சனி, 15 பிப்ரவரி, 2014

Friday, February 14, 2014

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.



மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!


பாலுமகேந்திரா

எந்த புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்த செடி நினைவில் வைத்திருக்கும்.
கலைஞர்களும், படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் குவிந்து, சென்னை பெரியார் திடலில் கருத்து சுதந்திரம் வேண்டி உணர்வுக் குவியாகத் திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி கம்பீரமாக பாலுமகேந்திரா என்ற அக்கலைஞன் மேடையேறுகிறார். மௌனம் மேலும் நுட்பமாகிறது. வெளிர்நீல ஜீன்சும், வெள்ளை சட்டையும், தன் உடலில் ஒன்றாகிப் போன தொப்பியோடும் யாருடைய அனுமதிக்கும் காத்திரமால் மைக் முன்னால் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

''என் கேமராவை என் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்க்கவிடாமல் அடைத்துகொண்டிருக்கிறது.''

இதோ இந்த புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறது. ஒரு அரசை எதிர்த்து கம்பீரமாய் ஒலித்த ஒரு கலைஞனின் குரல் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளி இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் பிறகான நாட்களில் எங்கள் நட்பு கண்ணி இறுக்கமானது. அவரையும், அவர் படைப்புகளையும் நெருக்கமாக்கி கொண்டது மனது.

நேற்று வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இதுவரை பார்க்ககிடைக்காத 'யாத்ரா' பார்க்க ஆரம்பிக்கிறோம். மம்முட்டியும், சோபனாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆயும் தண்டனை முடிந்து வெளியே வரும் உண்ணிக்கிருஷ்ணனுக்கு (மம்முட்டி) நம்பிக்கையின் ஏதோ ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கிறது. துளசியின் (சோபனா) மலை கிராமத்தை நோக்கி செல்லும் ஒரு டூரிஸ்ட் வேனில் பயணிக்கிறான். பயணங்கள் எப்போதும் பழைய ஞாபகங்களை கோருகின்றன. உன்னியின் கடந்த கால துயரம் அந்த சகப்பயணிகளை துக்கப்படுத்தி கண்ணீரில் நனைய வைக்கிறது. ஒரு குழந்தை தன் தேவனிடம் அவனின் காதலுக்காக இறைஞ்சு மன்றாடுகிறது.

''தான் விடுதலையாகி வரும் போது, நாம் எப்போதும் சந்திக்கும் அந்தக் கோவிலின் முன் நீ ஒரு ஒற்றை தீபத்தை ஏற்றி வைத்திருந்தால் இன்றும் எனக்காகவே நீ... என இறங்கிக் கொள்கிறேன். ஒரு வேளை தீபமற்ற கோவிலை என் வண்டி கடக்கையில் என் பயணம் தொடரும் துளசி'' அவன் எழுதிய கடிதங்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை வரிசைப்படுத்துகிறான்.

இருள் கவிந்துவிட்ட மாலை அது.

இதோ இந்த திருப்பம்தான் துளசியின் ஊர். ஊரின் முகப்பில் கிருஷ்ணன் கோவில். மௌனம், எல்லோர்க் கண்களும் அந்த ஒற்றை தீப ஒளியை தரிசிக்க நீள்கிறது. அவர்களது பார்வை கோவில் முன் மட்டுமல்ல, ஊர், வயல்வெளிகள், காடு மலை எல்லா இடங்களும் ஏற்றப்பட்ட தீப ஒளியில் ஒளிர்ந்து நிறைந்திருக்கிறது.

ஒரு மகத்தான கலை மனதுக்கு மட்டுமே இப்படைப்பின் உச்சம் சாத்தியம். பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கலை ஆளுமைக்கு இப்படத்தின் முடிவே சாட்சியம். yellow ribben என்ற ஹங்கேரியக் கவிதையே இப்படத்திற்கான உந்துதல் என்கிறார்.

ஒரு கவிதையை மூன்று மணி நேர உன்னத சினிமாவாக செதுக்கத் தெரிந்த கைகள் அவருடையது.

என் மனைவி ஷைலஜாவை தன் மகளாக மனதளவில் ஸ்வீகரம் எடுத்துக் கொண்டவர். தன் சந்தோஷம், துயரம், தனிமை , வெறுமை இப்பொழுதுகளை அப்படியே எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர். பல நேரங்களில் அவைகள் தொலைபேசி வழியாகவும், சிலநேரங்களில் நேரடியான வருகையின் மூலமாகவும் அவ்வுணர்வுகளை நாங்கள் ஸ்வீகரித்துள்ளோம்.

ஒரு காதலியின் மடியில் திருட்டுத்தனமாய் மரத்தடியில் படுத்துக் கொள்ளும் அவருடனான என் திருவண்ணாமலை நாட்கள். யாருமற்று நானும் அவரும் மட்டுமே எங்களுக்கு எங்களுக்கென்று அமைத்துக் கொண்ட உரையாடல்கள் சுவரசியமானதும், பெருமிதமானதும் யாருக்கும் வாய்க்காததுமானவைகள்.

ஒரு தொலைபேசி செய்தியினூடே வந்திறங்கிய இரண்டாண்டுகளுக்கு முந்தைய மழைத்தூறல் மிக்க மாலையை இன்றும் ஈரமாகவே வைத்திருக்கிறேன்.

அவர் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த நாள் மாலை வரச்சொன்னார். மலையின் முழு வடிவமும் தெரியும் அந்த 102-ம் அறையின் பால்கனி அவருக்கு பிடித்தமான இடம். எதிரெதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலியில் மௌனம் காத்து ஒரு சொல்லின் ஆரம்பம் வேண்டி தவமிருக்கிறோம். ஆவி பறக்கும் green tea ஆறிக் கொண்டிருக்கிறது. 'சொல்' எத்தனை மதிப்புமிக்கது, கிடைப்பதற்கறியதுமென நான் உணர்ந்த கணம் அது.

நான் அடுத்தபடம் பண்ணப்போறேன் பவா. அந்தக் கதைக்கான பகிர்தல் இந்த மாலை. ஒரு பையனுக்கும் அவன் சித்திக்கும் உடல்ரீதியான பகிர்தலே இப்படம். கதை சொல்கிறார். இலங்கையில் கழிந்த தன் பால்யத்தில் கரைகிறார். பனைமர மறைவுகளில் நின்று தான் பார்த்த காட்சிகளை அடுக்கிறார். தன் ஆஸ்தான ரோல்மாடல் ஒருவரின் கள்ளத்தனமான ஸ்நேகிதியைப் பற்றி சொல்லி சிரிக்கிறார். சினிமாவும், நிஜமும், பால்யமும் கலந்த கலவைகளாளானது அந்த இரண்டு மணி நேரம்.

நான் முற்றிலும் கரைந்து போயிருதேன். பேச வார்த்தைகளற்று தூறலில் நனையும் மலையின் திசையை நோக்கி கண்களைக் குவித்திருத்தேன்.

’’சொல்லுங்க பவா''

''சித்தியுடனான உறவை தமிழ் மனது ஏற்காது சார்''

''நல்ல Treatment-ல?''

''இல்ல சார், ஒரு வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் கூட அப்படி ஒரு ரகசியம் இருந்தாலும், தன் ஆழ்மனதின் ரகசியம் திரையில் தெரிவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன்.''

''ஏன், ஏன், தன் உண்மைகள் படைப்பாகும் போது அதை அவனே நிராகரிக்கணும், 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்?''

மீட்டெடுக்க முடியாமல் திணறியதை ஒரு நொடியில் உணர்ந்தவர்,

''ஒரு விபச்சார விடுதியிலிருந்து’’ ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது, ஏன்னா படத்தோடு Treatment-ல அது காணமல் போயிடுது''

ஆனாலும் என்னால் அவரோடு உடன்படமுடியலை. அழுத்தமான கைப்புதைவுகளிடையே அவ்விரவில் தனித்தனியானோம்.

அதற்கடுத்த பத்து நாட்களும் ஒரு பித்தேறிய படைப்பு மனநிலையோடு அவருக்குள் ஏறியிருந்த புதுப்புது தர்க்கங்களுக்கு விடை தேடி திருவண்ணாமலையில் எங்கள் வீடு, அருணை ஆனந்தா ஹோட்டல், வம்சி புக்ஸ் கடை என்று அலைந்து கொண்டிருந்தார்.

முடிவுகளின்றி முடிந்தது அப்பயணம்.

கருங்கற்களால் நாங்கள் கட்டி முடித்த எங்கள் வீட்டின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த போது மிகுந்த மௌனம் காத்தார். எல்லா நண்பர்களும் வீட்டின் தரையில் உட்கார்ந்து 'கரிசல் குயில்' கிருஷ்ணசாமியின் பாட்டிற்கு எங்களை ஒப்புக் கொடுத்திருந்தோம். என் வீட்டின் ஒரு மூலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் அசையாமல் உட்கார்ந்து தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்த மிச்சம் இன்றும் என்னுள் நிற்கிறது. பாடல்களின் இடைவெளியில் உட்கார்ந்தவாறே மிக மென்குரலில் நம்மோடு ரகசியமாய் உரையாடுவதைப்போல பேசினார்.

நான் என் மகளாக ஸ்வீகரித்துக் கொண்ட என் மகள் ஷைலுவும், என் மாப்பிள்ளை பவாவும் கட்டியுள்ள இச்சிறு கூடு எனக்கு என் அம்மாவின் நினைவுகளை அலைகழித்துக் கொண்டிருந்தது. என் அம்மா ஒரு அற்புத மனுஷி. என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். கலையும், இசையும், படைப்பும் நிறைந்து அம்மாவின் ஆகிருதி அவள் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் அது ஒவ்வொன்றாய் உதிர ஆரம்பித்தது. நிறைவடையாத அவ்வீடு அம்மாவின் அத்தனை கலாபூர்வங்களையும் சிதைத்திருந்தது. அம்மாவின் நிறைவேறாத அக்கனவே என் 'வீடு' ஆனால் என் மகளின் நிறைவடைந்த இவ்வீடு அவளின் சிருஷ்டியை அப்படியே காப்பாற்றியுள்ளது''

எவ்வளவு கவித்துவம் ததும்பும் சொற்கள் இவைகள். இன்றளவும் தன் ஒவ்வொரு நொடியின் இடைவெளிகளையும் கவித்துவத்தால் நிரப்பத்துடிக்கும் ஒரு கலை ஆளுமை.

இந்திய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை அவர்.

ஒரு நாள் அதிகாலை என்னை தொலைபேசியில் அழைக்கிறார். ''பவா நேற்று ஒரு திரைப்பட விழாவில் என் 'வீடு' திரையிடப்பட்டது. பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தேன். நேற்று எடுத்த மாதிரி அத்தனை புதுசாயிருந்தது. காலத்தின் முன் தன் படைப்பு உதிர்ந்துவிடாமல், முன்னிலும் அதிக கம்பீரத்தோடு எழுந்து விஸ்வரூபமெடுப்பதை பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு உரிய பெருமிதம் இது.

''சார் நீங்க.....''

''நான் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். அவரே கோடிட்ட இடத்தை நிரப்புகிறார்.''

''நான் புலி பவா, புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''

- நாளை எழுதுகிறேன்...

பாலுமகேந்திரா பாராட்டிய கதை!

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...

தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்
(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)

அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.

யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.

எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!

‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.

நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.

சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.

பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.

இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.

கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.

தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!

ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.

இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!

‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’

படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.

காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.

இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.

அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...

muthirulandi@anbu.paasam.com


--------------------

33 comments:

SurveySan said...
:) good one.
Jeeves said...
excellent. I think I read this story in av.

did you publish any book so far ?
tamil24.blogspot.com said...
அப்பாவுக்கு ஈமெயில் இதயத்தைக் கனக்க வைத்துவிட்டது. அப்பாவின் அன்பு கடிதங்கள் பிரிவு என கதையின் அகலம் என் தந்தையை என் முன் கொண்டு வந்தது போன்ற உணர்வு. சிலமாதங்கள் முன்னர் காலமான எனது தந்தையாரின் இழப்பிலிருந்து இன்னும் விடுபடாத எனது துயரோடு உங்கள் கதையும் மனசைக்கனக்க வைத்தள்ளது கல்யாண்.

வாழ்த்துக்கள்.

சாந்தி
அதிரை ஜமால் said...
நெகிழ்வாய் இருந்தது.
அதிரை ஜமால் said...
தந்தை என்பவர் கற்று கொடுப்பவர்.

ஆசான்.

ஆசானே உங்கள் நேசன் ஆன பிறகு நீங்கள் வெற்றி நடை போடுவது மிக எளிது.

வாழ்த்துக்கள். நல்ல எழுத்து.
N Suresh said...
என் மீது அதீத பாசம் வைத்துள்ள கல்யாண்ஜீ,

என்னை சந்தித்தது கூட இல்லை. இருப்பினும் என் மீது இந்த கல்யாண்ஜீ இத்தனை பாசமா என்ற எனது பலமாத கேள்விக்கு இன்று இந்த சிறுகதை பதில் சொல்லிற்று. அன்பும் பாசமும் நிறைந்த ஒருவரின் மகன் நீங்கள்!

இப்போது அலுவலகத்தில் இருந்து தான் இந்த கதையை வாசித்தேன். பாலுமகேந்திராவின் பாராட்டோ, இந்த கதை ஆனந்தவிகடனில் வெளிவந்ததோ என்னை அப்படியொன்றும் பெரிதாக கவரவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த கதை, உண்மை அழகானது என்று நிரூபித்துள்ளதே, அது என்னை ஈர்த்தது.

அலுவலகத்தில் இருப்பதை சில நொடிகள் மறந்து விட்டேன். ஏறத்தாழ இந்த கதை முழுக்க அழுது கொண்டே வாசித்தேன்.

என் தந்தையின் நினைவிற்கு இந்த கதை கொண்டு சென்றது. என் தந்தைக்கு எழுதப் படிக்க தெரியாது. தொலைபேசியில் பேசி வந்தார், உங்கள் தந்தை கடிதமிட்டார்.

இங்கே நாம் நண்பர்களாக/சகோதரர்களாக இருப்பதைக் கண்டு வானத்திலிருந்து நமது அப்பாக்கள் மகிழட்டும்.

சந்தோஷமோ கவலையோ அல்லது இரண்டு கலர்ந்த என்னமோ - சொல்ல முடியாத ஓர் உணர்வில்

உங்களன்பு சகோதரன்
என் சுரேஷ்
goma said...
கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிருந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது உங்கள் சிறுகதை.ஆழமான கருத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கடிதத்தை நேசித்த உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலி.
ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளவரையும் அருகே நிறுத்திவைக்கும் அற்புதமான ஒரு மந்திரக் கோல் இந்த கடிதக்கலை.இன்று அது 10 விழுக்காடுக்குள் விழுந்த விட்டது,என்று அறியும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது.
Thooya said...
உங்களுக்கு அப்பா, எனக்கு அப்பப்பா....
மயிலாடுதுறை சிவா said...
படித்து முடித்தவுடன் மனம் கனக்கிறது.

இதை ஒரு குறும் படமாக எடுக்கலாம் போல் உள்ளது!

வாழ்த்துக்கள் கல்யாண். நான் பெரிதும் மதிக்கிற உன்னத கலைஞன் பாலுமகேந்திரா உங்களை பாராட்டி இருப்பது மிகப் பெரிய பொக்கிஷம்!

மயிலாடுதுறை சிவா...
லிவிங் ஸ்மைல் said...
ஹே! இந்த கத நான் படிச்சிருக்கேன். நல்ல கதை. நீங்க எழுதினதா.. ரொம்ப சந்தோசம். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம் இது Fictionஆ, நெஜமா...?
நா. கணேசன் said...
மிகவும் அருமை!
கவிநயா said...
மனதைத் தொட்ட கதை. அருமை. வாழ்த்துகள்.
தமிழ்நெஞ்சம் said...
அழ வைத்துவிட்டீர்கள்.

இயல்பான உங்க்ள் நடையில் எழுதி உள்ளீர்கள்.

எந்த மெழுகுப் பூச்சும் இல்லாமல், கதை அதன் போக்கில் செல்கிறது.

வாழ்த்துக்கள்.

அனுபவம் பளிச்சிடுகிறது.
//இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது
துளசி கோபால் said...
அருமை.

நம் மனதுக்கு இனியவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது சுகமானதே, அது கற்பனை என்றாலுமே.
VINOTH gowtham said...
நல்ல நெகிழ்வான கதை.
தங்கராசா ஜீவராஜ் said...
/////அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.
/////

படித்து முடிந்ததும் கனத்திருந்தது இதயம்

////இது ஒரு யுனிவர்சல் தீம் ///
உண்மை
இயல்பான நடை,அலங்காரமில்லாத வார்த்தைப் பிரயோகங்கள் ..... அருமை வாழ்த்துக்கள்......
RAMASUBRAMANIA SHARMA said...
EXCELLENT ARTICLE...KINDLY ACCEPT MY WISHES...PL CONTINUE WRITING...
கவின் said...
வாசிக்கும்போது மிக நெகிழ்சியாக இருந்தது
கவின் said...
அருமையான கதை
Resh said...
I also red this story in Vikadan without knowing you as a author, it's nice. Congrats.
நசரேயன் said...
ரெம்ப அருமையா இருக்கு
boopathy perumal said...
இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு "மகனும்" தனது மறைந்து விட்ட தந்தையையின் நினைவுகளில் மூழ்காமல் இருக்க முடியாது, இந்த நிகழ்வுகளின் தாக்கம் தந்தையை இழந்தவர்கள் மட்டுமே உணர முடியும். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது ஒருமுறை விடுதியில் பணம் கட்ட அவரது திருமண மோதிரத்தை 1985 ஆம் ஆண்டு ருபாய் 750 க்கு வங்கியில் அடகு வைத்து பணம் அனுப்பினார், அந்த மோதிரத்தை இப்போது பார்த்தாலும் அந்த நிகழ்வுதான் ஞாபகம் வருகிறது.
வடகரை வேலன் said...
மிகச் சிறப்பாக எழுதியிருகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.
நான் ஆதவன் said...
கண்களில் நீர் கேர்த்து விட்டது தோழரே வாழ்த்துக்கள்
goma said...
அடே! டெம்ப்பிளேட் மாற்றம் நன்றாக உள்ளது.
பழயன் கழிதலும் புதியன புகுதலும் என்று நமக்காகத்தான் சொன்னார்களோ.நானும் அவ்வப்போது மாற்றுவேன்
G.Muthukumar said...
மிகவும் நெகிழ்ச்சியான கதை. பெரும்பாலும் தந்தை என்ற மனிதனை புரிந்து கொள்ள பிள்ளைகள் - அதிலும் ஆண் பிள்ளைகள் பெரும்காலம் கடக்க வேண்டி இருக்கிறது. அதன் காரணமாக நான் கொள்வது ஆண்களின் ஈகோ எனப்படும் உணர்ச்சிதான். அந்த குமிழ் உடையும் போது அப்பா என்ற மனிதனின் காலம் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. திரு.பாலுமகேந்திரா அவர்கள் சொன்னது போல இது பன்மொழிகளிலும் மொழி பெயர்க்கபடவேண்டிய ஒரு கதை. ஒரு இனம் தெரியாத நூலிழையில் கட்டப்பட்ட தந்தை மகன் பாசம் மிக இயல்பான வார்த்தைகளில், இயல்பான சம்பவங்களில் சொல்லபட்டு உள்ளது அருமை. மெல்லிய நகைச்சுவை இழையோடும் சுய சோகங்கள் மேலும் உணர்வு கூட்டுகின்றன. மேலும் நிறைய படிக்க ஆசைப்படுகிறோம்... வாழ்த்துக்கள்.
இது என் சங்கப்பலகை said...
வணக்கம். இதே முத்திரை கதை போட்டியில் நானும் கலந்துகொண்டவன் என்கிற முறையில்
அப்போதே இந்த கதையிடம் நான் தோற்றுப்போனதை மனமார ஒப்புக்கொண்டிருக்கிறேன். சக்திவாய்ந்த காலம் இன்று படித்ததையே மீண்டும் படிக்க வைக்க- சுரேஷ் அண்ணா மூலம் என்னை பணித்திருக்கிறது. இது ஒருவகையில் என் கதையும் கூட.படபிடிப்பிலிருந்தபோது அப்பாவுக்கு முடியவில்லை உன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறார்ர் எனும் சேதி கேட்டு, கிளம்பிப்போய் உயிரற்ற அவரை பார்த்த அதிர்ச்சியும்,சட்ட முறைக்கு உட்பட்ட சில விண்ணப்பங்களில் அப்பா எனுமிடத்தில் 'late'என் எழுதும் ஒவ்வொருமுறையும் அழுபவன் நான்.
எனது திருமணத்தில் அப்பாவுக்கு உடன்பாடில்லை.நேசத்தைவிட்டுத் தர என்னால் இயலவில்லை.பத்திரிக்கை ஏதும் அடிக்காமல் ஒன்றேயொன்றை நானெழுதி அவளை அழைத்தேன். அவள் ஒன்றை எழுதி என்னை அழைத்தாள். புதிய வாழ்வின் தேசம் புகுந்த பிறகு அப்பாவுக்கும் எனக்குமான தொடர்பு அற்றுப்போனது.அவர் மரணகாலத்தில் எடுத்த சில முடிவுகள் அப்பாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான பாடம். இறந்தவரை புதைப்பது எங்கள் வழக்கம். ஆனால் அப்பா..என் மூத்த அண்ணனிடம்.."அவன் காதல் திருமணம் நிமித்தம் தம்பியோடு முரண்பட்டது நிஜம். அதே சமயத்தில் இந்த ஊருக்கு அவன் என் உறவிலிருந்து விலகாத பிள்ளை என்பதை நான் அறிவிக்க வேண்டும்.என்னை புதைப்பதற்கு பதில் எரித்துவிடவும். கொள்ளியை என் கடைசி மகனிடம் கொடுங்கள்.அப்போதுதான் ஊருக்கு என்னுடையதில் எல்லா பாத்தியதையும் அவனுக்குமிருக்கிறது என தெரியும்."என்று அவர் சொன்னபடிதான் அனைத்தும் நடந்தது.
அப்பாவிடமிருந்து மனமுவந்து நான் கேட்டு.வேண்டி பெற்றுக்கொண்டது அவரது தமிழ்.அந்த தமிழ்தான் எனக்கான வாழ்க்கை.
உங்களின் கதை என் அப்பாவை மீண்டும் என்னிடம் சேர்த்திருக்கிறது.எனக்கு மட்டுமல்ல இந்த கதையை படிக்கும் ஒவ்வொருவரும் தம் தந்தையரை எண்ணுவர் என்பதே இதன் வெற்றி.
Chandravathanaa said...
கல்யாண்குமார்,

மிக அருமையான பதிவு.
கண்கள் பொலபொலவென்று கொட்டி விட்டன.
விக்னேஷ்வரி said...
மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.
சுதாகர் said...
மிகவும் அருமை.
உணர்ச்சிபூர்வமான எழுத்து.
வாழ்த்துக்கள்
Vilasini Nair said...
ஊண்மையின் தன்மையில் விளைந்த நெகிழ்வு உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது. இது கதையாக தோன்றவில்லை. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாக இருக்குமோ என்று தோன்றியது...

Vilasini Nair said...
உண்மையின் தன்மையில் தோன்றிய எழுத்துக்கள் நெகிழ வைத்து விட்டன. இது ஒரு சிறுகதையாக தோன்றவில்லை எனக்கு. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாகவே தோன்றியது!
anu salim said...
ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு.... கொடுத்து வைத்தவர் நீங்க....எல்லா விஷயத்திலேயும் பக்கபலமா இருக்கிற பெற்றோர் கிடைக்கறது ரொம்பவே குறைவு.....ஒழுங்க கல்லூரிக்கு போயி படிச்சி வேலைய தேடிக்கோன்னு வற்புறுத்தாமல் உங்கள் விருப்பத்துக்கு விட்டு கொடுத்ததை படிச்ச போது உங்கள் மேலே கொஞ்சம் பொறாமை கூட....:)

திங்கள், 23 டிசம்பர், 2013

Bava Chelladurai...


Sindhu thamizh..

சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்

– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.  சிந்துசமவெளி பற்றிய ஆய்வில் முக்கியமானவர், அவரது ஊர்பெயரியல் ஆய்வு குறித்த அறிமுக கட்டுரை
•••
மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.
ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.
சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.
அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.
தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.
எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.
பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.

இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.
சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.
சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.
(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)
தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.
தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
நன்றி  : ஆர் பாலகிருஷ்ணன்

சனி, 24 ஆகஸ்ட், 2013

new..

யாழ். அஸீம் எழுதிய - மண்ணில் வேரோடிய மனசோடு
Thursday, April 18, 2013


நாட்டவிழி நெய்தல்






“எப்படியிருக்கிறது வாழ்க்கை?” என்ற வினாவை வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் பலரிடம் நான் கேட்டுப் பார்த்திருக்கிறேன். தொழில் நிமித்தம் வாழ்பவரர்கள், ஒரு காலப் பிரிவில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளானவர்கள், சுகபோகக் கனவுகளோடு வெளியேறியவரர்கள் போன்ற - தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் எனது பட்டியலில் அடங்குவார்கள். வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு நிலைமைகளில் இவ்வினாத் தொடுக்கப்பட்ட போதும் அவர்கள் அனைவரினதும் பதிலின் சாராம்சம் ஒன்றாகவே இருந்ததை நான் அறிய வந்தேன். “நம்ம நாடு போல் வராது!” என்பதே அவர்கள் அனைவரினதும் பதிலாக அமைந்திருந்தது.

ஒரு விமானப் பயணம் மேற் கொண்டு இலங்கைக்குத் திரும்பும் போது விமான நிலையத்தில் பயணிகளை குறிப்பாக இலங்கையரை அவதானித்தீர்களானால் அவர்கள் அனைவரிடமும் ஒரு வித்தியாசமான அவசரத்தைக் காண்பீர்கள். எவ்வளவு விரைவாகத் தனது இருப்பிடத்தை அடைய முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது உறவுகளைக் காண முடியுமோ - எவ்வளவு விரைவாகத் தனது சூழலைச் சேர முடியுமோ, அவ்வளவு விரைவாக இயங்கி அடைந்து கொள்ளும் மனித மனத்தின் துடிப்பைத்தான் அந்த அவசரம் நமக்கு உணர்த்துகிறது.

நானும் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அதிக பட்சம் பத்து நாட்கள் மாத்திரமே அங்கெல்லாம் என்னால் தாக்குப் பிடிக்க முடிந்திருக்க முடிந்திருக்கிறது. நமது தேசத்தை விட எல்லா வகையிலும் முன்னேறிய, பார்த்துப் பரவசப்படக் கூடிய ஏராளமான அம்சங்களைக் கொண்ட நாடுகளாக அவை விளங்கிய போதும் நாட்கள் செல்லச் செல்ல அத்தேசங்களின் எல்லா அம்சங்களும் எல்லா அழகுகளும் எல்லா ஆச்சரியங்களும் எனக்கு அலுப்புத் தட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கு அருந்திய தேனீர் கூட வயிற்றைக் குமட்டும் அளவுக்கு என்னை வெறுப்பேற்றியிருக்கிறது. அவ்வாறான நிலைமைகளில் நமதுமண்ணும் நமது உறவுகளும், நமது சூழலும், நமது நட்பும் உலகத்தில் வேறு இடங்களில் கிடைக்கும் எல்லாவற்றையும் விட உயர்ந்தவையாக, உன்னதமானவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. ஏன் நமது மண்ணின் ஒரு மிடர் நீர் கூட உலகத்தில் எங்கும் கிடைக்காத அதியற்புத பானமாக நமது உணர்வில் தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனின் சொந்த இடத்துக்கு அவனது சூழலுக்கு இணையாக வேறொரு இடமும் சூழலும் அமைவதில்லை என்பதைத்தான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் உறவினர் அல்லது உடன்பிறப்பு, அல்லது நெருங்கிய பாசத்துக்குரிய ஒருவரின் நிதமான பிரிவு நம்மை தாங்க முடியாத துயரில் தள்ளிவிடக்கூடியது. என்றாலும் கூட ஒரு மாதத்தின் பின், அல்லது ஆறு மாதங்களின் பின் அந்தத் துயரிலிருந்து நாம் மீண்டு விடுகிறோம். நமது வழமையான வாழ்வுக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரு மனிதனுக்கு மாறாத மன வலியைத் தரும் விடயம் ஒன்று இருக்குமென்றால் அது நிச்சயமான அவன் பிறந்து வளர்ந்த சூழலை இழக்க நேர்வதும் அவனது மண்ணை விட்டு வேறொரு மண்ணில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதுமேயாகும். அவனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் எல்லாக் கட்டங்களிலும் அது பெரும் இடைவெளியை ஏற்படுத்தி அவனுடைய நிழலைப் போல அது பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த வாழ்வின் போது அவனது மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவனது எண்ணவேட்டங்கள் எல்லோரையும் போல் வாழும் ஒரு மனிதனின் எண்ணவேட்டமாக இருப்பதில்லை. அவனது வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் இந்தத் துயரம் ஒரு நுளம்புக் கடி போலவோ ஒரு கட்டெறும்புக் கடிபோலவோ இருப்பதில்லை. நகக் கண்ணுள் சிதைந்த மரப்பலகையின் சிராய் ஏறிவிடுவதுபோல கல்லில் கால் மோதி கால் நகத்தைப் பெயர்த்துவிடுவது போல அவ்வப்போது அவனை வதை செய்து கொண்டேயிருக்கும். இந்த வதை அவ்வாறு வாழ நிர்ப்பந்திக்கப்டட மனிதனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

இந்த வதையோடுதான் வடபுலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் சிதறி அகதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வதையோடும் தமது வாழ்நிலம் செல்லும் ஏக்கத்தோடும் அவர்கள் வாழ ஆரம்பித்து இன்று 22 வருடங்கள் கழிந்து போயிருக்கின்றன.இந்தக் கால் நூற்றாண்டுத் துயரம் அரசியலாக, சமூகவியலாக, பண்பாட்டியலாக, இலக்கியமாகவெல்லாம் இன்று மாற்றம் பெற்று விட்டது. வரலாற்றுக்கும் நாளைய சமூகத்துக்கும் இந்தத் துயரை எடுத்துச் செல்லவும் சொல்லலவும் பயன்படப்போவது இலக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த மகத்தான பங்களிப்பைச் செய்தவராகத்தான் நாம் நண்பர் யாழ் அஸீம் அவர்களைப் பார்க்கிறோம். எல்லா மக்கள் குழுமத்துக்குள்ளும் கவிஞர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினதும் வாழ்வை அவர்களே காலத்துக்குக் காலம் படம் பிடித்து வரலாற்றுக்கும் அடுத்த பரம்பரைக்கும் வழங்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார்கள்.

வடபுல வெளியேற்றலின் வலியை, சுமையை, கஷ்டத்தை, கண்ணீரை, ஏக்கத்தை - எல்லாவற்றையுமே இலக்கியத்தில் பதிந்து வைத்துவிடும் படைப்பாளிகள் தத்தமது கடமையைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நண்பர் யாழ். அஸீம் ஒரு முக்கிய சாட்சியாக நம்மிடம் இருக்கிறார். அவரது கவிதைகள் உலகிடம் இருக்கின்றன.யாழ் அஸீமின் கவிதைகள் தம்மைத் துரத்தியோர் மீது காறி உமிழவில்லை. உன் இரத்தம் பார்க்காமல் ஓயமாட்டேம் என்று சத்தியம் பண்ணவில்லை. உனது வாழ்வைக் கூறு போடுவேன் என்றோ நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்றோ சாபம் இடவில்லை. நீங்கள் ஏன் முதுகில் குத்தினீர்கள்? எங்கள் சோற்றுப் பானைகளில் ஏன் மண்ணை இறைத்தீர்கள், எங்களை ஏன் உப்புக் கரிக்கும் நீரில் உழல விட்டீர்கள் என்றே கேட்டு நிற்கின்றன. உங்களுக்கு நாங்கள் செய்த எந்த அநீதிக்காக எம்மை நெருப்புக் கிடங்குள் எறிந்தீர்கள் என்று கேட்கின்றன. அவரது கவிதை மொழியின் கேள்விகள் நீதிக்காக நிற்கும் ஓர் ஏழையின் உடைந்த குரல். அநியாயம் இழைக்கப்பட்ட ஒருவனின் ஏந்திய கைப் பிரார்த்தனை. அழகிய பண்பாடும் கலாசாரமும் சகோதரத்துவ உணர்வும் கொண்ட ஓர் இஸ்லாமியனின் வாஞ்சை மிக்க உறுதிக் குரல்.யாழ். அஸீம் எத்தகையவர் என்பதைப் புரிந்து கொள்ள இந்நூலின் 80ம் பக்கம் ‘அகிம்சைப் போராளிக்கு’ என்ற தலைப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதை சான்று பகர்கிறது. அஸீம் தந்தை செல்வநாயகத்துக்கு இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

புத்தளத்துப் பள்ளி தனில் புனிதத் தலத்துள்ளே துப்பாக்கிக் குண்டுகள் துயர் விளைத்த வேளையிலும் இனமென்றும் மதமென்றும் பேதங்கள் பாராமல் துடித்தெழுந்து அடலேறாய் துணிந்து குரல் கொடுத்தீர்கள்...பாராளுமன்றத்தில் பலபேரும் மௌனிகளாய் கைகட்டிப் பார்த்திருக்க கர்ச்சித்த சிங்கம் நீங்கள் இஸ்லாமிய இதயங்களில் இனிய பால் வார்த்தீர்கள் இப்போதும் எப்போதும் இதயமதை மறக்காறு!
அன்று எல்லாச் சிறுபான்மைக்குமாகப் பேசிய ஒரு முன்மாதிரிதான் செல்வநாயகம் ஐயா என்ற ஆளுமை. இன்னொரு சிறுபான்மையைக் காவு கொடுத்து விட்டு அல்லது அடக்கியாண்டு அதன்மேல் வாழ்க்கை நிர்மாணித்துக் கொள்ள நினைப்பவர்கள் எஸ்ஜேவி ஐயாவின் பாதைகளைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். முஸ்லிம்களுக்காக அவர் கொடுத்த குரலை அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அவர் மேற்கொண்ட கலகத்தைப் புகழும் அஸீம் என்றைக்கும் நன்றி தெரிவிக்கும் இடம் போற்றுதலுக்குரியது. ஒரு மனச்சாட்சியுள்ள உண்மைக் கவிஞனாக அவரை நம்முன்னே நிற்க வைக்கிறது.
வடபுலத்து முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் யாழ். உஸ்மானியாக் கல்லூரியில் ஒரு பெனர் கட்டப்பட்டிருந்தது. “தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில் புதைந்து போன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது - வே. பிரபாகரன்” - இதுதான் அந்த பெனரிலே காணப்பட்ட வாசகம். அதாவது தமது இனத்துக்கு விடுதலை கோரியப் போராடிய பிரதானப் போராட்டக் குழு, இந்தத் தேசத்தின் மற்றொரு சிறுபான்மையை வேரோடு கிள்ளி வீசிவிட்டுப் பேசிய பெருமை மிக்க வார்த்தை இதுதான். ஆனால் வெளியுலகுக்கு தங்களது தலைமைத்துவத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயமே தெரியாது என்றுதான் பலர் ஒரு பெரும் பூசனிக்காயை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைத்துக் கொள்ள முன்றார்கள் என்பதையும் நாம் கண்டோம்.90,000 புத்தகங்களை எரியூட்டப்பட்ட போது பதறியடித்தவர்கள், நியாயம் பேசியவர்கள், ஒரு லட்சம் மக்கள் உடுத்திருந்த உடையோடு வெளியேற்றப்பட்ட போது மௌனித்திருந்தார்கள் என்று நண்பர் கலைவாதி கலீல் ஒரு முறை எழுதியிருந்தார். இந்தக் கள்ள மௌனமும் பூசனிக்காய்களை ஒரு கரண்டிச் சோற்றுக்குள் மறைக்கும் செயல்பாடுகளும் வடபுலத்து முஸ்லிம்கள் விடயத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.கவிஞன் தன் கவிதைகளாயே போரிடுவான். அந்தக் கவிதைகள் நிறுத்தப்பட முடியாதவை. கவிதைகளுக்காக ஒரு கவிஞன் கொலையுறுவானேயாகில் இன்னொரு கவிஞன் தோன்றுவான். அவன் தனது நியாயத்தை உலகத்தின் தர்மத்தை மதிக்கும் மக்கள் முன்னால் சமர்ப்பித்துக் கொண்டேயிருப்பான்.
உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் மற்றவர்களை மாற்றிக் கொள்ளவும் வரலாற்றைத் தமக்கு ஏற்றவாறு திருப்பி அல்லது திருத்தி எழுதவுமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மனித குல வரலாற்றின் போக்கைத் தீர்மானிப்பது தனி மனிதனோ, ஒரு இனக் குழுமமோ, ஒரு தேசமோ அல்ல என்பதை இறைவன் உணர்திக் கொண்டேயிருக்கிறான். காலம் அவனுடையது; அவனே காலமாயிருக்கிறான். அஸீம் சொல்கிறார்:-
வரலாறு நீயா எழுதுகிறாய்?எழுத்தாணி அவன் கையில் ஏடும் அவன் கையில் வல்லவன் அவன் எழுதும் வரலாற்றின் பாத்திரம் நீ எழுத்தாளன் அவன் எழுதும் வெறும் வெற்றெழுத்துத்தான் நீ வல்லவன் அவன் எழுதும் வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி நீ வைப்பதா?நீயே அவனிட்ட காற்புள்ளி.எனக்கென்ன முற்றுப் புள்ளி நீ வைப்பது?உனக்கும் அவனன்றோ முற்றுப் புள்ளி வைப்பது!ஆட விடுகிறான் உன் ஆட்டம் தவறினால் அவுடடாக்கி விடுகிறான்.
அஸீம் வெளியிடும் இந்த நூலின் 92ம் பக்கம் இடம்பெற்றுள்ள கவிதை இது. 2006 அக்டோபரில் இந்த முற்றுப் புள்ளிக் கவிதையை அவர் எழுதுகிறார். கவிதை எழுதப்பட்டு 3 வருடங்கள் நிறைவுறுவதற்குள் ஒரு புள்ளி விழத்தான் செய்தது. ஆகக் குறைந்தது நீ கொஞ்சம் நகரலாம் என்ற முதலாவது நம்பிக்கையை துரத்தப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தியது அந்தப் புள்ளிதான். புண்பட்டுப்போன மனதுக்கு ஓர் சிறிய ஆறுதலைத் தந்தது அந்தப் புள்ளிதான். ஏக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கான பாதையில் நிற்கும் பாறையை அகற்றுகிறேன் என்று அறிவிப்புச் செய்யப்பட்ட புள்ளிதான் அது. அந்தப் புள்ளிதான் துரத்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டுவதற்காகக் காட்டப்பட்ட துருவ நட்சத்திரம்.ஒரு புள்ளிதான் விழுந்திருக்கிறது. அந்தப் புள்ளியை மீண்டும் வைத்திருப்பதற்குப் பலர் முயற்சிக்கிறார்கள்.அதாவது துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது ஜென்ம பூமிக்கு வந்துவிடக் கூடாது என்ற வக்கிர மனத்துடன் இன்னும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பெருந்துயர் தருவது. அதாவது வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை நாம் வழங்கமாட்டோம் என்பதை எல்லா வகையிலும் சிலர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். துரத்தபட்ட முஸ்லிம்களின் அரசியல் பிரமுகர்கள் முதற் கொண்டு சாதாரண வர்த்தகர் வரை மீள முயற்சிக்கும் எல்லோரையும் அதற்கு உதவ முயற்சிக்கும் எல்லோரையும் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் அடர்ந்தேற வருவோராகவும் சித்திரித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வரலாற்றிலிருந்த அவர்கள் படிப்பினை பெறவில்லை என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.
பிரபல ஊடகவியலாளர் டி.பி.எஸ் .ஜெயராஜ் இப்படிச் சொல்கிறார்:-“தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கி, அவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றி, அவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,”
ஒரு கவிஞன் நியாய தர்மங்களுக்கு அப்பால் தனது கவிதையில் பேசுவதில்லை. அப்படி ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் உண்மையான கவிஞனும் இல்லை. தனது சொந்த நடத்தையில் போக்கில் கூடுதலோ குறையோ கொண்டவனாக ஒரு படைப்பாளி இருக்கக் கூடும். ஆனால் அவனது படைப்புகளில் அவன் ஒரு போதும் நேர்மை தவறுவதில்லை. அவன் நேர;மையையும் நியாயத்தையும் மக்களிடம்; ஏந்தி வருகிறான். நேர்மையும் நியாயமும் இறைவனின் நியாயத் தராசிலிருந்து அவன் பெற்றுக் கொள்வது. அதைத்தான் மக்களின் மனச்சாட்சியின் முன்னால் வைத்து விடுகிறான். மனச்சாட்சியுள்ள மனிதர்களே இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் கவிஞனின் கவிதை விடுக்கும் செய்தி. மனச்சாட்சியுள்ளவர்கள் தர்ம நியாயங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இல்லாதவர்களே மற்றவரின் மரணங்களின் மீது சாம்ராஜயம் எழுப்பவும் அதற்கு ஆதரவு தருவதற்கும் முன்னிற்கிறார்கள்.
2003ம் ஆண்டு வடகிழக்குக்குத் தன்னாதிக்க அதிகார சபையொன்றை வழங்குவதற்கு அப்போதிருந்த அரசு ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அந்த அறிவிப்பு வந்து விடலாம் என்ற நிலையில் கிழக்கில் பாரம்பரியமாக சில ஊர்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு தமிழ் விடுதலைப் போராளிகள் ஒரு செய்தியை அனுப்பியிருந்தனர். ‘நீங்களும் ஷொப்பிங் பைகயோடு எந்நேரமும் வெளியேறுவதற்குத் தயாராக இருங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அவ்வாறானதொரு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் கிழக்கு முஸ்லிம்களும் இன்று மொத்தமாக வடபுல அகதிகள் போல் முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அவ்வாறனதொரு நிகழ்வு நடைபெறாமல் போனமைக்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இடம்பெயர்ந்து வாழும் ஒரு பலஸ்தீனக் கவிஞனுக்கு ஒப்பான நிலையில்தான் துரத்தப்பட்ட வட புல முஸ்லிம்களின் பிரதிநிதியான யாழ் அஸீம் திகழ்கிறார். ஆக துரத்தப்பட்ட எல்லா மக்களினதும் பிரதிநிதியாகவே அவர் குரல் கொடுக்கிறார். இந்த அடிப்படையில் அவர் பலஸ்தீன மக்களுக்காகவும் பேசுகிறார். துரத்தப்பட்ட மக்களின் கவிஞன் என்ற அடிப்படையில் உலகத்தில் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அனைவரினதும் பிரதிநிதியாக அவர் மாறிவிடுகிறார். மத்திய கிழக்கில் அரபுலக ஆட்சியாளர்களின் சின்னத் தனத்துக்கெதிரான அவரது ஆதங்கம் ‘உரத்துப் பேச ஒரு ஒட்டகம் இல்லையே’ என்ற கவிதையில் வெளிவந்திருக்கிறது. ஆழ்ந்த அர;த்தமுள்ள இந்தக் கவிதை தினக்குரல் பத்திரிகை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சமரசம் சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்தது. அந்தக் கவிதையைக் கொண்டே யாழ் அஸீமை யாத்ரா 21வது இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக இருந்தாலென்ன, துரத்தப்பட்டு அகதி முகாம்களில் வாழும் சமூகமாயிருந்தாலென்ன - அந்தச் சமூகங்களுக்குள் இறைவன் கவிஞர்களை, படைப்பாளிகளை உருவாக்கி உலவ விடுகிறான். ஆக ஒரு சமூகத்தின் மொத்த வாழ்வையும் அவர்கள் தங்கள் இலக்கியப் படைப்பூடாகக் கொண்டு வந்து வெளியுலகுக் காட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையில் வடபுலத்துத் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் கவிஞர்களுள் முக்கியமான ஓர் இடம் யாழ். அஸீமுக்கு இருக்கிறது. எனவே நம் எல்லோராலும் அவர் போற்றப்பட வேண்டியவர். இந்த யாழ். சமூகத்துக்குள் செல்வந்தர்கள் இருக்கலாம், பெருந்தொழில் செய்வோர் இருக்கலாம். அவர்களால் பெரும் சமூகப்பணியும் ஆற்றப்படலாம். ஆயினும் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கும் கவிஞனுக்கு யாரும் ஈடாக மாட்டார்கள் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஏனெனில் காலப்போக்கில் யாவும் மறைந்து போகும். கவிதையும் இலக்கியமும் வரலாற்றைச் சொல்லியபடி வாழ்ந்து கொண்டிருக்கும்.இப்போது நம்முன்னால் ஒரு பலஸ்தீனம் உள்ளது. தூரத்தில் உள்ள பலஸ்தீனுக்கு எவ்வாறு நமது ஆதரவைத் தெரிவிக்கிறோமோ அதை விட இரண்டு மடங்கு ஆதரவை நமது வடபுலத்துப் பலஸ்தீனத்துக்கு வழங்க வேண்டியது நமது கடமை என்று உணரவேண்டும். யாழ் அஸீம் உட்பட உலகளாவிய ரீதியில் துரத்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் அனைத்துக் கவிஞர்களினதும் வேண்டுகோள் என்னவெனில் துரத்தப்பட்ட மக்களோடு இருங்கள் என்பதுதான். இதைத்தான் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
யாழ் அஸீமின் கவிதைகள் எப்படியிருக்கின்றன என்று இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் புதுக் கவிதையும் எழுதுகிறார். மரபுசார் ஓசை நயத்தை நெருங்கியும் எழுதுகிறார். மிகவும் தெளிவான வார்த்தைகளில் நேரடியாக வாசகனுடன் பேசுகிறார். அவர் எந்த வடிவத்தைத் தனக்கெனத் தேர்ந்து கொண்டார் என்பது இப்போது முக்கியமானதல்ல. அவரது எழுத்துக்குள் கவிதை இருக்கிறது, துரத்தப்பட்ட மக்களின் ஏக்கமும் கண்ணீரும் இருக்கிறது. அவர் ஒரு மக்கள் கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்று நம்புகிறேன்.
(06.01.2013 அன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் “ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் யாழ் அஸீமின் “மண்ணில் வேரோடிய மனசோடு” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட கருத்துரை)

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 4/18/2013 10:55:00 AM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
Sunday, January 6, 2013

திரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவும்.
-யோகரட்ணம்-
vayiramuththu-எனது ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ என்ற நூல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தபோது ஐயா வைரமுத்து மாஸ்டர் அவர்களும் அதில் கலந்துகொண்டது எனக்கு கிடைத்த மிகப்பேறாக நான் கருதுகின்றேன். வெகுவிரைல் இலங்கை சென்று அவரை உயிருடன் பார்க்கவேண்டும் என்ற எனது ஆவல் சிதைந்துபோனது. திரு.வைரமுத்து ஐயா அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகளும், இப்படியான ஒரு மனிதன் எம்மத்தியில் வாழ்ந்தார் என்பதும் வரலாற்றில் பதிவு செய்யவேண்டியது மிக அவசியம் என்பதாக நான் கருதுகின்றேன். அவர் பற்றிய சில தகவல்களை எனது நூலில் பதிவு செய்திருந்தாலும், அவருக்கான எனது இந்த நினைவஞ்சலியிலும் எனது சில மீழ் நினைவுகள்
1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மத்தியிலே நிகழ்ந்த ஒரு ஆயுதப்போராட்டம் பற்றிய தகவல் பலருக்குத்தெரியாத சங்கதி. குறிப்பாக இன்றைய இளைய சந்ததியினர் அறியாத ஒரு வரலாறு. இந்தப்போராட்டமானது சிங்கள அரசிற்கும் தமிழ்போராளிகளுக்கும் இடையில் நிகழ்ந்த ஆயுதப்போராட்டம் அல்ல!மொழியால், இனத்தால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று பேசிக்கொள்ளும் தமிழ்பேசும் மக்களாகிய நாமே நமக்கெதிராக போராடிய காலம். இந்தப்போராட்டத்தாலும் உயிர் இழப்புகளும், உடைமை அழிவுகளும், இடப்பெயர்வுகளும் கூட நிகழ்ந்தது. யாழ்குடா நாடு பூராகவும் பதட்டம் நிலவிய காலம்அது. இந்து,கிறிஸ்தவ ஒடுக்குமுறைச் சாதியினரிடமிருந்து தம்மை விடுவிப்பதற்காக தலித் மக்களால் நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டம். இதுவே முடியாட்சிகளுக்கு பிற்பாடு இலங்கையில் நிகழ்ந்த முதலாவது ஆயுதப்போராட்டம். இந்தக்காலப்பகுதியில்தான் திரு. வைரமுத்து ஐயாவுடன் நான் அறிமுகமாகின்றேன். அப்போது எனக்கு வயது15 .
பொதுஇடங்களிலும், ஆலயங்கள், பாடசாலைகள், தேனீர்க்கடைகள், சலூன், சலவைக்கடை, சுடலை போன்ற இடங்களிலும் தீண்டாமை நிலவியபோது அதற்கெதிராக நிகழ்த்தப்பட்ட சமூகவிடுதலைப்போராட்டமே ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபை,தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவைகளே இந்தப்போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள். இக்காலகட்டத்தில் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினராக இருந்தார்.
திரு. வைரமுத்து அவர்கள் தனது 30வது வயதிலேயே பல்வேறு ஆற்றல் உள்ளவராக திகழ்ந்தார். ஆங்கிலமும்,சிங்களமும் மிக சரளமாக பேசும் ஆற்றல் கொண்டவர். யாழ் ஸ்ரான்லி கல்லூரியின் ஆசிரியரகவும் பணிபுரிந்தார்.கண்டி தியவத்தை நிலமையாகவும், 77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் இருந்தவர் திரு. நிசங்கவிஜயரட்ணா அவர்கள். இவர் திரு. வைரமுத்து மாஸ்டரின் மிக நெருங்கிய நண்பர். நிசங்கவிஜயரட்ணா அவர்களின் நட்பும் ஆலோசனையுமே 1948இல் அகில இலங்கை பௌத்த தமிழ் காங்கிரஸ் எனும் ஸ்தாபனம் தோன்றக் காரணமானது. இதற்கு திரு. வைரமுத்து அவர்கள் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
யாழ்மேலாதிக்க தமிழ் ஒடுக்குமுறை சாதியினரால் கல்வியும், படசாலை பிரயோகமும் மறுக்கப்பட்ட தலித் சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் மாற்று வழி கண்டுகொண்டவர் திரு வைரமுத்து அவர்கள். 1966களில் தமிழ் பௌத்த காங்கிரசின் உதவியுடன் பின் தங்கிய தலித் கிராமங்களான கரவெட்டி (கன்பொல்லை), புத்தூர்,அசசுவேலி போன்ற கிராமங்களில் பாடசாலைகள் அமைத்து அதன் திறப்பு விழாவிற்காக மல்வத்தை பீடாதிபதி மகாநயக்கர் வணபிதா விபஸ்தி தேரர் அவர்களும் வரவழைக்கப்பட்டார். கலவரம் ஏற்படலாம் என்ற காரணத்தால் தனது நண்பரான பொலிஸ்மா அதிபர் திரு.இக்த மல்கொட மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார் திரு. வைரமுத்து அவர்கள். இச்செய்தியை அறிந்த யாழ்மேலாதிக்க ஒடுக்குமுறைச் சாதியினருக்கு காதுகளில் ஈயம் உருக்கி ஊற்றிய வேதனையை கொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் இந்த ஜயாத்துரை (வைரமுத்து) தான் இவனுக்கு உதவியாக பொலிஸ்மா அதிபர் இருப்பதையும் அறிந்து கொதித்தனர். அப்போது யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் திரு.வேணன் அபயசேகரா. இவர் யாழ்மேலாதிக்க சக்திகளுக்கு சார்பானவராகவும் இருந்தார். இவரூடாக வைரமுத்து மாஸ்டரின் நண்பரான பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றத்திற்கான பணிப்பு தந்தி மூலமாக அனுப்பப்பட்டது. இதை அறிந்த வைரமுத்து அவர்கள் கொழும்பு சென்று வணக்கத்துக்குரிய கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரை சந்தித்து விபரத்தை கூறினார். (கெப்பிட்ட கெதர ஞானசீக தேரரின் உற்ற நண்பராக இருந்தவர் திரு எஸ்.டபிள்யூ,ஆர்.டி. பண்டாரநாயக்கா) அதன் விளைவாக பொலிஸ்மா அதிபரின் இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டு அதற்கு பதிலாக யாழ் மேலாதிக்க சமூகத்திற்கு சேவகம் செய்து வந்த திரு. வேணன் அபயசேகரா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறான திரு.வைரமுத்து மாஸ்டர் அவர்களின் பணியும், யாழ்மேலாதிக்கத்திற்கு எதிரானபோராட்டத்தின் பின்னணியிலேயே மூன்று தமிழ் சிங்கள பௌத்த பாடசாலைகள் வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இதனூடாகவே பல தலித் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் அடிப்படைக்காரணமாக அமைந்தது.
இக்காலகட்டத்தில் தான் திரு வைரமுத்து மாஸ்டர் அவர்கள் யாழ் இந்துச் சமூக மேலாதிக்கக் கலாச்சாரத்திற்குள் ஒரு கலகத்தை ஏற்படுத்தினார். 1968இல் படித்த தலித் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காகவும், சிங்களக் கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் அறிந்து 100 தலித் இளைஞர்களை பௌத்த மத மாற்றத்திற்காக காலி, மாத்தறை போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றார். (இது குறித்து அப்போது தந்தைபெரியாரும் பாராட்டியதாக வரலாறு கூறுகின்றது.) இந்த 100இளைஞர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனக்குப் பெருமையே
பௌத்த மத மாற்றத்திற்காக நூறு இளைஞர்கள் தெற்கு நோக்கிய பயணம் என்ற செய்தி யாழ்மேலாதிக்க அரசியல் தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தீண்டாமை ஒழிப்புப் போராட்டமானது சாத்வீகமாகவும், ஆயுதப்போராட்டமாகவும் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வைரமுத்து அவர்களின் பௌத்த மத மாற்றப் போராட்டம் என்பது மூன்றாவது போராட்ட அணுகுமுறையாக இருந்தது. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினராக இருந்தபோதும் பௌத்த மத மாற்ற வழி என்பது வைரமுத்து அவர்களின் தனிப்பட்ட முயற்சியாகவே இருந்தது. தனது சொந்த செல்வாக்கையும்,சொந்த பணத்தையும் செலவு செய்து சமூகத்திற்காக உழைத்தவர் திரு.வைரமுத்து அவர்கள்.
வைரமுத்து அவர்களின் இவ்வாறான சமூகம் சார்ந்த பணிகளை பலர் திட்டமிட்டே இருட்டடிப்புச்செய்து வந்துள்ளனர். தீண்டாமைப் போராட்டம் குறித்து எழுதப்பட்ட ஒரு சில நூல்களில் பௌத்த மதமாற்றமும், சிங்கள மொழி அறிவிக்கான அதன்பயன் பாடுகள் குறித்தும் ஒரு வரிகூட எழுதப்படவில்லை. அதிலும் சிலர் தாம் சார்ந்த கட்சி நலன் சார்ந்துதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் சம்பவங்களையும் எழுதியுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகவே உள்ளது.நான், வைரமுத்து மாஸ்டரின் இளையமகன் ரவிராஜ்(கனடா), ஜெர்மனியில் இருக்கும் தெய்வேந்திரம், பரிசில் இருக்கும் குணச்சந்திரன், புலேந்திரன், இலங்கையில் இருக்கும் மனோகரன் எல்லோரும் காலியில் உள்ள சிறீ ரட்ண சார யூனிவெசிற்றிப் பிரிவென வில் இருந்தோம். அங்கு அதிபராக இருந்தவர் கலாநிதி பத்தேகம கனேகம சரணங்கர தேரர். இவர் சமசமாயக் கட்சியின் ஆதரவாளர். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த ஒரு நாள் எங்கள் கல்வி எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்பதற்காக திரு.வைரமுத்து மாஸ்டர் அங்கு வந்தார். அப்போதுதான் கலாநிதி பத்தேகம கனேகம சரணங்கர தேரர் அவர்களுக்கும் வைரமுத்து ஐயா அவர்களுக்கும் உள்ள நட்பின் நெருக்கத்தை பார்த்து நாம் வியந்தோம். அதன் பிற்பாடு சந்திரவெல விகாரையில் முன்பிருந்ததைவிட எமக்கு ஆதரவும், மதிப்பும் உயர்ந்ததாகவே நான் கருதுகின்றேன்.
அதேபோல் திரு. நிசங்க விஜயரட்ணவிற்கும், கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில்மத்தியூவிற்கும் உள்ள வைரமுத்து ஐயாவின் நட்பை நான் நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன். வைரமுத்து ஐயாவின் நண்பர்களான யாழ்அரச அதிபராக இருந்த திரு. லால் விஜயபாலாவினதும், யாழ் பொலிஸ் அத்தியேட்சகர் எ.இ.ஆனந்தராசாவினதும் அறிமுகம் எனக்கு பெரிய உதவியாக இருந்தது. என்னை சாதிப்பெயர் சொல்லி திட்டிய இன்ஸபெக்டர் ஒருவரை கண்டிப்பதற்காக இவர்களே எனக்கு உதவியாக இருந்தவர்கள்.
வடமாகாணத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த எவருமே விதானைக்கான பதவியை பெறுவதென்பதை கனவாகக்கூட பார்க்க அனுமதியில்லாத காலத்தில் முதல் முதலாக ஒரு தலித்தை விதானை ஆக்கிய பெருமையும் வைரமுத்து ஐயாவின் சாதனைகளில் ஒன்றாகும். தீவுப்பகுதியில் ஒரு விதானைக்கான வெற்றிடம் இருந்ததை அறிந்த வைரமுத்து அவர்கள் தெற்கு அரசியல் வாதிகளுடன் தனக்கிருந்த நட்பின் காரணமாக வை.சந்திரராசாவிற்கு அப்பதவியை பெற்றுக்கொடுத்தார்.
சமாதான நீதிவானாக பதவி ஏற்பதென்பது அநேகமாக ஒரு நீதிவான் மூலமாகவோ, அல்லது ஒரு சட்டத்தரணி முன்நிலையிலேதான் நடைபெறுவது வழமை. ஆனால் திரு.வைரமுத்து அவர்கள் சமாதான நீதிவானாக பதிவிப்பிரமானம் எடுத்தது திரு.நிசங்க விஜயரட்ணாவின் முன்பாக தலதாமாளிகையில். தமிழர்களில் வேறு எவருமே தலதாமாளிகையில் சமாதான நீதிவானாக பதவிப் பிரமானம் எடுத்ததில்லை. வரலாற்றில் இதுவே முதலும் கடசியுமாக இருக்கும் என்றுதான் நான் கருதுகின்றேன்.
திரு.வைரமுத்து அவர்கள் தலித் சமூகத்திற்காக செய்த பணிகள் ஏராளம். பிரபல்யப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்ததில்லை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரின் தன்னடக்கத்தையும், திறமையையும் அறிந்து கொள்ளமுடியும். சிறுவயதில் சிலகாலம் அவரோடு கைகோர்த்து பயணித்தவன் என்ற பெருமையும் எனக்குண்டு. 94வயது வரை வாழ்ந்த சாதனையாளன். நான் ஒரு முறை தொலைபேசியில் அவருடன் பேசும்போது நீ வரக்கே நான் இருப்பனோ தெரியாது என்று கூறியபோது, இல்லை ஐயா நான் கட்டாயம் உங்களை வந்து பார்ப்பேன் என்று உறுதி அளித்தேன். அவர் எனக்கு கூறிய ‘நீ வரேக்க நான் இருக்கமாட்டேன்’ என்ற உறுதிமொழியை அவர் காப்பாற்றியுள்ளார். நான் அவரை ஏமாற்றிவிட்டேன். இவ்வாறான ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை எமது சமூகம் தலைமுறை தலைமுறையாக கொண்டாடவேண்டும்.
இயற்கையின் நியதியை யாரால் தடுத்துவிட முடியும். அவரின் ஆத்மா சாந்திபெற எமது சமூகம் சார்ந்து பிராத்திக்கின்றேன்.
உங்கள் நினைவு எங்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஐயா
உங்கள் மாணவன்
யோகரட்ணம். (5-01-2013)

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 1/06/2013 01:23:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
Saturday, December 29, 2012
தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்

வைரமுத்து அவர்கள் (ஐயாத்துரை மாஸ்ரர் )







20 08 1918 26.12 .2012

தலைவர் : அகில இலங்கை தமிழ் பௌத்த காங்கிரஸ் , சிறுபான்மைத் தமிழர் மகாசபை

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 12/29/2012 03:18:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
இந்திய அரசின் சாதிவாரிக் கணக்கீடும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளும் அ.மார்க்ஸ்
Saturday, June 2, 2012



இந்திய அரசின் சாதிவாரிக் கணக்கீடும் அது ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளும்
அ.மார்க்ஸ்

சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அரசு இந்திய மக்கள் தொகையைச் சாதிவாரியாகக் கணக்கிடத் தொடங்கியுள்ளது. இறுதியாக இந்திய மக்கள் தொகை சாதிவாரியாகக் கணக்கிடப்பட்டது 1931ல்தான். இரண்டாம் உலகப் போரை ஒட்டி 1941ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மீண்டும் 1951ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தலித் மற்றும் பழங்குடியினர் மட்டுமே சாதிவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டனர். மற்றபடி மதவாரியாகக் குடிமக்கள் கணக்கெடுக்கப்படுவது பிரிட்டிஷ் ஆட்சியைப்போலவே ‘சுதந்திர இந்தியாவிலும்’ தொடர்ந்தது.

இங்கொன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872ம் ஆண்டு பிரிட்டுஷ் ஆட்சியில் ஹண்டர் என்கிற அதிகாரியால் தொடங்கிவைக்கப்பட்டது. 1881 முதல் அது இறுக்கமாக நெறிமுறைப்படுத்தப்பட்டது. தொடக்கம் முதல் இந்தியாவில் மக்களைப் பிரிட்டிஷ் அரசு மதவாரியாகக் கணக்கிட்டு வகைப்படுத்தியது. இதே காலகட்டத்தில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மதவாரியாகக் கணக்கிடுவது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சமீப காலம் வரை இந்நிலை தொடர்ந்தது. 1990களுக்குப்பின் உலகெங்கிலும் மக்கள் மத்தியில் அடையாள அரசியல் வேரூன்றிய பின்னரே மதவாரியாகப் பதிவு செய்வது பிரிட்டனில் நடைமுறைக்கு வந்துள்ளது. 1991வரை மேலை நாடுகளில் மரபினமே (race) அதாவது கருப்பரா, வெள்ளையரா இல்லை கலப்பினத்தவரா என்பதே அங்கு முக்கியமாக இருந்தது, 1991ல்தான் பிரிட்டனில் நாட்டினம் (ethnic origin) பதிவு செய்யப்பட்டது. 2001க்குப் பின்பே ஒருவர் விரும்பினால் அவரது மதத்தைப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் பிரித்தாளுதலை ஒரு கொள்கையாகக் கடைபிடித்து வந்த பிரிட்டிஷ் அரசு, காலனிய நடுகளில் மத அடிப்படையில் கணக்கெடுப்பைச் செய்வதற்குத் தயங்கவில்லை. சுதந்திர இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் இக் கொள்கையைத் தொடர்வதற்கு ஒரு நியாயத்தை முன்வைத்தது.

அட்டவணைச் சாதியினர் எனப்படும் தலித்கள் மற்றும் பழங்குடியினரில் இந்துக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என இந்திய அரசு 1950ல் முடிவெடுத்தது. இதன்காரணமாக மத வாரியான கணக்கீடு அவசியமாகிறது என அது காரணம் கூறியது. அதே சமயம் 1931 முதல் பிரிட்டிஷ் அரசு செய்து வந்ததைப்போலவே சாதிவாரிக் கணக்கீட்டை நிறுத்தி வைத்தது. எனினும் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்குச் சற்றே மேல் நிலையிலும், பார்ப்பனர், சத்திரியர், வெள்ளாளர் முதலான சாதிகளுக்குக் கீழ் நிலையிலும் உள்ள “இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு” (other backward classes) இட ஒதுக்கீடு வழங்குவதில் அவர்களது எண்ணிக்கை அதிகாரபூர்வமாகத் தெரியாதது ஒரு சிக்கலாகவே இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மண்டல் குழு அறிக்கை, கடைசியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட்ட 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 52 சதம் எனக் கொண்டது. அந்த அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27 சத ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சாதிப் படிநிலை அமைப்பில் மேலே உள்ளவர்கள் வழக்குகள் தொடர்ந்தபோது உச்ச நீதி மன்றம் தற்போதைய பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 52 சதம் என எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள் எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே வந்தது, புகழ் பெற்ற இந்திரா சஹானி வழக்கில் மொத்த இட ஒதுக்கீடு 50 சதத்தைத் தாண்டக்கூடாது என்றொரு தடையையும் விதித்தது. ஆனால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் தொடங்கி 69 சத ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஆதிக்க சாதியினர் வழக்குத் தொடர்ந்தபோது தமிழ்நாட்டில் 69 சத ஒதுக்கீடு தொடரலாம் எனச் சென்ற 2010 ஜூலை 13 அன்று இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

பிற்படுத்தப் பட்டோரின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் அனுமதியுடன் 50 சதத்தைத் தாண்டியும் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் அத்தீர்ப்பில் சொல்லப் பட்டது. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்று உருவாகியது. இதற்கிடையில் 1990களில், குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் சிதைவை ஒட்டி உலகெங்கிலும் பல்வேறு மக்கட் பிரிவினரும் தத்தம் தனித்துவமான அடையாளங்களை முன் வைத்து இயங்கவும், கோரிக்கைகளை முன்வைக்கவும் தொடங்கியதை நாம் அறிவோம். இதை “அடையாள அரசியல்” எனச் சமூகவியலாளர்கள் அழைப்பர். பல்வேறு இன, மொழி, சாதி, மதத்தினர் வசிக்கும் இந்தியத் துணைக்கண்டத்தில் இது வலுவாக எதிரொலித்தது. இந்த அடிப்படைகளில் உருவான பல்வேறு அரசியல் சக்திகளும் வைத்த கோரிக்கைகளில் கல்வி மற்றும் வேலை வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டொருக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக அமைந்தது. இவ்வாறு ஒதுக்கீடு கோரிய ஒவ்வொரு அடையாளப் பிரிவினரும் தத்தம் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்வது வழக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பல்வேறு சாதிச் சங்கங்கள் இட ஒதுக்கீடு கோரியபோது, அவை கூறிய விகிதாச்சாரங்களை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தபோது அது 200 சதத்தைத் தாண்டியதாகக் கூறுவர்கள். இவ்வாறு சாதிவாரிக் கணக்கீடு செய்யப்பட வேண்டும் என்கிற அழுத்தம் கடந்த ஆண்டுகளில் அதிகரித்தது. குறிப்பாக 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதியை ஒரு அலகாக வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சிகளாலும் முன்வைக்கப் பட்டது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி, சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தி.மு.க, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி முதலானவையோடு மாயாவதியின் பகூஜன் சமாஜ் கட்சி, ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக் கட்சி முதலிய தலித் கட்சிகளும் சாதி வாரிக் கணக்கீட்டை ஆதரித்தன. முதலில் சற்றுத் தயங்கிய திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பின்னர் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரிப்பதாக அறிவித்தது. மேற்தட்டுச் சாதியினரின் வாக்குகளை அதிகம் நம்பியுள்ள காங்கிரசும், பா.ஜ.கவும் வழக்கம்போல தம் இரட்டை நாக்கைச் சுழற்றின. காங்கிரசுக்குள் ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி, பிரணாப் முகர்ஜி முதலான ஒரு சில தலைவர்கள் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரித்தனர். சிதம்பரம், விலாஸ் ராவ் தே‌ஷ்முக், முகுல் வாஸ்னிக் முதலானோர் எதிர்த்தனர். பா.ஜ.க வின் குரு ஸ்தானத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதைக் கடுமையாக எதிர்த்தது.

வாக்கு வங்கிகளை நம்பி இயங்க வேண்டிய நிலையிலுள்ள பா.ஜ.க கட்சிக்குள் காங்கிரசைப் போலவே இரு குரல்கள் ஒலித்தன. கட்சித் தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ் கருத்தை வழி மொழிந்தார். நாடாளுமன்றக் கட்சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டார். எனினும் பெருந்தொகையாக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பகைத்துக் கொள்ள தேர்தல் அரசியலை நம்பியுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் தயாராக இல்லாததால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இது சாத்தியமில்லாமற் போனாலும் தற்போது இந்தியா முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒட்டி நாடெங்கிலும் சில சர்ச்சைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியும் தன் எண்ணிக்கையை உச்சபட்சமாகக் காட்ட முயற்சிக்கின்றன. இந்தியச் சாதியமைப்பின் ஒரு சில அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம், சாதிகள் பலவும் புவியியல் மற்றும் இதர சில அம்சங்களின் அடிப்படையில் உட்சாதிகளாகப் பிரிந்துள்ளன. வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப் படுகின்றன. பல நேரங்களில் இவற்றுக்கிடையே மண வினைத் தொடர்புகளும் கூட இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக ‘நாடார்’ சாதியை எடுத்துக் கொண்டால் ஆகத் தெற்கே அவர்கள் ‘சாணார்கள்’ எனவும், இடை மாவட்டங்களில் ‘நாடார்கள்’ எனவும், வடக்கே கிராமணிகள் எனவும் அறியப்படுகின்றனர். வன்னியர் சாதியை எடுத்துக் கொண்டால் கவுண்டர், நாயக்கர், வன்னியர், படையாட்சி எனப் பலவாறு அறியப் படுகின்றனர். அதேபோல இடையர்கள் கோனார், யாதவர் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர், இந்நிலையில் எல்லா சாதிச் சங்கங்களும், சாதியை மைய்யமாகக் கொண்டு இயங்கும் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி உட்சாதி வேறுபாடுகளை மறக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்கின்றன. ஏதேனும் ஒரு பெயரை அறிவித்து அந்தப் பெயரிலேயே எல்லா உட்சாதிகளும் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றன. முஸ்லிம்களிலும் ராவுத்தர், லெப்பை, தக்கனி என்பதுபோலப் பல உட் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சிலவற்றிற்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தம்மை முஸ்லிம் என்பதோடு இட ஒதுக்கீட்டுக்குரிய உட்பிரிவின் பெயரிலேயே பதிவு செய்யுமாறு கூறுகின்றன. வன்னியர்கள் தம்மை வன்னிய ஷத்திரியர் என்பதுபோலப் பதிவு செய்ய வேண்டுமென அச் சாதிச் சங்கங்கள் சில அறிவிப்புக் கொடுத்தன. ஷத்திரியர் என்பதுபோன்ற வருண அடையாளம் தொனிக்கும் வடபுலப் பெயர்களை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் கூறியபோது கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தேசிய உருவாக்கத்தில் சாதிகள் எத்தனை தடையாக உள்ளன என்பதைத் தமிழ்த் தேசியர்கள் உணர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதற்கிடையில் சாதிவாரிக் கணக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் சாதி உறுதிப்பாட்டை மிகுதிப்படுத்தும், பெரும்பான்மை வாதத்தை உருவாக்கும் என்கிற அச்சத்தை தமிழக தலித் அறிவுஜீவிகள் சிலர் எழுப்பியுள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிராக இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று நான் சற்று முன் குறிப்பிட்ட தலித் அறிவுஜீவிகளின் வாதம். மற்றது ப.சிதம்பரம் போன்றோர் முன்வைப்பது. நடைமுறைச் சிக்கல்களை அவர்கள் காரணம் காட்டுகின்றனர். கணக்கெடுப்புச் செய்பவர்களுக்கு சாதிகளிப் பதிவு செய்வது தொடர்பான சமூகவியல் நுண்ணுணர்வு(sociological sensitivity) போதாது எனச் சிதம்பரம் கூறியுள்ளார். இரண்டிலுமே உண்மைகள் உள்ளன. இந்த இரு மறுப்புகளுமே ஆதிமுதல் முன்வைக்கப்பட்டும் வந்துள்ளன. முன்பே குறிப்பிட்டதுபோல இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இடம், காலம் ஆகியவற்றைப் பொருத்து அவை மிக நெகிழ்ச்சி மிக்கவையாகvum உள்ளன. ஒரு சாதியைச் சேர்ந்த குடும்பம் அந்த ஊரை விட்டு வெகு தூரம் இடம்பெயரும்போது அது பழைய தொழிலைச் செய்யாத நிலை ஏற்படலாம். புதிய தொழிலின் ஊடாக அதன் சாதி மரியாதை அல்லது இழிவு கூடவோ குறையவோ செய்யலாம். புதிய ஒரு சாதிப் பெயரில் அது தஞ்சமடையலாம். காலமும்கூட இத்தகைய மார்றங்களுக்குக் காரணமாகலாம்.

காலப்போக்கில் சாணார்கள் மேல்நிலையாக்க்கம் பெற்று நாடார்கள் ஆன வரலாற்றை நாம் ஆறிவோம். 1911ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்த ஈ.ஏ.கெய்ட் இப்படிச் சொன்னார்: “காலம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போலவும், சாதிகள் சின்ன முள்ளைப் போலவும் நகர்கின்றன. சாதாரணமாகப் பார்க்கும்போது சின்ன முள்ளின் இயக்கம் தெரியாமல் போகலாம். ஆனால் அதுவும் இடம் பெயர்ந்து கொண்டுதான் உல்ளது. சாதி மாற்றமும் அப்படியே” 1881ல் அன்றைய சென்னை மாகாண மக்கள் 3208 சாதிகளாகத் தம்மை அடையாளம் கண்டனர். இவற்றை 309 சாதிகளாக அன்றைய ஆணையம் தொகுத்துக் கொண்டது. இந்தத் தொகுப்பு அறிவியல் அடிப்படையில் செய்யப்பட்டதென்று கூற இயலாது. 1991கணக்கீட்டில் 1646 சாதிகளாக இருந்தவை 1937ல் 4147ஆகப் பெருக்கம் கொண்டன. அவ்வளவு விரைவாகச் சாதிகள் பெருகின என்பதல்ல. பல்வேறு ஆரசியல், சமூகக் காரணங்களை முன்னிட்டு உட்சாதி அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டதன் விளைவு இது. சில நேரங்களில் உட்சாதி அடையாளங்களை உறுதி செய்தலும், சில நேரங்களில் அவை பெரிய அடையாளங்களில் தஞ்சம் புகுவதும் நடை பெறுகின்றன. வங்கத்தில் உள்ளூர் வழக்கில் உள்ளவாறு தாழ்த்தப்பட்டவர்களை ‘சண்டாளர்கள்’ எனக் கணக்கெடுப்பாளர்கள் மேற்சாதி உணர்வுடன் பதிவுசெய்தபோது அவர்கள் தம்மை ‘நாமசூத்திரர்கள்’ எனப் பதிவு செய்ய வற்புறுத்தியதை மக்கள் தொகைக் கணகெடுப்பு ஆணையராக இருந்த ஜே.எச்.ஹட்டன் குறிப்பிடுகிறார். இது போன்ற பல எடுத்துக்காட்டுகளைக் கூறி அவை ஏற்படுத்திய குழப்பங்களை அவர் விளக்குவார். இப்படியான சில சிக்கல்கள் ஏற்படும்தான். சாதி என்பது பால், தொழில், ஊர் என்பதுபோல ஒரு புறவயமான(objective) அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு வகையில் தன்னை எப்படி உணர்ந்து கொள்கிறார் என்கிற வகையில் அது ஒரு தன்வயமான (subjective) அடையளமும் கூட. இதைச் சரியாகப் புரிந்து செயல்படுத்துவது அவசியம். ஏற்படும் சிக்கல்களைக் கணக்கில் கொண்டு போகப் போக அவற்றைச் சரி செய்துகொள்ள வேண்டியதுதான். சாதிவாரிக் கணக்கீடு சாதி உறுதியாக்கத்தை அதிகமாக்கும் என்பது ஒரு வகையில் உண்மையானாலும் அதைத் தவிர்க்க இயலாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பல அரசியல் அதிகாரமோ, சமூக முன்னேற்றமோ இன்றி இருப்பது தொடரும் நிலையில் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது அவசியமாகிறது. இதற்குக் கணகெடுப்பு நிபந்தனையாகிறது. கடந்த நூறாண்டுகளில் சாதிச் சமன்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருபக்கம் சாதிகளுக்கிடையேயான தொடர்புகள் மிகுதியாதல், கலப்புத் திருமணங்கள் அதிகமாதல் என்பன நிகழ்ந்த போதிலும் இன்னொரு பக்கம் சாதிக் கொடுமைகள் தொடருதல், சாதி அடிப்படையில் அரசியல் செயல்பாடுகள் மிகுதல் என்பன ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த எண்பது ஆண்டுகளாக சாதிவாரிக் கணக்கீடு இல்லாதிருந்தும் இப்படி ஏற்பட்டுள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது. தவிரவும் யார் பெரும்பான்மையர், யார் சிறுபான்மையர் என்பது கணக்கெடுப்பிற்குப் பின்தான் உணர்ந்துகொள்ளப்படும் என்பதுமல்ல. இந்த விவாதம் 1930களில் முன் வைக்கப்பட்டபோது ஹட்டன் இப்படிக் கூறினார்: “ஏற்கனவே இருக்கும் ஒரு உண்மையைப் பதிவு செய்வது அதன் இருப்பை உறுதி செய்துவிடுமா என்ன?” ஹட்டனின் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.


சில ‘உண்மைகள்’ சாதிவாரிக் கணக்கீட்டின் விளைவாகவே உருவாக்கப்பட்டன. இந்து, முஸ்லிம் என்கிற அடையாளங்களை உறுதிப்படுத்தி எதிர் எதிராக நிறுத்தியதில் பிரிட்டிஷாரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு ஒரு உறுதியான பங்குண்டு. தர்ஹாவை வணங்குதல், இந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளக் கொண்டாடுதல், அதே நேரத்தில் பார்ப்பன புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொள்ளுதல் என்பதுபோன்ற வழமைகளுடன் தான் முஸ்லிமா இல்லை இந்துவா என பிரக்ஞை இல்லாமலே பல சமூகங்கள் இருந்து வந்தன. அப்வர்கள் ‘மோல்சலாம்கள்’ என அழைக்கப்பட்டனர். குஜராத்தில் வாழ்ந்த ‘ஜாலா’ என்கிற சமூகத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் இந்துக்களாகக் கருதப்பட்டு இந்து ரஜபுத்திரர் ஆல்லது கோலி சாதியினரைத் திருமணம் செய்துகொள்வர். பெண்கள் முஸ்லிம்களாகக் கருதப்பட்டு முஸ்லிம்களைத் திருமணம் செய்துகொள்வர். இவர்கள் முன் கணக்கெடுப்பாளர் வந்து நின்று, “நீ இந்துவா, முஸ்லிமா? ஏதாவது ஒன்றைச் சொல்” எனக் கறார் செய்தபோது அவர்கள் ஏதாவதொன்றைத் தேர்வு செய்ய வேன்டியதாயிர்று. கடந்த நூறாண்டுகளுக்க்கும் மேற்பட்ட இத்தகைய நடைமுறைகள், போக்குவரத்து, செய்தித் தொடர்பு ஆகியவற்றில் ஏர்பட்டுள்ள மிகப் பெரிய வளர்ச்சி முதலியன இந்த நிலைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. மேற்குறித்த சிக்கல்கள் உருவாவதற்கு இப்போது வாய்ப்புகள் குறைவு. மதம், பாலினம், மொழி, இனம், குலம்(tribe) எனப் பல அடையாளங்கள் மக்கள் தொகைக் கணகெடுப்பில் பதிவு செய்யப்படும்போது சாதி பற்றி மட்டும் இத்தனை சர்ச்சைகள் ஏன் என கர்நாடகத்தில் சாதிவாரிக் கணகெடுப்பை மேற்கொண்ட ஹவானூர் ஆணையம் கேட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. சாதி என்பது ஒரு அநீதி, களைந்தெறியப்பட வேண்டிய கொடுமை, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கே உரித்தான சாபக்கேடு என்பதெல்லாம் எத்தனை உண்மையோ அத்தனை உண்மை சாதி என்பது ஒரு எதார்த்தம், ஒரு வரலாற்று உண்மை என்பதும். இட ஒதுக்கீடு என்பதன் மூலம் இதை ஒழித்துவிட இயலாதெனினும் அதுவும் தேவையாக இருக்கின்றது. சாதி, தீண்டாண்மை முதலானாவற்றிர்கு இத்தகைய இரட்டை முகங்கள் உண்டு. ஒரு பக்கம் அவை ஒழிக்கப்பட வேன்டியவையாக உள்ளன. இன்னொரு பக்கம் அப்படி ஒழிப்பதற்கான கருவிகளில் ஒன்றாகவும் அவையே அமைந்துவிடுகின்றன. தவிரவும் இன்னொன்றையும் நாம் வலிமையாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இப்படியான கணக்கெடுப்புகள் இப்போது நடைபெறுவது இந்தியாவில் மட்டுமே மேற்கொள்ளப்படும் புதுமை அல்ல. உலகெங்கிலும் இப்புத்தாயிரத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கணக்கெடுப்புப் படிவங்கள் மிகவும் சிக்கலாக உருவாக்கப் படுகின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்கள் தொகைக் காணக்கெடுப்புப் படிவங்களில் பல்வேறு அடையாளங்களைக் குறிக்கவும், தேவையானால் இரட்டை அடையாளங்களைப் பதியவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது (பார்க்க: அ.மார்க்ஸ், ”மக்கள் தொகைக் கணகெடுப்பின் அரசியல்”, பயணி வெளியீடு, சென்னை, 2010). மதம், நட்டினம் முதலானவை முதன் முதலாக இங்கெல்லாம் இப்போது பதிவு செய்யப்படுவது பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். ஆக சாதிவாரிக் கணக்கீடு இன்றைய சூழலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. சட்டபூர்வமாகவும் இன்று அதற்கொரு தேவை ஏற்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு அப்பால் இன்று பெரிய அளவில் மக்கள் பங்கேற்புடன் சாதிவாரிக் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 6/02/2012 05:19:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
கவிதை
Monday, May 21, 2012
அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் வந்துசேர்வேன் இந்தக்கோலத்திற்தான் நான் வந்துசேர்வேனென எதிரி எனது தஞ்சக்கேட்டை இப்போதும் சுட்டிக்காட்டவில்லை ஆனால் நான் அவன் அப்படிச்சொல்லவேண்டுமென எதிர்பார்த்தேன் அவனைக் காறித்துப்புவதற்கு எனக்கு ஆயிரங்காரணங்கள் இருக்கின்றன என்னை உதாசீனப்படுத்த அவன் ஒருபோதும் முயல்வதில்லை எனது நேர்மையான எதிரி என்னை முன்னிலைப்படுத்தி அதியற்புதமான ஓவியமொன்றை வரைகிறான்(தோழர் பரா அவர்களின் முதலாண்டு நினைவாக-) 2008 http://www.shobasakthi.com/shobasakthi/?p=223

Read more!

இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post~~~~~~~

வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 5/21/2012 02:22:00 PM 0இது பற்றி உங்கள் கருத்தை எழுத!
மேலும் அறிய

Name: NICHAMAM
Home:
About Me:
See my complete profile
QR Code for mobile view