செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

Bavachelladurai.

இவர்களும் இந்த நூற்றாண்டும்

-பவா செல்லதுரை பற்றி பிரபஞ்சன்



மிழரோ, இந்தியரோ, வெளிநாட்டினரோ, அவரை வழியில் நிறுத்தி, ‘கோயிலுக்குப் போற வழி எது சார்?’ என்று கேட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கணம் முதல், அந்தக் கேள்விக்கான பதிலாகத் தன்னை மாற்றி அமைத்துக் கொள்வார் அவர். கேட்டவரை, நடுத்தெருவில் நிறுத்தித் தெளிவாக வழியைச் சொல்வார். அப்போது காரைப் ஓட்டிக்கொண்டே போகும் கணேசனை நிறுத்தி, ‘கணேசாவடக்குத் தெரு வழியாத்தானே போறே. சாரைக் கொண்டு போயி கோயில் வாசலில் விட்டுட்டுப் போஎன்று சொல்லி, வழி கேட்டவர் மறுத்தாலும் அவரைக் காரில் தள்ளி அனுப்பிவிட்டு, பயணி பத்திரமாகக் கோயில் போய்ச் சேர்ந்தாரோ இல்லையோ என்று கவலைப் படுகிறவராக அவர் இருப்பார்.
அவர் பவா செல்லதுரை. ஆகவே, அவர் கதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறார்.


வா செல்லதுரை ஒரு வார இதழில் ( மீடியா வாய்ஸ் ) தொடர்ந்து எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பாக, எல்லா நாளும் கார்த்திகை என்றொரு புத்தகம் அண்மையில் நான் வாசிக்க நேர்ந்தது. உடன் அது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.
பவா, தான் சந்திக்க நேர்ந்த, நட்பு பூண்ட, உறவாடிய ஆளுமைகள் பலரைப்பற்றித் தன் அவதானத்தை உவகை சார்ந்த தொனியில் எழுதியிருக்கிறார். படைப்பிலக்கியம் சார்ந்தோர், சினிமாவில் கலை நோக்கமுடையவர்கள், கவிஞர்கள் என்று பலப்பல ஆளுமைகள். அந்த ஆளுமைகள், மனிதக் கவிச்சி கொண்டவர்கள் என்பதே அவர்களை இவர் எழுதுவதற்குக் காரணமாகிறது. அந்தப் புகழ் கொண்டவர்கள் தங்கள் கிரீடங்கள், புஜக் கிரீடைகள், தங்கத் தோடாக்கள் அனைத்தையும் திண்ணையில் வைத்துவிட்டே, பவாவின் நட்பு வட்டத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். அந்த ஆளுமைகளின் மனிதக் கவிச்சையின்பால் ஈர்க்கப்பட்டே, பவா அவர்களிடம் தன் நட்புக் கரத்தை நீட்டுகிறார். இவர் கட்டுரைகள், அக்கலைஞர்களைப் பற்றிய விமர்சனம் அன்று. ஒரே வர்ணக் குழம்பில் தங்கள் தூரிகைகளைத் தொட்டு வேறு வேறு சித்திரங்கள் வரையும் நண்பர்களுடன் நட்புணர்வோடு நிகழ்த்திய தோழமை உரையாடல், தோழமை என்பதால், இடித்துரை இருக்காது என்பதல்ல, இருக்கிறது.
ன் இதயத்துக்குள் வந்த மனிதர்களை எழுதுவது என்று பவா இயற்றும் முயற்சி, இந்த எல்லா நாளும் கார்த்திகை நூலில் இருந்து தொடங்கவில்லை. இதற்கும் முந்திய 19. டி. எம். சாரோனிலிருந்து தொகுப்பிலேயே தொடங்கியிருக்கிறது. இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கும் பவா, அவரது அப்பாவைப் பற்றி எழுதிய கட்டுரையே இச்சரடின் தொடக்கக் கண்ணி. அப்பாவைப் பற்றி மகன் எழுதிய அபூர்வமான பதிவு அது.
அப்பா, அவரது இருபத்து ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்திருக்கிறார். வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் பாறைக்குப் பக்கத்தில் தான்தோன்றியாக வளர்ந்திருந்த எட்டி மரத்தைத் தெரிவு செய்து கயிறையும் கட்டி இருக்கிறார். மாலை ஐந்து மணிக்கு, பாறையில் மல்லாந்து படுத்து வானத்தைப் பார்த்தபடியே, தன் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பாத திடச்சித்தத்தோடு படுத்துக் கிடக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. ஏன் என்றே அறியாது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. தற்கொலைக்கு நிச்சயப்பட்ட மனோபாவக்காரனுக்கு முன் காலமும் வெளியும் திகைத்து நிற்கும். காற்று அவனைக் கடக்காமல் ஓரிடத்திலேயே நின்று சுழலும். அவன் கண்களுக்கு முன் வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதில்லை. மாலைச் செவ்வானம் அவன் விழி விளிம்புகளுக்குள் படிவதில்லை. எழுந்து வரும் நிலா, எதிர்த் திசையில் நடக்கும்.
அந்த இறுதிக் கணத்தின் அழைப்பை எதிர்பார்த்த அப்பாவை, மாலை ஆறு மணிக்கு எழுந்த வெடிச் சத்தமும் வாண வேடிக்கையும் அவரை அவரின் சட்டைக் காலரைப் பிடித்துக் கரைமேல் போடுகிறது. புகைப்படலத்தின் ஊடாக, திருவண்ணாமலையின் தீபச் சுடரொளி விண்ணுக்குத் தாவி தன் நாவை நீட்டுகிறது.
அப்பாவுக்குச் செய்தி அருளப் பட்டுவிட்டது….
தன்னைத் தேடித்தான் இந்த நகரத்துக்குத் தினம் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வருகிறார்கள் எனத் துளியும் கர்வமின்றி ஊரின் மத்தியில் ஓர் ஆத்மா மாதிரி வியாபித்திருக்கிறது மலை. திருவண்ணாமலை ஒரு சுற்றுலாத் தலம் இல்லை. ஒரு சுற்றுலாத் தலம் தன் விருந்தினர்களை வரவேற்று மகிழ்வித்துத் திருப்பி அனுப்பிவிடும். திருவண்ணாமலையோ விருந்தினர்களைத் தனக்குள் புதைத்துக் கொள்கிறது
ப்ராட்டஸ்டன்ட் கிறித்துவக் குடும்பப் பின்னணி உடைய சாப்பாடு. அதுவரை, சந்நதம் கண்டவர் போலக் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருப்பார் அப்பா. தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு.
1999 நவம்பர் 29. தீபத் திருநாள். அப்பாவின் இறுதி நாள் அது. பவாவை அப்பா தன் அருகில் அழைத்து இப்படி சொல்கிறார்.
பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னிக்கு என்னால போக முடியலை. நீ எனக்காக செய்வியா?’
வார்த்தைகளில் கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது.
என் துக்கமும் கண்ணீராய்த் தான் வழிந்தது.
எனக்கப்புறமும் என்பேர்ல இதைச் செஞ்சிடுப்பா
அன்று மாலை தீபம் கண்ட நேரத்துக்குப் பிறகு, அப்பா, ஓங்கி வளர்ந்த அந்த ஜோதியோடு தன் ஜீவிதத்தை இணைத்துக் கொண்டார்.

னிதர்களை எழுதுவது என்று பவா தொடங்கிய இந்த வரிசையில் அப்பாவும் ஒரு மனிதராகவே இணைகிறார், அப்பாவாக இல்லை என்பது முக்கியம். அக நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட தார்மீக ஆவேசக்காரராக அப்பா வாழவில்லையென்றால் பவாவின் பட்டியலில் அப்பாவுக்கு இடம் இருந்திருக்க முடியாது என்பதை நிச்சயமாகவே என்னால் சொல்ல முடியும்.
ஒரு மனிதரில் எது பவாவை வசீகரிக்கிறது, அடர்வனத்தில் பசுந்தழைக்குள் மறைந்திருக்கும் பச்சைக்கிளிகளின் சிறகை, பவா அடையாளம் காண்கிறார், கண்டடைகிறார் என்பது எனக்கு மிக முக்கியம்.
கலைஞர்களும் படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைந்து சென்னை பெரியார்த் திடலில் கருத்துச் சுதந்திரம் வேண்டிக் குழுமியிருக்கிறார்கள். பற்றி எரியும் படைப்பாளிகளுக்கூடாக பாலுமகேந்திரா மேடை ஏறுகிறார். பேசுகிறார்.
என் கேமராவை நான் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்கவிடாமல் அடைத்துக் கொண்டிருக்கிறது.’
இதோ இந்தப் புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறதுஎன்கிறார் பவா. அதன்பின்யாத்ராபடம் பார்க்க வாய்த்திருக்கிறது அவருக்கு. போதுமே. அதன்பின் பாலுமகேந்திரா திருவண்ணாமலை சாரோனுக்கு நிரந்தரமாக எதிர்பார்க்கப்படும் நண்பரும் உறவினரும் ஷைலஜாவிற்குத் தந்தையுமானார். இது இவ்வாறு நேராமல் போனால்தான் நான் ஆச்சரியப்படுவேன். எனக்கும் பாலுவுக்கும் முப்பதாண்டுகளுக்கும் மேலான சினேகம். பாலுவை நினைக்கும் போதெல்லாம் மயிலிறகு ஒன்று என் மனதில் தோன்றும். பாலு ஒரு மயிலிறகு. பச்சைப்பசேலென்றும் அடர்ந்த கருத்த நீலமும், இனம் விளங்கா ஜீவரஸமும் ததும்பும் மயிலிறகு. மயிலைப் பற்றி அல்ல ஒரு கானகத்தைப் பற்றிப் பேசுவதைக் காதுள்ளவர்கள் கேட்டிருப்பார்கள். ஓரிரண்டு முறை எங்களுக்குள் உரசி தீப்பொறிகள் தோன்றி இருக்கின்றன. என்ன பண்ண? இருவருமே தீக்கற்களாக இருந்தோம். இருவருக்குமே தலைகள் இருக்கின்றன என்பதுதான் பிரச்னை. ஆனால் எங்களுக்குள் மனமும் இருக்கின்றனவே, ஆகவே இணைந்து கொண்டோம். இது எங்களின் மாலைக் காலம். வெயிலகன்று, இளம் தென்றல் போதில், வீட்டுக்கு வெளியே அமர்ந்து யோசிக்கையில் எதற்குத்தான் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது. பாலு, முதிர்ந்திருக்கிறார். முதுமை வேறு. முதிர்வு வேறு. பாலுவுக்கு முதுமை இல்லை. இது கலைஞனுக்குள் நேரும் மலர் அவிழும் நேரம். அவர் ஒரு படத்துக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். கதையை என்னிடம் ஒருமுறை சொன்னார். பாலுவின் இன்னொரு சந்தியா ராகமாக இது இருக்கும். அதைக் கடக்கவும் செய்யும்.
பவாவின் மனப் பேரேட்டில் இடம் பெற்ற இன்னொருவர், ம்முட்டி. மெகா ஸ்டார் என்று கருதப்படும் மம்முட்டியின் நட்பு, ஒரு சிறிய முரண் கருத்துரையாடலில்தான் முகிழ்ந்திருக்கிறது. அதன்பின், பவாவுக்கு மம்முட்டி நண்பராகி இருக்கிறார்.
இப்படி தமிழ்நாட்டில் பெரும் நிலப்பரப்பு பயிரிடப்படாமல் இருக்கும்போது கிராமத்து மனிதர்கள் டீக்கடைகளிலும் தெருமுனைகளிலும் கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்என்பதுபோலக் கருத்துரைத்த மம்முட்டியிடம் பவா, எம்மக்கள் சோம்பேறிகள் எனவும், அரசே அவர்களை அப்படி வைத்திருக்கிறது என்றும் தன் நியாயத்தை பவா எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய நாட்டை எந்த முன் யோசனையுமின்றி இரும்புகளின் நாடாக்க முயன்ற நேருவின் காலத்திலிருந்து, விவசாயிகளின் தற்கொலைகள் ஒரு பத்திரிக்கைச் செய்தியாகிவிட்ட இன்றைய அவலத்தை பவா எடுத்துரைக்க முயன்றபோது, ‘இல்லை இல்லை, என்னால உங்களோட உடன்பட முடியாதுஎன்றிருக்கிறார் மம்முட்டி. ‘நீங்கள் உடன்பட வேண்டாம். ஆனால் இது என் கருத்து. இதைச் சொல்ல என்னை அனுமதியுங்கள்என நான் அவரைப் பார்த்தபோது அவர் சிரித்துக்கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டார்...
ன் எழுதுமேசைக்கு முன் திருவண்ணாமலையின் மலைக்காட்சிகள் கொண்ட காலண்டரை மாட்டி வைத்திருக்கிறேன். 2010ஆம் ஆண்டு காலண்டர் அது. காலாவதி ஆன பிறகும் அது என் முன் இருக்கிறது. வெறும் பார்வைக்கு மீறிய, வேறு கண்கள் கொண்ட மாபெரும் கலைஞன் ஒருவனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டரில் இருந்தன. தவம் செய்து, மீண்டும் மீண்டும் கண்டு, பார்த்து, உணர்ந்து, தரிசித்து மலைகளை அப்புகைப்படக்காரன் படம் எடுத்திருக்கிறான். நான் கண்டேயிராத மலையின் பேரழகை, தரையைப் பார்த்து மலை சுற்றும் மக்களும் பார்த்தே இராத மலையின் பெருவனப்பைப் பொதிந்து வைத்திருந்த காலண்டர் படங்கள் அவை. எனக்கு தினசரி, மாதாந்திரக் காலண்டர்கள் மீதெல்லாம் எந்தக் காலத்திலும் கவர்ச்சி இருந்தது இல்லை. ஏனெனில், வருடம் மாதம் தேதி போன்றவை எனக்கு எந்தச் செய்தியையும் பயனையும் தந்ததில்லை. அவற்றைப் பார்த்து இயங்க எனக்குக் கடமையோ கட்டளையோ இல்லை. என்றாலும் அந்தக் காலாவதியான காலண்டரை நான் மாற்றிவிடத் துணியமாட்டேன். பாரியின் பறம்பு மலையை, கபிலரின் வார்த்தைகளைக் கொண்டு அப்படங்கள் எடுக்கப்பட்டன என்றே நான் நினைக்கிறேன்.
பவா ஒரு புகைப்படக் கலைஞனை இந்த எல்லா நாளும் கார்த்திகை புத்தகத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். அவர் பெயர் கிரீஷ் ஃபேலன். கனடாவைச் சேர்ந்தவர். சுமார் எழுபது நெருங்குபவர். தன் வாழ்வைத் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட கலைக்குத் தின்னக் கொடுத்தவர். உலகம் முழுக்க சுற்றி வந்திருக்கிறார். ஒவ்வொரு தேசத்திலும் ஒன்று அவருக்குப் பிடிக்கிறது. அதை மட்டுமே படம் எடுக்கிறார். ஸ்வீடனில் ஏரி. எகிப்தில் வீடு. இந்தியாவில் சாதுக்கள். அவர் அலைந்த அலைச்சலும், செலவிட்ட பணமும், மொழி தெரியாத பிரதேசங்களும் மிக அதிகம். இதெல்லாம் எதற்காக? அது அப்படித்தான். அதுதான் அவர் ஜீவிதம். அது அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு கோப்பைத் தேநீர். அதை அவருக்கான நியதியின்படி வாழ்கிறார். அத் தேநீரை அவர் உட்கார்ந்தும் குடிப்பார். நின்றும் படுத்தும் அருந்துவார். அவர் ஆத்மா, அவரை இயக்குகிறது. ஆத்மாவை அவர் இயக்குகிறார். செக்குமாடுகளின் வட்டத்தைப் பந்தயக் குதிரைகள் கடக்கின்றன. பந்தயக் குதிரைகள் பரிசு பெறும்போது, வானத்துப் பறவைகள் ஆகாயத்தை நிரப்புகின்றன. பறவைகளுக்குப் பாதை யார் போடுவது? கிரீஷை, அவருக்கு அறிவித்து விட்டு பவா அவரைப் பார்க்கச் செல்கிறார். மரங்கள், செடிகள், துரவுகள், இருள்கள் சூழ்ந்த வீட்டு வாயிலண்டை நின்று கிரீஷ் என்கிறார். அமைதியைப் பின்தள்ளி மீண்டும் கிரீஷ் என்கிறார். ப்ளீஸ் வெயிட் என்கிறது எதிர்க்குரல். பவா அமைதியை இழந்தபோது, கிரீஷ் தோன்றுகிறார். பவா, தாமதத்துக்கான காரணத்தை ஆராய்கிறார். கிரீஷ் தன் கேமராவைக் கம்ப்யூட்டரில் இணைக்கிறார். பவா சிறுதிரையைப் பார்க்கிறார். சற்றைக்குப் பிறகு பவா திரையில் பார்த்த காட்சி இவரைச் சில்லிட வைக்கிறது. ஒரு நாகப் பாம்பு படம் எடுத்து அசைகிறது. கிரீஷ் சமையலறைக்குத் தேநீர் போட விரைகிறார். கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கிறது. பாம்பின் பற்பல அசைவுகள், கோணங்கள், அதன் கோபங்கள், தப்பித்தல்கள், எதிர்ப்புகள், குழைவுகள்...
அய்யோ, கிரீஷ், இது எப்போ எடுத்தது?’
ஜஸ்ட் நவ், பவா. அதான் லேட்
கிரீஷ் சொல்கிறார்...
பௌர்ணமி நிலவு, உலகம் முழுக்கத் தோன்றுகிறது. எனினும், திருவண்ணாமலையிலிருந்து தான் அது தன் சகல சௌந்தர்யத்தோடும் கர்வப்படுகிறது. எப்படிப் பார்த்தும், எங்கிருந்து நோக்கியும், மடியில் புரண்டும், மார்பில் குடித்தும் எத்தனை முறை இதன் உடலில் நடந்தும் எனக்குச் சலிக்காதது இம்மலை மட்டும்தான். என் அருகிலேயே தங்கி, என் ஸ்பரிசத்திலேயே இருந்துவிடு கிரீஷ், என்ற அதன் அந்தரங்கமான வார்த்தைகளுக்காகவே இங்கிருக்கிறேன், பவா.
மிக சந்தோஷமான வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் முன்பகுதியில் சூழ்ந்த நகரத்தை இம்மலை கழுவி, சுத்தப்படுத்தி ஒரு குழந்தைக்கு வெண்ணிற ஆடை போர்த்திக் கொள்வது மாதிரி என்னை அரவணைத்து நிற்கிறது பவா...’
கிரீஷின் வாழ்க்கை எவ்வளவு மகத்தானது.
கிரீஷ் மற்றும் அன்றைய அனுபவங்கள் பற்றி பவா இப்படிப் பதிவு செய்கிறார்.
‘...அது என் வாழ்வில் முற்றிலும் வேறொரு நாள். எனக்கு வழிவிட்டு வெளியேறின நாகத்தைப் போலவே. அதன் ஜீவிதத்தில் யாராவது ஒருவர் அதன் அத்தனை அசைவுகளையும் அங்குலம் அங்குலமாகப் படமாக்கின அனுபவத்தை மரச் செறிவினூடே வளர்ந்த அதன் வாழ்வுக்கு எவ்வளவு புதுசோ அவ்வளவு புதுசு எனக்கு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்காரன் பருவம் கடந்து, காலம் அறிந்து மழை, வெய்யில், நீர், தூறல், காலை, மாலை, இரவு, அதிகாலை...’
இப்படியான பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார் அவர். ஏன்? ஏனென்றால் அவர் அப்படி. அவர் இயல்பு அது. பவா, பவா மாதிரிதானே எழுத முடியும்?
பாட்டுக்கார லட்சுமி பற்றிச் சொல்லாமல், என் மனம் நிறையாது. பவா எழுதிய சுமார் 45 கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைச் சித்திரங்களில் அதுவும் ஒன்று. 19. டி. எம். சாரோனில் இடம் பெற்ற அக்கட்டுரை, வெளிவந்த காலத்தில் எனக்கு மன அவசத்தையும் தவிப்பையும் தந்த படைப்பு அது. தமிழ்ச் சமூகம் பெண்கள் மேல் சுமத்தி இருக்கும் பேரவலத்தின் ஒரு மாதிரி லட்சுமி. அப்பெண்ணை சாராயம் காய்ச்சுகிறவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துத் தம் பாரத்தைக் கழித்துக் கொண்டார்கள் அவளைப் பெற்றவர்கள். சாராயம் காய்ச்சுகிறவனுக்கு அழுகிய வாழைப்பழத்தையும், குப்பைகளில் இருந்து பேட்டரிகளையும் சேகரித்துத் தந்து, இந்தியப் பதிவிரதைத் தன்மையைப் புலப்படுத்தாமல் இல்லை அவள். கணவன், விற்ற சாராயத்துக்கே அடிமை ஆகி, அவள்முன் ஒரு கேள்வியை நிறுத்தினான். இதற்கிடையில் இறைவன் அவளுக்கு இரண்டு குழந்தைகளை அருளி இருந்தான். மனக்கொதிப்பின் உச்சத்தில் ஒருநாள் கல்லைப் போட்டுச் சாராயப் பானையை உடைத்தாள் லட்சுமி. இரண்டு குழந்தைகளுடன் வெளியேறினாள். இறைவன் தப்பாக இணைத்ததைச் சரியாகப் பிரித்தாள் லட்சுமி. பிதா, பரமண்டலத்தில் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். மாட்டுக்கறியைக் கூவி விற்றாள். காய்கறி விற்றாள். தன்னையும் சில வேளைகளில். குழந்தைகளையும் படிக்க வைத்தாள். ஒரு கட்டத்தில், விட்டு வெளியேறினாள். சொட்டுச் சொட்டாய்த் துளிர்த்து, ஒரு ஏரி குளம் அளவுக்கு அகன்றும் ஆழப்பட்டும், விரிந்த அவளது துக்கம், ஒரு வடிகால் எடுக்க விரும்பி இருக்கிறது. பக்கத்து வீடுகளில் நேர்ந்த மரண நிகழ்வுகளில் கலந்துகொண்டு பாட்டுபாடி அழத் தொடங்கி இருக்கிறாள். ஆங்காரமாய்க் கூவி, அறைந்துகொண்டு, மரண வீட்டில் துக்க அலையை நிரப்பினாள். துக்கத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அவள் மூட்டித் தந்த துக்க நெருப்பை இரவலாகப் பெற்றார்கள். இப்படியாகத் தன் துக்கத்தைப் பொது துக்கமாக, துக்கத்தையே, துக்கம் வெடித்துக் கிளம்பிப் பாட்டுருவம் கொள்ளும் ஒரு கலையாக லட்சுமியால் வசப்படுத்த முடிந்திருக்கிறது. லட்சுமி தன் துக்கத்தையும் பங்கேற்போர் அவரவர் துக்கத்தையும் கலந்து இழவு வீட்டை சமூகவயப் படுத்தினார்கள். துக்கமே உள்ளும் புறமுமான பெண்களின் வெடித்தெழுந்த பிரதிநிதியானாள் லட்சுமி.
என்னை மிகவும் கலங்கடித்தவர்களில் ஒருவர் லட்சுமி. வாழ்க்கை, பெரும்பாலான பெண்களுக்குத் தன் கருணையற்ற கொடூர முகத்தையே காட்டுகிறது. சகல வன்முறைகளாலான பட்டியலைப் பெண்கள் மேலேயே பிரயோகிக்கிறது. கணவன் தொடக்கம், சகல வன்முறைகளால் ஆன பட்டியலைப் பெண்கள் மேலேயே பிரயோகிக்கிறது. கணவன் தொடக்கம், சகல பகைவர்களும் அவர்களைச் சிதைக்கிறார்கள். இந்த யுத்தத்தில் பெண்கள் மட்டுமே எப்போதும் நிராயுதபாணிகளாகித் திக்கழிந்து நிற்கிறார்கள்.
இது என்னைத் துன்புறுத்துகிறது. நசுங்கிய அலுமினியத் தட்டோடு பிச்சைக்கு வரும் குழந்தைகளைப் பார்க்கையில், உண்ண முடியவில்லை. இரவு உணவின்றிப் படுக்கப் போகும் குழந்தைகளைக் கொண்ட கயவர்களின் பூமியாக இந்தியா ஆகிவிட்டது. பெண்கள் புரிந்து கொள்ளப் படுபவர்களாக இல்லை. எப்போதும் தற்காப்புச் சிந்தனைகளிலும், புறத் தாக்குதல்கள் பற்றிய தவிப்பிலுமே, பாதிச் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்புக் குழந்தைகளோடு பசிக்குக் கையேந்தும் பெண்கள், தேசத்தை நடுக்குறச் செய்யவில்லை. எந்தத் தலைவனும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
லட்சுமி பற்றிய கட்டுரையைப் பவா இப்படி முடிக்கிறார்.
‘... ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடங்கள் மூலம் துடைத்த லட்சுமியின் மரணத்துக்கு இவர்கள் யாரும் வரப் போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக் கூடப் போவதில்லை.
கடவுளே!
நான் இந்த தேசத்தின் எந்தத் திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா
வா செல்லதுரை அடிப்படையில் புனைவிலக்கியக்காரர். மிகவும் கச்சிதமான, செட்டான, அடர்த்தியான, கலை வெற்றிகளைச் சாதித்த சிறுகதைகளைத் தந்தவர். 2007 இல் வெளியான அவருடைய சிறுகதைத் தொகுதியானநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைஎன்னும் நூலுக்கு ஆன முன்னுரையில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்.

‘...தமிழ்ச் சிறுகதை வெளியில் காத்திரமான வரவாக வந்திருக்கிறது இத் தொகுப்பு. பெரிதும் வழக்கில் இராத சூழல்கள், கதைக்களன்கள். வியப்பேற்படுத்தும் மனிதர்கள் என விரிந்திருக்கிறது பவாவின் இந்த உலகம். ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவு விடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டு, பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிவிரிப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடித்தபின் தரும் கலை இதம், வசீகர அனுபவங்கள். நிலைபேறுடைய பல கதைகள் இத் தொகுப்பில் உள்ளன.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இன்றைய மீள் வாசிப்பில் பவாவின் கதைகள் ஒளி குறைந்து விடாதது மட்டுமல்ல, புதிய வெளிச்சத்தைத் தத்துவப் பெருவெளியில் தந்து நிற்கின்றன. காலத் தேருக்கு முன்னால்தான் கதைக் குதிரைகள்கலாபூர்வமான கதைகள்ஓடிக்கொண்டிருக்கும். நல்ல கதைகள் காலத்துக்கு முந்தையவை.
இந்தத் தொகுப்பில் உள்ளசத்ருகதைக்கு நிகராக நான்கு வேறு கதைகள் இருந்தாலும் எனக்குச் சத்ருவையே எடுத்துப் பேசத் தோன்றுகிறது. தமிழ்ச் சிறுகதை நெடும்பரப்பில், இக்கதைக்கு நிகராக சுமார் இருபது கதைகள் இருக்கலாம். தமிழ்ச் சிறுகதையின் சுமார் 90 வயசுக் காலத்தில், ஆகச் சிறந்த கதைகள் அவ்வளவுதான் தேறும். கடல் போன்ற விசால கருணை மனம் கொண்ட விமர்சகரே ஆனாலும், முப்பது கதைகளுக்குமேல் போகச் சாத்தியமில்லை. மேலும் இன்னொரு முக்கியமான விஷயம், பவாவின் கதைகள் அசலான தமிழ்க் கதைகள். தொல்காப்பியத்தின் விமர்சன அளவுகோல்படி இது குறிஞ்சி சார்ந்த படைப்பு. கருப்பொருளாலும் முதற்பொருளாலும் உரிப்பொருளாலும் வெம்பாலை மேவிய கதை. தமிழ் வசனத்தில் இவ்வளவு உக்ரமான படைப்பு இணை கூற யோசிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பஞ்சம் மக்களை எவ்வளவு தூரம் சிதைக்கும் என்பதே இக்கதை. பஞ்சம் என்கிற உக்கிரத்தின் ஊடே, நிலம் சொட்டு நீரற்றுப் போனாலும் மானுடத்தின் இதய ஊற்று என்றுமே வற்றாது என்று சொல்கிற மகத்தான கதை.
முதலில் பஞ்சம் என்பது என்ன? இந்தத் தலைமுறை அறியாத ஒரு பயங்கரப் பாழைப் பற்றி பவா எப்படியெல்லாம் எழுதுகிறார்.
‘... அந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தைச் சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித் தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம்...மனிதர்கள் உலர்ந்து காய்ந்து கருகினார்கள். பிள்ளை பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சைக் குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள் ஈரம் தேடி மலைக்காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வைத்த ஒவ்வொரு அடியும் பூமியின் வெடிப்பில் விழுந்து விடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.
தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும் கள்ளிகள் அடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதையிலும் பாம்புகளின் எலும்புக் கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்து தெரிந்த அதன் முள் எலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.
பிறக்கும் குழந்தைகள் இரத்தப் பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன.
மலைக்காட்டுப் பாறைப் பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய காட்டுப் பன்னிகளும் குள்ள நரிகளும் பெருங் கூச்சல் போட்டு, பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வளைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின. ஆடுகளும் மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்துக்கு, கம்பந் தட்டைகளுக்கென்று கை மாறின. பூர்ச மரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது.
யாரும் யாரையும் தின்றுவிடக் கூடிய கொலைவெறியைப் பஞ்சம் மனித மலைகளில் ஏற்றியிருந்தது...’
தமிழ் இலக்கியம், கதை வசனம் காணாத விவரணங்கள் இவை. சரி, ஒரு மழை இந்த அனைத்தையும் போக்கி, சந்தோஷங்களை மக்களுக்குத் தந்துவிடுமே. அதற்கென, பவா உருவாக்கிய சந்தர்ப்பம் ஒரு காட்சி அற்புதம்... துளி ஈரம் மாரியம்மனின் கண்ணில் ஒட்டி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையும் இன்றி மனித குலம் எப்படி மூச்சுவிடக் கூடும். மாரியம்மன் கண்ணில் ஒட்டியிருக்கும் ஈரம் எப்படி மழையாகப் பொழியும்? குதிர்களைத் துடைத்து, பானைகளை அலசி, நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கால் கேழ்வரகும் அஞ்சிபடிக் கம்பும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றத் தயாராகிறது. பாறையைத் தொலைத்து உருவாக்கிய உரலில் மாவு இடிக்கப் படுகிறது. இடிப்பவள் தன்னோடு விழும் நிழலைக் கண்டு திரும்புகிறாள்.
மூன்று பெண் குழந்தைகளோடு ஒரு கிழக்கத்திப் பெண். கணவன் இழந்தவள். பசி. உயிர்ப் பறவையை வெளியேற்றும் பசி. அந்தக் குழந்தைகளின் கண்களில் பசி வழிந்து கொண்டிருக்கிறது.
மாவு வேணும்என்கிறாள் தாய்.
ஒரு குழந்தை நீட்டிய தட்டில் கம்புமாவு போடப்படுகிறது.
அம்மனின் கண்ணில் இருந்த ஒற்றைத் துளி, மழையாக, பெருமழையாக, வெள்ளமாக, பேரருவியாக, குளமாக, ஏரியாகப் பெய்து தீர்க்கிறது...


-நன்றி உயிரெழுத்து (ஜூலை 2012)

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Shaaji.

பருவக்காற்றின் பாட்டு


சிறந்த தமிழ் திரைப் பட்த்திற்கான 2010ன் தேசிய விருது தென்மேற்க்குப் பருவக்காற்றுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த நடிகையாக சரண்யாவும் சிறந்த பாடலாசிரியராக வைரமுத்துவும் இப்படம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்படத்தின் இசை தேசிய விருதுக்கான போட்டியின் கடைசி சுற்று வரைக்கும் நின்றது!



கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்ன கல்லொடச்சி வளர்த்து நீயே

முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே

என்ன முள்ளு தைக்க விடல நீயே..



நாலைந்து மாதங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப் பாடலை போன வாரம் தான் முதன்முதலில் நான் கேட்டேன். ஆச்சரியமாக இருந்தது. கள்ளிக்காடு, காடை, காட்டு குருவி, எண்டம் புதர், கரட்டுமேடு, ஆவாரம்குலை, கஞ்சி, கூழ், என முற்றிலுமாக கிராமத்து சித்திரங்களால் ஆன வரிகள். ஆனால் இசையோ முழுமையான மேற்க்கத்தியப் பாணி. புதுசான ஆண் குரலின் உயிர்த்துடிப்புள்ள பாடும்முறை. பியானிகா, டெம்பிள் டிரம் போன்ற அரிதான இசைக்கருவிகளை பயன்படுத்தி உருவாக்கிய துல்லியமான, உணர்ச்சிகரமான பின் இசை. கேட்டவுடன் என்னை கவர்ந்த அருமையான அப்பாடலை ஏன் இதற்க்குமுன்பு எங்கேயும் நான் கேட்கவில்லை? தேடிபார்த்தேன். இசை என் ஆர் ரஹ்நந்தன். பாடியவர் விஜய் பிரகாஷ். வரிகள் வைரமுத்து. படம் தென்மேற்குப் பருவக்காற்று என்று தெரிய வந்த்தது. 24 மணிநேரமும் பாடலா பேச்சா என்று இனம் பிரிக்க முடியாத உளறல்களை ஒலிபரப்பிக்கொண்டேயிருக்கும் குற்றலை வானொலிகளில் எதிலுமே ஒருமுறை கூட இப்பாடலை நான் கேட்டதேயில்லை!



தென்மேற்குப் பருவக்காற்றின் ஒளிப்பதிவாளரான நண்பர் செழியன் சில மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு வருமாறு பலமுறை அழைத்தும், தொடர்ந்து பயணங்களில் இருந்ததனால் என்னால் போகமுடியவில்லை. பார்த்தவர்கள் பலரும் அது ஒரு சிறந்த படம் என்று என்னிடம் சொன்னார்கள். நானும் பார்க்க ஆர்வத்துடன் இருந்தேன் ஆனால் ஒருமாதம் கழித்து எனக்கு நேரம் கிடைத்தபோது படம் திரை அரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டிருந்தது! இந்த பாடல் அப்படத்தை பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் எனக்கு ஏற்ப்படுத்தியது. தரமான திருட்டு டி வி டி தயாரிப்பாளர்களின் புண்ணியத்தில் சிறந்த பிரதி ஒன்று எனக்கும் கிடைத்தது. அவ்வாறாக சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தை கடைசியில் நானும் பார்த்துவிட்டேன்.



ஒரு திரைப்பட்த்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரை காட்டும் தலைப்பு காட்சியைப் பார்த்து என் வாழ்நாளில் இதுவரைக்கும் நான் அழுததில்லை. ஆனால் இந்தப் படம் பார்க்கும்போது அப்படி நடந்த்து. அதன் காரணம் அந்த தலைப்புப் பாடலின் இதயத்தைத் தொடும் இசையும், அப்பாடல் பாடப்பட்டிருக்கும் விதமும், அதன் ஆழமுள்ள வரிகளும் அத்துடன் அந்த அரிதான காட்சியமைப்பும்தான். பிஞ்சிப் போன ஆடைகள் அணிந்து கருங்கல் மடைகளிலும் கரட்டு மேடுகளிலும் வேர்வை ஒழுக்கி உழைத்துக் கொண்டேயிருக்கும் கிராமத்து ஏழைத்தாய்களின் நிழற்படங்கள் தான் அந்த காட்சி முழுவதுமே. அவர்கள் நடிகைகள் அல்ல. உண்மையான கிராமத்துப் பெண்கள். எலும்பு முறியும் அந்த கடும் வேலைகளுக்கிடையிலும் தங்களது குழந்தைகளை அவர்கள் பேணிக் காக்கிறார்கள்.



சிலர் வேலை செய்து கொண்டே வயக்காட்டில் நிற்கும் மரக்கிளையில் கட்டிய தொட்டிலை ஆட்டுகிறார்கள். சிலர் ஒரு கையால் குழந்தையை இடுப்பில் தாங்கி மறுகையால் வேலை செய்கிறார்கள். ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு இன்னொன்றின் கைபிடித்து வேகமாக நடந்துபோகும் ஒரு தாய். அவளைச் சுற்றி ஒரு காகம் பறந்து கொண்டிருக்கிறது. வெயில் சுடும் நெடும்பாதை ஒன்றில், காலில் செருப்பின்றி ஆடுகளை பத்திக் கொண்டுபோகிறாள் ஒரு தாய். உடைந்து நொறுங்கிக் கிடக்கும் தனது மண்குடிலின் இருள் படிந்த வாசலில் பசியால் வெறித்த கண்களுடன் அமர்ந்திருக்கிறாள், வயதான ஒரு தாய். அவளுக்கு முப்பதோ நாற்பதோ வயதான மகன்கள் இருக்கக் கூடும்! எண்ணற்ற, விளக்கமுடியாத துயரங்கள் அந்த ஒவ்வொரு தாயின் முகச்சுளிவுகளிலும் ஒளிந்திருக்கிறது. எந்த கணமும் உதிரப் போகும் ஒரு கண்ணீர்துளி அவர்களது கண்களில் துளிர்த்து நிற்கிறது.



வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா

நாழி அரிசி வச்சு ஓலையெரிப்பா

புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா

கிழக்கு விடியும் முன்ன முழிக்கிறா

மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா

உடல் மக்கி போக மட்டும் ஒழைக்கிறா...



அப்பாடல் காட்சியின் கடைசி நிழற்படம், படத்தின் மைய கதாபாத்திரமான அந்த தாயினுடையது. அவள்தான் வயல்பட்டி எனும் ஊரில் வாழ்ந்துவரும் வீராயி. கள்ளர்கள் பரம்பரையில் பிறந்தும் கள்ளம் கபடமில்லாதவள். பிறந்தவுடன் கள்ளிப்பால் வாயில் ஊற்றப்பட்டு கொலை பண்ணப்பட்டிருக்கக் கூடிய பெண் அவள். பெரும்பாலான ஆண்களைவிட உறுதியானவள். ராப்பகலாக உழைத்துக் கொண்டேயிருப்பவள். அவளுக்கும் ஒரு மகன் இருக்கிறான். முருகையன். அவள் ரத்தம் சிந்தி உழைத்து காத்துவரும் சொர்ப்பமான விளைநிலத்தையும் ஆட்டுக்கூட்டத்தையும் பாதுகாப்பாக பார்க்கவேண்டியவன். அவன் ஒரு தறுதலை. ஆனால் துரோகி அல்ல. நண்பர்களுடன் ஊர்சுற்றல், மது அருந்தல் போன்ற வேலைகள் இல்லாதபோது அவன் தன் தாய்க்கு உதவியாக ஆடுமேய்ப்பான்.



ஆனால் வீராயியோ தன்மகனை நம்பி வாழ்பவள் அல்ல. அவனுக்காக வாழ்பவள். அவளுக்கு இந்த உலகத்தில் அவன் மட்டும்தான் இருக்கிறான். தன்னோட உறுதியினாலும் உழைப்பினாலும் மிகுந்த ஏழ்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்மாக வெளிவந்த அவளுக்கு இப்போது மீதமிருக்கும் ஒரே கனவு, பாதி கட்டப்பட்ட தனது சிறு வீட்டை கட்டிமுடிப்பதும், தன்மகனுக்கு ஒரு கல்யாணம் பார்த்து முடிப்பதும்தான்.



தூரத்து சொந்த்தில் இருக்கும் கலைச்செல்வி என்ற ஒரு பெண்ணை அவனுக்காக பேசி முடிக்கிறாள் வீராயி. காட்டிலும் மேட்டிலும் இடைவிடாமல் உழைக்கத் தயாராக இருக்கும் ஒரு அழகுக் கருப்பி அந்த பெண். தன்னையே அவளில் கண்டடைகிறாள் வீராயி. ஆனால் அவனோ, ஓர் இரவில் தனது ஆடுகளை களவாட வந்த களவாணிக் கூட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து மயங்கிப் போகிறான். களவாடல் தினசரித் தொழிலாக செய்யும் களவாணிக் குடும்பத்தைச் சேர்ந்தவளாயிருந்தும் அவளது தோல் வெளுப்பும் தோற்றமும் அந்த ஆழ்ந்த நீலக்கண்களும் அவனை கிறங்கடிக்க வைக்கிறது. மந்திரிச்சு விட்டவனைப்போல் பேச்சி என்ற அந்த பெண்ணை தேடி அலைகிறான் அவன்.



அவர்களின் காதல் தீவிர்மடைந்ததை பற்றி அறிந்த வீராயி, அந்த கல்யாணம் நடக்காமல் இருக்க தன் மகனையும் அந்த பெண்ணையும் ‘சங்கு அறுத்து’ கொலை பண்ணக்கூட தான் தயங்கமாட்டேன் என்று உக்கிர மூர்த்தியாக மாறுகிறாள். முருகையனுக்குப் புரியவில்லை! தான் இதுநாள் வரைக்கும் பண்ணின அத்தனை அட்டூழியங்களையும் சில கெட்ட வார்த்தைகளில், புலம்பல்களில் தாங்கிக்கொண்ட தனது தாய் இந்த காதலை மட்டும் ஏன் கொலைவெறியுடன் பார்க்கிறாள்?



அது அவனுக்காக ஒரு திருமணம் பேசி வைத்திருந்ததனால் மட்டும் அல்ல.

திருடர்கள் குடும்பத்தில் பிறந்து, ஒரு திருடனின் மனைவியாக மாறிய வீராயி தன் மகன் பிறந்து சிலமாதங்களிலேயே ஒரு விதவை ஆக மாறியது எப்படி? அந்த சூழலில் இருந்து, அந்த ஊரில் இருந்து என்றென்றைக்குமாக தப்பித்து ஓடி வந்ததனால் மட்டும்தான் அவளும் பிள்ளையும் உயிர் பிழைத்தனர். திரும்பவும் போய் அந்த திருடர்கள் ஊரில் உள்ள ஒரு களவாணிக் குடும்பத்திலிருந்து பெண்ணெடுப்பதை அவள் வெறுத்தமைக்கு காரணங்கள் பல.



அந்த ஊர்களில் ஒருவன் திருடனாக மாறுவதற்கு இயற்கை சார்ந்த, சமூகவியல் சார்ந்த பல காரணங்கள் இருக்கிறது என்று தனது ஒரு பாத்திரம் வழியாக சொல்லுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அந்த இயற்கை கோளாறின் பெயர் தான் தென்மேற்க்குப் பருவகாற்று போலும். அதன் தாக்கத்தால் 5 மைல்களுக்கு அந்தப்பக்கம் இருக்கும் கிராமங்களில் மழையே பெய்யாது. அந்த ஊர்கள் ஒரே கரட்டு மேடாக, பாலைவனமாக காஞ்சு கிடக்கிறது. ஆனால் 5 மைல்களுக்கு அந்தப்பக்கம் உள்ள பகுதிகளில் போதுமான அளவுக்கு மழையும் பாசனமும் கிடைப்பதால் அந்த ஊர்கள் வளமாக, பசுமையாக இருக்கிறது. மழையில்லாத ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு திருடுவதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியேதுமில்லை போலும்.



ஆயுதங்களால் தாக்குதல், கொலை, காவல் நிலயம், நீதிமன்றம், சிறை வாசம் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையின் அன்றாடப் பகுதிகள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு திரும்புதலிலிருந்து தன்மகனை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறாள் வீராயி. ஆனால் இளவயது காதல்! அந்த வயதில் தான் கருப்பாக, அழ்கற்றவனாக இருக்கிறேன் என்ற தாழ்வுணர்ச்சியுடன் இருக்கும் ஒரு இளைஞனுக்கு ஒரு சிவப்பான, அழகான பெண்ணை காதிலிக்கக் கிடைத்தால் அதற்க்காக அவன் தன் உயிரையே விட முன்வருவான் எனபது ஒரு மானுட உண்மை.



தனது காதல் வளர்ச்சியின் வழிகளில், காதலியின் குடும்பத்தினரிடமிருந்து பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாகிறான் முருகையன். அவனது உயிருக்கே பெரும் ஆபத்து விளைகிறது. அது தன்னால் கட்டுப்படுத்த்க் கூடிய நிலமையில் அவன் இல்லை. ஏன் என்றால் அவன் எந்திரனோ தந்திரனோ அல்ல. ஒரு சாதாரண கிராமத்து இளைஞன். எதுவுமின்மையில் இருந்து ஒரு வாழ்க்கையை உழைத்து உருவாக்கிய வயல்பட்டி வீராயி என்ற பெண் தான், அந்த தாய் தான், அந்த சிலுவையையும் சுமந்தாகவேண்டும். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பது தான் இப்படத்தின் முடிவு. “எனக்காக எல்லாமே செய்துமுடித்த என் தாயே.. உனக்காக நான் எதுவுமே செய்யவில்லையே..” என்ற முருகையனின் கதறலில் படம் முடியும்போது தாய்மை, பெண்மை எனும் இரு வல்லமைகளின் முன் சக்தியிழந்தவராக கண்கலங்கி நிற்க மட்டும் தான் நம்மால் முடிகிறது.



தென்மேற்க்குப் பருவக்காற்று பலவகைகளில் என்னை கவர்ந்த படம். சின்ன வயதில் கம்பம் மேடு, செல்லார்கோவில் மேடு போன்ற தமிழ்நாடு எல்லைப்பகுதி மலைமுகடுகளில் நின்று நான் ஆண்ணார்ந்து பார்த்த கம்பம், தேனி, சின்னமன்னூர், உத்தமபாளையம் போன்ற நிலப்பகுதிகளை, அந்த கிராமங்களின் மனித வாழ்க்கையை மிகுந்த உண்மையுடன் படமாக்கிக் காட்டுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அந்த மனிதர்களின் முகங்கள், அவர்களது உடை, நடை, பேச்சு, மொழிவழக்கு எல்லாம் யதார்த்தத்தின் உச்சமாக விளங்குகிறது. மதுரைப்படங்கள் என்று அழைக்கப்பட்டு தமிழில் வெளிவந்துகொண்டேயிருக்கும் படங்களைப்போல் இப்படத்தில் ரத்த ஆறுகள் எதுவும் ஓடுவதில்லை. அரிவாள், வெட்டுக் கத்திகளுடன் அந்தரத்தில் பறந்து பறந்து தாக்கும் திறமை இப்படத்தின் எந்தவொரு பாத்திரத்துக்கும் இல்லை.



யதார்த்தத்துடன் நெருங்கிநிற்கும் கதையை உருவாக்குவதில், தன் பாத்திரங்களுக்கு முற்றிலுமாக பொருந்திப் போகும் நடிகர்களை தேர்ந்தெடுப்பது,, அவர்கள் அனைவரையுமே சிறந்த முறையில் நடிக்க வைப்பது, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர் போன்றவர்களில் இருந்து சிறந்த முறையில் வேலை வாங்குவது போண்ற, ஒரு திரைப்பட இயக்குநர் சிறப்பாக செயல்பட வேண்டிய அனைத்துத் தளங்களிலும் உயர்ந்து நிற்கிறார் அவர். மாடுமேய்ப்பவனையும் பிணங்களை அறுத்து புதைப்பவனையும் (படம்: கூடல் நகர்) கதா நாயகர்களாக முன்நிறுத்துவதில் அவருக்கு தயக்கமேதுமில்லை.



குரு தத்தைப் போல லோஹித தாஸைப் போல எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய (Sentimental) கதைதருணங்களை உருவாக்குவதில் தான் சீனு ராமசாமியின் கவனமுமே. அது உக்கிரமான உரு கதைசொல்லும் முறை தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனிதர்களுக்குள் அத்தகைய மென் உணர்ச்சிகள் வெகுவேகமாக குறைந்துகொண்டே வரும் இந்த காலகட்டத்தில் குரு தத்துக்கும் லோஹித தாஸுக்கும் கூட, பெருவாரியாக பார்வையாளகர்களை ஈர்ப்பதென்பது சற்று கடினமான ஒரு வேலை என்றே நினைக்கிறேன்.



ஓரு கோடியே முப்பது லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட படம் தென்மேற்க்குப் பருவக்காற்று என்று தெரிய வந்தது. ஆனால் அது பத்து கோடி முதல் முடக்குள்ள ஒரு படம் என்று சொன்னால் கூட நம்புவதில் கஷ்டம் இருக்காது. அதன் முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் செழியன். தலைப்பு காட்சியில் வரும் நிழற்படங்கள் தொடங்கி இப்படத்தின் ஒரு காட்சித்துணுக்கு கூட, ஒரு சட்டவடிவம் (Frame) கூட வெறுமையானதாக இல்லை என்பதுதான் செழியனின் பெரும் வெற்றி. ஒருபக்கம் மழையின் செழிப்பும் மறுபக்கம் அனலின் வரட்சியுமாக பரந்து கிடக்கும் தேனிப்பக்க நிலப்பகுதிகளை அவர் பட்மாக்கியிருக்கும் விதம் பிரமாதம். இருட்டில் நடக்கும் காட்சிகள், ஆட்டுமந்தைக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் போன்றவை எல்லாம் இயல்பாகவும் அதே சமயம் உக்கிரமாகவும் அவர் பதிவு செய்திருக்கும் விதம் வியப்பூட்டுவது.











சரண்யா நடித்த வீராயி பாத்திரம் அவரது இதுவரையிலான நடிப்பின் உச்சம். அசாத்தியமான நடிப்பு. முருகையனாக வரும் விஜய் சேதுபதி ஒரு அறிமுக நடிகனின் எந்த சஞ்சலங்களுமில்லாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். நாட்டுப்புறத்திற்குரிய பண்படாத பாத்திரங்களை உயிரோட்டத்துடன் வழங்க அவரால் முடியுமென்பதில் சந்தேகமில்லை. பேச்சியாக வரும் வசுந்தரா தனது அழகான கண்களால் சிறப்பாக நடித்திருக்கிறார். கலைச்செல்வியாக வரும் ஹேம்லதாவின் கருப்பழகும், ஒளிரும் கண்களும், களங்கமில்லாத சிரிப்பும் முகபாவங்களும் நம்மை கவராமல் விடாது.



முருகையனின் நண்பனாக வரும் தீப்பெட்டி கணேசன், வில்லன் மூக்கையனாக வரும் அருள்தாஸ், திருட்டு பூசாரியாக வரும் ஜிந்தா, ஓரிரு காட்சிகளில் ஒரு முடிதிருத்துபவராக வரும் சுகுமார் என தொழில்முறை நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் ஓரிரண்டு காட்சிகளில் வந்துபோகும் சின்னச் சின்ன பாத்திரங்கள் தான் இப்படத்தின் பேரழகே. கலைச்செல்வியின் அப்பாவாக வரும் துரைசாமி ஒரு பிரமாதமான நடிகர். வீராயியின் கணவராக வரும் அஜயன் பாலா, வீராயியின் உதவியாளனாக வரும் கால் சுவாதீனமில்லாத, சரியாக பேச்சு வராத அந்த பாத்திரம், ஆடுமேய்ப்பதில் முருகையனுக்கு உதவி செய்யும் பையன், பள்ளிக்கூடக் காவலன், வளையல் விற்கிற ஆள், உணவு விடுதி தொழிலாளியாக நடிப்பவர் மற்றும் வில்லனின் குடும்பத்தாராக வரும் பெண்கள், பல பல கிராமத்துக் கிழவிகள் என நடிப்பைப் பற்றி பேரெடுத்து சொல்லவேண்டிய நடிகர்கள் இப்படத்தில் ஏராளம். அவர்களில் பெரும்பாலானோர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்ல் என்பதால் அப்பெருமையும் இயக்குநருக்கே சேரும்.



ராஜகலையின் கலை இயக்கமும் வெகுசிறப்பு. கிராமத்துத் தெருக்கள், வீடுகள், கடைத்தெருக்கள், பள்ளிவளாகங்கள் போன்றவையெல்லாம் அவர் அமைத்திருக்கும் விதம் இத்தகைய யதார்த்தவாத படங்களுக்கு ஒரு தேர்ந்த கலை இயக்குநர்தான் அவர் எனபதை நிரூபிக்கிறது. படத்தின் பாத்திரங்கள் அணியும் ஆடைகள், ஆபரணங்கள் எல்லாமே இயல்பானவை.



முன் சொன்னதுபோல் இந்த படத்தின் பக்கம் என் கவனத்தை திருப்பியதே அதன் இசைதான். சிறந்த பின்னணி இசை அமைக்க புதிய தலைமுறையில் ஆளில்லை என்று நினைப்பவர்கள் இப்படத்தின் பின்னணி இசையை கூர்ந்து கேட்க வேண்டும். தனது முதல் படத்திலேயே என் ஆர் ரஹ்நந்தன், தான் ஆழ்ந்த இசையுணர்வு கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் காட்சிகளுக்கு அழுத்ததையும் ஆழததையும் அளிக்கிறது அவரது இசை. உணர்ச்சிபூர்வமான காட்சிகளாகட்டும், மறைத்தல் (Suspense) அல்லது சண்டைக் காட்சிகளாகட்டும் ரஹ்நந்தனின் இசை இன்றைய பல இளம் இசையமைப்பாளர்கள் செய்வதுபோல் வெறும் சத்தமாக மாறி ஓங்கி ஒலிக்காமல், துல்லியமாக, காட்சியுடன் இணங்கிச் செல்கிறது. சில இடங்களில் ஏ ஆர் ரஹ்மான் பாணியிலான சில ஆலாபனைகளை போட்டிருப்பதும், சில இடங்களில் நெருடலான சில இசைப்பகுதிகள் வந்துபோவதும் தவிர்த்திருக்கலாம்.



பின்னணி இசையிலும் பாடல்களிலும் அரிதான பல வாதியங்களின் வித்தியாசமான இசையொலிகளை பயன்படுத்துகிறார் ரஹ்னந்தன். ஜப்பானிய தாளக்கருவியான டைக்கோ டிரம், அராபிய தாளவாத்தியமான தர்புக்கா, மற்றும் ஃப்ரேம் டிரம், டெம்பிள் டிரம் போன்ற பல தாளக் கருவிகளையும், பியானிகா, ஊத், பேஸுகி, மாண்டலின் போன்ற வெளிநாட்டு இசைக் கருவிகளையும், சரோத், சிதார், எக்தாரா, தில்ருபா போன்ற இந்திய இசைக் கருவிகளையுமெல்லாம் ஏராளமாக பயன்படுத்துகிறார். இக்கருவிகளின் வழியாக அவர் தனக்கென தனித்துவமான ஒரு இசைவெளியை உருவாக்குகிறார். ரஹ்நந்தன், ஜி வி பிரகாஷின் உதவியாளனாக இருந்தார் என கேள்விப்பட்டேன்.



















முற்றிலுமாக மேற்க்கத்திய இசைப்பாணியில் அமைந்த ’கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடலின் சரணங்களில் பாசமப்பா.. தியாகமப்பா.. போன்ற வார்த்தைகளில் திடீரென்று இந்திய நாட்டுப்புறப் பாணியில் அமைந்த ஒரு ஆலாபனை வரும். அதன் இசையமைப்பும் அதை பாடியிருக்கும் விதமும் அலாதியானது. அங்கு பாடகனும் இசையமைப்பாளனும் சேர்ந்து நம்மை வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு அனுபவத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். நாட்டுப்புற இசைப் பாணியில் அமைந்தது ‘ஏடீ கள்ளச்சி’ என்ற பாடல். ’நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன’ என்ற வரியின் கடைசியில் ‘என்ன’ என்ற வார்த்தை அரிதான ஒரு சங்கதியுடன் நீண்டு சென்று மீண்டும் பல்லவியின் முதல் வார்த்தையை எட்டும் இடம் அழகு! ’சின்னாஞ் சின்னாங் காட்டிலே’ என்ற பாடலை, சங்கர் மஹாதேவனின் அலுப்பூட்டும் பாடும்முறை ஒரு பரவாயில்லை ரகப் படலாக மாற்றுகிறது. ‘ஏடீ கள்ளச்சி’ பாடல் பாடியிருக்கும் ஷ்ரேயா கோஷால், தானே இந்தியாவின் மிகச்சிறந்த சமகால திரைப்பாடகி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்!



தென்மேற்க்குப் பருவக்காற்றின் வழியாக நான் கண்டடைந்த இன்னுமொரு இசை அதிசயம்தான் விஜய் பிரகாஷ் என்ற பாடகர். நான் கடவுள் படத்தின் ஓம் சிவோஹம், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஓசானா, எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் போன்ற பாடல்களை பாடியவர் இவர்தான். கவனத்துக்குரிய பாடகர் என்று அவரைப் பற்றி நான் நினைத்ததுண்டு ஆனால் அவர் ஒரு அதிசயப்பாடகர் என்று எனக்கு நிரூபித்தது இப்படத்தின் பாடல்கள் தான். இந்த படத்தில் மூன்று பாடல்களை விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார். மிக அரிதான அவரது ஆழ்ந்த அடிக்குரலின் சாத்தியங்கள் ‘ஏடீ கள்ளச்சி’ யில் வெளிப்படுகிறது. ஆனால் ’கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ யில் ஆர் அண்ட் பி (Rhythm & Blues) வகையிலான மெதுவான, உணர்ச்சிபூர்வமான படும்முறையை கையாண்டிருக்கிறார். அதுக்குள்ளேயே அசாத்தியமான அந்த நாட்டுப்புறப் பாணி ஆலாபனையும் வருகிறது! ’நன்மைக்கும் தீமைக்கும்’ என்ற பாடல் ஒரு பல்லவி மட்டுமே. அதையும் சிறப்பாக பாடியிருக்கிறார்.



முன்சொன்னதுபோல் வைரமுத்துவின் பாடல்வரிகள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கிறது. அவருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கிராமத்து பின்புலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதனால் அந்த வரிகளில் பலதும் இயல்பாக அமைந்திருக்கிறது எனப்படுகிறது. இருந்தும் பெரும்பாலும் சிறந்த வரிகள் நிரைந்த ’கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ யில் வரும் ’ காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்’, ’தாய்ப்பால் ஒன்றில் மட்டும் தூசு இல்ல’ போன்ற வரிகளையும் ’நன்மைக்கும் தீமைக்கும்’ என்ற பாடல் முழுதும் ஒலிக்கும் போதனைப் பாணியையும் அவரால் தவிர்க்க முடியவில்லை!



இப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி ஒரு சமகால பாரதி ராஜா என்று வைரமுத்து சொன்னதாக கேள்விப்பட்டேன். பாரதி ராஜாவில் இருக்கும் நாடகத்தன்மை சீனு ராமசாமியில் இல்லை என்றே சொல்லுவேன். லோஹித தாஸின் உணர்ச்சிவயப்படுதல்தான் அவரில் நாம் பார்க்கமுடியும். அது சில சமயம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு எளிதாகக் காட்டிக்கொடுக்கும். இதைத்தான் முன்கூட்டித் தெரிய வரும் உணர்ச்சிவயப்படுதல் (Predictable Sentiments) என்று சொல்லுவார்கள். தென்மேற்க்குப் பருவக்காற்றின் சில பகுதிகளில் தெளிவாகவே இது நிகழ்கிறது. குறைகள் இல்லாத படம் என்றோ ஒரு உலகத்தரமான காவியம் என்றோ எதுவுமே இப்படத்தைப்பற்றி இங்கு சொல்லவரவில்லை. ஆனால் நூறு நாட்கள் தாண்டி ஓடியிருக்க கூடிய, ஓடியிருக்க வேண்டிய ஒரு படம் இது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டதனால் மட்டும் ஒரு சராசரி பொருளாதார வெற்றியாக மாறவேண்டிய படமல்ல தென்மேற்க்குப் பருவக்காற்று.



இன்றைய தமிழ் சினிமாவை ஆளும் சர்வாதிகார அமைப்புக்களின் பலி தான் இப்படம். ஒரு பெண்ணை, ஒரு தாயை மையகதாபாத்திரமாகக் கொண்ட இப்படத்தை தயாரிக்க யாரும் முன்வராத நிலையில் கேப்டன் ஷிபு ஐசக் என்பவர் இப்படத்தை எடுத்தார். ஆனால் சினிமாத்துறையில் பலமான தொடற்புகளோ முன் அனுபவமோ ஏதும் இல்லாததால் அவரால் இந்த படத்தை வெளியிடவே முடியவில்லை. கடைசியில் 25 நாட்கள் மட்டுமே திரையிட முடியும் என்ற ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொண்டதால் இந்த படத்தை வெளியிட்டார்கள். அதே நாளிலேயே அந்நிருவனம் மன்மதன் அம்பு என்கிற ’உலகசினிமா’வையும் ஆரவாரங்களுடன் வெளியிட்டது! தூய்மயான பல மனித உணர்வுகள் வெளிப்படும் இப்படம் அனைத்து திரை அரங்குகளிலிருந்தும் 25 ஆவது நாள் எடுக்கப்பட்டு அங்கு ’கலைஞரின் இளைஞன்’ என்ற ஒரு உலகப்படம் போடப்பட்டது! மிஷ்கினின் நந்தலாலா 14 ஆவது நாள் திரை அரங்குகளிலிருந்து வெளியேற்றப்பட்டது ரக்த சரித்திரம் எனும் ‘தேசியப்படத்’தை நமக்கு வழங்குவதற்க்காக!



காடைகளும் காட்டு குருவிகளும் செத்து மடியட்டும். ஆவாரம்செடிகள் காஞ்சு கருகட்டும். நமது கிராமங்களும் நம் மண்ணும் நிலப்பகுதிகளும் நமக்குத்தெரிந்த ஏழை எளிய மனிதர்களும் அவர்களது உண்மையான வாழ்க்கைச் சித்திரங்களும் நாசமாப்போகட்டும்! பொய்மையின் கொடிகள் வானுயர்ந்து பறக்கும் ’இளமை’ப் படங்களும் உலகப்படங்களும் தேசியப் படங்களும்’ஓடி’க்கொண்டேயிருக்கட்டும்.

இடுகையிட்டது ஷாஜி நேரம் 10:48 pm

வெள்ளி, 20 ஜூலை, 2012

RishanSherif.

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான்.

    "எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது."

    "எங்கே போகலாம்?"

    "எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்."

    சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட நானும் நண்பனும் பிரதான பாதையில் நுழைந்தோம்.

    "எங்கே போகிறாய்?" - கேள்வி என்னுடையது.

    " சும்மா இருக்கும் நாட்களில் போவதற்கு நல்லதொரு இடம் இருக்கிறது. எனது பல்கலைக்கழகத் தோழன் இப்ப ஒரு டொக்டர். எங்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தவன். வா..வா என்று ரொம்ப காலமாகக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான்."

    வெலிவேரிய பிரதேசத்தைக் கடந்து கொஞ்ச தூரம் சென்று குறுக்குத் தெரு சிலவற்றில் எனது நண்பன் அடிக்கடி வந்து செல்லும் ஒருவனைப் போல வண்டியைத் திருப்பினான். எனினும் நண்பன் வழி தவறியிருந்தான். நாம் மீண்டும் பிரதான பாதைக்கு வந்து நண்பன், யாரையோ தொலைபேசியில் அழைத்துப் பெற்ற அறிவுருத்தலின் படி வேறொரு குறுக்குத் தெருவுக்குள் நுழைந்தோம். விசாலமானதொரு நுழைவாயில் கதவருகே மோட்டார் சைக்கிள் நின்றது. நண்பனின் தொலைபேசி அழைப்புக்கிணங்க அப் பெரிய நுழைவாயில் கதவு திறந்தது.

    "ஐயா ஒரு சின்ன வேலையில் இருக்கிறார். உங்களுக்கு அங்கே வரச் சொன்னார்."

    எனது நண்பனின் வைத்தியத் தோழன், நாங்கள் போகும்போது வீட்டினுள்ளேயே அமைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை அறைக்குள் பெரியதொரு வேலையில் ஈடுபட்டிருந்தார். எனவே வெளியே போடப்பட்டிருந்த கதிரைகளிரண்டில் அமர்ந்து நாம் காத்திருந்தோம். வைத்திய நண்பனின் சேவகன் தந்த தேனீரைச் சுவைத்தபடி அவர் வரும்வரையில் ஒரு பரவசத்தோடு நான் இருந்தேன்.

    நாங்கள் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் கழிந்த பின்னர், எனது நண்பனின் தோழன் கைகளிரண்டையும் துடைத்தபடி, மிகுந்த சாரமுள்ள மதுபான போத்தலொன்றையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார்.

    "தாமதத்துக்கு மன்னிக்கவும்..தெரியாதா இனி? "

    எனச் சொன்ன வைத்தியத் தோழன், நான் யாரென வார்த்தையேதுமின்றித் தலையசைத்து வினவினார். நான் யாரெனத் தெரிந்துகொண்ட பிற்பாடு என்னை வரவேற்றதோடு, தான் எடுத்து வந்திருந்த மதுபான போத்தலின் மூடியை அகற்றி, பருகத் தொடங்கினார். சிறிது நேரத்துக்குப் பின்னர் மதுபானத்தின் வெறியில் அவர் உளர ஆரம்பித்தார். ஆரம்பமும் முடிவும் அற்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    "எனக்கு இது இப்ப வேணாம்னு போயிடுச்சுடா.. செய்றதுக்கு ஒண்ணுமில்லாம செஞ்சுட்டிருக்கேன். நிறுத்தவும் முடியாதுதானே.விஷயம் வெளியே தெரிஞ்சுடுச்சுன்னா.... தெரியும்தானே."

    நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன்.

    "அதிகமா வாறது ஸ்கூல் பொண்ணுங்க..வேலையை சிக்கலாக்கிக் கொண்டு கடைசிக்கட்டத்துல வந்து அழுதுட்டிருப்பாங்க."

        ஆச்சரியத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்த நான் அக் கேள்வியைக் கேட்டேன்.

    " எதைப் பற்றிச் சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல."

    நன்கு வெறியேறியிருந்த வைத்தியத் தோழன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார்.

    " உனக்கு தெரிஞ்சுக்க வேணும்னா இதோ.... எல்லாத்தையும் கேட்டுக்கோ. ரொம்பக் காலம் கடந்தாப் பிறகுதான் எமக்கு வேலை கிடைச்சுது. அதுவும் ரொம்பத் தூரப் பிரதேசம் ஒண்ணுல..கட்டடம் ஒண்ணு கூட இல்லாத பிரதேசம்.. கொஞ்ச நாள் போனாப் பிறகு எனக்குச் சொந்தமா ஒரு டிஸ்பென்ஸரியைத் தொடங்கினேன். இதற்கிடையில எனது நண்பனொருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றிக் கைவிட்டிருந்தான். அவளைத் திருமணம் முடிக்க விருப்பமில்லை எனச் சொன்னான். அவன், அப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தான். நான் பயந்து பயந்து அம் மோசமான செயலைச் செய்தேன். அதன் பிறகு அவன், அவனைப் போன்ற அவனது நண்பனொருவனையும் என்னிடம் அனுப்பியிருந்தான். இப்படி இப்படித்தான் நான் அபார்ஷன் டொக்டர் ஆனேன். இந்த இரண்டு கரங்களினாலும் நான் இதுவரை 32 உயிர்களை வெளியே எடுத்துப் போட்டிருக்கிறேன்."

வைத்தியத் தோழன், எம்மை அவரது சத்திரசிகிச்சையறைக்கு அழைத்துச் சென்றார்.

        "இதோ பாரு."

    அவர், குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து எமக்குக் காட்டினார். விதவிதமான மதுபான போத்தல்கள் அங்கு நிறைந்திருந்தன.
   
    "நான் பெரியதொரு குற்றவாளின்னு எனக்குத் தெரியும். ஆனா கைவிடப்பட்டு வர்ற பெண்களுக்கு நான் ஒரு தெய்வம். எனக்கு இப்ப இது போதுமாகியிருக்கு. ஆனா என்னால இதை நிறுத்த முடியாது. நிறுத்துற அன்னிக்கு நான் மாட்டிக்குவேன். எல்லா வேலைக்கும் முன்னாடி நான் நல்லாக் குடிச்சுக்குவேன். வேலை முடிஞ்ச பின்னாடியும் நல்லாக் குடிப்பேன். 'செத்தாக் கூடப் பரவாயில்ல..செய்'ன்னு இதோ இவள் சொன்னாள். செத்துடுவாள்னுதான் நான் நெனச்சேன். ஆனா அதிர்ஷ்டசாலி.. ஆறு மாசக் கருவை அப்புறப்படுத்தியும் கூட இவள் ஆரோக்கியமா இருக்கா..அந்த ஆறு மாசக் கருவப் பார்த்தப்ப எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணிச்சுடா."

    வைத்தியத் தோழன் கதறியழத் தொடங்கினார். நிறைய நேரம் மேசையின் மீது தலையை மோதியபடி விக்கி விக்கியழுத வைத்தியத் தோழன் இன்னும் நிறையக் கதைகளைச் சொன்னார். எனினும் நிறைய நேரம் கடந்திருந்ததால் அவரிடமிருந்து விடைபெற்று நாம் வெளியேறினோம். நானும், நண்பனும் மீண்டும் அறைக்குத் திரும்பும் வழியில் ஒரு வார்த்தை கூடக் கதைத்துக் கொள்ளவில்லை. இரவில் எங்களைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் ஒளிக் கீற்றுக்கள் ஹெல்மட்டின் கண்ணாடியினூடு, இன்னும் பிறவாத குழந்தைக் கருக்களின் உருவமாகத் தோன்றி மறைந்தன.

- தேஷான் ருவன்வெல்ல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி