வியாழன், 24 நவம்பர், 2011

Uyirin osai...

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும், தேசமும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பும் போலியானது என்று உடைத்தெறிந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழாளர்கள்  வழக்கம்போல் இம்முறையும் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப்பேரவையில் தீர்மானமேற்றி சிறிது  நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர், சமச்சீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை.
பரமக்குடி படுகொலைகள்,சமச்சீர் கல்வி, கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது, சட்டமன்றத் தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய் நீதிமன்றதில் பதில்தந்தது, அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது, இறுதியாய் அடிப்படைத் தேவைகளின் விலையேற்றம். 6.25 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கும் பால்விலை, உயரப்போகும் மின்சார கட்டணம், உயர்ந்துபோன பேருந்துக் கட்டணங்கள். விலைஉயர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே. பொது நிறுவனங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்டத் தொடங்கியவையன்று.
அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்கக் கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன் மீதும் நம்பிக்கையில்லை. இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாடாவுக்கும், ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ, சுகாதாரமில்லாத வாழ்க்கை குறித்தோ, தினமும் உண்ணும் ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை.
பன்னாட்டு எசமானர்களுக்கு சேவகம் புரியும் பத்துக் கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக் கிடக்கிறது, தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள், மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களைக்  கொண்டு இப்பணிகளை செவ்வனே செய்கின்றனர் . ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ, இருக்கும் சிறுஅளவு மேல்வர்க்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம்.
பேருந்து பயணக் கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும், குளிரூட்டப்பட்ட சொகுசு தனியார் பேருந்துகளில் செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கி வழியும் பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்.
முந்மைய ஆட்சியினர் இருக்கும் சாதாரணப் பேருந்துகளை டீலக்ஸ் , அல்ட்ரா டீலக்ஸ்  எனும் வழியில் இயக்கி ஒரு தாக்குதலைத் தொடுத்தனர், இன்றைய ஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்துக் கட்டணங்கள் விமானக் கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன. சாதிய அடக்குமுறை, அறிவு அடக்குமுறை, பொருளாதாரத் தாக்குதல் என்று அனைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிகின்றனர்.
நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள், கலாசார இருட்டடிப்புகள் என்று எதையும் உணராமல் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுகொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்துப் போராடத் துணிவின்றி வாழ்கிறோம். ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்.
நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம். உறவுகளின்றி, நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய் அலைந்துகொண்டிருக்கும் காலம் தொலைவிலேயில்லை. இதைத் தமிழ்பெருமை பேசும் முன்னாள் ஆட்சியாளர்களும், ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே செய்வர். பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்.
சில நாட்களுக்குமுன் ஈழத்து நண்பன் இப்படிச் சொன்னான் " நாங்கள் நிலத்தை, லட்சக்கணக்கான மக்களை இழந்திருக்கலாம். ஆனால் தமிழகத் தமிழர்களைப் போல் தன்மானமற்ற அடிமைகளில்லை."