினர் வீட்டுக் கல்யாணத்தை முடித்துக்கொண்டு பின்னால் அப்பாவும் அம்மாவும் பானுவும் மூர்த்தியும் பிறகு விருத் தாசலத்துக்கு வருவதாகத் திட்டம். அம்மா என் துணிச் சுமையைப் பையில் அடுக்க ஆரம்பித்தது. பானுவின் முகம் சுண்டிப் போயிற்று. "நானும் அண்ணன் கூடப் போறேன்" என்றது. "சூ. . . குழந்தைகள் தனியாப் போறதாவது. அம்மா கூடத்தான் வருவியாம்" என்றது அம்மா. தம்பி பழமலையிடம், "குழந்தையைப் பார்த்துக்கோ. . . புதனும் சனியும் எண்ணெய் தேய்ச்சுவிட அம்மாகிட்ட சொல்லு. . ." என்றது, "தனியா கினியா வெளியில போயிடப் போறான்" என்று நூறு முறை சொல்லியது. பழமலை சிரித்துக் கொண்டார். நான் புறப்படும்போது, எங்கிருந்தோ ஒரு நாய்த்தோல் பந் தொன்றைக் கொண்டுவந்து என்னிடம் தந்தது பானு. பாருங்களேன். இத்தனை காலமும் நான் பந்தைத் தேடித் திரிந்திருக்கிறேன். அவள் ஒளித்து வைத்திருக்கிறாள். இப்போது எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். அம்மா என் பாக்கெட்டில் பணம் வைத்தது. என் நெற்றியில் முத்தம் வைத்தது. அம்மா வெற்றிலையோடு கிராம்பு போடும். பானு அழுதுகொண்டே தெரு முனைவரை வந்தாள். மூர்த்தி, இடுப்பில் இருந்துகொண்டே எனக்கு 'டாடா' காட்டினான். பானு அழுதது எனக்குச் சிரிப்பு சிரிப்பாய் இருந்தது. அம்மா அப்பா இல்லாமல், நான் ஊருக்குக் கிளம்பினேன். நான் பெரியவன் ஆகிவிட்டேனாக்கும். நாய்த்தோல் பந்து, வெள்ளையாக, புதுசுக்கென்று இருக்கிற ஒரு தனி வாசனையோடு இருந்தது.



கர்ணம் பக்கிரிசாமிப்பிள்ளை என்பது என் தாத்தாவின் பெயர். பக்கிரிசாமி கிராமணிதான் அவர். கிராமணி தாழ்ந்த சாதியாம். ஆகவே தன்னைப் பிள்ளையாக ஆக்கிக்கொண்டார். கணக்குப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட அச்சிட்ட பெரிய பெரிய தாள்கள், பைண்ட் செய்யப்பட்ட நோட்டுகள் வைத்திருப்பார். ஒரு சாய்வு நாற் காலியில், நீண்ட பலகையின்மேல், 'பேடை' வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். வீட்டில்தான் வேலை. துறை சார்ந்த தொழிலாளர்கள் அளவைச் சங்கிலி, தடிகளோடு வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். தாசில்தார், ஜமாபந்தி நடக்கும் போதுமட்டும் தாத்தா, புத்தகக்கட்டுகளை வெட்டியானோ, தலையாரியோ சுமந்து வர, குடை பிடித்துக் கொண்டு கச்சேரிக்குப் புறப்படுவார். தாத்தாவுக்கு நொண்டிக் கணக்குப் பிள்ளை என்றும் ஒரு பேர் இருந்தது. நான் பிறந்த அன்றே, அவர் பயணம் செய்த வண்டி குடை சாய்ந்து அவர் கால்கள் உடைந்து போயின. இரண்டில் ஒன்று சரிப்படவே இல்லை. ஆகவே விந்தி விந்தி நடந்து போவார். என் 'ஜாதகம்' அப்படி.



தாத்தா, ஜில்லாவிலேயே பெரிய ஜோஸ்யர். அவர் சம்பாதனை என்பது ஜோஸ்யத்தில்தான். எப்போதும், தெருவை ஒட்டி இருந்த மூன்று திண்ணைகளிலும் ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருப்பார்கள். குறிஞ்சிப்பாடி, முன்னஞ்சாவடி, நெய்வேலி, இந்தப் பக்கம் தொழுதூர் முதலான பல இடங்களில் இருந்தும் மக்கள், ஜாதகக் காகிதங்களுடன் வருவார்கள். குழந்தைகள் பிறந்தால், ஜாதகம் கணிப்பார். வருபவர்கள் வாழை இலைக்கட்டுகள், பூசணிக்காய், சுரைக்காய், சுண்டைக்காய், மற்றும் வாழைப்பழம் மரியாதைகளோடு வருவார்கள். அவர்களின் உறவு ஜோசியக்காரன், பார்க்க வருபவர்கள் என்பதாக இருக்காது. நெருங்கிய ரத்த பந்துக்காரர்களாக அவர்கள் சம்பாஷிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். தாத்தாவுக்கு, அவரது ரசிகர்களின் குடும்பச் சங்கதிகள் அத்தனையும் அத்துபடி. பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதிய அவரே, அந்தக் குழந்தையின் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் குழந்தையின் குழந்தைக்கும் ஜாதகம் எழுதியதை நான் அறிவேன். எனக்கும் தாத்தா ஜாதகம் எழுதி இருக்கிறார். பச்சை அட்டை போட்ட பவுண்ட் நோட்டில் எழுதியது. இன்னும் என் மனைவியிடம் பத்திரமாக இருக்கிறது. அதில் என்னுடைய 33வது வயதில் உலகையே சுற்றி வருவேன் என்றும், யோகப் பிரசித்தனாகி, உலகையெல்லாம் ஜெயித்து விக்கிமாதித்த மகாராஜா மாதிரி சிங்காசனம் ஏறுவேன் என்றும், செல்வத்தில் குபேரனாகவும், அழகில் மன்மதனாகவும், எட்டுத்திக்கும் விட்டெறிய ஆட்சிப் பரிபாலனம் பண்ணுவேன் என்று எழுதி இருக்கிறார். இடை இடையே கவிதையாகவும் (எண்சீர் விருத்தத்தில்) புனைந்து தள்ளி இருக்கிறார்.



பாரப்பா புதபகவான் பாரு பாரு

பார்ப்பதனால் ஜாதகனின் ஆயுள் ஓங்கி

பாருலகில் பிரசித்தி தேஜஸ் செல்வம்

பனிபுத்ரி ஜல புத்ரி நிலத்துப் பெண்கள்

பணிபூண்டு பார்யைகளாய் விளங்கி ஒன்று

நூறாண்டு ஆயுளிலே ஜகத்தை வென்று

ஆறோடு இரண்டுமான திக்கை எல்லாம்

காலடியில் இருக்குமாறு கண்பா ரப்பா. . .



என்று கவிதைகள் போகும். பனிபுத்ரி என்றது மலைநாட்டுப் பெண்கள். ஜலபுத்ரி என்றது, கடற்கரை நாட்டுப்பெண்கள். நிலத்துப் பெண்கள் என்றது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பிரதேசத்துப் பெண்கள். இவர்கள் எல்லாம் என் மனைவிகளாக அமைந்து குடும்பம் (எத்தனை குடும்பம்?) நடத்துவார்களாம். ஆயுசு நூறாம். எட்டுத் திக்கும் என் காலடியிலாம். இதற்கு புதபகவான் அருள் செய்வாராம். தாத்தாவின் ஆசை அப்படி இருந்திருக்கும் போலும். தனக்குக் கிடைக்காதது தன் பேரனுக்காவது கிடைக்கட்டுமே என்கிற பேருள்ளம். யதார்த்த நிலைமை என்னவென்றால், தீபாவளியைத்தள்ள நண்பர்களிடம் இருந்து 'செக்கை' எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.



எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாமல்போனது, என் தாத்தா எனக்குத் தந்த ஞானம்தான்.



தாத்தா வீடு இத்துடன் முடிந்து விடவில்லை. அவர் படித்த புத்தகங்கள் கொண்ட கறுப்பு நிறத்தேக்கு அலமாரி. அலமாரியின் மேல் இருக்கும் புத்தகங்களை ஸ்டூல் போட்டு ஏறித்தான் பார்க்க வேண்டும். வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜு, கோதைநாயகி என்று பலரும் அங்கே இருந்தார்கள். தமிழில் வந்த விசித்திரமான துப்பறியும் நாவல்கள், அரேபிய தேசத்து அற்புதக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தமிழ் நாட்டுக் கதைகள், முதல் உலக மகாயுத்தம் என்று வகைவகையான புத்தகங்கள். மேல் அடுக்கில் மிகவும் பத்திரமாக இருந்த கொக் கோகத்தைக் கண்டுபிடித்து, ரகசியமாகப் படித்தேன். படித்தேன் என்றால் சாதாரணமாக அல்ல. எழுத் தெண்ணிப் படித்திருக்கிறேன். பல பாடங்கள் இன்றும் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது.



நான் தாத்தா வீடு வந்து பல நாளாகியும் அப்பாவும் அம்மாவும் தங்கையும் தம்பியும் வரவில்லை. ஊரில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாம். தாத்தா சொன்னார். எங்கள் மாநில விடுதலை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ்காரன் பெட்டி படுக்கையோடு கப்பல் ஏறிப்போனாலும், புதுச்சேரியை விடப்போவதில்லை என்று பிரஞ்சுக்காரன் முரண்டு பண்ணிக்கொண்டிருந்தான். ஏகாதிபத்யவாதிகளிலேயே மிக மோசமான ஏகாதிபத்ய வாதி பிரஞ்சுக்காரன் என்பது என் அபிப்ராயம். உண்மையும் கூட அதுதான். நேரு மிக நிதானமாக, மீண்டும் ஒரு இந்திய பிரஞ்ச் யுத்தம் வந்துவிடக் கூடாது என்று பட்டேலைச் சாந்தப்படுத்திவிட்டுக்காய் நகர்த்திக்கொண்டிருந்தார். 1954 நவம்பர் முதல் தேதியாகிய எங்கள் சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பா, காங்கிரஸ்காரர் என்ற முறையில் கட்சி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தாத்தா சொன்னார்.



எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பின்னாளில் நர்சாகிய மாதவி எனக்குக் கிடைத்திருந்தாள். மேட்டுத்தெரு வீட்டுத் தோட்டம்.துவை கல். புத்தகங்கள். தெருமுனையில் இருந்த ஏரி. ஏரியை ஒட்டிய புளியந்தோப்பு. என் கற்பனைகள் என்னுடன் இருந்தன. அந்தக் குயில்களுக்கு வேடன் இல்லாத விருந்துத் திருநாள் மாதிரி எனக்குப் பள்ளிக் கூடமும் வாத்தியார்களும் இல்லாத விடுமுறை. எங்கள் தெருவில் இருந்த இடதுசாரி, வலது சாரி வீடுகள் எத்தனை (அரசியல் சாரி இல்லை) என்று எனக்குத் தெரியும். வீடுகளில் மனிதர்கள் யார் யார் என்று எனக்கு அத்துபடி. எங்கள் வீட்டு எதிர்சாரியில் அரியலூர் அம்மாவின் வீடு. அந்த அம்மாவின் மகன் கண்ணன் எனக்குச் சினேகிதம். கண்ணனின் அண்ணன் தமிழரசுக்கழக அனுதாபி. வீட்டு வாசலில்வில், கயல், புலிக்கொடி பறக்கும். சிலம்புச் செல்வரின் படம் வீட்டு அரிவுக்காலில் மாட்டி இருக்கும்.



ம.பொ.சிவஞானத்தின் புத்தகங்கள் அப்போதுதான் எனக்கு அறிமுகம் ஆயின. கண்ணனும் நாளடைவில் கட்சிக்காரர் ஆனார். எல்லைப்போரில் சிறைக்குப் போனதாகவும் பின்னாளில் அறிந்தேன். ஏதோ ஒரு தகராறில் வெட்டுப்பட்டுச் செத்தார். எதிர்ச்சாரியில் ஏழாம் வீட்டில் இருந்த படித்த, அழகான, குடை பிடித்துக்கொண்டு தெருவில் நடந்த, சரஸ்வதி அக்கா திடுமெனக் காணாமல் போய், தெரு களேபரத்தில் ஆழ்ந்தது நினைவில் இருக்கிறது.



ஒருநாள், தாத்தாவீடு வித்தியாசமாகத் தோற்றம் தந்தது. ஆயா, அன்று சோறு ஆக்கவில்லை. எனக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. ஆயா நடு வீட்டில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தது. ஜோசியம் பார்க்க வந்த ஜனங்களை அனுப்பிவிட்டுத் தாத்தா சாய்வு நாற்காலியில் புதைந்து கொண்டார். திடுமென எழுந்து ஜாதகப் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். மாமாக்கள் மவுனம் காத்தார்கள். ஒன்றிரண்டு வாரங்கள் இது நீடித்தது.



விடுமுறை முடிந்து என் மாமாவின் துணையுடன் தாத்தா தைத்துக் கொடுத்த புதுச்சட்டை, மற்றும் முட்டிவரை நீண்ட அரைக்கால் சட்டையுடன் ஊர் திரும்பினேன். அம்மா என்னைப் பார்த்ததும் கதறியபடி கட்டிக்கொண்டு அழுதது. நான் அம்மாவை விலக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போனேன். அறைகள் எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்தேன். எங்கும் பானுவையும் மூர்த்தியையும் காணவில்லை. 'அண்ணன் எங்கே எங்கேன்னு கேட்டிங்களே, கண்ணுங்களா, அண்ணன் வந்துட்டான், நீங்க போய்ட்டீங்களே' என்று நடுவீட்டில் தரையில் புரண்டு அம்மா அழுதது. அப்போதுதான் கவனித்தேன். நடு வீட்டில் பானுவின் புகைப்படம் சட்டம்போட்டு அதன் உச்சியில் பூக்கள் சொருகி இருந்தன.



அப்போதெல்லாம், அம்மை ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் தவறாமல் வரும். அம்மை நோய் வந்தால், தெருவுக்குப் பத்து, இருபது குழந்தைகள் செத்துப் போவார்கள். அனேகமாக நாலு வீட்டுக்கு ஒரு வீட்டில் கூரையில், வாயிலில் வேப்பிலைகள் சொருகி இருப்பார்கள். வேப்பிலை சொருகிய வீடுகளில் அம்மை வந்திருக்கிறாள் என்று அர்த்தம். வேப்பிலை சொருகி இருக்கும் வீடுகளில் நாலைந்து நாள்களில் அழுகை ஒலி கேட்கும். குழந்தை செத்துப் போயிருக்கும். உடன் நாலைந்து நாட்களில் அந்த வீட்டில் இருந்த இன்னொரு குழந்தை செத்துப் போகும். கோடைக்காலம் வருகிறது என்றாலே, ஜனங்கள் பயந்தபடி அலைவார்கள். எங்கள் ஊரில் பாட்டுகள் பல இது பற்றியே பாடப்பட்டன.



கோடை வந்துடுச்சு எங்கம்மா

கோமாரி வருவாளே. . .

குழந்தைகளை விட்டுடும்மா. . என் குலம் காத்து ரட்சியம்மா. .

குழந்தைங்களை விட்டுட்டு

எங்க உயிரை எடுத்துக்கம்மா. . .



அம்மை மாரி குழந்தைகளைத் தான் அதிகம் நேசித்தாள். ஒரு திங்கட்கிழமை அன்று பானு அம்மை வந்து படுத்திருக்கிறாள். புதன்கிழமை அம்மை உச்சமாகி இருந்தது. வெள்ளிக்கிழமை பானு குளிர்ந்து போயிருக்கிறாள். வியாழக்கிழமையே மூர்த்திக்கும் அம்மை போட்டு மயக்கமாகி இருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை அவன் குளிர்ந்து போயிருக்கிறான். பானுவுக்கு வெட்டிய குழியும் ஈரம் காயவில்லை. அந்தக் குழி அருகில் அப்பா, மயக்கமாகி விழுந்துவிட்டார். மயக்கம் தெளிவித்து வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் படுத்துக் கிடந்திருக்கிறார். பிறகு, துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு, வடக்கு பார்த்துப் போனார் என்று அம்மா சொல்லி இருக்கிறது. இரண்டு வாரங்களாகியும் அவர் திரும்பாததைக் கண்டு அம்மா பயந்து போனது. தாத்தா வீட்டில் கலவரம். அம்மை போட்ட வீட்டில் சம்பந்திகள் வருகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே தாத்தாவும், ஆயாவும், மாமாக்களும் சாவுக்கு வரவில்லை. இப்போது அப்பாவைத்தேடி மாமாக்கள், உறவுகள் திக்குக்கு ஒருவராகப் புறப்பட்டார்கள். ஆயா உடனிருந்து அம்மாவைக் காப்பாற்றி இருக்கிறது. ஒரு மாதத்துக்குப்பிறகு, வள்ளி மலைக்கு அருகில் அப்பாவைச் சாமியார்களோடு இனம் கண்டுபிடித்து தாடி மீசையோடு அழைத்து வந்திருக்கிறார்கள். பல மாதங்கள் அப்பா வீட்டைவிட்டு வெளியே போகாமல் எரவானத்தைப் பார்த்தபடி இருந்தார்.



அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும், எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சிகள் வந்து விடும். அடை அடையாக நாற்காலி, படுக்கை, பாய், கட்டில் இணைப்புகள், சுவர்ப்பள்ளங்களில் அவை வாழும். இரவு படுத்தபிறகு ரத்தம் குடிக்க வந்துவிடும். எனக்கு மூட்டைக் கடியில் தூக்கம் பிடிக்காது. புரண்டு புரண்டு படுப்பேன். அதற்காக அப்பா, ஒரு ஜிமினி விளக்கைக் கொளுத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வந்து மாட்டிக்கொள்ளும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து ஜிமினி விளக்கில் போட்டுக் கொன்று கொண்டிருப்பார். மின்சாரம் எங்கள் வீட்டில் நான் ஏழாவது படிக்கும்போது வந்தது. அதுவரை அப்பா இரவில் விளக்கோடு என் அருகில் அமர்ந்திருப்பார். மூட்டைப் பூச்சி அற்றுப் போச்சி என்று சுவரில் என்னை எழுதச் சொன்னார் அப்பா. பிரஷை வர்ணத்தில் தொட்டுக்கொண்டு நானும் அப்படியே எழுதினேன். அப்படி எழுதினால் மூட்டைப் பூச்சி அற்றுப் போகுமாம். எப்படியோ, மூட்டைப் பூச்சி அற்றுப்போயிற்று. அதன்பிறகு அப்பா விழித்துக்கொண்டு, விளக்கை ஏற்றி, விளக்கு வெளிச்சத்தில் என்னைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அடிக்கடி என் மூக்குக்கு அருகில் விரலைப் பிடித்துக்கொண்டு என் மூச்சு சீராக வெளிவருவதைக்கண்டு ஆறுதல் அடைவார். பள்ளிக்கூடத்துக்குக் கூடவே வருவார். நான் பள்ளிக்கூடம் விட்டு வருகிறவரைக்கும் எதிரில் இருக்கும் Ôஜெகனாதம் பிரஸ்Õ மரப் பலகையில் அமர்ந்திருப்பார். பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவார். என்னை மரணம் எடுத்துக்கொண்டு போய்விடாமல் காப்பாற்றுவதாக அவர் நினைத்தார். மரணத்திடம் அவருடைய ஒற்றைக் குழந்தையை விட்டுவிட மாட்டார். அவர் மரணத்தோடு ஒரு யுத்தத்துக்குத் தயாராக இருந்தார். மரணம் அவர் எதிரில் வந்தால் அதை வெட்டிக் கொல்லாமல் விடமாட்டார். அப்பாவை அழைத்துப் போய் ஆந்திராவில் இருந்த ஒரு வைத்திய சாலையில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அப்பா இயல்புக்கு வெகு விரைவிலேயே திரும்பினார்.



கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறந்தது. நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்படியென்றால், புதுச்சட்டை, புது பேண்ட் (முதல் முதலாக அந்த வருஷம் பேண்ட் அணிகிறேன்) தைத்துக்கொள்ளுதல், நாலைந்து புத்தகக் கடைகளில் தேடிப் புத்தகம் வாங்குதல், பேனா, இங்க் பாட்டல், ஜாமெட்ரி பெட்டி முதலானவைகளைச் சேகரித்தல் என்று அர்த்தம். 'நேம் சிலிப்' தருகிற கடைகளாகப் பார்த்துப் பொருள்களை வாங்க வேண்டும். மை ஒட்டி எடுக்கிற, பிளாட்டிங் பேப்பரைச் சில கடைக்காரர்கள்தான் தருவார்கள். அம்மா, எனக்காக முகத்தில் சிரிப்பைப் பூசிக் கொண்டு என் புதுப் பள்ளிக்கூட ஏற்பாடுகளைச் செய்தது. கேக்கும் போதெல்லாம், தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தது. அம்மாவுக்கு நாவற்பழம் பிடிக்கும். அந்தக் கலரும் பிடிக்கும். எனக்கு அந்தக் கலரில் சட்டைத் துணி கிழித்துத் தைக்கக் கொடுத்தது. தையற்காரர் கிருஷ்ணன், அளவே எடுக்காமல் தோராயமாகவே ஆடைகள் தைக்கும் நிபுணர். என்ன, சட்டை என் மாமாவுக்கும் பொருந்துமாறு இருக்கும். வளர்கிற பிள்ளைகளுக்கு அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவர் நியாயத்தை அப்பா மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்வார். அது பரவாயில்லை. பேண்ட் இடுப்புக்குள் ஒரு நாயும் சேர்ந்து இருக்கும் அளவுக்குப் பெரிசாக இருக்கும். அதற்கென்ன. 'பெல்ட்' என்கிற பொருள் பின் எதற்காகத்தான் இருக்கிறது. உடைந்த கைக்குப் போடும் துணிக்கட்டு மாதிரி என் இடுப்பைச் சுற்றி இரண்டு முறை சுற்றி பெல்ட் கட்டுவார்கள். புதிய தொப்பி, புதிய செருப்பு எல்லாம் தயாராக இருந்தன. என் புத்தகப்பையும் புதுசாகவே இருந்தது. என் புதுப் பையோடு இன்னுமொரு புதுப்பையும் அறையில் இருந்தது. 'இது எதுக்கும்மா' என்றேன்.



விடுமுறைக்குப் பிறகு பானுவையும் இந்த ஆண்டு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதாக இருந்தது. அப்பா அதை அழைத்துப்போய் முதல் வகுப்பு புத்தகம், நோட்டு, பென்சில், பென்சில் சீவும் மிஷின் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பைதான் ஆணியில் மாட்டி இருந்தது.



அம்மா சிரித்தபடி என்னை ரிக்ஷா வண்டியில் ஏற்றித் தலையைத் தடவிக் கொடுத்தது. வண்டி நகர்ந்தபின் உள்ளே போனது. எனக்குத் தின்பண்டம் வாங்கக் காசு வாங்கிக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது. பள்ளிக்கூட வாசலில் சோன்பப்டி விற்கும். எங்கள் குழாத்தில் அதன் பெயர் மயிர் மிட்டாய். வண்டியை நிறுத்தச் சொல்லி வீட்டுக்குள் நுழைகிறேன். அம்மா, பானுவின் புத்தகப் பையை மார்பில் வைத்துக்கொண்டு குலுங்கி அழுது கொண்டிருந்தது.



அப்பாவுக்கும் பெண் இல்லை. எனக்கும் பெண் இல்லை. என் மருமகள்களே என் பெண்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.



ஓவியங்கள்: ஆ.விஜயகுமார்

புதன், 3 ஆகஸ்ட், 2011

Bhavaa.


Wednesday, January 5, 2011அப்பா

கையிலடங்காத நீரின் சுழிப்பு.



வயசோ வருஷமோ ஞாபகத்தில் இல்லை. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே நிலத்திற்குப் போகும் அனுபவம் எப்போதும்போல அன்றைக்கும் வாய்த்திருந்தது.



புதிதாய் வாங்கின புஞ்சை நிலத்தில் கிணறு வெட்டு நடந்து கொண்டிருந்தது. கிணற்று மேட்டில் அப்பாவோடு உட்கார்ந்துகொண்டு நிமிஷத்துக்கொரு தடவை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை மொரம்பு, ஒட்டந்தட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தட்டு மொரம்பும் கொட்டப்படும் போதெல்லாம் அப்பா எதையோ தேடும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே கிணற்றுக்குள் பார்க்கிறார். உள்ளே ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். கடப்பாரைச் சத்தம் மட்டுமே மேலேறி வருகிறது. புதிர்களால் கிணறும் சூழலும் நிரம்பியிருந்தது.



இப்போது வெளியே வந்து விழுந்த மொரம்பில் லேசான ஈரம் தெரிந்தது. இதற்காகவே தவமிருந்ததுபோல் அப்பா ஓடிப்போய் அதை அள்ளித் தன் முகத்தருகே சமீபித்தார். அந்த வெள்ளை மொரம்பைத் தன் முகத்தால் ஸ்பரிசித்தார். அதன் சில்லிடலில் அப்பாவின் முகம் பிரகாசமடைந்தது.



"வையாபுரி, நொசுவுல ஈரம் தெரியுது. இரு இரு நானே உள்ள வரேன்'' என்று ஆர்வம் மேலிட எழுந்த சத்தம் எல்லோரையும் மேல் நோக்கித் திரும்ப வைத்தது.



நீண்டு தொங்கிய ஒரு கயிற்றினூடே அப்பாவும், காலியான அந்த ஒட்டந்தட்டின் வழியே நானுமாய் உள்ளே இறங்கினோம். கிணற்றுக்குள் நல்ல இருட்டு. உள்ளே நின்றிருந்த ஆறேழு பேரையும் கண்கள் பழகிக்கொள்ளச் சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்த்தால் அச்சம் ஒரு விலங்கைப்போலக் கரையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்த அச்சத்தைத் தவிர்த்து, பார்வையைத் தரையிலேயே நிலைக்க முயற்சித்தேன்.



''வையாபுரி மொரம்புல ஈரம் தெரியுது. எந்தப் பக்கம்?"



"சனி மூலையில வாத்தியார"



அப்பா நிதானிக்கிறார்.



தன் அனுபவத்தாலும், பார்வையாலும் அப்பாவின் கண்கள் ஒரு குறிப்பட்ட வெள்ளைக் கல்லின்மீது படிகிறது.



"இந்தக் கல்லுக்குக் கீழ கடப்பாரையால மொள்ள நெம்பு"



எல்லோர் பார்வையும் கடப்பாரை நுனி விழப் போகும் அந்தச் சின்னக் கல்லின்மீது குவிய, வையாபுரி கடப்பாரையால் கல்லுக்கடியில் தாங்கி நெம்புகிறார்.



"நீர்"



இத்தனை யுகமாய்க் கல்லின் முட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம். இருட்டிலும் மிளிர்ந்த அந்த மனித முகப் பிரகாசங்கள் அதற்குமுன் எப்போதும் நான் காணாதவை.



அப்பா என்னைத் தழுவித் தூக்கி, அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன்.



நீர் எங்களின் கால்மீதேறி நனைக்கிறது. நாங்கள் நிறைகிறோம்.



ஊற்றின் வேகம் அப்பாவை இன்னும் ஆர்வப் படுத்துகிறது.



"வையாபுரி உள்ள ஆறு, கீறு ஓடுதா பாருய்யா"



அப்பாவின் அந்தக் குதூகலம், என் வயதுக்கானது.



காலம், காலமாய்ப் பீறிட்ட அந்த ஊற்றை ஒரு சின்ன மொரம்புக் கல் தடுத்து வைத்திருந்தது மாதிரி நானும் அப்பாவைப் பற்றிய என் ஞாபகங்களை எழுதிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். எழுத்தின் தொடர்ச்சி எனக்குத் தெரியும், முடிவு நானறியாதது. எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்.



"அப்பா,"



கொட்டிக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?



எதை விட?



அப்பாவின் ஆசிரியப் பணி முடிந்து ஓய்வுபெற்ற சமயம் அது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாரானது. சி.பி.ஐ.(எம்), திமுகவுடனும், அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்திருந்தது. நான் திமுக வேட்பாளருக்குத் தீவிரமாய்க் களப்பணியிலிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய இரவு காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜண்ட் கிடைக்காமல், மறதியின் பக்கங்களிலிருந்து பழைய காங்கிரஸ்காரரான என் அப்பாவை மீட்டெடுத்து, வாக்குச்சாவடியின் காங்கிரஸ் வேட்பாளரின் முகவராக உட்கார வைத்தார்கள். திமுக சார்பாக அன்று பூத் முகவராக இருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சி. சகலவிதமான தில்லுமுல்லுகளோடும் திமுகவினர் வாக்குகளைப் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.



எங்கள் வீட்டிலிருந்து என் பாட்டியைக் கண் தெரியாதவர் எனச் சொல்லி ஒரு திமுக உடன்பிறப்பு சாவடிக்குள் அழைத்து வந்தது. அதாவது அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது. அதனால் அவர் உதவியோடு வாக்கை அந்தத் திமுகக்காரரே பதிப்பார். அப்பா ஆக்ரோஷத்தோடு இதை எதிர்த்தார். அதிகாரியிடம் "சார் இவங்க என் சொந்த மாமியார், என் வீட்லதான் இருக்காங்க. நல்லா கண்ணு தெரியும் சார்" என நீதியின் குரலைக் கொஞ்சம் உயர்த்தினார்.



நான் "சார் இவங்க என் சொந்த பாட்டி சார், பத்து வருஷமா கண்ணே தெரியாது சார்" என்ற ஒரு பெரும் பொய்யை அநீதியின் பலத்திலிருந்துச் சொல்ல, ஓட்டு அரசியல் எனக்குக் கற்றுத் தந்திருந்தது.



அந்தச் சாவடியின் பூத் அதிகாரி என் பாட்டியின் உயரத்திற்குக் குனிந்து,



"பாட்டிம்மா கண்ணு தெரியுமா?" எனச் சத்தம் போட்டுக் கேட்டார். வரிசையில் நின்ற எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பாட்டி மிகக்கவனமாக,



"பத்து வருஷமாச்சு சார் கண்ணு அவிஞ்சு," என்றது நிதானமாக, வாங்கியிருந்த 50 ரூபாய்க்கு விசுவாசமாக.



அப்பா, "இந்த அரசியலும் வேணாம், ஒரு மயிரும் வேணா"ன்னு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.



அவர் முன் ஜெயித்துவிட்ட திமிரில் நின்ற நான்தான் அடுத்த தலைமுறையின் பிரதிநிதி. தனக்கு அடுத்த சந்ததி நேர்மை, அன்பு, உறவு எல்லாவற்றையும் பணத்துக்காக விற்கத் துணிவதை அவர் மனம் கடைசிவரை ஏற்கவேயில்லை.



அவருக்கான சில நியாயமான கோரிக்கைகளில் கடைசிவரை அவரால் வெற்றியடைய முடியாதபோது, நாங்கள் எவ்வளவு தடுத்தும் தான் பெற்ற நல்லாசிரியர் விருதை (100 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் அது) ஒரு நீண்ட கடிதத்துடன் அரசுத் தலைமைச் செயலருக்குத் திருப்பி அனுப்பினார்.



மத்திய அரசுக்கெதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் அது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் எனப் போலீஸ் கருதிய பட்டியலில் என் பெயரும் நண்பன் கருணா பெயரும் இருந்தது. இன்றிரவு நிச்சயம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய பொழுதில் நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமினோம். எல்லோர் முகத்திலும் பதட்டமும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவுமான அவசரமும் இருந்தது. சாப்பிட்டபிறகு, மூங்கில்துறைப்பட்டுக்குச் சென்று என் நண்பர் வீட்டில் தங்குவது பந்த் முடிந்த பிறகு திரும்புவது என முடிவெடுத்தோம். ஒரு ஈசிச்சேரில் படுத்தபடி எங்கள் திட்டம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்த அப்பா திடீரென நாங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி எழுந்து,



"இங்க பார்டா, இந்த வீட்ல இருந்து போக யாரையும் நான் விடமாட்டேன். பந்த்ல அரெஸ்ட் ஆகுங்க, அல்லது கட்சியில இல்லன்னு எழுதிக் கொடுத்துடுங்க. மீறிப்போனா, நானே எங்க போயிருக்கீங்கன்னு போலீசுக்குச் சொல்லிடுவேன்" என கர்ஜித்தார்?



எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே அன்றிரவு நான் கைது செய்யப்பட்டேன். என் நண்பர்கள் தப்பித்தார்கள். கொள்கையின் மீதான இந்த மூர்க்கத்தைத் தன் இறுதி நாள்வரைத் தனக்குள் வைத்திருந்தவர் அவர்.



என் திருமணம் வரையிலும்கூட நானும் அப்பாவும் தெருவில் நின்று சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்துத்தெருவரை அவர் என்னைத் துரத்தி, துரத்தி அடிப்பது என் கல்லூரிப் படிப்பு முடியும்வரை தொடர்ந்திருக்கிறது. ஒரு முறை நானும் அப்பாவும் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக அவர் பெட்டியை எடுத்து வெளியில் வீசி எறிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் தோலில் மாட்டிய தோள் பையோடு கோணங்கி. அவன் அதிர்ச்சியடைந்தான்.



அந்த அனுபவத்தை "சாரோனின் சாம்பல் இறகு" என்று சிறுகதையாக்கியிருக்கிறான். பேரன்பினால் எழும் பிரச்சனை இதுவென நல்ல வேளை என்னைப் போலவே கோணங்கியும் புரிந்து வைத்திருந்தான். நானும் இவ்வனுபவத்தை என் "சிதைவு" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்.



அப்பா தன் இருபத்தி ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் என்ற ஒரு புகழ்பெற்ற குன்றுக்கருகில் தான்தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த ஒரு எட்டி மரத்தை, தன் தற்கொலையை நிறைவேற்றித்தரத் தேர்ந்தெடுத்தார்.



மறு பரிசீலனைக்கிடமின்றி மாலை ஐந்து மணிக்குக் கோட்டாங்கல் பாறையில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. எதற்கெனத் தெரியாமலே கண்ணிலிருந்து நீர் வழிகிறது. சரியாக ஆறு மணிக்கு இப்பேரமைதியைக் குலைத்து வாணவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் அவரை அலைக்கழிக்கின்றன. தன் அகமனதை ஊடுருவும் இப்புற உலக இயக்கத்தை எத்தனை தடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை.



கண்கள் மேற்கையே வெறிக்கின்றன. சுகுமாரன் சொல்வதைப் போல தற்கொலையில் தோற்றவனின் மௌனமல்ல அது. தற்கொலைக்குத் துணிந்தவனின் மௌனம். எதிரில் ஒரு மங்கலான ஓவியம்போலத் திருவண்ணாமலை மலை தெரிகிறது.



தீபச் சுடரொளி பற்றிப் பிரகாசிக்கிறது. அவ்வொளியின் வெப்பத்தை இம்மலைமேட்டில் படுத்துக்கிடக்கும் அப்பாவின் சரீரம் உணர்கிறது.



துடித்தெழுகிறார்.



அதற்குப்பிறகும் அந்த எட்டி மரத்தில் ஆறேழு நாட்கள் அந்தக்கயிறு தொங்கி கொண்டிருந்ததாகவும், பின்பொருநாள் அப்பாவே அதை அகற்றியதாகவும் சொல்வார்.



தன் இறுதி நாள்வரை அப்பாவை ஒரு நாத்திகனாகவே நாங்களெல்லாம் அறிந்தோம். வெளிவாழ்வு, உள்வாழ்வு இதெல்லாம் தெரியாத மனுஷன் அவர். ஆனால் தன் வாழ்வின் அந்திமம் வரை ஒரு ரகசியத்தை அடைகாத்தார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு கார்த்திகை தீபத்தன்றுதான் அந்த இரகசியத்தை அவிழ்த்துப்பார்த்தோம்.



ஒவ்வொருத் தீபத்தன்றும் காலையிலேயே குளித்து முடித்து, தூய வெள்ளை உடுத்திப் பத்து மணிக்கு சைக்கிளில் புறப்படுவார். எங்கேயெனக் கேட்க யாருக்கும் துணிவிருக்காது. பதிலைக் குடும்பத்துக்குள் கொட்டிவிட்டுத்தான் புறப்படவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.



ஒரு மணிக்குத் திரும்பி விடுவார்.



ப்ராட்டஸ்டன்ட் கிருத்துவக் குடும்பமாகிய எங்கள் வீட்டில் எந்தக் கார்த்திகை தீபத்தன்றும் மத்தியானத்தில் சமைத்ததில்லை. தீபம் பார்த்த பிறகே, மொட்டைமாடியில் இலை போட்டுச் சாப்பாடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் ஏதோ அடங்காத மனதோடு உலாத்திக் கொண்டிருப்பார். தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு. தனக்கு வாழ்வு கொடுத்த தீப ஒளிக்கு பல ஆண்டுகளாக அவர் செலுத்தும் மௌன அஞ்சலி என நான் புரிந்து கொண்டேன்.



ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தோல்வியில் முடிந்த ஒரு தற்கொலை முயற்சியின் அலைக்கழிப்பு இப்படி முடிந்தது.



1999 நவம்பர் 23. அதே தீபத் திருநாள். ஊரே பரபரப்பில் இயங்குகிறது. அப்பாவால் சைக்கிளை எடுக்க முடியாது. முதுகுத் தண்டில் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தார். காலை பத்து மணியிருக்கும், என்னைத் தன் படுக்கையருகே அழைத்து அமரச் சொல்கிறார். கண்களில் துளிர்க்கும் நீர் வழிகிறது.



"பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னக்கி என்னால போக முடியலை. நீ எனக்காகச் செய்வியா? வார்த்தைகளில் கொஞ்சம் அவ நம்பிக்கையிருந்தது."



என் துக்கமும் கண்ணீராய்த்தான் வழிந்தது.



'எனக்கப்புறமும் என் பேர்ல இதைச் செஞ்சுடுப்பா' என் சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனைகளில் வளர்ந்த எனக்கு வீட்டிற்குள்ளிருந்தே ஒரு நாத்திகனால் விடப்படும் முரண்பாடான கோரிக்கை இது.



'கண்டிப்பா செய்வம்ப்பா'



அன்று மாலை தீபம் ஏற்றும் முன் நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் போயிருந்தேன். ஒரு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பில் ஜனக் கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு வந்தேன். ஹாலில் அப்பாவைப் படுக்க வைத்து எல்லோரும் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.



'எப்படி ஷைலஜா?' என்றேன். அப்பாவுடனான கடைசி உரையாடலை அவள் என்னிடம் சொன்னாள்.



'தீபம் பார்க்க மாடிக்கு போறம்பா'



'பாத்துட்டு வாங்கம்மா'



தீப ஒளியை அவசரமாக தரிசித்துவிட்டுக் கீழிறங்கி வந்து,



'அப்பா தீபம் ஏத்திட்டாங்கப்பா' என்றிருக்கிறாள்.



'ரொம்ப சந்தோஷம்மா'



அதுதான் அப்பா பேசின கடைசி வார்த்தை.



ஒவ்வொரு வருடமும் மலைமீது ஏற்றப்படும் தீப ஒளிக்கு, ஒரு மார்க்ஸியக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அப்பாவின் பெயரைத் தாங்கின அரைக்கிலோ நெய்க்குடமும் உண்டு.



Posted by பவா செல்லதுரை at 4:09

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

Sukumaran.

Monday, January 11, 2010


கேணி சந்திப்பு - கவிஞர் சுகுமாரன்

முன் குறிப்பு: கவிதை வாசிப்பில் ஆகச் சிறந்த கோமாளி நான்... கீழே இருக்கும் கவிதைகள் கேள்வி ஞானத்தில் எழுதியது. ஞாபகத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏமாற்றி இருக்கிறேன். பதிவில் பயன்படுத்தியிருக்கும் கவிதைகள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். மாற்றிவிடுகிறேன்.நன்றி...



::::::::::::: ::::::::::::: ::::::::::::: ::::::::::::: :::::::::::::



நீண்ட நாட்களுக்கு முன்பு 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் சென்னை சிறுகதைப் பயிலரங்கம் நடந்தது. முதலில் உலகச் சிறுகதைகள் பற்றிப் பேச கவிஞர் சுகுமாரன் தான் ஏற்பாடாகியிருந்தது. அப்பொழுதே கோழியை அமுக்குவது போல் அமுக்கவேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் அவருடைய மொழி பெயர்ப்பில் மதில்கள் மற்றும் காளி நாடகம் ஆகிய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் மொழி பெயர்ப்பு சமந்தமான பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றிருந்தேன். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போகவே அந்த இடத்தை 'சா. தேவதாஸ்' நிரப்பினார். கவிஞரை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமாகவே இருந்தது.



25-12-2009 அன்று நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் சிவராமன் கவிஞர் சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். மூத்த ஆளுமை என்பதால் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. தயங்கித் தயங்கி அவருடன் உரையாடினேன். சகஜமான உரையாடலின் மூலம் நெருக்கமாகப் பேசினார். விழாநாள் என்பதால் அவருடன் விளக்கமாக உரையாட முடியவில்லை. கேணிக்கு வருகிறார் என்றதும், அன்று விட்டதை இன்று பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன்.



ஞானியின் வீட்டை நெருங்கியதும் இன்ப அதிர்ச்சி. சுகுமாரன் அவருடைய நண்பருடன் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் நின்றுகொண்டு "வணக்கம்" என்றேன். ஆமோதித்து சிரிக்கவும் அருகில் சென்றேன். 'காளி நாடகம்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அருகிலிருந்தவரைப் பார்த்து சிரித்தேன். தன்னுடைய பெயர் க. சீ. சிவக்குமார் என்று கூறினார். நானும் என்னுடைய பெயரைக் கூறினேன். 'நீங்கள் பதிவரா?' என்று சிவா கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு கவிஞரைப் பார்த்தேன்.



சுகுமார்ஜி, நீங்கள் பதிவுகளைப் படிப்பீர்களா?



எப்பவாவது நேரம் கிடைக்கும்பொழுது படிப்பேன்.



பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



சில பேர் நல்லா எழுதறாங்க. என்ன ஒன்னு நாலு பின்னூட்டம் வந்ததுமே... தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.



நீங்கள் சிறுவயதில் எங்கு வளர்ந்தீர்கள் சுகுமார்ஜி....?



"அதைத்தானே உள்ள பேசப்போகிறோம். அப்போ கேட்டுக்கலாமே..." - என்று கூறவும் உன்னியின் சிறுகதைகளை சிலாகித்துப் பேசினேன். நீங்கள் உண்ணியைப் பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுக்களை சொல்லிவிடுங்கள். அப்படியே அவருக்கான ஒரு வாசகர் தமிழில் இருக்கிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அவர் சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் கரு நன்றாக இருக்கிறது.



மலையாளம் பேசுவிங்களா? - என்று கேட்டார்.



அய்யய்யோ... சுத்தமா தெரியாது...



Can you sepak in English?



ரொம்ப நல்லா பேசமாட்டேன்... கொஞ்சம் கொஞ்சம்...



அதுபோதும், அவனும் ரொம்ப சுமாராத்தான் இங்கிலீஷ் பேசுவான் என்று உன்னிக்கு ஃபோன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

Unni, this is Krishna prabhu from Chennai. I red your short stories translated by the poet and well known writer Mr. Sugumaran. It is amazing man. You have done a wonderful job. Congratz. என்று அடுக்கிக் கொண்டே போனேன். அவரும் Thank you, Thank you...என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தக் குரலில் ஒரு படைப்பாளி மட்டுமே அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை உணர முடிந்தது.



I saw your E-Mail ID in the same book I suppose to think. So I will send an e-mail to you. Keep in touch with me... என்றவுடன் Sure... Sure... என்றார்.



Take care... Bye Bye...என்று பேசி முடிக்கவும் பாஸ்கர் சக்தி வந்து சேர்ந்தார். அனைவரும் உள்ளே சென்றோம்.





சென்ற வாரங்களில் ஞானிக்கு உடல் நிலை சரியில்லை தெரியுமா?



"இங்க வந்த பிறகுதான் தெரியும். இப்போ எப்படி இருக்காரு?" என்று கேட்டேன்.



ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாரு. இப்போ உள்ளே தூங்கிட்டு இருக்காரு. இனிமேல்தான் எழுப்ப வேண்டும். நேரம் இருக்கிறதே என்று தரையில் அமர்ந்தார். சின்ன கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய சிறுகதைப் புத்தகங்களை வாங்கிவிட்டேன் சக்தி. இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அருகில் இருப்பவர் என்னை விட நன்றாக எழுதுவார் என்று அறிமுகப் படுத்தினார். அவர் வேறுயாருமில்லை அதே க. சீ. சிவக்குமார் தான். கன்னிவாடி - தமிழினி, உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - வம்சி, குனசித்தர்கள் - கிழக்கு, நீல வானம் இல்லாத ஊரே இல்லை - உயிரெழுத்து... ஆகியவை இவர் எழுதி சில புத்தகங்கள் என்று கூறினார். அவருடைய புத்தகங்களை இனிமேல் தான் தேடித் பி(ப)டிக்க வேண்டும்.



ஞானிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கேணியைத் தொடங்கினார்கள். புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவாக இருக்கும் பொழுதுதான் இலக்கிய கூட்டத்திற்கான லட்சணம் கூடுகிறது என்று சுகுமாரனைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் நீண்ட உரையாற்றிவிட்டு கவிஞர் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.



"எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது... எதுவும் பேச பயமாக இருக்கிறது..." - என்ற கவிதையுடன் தனது பேச்சை ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு "எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தை 'பழனியப்பா ப்ரதெர்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'தி. ஜா' ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அருமையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிறில் புளியைக் கரைக்கும் என்று சொல்லியிருப்பார். குமுதம் டாட் காமில் வேலையிலிருக்கும் போதிலிருந்தே என்னை பேச அழைத்தார்கள். இங்கு தானே இருக்கப் போகிறேன் அடுத்த மாதம் வருகிறேனே என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டேன். எனக்கு வயிற்றில் புளி கரைகிறது. அந்த உணர்வுடன் தான் உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன்.



என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் மூத்தவன். அப்பாவின் சகோதரி உதக மண்டலத்தின் வெலிங்ஸ்டன் என்ற இயற்கை சூழலில் இருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னை எடுத்து வளர்த்தார்கள். சிறு வயதில் பெற்றோர்களைப் பிரிந்து வளரும் குழந்தைகள் ஒரு விதத்தில் தனிமையை உணர்கின்றன. நானும் அந்தத் தனிமையை உணர்ந்தேன். அந்தத் தனிமையை போக்கவும், என்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தவும் ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்பட்டது. அது கவிதை வாசிப்பாக அமைந்தது. கையில் கிடைக்கும் காகிதத்தில், அச்சில் உள்ள அனைத்தையுமே படிப்பேன்.



பள்ளியின் இறுதி வாழ்க்கை முடிவதற்குள் 500 செய்யுள் எழுதிவிட்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் செய்யுள் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதின் மூலம் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நான் கிறுக்கியதற்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பெண்கள் தான் அதிகம் பாராட்டினார்கள். அதனால் நானும் அக்காக்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். ஒரு முறை எனது பக்கத்து வீட்டு அக்கா கவிதைப் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்கள். அந்த சம்பவம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்ற நூல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அதில் எனக்குத் தேவையான இலக்கணத்தைக் கற்றுக்கொண்டேன்.



தமிழ் கவிதைகளையும், புத்தகங்களையும் விரும்பிப் படிப்பதால் என்னுடைய தமிழ் ஆசிரியர்களுக்கு நான் பிடித்த மாணவனாகியிருந்தேன். அவர்களும் எனக்கு பல விஷயங்களை விருப்பமுடன் கற்றுக் கொடுத்தார்கள். கவிதை என்று வரும் பொழுது நிறைய ஆதர்சனகள் இருந்தார்கள். வைதீஸ்வரன் மற்றும் தர்மு சிவராம் ஆகிய இருவரும் என்னை வெகுவாக பாதித்தார்கள். இருவரும் அவர்களுக்கான பாணியில் நன்றாக எழுதி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிடித்திருந்ததால் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உண்டாகியது. கடைசியாக யாரும் வேண்டாம் என்று எனக்கென ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.



இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட நம்முடைய கவிதை மரபில் விவசாயம், வைத்தியம், ஜோதிடம் என்று எல்லாமே கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதிதான் நான். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால். பாரம் என்று கூட சொல்லலாம். கவிதையில் ஒரு அனுபவம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது செய்தியாகிவிடும். உதாரணமாக...



யாது ஊரே யாவரும் கேளிர் - என்ற வரியைச் சொல்லும் போது அது ஒரு செய்தி மட்டுமே, அதற்கடுத்துள்ள வாசகம் தான் ஒரு அனுபவத்தைத் தருகிறது, ஒரு நிகழ்ச்சியை கண்முன் நிருத்துகிறது. அப்பொழுது தான் அந்தக் கோர்க்கப்பட்ட வாசகங்கள் கவிதைக்கான வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் கவிதைக்கும், செய்திக்கும் (Statement) உள்ள வித்யாசம். இரண்டுக்குமே பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அவைகள் தன்னுடைய மதிப்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும்.



மலையாளத்தில் கவிதை எழுதும் இரண்டு பேரின் பெயர்களைச் சொல்லி இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதுபவர்கள். ஒருவர் மென்மையான விஷயங்களையும், இன்னொருவர் தவிப்புகளையும் மையமாக வைத்து எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரின் சில கூறுகளைக் கழித்துப் பார்த்தால், இரண்டு படைப்பாளிகளின் கவிதைகளும் ஒரே மாதிரி இருக்கும். யார் எழுதியது என்று வித்யாசம் காண முடியாது. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை.



அகவற்பா, வெண்பா, செய்யுள், மரபுக் கவிதை என பல வடிவங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது புதுக் கவிதைதான். புதுக் கவிதைகள் ஜனநாயகத்தைப் பிரகடனப் படுத்துவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்த வடிவத்தை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்புகிறேன் போலும்.



என்னைப் பொறுத்தவரை கவிதை மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அவைகளாவன 'வடிவம், மொழி மற்றும் உள்ளடக்கம்'. இந்த நிபந்தனைகள் புரியும் விதமாக நீண்ட விளக்கம் அளித்தார். முனைப்புடன் செயல்படும் பல கவிஞர்களுக்கும் இந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.



சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ சொல்ல வரும் விஷயத்தை படைப்பாளி சொல்லியபடியே வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள். கவிதைகள் அப்படி அல்ல. எழுதியவன் ஒன்றை நினைத்து எழுதுவான் படிப்பவர்கள் வேறு ஒரு அனுபவத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரே கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுவேறு அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சுதந்திரமும் கூட என்று சொல்லி அவர் எழுதிய "கையில் அள்ளிய நீர் " கவிதைக்கு வாசகர் அளித்த விளக்கத்தைக் கூறினார். நதியிலிருந்து ஒரு கை நீரை எடுக்கிறார். செடிகளுக்கு அளிக்கிறார். அதை மேகம் கொண்டு மழையாகப் பொழிகிறது. அந்த நீரை எடுத்து மீண்டும் நதியில் கவிழ்க்கிறார்.இந்த அனுபவத்தை கவிதையாக சொல்கிறார்...



அள்ளி

கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்

நதிக்கு அன்னியமாச்சு

இது நிச்சலனம்

ஆகாயம் அலைபுரளும் அதில்

கை நீரைக் கவிழ்த்தேன்

போகும் நதியில் எது என் நீர்?



- இதை நான் சாதாரண அனுபவமாகத் தான் எழுதினேன். நதி என்பது பரமாத்மா... கையளவு தண்ணீர் ஜீவாத்மா... அது போக வேண்டிய இடம் சென்று கடைசியாக பரமாத்மாவிடமே திரும்பியது என்று சுழற்சியைக் கூறினார். அவருடைய யோசனையில் தவறில்லை. இந்த வார்த்தைகள் அவருடைய யோசனைக்குப் பொருந்துகிறது.



நான் திருவனத்தபுரம் தள்ளி இருக்கும் ஆணையடி என்ற இடத்தில் வசிக்கிறேன். ராஜாக்கள் காலத்தில் அங்கு தான் யானைகளைக் கட்டிப் போடுவார்களாம். அந்தப் புறமும் கூடவே இருக்கும். அங்கு ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் காரணத்தை அறிய எனக்கு ஆவல். ஒரு வயதானவரிடம் கேட்டேன்.



"நீ... சிறுபிள்ளை" என்று கூறிச் சிரித்தார்.



பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.



எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை கடைசிவரை அந்தப் பெரியவர் சொல்லவே இல்லை.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய முற்பட்டேன். கடைசி வரை அதற்கான காரணம் தெரியாமல் போனது. ஆகவே அந்த சம்பவத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். இறுதியாக அந்தக் கவிதையை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.கவிதை வாசிப்பினைத் தொடர்ந்து அவருடனான உரையாடல் நடைபெற்றது.



பல கேள்விகளும் கவிதையை சார்ந்தே இருந்ததால் பேசா மடந்தை போல் உட்கார்ந்திருந்தேன். நேரம் பார்த்து மொழி பெயர்ப்பு சமந்தப்பட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். அதற்கு கவிஞரும், ஞானியும் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள். அவருடைய மொழி பெயர்ப்பு மற்றும் கட்டுரை குறித்து யாரும் பேசாதது வருத்தமாக இருந்தது. ஒரு படைப்பாளி நம் முன் உரையாடுகிறார் என்றால், அவர் நமக்களித்த முக்கியமான படைப்புகளை ஞாபகப்படுத்தி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. மேலும் சுகுமாரனின் கவிதைகளை முன்வைத்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது.



கவிஞர் சுகுமாரின் வலைப்பூ முகவரி: vaalnilam.blogspot.com

விக்கிபீடியா: கவிஞர் சுகுமாரன்



சுகுமாரைப் பற்றிய கட்டுரைகள்:

1. உருமாற்றத்தின் ரகசியம்: பாவண்ணன்

2. கவிஞர் சுகுமாரன் - கவிதைத் திருவிழா 14 - அந்திமழை

3. சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல படைப்பாளிகளை தூரத்திலிருந்தும், அருகில் சென்றும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் கவிஞர் வா மணிகண்டன் சுவாரஸ்யமான நண்பர். 10 நிமிடங்கள்அவருடன் பேசியதில் 25 கவிஞர்களின் பெயரை உச்சரித்தார். அவர்களில் சுகுமாரனின் பெயரும் ஒன்று. சுகுமாரனைப் பற்றி எழுதிய பதிவு: கவிஞர் சுகுமாரன்



பின் குறிப்பு:

1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.

2. உரையாடல் கவிதையை மையமாக வைத்து இருந்ததால் சமயத்தில் கவனம் சிதறியது. ஆகவே தகவல் பிழைகள் ஏராளமாக இருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன்.

3. இங்கு பயன்படுத்தியிருக்கும் கவிதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் சரி செய்துவிடுகிறேன்.





Posted by கிருஷ்ண பிரபு at 9:39 PM Labels: கேணி சந்திப்பு

புதன், 27 ஜூலை, 2011

Yuvaa.

அசோகர் கல்வெட்டு
My Photo

July 21, 2011



எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்த தாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.



யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!



அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.







பரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ’ செக்‌ஷன். பெண்களுக்கு 'பி’ செக்‌ஷன். 'ஏ’ செக்‌ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அது வரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.



சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.



அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.



புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.





கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...





நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டு பவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்து வதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித் தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனைகொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.

அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சிதயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார் களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டா வதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!







ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...





சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.



அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.



''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.



அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.



''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.



''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.



அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.



''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.



மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல் ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார் கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.



அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோ’தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.



மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்-அப்பில் அசத்துவான்.



தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு’ என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு’ என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா’ சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.



ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.



நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.



பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.





ஃப்ளாஷ்பேக் ஓவர்





என்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தா லும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.



''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''



அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.



'ஞாபகமில்ல!''



'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'



'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'



முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.

வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.



அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டி யதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதை யின் அவுட்லைன் கிடைத்துவிடும்.



அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க் கும்போதும், அதே கனம்!இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.



(நன்றி : ஆனந்த விகடன் 20.07.2011 இதழ்)

செவ்வாய், 26 ஜூலை, 2011

Raguvaran.

அருவி நீர் போல் வாழ்வின் கணங்கள் அத்தனை வேகமாக கடந்து போகிறது. விழும் ஒவ்வொரும் நீரும் புதிது.அருவிக் குளியலின் அனுபவத்தை என்னால் நிமிடத்துளிகளாக வர்ணிக்க இயலாது. மொத்த துளிகளையும் மணிநேரமாக தொகுத்து கூறவே இயலும்.






ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நினைவு கூறப்படும் வாழ்வும் அங்கனமே உள்ளுமோ.





பதிவுகள் மட்டுமே வாழ்க்கையாகும் காலம் வரும். நினைவூஞ்சலாடி பின்னுக்குப் பதிவில் போய், முன்னுக்கு நிகழ்வில் போய், எங்கு நிறுத்த என்று அறியாமல் அரிக்கும் நரையின் கரை சேராதவர்களின் மரணம் இனிதே....









கவிதையும்,வாழ்வும் எவ்வளவு சிறியாக உள்ளதோ அவ்வளவு அழகாக இருக்கும். சான்றுகளுண்டு நிறைய...இருப்பினும் ஒப்புக்கொள்ளாது மனம்..எனக்கு அது வாய்க்கும்வரையில்...





வானவில் போல வந்து வண்ணங்களாகி நிறையும் மனிதர்களை,என் ஞாபகக் கூட்டிற்குள் பொத்திவைத்தல் என்பது தவிர்க்க இயலாத வழக்கமாகிவிட்டது எனக்கு.





ஆசானின் வார்த்தையைப் போல் சரியையும்,உண்மையையும் சொல்வதல்ல என் எழுத்து,நான் சரியென நம்புவதையும்,உண்மையென எனக்குப்படுவதையும் கூறுவதே.





அதே போல் எனக்குப் பிடித்தவைகளைப் பகிர்வதிலேயே எனக்கு மகிழ்ச்சி.





கண்களினால் சிரிப்பவர்களின் முகங்களை மறப்பதோ அல்லது அவர்களின் பிரியங்களைத் தவிர்ப்பதோ அத்தனை எளிதான காரியமல்ல..





அத்தகைய ஒரு மனிதர்தான் திரு.ரகுவரன். ”இது ஒரு மனிதனின் கதை” என்ற அவருடைய தூர்தர்ஷன் தொடர் முதல் சமீபத்தில் கடைசியாக அவர் நடித்த அல்லது நான் கடைசியாகப் பார்த்த “யாரடி நீ மோகினி” வரையில் நான் அவரைத் தொடர்ந்திருக்கிறேன்.









ஒரு கதாபாத்திரமாக வெளித்தெரியாமல், அந்த கதாபத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்கிறவனே நல்ல நடிகன்.





அதுபோல எந்த கள்ள கபடமுமின்றி தொடங்கும் வாழ்க்கை காற்றின் திசைக்கேற்ப அலைகழிக்கப்படும் பாய்மர படகென சூழ்நிலை அலைகழிப்புகளால் மாற்றம் பெறும் வாழ்கைதான் “ இது ஒரு மனிதனின் கதை”.





அந்த தொடரில் அவருடைய குடிகார வேடம் புகைப்படகருவியை அவருடைய வீட்டில் ஒளித்துவைத்து படம் பிடித்தது போன்று இயல்பாகயிருந்தது.





அந்தத் தொடரிலிருந்துதான் நான் அவரின் அபிமானியானேன்.





சுமார் 13 பக்களவிலான வசனத்தை வெறும் ஒற்றை ஆங்கிலச் சொல்லாக(I KNOW-புரியாத புதிர்) மாற்றி, ஏற்ற இறக்கங்களோடு (modulation??) வெவ்வேறு முகபாவங்களோடு, உண்மையான உளவியல் கோளாறு உள்ளவனின் சிரிப்போடு அந்த பாத்திரத்தை நம் கண் படைத்துக்காட்டிய அந்த கலைஞனை அவ்வளவு சுலபமாக மறப்பதற்கியலுமா..





எந்த ஒரு சிறிய பாத்திரமெனினும் முதல் படத்தைப் போன்ற சிரத்தை அவருடைய தனிக்குணாம்சம்.





யாருடைய தழுவலையும் போலன்றி, தனக்கு வழங்கப்படும் எந்த ஒரு பாத்திரத்தையும் தன்னிலிருந்து மலரச்செய்யும் இவருடைய உழைப்பு வியப்பிற்குரிய ஒன்று.இன்று எல்லாராலும் அனிச்சைசெயல் போல் உச்சரிக்கப்படும் “ஹோம் ஒர்க்” என்ற சொல்லை இவர் மூலமே நான் முதலில கேட்டறிந்தேன்.சிவாஜியிடம் நான் கேட்ட சொல் கூட ஒத்திகையென்பதே.அது அவருடைய மரபு வழித் தொடர்ச்சி.





படப்பிடிப்பிற்குச் செல்வதற்கு முதல் நாளும்,படப்பிடிப்பின் அதிகாலை-யிலும் கடற்கரைக்குச் சென்று தன் மனவார்ப்பை ஒரு முறை பரிசோதித்துக்கொள்ளல் என்பது இவருடைய வழக்கம் என்று நேர்காணலில் ஒருமுறை குறிப்பிட்டார்....





தனக்கு முன் தடம்பதித்தவர்களை விட்டு விலகி மற்றாருடைய பாதிப்புமின்றி தனக்கென ஒரு தடம் வகுத்துக்கொள்ளல் அத்தனை எளிதான காரியமல்ல...உலகநாயகனிடத்தில் கூட பாலச்சந்தர்,நாகேஷ் மற்றும் நடிகர்திலகத்தின் சாயல் ஏதேனும் ஒரு மூலையில் வெளிப்படவே செய்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.





என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் இவருடைய நடிப்பில் நான் யாருடைய பாதிப்பையும் கண்ணுற்றதில்லை.





இவருடைய புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் நளினம் பார்த்து இன்னும் அந்த பழக்கம் என்க்கு ஒட்டிக்கொள்ளாதது வியப்பே.செயல் தவறெனினும் செய்நேர்த்தி சில சம்யம் நம்மை நெக்குருக வைத்துவிடுகிறது.





பெரிய மற்றும் வித்தியாசமான ஒப்பனைகள்,பேச்சு வழக்கில் மாற்றம் ஏதுமின்றி வெறும் உடல்மொழியாலேயே தன்னுடைய கதாபாத்திரங்களை துலங்கச் செய்திடுவதில் அவருக்கு நிகர் அவரே.





புரியாத புதிர்,பூவிழி வாசலிலே,என் பொம்முக்குட்டியம்மாவுக்கு, அஞ்சலி, சம்சாரம் அது மின்சாரம், ஆஹா,கூட்டுப்புழுக்கள்,முதல்வன்,துள்ளித்திரிந்த காலம்,கன்னுக்குள் நிலவு,முதல் உதயம்,காதலும் கற்று மற முதலானவகள் என் ஞாபகவெளியில் இப்போதைக்குத் தெறிக்கும் சில படங்களாகும்.





பொதுவாகவே மம்முட்டியைப் போலவே தன்னுடைய ஆளுமையை கம்பீரமாகவே நிறுவிக்கொண்டவர்.





அவருடைய அந்தக் கம்பீரமான நடிப்பிற்காகவே பிடித்து சில,பிடிக்காமல் பல படங்கள் பார்த்திருக்கிறேன்.





“BROKEN AERROW" என்ற படத்தில் ஜான் டிரவோல்டா (JHON TRAVOLATA) ஒரு ஸ்டைலிஷ் ஆன வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவ்வளவு ஸ்டைலிஷ் ஆன நடிகர் தமிழில் யாரென்று யோசித்தால் என் கண்முன்னே உடனே நிழலாடுவது இவருடைய முகமே. அவ்வளவு அருமையான நடிகர்.





என்னை அதிகம் கவர்ந்தது அவருடைய அந்த உயரமும், அற்புமான அந்த சிரிப்பும்.வில்லத்தனத்திறக்கென்று ஒரு சிரிப்பும், வில்லங்கமில்லாதனத்-திற்கு என்று ஒரு சிரிப்பும் என நிறபேதங்களுடன் கூடியது அவ்ருடைய சிரிப்பு.





”என் சுவாசக் காற்றே” என்ற படத்தில் ரகுவரனுக்கும், பிரகாஷ் ராஜ்க்கு-மிடையேயான காட்சிகளின் சுவராஷ்யம் அத்தனை அலாதியானது. விழியில் நீர் வர யோசித்து யோசித்து நானும் என் நன்பனும் நகைத்த காட்சிகள் நிறைய உண்டு.





ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட ஒரு சாதரன மனிதன் என்ற நிலையிலும் எனக்கவர் மிகுந்த விருப்பத்திற்கும், நேசத்திற்குரிய- வருமாகவே இருக்கிறார்.





அவருக்குள்ளும் ஒரு காதல் சோகமுண்டு. காதலைப் பற்றி அவருடைய சில வரிகள் என்னைக் கவர்ந்தது...அவை:





’மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை ஆரதிக்கிறதுக்குப் பேர்தான் லவ்.நம்மை மாதிரி பசங்களுக்குத் தேவையான ஆறுதல்,ஆதரவு,அன்பு எல்லாமே ஒரே ஒரு பொன்னுகிட்டே கிடைச்சடறது (அ) கிடைச்சதா நாம பீல் பன்றதுதான் லவ்.





இருபது வயசுப் பையன் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றி யோசிக்கிறதவிட இன்னிக்கு என்ன பூ பூக்குன்னுதான் பார்ப்பான். எனக்கப்போ இருபது வயசு.





அவளை நேர்ல பார்க்கும்போது எதுனா கிறுக்கிட்டு இருக்கப் பிடிக்கும்.ஆனா ஒரு நாள் பார்க்கலைனாக் கூட கிறுக்குப் பிடிக்கும்’





கடைசியா தன்னோட காதல் தோல்வியை பதிவு செய்யற விதம் :





” நான் ஒரு பறவையை நேசிச்சேன்.எனக்கு அது உயிர் மாதிரி.அதுக்காக அதை ஒரு கூண்டுக்குள்ள அடச்சுவச்சுப் பார்க்கிறதுல அதுக்கே சம்மதமில்லை.நான் அதை நேசிச்சேன்.எங்கோ வானத்துல அது சிறகடிச்சுப் பறக்குதுங்கற நினைப்பே போதும்.பறவயை நேசிக்கிறவன் அதுதான் செய்வான்.”





இதற்கப்புறம்தான் இவருடைய திரைப்பட பிரவேசமே நடந்தது.





ரோகினியை காதல் மனைவியாக கைப்பிடித்தார்.அன்பின் நிறைவாய் ஒரு மகன். ரகுவரன் தீவிர சாய்பாபா பக்தனாகவும் இருந்திருக்கிறார்.





சில விசயங்களுக்கு காரணம் சொல்ல முடியாததுபோல அல்லது சில விஷயங்களின் அடர்த்தியை அளவிட நமது வாழ்பனுவம் போதாது போல்

அவர் தன் காதல் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.







அவர் அடிக்கடி தனிமைப் படும்போதெல்லாம் அவரை ஒரு சிலர் (விஜ்ய் கூட) மீட்டிடுக்கிறார்கள்.





அவருடைய தளர்ச்சியை நான் க்ண்கூடாக கண்டது “யாரடி நீ மோகினி” படத்தில்தான்.நிச்சயமாக அது வழக்கமான ரகுவரனில்லை. அதில் எந்த இடத்திலும் அவருடைய கண் சிரிக்கவேயில்லை.தனகுகு மட்டும் பில் கிளிண்டனுடைய சிரிப்பு மட்டுமிருந்தால் போதும் இந்த உலகையே வென்று காட்டுவேன் என்று ஒரு நேர்காணலில் அவர் சொன்னது இன்றுமெனக்கு நினைவிலிருக்கிறது.





பெருமழைகள் ஒயும்போது உண்டாகும் அமைதியை வெறும் வார்த்தை-களைக் கொண்டு நிரப்பிட முடியாது. திரு.ரகுவரனுடைய மரணமும் அப்படித்தான்.





சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு.ரோகினி சொல்லியிருக்கிறார் “ "எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" ஆகவே ஒரு நல்ல கணவனாகவும்,கலைஞனாகவும்,மனிதனாகவும் அவர் ஒரு நிறை வாழ்க்கை வாழ்திருக்கிறார் என்றே கொள்கிறேன்.

இடுகையிட்டது சு.சிவக்குமார்

Sugirtharani kavithigal...

My Photoதீண்டப்படாத முத்தம்












சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.



கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால், கவிதை வாசிப்பவர்களை விடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழலில் சக கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன்வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன் வைக்கிறேன்.





இது சுகிர்தராணியின் நான்காவது தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான 'அவளை மொழி பெயர்த்த'லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.இந்த நான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு. தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும் ஒரு கவிஞரை சலுகைகள் எதுவுமின்றி நவீன கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவதுதான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.





தமிழில் பெண்கள் எழுதும் கவிதைகள் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில் முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப் பிடிக்கப்படுகிறது என்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடி செய்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கருத்து - பெருந் தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. ஒரு புதிய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக் கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.





பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக் கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சிஅடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை,ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார்.இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது.இதுவரை தன் உடல் மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு.தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம்.இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.





ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது.சாதி,இன,பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது.ஒரு சமயம் இது மொழியின் சிக்கல்.அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட.இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக் குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற் சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.





மையப் பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்கு முறையா கவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழி வாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம், எல்லாம் வெளிப்படும் குரல்கள் அவை.



இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்று தான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப் படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் 'காமத்தின் புராதனக் கோவில்' என்றே சொல்லுகிறது. சுகிர்த ராணியின் இரண்டாவது தொகுப்பான 'இரவு மிருக'தில் ஒரு கவிதை இருக்கிறது. 'உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.' இந்த மென்மையான கற்பனைகளை புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம் பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனிதவயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள் கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப் படுகின்றன. 'முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை' (பக் 39 ) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது



கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல்.இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில் பேசுகிறது.





பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது. 'காட்டு வேர்' என்ற கவிதையை இங்கே சொல்லலாம். பக் - 38.





இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம்,கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம்,விலக்கப்பட்ட முத்தம்,சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14 கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனிஆள் என்ற வகையிலும் சமூகம் சார்ந்தும் அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்லுகிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றன சுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதை இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.



(2 ஜனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் சுகிர்தராணியின் ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பை வெளியிட்டு நிகழ்த்திய உரை)



@

















இடுகையிட்டது சுகுமாரன்.

Manam kotthi paravai...!

மனக்கதவைத் தட்டும் மரங்கொத்திகள்


எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா





ஒரிய மொழி குழந்தை இலக்கியத்தில்,மரங்கொத்திப் பறவைகளின் பங்கீடு மிகுந்திருக்கும். கதாநாயகனாக, நாயகியாக, தோழியாக, தூது செல்வோனாக, ஆபத்துக் காலத்தில் திடீரென்று தோன்றி காப்பாற்றும் தேவ தூதனாக, பாப்பாவின் கண்ணீரைத் துடைக்கும் சக தோழனாக என விதவிதமான வேடங்களை அணிந்து நம்மை மகிழ்விக்கும்.பொதுவாக குழந்தைக் கதைகளை நான் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக் கதவுகளைத் தட்டும் போது, விடாமல் படித்திருக்கிறேன். இப்போதும் கூட அவ்வப்போது படிப்பதுண்டு. தன்னந்தனியாக ஒருவயல் வெளியில்,ஓடைக்கரையில், தோப்பில் என இயற்கைசார் இடங்களில் காலை மாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது கரீக் என சப்தமிட்டு ஓடும் ஒரு பறவை இதுவாகவோ அல்லது மீன்கொத்தியாகவோ இருக்கும். கதவைத் தட்டும் ஓசை, மரங்களை செதுக்கும் ஓசை, பாறையில் சிற்பம் செதுக்கும் போது உருவாகும் உளியின் ஓசை என பல ரூபங்களை ,இது தன் அலகால் மரங்களைக் கொத்தும்போதும் ஏற்படும் ஓசையை நம் மனம் ஒப்பிடுகிறது. ஒரு முறை கும்பகோணம் செல்லும்போது ஒரு இடத்தில் சிற்பக் கலைக்கூடத்திற்கு அருகில் சில மணி நேரம் தங்க நேர்ந்தது. அது மரச்சிற்பக் கூடம். அங்கு ஒரு கலைஞன் கதவில் சிற்பங்களைச் செதுக்கியவாறு இருந்தான். அங்கு எழும்பிய ஒலி ,மரங்கொத்திப் பறவைகளை நினைவுபடுத்தியது. அவனும் அழகான ஒரு சிலையைச் செதுக்கிய வண்ணம் இருந்தான்.......



ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தூந்திரப் பிரதேசம் தவிர்த்து எங்கும் வாழும் ஒரு பறவையினமாக அடையாளம் காணப்படுகிறது. மரம் மட்டுமல்லாது, கள்ளி, புதர், புல், பாறை இடுக்கு என அனைத்தையும் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொள்ளும். இதனாலேயே அடர்ந்த காடுகளில் மட்டுமல்லாது, பாலைவனத்தில் கூட பார்க்க முடியும். 250 க்கும் மேற்பட்ட உள்வகுப்புகள் கொண்ட மரங்கொத்திகளில் பல ,இன்று அழிந்து விட்டன. சில அழிவின் விளிம்பில் உள்ளன. மிகக் குறிப்பாக சந்தன மூக்கு மற்றும் இம்பீரியல் வகை மரங்கொத்திகள் கிட்டத்தட்ட அழிந்தே போயிருக்கலாம் என்ற சந்தேகம் பறவை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.



மரங்கொத்திகளைப் பொறுத்தவரை,அதன் உடலமைப்பு மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. குட்டையான ,தட்டையான நடுவுடல் ,கடினமான அலகு, விறைப்பான குறிப்பிட்ட சாய்மானத்தில் அமையப்பெற்ற வால், சப்பையான அடிப்பகுதி கொண்ட கால்கள், தேவைப்படும்போது தன்னை மூடிக்கொள்ளும் வசதி கொண்ட ரோமக்கால்கள் என ஒவ்வொரு அங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. 10 கிராம்-----450 கிராம் வரை பல்வேறு நிலைகளைக் கொண்ட இதன் உடல் வளர்ச்சி, பெண் இனத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பெண்ணே பெரிய உடலைப்போடு இருக்கும். பல நிறங்களை உடலில் கொண்டிருக்கும். இவ்வண்ணங்களை, எதிர்பாலைக் கவர்ந்திழுக்கவும், தான் பருவ நிலையில் இருப்பதையும், ஆபத்துக்களை அறிவிக்கும் சமிக்ஞையாகவும் பயன்படுத்துகிறது.



இவைகளின் அலகு மிகுந்த கடினத்தன்மை கொண்டது. நீளமான நாக்கை உள்ளடக்கிய இதன் வாய் அலகால் மூடப்பட்டிருக்கும். மூக்கின் நுனி, கூர்மையாய் இருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு பொருளைக் கொத்தியவாறே இருக்கும். புழு பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள், பிற பறவையினங்களின் பச்சிளங் குஞ்சுகளைக் கண்டால் மிகுந்த வேகத்தோடும், அழுத்தத்தோடும் கொத்தும். கண் இமைக்கும் நேரத்தில் இரையைச் செயலிழக்கச் செய்து, மடக்கி, சுருட்டி, விழுங்கிவிடும். இரை பெரியது எனில், வேறோர் இடத்திற்கு எடுத்துச் சென்று சாவகாசமாக அமர்ந்து கொத்தித் தின்னும். சில வாரங்கள் இவை அலகைத் தீட்டாமல் விட்டுவிட்டதெனில் ,அதன் நுனி மழுங்கி தட்டையாகிவிடும்,பின் உணவைப் பிடிக்க முடியாமல் போய் இறப்பிற்கு வழிவகுத்துவிடும். மிகச் சிறிய குஞ்சுகள் கூட நீண்ட அலகைக் கொண்டிருக்கும்.



2004ம் ஆண்டு ஐரோப்பியப் பறவை ஆய்வாளர்களுக்கு ஒரு சந்தேகம் மேலிட்டது. இதன் அபரிதமான கொத்தும் தன்மையால் மூளைக்கு பாதிப்பு வராதா என்பதுதான் அது. நீண்ட ஆய்விற்குப்பின், மூளை மிகச்சிறியதாக உள்ளதாகவும், அதனைப் பாதுகாக்கும் மண்டைஓடு, நடுவே அமைந்த நீர், ஜவ்வுப்படலங்கள், கொத்தும்போது ஏற்படும் அதிர்வைத் தாங்கிக் கொள்வதையும் ,மேலும் கண்ணிற்குச் செல்லும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதை கண்டறிந்தனர். கண்ணை, மற்றொரு ஜவ்வுப்படலம் வெளியேயிருந்து பாதுகாக்கிறது. கொத்தும் போது, இப்படலம் விரிந்து கண்ணை மூடுவதோடல்லாமல், அதிர்வுகளையும் தாங்குகிறது. கொத்தி முடித்தவுடன் சுருங்கிக் கொள்ளும்.



மரங்களில் ஓணான், பல்லி போன்று செங்குத்தாக நடக்கும் திறன் கொண்டவை இவை. அப்போது உடலைத் தாங்கிக் கொள்ளும் வகையில் இதன் வால் அமைப்பு உள்ளது. அதற்கேற்ப கால்களும் உள்ளன. இதன் குட்டையான கால் பாதம் 4 விரல்களைக் கொண்டது. நடுப்பகுதியிலுள்ள ஜவ்வு ஷாக் அப்சர்வர் போல் செயல்படும். அதோடு மரங்களைக் கவ்விப் பிடித்துக் கொள்ளவும் பயன்படுகிறது. மரங்களின் தன்மைக்கேற்ப தங்களின் சார்பு வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும். பிசாந்தியம் சார்ந்த குழுவினங்கள் உண்டு. அதில் உள்வகுப்புகளும் உண்டு. தொடர் மழை காலத்தையோ,குளிர் காலத்தையோ அவை விரும்புவதில்லை. மழைக் காடுகளில் வாழ்பவை அவ்வப்போது தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கும். அத்தகைய காலங்களில் கிடைத்த உணவைத் தின்று வாழும் இயல்பு கொண்டவை. இடப்பெயர்ச்சிக் காலங்களில் குழுவின மோதல் ஏற்பட்டு உயிரிழப்பில் முடிகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்காவில் வாழும் தரையின மரங்கொத்திகள் நிலத்தில் குழி அமைத்து கூட்டை உருவாக்குகின்றன. அதற்காக,முள், கல், பாறைகள், புதர்களை நாடுகின்றன. தாங்கள் வாழ்ந்த பழைய இடத்திற்கு ஒருமுறையாவது திரும்பி வந்து முட்டையிடுவது தான் இவற்றின் சிறப்புக் குணம்.



பயண காலங்களில்,இடத்தை தேர்ந்தெடுத்தால் அங்கு குறைந்தது 1 வருடமாவது வாழும். அப்போது ஆணும்--- பெண்ணும், பருவ காலத்தில் காதலில் மயங்கி, கலவி கொள்கின்றன. கலவி ,பொதுவான முறையிலேயே ,பெண் கீழே படுத்து தன் பின்புறத்தைத் தூக்கி காட்டியபடியும், ஆண் மேலே அமர்ந்தும் உடலுறவு கொள்கின்றன. பல முறை உடலுறவு கொள்ளும்.இந்நிகழ்வு சில மணித் துளிகளே நீடிக்கும். இரண்டும் சேர்ந்து கூட்டை அமைக்கும். அதில் வௌ்ளை நிறத்தில் 3--5 முட்டைகளை இடும். பெரும்பாலும் காலை நேரத்திலேயே முட்டையிடும். 10--14 நாள் அடைகாப்பிற்குப்பின் குஞ்சுகள் வெளிவருகின்றன. முதல் 18---35 நாட்களுக்குப் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் குஞ்சுகள் பின் தனியே செல்ல எத்தனிக்கும். 8 வார காலத்திற்குப்பின் தனியே இயங்கும். இவ்வினத்தில் பெண்ணே பிரதான தீர்மானிப்பாளனாக இருக்கின்றன. முட்டையை அடைகாப்பதில் துவங்கி, உணவிடல், பராமரிப்பு,பாதுகாப்பு என அனைத்திலும் பெண் பெரும்பங்காற்றுகிறது. ஆணின் சிறப்பு ,இரவு நேரத்தில் கூட்டையும், குஞ்சையும் பாதுகாப்பது. பெண் ஏதோ ஒரு காரணத்தால் வெளியில் செல்லும் போது, ஆண் அடைகாக்கும். அந்தி மயங்கும் வேளையில் குஞ்சிற்கு இரையூட்டும். பருவ காலங்களிலும் சக தோழர், தோழிகளுடன் கலவியில் ஈடுபடும். கம்யூன் கலாச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோரை இழந்த குஞ்சுகள் கூட்டத்தின் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது. அவை பெரும்பாலும், பதவிப்போரிலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கொல்லப்படுகின்றன.



மலைப்பாம்பு, கழுகு, காக்கை போன்ற பறவைகள் இவைகளை வேட்டையாடும். இவை பிரதேச பற்று கொண்டவை என்பதால் உள் குடும்ப தகராறுகள் அதிகம் உண்டாகின்றன. இதனைத் தவிர்க்க பருவ காலம் தவிர்த்து சற்று முதிர் பருவத்தில் உள்ளவை தனித்தே வாழ விரும்புகின்றன. ஒன்றை ஒன்று சந்திக்கும்போது மூர்க்கத்துடன் சண்டையிட முயல்கின்றன. இதனால் இவைகளின் உடலில் ஆழமான காயங்கள் ஏற்படுகின்றன. இது இவைகளை இறப்பிற்கு இட்டுச் செல்கின்றன. பல கலவி கலாச்சாரம் இருப்பதால் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கும் காலத்தில் மட்டும் அமைதி காக்கின்றன. ஆணும் பெண்ணும் கலவியில் கூடி ,குஞ்சு பொரித்த பின் பேதமின்றி பாதுகாக்கும் பாங்கு ஆச்சரியமானது.



பூமியில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்ப ஏற்ற இறக்கம் ,அதிக பூச்சி மருந்து தெளிப்பு போன்ற காரணங்களால் மரங்கொத்திகள் மட்டுமின்றி பல பறவையினங்கள் பேரழிவிற்கு ஆளாகி உள்ளன. வயல் வெளிகளைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதிலும், வனத்தில் உருவாகும் ஒட்டுண்ணிகளை அழிப்பதிலும் மரங்கொத்திகள் பெரும் பங்காற்றுவதை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு மழைக் காலத்தில் அமேசான் காடுகளில் தோன்றும் பச்சை நிற வண்டுகளால் அங்கு வாழும் ஒரு வகை தவளை பயங்கர தோல் நோயால் பாதிக்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மரங்கொத்திகள் அவ்வண்டுகளை உண்பதால் தற்போது தவளைகள் தோல் நோய் பாதிப்பின்றி இருப்பதையும் அவர்கள் அறிக்கையில் தெரிவிக்கின்றனர். அவ்வகை வண்டுகளை உண்டு செரிமாணம் செய்யும் சுரப்பிகள் மரங்கொத்திகளுக்கு மட்டுமே உள்ளதையும் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.





suvai...!

ஐதராபாத்தை தலைநகரமாகக் கொண்ட ஆந்திர மாநிலம் பரப்பளவில், இந்தியாவின் நான்காவது இடத்தையும், மக்கள் தொகையில் ஐந்தாவதுயும் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது நீளமான கடற்கரையாக 972 கி.மீ.  கொண்டுள்ளது. தெலுங்கு முதல் ஆட்சிமொழியாகவும், உருது இரண்டாவது ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது. 4ம் நூற்றாண்டில் மௌரியர்கள், இப்பகுதி வரை தங்களது எல்லையை விரிவுபடுத்தினர். பலதரப்பட்ட வம்சத்தினரின் ஆட்சிக்குப்பின், காகதாயர்களால் வாரங்கல்லின் அருகில் ஒருங்கிணைக்கப்பட்டது. 1323 சி.இ.யில் டில்லி சுல்தான் கியாத் அல் தின் துக்ளக், உலூகான் தலைமையில் மிகப் பெரிய சேனையை அனுப்பி தெலுங்கு ராஜ்யத்தைக் கைப்பற்றினான்.




இந்திய உணவுகளிலேயே மிகவும் காரச்சுவை கொண்டு விளங்குவது ஆந்திர மாநில உணவுகள். ஊறுகாயும், சட்னிகளும் பச்சடி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தக்காளி, கோங்குரா, கத்தரிக்காய் போன்ற பல வகைப்பட்ட பொருட்களிலிருந்தும் ஊறுகாய் தயாரிப்பது இவர்களுக்கே உரித்தானது. ஆவக்காய் ஊறுகாய் இவர்களது பிரத்யேக தயாரிப்பு. 14ம் நூற்றாண்டில் முகலாயர்களின் வருகைக்குப்பின் ஹைதராபாத் உணவுகள் பிரசித்தி பெறத் துவங்கின. இது பெரும்பாலும் அசைவ உணவாகும். அதில் நெய்யும், மசாலாப் பொருட்களும் தாராளமாகச் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. பிரியாணி புகழ்பெற்ற உணவாகும்.



பெசரெட்டும் இஞ்சித் துவையலும்







தேவையானவை:

2 கப் முழு பாசிப்பயறு, 1கைப்பிடி பச்சரிசி, வெங்காயம் ---3 சீரகம் --சிறிது,இஞ்சி ---சிறு துண்டு, பச்சை மிளகாய்---4, உப்பு --ருசிக்கேற்ப, எண்ணெய் தேவையானது.

பாசிப்பயறு, அரிசியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். (குறைந்தது 7 மணி நேரம்). ஊறவைத்த பொருட்களுடன், இஞ்சி, பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து நைஸாக அரைக்கவும். உப்பு சேர்க்கவும். தோசைமாவு பதம் இருக்க வேண்டும். பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சிறிதளவு சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய் 2, வெங்காயம் நறுக்கியது சேர்த்து லேசாக வதக்கி மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லை வைத்து, அதில் இந்த மாவை ஒரு கரண்டி ஊற்றி தோசை போல் திரட்டி சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்து வரும்போது திருப்பி விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக இஞ்சித் துவையல், வேர்க்கடலை துவையல் அல்லது சாம்பாருடன் சாப்பிடவும்.



இஞ்சித் துவையல்



2ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் --அரை கப் இஞ்சி சுத்தம் செய்து நறுக்கியது. அரை கப் வெல்லம். சிறிது புளி ஒரு சிறு கோலி அளவு, உப்பு தேவையானது. 

கடாயில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு , மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். அதோடு, இஞ்சி, தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். கடுகு ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.



முத்திரை---24



வெள்ளி, 22 ஜூலை, 2011

story

My Photo
Caste & Class2

நான் ஓர் வெள்ளாளன்

நான் ஓர் பிராமணன்

நான் பள்ளிக்கூடம் போற பெடியன்.

-ஹரிஹரஷர்மா-

முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்றீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது. அப்போதெல்லாம் அம்மா எனக்கு முன்னுதாரணங்களாய்க் கூறியது கோப்பாய் சிவம் என்கிற ஒரு பிராமணரின் புத்தகங்கள், இலங்கை வனொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரஷர்மாவின் குரல் என்பவற்றைத்தான். வேறெந்தக் கனவுகளையும் என்னுள் கிளர அம்மா அனுமதித்ததில்லை. பனங்கொட்டைகளை பொறுக்கி கடகத்திலிட்டபடி, புகையும் அடுப்பை ஊதியபடி, இடியப்பம் புழிந்தபடி இவர்களைப் பற்றிய உயர்வான புனைவுகளை அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள். கயத்ரி மந்திரத்தை சொல்லிமுடித்த மாலைப் போதொன்றில் அவள் கூறினாள்; 'நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம். ரயில்வேப் பொடியள், நளச்சிணியள் (எங்கேயோ இருந்து இடம்பெயர்ந்த வந்த பஞ்சமர்கள், கைவிடப்பட்ட பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களது பாவனைக்கு கோவில் கிணறு மறுக்கப்பட்ட பின்னர் அசுத்தமான ரயில்வே கிணற்று நீரை அவர்கள் பருகினர்.) எல்லாம் வருவாங்கள். அவங்கள் ஆரோடயேனும் சேந்தாயெண்டு கதை வந்துது... அம்மா உனக்கு இல்லை சரியோ, நீ கோமதி மாமின்ர பொடியனோட மாத்திரம் சேர். சாப்பிடேக்க சாப்பாட்டுப் பெட்டிமூடியால மறைச்சு வைச்சுத் தான் சாப்பிட வேணும்-நீ பிராமணன்! ஏதாவது திருகுதாளம் பண்ணினாய், எனக்கு வந்து சொல்ல ஆக்கள் இருக்கினம் சரியே.'





பாடசாலையில் முதல்நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது-நான் பயப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்ல ஆசிரியர்களும் நான் அப்பாவைப் போலவே இருப்பதாய் அம்மாவிடம் கூற அவள் 'கைப் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோ' எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவும் மூன்று நான்கு வெள்ளாளப் பெண்மணிகளும் நின்றுகொண்டிருந்தனர், பென்ச் அழுக்கானது என என்னையோ அல்லது அவர்களது பிள்ளைகளையோ அப்பக்கம் அண்டவிடாது பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. பெத்தா அதில் தான் உட்கார்ந்திருந்தாள். அவள் வீ.சீயில் துப்பரவு வேலை செய்பவள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்; 'பெத்தான்ர பிள்ளையும் பள்ளிக்கூடத்தில சேருதே....! கடவுளே கலிகாலம்'. பெத்தாவை நான் பார்த்தேன் - கறுப்பு. 'எவனுக்கோ ஈணப்போறாள், வயித்தப் பார்..' சிரித்தார்கள். ஊத்தை பென்ச்சில் அமர்த்திருந்த பெத்தா ஒருமுறைதானும் இப்பக்கம் திரும்பிப் பார்த்தாளில்லை.. அளவுக்கதிகமாக நீலம் போடப்பட்டு ஊத்தைகள் வடிவாக எடுபடாமல் இருத்த சீருடையை பெத்தாவின் மகன் அணித்த்ருத்தான். அவன் என்னைபோல சப்பாத்து அணித்திருக்கவில்லை. கால்களை அடிக்கடி சொறிந்த படி மூக்கில் புல்லாக்குப் போல தொங்கும் சளியை தாயின் சீலைத்தலைப்பில் துடைத்தபடி நின்றிருந்தான். அர்வருப்பாய் இருந்தது. அம்மா எல்லா படிவ நிரப்பல்களும் முடித்து என்னைக்கொண்டு போய் வகுப்பில் விடும் போது நான்கு பளபளப்பான மணவர்களைக் அறிமுகப் படுத்தினாள். என்னைப் போல மிகு வெண்ணிறச் சேட்டையும் மடிப்புக் குலையாத காற்சட்டையையும் அவர்கள் அணிந்திருத்தனர். வெளிநாட்டில் இருவருடைய அப்பாக்கள் இருந்தனர். அவர்கள் அழகான புத்தகப் பைகளை வடிவான பொம்மைக்குட்டி தண்ணீர்ப் போத்தல்களை வைத்திருந்தனர். நான் வட்ட வடிவிலான சாப்பாட்டுப் பெட்டி ஒன்றை வைத்திருந்தேன். எனது பளபளப்பான வெள்ளாள நண்பர்களும் விதவிதமான வடிவ சாப்பாட்டுப் பெட்டிகளை வைத்திருந்தனர். பஞ்சமர்கள் பெரும்பாலும் சாப்பாடு கொண்டுவருவதில்லை. அப்படியே ஓரிருவர் கொண்டுவந்தாலும் வனிதாமணி ரீச்சரிடம் வாழையிலைக்கும் பூவரசம் இலைக்கும் பேச்சு வங்குவார்கள். (அவர்கள் பூவரசம் இலைகளை வெகுநுட்பமாக உதயன் பேப்பரில் விரித்து அதன் மேல் புட்டையோ பாணையோ வைத்துப் பார்சல் கட்டிக் கொண்டுவருவார்கள். வனிதாமணி மிஸ் வகுப்பறைச் சுத்தம் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தவராதலால் அவருக்கு வாழையிலைகள் பூவரசம் இலைகள் வீசப்பட்டு அவற்றுக்கு காக்கைகள் வட்டமிடுவது குறித்து பெரும் அதிருப்தி இருந்தது.)

நாங்கள் (வெள்ளாள மாணவர்களையும் என்னையும்) முன்வாங்கில் இருந்தோம். பெண்பிள்ளைகளுக்காக ஒதுக்கப் பட்ட மறுபிரிவின் முன்வாங்கில் சுஹாசினி, யசோதரா, நிர்மலா போன்றோர் அமர்ந்திருக்க பின்வாங்குகளில் றபீக்கா, சொர்ணா, மேரி போன்றோர் அமர்ந்திருந்தனர். முன்வாங்கு பின்வாங்கு ஒழுங்கு ஆசிரியர்களால் மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவம் படிப்பவர்கள் மாமர நிழலுக்குப் போய்விட வேண்டும். கிறிஸ்தவ ஆசிரியையின் தலையில் காகம் எச்சமிட்ட சம்பவம் பாடசாலை முழுதும் தெரியவந்த பின்னரும் கூட.

பவளம் ரீச்சரை கோயில்லில் சந்திக்கும் நேரமெல்லாம் அம்மா என்னைப் பற்றி விசாரிப்பாள். ' என்ன பவளம், பின்வாங்குப் பெடி பெட்டையளோட ஆள் கொண்டாட்டமே?'

பின்வாங்குப் பெடியள் கதைத்துக் கொண்டிருப்பதற்காக, குழப்படிகளுக்காக ரீச்சர்களிடம் அடிவாங்கியபடியே இருந்தார்கள். எங்களுக்கு அடியே விழுவதில்லை. ஏனெனில் நாங்கள் குழப்படி விடுவதில்லை. ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். அவர்கள் பிழைவாங்கியபடியே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பின்வாங்கில் இருந்தார்கள். நாங்கள் சரிகளையே அதிகம் வாங்கவும் விரும்பவும் செய்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இந்து உயர்வேளாள குலத்தினராகவும் பிராமணர்களாகவும் இருந்தோம்.

என்னைக் கள்ளப் பிராமணி என அழைக்கும் பழக்கத்தை பின்வாங்கு மாணவர்கள் கொண்டிருந்தனர். காரணம் இல்லாமலில்லை. அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. அவர்கள் அடி வாங்கும் போதெல்லாம் நானும் என் வெள்ளாள நண்பர்களும் மிக மோசமாகப் பகிடி (பகிடியை விட வேறு ஏதாவது மோசமான வார்த்தைகளிருப்பின் அதை இவ்விடத்தில் ஒட்டி வாசிக்கவும்) செய்வோம். அய்ந்தாம் ஆறாம் ஆண்டுகளில் படிக்கும் போது இக்கிண்டல்கள் அதிகமும் பாலியல் சார்ந்தவையாக இருந்தன. 'பனைமரத்தில ஏறியிருந்த உன்ர கொப்பன்ர கு censored / 'உன்ர கொம்மா ஆமை றைச்சி திண்டிட்டு ஆமிக்காரனோட படுக்கிற வேcensored' என்ற வகையான கிண்டல்கள். அவர்களால் எங்களை -முக்கியமாக நோஞ்சானான என்னை- அடித்து நொறுக்கி விட முடியும். ஆனால் தவறுதலாய்க் கூட அவர்கள் என்மீது தொட்டதில்லை. வெள்ளாளச் சிறுவன் ஒருவனது பொன்மூக்கை இடைவேளையின் போது அவர்கள் உடைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. இராணுவத்தினருடன் பஞ்சமர்களின் தாய்மாரை இணைத்துப் பேசியதாலேயே அது நடந்தது. ஆசிரியரிடம் அப் பனையேறிச் சிறுவனின் நியாயங்கள் எடுபடவேயில்லை. 'திருப்பிக் கதையாத' ஆசிரியர் திருப்பித் திருப்பி அவனுக்கு கூறிக்கொண்டிருந்தார். முதலில் அவனது விரல் மொளியைப் பதம் பாத்த வாத்தி பின்னர் மேசைக்குக் கீழாய் அவனைக் குனியச் செய்து பின்புறமாய் விளாசினான் - அவனிடமிருந்து எந்த அழுகையொலியும் வராதது வாத்த்யின் கோபத்தை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. பெண்பிள்ளைகள் பேசாமல் இருந்தார்கள். ஆனால் நானும் எனது முன்வாங்கு நண்பர்களும் வாத்தியின் கிண்டல்கள் ஒவ்வொன்றுக்கும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய பாடம் முழுதும் குறித்த மாணவனை முட்டுக்காலில் நிற்கும் படி வாத்தி கூறினான். நான் அவ்ன்பக்கம் ஒருமுறை பார்த்து நைக்காட்டினேன். அந்தக் கண்களை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமுடியாது. நீர் தளும்பி அழுகையை அடக்கும் கண்ணும் துடித்துக் கொண்டிருக்கும் சொண்டும்....

மறுநாள் இடைவேளையின் போது அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருப்பதாய் ஆசிரியரொருவர் அழைத்துச் சென்றார். அவனது தாயார் அவனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டதாய் பள்ளிக் கூடத்தில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருபோதும் நான் அவனைக் கண்டதில்லை.

***



2001 இடப்பெயர்வு என்னை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சேரும்படி செய்தது. அம்மாவுக்கு வேதக்காரப் பள்ளிக்கூடம் என்பதில் பல அதிருப்திகள் இருந்தன தான் என்றாலும் வேறுவழியிருக்கவில்லை. ஆங்கிலம் கற்க மிக ஏதுவான இடம் எனவும் பஞ்சமர்கள் அதிகம் படிப்பது வட்டு சென்றல் போன்ற பள்ளிக்கூடங்களில் தான் எனவும் இங்கு அதிகம் கல்வி கற்பது கிறிஸ்தவ வெள்ளாளர்கள் தான் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னரே அரைகுறை மனதுடன் அம்மா அங்கு படிக்க அனுப்பினாள்.

"What was your school?"

"Palai Central College, Sir"

"Temporary Admission, No?"

"yes sir"

" What is your name?"

" My name is Hariharasharma sir"

"ஓ! அய்யராக்களா?'

'ஓம் சேர்'

'அய்யா, அப்ப சொல்லுங்கோ, பூணூல் போட்டாச்சே,'

வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர் டஸ்டரை கமில்ரனை நோக்கி வீசினார். ' டேய் கமில்ரன், நாயே.. எந்த நேரம் பார் கதை. கொப்பரும் கொம்மாவும் என்ன கத்திக் கொண்டே ஓcensored. வகுப்பறை சிரித்தது. எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. எனது முகக்குறியிலிருந்து அதைப் புரிந்து கொண்ட வாத்தி 'அய்யாவுக்கு விளங்காதுதான்' என்றான். பிறகும் 'அய்யா' எண்டான். எழுந்து நின்றேன். 'இருங்கோய்யா, இருந்து பதில் சொல்லுங்கோ' 'பூணூல் போட்டாச்சே'

'ம்ஹூம்.'

'ஏனய்யா? ஏழு வயசில போடவேணுமெண்டு சொல்லுவினம்?.."

'பதினேழு வயசிலயும் போடலாம் சேர். இனித்தான் போடோணும்' (பொய் சொன்னேன். உண்மையிலேயே 'அய்யா' அங்கீகாரம் எனக்குப் பிடித்திருந்தது. அதைக் குலைக்க நான் விரும்பவில்லை. உண்மையில் அப்பா-அம்மா கலப்பு மணம் குறித்த இரு சமூகங்களின் அங்கீகாரத்தினின்றும் என்னை புறந்தள்ளியிருந்தது. வெள்ளாளர்களும் ஒருவித வேற்றுமை உணர்வோடேயே என்னை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்னை அங்கீகரிக்கவேயில்லை. அப்பா அம்மாவைக்கைவிட்ட போது அவரைப் பிரமச்சாரி என்று அக்கினிசாட்சி கூறிக் மறு கல்யாணம் பண்ணிவைக்கத் தயாராயிருந்த பிராமணிகள் எனக்குப் பூணூல் போட்டுவிடத் தயாராயிருக்கவில்லை - மனுநீதி என்னை பிராமணி என்று ஏற்றுக் கொண்டும்)



***



அம்மா யாழ்ப்பாணக் கல்லூரியில் எனது இருப்புக் குறித்து மிகவும் அதிருப்தியடைந்திருந்தாள். அவளது அதிருப்தி என்னை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மாற்றியது. கொகுவில் இந்துக் கல்லூரி அம்மாவை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. மஞ்சவனப்பதி கோயில் - இரண்டு கட்டடத் தொகுதிகளுக்கு நடுவில் இன்னொரு முருகன் கோயில் - நல்ல சாதி பெடியள் படிக்கிற இடம் என அப் பாடசாலை குறித்து அலட்டிக் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. எனது ஆங்கிலம், நடை, உடை பாவனைகள் கொக்குவில் இந்துவில் என்னைச் சுற்றி ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. திருநீறு பூசிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் இருந்தது. தினம் தினம் பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவாரம் பாடிக் கொண்டிருந்தேன். பிரேயரில் கிறிஸ்தவ மாணவர்கள் எங்களது ஒன்றுகூடல் மண்டபத்தின் மூலையில் வந்து நிற்கும்படி விதிக்கப் பட்டிருந்தார்கள். சமயப் பாடத்தின் போது அவர்கள் லைபிறறிக்கு அனுப்பப் படுவார்கள்.

தமிழ்த்தினப் போட்டிகள் என்றால் எனக்கும் ஏனைய இந்து மாணவர்களுக்கும் சரியான வாசிதான். தலைப்புகள் எல்லாம் சமய இலக்கியங்கள் சார்ந்தே கொடுக்கப் பட்டிருக்கும் . விவாதமென்றால் அது மணிமேகலையா கண்ணகியா, சீதையா கண்ணகியா என்ற வட்டத்துள்ளேயே சுழலும். எப்பவாவது, தொழில்னுட்ப முன்னேற்றம் நம் சமூகத்துக்கு நல்லதைப் பண்ணுகிறதா இல்லையா தொனியில் ஏஎதாவது தருவார்கள். அதற்குக் கூட திருக்குறளில் இருந்தும் அங்கிருந்தும் இங்கிருதுமாய் மேற்கோள் காட்டி வென்றுவிட முடியும். தமிழ்த்தினப் போட்டியென்றால் இந்துக் கல்லூரிகளின் கும்மாளம் சொல்லிமாளாது. ஆங்கில தினப் போட்டிகளின் போது கூட யாழ் இந்துவும் வேம்படியும் கொக்குவில் இந்துவும் எப்படியோ பல முதலாமிடங்களை சுவீகரித்து விடுகின்றன. ஏனெனில் ஆங்கில தினப் போட்டிகளில் விவிலியம் சார்ந்த எந்தக் கட்டுரைகளும் கோரப் படுவதில்லை.

மிகக் கஷ்டமான உடல்செயற்பாடுகளைக் கோரிநிற்கும் ஒப்படைகளுக்காக நான் கோகுலனை வைத்திருந்தேன். சரியான விதத்தில் சேர்கிட்டுகளைப் பொருத்தி மின்னோட்டத் தொகுதி தயாரிப்பது. மோட்டாரில் இயங்கும் விளையாட்டு சுழலி செய்வது போன்ற விஞ்ஞானப்பாட ஒப்படைகளுக்கும் அவனை நம்பியிருக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் அவனை வீட்டு வரவேற்பறையினுள் அனுமதிக்க வேண்டிய அவலம் அம்மாவுக்கு வந்தது. மஞ்சள்த் தண்ணி கரைத்து ரெடியாய் இருக்கும் மாலைப்போதுகளில் அவன் வருவான். அவன் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாக இருந்தது. அம்மா ஏதோ பெருமையில் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாள். அதுவே ஒவ்வொருநாளும் அவனது வருகைக்கு வித்திட்டது. அம்மா மூக்குப்பேணிகள் இல்லாது போய்விட்டமைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். கோகுலனுக்கான ரம்ளர் சமயலறையின் மூலையில் கிடக்கும். பளையில் இருந்தபோது அம்மா இரண்டு மூக்குப்பேணிகளை வைத்திருந்தாள். அவற்றிலொன்று வேலிப்பூவரசம் கெட்டில் கவிழ்க்கப்பட்டிருக்கும். அது பன்ம்பாத்தி கிண்டவரும் பனையேறிக்குடியைச் சேர்ந்த முதியவளுக்கானது. மற்றையது மாதத்தில் மூன்று நாட்கள் தான் பாவிப்பதற்கு.



***

உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு (ஆங்கில இலக்கியம்) சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் 'காவாலிப் பள்ளிக்கூடம்'), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்து விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் டொனேஷன் தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை.

நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்தது. மிகுந்த கண்டிப்புடைய வன்முறையாளரான அவர் என்னை ஒருபோதும் 'நீ' போட்டுக் கதைத்ததில்லை. (அவரால் கதைக்க முடிந்ததில்லை எனப்து மேலும் பொருத்தமானது) என்னை அவர் ஆங்கில யூனியனுக்கு தலைவராகப் பிரேரித்த போது 'அய்யாவோட ஸ்கில்ஸ் வந்து மார்வெலஸ். ஹி டிஸர்வ்ஸ் திஸ்' என்றார். எனது ஆங்கிலமும் சாதியும் அவரது அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம் என்பது எனது ஊகம்.

'சர்மா, முந்தி எந்தப்பள்ளிக்கூடம்? ஏன் இஞ்ச வந்தனீங்கள்? இங்கிலிஷ்க்கு என்ன றிசல்ஸ். தமிழ் வாசிக்கிறது போல உங்களுக்கு இங்கிலிஷ் விளங்கும் என்ன?' இது தான் மாணவர்கள் என்னை எதிர்கொண்ட விதம். ஒ.எல் இல் கணிதத்துக்கு விசேடசித்தி வைத்துக் கொண்டு கலைப்பிரிவிற்கு வந்தது வேறு அவர்களிடம் விநோதமான மதிப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். 'மச்சான் அந்தச் சரக்கு செம கட்டையடா... கோழி..' அது இதென்று கதைத்துக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கண்டதும் நிறுத்திக் கொள்வார்கள். நானே என்னைச் சுற்றிக் கட்டமைத்துக் கொண்ட இந்த ஒளிவளையம் மீது குற்ற உணர்வுடன் கூடிய அதீத பிரியம் இருந்ததைக் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தன. புறனிலையாளனாய் நின்று என்னையும் மாணவர்களையும் விளையாட்டாய் அவதானித்துப் பதிந்து கொண்டிருந்தேன் டயரியில். 'இரவில எத்தினை மணிகாணப் படிக்கிறநீர்' போன்ற கேள்விகளே அவர்கள் என்னிடம் கேட்க முடிந்த கேள்விகள். எனது உள்புதைந்த ஆளுமை காரணமாயும் குறைந்தளவிலான பாடசாலைப் பிரசன்னம் காரணமாயும் அவர்களுடன் நெருங்கித் தொடர்புற முடிந்ததில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களிலும் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். நான் ட்ரிப்பிள் எக்ஸ் பார்க்கிற ஆளா இல்லையா, வயதுக்கு வந்தவனா வராதவனா என்பதெல்லாம் அவர்களது முக்கியமான இடைவேளை அலசல்கள். சாடைமாடையாக மாத்திரமே அவர்கள் என்னைக் கிளறியதுண்டு. ஒருதடவை செல்போனில் பதிவுசெய்யப்பட்ட நீலப்படத் துண்டுகளைப் பின்வாங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் 'என்ன ஐயா, எப்ப ஆம்பிளையாகிறது' என்று கத்தினான். நான் மையமாகச் சிரித்து விட்டு வாசிப்பது போன்ற பாவனையைத் தொடர்ந்தேன். அன்று விட்டுவிட்டார்கள். முன்திட்டமிடப்பட்ட அணுகல்களை அவர்கள் என்னிடம் நிகழ்த்தியதுண்டு. எனக்கு இவையெல்லாம் ஆர்வமிக்க விளையாட்டொன்றின் அங்கங்களாகத் தோன்றியபடியால் புதிர்மிக்க ஒருவனாய் என்னைக் கட்டமைத்த படியிருந்தேன். எனது உள்வாங்கல்களின் படி அம்மாணவர்கள் என்னை அணுகமுடிந்ததில்லை என்பதே முடிவாய் இருக்கிறது.

நான் கடந்துவந்த எல்லா ஆசிரியர்களுக்குமே எனது கதைக்கும் தொனி மீதான மோகம் இருந்து வந்திருப்பதை நான் உள்ளுணர்ந்திருக்கிறேன், இவற்றுள் ஸ, ஹ, ஷ, ஜ உச்சரிப்புகள் அளித்த பங்கு முக்கியமானது. (எல்லோராலும் தினேஸ் என்று அழைக்கப்படும் ஒருவனை நான் தினேஷ் என்பேன்)

பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டுவரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களிலும் மாமிச உணவு கொண்டுவர்வோர் யாரும் கிடையாது. பொரித்த முட்டை போன்ற காலை உப உணவுகள் எப்போதாவது வருவது வழக்கம். எனக்கு மூன்று கதிரைகள் தள்ளி முட்டைப்பொரியல் பார்சலை விரித்து வைத்திருந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் பின் வரிசையில் சென்று சாப்பிடும் படி விரட்டப்பட்டான். என்னுடன் வேறு சில விடயங்களை அலசியபடியிருந்த ஆசிரியை விடயம் மாறி, தான் சுனாமியின் பின்னர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டதாயும் இறைச்சி சாப்பிடுபவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லையென்றும் பிள்ளைகளுக்காக முட்டை சமைப்பதாகவும் அதுவும் பாம் முட்டையே கொடுப்பதாகவும் கூறத் தொடங்கினார். இதையெல்லாம் கூறும் போது ஒருவிதமான சங்கடம் அவருக்கிருந்தது. மீண்டும் வெள்ளைக்காரர்கள் இப்போதெல்லாம் மரக்கறிகளை அதிகம் விரும்பும் போக்கு அதிகரித்து வருவதாக கூறி மரக்கறி உணவுப்பழக்கத்தின் நன்மைகளை வகுப்பிலிருந்த பிறருக்கு கூறத் தொடங்கினார். எனக்கு இதெல்லாம் மூன்று கதிரைகள் தள்ளி இருந்த முட்டைப் பொரியலுக்கான பிராயச்சித்தமாகவே தோன்றிற்று.

நாடக வகுப்புகள் மிக சுவாரசியமானவை. 1947க்குப் பிற்பட்ட தமிழ் நாட்டு அரங்க செயற்பாடுகளை என்முன்னிலையில் கற்பிக்கும் போதெல்லாம் ஆசிரியரிடம் ஒருவித அசௌகரியம் தொற்றிக் கொள்ளும். ஆரிய பார்ப்பனீயத்துக் கெதிராக திராவிட உணர்வுகள் வெடித்துக் கிளர்ந்த வரலாறு என்ன்முன்னிலையில் கற்பிப்பதற்கு அவருக்கு பல மனத்தடைகள் இருந்தன. சிறிதாய் சிரித்தபடி ஆரம்பிப்பார் 'சர்மா.. குறைநினைக்கக் கூடாது' .

அர்சியல் கற்கும் போதுகூட ஆசிரியர்களிடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். பாரதிய ஜனதாவை, ஆர்.எஸ்.எஸ்-இனை விமர்சிக்க நேரும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்து சமாளிப்புப் புன்னகை சிந்தத் தவறுவதில்லை. என்னை நோக்கி அவர்கள் கூறும் ச்மாதானப் பிற்குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்: 'எவ்வளவுதான் பார்ப்பனீயம் கொடூரமானதாய் இருந்தாலும் அது இந்தியாவின் சமூகக்கட்டுமானங்களை முன்னேற்றியிருக்கிறது.' புரிந்து கொண்டதாய்ப் புன்னகைப்பேன். அவர்கள் தொடர்வார்கள் ' அதேபோல முற்போக்குச் சிந்தனை கொண்ட நம்பூதிரிபாடு ஒரு பிராமணர் தானே'. இந்த சமாதானங்களை எனக்கு வழங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஓர் மனதில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய அரசியலை வடிவமைத்தது எதுவாய் இருக்கக் கூடும்?



***

ஷோபா சக்தியின் 'விலங்குப்பண்ணை'

சிறுகதையிலிருந்து சில பகுதிகள்

· // ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார். //



· // அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். //



· // கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார். //



· // வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார். //



· // நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை. //

Posted by Team@muranveli

Eezham..Tamil;

My Photoகுசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. “தலைக்கு வாருங்கோ” எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி “சரி காணும்” கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.


கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலிர்த்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி “என்ர குஞ்சு” எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.



மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் “அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே” கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.



“என்ன கக்காத் துணி தோச்சனீரே” பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.



“நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே” குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோதி, தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை “ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை” கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்த இறுக அணைத்துக் கொள்ளுவாள்.



“கக்கா இருந்திட்டாள் போல” அண்ணி கை நீட்ட “நான் மாத்திறனே” கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். “எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ” சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.

“எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ” கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். “சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?” கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு “இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்” பக்கத்தில படுத்திருப்பாள்.



“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா

சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-

சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா



தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா

சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா

கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா

அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு

என்னைப் பாரம்மா…”



குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே “ங்க ங்க” எண்டு சேர்ந்து பாடும்.



“அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ” பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்” எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். “போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்.” அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். “என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு” எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு “இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்” முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.



“நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்” மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். “என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்..” கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. “என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..



“கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி..”



மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே “சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்” கௌசி அடுக்கிக் கொண்டு போக “இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா” தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். “போடி கள்ளப் பெட்டை” கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. “உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா” கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே “ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?” மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். “கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே”, “ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்” அவள் துடையில் அடிப்பாள். “ஆ..ஆ” அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்

“ஒரு குடம் தண்ணி – நூறாண்டு

ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு

மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு

ஐயோ தண்ணி முடிஞ்சுதே” சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..



துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..





கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. “எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்” குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.

“கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே” காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. “என்னம்மா என்ன நடந்தது” கேட்டவளிடம் “நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ” விசும்பினாள். “என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா” “அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்” கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க “உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே” அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.



“பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது” அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். “இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ” பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து “இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ” அண்ணா சொல்லி விட்டுப் போனான். “கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ” அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். “இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ”, “இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ” பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.

வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. “இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு” அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.



“இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு..” தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். “நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்” கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.

தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..



எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..



“தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ” அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.

Posted by கறுப்பி

வியாழன், 21 ஜூலை, 2011

timepass..

14.7.11பராக்குப்பார்த்தல் - ராமநாதபுரத்து நாட்கள்


கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. சாத்தூரிலிருந்து பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் ராமநாதபுரத்தில் ஒரு விடுதி அறையில் என்னை நட்டுவைத்து. சுற்றிச்சுற்றி வந்து பார்க்கிறேன். வாழ்க்கை புது நாத்துப்போல துவண்டு நிற்கிறது. அதைத்தூக்கி நிறுத்த புத்தகங்களையே கதியெனத் தேடி ஓடவேண்டியதிருக்கிறது. வாங்கிவைத்து படிக்கமுடியாமல் போன புத்தகங்கள் தனிமைக்கான அருமருந்தாய் வந்துசேர்கிறது. படிக்கப் படிக்க வியப்பை அதிகரிக்கிறது ஒருபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். அந்த எழுத்துக்கள் நாம் பார்க்கும் மேலோட்டமான உலகத்தையும் செய்திகளையும் அரசியலையும் அப்படியே குப்புறக்கவுத்தி தெருவில் வீசுகிறது.அணைகள், மேம்பாலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பளபளப்புக்குப் பின்னாடி அமெரிக்க கழுகின் எச்சில்வடியும் நாக்குகள் தொங்கிக் கொண்டிருப்பதைச் சொல்லுகிற புத்தகம் தான் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். எதையெதையோ தோண்டித் துருவிக்கண்டுபிடிக்கிற இந்திய உளவுத்துறை இதுபோன்ற உலகளாவிய சதிவலைப் பின்னல்களின் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயப்படுகிறது. அது பயமா மரியாதையா இல்லை ஊரில் வட்டிக்கு கொடுத்து வாங்குகிறவர்களைப்பார்த்து ஓடி ஒளிந்துகொள்கிற உதறளா என்று தெரியவில்லை.



சகோதரர் கோணங்கியின் கல்குதிரை கிடைத்தது. அவரது எழுத்துக்கள் குறித்து இருபதுவருடங்களுக்கு மேலான பயம் இன்னும் தெளிந்த பாடில்லை. ஆனாலும் அவரது கல்குதிரை இதழ்களில் வரும் சில எழுத்துக்கள் பிரம்மிப்பாக இருக்கும். அப்படித்தான் பிரம்மிக்க வைத்தவர் தோழர் மு.சுயம்புலிங்கம்.அதே போல இந்த வேனிற்கால இதழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு கதை ச.விஜயலட்சுமியின் பாராசூட் மனிதர்கள் சிறுகதை. சென்னை நமக்கு கடற்கரையையும்,நெரிசலையும் ஆட்டோக்களையும்,சுடசுட சினிமா போஸ்டர்களையும், ரெங்கநாதன் தெருவையும்,பண்டிபஜாரையும் இன்னும் பல ஈர்ப்புகளை செய்துவைத்திருந்தாலும் அந்த எழும்பூர் ரயில் நிலையத்துக் கருகில் வசிக்கும் கூவம் நதிக்கரை மனிதர்கள் கட்டாயம் மனிதாபிமானமுள்ள யாரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு விடுவார்கள். அவர்கள் குறித்தான நமது மௌனக் கேள்விகளுக்கு ஒரு பகுதி விடை சொல்லுகிறது பாராசூட் மனிதர்கள்.



புத்தகங்கள் பற்றியென்பதனால் ராமநாதபுரம் புத்தகக்கடையில் நடந்த ஒரு உரையாடலைச்சொல்லாமல் இருக்கமுடியாது. அது ஒரு விரிவடைந்த பாடப்புத்தகங்கள் விற்கிற கடை. இது பள்ளிகள் ஆரம்பிக்கும் காலமாதலால் அங்கே ஒரு மாணவன் அவனின் பெற்றோர்கள் என்கிற கணக்குப்படி விலக இடமில்லாத கூட்டம். அங்குதான் கதைப்புத்தகங்களும் சிற்றிதழ்களும் கிடைக்கும் என்று நண்பர் சொன்னதை நம்பிக்கொண்டு போயிருந்தேன்.அவர் சொன்னதில் ஏதும் தவறும் இல்லை. பத்தடி அலமாரியில் எல்லாம் ரமணிச்சந்திரன் நாவல்கள், கண்ணதாசன் கட்டுரைப்புத்தகங்கள்,ராஜேஷ்குமார் போன்றவர்களின் படைப்புகள் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நெடுநேரம் புத்தகங்களுக்கிடையில் ஊற்றுப்பர்த்துக்கொண்டிருந்த என்னிடம் சிப்பந்தி என்னவேண்டுமெனக்கேட்டார்.



சாண்டில்யன்,லேனா தமிழ்வாணன்,கண்ணதாசன் என சில புத்தகங்கள் பற்றி சின்னதாக அறிமுகமும் செய்துவைத்தார். அவை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஒரு சில புத்தகங்களைச் சொன்னேன் என்னை அவர் பார்த்த பார்வையை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறி வர நகர்ந்த போது அப்பாவின் விரல்பற்றியிருந்த சிறுவன் ஜெயாமோகன் அப்படின்னா யாருப்பா என்று கேட்டான்.அவனைப்பார்த்தால் ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் மாணவனாக அல்லது குறைந்த பட்சம் அதிகபட்சம் பணம் கட்டிப்படிக்கும் ஆங்கிலப் பள்ளி மாணவனாகவாவது இருக்கவேண்டும். அவனது பொறுப்புள்ள அப்பா இப்படிச்சொன்னார் ''ஷி இஸ் எ ஸ்டோரி ரைட்டர்'' என்று. என்னை முறைத்துப் பார்த்த அந்தச் சிப்பந்தியே பரவாயில்லை எனத் திரும்பிப் பெருமிதத்தோடு பார்த்துவிட்டுவந்தேன்.