வியாழன், 11 ஆகஸ்ட், 2011

SUKUMARAN.















சுகுமாரன் - நேர்காணல்

வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 7:56 AM
வகை: சுகுமாரன், நேர்காணல், பெருமாள்முருகன்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்



சந்திப்பு: பெருமாள்முருகன்

சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர்.

இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் பல தளங்களைச் சார்ந்தவையாகவும் வாசிப்புத்தன்மை கூடியவையாகவும் உள்ளன. மொழிபெயர்ப்பில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் கட்டுரை நூல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.



‘கோடைகாலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’, ‘சிலைகளின் காலம்’, ‘வாழ்நிலம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் உள்ள கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பாகப் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ 2006இல் வெளிவந்துள்ளது. ‘திசைகளும் தடங்களும்’, ‘தனிமையின் வழி’ ஆகியவை இவரது கட்டுரைத் தொகுப்புகள்.



‘மார்க்சிய அழகியல்: ஒரு முன்னுரை’ (சச்சிதானந்தன்), ‘சினிமா அனுபவம்’ (அடூர் கோபாலகிருஷ்ணன்), ‘மைலம்மா ஒரு போராட்ட வாழ்க்கை’ ஆகிய உரைநடை நூல்களும் ‘வெட்டவெளி வார்த்தைகள்’, ‘கவிதையின் திசைகள்’, ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’, ‘பெண் வழிகள்’ ஆகிய கவிதை நூல்களும் ‘இதுதான் என் பெயர்’ (சக்கரியா) என்னும் நாவலும் ‘காளி நாடகம்’ (உன்னி) என்னும் சிறுகதை நூலும் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளவை.



2008ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். இவர் மனைவி பிரேமா மணி. 15.05.2007 அன்று இரவு திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் கண்ட நேர்காணல் இது.





கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கான முன்னுரையில் ‘கருத்தும் அனுபவமும் இணைந்த படிமம்தான் கவிதை’ என்று எழுதியுள்ளீர்கள். இதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்.



கவிதை என்பது அடிப்படையில் அனுபவம் சார்ந்த விஷயம். அதில் வாசகன் தொகுத்து எடுத்துக்கொள்வது கருத்தைத்தான். அடிப்படையாக எந்த அனுபவமுமே உங்கள் மனத்தில் தங்கப்போவது ஒரு கருத்து என்கிற நிலையில்தான். ஆனால் அதை வெறும் கருத்தாகச் சொல்லும்போது வாசகனுக்கு உவப்பில்லாத ஒன்றாகவும் எழுதுகிறவனுக்குத் தன் மனத்தைப் பகிர்ந்துகொள்கிற ஒரு விஷயமாக இல்லாமலும் போகிறது. இது இரண்டும் எங்கே சமன்படுகின்றன என்பதுதான் கவிதையின் அடிப்படையான கேள்வி.



சில சமயம் கருத்து மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய மறைபொருளாக இருக்கும் அனுபவம் வெளிப்படும் அல்லது அனுபவம் மட்டுமே சொல்லப்பட்டு அதனுடைய கருத்து வெளிப்படும். புதுக்கவிதை இவை இரண்டும் ஒன்று சேர்கிற புள்ளி.



கவிதையைக் கூறுபோட்டு வெளிப்படையாக இது கருத்து, இது அனுபவம் என்று பிரிக்க முடியாது. அனுபவம் அடிப்படையில் ஒரு கருத்து. கருத்து அடிப்படையில் ஓர் அனுபவம். இரண்டும் ஒன்றுசேர்கிறபோது தான் கவிதைக்கான படிமமாக வந்து நிற்கிறது.



பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்



சால மிகுத்துப் பெயின்



என்பது ஓர் அனுபவம். அதே நேரத்தில் ஒரு கருத்து. இதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.



‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான் கவிதை’ என்றும் ஓரிடத்தில் எழுதியிருக்கிறீர்கள். நேரடித்தன்மைதானே நமது கவிதை மரபில் மிகுதி?



நேரடித்தன்மை கவிதை அல்ல. நேராக ஒரு விஷயத்தைச் சொல்வதற்குக் கவிதை தேவையில்லை. பிற எந்த மொழியையும்விடச் சிந்தனையும் வெளிப்பாடும் கவிதையாக இருக்கின்ற மொழி தமிழ். இதில் வெறுமனே ஒரு plan கூற்றா அதாவது statement ஆக எந்த விஷயமும் சொல்லப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகின்றது.



காக்கை குருவி எங்கள் சாதி - நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்



இதைப் பார்க்கும்போது வெறும் statement ஆகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு கவிதை மனம் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த மாதிரியான ஒரு கூற்று அமைகிறது என்பது என் முடிவு.



சங்க இலக்கியத்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும் அவற்றில் எல்லாம் ஓர் அனுபவம், அனுபவம் சார்ந்த ஒரு மனம், அந்த மனத்தில் இருந்து கிளர்ந்த உணர்ச்சிகள் ஆகியவைதான் முன்னால் வந்து நிற்கின்றன. எனக்கு உடனடியாக நினைவில் வருவது,



கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி

நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்



என்று முடியும் கவிதை. அந்தக் கவிதை அங்கே முடியவில்லை. அது ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறது’.



உங்கள் முன்னுரை ஒன்றில் ‘சொந்த மரபை நோக்கித் திரும்புவது’ என்று பின்- நவீனத்துவத்திற்கு விளக்கம் கொடுக்கிறீர்கள். பின்-நவீனத்துவம் பற்றிக் கோட்பாட்டு அடிப்படையில் பேசும் போக்கிற்கு எதிரானதாக உங்கள் கருத்து இருக்கிறதே?



அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் சார்ந்து எழுத்தை மதிப்பிடும் ஆள் நான். கோட்பாடுகளின் பின்புலத்தில் நான் எந்த அபிப்ராயத்துக்கும் வரவில்லை. தமிழ்ப் புதுக்கவிதை என்பது ஒரு வடிவ மாற்றம் என்று எனக்கு எப்போதும் தோன்றியதே கிடையாது. அது உணர்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்தான் என இப்போதும் நம்புகிறேன்.



பாரதிக்குப் பின்னால் மிகப் பெரிய எழுச்சி என்பது பாரதிதாசன்தான். பாரதிதாசனுக்குப் பின்னால் வந்த கவிஞர்கள் எல்லாருமே அவருடைய நகல்களாக மட்டும்தான் இருந்திருக்கிறார்கள். இது தமிழ்க் கவிதையில் மிகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய ஆரவாரத்தை, தேவையில்லாத இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு நேர் எதிரான ஒரு போக்குத்தான் புதுக்கவிதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய யூகம்.



மௌன வாசிப்பும் கவிதை ஆகும். அதற்கு நம்மைத் தூண்டிவிட்டது மேற்கத்திய படிப்பு அனுபவம். கவிதையை அச்சடிக்கக்கூடிய வாய்ப்பு. இந்த இரண்டும் முக்கியம். ஆகப் புதுக்கவிதை என்பது மேற்கத்திய அனுபவங்களில் இருந்து, கருத்தாக்கத்தில் இருந்து நாம் தொகுத்துக்கொண்ட ஒரு விஷயம். இது தொடர்ந்து கொஞ்ச காலத்திற்கு இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் புதுக்கவிதை எழுதியவர்களுக்கு எல்லாம் படிமமும் உணர்வுநிலையும்தான் முக்கியமாக இருந்திருக்கின்றன. தங்களுக்கான விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது பின்னால் அதாவது எழுபத்தைந்து எண்பதுக்குப் பின்னால் முழுக்கவுமே மேற்கத்திய அல்லது ஐரோப்பியச் சாயலுக்கு மாற ஆரம்பித்தது. அதற்குச் சமூகரீதியான காரணங்கள் உண்டு. மார்க்சியத் தத்துவம் நமக்கு அறிமுகமாயிற்று.



அதுபோலப் பல்வேறு தத்துவங்கள் அறிமுகமாயின. அவை சார்ந்த இலக்கியங்கள், மற்ற விஷயங்கள் எல்லாமே அறிமுகமாயின. அதனால் அந்த வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கே திரும்பப் பேசும் நிலை உருவானது. இதில் நம்முடைய உணர்வு, வாழ்நிலை, மனப் போக்கு ஆகியவற்றை எல்லாம் முன்வைக்கத் தவறிவிட்டோம்.



சிம்பனி என்கிற ஒரு விஷயத்தையே கேட்காத ஆள் அதைப் பற்றிக் கவிதை எழுத முடியும். வாழ்க்கையில் பியானோ என்பதைப் பக்கத்தில்கூடப் பார்க்காத ஆள் பியானோவைப் பற்றிக் கவிதை எழுத முடியும். இதுதான் மேற்கத்திய நவீனத்துவம் நம்மீது செலுத்திய மோசமான பாதிப்பு என்று நினைக்கிறேன். இப்படித் தமிழில் நிறையக் கவிதைகள் வந்திருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு.



இது அடுத்த கட்டத்தில் எங்கே போகும் என்னும் கேள்வி வந்தது. அப்போது நம்முடைய அனுபவங்கள்தான் நமக்கு முதன்மையானவை என்கிற தீர்மானத்திற்கு ஒவ்வொரு கவிஞனும் அல்லது மொத்தமான கவிதைச் சூழலும் வந்து சேர வேண்டியிருக்கும் என்னும்போது நம்முடைய மொழி, நம்முடைய வாழ்க்கை, நம்முடைய வாழ்க்கையில் தட்டுப்படும் உவமைகள், உருவகங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் புழங்கு மொழி ஆகிய எல்லாம் சேர்ந்துதான் புதிய நவீனத்துவம் என்று உருவாகும். இதை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொற்சேர்க்கையில் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் ‘ஆதுமிகா’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நவீனத்துவத்திற்குப் பிறகான கவிதை. பெங்காலியில் ‘உத்ராதுமிக்’ என்கிறார்கள். இதனுடைய அடிப்படைகள் எல்லாமே நம்முடைய மரபு. மரபுன்னா வழக்கமான அர்த்தத்துல சொல்லவே இல்ல, நம்முடைய வாழ்நிலைகள் சார்ந்த ஒரு விஷயத்திற்குத் திரும்பிப் போறது என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன்.



நம்முடைய வாழ்க்கையில் பெறக்கூடிய கூறுகளைத் திரும்பக் கவிதையில் கொண்டுவருவதுதான் நவீனத்துவமாக, பின்-நவீனத்துவமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனுடைய வெளிப்படையான உதாரணமாக இன்னொன்றைச் சொல்லலாம். மார்க்சியம் மற்றும் சமூக மாற்றத்திற்கான இயக்கங்கள் எல்லாம் உருவாகி வந்தபோது அந்தக் கவிதைகள் எல்லாம் நமக்கு வந்தன. அந்தக் கவிதைகளை அப்படியே நாம் நகலெடுத்துக்கொண்டிருந்தோம். நம்முடைய அனுபவங்கள் கிடையாது. நாளைக்குப் புரட்சிவந்துவிடும் என்று இந்தக் கவிதைகள் கூறின. ஆனால் புரட்சி என்கிற விஷயமோ புரட்சிக்கான சூழ்நிலையோ கனியாத போது இவையெல்லாமே போலித்தனமாக இருந்தன.



ஆனால் இதற்கு எதிரான இன்னொரு அணி கவிதையில் அரசியல் பற்றியெல்லாம் பேச வேண்டாம் என்னும் தீர்மானத்தில் இருந்தது. அரசியல் பேசுவது கவிதைக்கு மாற்றுக் குறைவான விஷயம் என்று அவர்கள் நினைத்தபோது அதுவும் பேசப்படலாம் என்னும் எண்ணம் உருவாயிற்று. அரசியல்ரீதியாக நடக்கிற ஒரு விஷயம் தனிமனித வாழ்க்கையை மாற்றக்கூடும், தீர்மானிக்கக்கூடும் என்னும்போது அரசியலும் கவிதைக்குள்ளே வர ஆரம்பித்தது. இது இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடந்திருக்கிறது. அதை நான் தமிழ் மொழியில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்.



மரங்களைப் பற்றிப் பேசுவது குற்றமாகக்கூடிய காலம் வந்துவிட்டது என்று பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய ஒரு கவிதை இருக்கிறது. இதற்கு இணையாக வேறு வரிகளைத் தமிழில் நாம் பார்க்க முடியும். மரத்தைச் சகோதரியாகப் பாவித்துப் பேசுகிற ஒரு கவிதை தமிழில் இருக்கிறது. பெர்டோல்ட் பிரெக்ட்டுடைய இந்த வரியைக் குறிப்பாக வைத்துக்கொள்ளலாமே தவிர நம்முடைய அடிப்படையாக வைத்துக்கொள்ள முடியாது. நமக்கு அடிப்படையான விஷயம் மரத்தைச் சகோதரியாகப் பார்த்த அந்தக் கவிதை வரிதான். அது நமது மரபுக்குள்ளேயே இருக்கிறது. அதை நாம் மேலே கொண்டு வருவோம் என்பதுதான் இதனுடைய நோக்கம்.



ஒரு கவிஞனுக்கு மரபிலக்கியப் பயிற்சி எந்த அளவுக்கு இருக்கணும்னு நெனக்கறீங்க?



இருக்கணுமா வேண்டாமா என்ற கேள்விக்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்ற இரண்டு பதிலுமே சொல்லலாம். தமிழில் மிகப் பெரிய சாதனையாளர்கள் என்று சொல்லப்படுகிற சிலருக்கு மரபுரீதியான பயிற்சி கிடையாது. சிலருக்கு மரபுரீதியான பயிற்சி உண்டு. மரபுல வந்த பிறகுதான் அவுங்க மாறி இருக்காங்க. மரபுங்கறது செய்யுள் எழுதுவதா யாப்பிலக்கணம் புரிந்துகொண்டு எழுதுவதா? அப்படீன்னா அந்த மரபு தெரியாம கவிதை எழுத முடியும். கவிதைக்கான மனநிலைதான் முக்கியம்.



ஒரு மரபுங்கறது இந்த மொழிய நான் பேச ஆரம்பிக்கிறபோதே இந்த மொழியப் பயில, எழுத ஆரம்பிக்கிறபோதே எனக்குள்ள வந்துருது. என்னிடம் முன்னுரைக்காகவோ அபிப்ராயம் கேட்டோ வருகிற கவிதைப் புத்தகங்களில் நான் அடிப்படையா இரண்டு விஷயங்களைத் தேடுகிறேன். ஒன்னு இந்த மொழிக்கென்று ஒரு மரபுண்டு. இரண்டாவது கவிஞனுக்கென்று தனியாக ஒரு மரபுண்டு. இதை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் இந்த மொழியில் ஒரு ஜீஷீமீtவீநீ பீவீநீtவீஷீஸீ இருக்கு. அதுதான் கவிதையோட தொடர்ந்து உங்களைத் தொடர்புபடுத்துகிறது. அதுதான் கவிதையோட வாசல்களைத் தொடர்ந்து உங்களுக்குத் திறக்கிறது.



பாரதியார் கவிதையில் இருந்து சொல்லனும்னா சிட்டுக்குருவி என்று ஒரு படிமம் வருகிற போதே அது சுதந்திரத்தைப் பற்றிய கவிதை என்று தீர்மானிச்சிர்றீங்க. நதிங்கிற ஒரு படிமத்தக் கவிதையில் பார்க்கிறபோதே இது வெறுமனே ஒரு நதியைப் பற்றியது அல்ல வாழ்க்கையைப் பற்றிய வாழ்க்கை ஓட்டத்தைப் பற்றிய ஒரு கவிதை அப்படீன்னு தீர்மானிக்கிறோம். இது கவிதையின் பொது வீபீவீஷீனீ. இதப் புரிஞ்சி இதுக்குள்ள நான் என்னுடைய ஒரு இடியத்த உண்டு பண்றன். அப்படியான கவிதைகள்தான் நிற்கும் அப்படீங் கறது என்னுடைய நம்பிக்கை. எனக்குக் கிடைக்கிற கவிதைத் தொகுப்புகளிலெல்லாம் முதல்ல அடிப்படையா நான் தேடற விஷயம் இதுதான். இதை எழுதிய கவிஞருக்கு இந்த மொழியின் மரபு பிடிபட்டிருக்கா என்பதுதான். அந்த மரபு யாப்பிலக்கண மரபோ செய்யுள் மரபோ அல்ல.



ஒரு மனித அனுபவத்த இன்னொரு மனிதரிடம் தொடர்புபடுத்த என்னென்ன கருவிகளை உபயோகப்படுத்த முடியும், என்னென்ன வழிகளில் அதனை அடைய முடியும் என்பதையெல்லாம் தீர்மானிப்பதுதான் மரபுன்னு நான் யோசிக்கிறேன். அதனாலதான் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய சங்கக் கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இன்றைக்கு பிரான்சிஸ் கிருபாவினுடைய கவிதையைப் புரிஞ்சிக்க முடியுது. இதுதான் மரபு அப்படீங்கறது. ஒரு மொழியில் செயல்படுகிற ஒருவனுக்குப் பின்னால் அந்த மொழி சார்ந்த மரபு இயங்கிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தப்பியவன் கவிஞனும் ஆகமாட்டான்.



நீங்க எந்த அளவுக்கு மரபிலக்கியங்களைப் படிச்சிருக்கீங்க? அதில் எத்தகைய பயிற்சி இருக்கிறது?



தமிழை முறையாகப் படித்த மாணவன் என்று சொல்லும் வகையான பயிற்சியெல்லாம் எனக்கு இல்லை. ஆனால் என்னுடைய மனசு அல்லது சிந்தனை முழுக்க இருக்கிற ஒரு மொழி அப்படீங்கறது தமிழ். இதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். என்னுடைய பள்ளிப் படிப்பு என்பது அறுபதுகளின் பிற்பகுதி. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எல்லாருமே தமிழ் மேல் மாறாக் காதல் உள்ளவர்கள். இன்றைக்கு யோசிக்கும்போது அது ஓரளவு வெறி என்ற தீர்மானத்துக்கு வர முடியும். அவுங்க கத்துக் கொடுத்த தமிழ், முறையாகக் கத்துக்கொடுத்த தமிழ். அதுதான் என்னுடைய தமிழ்ப் பின்னணி.



இந்த ஆர்வத்தினால் பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள்ளாகத் தமிழின் முக்கியமான இலக்கியங்களை எல்லாம் படிப்பது என்னும் தீர்மானத்துக்கு வந்தேன். இதில் எல்லாருமே உதவி செய்திருக்கிறார்கள். ஆறாவது ஏழாவது படிக்கிறபோது எங்களுக்கு ஒரு தமிழாசிரியர் வந்தார். அவர் பேர் கலியபெருமாள். அவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்றவர். அவர் எங்க வகுப்புக்கு வந்தார். ஆனா தமிழ் கற்பிக்கல. அப்போது நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருக்கும். அந்த வகுப்பை அவர்தான் பார்த்துக் கொள்வார்.



அவர் படித்த புத்தகங்கள் பற்றி, அவர் பார்த்த திரைப்படங்கள் பற்றி எல்லாம் ரொம்பவும் ருசியாச் சொல்வார். அந்த 45 நிமிசங்கள் முடிந்தவுடனே நமக்குப் பெரிய ஏக்கம் வந்துவிடும். ஏன் மணி அடிக்கறாங்கன்னு. அந்த அளவுக்கு அவர் சுவையாச் சொல்வார். பெருங்காவியங்களுடைய சாரத்தக் கதையாச் சொல்லியிருக்காரு. இதெல்லாம் தொடர்ந்து படிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தது. இந்தக் காவியங்கள் எல்லாம் சொல்லும்போது பதவுரை, பொழிப்புரை சொல்றவரா இல்லாம அதில் இருக்கும் கவிதைக் கணங்களை நெருக்கமாப் பார்க்கிறவராகவும் நம்மைப் பார்க்கச் செய்கிறவருமான ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அது தமிழ்மேல என்னுடைய ஆசையை அதிகப்படுத்தியது. அதற்குப் பின்னால் அடுத்த வகுப்புக்குப் போகிறபோது தமிழ்தான் சகலமும் என்று நினைக்கிற ஆசிரியர்கள் வந்து சேர்ந்தாங்க. புலவர் ச. மருதவாணன் என்று ஒரு ஆசிரியர். புலவர் ந. சுந்தரராசன் என்பவர் இன்னொருவர்.



இவர்கள் எல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்கிறபோது பாரதியார் சொன்ன ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்னும் வரிகளைச் சொல்லலாம்னு அந்த வயதில் தோன்றியது. இன்றைக்கு மொழி பற்றிய அபிப்ராயங்கள் மாறியிருக்கிறது. இதெல்லாம்தான் தமிழை ஊட்டி வளர்க்க உதவின. இதில் குறிப்பாக மருதவாணனைச் சொல்லணும். நான் ஆர்வத்தோட ‘முத்தொள்ளாயிரம்னா என்ன’ என்று கேட்டதுதான். ‘சனிக்கிழம வீட்டுக்கு வா’ அப்படின்னிட்டாரு. சனிக்கிழமை காலையில் அவர் வீட்டுக்குப் போனால் மாலைவரைக்கும் அவர் வீட்டிலேயே உண்டு உறவாடிப் பாடம் கேட்கலாம். இது பின்னால வரைக்கும் தொடர்ந்தது. தமிழ் எனக்குள்ளே பெரிய சுடரா ஒளிர்வதற்கான கைகளாக அவர்கள் இருந்தார்கள்.



அத்தோடு கவிதை என்பது சின்ன வயதிலேயே மயக்கம் தரக்கூடிய விஷயமாக இருந்தது. நான் வளர்ந்த சூழ்நிலையில் ரொம்பத் தனியாக வளர்ந்தேன். பெற்றோரிடமிருந்து பிரிந்து. என்னுடைய அத்தை மாமா இரண்டு பேரும்தான் என்னை வளர்த்தார்கள். அதனால் சின்னதாக ஓர் அனாதைத்தனம், ஆதரவில்லா ஏக்கம் எப்போதுமே எனக்கு இருக்கும். ரொம்பவும் தனியா ஓரிடத்தில் உட்கார்ந்து யோசிக்கிற பழக்கம் உண்டு. அப்போது எனக்குப் பெரிய துணையாக இருந்தவை புத்தகங்கள்தான். புத்தகங்கள் படிக்கும்போது புத்தகங்களில் வரும் ஓர் உலகம். புத்தகங்களுக்கு அப்பால் ஓர் உலகம் வரும். அது கற்பனையா நான் உருவாக்கிக்கிட்ட உலகம். இந்தக் கதைகளை நம்மால் எழுத முடியுமா என்று யோசித்தபோது முடியாது என்கிற ஒரு நிலைமைக்குத்தான் நான் வந்தேன். ஏன்னா நாலு பக்கம் ஐந்து பக்கம் கதை இருக்கும். அதைவிட எளிமையாக எனக்குத் தெரிந்தது கவிதை எழுதுவதுதான். பத்து வரியில் நம்மால் கவிதை எழுதிவிட முடியும் என்பது ஒரு தெம்பைத் தந்தது.



அதனால் இரண்டு மூன்று விஷயங்கள் கிடைத்தன. மற்ற பையன்கள் முன்னால் ஒரு நட்சத்திரமாகும் வாய்ப்புக் கிடைத்தது. மொழியைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக்கொள்ள முடிந்தது. இப்படி எழுதின கவிதைகள் எல்லாமே என்னுடைய தமிழாசிரியர்கள்கிட்டக் காட்டியிருக்கிறேன். அவுங்க ஒவ்வொரு திருத்தங்களாச் சொல்லியிருக்காங்க. குறைந்தது ஆயிரம் கவிதையாவது எழுதியிருப்பேன். இதற்கு மறைமுகமாக எனக்கு உதவிய ஒரு நூலைச் சொல்லணும். புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்னும் நூல் அது. எனக்குப் பத்தாவது பதினொன்றாவது படிக்கும்போது கிடைத்த இந்தப் புத்தகம் யாப்பைக் கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.



அந்தக் கட்டத்தில் தளை தட்டாம ஒரு வெண்பாவை என்னால் எழுத முடியும். அத்தோடு அந்தப் புத்தகம் தான் புதுக்கவிதைன்னு ஒரு விஷயம் இருக்கு என்னும் உணர்வை, அறிவைத் தந்தது. அந்த நூலின் ஒரு பகுதியில் புதுக்கவிதை பற்றி அவர் சில விமர்சனங்களை வைத்திருப்பார்.



ந. பிச்சமூர்த்தியின் ‘தாயும் குஞ்சும்’ என்னும் கவிதையை மேற்கோளாக எடுத்துப்போட்டு அவர் விமர்சனத்தைத் தொடர்ந்திருப்பார். அந்தக் கவிதை பிச்சமூர்த்தியால் வானொலியில் வாசிக்கப்பட்ட கவிதை. அதையும் குறிப்பிட்டுவிட்டு ‘இத்தகைய பாட்டல்லாப் பாட்டுக்களைத் தமிழ் மக்களுக்கு ஒலிபரப்பும் நிலையில் உள்ளது தமிழ்நாட்டு வானொலி நிலையம்’ அப்படீன்னு விமர்சனம் செய்திருந்தார் புலவர் குழந்தை. அவர் கொடுத்திருந்த அந்தக் கவிதைப் பகுதியைப் படித்தபோது அதுதான் கவிதைங்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. ‘இருப்பிட மின்ப மென்றும் இனியசே றும்ப ரென்றும்’ என்று புலவர் குழந்தை அதற்கு ஒரு மரபு வடிவத்தைக் கொடுத்திருப்பார். பிச்சமூர்த்தியின் கவிதை ‘இருப்பிடம் இன்பமென்றும் சேறதே சொர்க்கமென்றும்’ அப்படீன்னு தொடங்கும்.



கவிதை மனசைச் சார்ந்தது என்று நான் நம்ப ஆரம்பிச்சதன் அறிகுறி அதுதான். ‘உம்பர்’ என்பது ஒரு புலவருக்குப் புரியக்கூடிய பாஷை. ஆனால் ‘சொர்க்கம்’ என்பது சாதாரணமாகத் தமிழ் தெரிஞ்ச ஒருவனுக்குப் புரியக்கூடியது. புரியக்கூடிய முறையில் எழுதப்படுவதுதான் கவிதை அப்படீங்கறது என்னுடைய நம்பிக்கை. அதுல இருந்துதான் புதுக்கவிதை பற்றிய ஒரு தோற்றம் எனக்குக் கிடைத்தது. அதுக்கு முன்னாலேயே ‘எழுத்து’ங்கிற அந்தப் பத்திரிகையை நான் பார்த்திருக்கிறேன்.



சோமசுந்தரம் என்று எங்களுடைய ஆசிரியர். அவர் தமிழ்ப் பண்டிதர் அல்ல. தமிழ் ஆர்வலர். அவர் கையில் அப்படி ஒரு பத்திரிகையைப் பார்த் திருக்கிறேன். பத்திரிகைன்னா ஒரு தலைப்பு இருக்கும். அதுக்கும் கீழ ஒரு படம் இருக்கும். உள்ளேயும் படங்கள் இருக்கக்கூடிய பத்திரிகைகளைத்தான் பார்த்திருப்போம். படமே இல்லாமல் நான் பார்த்த முதல் பத்திரிகை அது. என்ன பத்திரிகை சார் அப்படீன்னு கேட்டபோது ‘இலக்கியப் பத்திரிகை’ அப்படீன்னாரு. நான் பார்த்த முதல் இலக்கியப் பத்திரிகை அதுதான். அதற்குப் பின் எங்கள் ஊர் நூலகத்தில் ‘புதுக் குரல்கள்’ என்கிற தொகுப்பு எனக்குக் கிடைத்தது. அதன் உள்ளடக்கத்தில் பிச்சமூர்த்தின்னு பேர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பேர் எனக்கு அறிமுகம் ஆகியிருந்ததால் அவர் கவிதையைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் கவிதைகள், அதில் இருந்த மற்ற கவிதைகள் என எல்லாவற்றையும் படித்தபோது கவிதை என்பது வேறொரு முகத்தோடு இருக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை எனக்குள்ளே உண்டாயிற்று. இதுதான் நான் கவிதைக்கு வந்த வரலாறு.



உங்களுடைய தொடக்கக் கவிதைத் தொகுப்புகளான ‘கோடை காலக் குறிப்புகள்’, ‘பயணியின் சங்கீதங்கள்’ ஆகியவற்றில் இருந்த செறிவு அதற்கப்புறம் வந்த ‘வாழ்நிலம்’ தொகுப்பில் இல்லை. வாசகரை நோக்கி உங்கள் கவிதை எளிமைப்பட்டிருப்பதாகப்படுகிறது. இந்த மாற்றத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?



அது தானாக உருவான மாற்றம். மனநிலைகளில் ஏற்பட்ட மாற்றம். கோடைகாலக் குறிப்புகள் எழுதும் போதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சிரமங்களை அனுபவித்தேன். அதனால் அதில் உள்ள கவிதைகள் கழிவிரக்கத்தோடானவையாகப் பெரும்பாலும் இருக்கும். அப்போதைய சூழலிலும் அதற்கான வாய்ப்பு இருந்தது. எல்லாம் மொத்தமாகச் சேர்ந்துதான் அப்படியான தொனி என் கவிதைகளில் வந்தது. ‘கோடைகாலக் குறிப்புகள்’ தொகுப்புக் கவிதைகள் என்னை முன்னால் வைத்து வருத்தங்களைச் சொல்பவை, ஆதங்கங்களைச் சொல்பவை, கோபங்களைச் சொல்பவை, தோல்வியைச் சொல்பவை, எரிச்சலைச் சொல்பவை எனப் பலவிதமாக இருக்கும்.



அதற்குப் பின்னால் வரும் கட்டத்தில் என்னை முன்னிறுத்தி என்னைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களையும் கேள்வி கேட்கிற சுபாவத்துக்கு வந்து சேர்ந்தேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ தொகுப்புக் கவிதைகளை அப்படிப் பார்க்கிறேன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ கவிதைகளில் ஒரு முடிவுக்கு நானே வந்திருப்பேன். இருப்பதா இழப்பதா அப்படீன்னு ஒரு தீவிரமான முடிவுக்கு வந்து அந்தக் கவிதைகளில் நின்னிருப்பேன். ‘பயணியின் சங்கீதங்கள்’ வருகிற போது முடிவுகளுக்கெல்லாம் நான் தயாராகவே இல்லை. கேள்விகளை மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ‘ஏன் நமது நிலைமை இப்படி இருக்கிறது?’ என்று கேள்விகளை மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.



அதற்கப்புறம் வந்த கவிதைகளில் இந்தக் கேள்விகளுக்கு நானும் பொறுப்பு, நீயும் பொறுப்பு என்கிற ஒரு பெரிய தளத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது அதுவரை நான் பயன்படுத்திவந்த மொழி வலுவானதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எளிமைப்படுத்துதல் என்று சொல்ல முடியுமான்னு தெரியவில்லை. இன்னும் புரிந்துகொள்வதற்குத் தோதான ஒருவகையில் பண்ணனும் என்னும் தேவை எனக்கு ஏற்பட்டது. நீங்க நல்லா யோசிச்சீங்கன்னா தமிழ்க் கவிதையில் அப்படியான ஒன்று தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. ஒரு கவிஞனும் ஆரம்பத்தில் எழுதிய அதே மொழியைப் பின்னால் எழுதவில்லை. உடனடியாகக் கிடைக்கக்கூடிய உதாரணம் பசுவய்யா. அவர் ஆரம்பத்தில் எழுதிய மொழிநடையில் பின்னால் எழுதவில்லை. அது அவருக்குள்ளே நிகழ்ந்த மாற்றம், அந்த மொழியில் நிகழ்ந்த மாற்றம், காலத்தில் நிகழ்ந்த மாற்றம் ஆகிய எல்லாம் சேர்ந்துதான் கவிதையுடைய தேவையை வெளிப்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அப்படி நிகழ்ந்த மாற்றங்கள் தான் எனக்கும்.



தொடக்கக் கவிதைகளில் கழிவிரக்கம் இருக்குன்னு சொன்னீங்க இல்லியா. அந்தக் கவிதைகளை எல்லாம் படித்தால் வாழ்க்கையே துக்கம்தானோ எனத் தோன்றும். அவ்வளவு துயரம், கழிவிரக்கம் கவிதைக்குத் தேவையா?



இந்த வாழ்க்கையில் சந்தோசத்துக்கான கணங்கள் ரொம்பக் கொஞ்சமாகவும் துக்கத்துக்கான கணங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. அப்படி இருப்பதுதான் இயல்பு. ஐம்பது வயது ஆகும் இந்தக் கட்டத்திலும் அந்த அபிப்ராயத்தில் இருந்து நான் மாற விரும்பவில்லை. மாறுவதற்கான பெரிய முகாந்திரங்கள் இல்லை. அன்றைக்கு என்னுடைய தனிப்பட்ட துயரம் பெரிதாக வருத்தப்படுத்தியது என்றால் இன்றைக்கு மொத்தமாக இருக்கிற வேறு துயரங்கள். சமூகத்தில் பார்க்கும் விஷயங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் என எல்லாமே வருத்தப்படுத்துது. அதைப் பற்றி உடனடியாக ஒரு கவிதை எழுதி முன்னணிப் போராளியாக வந்து நிக்கனும் என்று கேட்டால் அதற்கான திராணி எனக்கில்லை. அந்த விஷயங்கள் என்னையும் தொடுது. அதனால் நான் பாதிக்கப்படுகிறேன். அதனால் எங்கோ ஒரு மூலையில் நானும் கசிகிறேன்.



நந்திகிராமில் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதில் எனக்கு ஒன்றும் சந்தோசம் இல்லை. உங்களுக்கும் சந்தோசம் இல்லை என்கிற போது வெறும் சந்தோசமான கணங்களைப் பற்றி என்ன பேச முடியும்?



உங்கள் கவிதை உருவாகும் முறைபாடு (process) எப்படியானது?



முப்பது வருசத்தில் நூற்றுக்கும் கொஞ்சம் அதிகமான கவிதைகள் எழுதியிருப்பவன் நான். நான் சரளமான எழுத்தாளன் அல்ல. சரளமான எழுத்தாளனாக இல்லாமல் போனதுக்குக் காரணம் நான்தான். என் கவிதைதான். ஒரு கவிதை மாதிரியே இன்னொரு கவிதை இருக்கும் என்கிறபோது அதை எழுத வேண்டாம் என்னும் கட்டாயத்தை நானே உருவாக்கிக்கிட்டு இருக்கிறேன். ஒருமுறை பயன்படுத்திய மொழி மாதிரி நான் இன்னொருமுறை பயன்படுத்தினால் அந்தக் கவிதையை எழுத வேண்டாம் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். ஒருவர் எழுதின அனுபவம் மாதிரியே நான் எழுத வேண்டி நேரும் அப்படின்னா அந்த மாதிரியான கவிதைகளை நான் தவிர்த்தேன். அதனால் கவிதை எண்ணிக்கையைக் குறைச்சுக்கிட்டே வந்திருக்கேன்.



அது பற்றியான வருத்தம் எல்லாம் இல்லை. இருபத்தைந்து வருசம் எழுதியுமே கவிதைமேல் இருக்கும் காதல் ஏன் குன்றாமல் இருக்கிறது என்னும் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கிட்டிருக்கேன். தெரியவில்லை. ரொம்பச் சின்ன வயசிலேயே கவிதை உள்ள வந்துட்டதால் அதுமேல இருக்கிற நேசம் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கலாம். வேறு எதையும்விட என்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொண்டேன் எனத் தோன்றும் இடம் கவிதை தரும் இடமாக இருக்கலாம். இவை எல்லாமே கவிதையைத் தொடரக் காரணமாக இருக்கின்றன. கவிதை எப்படி உருவாகிறது என்பது தொடர்ந்து புதிராகத்தான் இருக்கிறது.



பலமுறை யோசித்துப் பார்த்தால் சிலசமயம் ஒரு வரி வந்து இந்தக் கவிதையைத் தொடர்ந்து கொண்டுபோயிருக்கும். சில சமயம் படிமம் கவிதையைக் கொண்டுபோயிருக்கும். சில சமயம் வெறுமனே ஒரு சந்தம் மட்டும் கொண்டு போயிருக்கும். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல முடியும். 'கையில் அள்ளிய நீர்' என்கிற கவிதையை முதலில் அறுபது வரிகள் எழுதியிருப்பேன். ஆனால் எதுவுமே நிறைவாகத் தோன்றாததால் கிடப்பில் போட்டுவிட்டேன். வேறொரு நாள் அந்தப் படிமம் திரும்பத் தோன்றியபோது இப்போது இருக்கிற ஆறேழு வரிகள் மட்டும்தான் மிஞ்சின. அந்தக் கவிதையை அதே வடிவத்தில் தக்கவச்சுக்கிட்டேன். இது கவிதை வந்த ஒரு வழி.



சிலது சித்திரங்களாக வரும். போபால் பற்றிய விஷயத்தில் அந்த ஆட்கள் ஓடிவரக்கூடிய ஒரு விஷயம். அது எனக்குக் கிடைத்த ஒரு காட்சி. அதேபோலக் கொஞ்ச காலம் ரொம்பப் பயணம் செய்யக்கூடிய தொழிலில் நான் இருந்தேன். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. நீலகிரி மலையில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கிக் கிடந்தன. எனக்கு இந்த இரண்டு காட்சிகளுக்கும் ஏதோதொடர்பு இருப்பதாகத் தோன்றியது. அதுதான் ‘இந்த நூற்றாண்டில் மூன்று காட்சிகள்’ என்னும் கவிதை. யார்கிட்டேயோ ஏதோ கேள்வி கேட்கும்போது சும்மா ‘ச்சோ’ அப்படீன்னு ஒலிக்குறிப்ப மட்டுமே பதிலாத் தந்தாங்க. அது ஒரு கவிதையை முழுக்கவுமே கொடுத்திருக்கு. ‘பெயர்களின் கவிதை’ என்பது. எழுதி முடித்ததும் கவிதை என்னை விட்டுப் போயிடுது. அது வாசகனுடையதாக ஆயிருது. இருந்தாலும் இது எப்படி வந்தது என்ற கேள்வி தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்குது. அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காதவரைக்கும் நான் கவிதை எழுதிக்கிட்டேதான் இருப்பேன். அந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சின்னா கவிதை எழுதுவதை நிறுத்திக்குவேன்.



உங்கள் கவிதையில் வரும் கிளிக்குக் காரணம் வைத்தீஸ்வரன் என்று சொல்லியிருக்கிறீர்கள்? சச்சிதானந்தனின் சில வரிகளை அப்படியே பயன்படுத்தியிருப்பீங்க. இது மாதிரி வேறு கவிஞர்களின் தாக்கம் உங்களிடம் இருக்கிறதா?



இருக்கு. நான் பிறக்கும் போதே கவிதையாகக் கத்திக் கொண்டு பிறந்த ஆள் கிடையாது. நான் ஒரு மாதிரிப் படிக்க ஆரம்பிச்சேன். படிப்பு ருசியைத் தந்தது. அந்த ருசி வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தது. அப்போது நாமும் எழுதலாம் என்னும் துணிவு வந்தது. அப்படித் தொடர்ந்து வந்த ஆள் நான். என்னை எல்லாரும் பாதித்திருக்கிறார்கள். பாதிப்பே இல்லாமல் ஒரு கவிஞன், ஒரு எழுத்தாளன் செயல்பட முடியுமா என்று என்னிடம் கேட்டால் என் பதில் முடியாது என்பதுதான். என்னைப் பெரிதாகப் பாதித்த கவிஞர் சுப்பிரமணிய பாரதிதான்.



அதாவது பள்ளிப் புத்தகத்தில் பாரதியைப் படித்தபோது யாரோ பாட்டு எழுதியிருக்கான் என்று தோன்றிய ஒரு ஆள்தான். ஆனால் வயது ஏற ஏற அந்தக் கவிதைகள் வேறு வேறு அர்த்தங்களாக மனசுக்குள் வந்துக்கிட்டே இருக்கு. ஒவ்வொரு கட்டத்தில் படிக்கும் போதும் அந்தக் கவிதைகளுக்கு வேறு வேறு பொருள், வேறு வேறு வண்ணம், வேறு வேறு தொனி பார்க்க முடிந்தது. எனக்குப் பெரும் பாதிப்பு பாரதியிடம் இருந்து வந்தது. உதாரணமாக ஒரு கவிதை சொல்கிறேன். இருளும் ஒளியும் என்னும் கவிதை. ‘வானமெங்கும் பரிதியின் சோதி’ என்று தொடங்கும் அது. அதனுடைய ஈற்றடி ‘மான வன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே’ என்பது. அந்த வரி இல்லாமல் இருக்கலாம். அது கவிதையாக இருக்கக்கூடும். ஆனால் அந்த வரியைச் சொல்வதற்காகத்தான் அந்தக் கவிதையை எழுதினார் என்று நான் யூகிக்கிறேன். இந்தத் தந்திரத்தை நான் என்னுடைய பல கவிதைகளில் பயன்படுத்தி யிருப்பேன். ‘நெடுங்காலம் புகைந்துகொண்டிருப் பதைவிடப் பற்றி எரிவது மேல்’ என்று முடியும் என்னுடைய கவிதையில் அந்த வரி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த வரி இல்லாமல் அந்தக் கவிதையை என்னால் எழுத முடியாது.



வைத்தீஸ்வரன் ஒரு நகரம் சார்ந்த கவிஞர் என்கிற முறையில் என்னைப் பாதித்தார். அவர் நகரம் சார்ந்தவர். நான் நகரம் சார்ந்தவன்னு சொல்றது எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. கோயம்புத்தூர் மாதிரியான ஒரு நகரத்தைச் சென்னை மாதிரியான அல்லது இன்னும் பெரிய நகரத்தோடு ஒப்பிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. பெரிய கிராமத்தின் சாயல்களைக் கொண்ட நகரம் கோயம்புத்தூர். நகரம் என்று சொல்கிற வகையில் வைத்தீஸ்வரனின் சாயல்கள் என்னிடம் உண்டு. பேருந்து போன்ற சில படிமங்களைக் கொண்டுவருவது போன்றவற்றில் அப்படிச் சொல்லலாம்.



ஆனால் என்னை ரொம்பவுமே பாதித்த கவிஞரா இருந்திருக்க வேண்டியவர் பிரமிள் என்கிற தருமு சிவராமு. ஆரம்ப காலத்தில் படிமங்கள் கவிதைக்கு இன்றியமையாதவை என்று நான் நம்பிக்கொண்டிருந்த போது என்னை பெரிய வீஸீயீறீuமீஸீநீமீ பண்ணியவர் தருமு சிவராமு. அதனுடைய சில சாயல்கள் அங்கங்கே என்னுடைய கவிதையில் இன்றைக்கும் இருக்கின்றன. ‘இருளின் நிறமுகக் கதுப்பில் தணல்கள் சிரித்தன’ என்று ஒரு வரி. அது படிமமாகவோ உவமையாகவோ எதுவுமாகவும் இல்லை. அந்த வரி மட்டுமே ஒரு மொத்தமான கவிதையாக இருக்கும். அந்த மாதிரியான வரிகள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அந்த அளவுல அவருடைய பாதிப்பு இருக்கு.



என்னுடைய வாசிப்பு சார்ந்து செசார் வயெஹோ என்கிற பெரு நாட்டுக் கவிஞர் தற்செயலா எனக்குத் தெரியவந்த ஒரு பெயர். எழுபதுகளில் எனக்குப் படிப்பதில் தீவிரமான ஆர்வம் இருந்தது. அப்படிப் படித்ததில் இந்த சோசலிசக் கவிதைகள் அல்லது இடதுசாரிக் கவிதைகள் எல்லாமே என்னை ரொம்பவும் பாதித்தன. அந்தப் பாதிப்பில் நான் பல கவிஞர்கள் பக்கத்துல நின்னு தொட்டு உரசிப் போயிருப்பேன். கையப் புடிச்சிக் குலுக்கிக்கிட்டு அவர் கைக்குள்ள என்னை அடக்கிக்கமாட்டாரான்னு ரொம்பவுமே ஆசைப்பட்ட கவிஞர் செசார் வயெஹோ. அவருடைய கவிதைகள் என்னை ரொம்பவுமே பாதித்திருக்கின்றன. ஒரு பெரிய துக்கம், தனிமனிதத் துக்கம், அது சார்ந்த சமூகத் துக்கம் என்பதுதான் அவருடைய கவிதைகளின் அடிநாதம். அந்தச் சமூகத் துக்கம் தனிமனிதனைப் பாதிக்கும் விதத்தையும் தனிமனிதத் துக்கம் சமூகத்தைப் பாதிக்கும் பொதுத் துக்கமாகிற விதத்தையும் செசார்கிட்டத்தான் நான் கத்துக்கிட்டேன். அவர் கவிதையினுடைய பாதிப்பு இருக்கு. ஆனால் அவர் எழுதிய மாதிரி ஒரு வரிகூட நான் எழுதினதில்லை. அந்த உணர்வை நான் உறிஞ்சி என் நரம்பில், கிளையில் இலையில் எல்லாம் பரவவிட்டதுதான்.



அதேபோலத்தான் பாரதி. பாரதியின் நிறைய வரிகள். வரிகள் என்று சொல்வது அவற்றைக் குறைவுபடுத்துகிற மாதிரியாக இருக்கிறது. படிமமாகவோ பதப்பிரயோகமாகவோ இருக்கலாம். இவை எல்லாம் பாரதியிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். அவர்தான் என்னைப் பாதித்த பெரும் ஆளுமை. பாப்லோ நெரூடா எனக்குப் பிடித்த கவிஞர். பெரிசா வீஸீயீuறீமீஸீநீமீ பண்ணினவர் அல்ல. சச்சிதானந்தன் வரிகளை ஒரு க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீக்காக எடுத்தது. அவர்கிட்ட நான் கத்துக்கிட்ட ஒரு விசயம் வரிகளை நீட்டிவிடுவது. அதை ஒரு பாதிப்புன்னு சொன்னா பிரெக்ட்கிட்ட அது நிறையவே இருக்கிறது. வரிகள் நீளமா வரும்.



மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்துப் ‘பெண்வழிகள்’ என்று ஒரு தொகுப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். தமிழில் பெண் கவிதைகள் பற்றிய பேச்சு தொடங்கிய காலத்திலேயே பெண்மொழி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இப்போது தமிழில் வரும் பெண் கவிதைகளுக்கும் மலையாளப் பெண் கவிதைகளுக்குமான இயைபு என்னன்னு பார்க்கறீங்க?



பெண்களுக்குத் தனியான ஒரு உலகம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய அனுபவம் என்னுடையது அல்ல. அந்த அனுபவத்தை என்னாலும் சுவீகரிக்க முடியுமானால் இன்னும் கொஞ்சம் மேன்மைப்பட்ட கவிஞனாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். பெண்களின் அனுபவம் எழுத்தில் வரணும். எழுத்தில் எதற்கும் விலக்கோ தடையோ இருப்பதாக எனக்கு அபிப்ராயம் இல்லை. எழுத்தில் எல்லாமும் சாத்தியம். பெண்ணுடைய உலகமும் அதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.



நான் கொஞ்சம் விரிவான வாசகன். தமிழ் அல்லாத வேறு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து படிக்கிற ஆள் நான். அந்த மொழிகளில் நடக்கும் முயற்சிகளை எல்லாம் பார்க்கும்போது நான் இயங்கும் மொழியில் அப்படியான முயற்சிகள் இல்லை என்கிற குறையை உணர்கிறேன். வாசகனாகவும் கவிதை ஆர்வலனாகவும் உணர்கிற குறை இது. அதைச் சொல்வதற்காக எழுதிய கட்டுரைதான் பெண் மொழி. அதில் பெண்மொழி நம் கவிதையில் இல்லை என்று சொல்லியிருப்பேன். பின்னால் லீனா மணிமேகலையுடைய தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையில் என்னுடைய கருத்தைத் திருத்திக்கொண்டேன். ஏன்னா இந்தப் பத்து வருசத்துக்குள் நிறையப் பெண்குரல்கள் வந்திருக்கு.



நான் அந்தக் கட்டுரையை எழுதியபோது அன்றைக்கு இருந்த பெண் குரல்கள் என்பவை இரா. மீனாட்சி, திரிசடை, சுகந்தி சுப்பிரமணியன் போன்றவைதான். கவிதை என்று தைரியமாகச் சொல்லக்கூடிய குரல்கள் இவைதான். அந்த ஆதங்கத்தில் எழுதின கட்டுரை அது. அதற்குப் பின்னால் வந்த கவிதைகளையும் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன். சில பெண் கவிஞர்களுடைய தொகுப்புக்கு நான்தான் முன்னுரையும் எழுதியிருக்கிறேன். இந்த மொழியில் இது தவிர்க்க முடியாதது, வரவேற்கப்பட வேண்டியது, தொடர்ந்து போக வேண்டிய ஒரு போக்கு என்று எனக்குத் தோன்றுகின்றது. பெண்ணுடைய உலகம், உணர்வு, வரலாறு எல்லாவற்றையும் அவர்களுடைய மொழியில் பதிவுசெய்வதற்கான எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு. அதை எந்த வகையிலும் மறுக்க முடியாது. அதை ஏற்றாகனும். அப்போதுதான் இலக்கிய வாசகன் அல்லது இலக்கியவாதி என்னும் முறையில் உங்களுடைய உலகத்தை விரிவுபடுத்த அது உதவும். இந்த நோக்கில்தான் நான் பெண் கவிஞர்களுடைய தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன்.



தமிழில் பெரிய வெள்ளமாக வந்திருக்கிறது. இது ஒரு ஆற்றொழுக்கான ஓட்டமாக மாறுவதற்கு இன்னும் கொஞ்சம் காலமாகும். இதற்குள் சரியும் சரியில்லாததும் தேவையும் தேவையில்லாததுமான பல போக்குகள் இந்த ஓட்டத்தில் இருக்கின்றன. இதில் பிரதானமாக எனக்குத் தோன்றுவது பெண்கள் உடலை மையப்படுத்திக் கவிதை எழுதுபவர்கள் என்று சொல்லப்படும் ஒரு குற்றச்சாட்டு. அது சரியானதாக எனக்குப் படலை. பெண் உடலைப் பற்றிப் பெண்தான் எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன். கமலாதாஸ் ஒரு கவிதையில் கர்ப்பத்திலிருந்து குழந்தை இறங்கின ஒரு வலியைச் சொல்லியிருப்பாங்க. இந்த வரியைச் சுகுமாரனோ பெருமாள்முருகனோ உணர்ந்து எழுத முடியாது. ஊகித்துத்தான் எழுத முடியும். அப்படியான உண்மையான இயல்புகள் கவிதைக்கு வருவது என்பது நம் கவிதையை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கும் நம்ம கவிதையை மேன்மைப்படுத்துவதற்கும் உதவும் என்று நினைக்கிறேன். அதனால் அதைப் பற்றிய குறைகள் எனக்கு இல்லை. ஆகவே அந்தக் குற்றச் சாட்டுகளை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.



ஆனா இதில் நான் பார்க்கக்கூடிய குறை என்பது கவிதை மொழி சார்ந்தது. இதுவரைக்கும் ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழியைத்தான் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுடைய மொழியாக இதை மாற்றுவதற்குப் பெரிய முயற்சி எதுவும் இல்லை. ரொம்பக் குறைவான முயற்சிதான் நடந்திருக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு. அப்படியான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் சுகந்தி சுப்பிரமணியன் என்பது என் அபிப்ராயம். அதற்குப் பின்னால் பெரிய இடைவெளி விட்டு இன்றைக்கு சல்மாவிடம் அப்படி ஒரு மொழி செயல்படுது என நான் ஊகிக்கிறேன். மாலதி மைத்ரி, சுகிர்தராணியிடம் அப்படியான மொழி செயல்படுகிறது. பெண்ணுடைய உலகத்தின் ஒரு மென்மையான மொழி உமா மகேஸ்வரியிடம் செயல்படுகிறது. இதையெல்லாம் நான் பார்க்கிறேன்.



ஆனால் இவர்களுடைய மொழியாக, சுயம்புவாக முழுவதும் பெண் உலகம் சார்ந்த, பெண் உணர்வு சார்ந்த மொழியாக இது இல்லை. அடுத்து, இவர்கள் எல்லாருமே பெண் உடல், உறுப்பு ஆகிய இரண்டு நிலைகளில் இருந்துதான் இந்தக் கவிதைகளை எழுதுகிறார்கள். பெண்கள் இந்தச் சமூகத்தினுடைய ஒரு பகுதி, இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று சொல்லப்படுமானால் பெண்ணுக்கும் வரலாற்றில் இடம் உண்டு, பண்பாட்டில் இடம் உண்டு, மதத்தில் இடம் உண்டு, மொழியில் இடம் உண்டு, இலக்கியத்தில் இடம் உண்டு. இத்தனை இடங்களிலும் இவர்கள் யாருமே பிரவேசிக்கவில்லை. எனக்குச் சுலபமாகத் தெரிஞ்ச இன்னொரு மொழி என்பதால் மலையாளத்தில் அப்படியான இடத்தை, வரலாற்றை மையப்படுத்துகிற ஒரு போக்கை மலையாளப் பெண் கவிதைகளில் பார்த்தேன். அதனால்தான் அந்தக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். தமிழ்க் கவிதைகளையும் மலையாளக் கவிதைகளையும் ஒப்பிடுவதற்கான விஷயம் இல்லை. இது அதை நிறைவுசெய்யவும் அது இதை நிறைவு செய்யவுமான பங்களிக்கும் முயற்சியாகத்தான் பார்த்தேன்.



உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.



என் அப்பா, அம்மா இரண்டு பேரும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் கேரளாவிலிருந்து பிழைப்புத் தேடித் தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்க அப்பாவுக்கு ஒரு சகோதரி. என் அப்பாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் இன்னொரு சகோதரனும் சகோதரியும் உண்டு. எங்க அம்மா ஏழு ஆண்களுக்குப் பின் கடைசியாகப் பிறந்த ஒரே பெண். அம்மாவுக்கு அவங்க அப்பாவைப் பார்த்த ஞாபகமெல்லாம் இல்லைன்னு சொல்லிக் கேட்டிருக்கேன். எங்க பாட்டி கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் நெடும்பரா என்னும் கிராமத்தில் கோவில் தொடர்பான வேலைகள் செய்துகொண்டிருந்தார்கள். பிழைப்புத் தேடித் தன்னுடைய ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கோயம்புத்தூருக்கு வந்து குடியேறினார்கள்.



எங்க அப்பா ஆரம்பத்தில் கோயம்புத்தூரிலிருந்து நேவல் போர்ஸ் அலுவலகத்தில் சின்ன வேலைகள் செய்துகொண்டிருந்தார். அதற்கப்புறம் பதினாறு பதினேழு வயதில் கோயம்புத்தூர் நகராட்சியில் மின்கம்பியாளராக வேலையில் சேர்ந்தார். எங்க அப்பா நேவல் இதிலெல்லாம் வேலைசெய்துகொண்டிருந்தபோது கோயம்புத்தூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு எடுபிடி வேலைக்கெல்லாம் போவார். அங்க இருந்த ஒருவர் சி. பி. கண்ணன். அவர் ஸ்டுடியோவில் நீர்ப் பராமரிப்பு மாதிரியான வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். கருணாநிதி வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த காட்சிகளை எல்லாம் பார்த்த பாக்கியம் செய்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். என் அப்பாவுடைய சகோதரி, என்னுடைய அத்தையின் கணவர், அப்போது இறந்துபோய்விட்டார். என் அத்தைக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் சி.பி.கண்ணன் அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டார். இந்தக் கல்யாணம் அதிகாரப்பூர்வமாக நடந்ததா இல்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதற்கு அப்புறம் மெட்ராஸ் இன்ஜினியரிங் சர்வீஸ் என்கிற கம்பெனியில் வேலை கிடைத்தது என்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் என்னும் இடத்துக்குப் போனார்கள். எங்கப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க அம்மா பேரு தங்கமணி. அப்பா பேரு நாராயணன். எங்க அத்தைக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் நான் பிறந்த ஒன்பதாவது மாசமே என்னை அங்க கொண்டு போய்விட்டார்கள்.



என்னுடைய பன்னிரண்டு வயதுவரைக்கும் அந்தப் பகுதியில்தான் இருந்தேன். அங்கேதான் வளர்ந்தேன். என் கவிதையில் எங்கேயாவது மரம், செடி, மலை, நதி இதெல்லாம் தென்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த இளமைக்காலக் காட்சிகள்தான். அப்புறம் என் மாமா, அதாவது சி. பி. கண்ணன், நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பிரமாதமான மனிதர். அவருக்கு இன்னொரு குடும்பம் மனைவியெல்லாம் இருந்தார்கள். ஆனால் அதைப் பற்றி அவர் அதிகம் பேசியதில்லை. எங்க அத்தைகூடத்தான் கடைசிவரைக்கும் இருந்தார். ஓய்வுபெற்ற பின்னால் கோயம்புத்தூருக்கு வந்து இருந்தார். அப்புறம் இறந்துபோயிட்டார். இப்ப எங்க அத்தை பாலக்காட்டில் இருக்கிறார்கள்.



எங்க அம்மாவுக்குக் கூடப் பிறந்த ஏழு பேரில் முதல் இரண்டு பேர் கோயம்புத்தூரில் வேலையெல்லாம் பார்த்தார்கள். மூன்றாவது ஒருவர் சின்ன வயதிலேயே பூனாவுக்கு ஓடிப்போயிட்டார். அவருக்கு என்னுடைய சாயல் என்று இன்றைக்குவரைக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சகோதரர்கள் இரண்டு பேரும் ஊமைகள். அதில் ஒருவர் ஊனமானவரும்கூட. இன்னொரு சகோதரர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இவர்கள் எல்லாரும் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். கோயம்புத்தூரில் இருந்த ரப்பர் கம்பெனி ஒன்றில் சின்னச் சின்ன வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.



எங்க அப்பா கோயம்புத்தூர் நகராட்சி மின்துறையில் கொஞ்சம் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று இருந்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு ஓரளவு மார்க்சியச் சாயல் இருந்தது. வாழ்க்கையில் அவர் வெளிப்படையாக அரசியல் என்று வைத்துக்கொண்டது அது மட்டுமாகத் தான் இருக்கும். கோயம்புத்தூர் நகராட்சியில் முதன்முறையாக நடந்த தேர்தலில் வென்று நகராட்சி ஊழியர் மின் சம்மேளனத்தின் முதல் செயலாளர் ஆனவர். அவர்கள் முதலில் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். என் அப்பா மூன்று நாள் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்திருந்தார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. கருப்புத் துணியெல்லாம் கட்டிக்கிட்டு இருந்தார். நான் போய் அப்பான்னு கூப்பிட்டபோது பேச மாட்டேன் அப்படீன்னு கைகாட்டினார். அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.



நான் ஊட்டியில் இருந்ததால் அப்பாகூடப் பெரிய நெருக்கம் எல்லாம் கிடையாது. நான் அப்பா அம்மா யாரும் இல்லாமல் தனியா அத்தையோட பராமரிப்பில் இருந்தேன். என் அத்தைக்குச் சின்ன அளவில் இலக்கிய ஈடுபாடெல்லாம் உண்டு. அவர்களுக்கு மலையாளம் நன்றாகப் படிக்க, எழுத, பேசவெல்லாம் தெரியும். கேரளத்தில் இருந்த மலையாளக் குடும்பங்களில் எல்லாம் வழக்கமாகப் பாராயணம் செய்கிற பக்தி நூல்கள் எல்லாத்தையும் அத்தை படிப்பார்கள். அதற்கு நேரெதிரானவர் மாமா. அவர் கோவிலுக்குப் போய் நான் பார்த்ததே இல்லை. அவர்களோடு இருந்தபோது வசதியான இளமைப் பருவம் இருந்தாலும் எனக்குச் சின்ன ஏக்கம் இருந்தது. தனியா இருக்கோம் அப்படீன்னு. அப்புறம் நாலாவதோ அஞ்சாவதோ படிக்கும்போது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குக் கோயம்புத்தூர் வந்தவன் அப்புறம் திரும்பி அங்கே போகவில்லை. என்னுடைய அத்தை ரொம்பவுமே வருத்தப்பட்டுக்கிட்டு அங்க இருந்த என்னுடைய சொத்தை எல்லாம் தூக்கிக்கிட்டு வந்தாங்க. பழைய பெட்டி பம்பரம், தூண்டில் முள், தீப்பெட்டிப் படம் இந்த மாதிரி நிறையச் சொத்து இருந்தது. அதற்குப் பின்னால அங்க இருக்கலயே தவிர இப்பவும் என்னோட ஊர் அப்படின்னா ஞாபகம் வருவது வெல்லிங்டன்தான். அது மாதிரியான வாழ்க்கை இருக்கும் என்றால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று இப்பவும் தோன்றுகின்றது.



அந்தத் தெரு முழுக்கவுமே ராணுவத்தில் இருந்தவர்கள், அது சார்பான தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்கள் எல்லாம் இருந்த இடம். தெருமுனையில் நின்னா எங்க வீடு நடுவில் இருந்தது. அந்த வீட்டுக்கு வர்றதுக்குக் கொறஞ்சது அரைமணி நேரம் ஆகும். ஏன்னா ஒவ்வொரு வீட்டு மேலயும் ஏறித்தான் வரணும். அப்படியான ஒரு பெரிய பிணைப்பு இருந்த ஊர். அது மனசுக்குள்ள பதிந்திருக்கிறது. அதனால் அந்த ஊர்மேல் இருக்கும் பிரியம் இன்னும் களையவில்லை. எனக்கு அடுத்தது தங்கை. அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிவிட்டு இன்னும் இரண்டு பெண்களும் ஒரு பையனும். எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. தம்பியும் அம்மாவும் இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறார்கள்.



என்னுடைய ஆரம்பப் படிப்பு வெல்லிங்டன்ல. செயின்ட் ஜோசப் ஸ்கூல். கோயம்புத்தூருக்கு வந்தப்புறம் செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல் என்று சொல்லப்படுகிற செயின்ட் மைக்கல்ஸ் ஹைஸ்கூலின் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளிக் கல்வி முழுக்கவும் அங்கேதான். எஸ்எஸ்எல்சியில் எனக்குக் கிடைத்த பெரிய சந்தோசம் மாவட்டத்தில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவன் நான் என்கிற பெருமை. அப்போது எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் பற்றி முதலிலேயே சொன்னேன். அப்புறம் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் பியுசி படித்தேன். நல்ல மதிப்பெண். டாக்டர் ஆகணும் அல்லது அக்ரி யுனிவர்சிடிக்குப் போகணும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. டாக்டர் ஆகறதுக்கு வசதியெல்லாம் இல்லை. அதனால் அக்ரி யுனிவர்சிடியில் சீட்டுக் கேட்டேன். அதற்குக் காரணம் விவசாயம் பற்றிப் படிப்பது அல்ல. அப்போது அங்கே நல்ல இலக்கியச் சூழ்நிலை இருந்தது. கங்கை கொண்டான் என்ற கவிஞர் அங்கே இருந்தார். அவர் வெளியிட்ட ஆண்டு மலர்கள் எல்லாமே மாபெரும் இலக்கியப் பொக்கிஷங்களாகத் தோன்றின. இன்றைக்கும் அப்படித்தான் தோன்றும். அதற்காகவே அங்கே போனேன்.



வேளாண் பல்கலையிலிருந்து சேர்க்கை அட்டை வரும்னு காத்துக்கிட்டு இருந்ததில் எல்லா இடங்களிலும் கடையை மூடிவிட்டார்கள். அதனால் அந்த வருசம் எங்கேயும் சேர முடியவில்லை. அரசு கல்லூரியில் பொருளியல் படிக்கலாம் என்று மாலைக் கல்லூரியில் சேர்ந்தேன். நமக்கும் பொருளாதாரத்திற்கும் ஒத்துவராது என்பது தெரிந்தது. அது இன்றுவரைக்கும் தொடர்கிறது. அடுத்த வருசம் பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்ஸி வேதியியல் சேர்ந்தேன். ஆனால் அதில் ரொம்பப் பிரமாதமான மாணவனாக நானில்லை. தமிழில் பெரிய ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூடத்திலேயே எனக்குக் கிடைத்த ஆசிரியர்களின் தூண்டுதல் அதற்குக் காரணம். நான் முந்தியே சொன்ன மாதிரி கலியபெருமாள் என்னும் ஆசிரியர் இருந்தார். அவர் கதையாச் சொன்ன இரண்டு விசயங்கள் என்னை ரொம்பவுமே பாதித்தது. முதலாவது கோமல் சுவாமிநாதன் எழுதிய ‘புதிய பாதை’ நாடகக் கதையைச் சொன்னார். இரண்டாவது ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்னும் கதை. அவை இரண்டுமே எனக்குப் பெரிய பாதிப்பாக இருந்தன. அவரிடம் கேட்டு ஜெயகாந்தன் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.



அந்த வயதில் அக்கதைகள் எனக்குப் புரிந்தன என்பதுதான் ஆச்சர்யம். சோமசுந்தரம் என்னும் இன்னொரு ஆசிரியரிடம் அந்தக் கதைகளை விமர்சித்தேன். ‘மிருகம்’ என்று ஜெயகாந்தன் எழுதிய கதை. சொந்த சகோதரனும் சகோதரியும் உறவு கொள்கிறார்கள். அதை அவரிடம் சொன்னபோது ‘பிஞ்சுலயே பழுத்துட்ட’ என்றார். நான் கதைகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதற்குச் சந்தோசப்பட்டு ‘இனிப்பும் கரிப்பும்’ என்னும் தொகுப்பைக் கொடுத்தார். நான் தெரிந்துகொண்ட முதல் எழுத்தாளன் ஜெயகாந்தன். அந்தக் கட்டத்தில் ‘ஞானரதம்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் ஜெயகாந்தன் எழுதுகிறார், முன்னோட்டம் என்னும் பகுதி முக்கியமானது என்பதை எல்லாம் என்னுடைய ஆசிரியர் சொன்னார். அவர் சிபாரிசால் அவற்றைப் படித்தேன். அதில் தென்பட்ட ஒரு பெயர் புதுமைப்பித்தன்.



கோவை மத்திய நூலகத்துக்குப் போய்ப் புதுமைப்பித்தன் பெயருள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்தேன். ‘காஞ்சனை’ தொகுப்பைப் படித்தபோது ரொம்பவுமே பரவசமாக, சந்தோசமாக, பயமுறுத்தக் கூடியதா, அதுவரைக்கும் இருந்த அபிப்ராயங்களை எல்லாம் மாத்தறதா இருந்தது. ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ படித்தேன். அதைப் படித்தபோது தீர்மானித்த ஒரு விஷயம் ஒரு காலத்திலும் எழுத்தை நம்பி வாழக் கூடாது என்பது. இந்தச் சமயத்திலும் எனக்குள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர் பாரதி. பாரதிமேல் இருந்த ரசனை, வாசக மதிப்பு எல்லாம் கடந்துபோய் அவர்மேல் பெரிய பக்தியே ஏற்பட்டிருந்தது. இன்றும் அந்த பக்தியில் இருந்து விடுபடலை. கல்லூரியில் படித்தபோது பூசாகோ (றிஷிநி) கல்லூரி நூலகம் பெரிய பொக்கிஷமாக இருந்தது.



கல்லூரியில் ‘புது வெள்ளம்’ என்று ஒரு பத்திரிகை மாணவர்களுக்காக வந்தது. மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும் பத்திரிகைன்னாலும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் முத்துராமலிங்கம் என்று ஒரு ஆசிரியர். என்னுடைய கதை, கவிதை எல்லாம் அந்த இதழில்தான் வந்தன. நான் முன்பே சொன்ன மாதிரி மரபு சார்ந்த கவிதைகள் பள்ளி ஆண்டு மலரில் எழுதியிருக்கிறேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது தாமரை இதழில் கதைகள் எழுதினேன். தொடர்ந்து இரண்டு இதழ்களில் என் கதைகள் வந்தன. ஒரு கதை பேர் ‘நியாயங்கள்’. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. இந்தச் சமயத்தில் அபூர்வப் பசி கொண்ட ஆள் மாதிரி நிறையக் கதைகள் வாசித்தேன். சீக்கிரமே ஜெயகாந்தன் எனக்குச் சலிப்பு தட்டினார். அன்றைக்கு வந்திருந்த ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவல் வரைக்கும் ஏகதேசமா எல்லாமே வாசித்திருந்தேன். படித்தபோது ஈர்ப்பைத் தரக்கூடியதாக இருந்த அவை பின்னால் ஒரு மாதிரி அலுப்பைத் தந்தன. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலைத் தவிர.



அப்புறம் என் கவனம் தி. ஜானகிராமன் பக்கம் திரும்பியது. நான் அதிகம் பேசாத ஆள். சங்கோஜி. மென்மையான சுபாவம் இருப்பதாகச் சொல்லப்படுபவன். அதனால் எனக்குப் பொருத்தமான எழுத்தாளர் ஜானகிராமன் என்பது மாதிரி பட்டது. இது மட்டும் போதாது என்று தோன்றியபோது மெல்ல மெல்ல ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் நான் படிக்க நேர்ந்தது ஆங்கில மீடியம் சார்ந்த பள்ளி. அதனால் ஆங்கிலத்தில் படிப்பதும் எனக்கு எளிதாக இருந்தது. அன்றைக்குக் கிடைத்த சார்லஸ் டிக்கன்ஸ் மாதிரியான புத்தகங்கள் தாண்டி டி. ஹெச். லாரன்ஸ் மாதிரியான புத்தகங்களுக்கு வந்தேன்.



நடுவில் கம்யூனிஸ்ட் கட்சியோடு சின்ன உறவு. என்னுடைய ஆசிரியர் சோமசுந்தரம் சிபிஐ கட்சியோட உறுப்பினர். அவர் என்னைக் கட்சி அலுவலகத்திற்குக் கூட்டிக்கொண்டு போவார். முதன்முதலாக ஜெயகாந்தன் என்கிற எழுத்தாளரைப் பார்த்தது அங்கேதான். ‘இவன் கவிதையெல்லாம் எழுதுவான்’ என்று என் ஆசிரியர் சொன்னார். ‘ஆங் அப்படியா. சபாஷ்’ அப்படீன்னு சொல்லிட்டுப் போனார் ஜெயகாந்தன். அதனால் அங்கே கிடைத்த சில புத்தகங்கள் எல்லாம் என் கவனத்தை மாற்றின. ரஷ்ய இலக்கியங்கள் மாதிரியான விஷயங்கள். அவற்றைப் படித்தபோது என்னுடைய எழுத்தாளர் என்று தோன்றியவர் ஆன்டன் செகாவும் தாஸ்தாவ்ஸ்கியும்தான்.



ஆங்கிலத்தில் படிக்கிறேன், தமிழில் கவிதைகள் எழுதுகிறேன், கவிதைகள் பிரசுரமாகி இருக்கின்றன என்றபோது என்னுடைய ஆசிரியர் கமலேசுவரன் என்பவர் எனக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்து உதவினார். அப்போது எஸ்.வி.ஆரின் ‘எக்ஸிஸ்டென்சியலிசம் ஓர் அறிமுகம்’ என்ற புத்தகம் வந்திருந்தது. அது என்னை உலுக்கிப் போட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தின் மூல வடிவமான Irrational Man என்ற புத்தகத்தையும் நான் தேடிப் படித்தேன். இதையெல்லாம் நான் படிப்பதைப் பார்த்த கமலேசுவரன், சார்த்தர் எழுதிய Being and Nothingness என்ற ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அது கிட்டத்தட்ட எழுநூறு எண்ணூறு பக்கம் வரும். கரடு முரடான நடையில் எழுதப் பட்டிருக்கும். அவர் எல்லா மாணவர்களையும் ‘குஞ்சு’ அப்படீன்னுதான் கூப்பிடுவார். ‘ஏ குஞ்சு உனக்கு இது மண்டையில ஏறுதா பாரு’ என்றார். ஆனால் முந்நூறு பக்கம்தான் மண்டையில் ஏறியது. மீதி ஏறலை. ஆனால் முந்நூறு பக்கம் படிக்க முடிந்தது அன்றைக்குப் பெரிய சாதனையா இருந்தது. தொடர்ந்து அது சார்ந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு என்னை ரொம்பக் கவர்ந்தவர் ஆல்பெர் காம்யுதான். அந்தக் கவர்ச்சி இன்றைக்குவரைக்கும் மாறவில்லை.



இப்படி வாசிப்பும் ஆசிரியர்களும் கொடுத்த தூண்டுதலாலேதான் எழுத ஆரம்பித்தேன். இந்தச் சமயத்தில் கோயம்புத்தூர் இலக்கிய வட்டங்களோடு எல்லாம் தொடர்பு ஏற்பட்டது. ‘புது வெள்ளம்’ என்று கல்லூரியில் நடத்தப்பட்ட அந்தப் பத்திரிகையில்தான் பாதசாரி என்று இன்று அறியப்படுகிற என்னுடைய நண்பர், எனக்கு மூன்று வருடம் சீனியரான விஸ்வநாதன் ஒரு கட்டுரை, கவிதை எல்லாம் எழுதியிருந்தார். அவர் கட்டுரையின் நடை என்னை ரொம்பவும் பிரம்மிக்கவைத்தது. தமிழில் இவ்வளவு வலுவான நடையை உருவாக்க முடியுமா அப்படீன்னு. நாங்க இரண்டு பேரும் கல்லூரி நாட்களில் பழக்கமாக இருந்தோம். பின்னால் எனக்கு ஒரு வருடம் இடைவெளி வந்த சமயத்தில் நான் எழுதின ஒரு கதை உள்ளூர்ப் பத்திரிகையில் வந்தது. அதை விஸ்வநாதன் படித்துவிட்டு என்னைத் தேடி எங்கள் வீட்டுக்கு வந்தார். அது ஒரு நல்ல நட்பின் தொடக்கம். இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். சே. ப. நரசிம்மலு நாயுடு பள்ளியில் ஒரு இலக்கியக் கூட்டம் நடக்கிறது என்று இரண்டு பேரும் போனோம். அந்தக் கூட்டத்தின் இடைவேளையில் ‘எதுக்கு ரண்டு பேரும் வாங்க போங்கன்னு பேசிக்கிட்டிருக்கணும். என்ன சொல்றீங்க?’ என்று விஸ்வநாதன் கேட்டதாக ஞாபகம். ‘சரி நீ சொல்லுடா’ என்றேன் நான். அதிலிருந்து எங்கள் இரண்டு பேரின் நட்பும் கொஞ்ச காலம் இரட்டையராகத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது.



நாங்கள் போய்ச் சேர்ந்த இடம், நிறுத்தம் ஞானியுடைய வீடு. கோவை ஞானி படிப்பு ஆர்வமுள்ள எங்களை ரொம்பவும் ஊக்குவித்தார். எங்களுக்குத் தெரியாமல் இருந்த பல திசைக் கதவுகளைத் திறந்து வைத்தவர் ஞானிதான். மார்க்சியம், தத்துவம், தமிழ், தமிழ்ப் பண்பாடு என்கிற பல விஷயங்களை அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஞானி மாதிரியான அறிவுசார்ந்த ருசிகரமான பேச்சாளர் தமிழில் இல்லை என்று எனக்குத் தோன்றியது. பலநாள் சாயங்காலம் ஆறு மணிக்குக் கோவைச் சிதம்பரம் பூங்காத் திடலில் பேச ஆரம்பித்து இராத்திரி ஒன்பது மணிவரைக்கும் அவர் பேச்சைக் கேட்டு விட்டுப் பேச்சின் பரவசத்திலேயே நடந்து போயிருக்கிறேன். அந்த அளவு மாபெரும் மேதமை அவர் பேச்சில் வெளிப்படும். அதில் குறைந்த பட்சம்கூட அவருடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது என் அபிப்ராயம். ஞானியின் பார்வை என்பது அடிப்படையில் ஒரு மார்க்சியப் பார்வை. ஆனால் அந்த மார்க்சியப் பார்வை பல பின்னல்கள் கொண்டது என்று எனக்குத் தோன்றியது. அந்தப் பின்னல்களை எல்லாம் சகித்துக்கொள்கிற அளவு எனக்கு மன வலு இல்லை. அதனால் அவரிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தேன்.



பரிட்சை எழுதி முடித்ததும் எனக்குக் கிடைத்த முதல் வேலை சின்னக் கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி வேலை. வெல்டிங் ராடு, வெல்டிங் அக்ஸசரி எல்லாம் விற்கிற வேலை. அதில் ஆறுமாதம் வேலை செய்தேன். அப்போது நிப்போ பேக்டரியின் விற்பனைப் பிரதிநிதியா எனக்கு வேலை கிடைத்தது. அதற்கு ஊர் ஊராகச் சுற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு அந்த வேலையைவிடவும் ஊர் சுற்றும் வாய்ப்புத்தான் ரொம்பவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அப்போது பிரம்மராஜன் ஊட்டியில் வேலை பார்த்தார். அந்தச் சமயத்தில் நானும் விஸ்வநாதனும் ஒன்றாக இருந்து இலக்கிய விஷயங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். என் கவிதைகள் சில முக்கியமான இலக்கியப் பத்திரிகைகளாகிய ‘கவனம்’, ‘ழ’ ஆகியவற்றில் வந்திருந்தன. அதனால் அதிலெல்லாம் எழுதிக் கொண்டிருந்த பிரம்மராஜனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையோடு ஊட்டிக்குப் போய் அவரைப் பார்த்தேன்.



அவருடனான தொடர்பு இலக்கியரீதியாகவும் நட்புரீதியாகவும் ரொம்பவும் வலுவானதாக இருந்தது. அவர் மூலமாகக் கிடைத்த பல விஷயங்கள் என்னை இன்றைக்கு ஆளாக்கி இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய இலக்கியம் பற்றிய அறிமுகம். இன்னொன்று சங்கீதம் சம்பந்தமான நுட்பமான அறிவு. இதற்குப் பிரம்மராஜனுக்கும் அவர் மனைவி மீனாவுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். அப்புறம் பல புத்தகங்களைப் பிரம்மராஜன் சிபாரிசு பண்ணியிருக்கிறார். வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய முதல் தொகுப்பு முன்னாலேயே வந்திருந்தது. இரண்டாவது தொகுப்பு ஊட்டியில் இருக்கிற போதுதான் வந்தது. அது ‘வலி உணரும் மனிதர்கள்’ என்பது. அதனுடைய பின்னட்டைக் குறிப்பு எழுதியது நான்தான்.



அந்தக் கட்டத்தில் ‘ஸ்வரம்’ என்னும் பத்திரிகையை டி.எம்.நந்தலாலா என்கிற மருந்தாளுநர் கல்லூரி மாணவர் நடத்திக்கொண்டிருந்தார். அது Inland formatஇல் வந்து கொண்டிருந்தது. பிரம்மராஜன் ஊட்டிக்கு வந்தபோது ஒரு இலக்கிய வட்டம் உருவாக ஆரம்பித்தது. ‘ஸ்வரம்’ பழைய வடிவத்தை விட்டுவிட்டு ஒரு பத்திரிகையின் வடிவத்துக்கு வந்தது. பதினாறு பக்கம் உள்ள கவிதைப் பத்திரிகை. சில இதழ்கள் வந்து நின்றுவிட்டது. அந்த இடைவெளியைப் பூர்த்திசெய்வதற்காக ‘மீட்சி’ என்ற பத்திரிகையை பிரம்மராஜன், அவருடைய நண்பரான ஆர். சிவக்குமார், எத்திராஜ் அகிலன், ராஜாராம் எல்லாரும் சேர்ந்து தொடங்கினார்கள். அந்த இதழின் இருபது இருபத்தைந்தாவது இதழ்வரைக்கும் தொடர்ந்து அதற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். பிறகு என்ன காரணத்தினால் அந்த நட்பு போச்சு என்பது வாழ்க்கையில் நான் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள விரும்புகிற ஒரு ரகசியம்.



இதற்கிடையில் இந்தச் சமயத்தில்தான் எண்பது அல்லது எண்பத்தொன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன், தமிழ்ச் சிறுபத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி இருந்தன. அதன் முதல் கூட்டத் திற்கு நான் போயிருந்தேன். நாமக்கல் பக்கம் சேந்தமங் கலத்தின் காந்திநகர் என்ற இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது. பெங்களூரில் இருக்கும் ஜி.கே.ராமசாமி யின் சொந்த ஊர் அது என்பதால் கூட்டம் அங்கே நடந்தது. அங்கே பல இலக்கியவாதிகளைப் பார்த்தேன். பு.வ.மணிக்கண்ணன், தமிழவன் எனப் பலரை அங்கே பார்த்தேன். அதன் இரண்டாவது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் ஆத்மாநாமை முதன்முதலில் பார்த்தேன். அதற்கு முன்னால் ஒரு போஸ்ட் கார்டில் ஒரு கவிதையைப் பாராட்டி எழுதியிருந்தார், ‘ழ’ பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில். அந்தக் கவிதைதான் ‘வரலாறு’ என்று அவரால் தலைப்புவைத்து வெளியான ‘கையில் அள்ளிய நீர்’.



‘ஸ்வரம்’ நின்று ‘மீட்சி’ தொடங்கற அந்த இடைவெளியில கோவையிலிருந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்கிற தீர்மானத்துக்கு வந்தோம். ஞானி, அவருடைய நண்பர்களான ரத்தினம், அமரநாதன், அறிவன், ஆறுமுகம் எல்லாரும் சேர்ந்து ஒரு பத்திரிகையைக் கொண்டுவரலாம் என்று முடிவுசெய்தோம். அதற்கு முன்னாலேயே ‘பரிமாணம்’ என்று ஒரு பத்திரிகை வந்துகொண்டு இருந்தது. அதுவும் நின்றுபோனதுக்கு அப்புறம் நாங்கள் யோசிச்சு எடுத்த முடிவுதான் இன்னொரு பத்திரிகை கொண்டு வருவது. ‘நிகழ்’ அப்படீங்கற பேரை நான்தான் வைத்தேன். அதன் முதல் இரண்டு இதழ்களுக்கு நான்தான் ஆசிரியர். எனக்கு ஊர் ஊராகச் சுற்றுகிற தொழில் கிடைத்து அந்த வேலையை மேற்கொண்டதாலும் அந்தப் பத்திரிகையை அவர்கள் விரும்பினபடி கொண்டு வர முடியாது என்பதாலும் அந்தப் பத்திரிகை நான் விரும்பினபடி இல்லை என்பதாலும் விலகிக் கொண்டேன்.



உங்கள் கவிதைகளில் அப்பாவைப் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அவர் கொஞ்ச காலம் மார்க்சியச் சார்போடு இருந்ததாகச் சொன்னீர்கள்.



அதெல்லாமே அவருடைய வாழ்க்கையின் சின்னப் பகுதியில் ஒரு மின்னல் மாதிரி வந்து போனவைதான். அவருடைய பிரச்சினைகள் என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள முற்படவில்லை என்பது இப்போது எனக்கு ஐம்பது வயது ஆகும் இந்தச் சமயத்தில் பெரிய வருத்தமாக இருக்கிறது. அவர் நல்ல உழைப்பாளி. அவர் ஏதோ ஒரு கட்டத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இது வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகளை உண்டாக்கியது. நாங்கள் நான்கு பேர். அப்புறம் நான் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் என் தம்பி பிறந்தான். இது வீட்டில் எப்போதும் ஒரு நிம்மதியற்ற சூழலை உண்டாக்கியது. வசதியானதல்ல என்றாலும் பட்டினி கிடந்த குடும்பம் அல்ல. ஆனால் அவருடைய இந்தப் பழக்கத்துக்குப் பிறகு அந்த நிலைக்கும் போக வேண்டி வந்தது.



எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. சனிக்கிழமை ஸ்கூல் வச்சிட்டாங்கன்னா எனக்குப் பெரிய பதற்றம் வந்துவிடும். யூனிபார்முக்குப் பதிலா எல்லாப் பசங்களும் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. என்கிட்ட இருந்தது இரண்டு செட் யூனிபார்ம் மட்டும்தான். சனிக்கிழமையும் அதையே போட்டுக்கிட்டுப் போவதற்கு வருத்தமாக இருக்கும். அதனால் நான் ஒரு தந்திரம் செய்தேன். அப்பாவுக்கு யாரோ கொடுத்த ஒரு வேட்டியக் கட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து அதிகமாக லீவுவிட்டதால் எல்லாச் சனிக்கிழமையும் தொடர்ந்து ஸ்கூல் வச்சிட்டாங்க. எல்லா வாரமும் வேட்டியோட வருவதைப் பார்த்த என் ஆசிரியர் சோமசுந்தரம் என்னை விசாரித்தார். அவருடைய ஸ்கூட்டர்ல என்னை ஏத்திக்கிட்டுப் போய் பாம்பே டையிங் கடையில ஒரு சட்டையும் பேண்டும் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு வறுமை இருந்தது. எனக்குப் பின்னால் இருந்த பெண்கள் எல்லாரும் பள்ளிப் பருவம் தாண்டிக் கல்லூரிப் பருவம் வந்தாங்க. வயசுக்கு வந்திருந்தாங்க. இது பெரிய சிக்கலா இருந்தது. இதனால் அன்னைக்கு எனக்கு மாபெரும் எதிரின்னு தோன்றியது எங்க அப்பாதான். அந்தக் கோபத்தைப் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவருகிட்ட ஒருமுறையும் கோபத்தைக் காட்டியதே இல்லை. ஒரு தடவைகூட அவரை எதிர்த்துப் பேசியதில்லை. திட்டியது இல்லை. அவர் வந்தாருன்னா நான் இறங்கிப் போயிருவேன். அவர்கூட எனக்கு உறவே இல்லை. ‘பகை இல்லை அன்பைப் போலவே’.



இந்தப் பிரச்சினைகள் முற்றியபோது எங்க குடும்பத்தில் எல்லாரையும் அழச்சிட்டுக்கிட்டுத் தர்மபுரிக்குக் குடிபோனோம். ஒரு வருசம் அங்கே குடியிருந்தோம். என்னுடைய நண்பர்களான சிவக்குமார், பார்த்திபன் இவர்கள் எல்லாம் அங்கே இருந்தார்கள், ஆதரவு இருந்தது என்பதால் அங்கே போனோம். அந்த ஒரு வருசத்தில் அவர் மனம் திருந்தியோ குடும்பத்தின் மேல் பாசம் வந்தோ திரும்பவும் கூப்பிட்டார். அதனால் கோவை வந்தோம். கொஞ்சநாள் நல்லா இருந்தது. பிறகு மறுபடியும் அதே பழக்கங்கள். அதனால் அப்போது அயோக்கியத்தனமா குடும்பத்திலிருந்து விலக ஆரம்பித்தேன். அதிகமா வீட்டுக்குப் போவதோ காசு கொடுப்பதோ மாதிரியான காரியங்கள் எதுவும் செய்யவில்லை. அந்த வீட்டில் இருப்பதே நரகத்தின் நடுவில் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு.



அப்போது எல்லாம் என்னைக் காப்பாற்றியது என்னுடைய இலக்கிய ஆசைகள், சங்கீதம் போன்ற விசயங்கள்தான். அது என்னுடைய மனத்தில் மாறாத காயமாக இருந்தது. இன்றைக்கு எனக்கும் வயதாகி இந்த விசயங்களை எல்லாம் பகுத்துப் புரிஞ்சுக்கறதுக்கான பக்குவம் வந்த பிறகும்கூட அந்த வருத்தமும் வலியும் மாறல. இப்ப அவர் மேல கோபம் இல்லை, வருத்தம் இருக்கு. அவர் இறந்து போறதுக்குக் கொஞ்சம் கடைசியாப் பார்த்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவரை வேறு ஒரு கோணத்தில் யோசிக்க வைத்தவை. ‘நான் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தா மன்னிச்சிருடா.’ அது என்னை ரொம்பவும் தொந்தரவு செய்த வாசகம்.



விற்பனைப் பிரதிநிதியா எவ்வளவு நாள் வேலை செய்தீர்கள்?



நிப்போ வேலைக்குப் பின்னால் மைசூருக்குப் போனேன். அதற்கப்புறம் பொள்ளாச்சியிலுள்ள குவாலிட்டி ஸ்பின்னிங் மில்ஸின் விற்பனைப் பிரதிநிதியாத் திரிந்தேன். இப்படி ஒரு பத்து வருட காலம் சுற்றியிருக்கிறேன். இதில் கிடைத்த சம்பளத்தைவிடவும் தென்னிந்தியா முழுக்கப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான் இந்த வேலையில் இருக்க வைத்தது. அப்படித்தான் தமிழ், மலையாள மொழி எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்தது. பெரும்பாலான எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அது இந்தப் பயணங்களால்தான். என்னை இன்னும் கூரானவனா ஆக்கியது இந்தப் பயணம் தான். அப்புறம் சென்னைக்கு வந்து ஒரு ரெடிமேட் பேக்டரி தொடங் கினோம். அது நஷ்டமாச்சு. அந்தச் சமயத்தில்தான் என் கல்யாணமும் நடந்தது. வேற ஏதாவது பண்ணனும் அப்படீன்னு கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பத்திரிகை வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் சின்னப் பையனா இருக்கும்போது எழுத்தை நம்பிப் பிழைக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் இப்போது நான் பிழைப்பது எழுத்தை நம்பித்தான்.



உங்க இயல்புக்கு வெகுஜனப் பத்திரிகை வேலை பொருந்தி வந்ததா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?



பத்திரிகைத் தொழில் மேல இருக்கும் காதல்னால அந்த வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன்னு சொல்லமாட்டேன். எழுதத் தெரியும் என்கிற தன்னம் பிக்கை எனக்கு இருந்தது. நான் எழுதியிருக்கேன் என்பதற்கு அத்தாட்சிகள் இருந்தன. கட்டாயம் ஒரு வேலை வேண்டும் என்ற போது இயல்பாக என்னுடைய தேர்வு விற்பனைப் பிரதிநிதி என்பதாகத்தான் இருந்தது. என்னுடைய மனைவிதான் ‘உனக்குத்தான் எழுதத் தெரியுமே ஏதாவது பத்திரிகைக்கு முயற்சி செஞ்சு பாரு’ன்னு சொன்னாங்க. முதன் முறையா எனக்கு அந்த எண்ணம் வந்ததே அப்பத்தான். அதுக்கு முன்னால் வெகுஜனப் பத்திரிகையில் சின்னதாக் கட்டுரை மாதிரியான சில எழுதியிருக்கிறேன். வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது ‘குங்குமம்’ பத்திரிகை வளாகத்தில் ச. ம. பன்னீர்செல்வம் என்கிற நண்பர் இருந்தார். அவருகிட்ட ஒரு வேலை வேண்டும் அப்படீன்னு கேட்டபோது ‘குங்குமம்’ வளாகத்தில் விசாரிக் கிறேன்னு சொன்னார்.



அப்போது ‘தமிழன்’ என்ற நாளிதழ் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. அதற்கான விண்ணப்பம் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு என்னைத் தேர்ந்தெடுத்தவர் சின்னக் குத்தூசி என்கிற தியாகராஜன். அதற்குக் காரணம் தமிழினி வசந்தகுமார். அவர்கள் நடத்திய ‘புதுயுகம் பிறக்கிறது’ என்னும் பத்திரிகையின் முதல் இதழில் என்னுடைய கவிதைகள் வெளியாயின. அது பிரம்மாண்டமான தயாரிப்பாக இருந்தது. அதனால் எல்லா இடத்திலும் என்னுடைய பெயர் ஓரளவுக்குத் தெரிஞ்சது. சின்னக் குத்தூசிக்கும் என் பேர் தெரிஞ்சிருந்தது. அந்தக் கவிதைகள் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதுதான் எனக்கு வேலை வாங்கித்தந்தது. இலக்கியந்தான் அன்னைக்குச் சோறு போடறதுக்குத் தயாரா இருந்தது.



பத்திரிகைக்கு வந்த பிறகுதான் எனக்குள்ள ஒரு பத்திரிகையாளன் இருக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்தேன். மூணாவது நாளில் இருந்தே அந்தப் பத்திரிகையின் எடிட் பேஜ் எழுத ஆரம்பிச்சிட்டன். இது கொஞ்சம் மெல்ல மெல்ல என்னை ஒரு பொருட் படுத்தக்கூடிய ஆளா அந்த வளாகத்துக்குள்ளேயும் அப்புறம் பத்திரிகை உலகத்திலும் மாற்றியது. அந்த நாளிதழ் நிர்வாகக் காரணங்களால் ஒன்பது மாதத்தோடு நிறுத்தப்பட்டபோது என்னைக் குங்குமத்துக்கு மாற்றினார்கள். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமானதும் இனிமையானதுமான வேலை அமைந்தது. நிறையக் கதைகள் படிக்கலாம், வேற வேற விசயங்கள் தெரிஞ்சிக்கலாம். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் ஒரு கட்டத்தில் வெளியேற நேர்ந்த போது பத்திரிகைப் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது.



அந்தப் பத்திரிகையில் பெரிசாச் சாதித்தேன்னு சொல்ல முடியாது. எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களை வைப்பது அப்படிங்கிற மாதிரி சில செஞ்சேன். அது கீழான தரத்தில் இல்லாமல் கொஞ்சம் இலக்கியரீதியாகப் பண்ணலாம்னு நினைத்தேன். ஏன்னா, க. நா. சுப்பிரமணியமும் தியடோர் பாஸ்கரனும் சா. கந்தசாமியும் எழுதக் கூடிய ஒரு பத்திரிகையில் அதற்கான வாய்ப்பு இருந்தது. அதை நான் பயன்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர்கள் அனுமதித்தார்கள் என்பது முக்கியம். அப்படியான சுதந்திரத்தை எனக்குத் தந்தார்கள். அதைப் பயன் படுத்திக்கொண்டு சின்னச் சின்னத் தந்திரங்கள் எல்லாம் செய்து இரண்டு லட்சம் விற்கிற அளவுக்கு அந்தப் பத்திரிகையைக் கொண்டு போனேன். அப்போது எனக்கான ஒரு பாராட்டு விழாவும்கூட நடத்தினார்கள். அது தான் அந்தப் பத்திரிகை காலகட்டத் தோட சந்தோசமான விசயம்.



அதைவிட்டு வந்து ஒரு மூன்று மாதம் ‘குமுதம்’ பத்திரிகைக்குப் போனேன். வெளிப்படையான காரணம் எதுவுமே கிடையாது. குமுதத்தில் சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பது மட்டும்தான். முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவன் நான். என்னுடைய பணிக்குத் தகுதியான ஊதியம் இருக்கிறது என்னும் இரண்டு விசயங்கள் குமுதம் அழைத்ததில் எனக்குத் தெரிய வந்தவை. குமுதத்தில் கைகால் கட்டப்பட்ட ஒரு ஆள் மாதிரிதான் இருந்தேன். குங்குமம் வளாகத்தில் ஓரளவு சுதந்திரத்தோடு நான் இருந்திருக்கேன். எந்த மேட்டரையும் நான் தீர்மானித்த பிறகு வேண்டாம் என்று சொன்னது இல்லை. நான் எடுக்கும் முடிவை அவர்கள் பெரிதாகத் தடை செய்ததும் இல்லை. ஆனால் குமுதத்தில் அப்படியான ஒரு சுதந்திரம் எல்லாம் கிடைக்கவில்லை. அங்கே நாலு பேரில் ஒருவன் என்று இருப்பது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஏதோ ஒரு தத்தளிப்பில் இருந்தபோதுதான் என்னுடைய பூர்வாசிரமம் பற்றிய ரகசியம் வெளிவந்தது. நான் ஒரு மலையாளி என்பது தெரியவந்தது. ‘மலையாளம் சேனல் தொடங்குகிறோம். நீ வந்து பொறுப்பேத்துக்கணும்’ என்று அழைப்பு. அப்படி 1998 ஏப்ரல் மாதம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியராகப் பொறுப் பேற்றுக்கொண்டேன்.



குங்குமத்தில் நீங்கள் செய்தவை என்ன மாதிரியான மாற்றங்கள்?



ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு புதிய பகுதி தொடங்குவது. அப்புறம் நிறையப் புதிய ஆட்களைக் கொண்டு வருவது. இதெல்லாம் வந்தபோது இலவச விநியோகத்தின் ஆரம்ப கட்டமும் அன்றைக்குத் தொடங்கியது. ஆனால் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை. புத்தகம் வாங்குபவனுக்குக் கூடுதல் அலவன்சா ஏதாவது ஒரு பொருள் கொடுக்கப்பட்டதே தவிர அது பத்திரிகையின் உள்ளடக்கத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பல விசயங்களைத் தொடர்ந்து எழுத முடிந்தது. புதிய எழுத்தாளர்களைக் கொண்டுவர முடிந்தது. யுவன் சந்திரசேகரோட கவிதையைப் போட முடிந்தது. ஒரு தீபாவளி மலருக்கு இந்தியப் பெண் கவிஞர்கள் என்ற ஒரு தொகுப்பைக் கொண்டுவர முடிந்தது. ரொம்ப நாள் எழுதாமல் இருந்த விமலாதித்த மாமல்லனுடைய கதையைப் போட்டு அவரைத் திரும்பவும் வெளியே கொண்டுவர முடிந்தது. இப்படிச் சில விஷயங்கள். ‘குங்கும’த்துடைய சுபாவம் கதையைப் போடுவது, யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாத நடையில் சில கட்டுரைகளை வெளியிடுவது என்பதுதான். நான் பண்ணின அரவாணிகள் பற்றிய கட்டுரை, பாலியல் தொழிலாளிகள் பற்றிய கட்டுரை ஆகியவை எல்லாம் வாசகனுக்கு ருசிகரமாகவும் சில புதிய தகவல்களைச் சொல்வதாகவும் இருந்தன. அன்றைக்கு எனக்கும் சாதித்துப் பார்க்கணும் என்ற குறுகுறுப்பு இருந்ததனால நானும் வேற வேற விசயங்கள் பண்ணியிருக்கிறேன்.



என்னுடைய கட்டுரைத் தொகுப்புல மூன்று கட்டுரைகளைத்தான் அதிலிருந்து எடுத்துப்போட முடிந்தது. இன்னும் முக்கியமாக அதில் செய்த சில பேட்டிகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் என்னால் தேடி எடுக்க முடியவில்லை. குறிப்பா இளையராஜா, கமலஹாசன், எல்லிஸ் ஆர். டங்கன் இவர்களிடம் எடுத்த பேட்டிகள் ரொம்ப முக்கியமானவை. பத்திரிகையைப் பத்திரப்படுத்துகிற பழக்கம் இல்லாததால் அவற்றைத் தேடி எடுக்க முடியவில்லை. ‘குங்கும’த்திற்காக நான் செய்த இன்னொரு நல்ல விஷயம், நம்ம கண் முன்னால் தென்படுகிற சில பெண்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதுவது என்பது. அதற்கு எனக்கு முன் உதாரணம் Savoy என்கிற பத்திரிகையில் வந்த I believe என்ற ஒரு பகுதி.



இதற்காக நான்கு இண்டர்வியூக்கள் பண்ணினேன். சில்க் ஸ்மிதா, ஸ்ரீவித்யா, உன்னிமேரி என்கிற தீபா, காஞ்சனா ஆகிய நடிகைகள். சில்க் ஸ்மிதாவும் ஸ்ரீவித்யாவும் பல விஷயங்களை ரொம்பவும் வெளிப்படையாப் பேசியிருந்தாங்க. ஆனால் இவற்றை எல்லாம் வெளியிட முடியல. வெளியிட்டாப் பிரச்சினை ஆகும் அப்படீன்னு வெளியிட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அது ஒரு பத்திரிகையாளனா எனக்கு வருத்தம் தருகிற விஷயம். அதேபோல ஒரு நல்ல பேட்டி நடிகை காஞ்சனாவுடையது. அவங்க பெங்களூர் தாண்டி ஒரு கிராமத்தில் கோயில் சுத்தம் செய்கிற வேலைசெய்து வாழ்ந்துக் கிட்டிருந்தாங்க. அதையும் வெளியிட முடியல.



அந்தப் பத்திரிகை வேலையினால் எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. பத்திரிகையாளன் என்கிற முறையில் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. நிறைய இசைக் கச்சேரிகள் கேட்க முடிந்தது. இசை பற்றி நான் எழுதிய சில நல்ல கட்டுரைகள் அதில் வந்திருக்கு. மகாராஜாபுரம் சந்தானம் பற்றியும் பீம்சேன் ஜோஷி பற்றியும் எழுதிய கட்டுரைகள் எல்லாம் முக்கியமானவைன்னு தோணுது. இப்பவும் அந்த உணர்வு மாறவில்லை.



குங்குமம் பத்திரிகை வளாகத்தில் சில வருசங்கள் இருந்திருக்கீங்க. கலைஞர் அதில் எழுதுபவர். அவரோடான அனுபவம் ஏதும் உங்களுக்கு உண்டா?



நான் அடிப்படையில் திமுக சார்பான ஆள் இல்லை. திமுகவின் அரசியலோடோ பண்பாட்டினோடோ பெரிய அனுபவ நிலைப்பாடெல்லாம் எனக்கு இல்லை. அப்படியான கட்டத்துக்கு என்னைக் கொண்டு வந்த பெருமை ஜெயகாந்தனைச் சாரும். அது ஒரு பொக்கான இயக்கம் என்று அவர் போட்டு உடைச்சது மண்டையில் ஏறி இருந்தது. அவங்க இலக்கியம் பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் எதுவும் கிடையாது. ஒரு இயக்கம் என்கிற போது அதனுடைய பங்கைக் குறைச்சுச் சொல்லவே மாட்டேன். இந்த மொழி பேசுவதனால் நமக்கு ஒரு மதிப்பு இருக்கு. இந்தப் பண்பாட்டைச் சார்ந்தவன் என்பதால் நமக்கு ஒரு கௌரவம் இருக்கு என்பதைத் தெரிவிச்சது இந்த இயக்கம்தான். இந்த இயக்கம் ஒரு சீர்திருத்த இயக்கம், சமுதாய இயக்கம் என்கிற கோணங்களில் தான் பார்க்க வேண்டும். அந்தக் கோணங்களில் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.



இலக்கியம், திரைப்படம், நாடகம் ஆகிய ஊடகங்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றபடி அவற்றில் மாபெரும் விற்பன்னர்கள் கிடையாது. சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளுக்காகவும் அரசியல் பிரச்சாரத்திற்காகவும் இவற்றை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்தத் தேவை தீர்ந்ததும் அவற்றின் மேல் அவர்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு யாராவது கலைஞர் வசனத்திற்குச் சிலிர்ப்படைவார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஏன்னா காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிடுச்சு. அதுக்குப் பிறகும் இது தொடர்வது ஏன்? ஆதாரமான கொள்கைகள் எல்லாவற்றையும் இந்த இயக்கம் இழந்திருச்சி என்கிற போது இந்த இயக்கத்தினுடைய இன்றைய பங்கு என்ன? இந்த இயக்கத்தின்மீது மதிப்பு மரியாதை உள்ள எல்லாருமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.



இசையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?



நான் ஊட்டியில் படித்தபோது பரமேஸ்வரின்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவுங்க வீட்டுக்கு நான் ட்யூசன் போனேன். அவுங்க வீட்டில் எப்போதும் பாட்டுச் சத்தமாக் கேட்டுக்கிட்டே இருக்கும். எல்லாம் பஜனைப் பாட்டா இருக்கும். சின்னப் பையனா இருந்ததால என்னைக் கூட்டிக்கொண்டுபோய்க் கோயில் பஜனையில் பாடவைப்பாங்க. அப்படிப் பாடிப் பாடிச் சங்கீதத்தில் ஒரு ருசி வந்தது. அப்புறம் கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்தபோது சங்கீதம் கத்துக்கலாமுன்னு போக ஆரம்பிச்சேன். அது நடக்கல. அப்ப எனக்குச் சீனிவாசன்னு ஒரு நண்பன் இருந்தான். அவன் நல்லாப்பாடுவான். அதனால் நான் ஒழுங்கா லேபுக்குப் போனதவிடவும் ரெக்கார்ட் நோட் எழுதினதைவிடவும் எங்காவது பாட்டுக் கச்சேரி நடக்குதா, பாட்டுப் போட்டி நடக்குதான்னு தேடிப் போன நாட்கள்தான் அதிகம் இருக்கும். ஆனால் அதைக் கூர்மைப்படுத்திவிட்டவர் பிரம்மராஜன். லேசாக் கேட்டுப் பழகி இருந்த இந்துஸ்தானி இசையைப் பற்றிய பெரிய உலகத்தைத் திறந்துவிட்டது பிரம்மராஜன் தான். ஒரு தடவை தொத்திக்கிடுச்சின்னா மாறாத விஷயம் இசை என்பதால் அது தொடர்ந்து இருந்துக்கிட்டே இருக்கு.



நம்ம கர்நாடக சங்கீதத்தில் வளர்ச்சி, மாற்றம் என்று சொல்கிற மாதிரி விஷயங்கள் இருக்கிறதா?



நம்ம கலைகளில் ரொம்பவுமே பூரணமான கலைங்கிறது சங்கீதம்தான். அது முழுமை அடைஞ்சிருக்கு. அதற்கான வடிவம் எல்லாமே வந்து சேர்ந்திருக்கிறது. நம்முடைய சங்கீதத்தில் மிகப் பெரிய விஷயம் என்பது கீர்த்தனை பாடுவதுதான். மேற்கத்திய இசையில் சிம்பனி அப்படிங்கறதுக்கு இணையா இதை வச்சிக்கலாம். சிம்பனி வாத்தியங்களால் இசைக்கப் படுகிறது. கீர்த்தனை வாத்தியங்களாலோ வாய்ப்பாட்டினாலோ இசைக்கப்படுகிறது. அதனுடைய பெரிய வடிவத்தை அது அடைந்திருக்கிறது. ஏற்கனவே இருக்கிற அந்த வடிவத்தை நெருங்குகிற முயற்சியைத்தான் திரும்பத் திரும்ப எல்லாக் கலைஞர்களும் பண்ணிக்கிட்டிருக்காங்க. பல சமயம் நெருங்க முடியறதில்லை. அவுங்கவுங்களுடைய பாணியில் பண்ணிப் பார்க்கிறாங்க. அதனால ஒருபோதும் அது பழசு மாதிரி இருப்பதேயில்லை. ஒருதடவை மணி ஐயர் பாடிய மணிரங்கு ராகத்தை அடுத்த தடவை அவரே பாடும்போது அதே மணிரங்கு ராகம் அல்ல. ஒருதடவை எம்.டி.ராமநாதன் பாடின இந்தோளம் இன்னொரு தடவ அவர் பாடும்போது அதில் வேற வந்து சேர்ந்திருது. அந்த அம்சம்தான் தொடர்ந்து இந்தச் சங்கீதத்தை நிற்க வச்சுக்கிட்டு இருக்கு.



கீர்த்தனைகளில் பக்தி என்ற ஒரு அம்சம் மட்டுமேதானே மையமா இருக்கு?



அது இங்கு நிலவும் ஒரு கட்டுப்பெட்டித்தனம். கண்மூடித்தனமான ஒரு மரபு சார்ந்து நிலவுகிற ஒரு நடைமுறை. இந்துஸ்தானி இதைவிட மிகவும் நெகிழ்வான ஒரு இசை. அதில் பக்திக்கெல்லாம் பெரிய இடம் கிடையாது. சங்கீதத்துக்குத்தான் பெரிய இடம். நமக்கு நேர்ந்தது என்னன்னா பக்தி இலக்கியம் பரவலாக வந்துக்கிட்டு இருந்தபோது அதைப் பரப்புவதற்கு இசை ஒரு வாகனமாகப் பயன்பட்டது. பக்தி இலக்கியத்தின் அடிப்படையான கூறு நெகிழ்வுதான். தெய்வத்தின் முன்னால் தன்னை இழக்கும் நெகிழ்வு. சங்கீதத்தின் அடிப்படையான கூறும் இந்த நெகிழ்வுதான். இரண்டும் ஒன்று சேர்ந்தபோது பிரிக்க முடியாத மாதிரி ஆயிருச்சு. அதனால் பக்தி இருந்தால் சங்கீதம், சங்கீதம்னா பக்தி இருக்கணும் அப்படீன்னு எல்லாம் எதுவும் கிடையாது. தேஷ் ராகத்தில் பாடப்பட்ட எந்த தெய்வத் தோத்திரத்தைவிடவும் அந்த ராகத்தில் பாடப்பட்ட பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ என்ற பாட்டு உருக்கமானதுதான். சங்கீதத்தின் லட்சணம் முழுமையாக உள்ளதுதான்.



இன்றைக்குப் பழைய மனோபாவம் மாறிக்கிட்டு இருக்கு. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. கீதம் என்பது சங்கீதம்தான். அது பக்தியின் வாகனம் அல்ல. சங்கீதம் அதனளவில் முழுமையான விஷயம். பக்தி இருந்தாத்தான் சங்கீதம் இருக்க முடியும் என்பது திணிக்கப்பட்ட ஒரு விஷயம். அது இயல்பானது அல்ல. இன்றைக்கு சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் எல்லாம் வெறும் பக்திக்காக மட்டும் பாடவில்லை. மானுட அனுபவத்தை வெளிப்படுத்தப் பாடறாங்க. நான் சங்கீதத்தைக் கேட்பதும் அந்த அனுபவத்துக்காகத்தான்.



தமிழில் இப்போது நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அதில் நீங்களும் பங்கேற்கக் கூடியவராக இருக்கிறீர்கள். அவற்றின் போக்கு எப்படியிருக்கிறது?



நான் ஒரு எழுத்துச் சோம்பேறி. அதனால் எழுதுவதற்கான ஒரு நிர்ப்பந்தத்தைத் தரும் என்பதற்காக அதில் எழுதுகிறேன். நம்ம பார்வைக்கு அகப்படாத பல வாசகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள். அவர்களை எல்லாம் எட்டுவதற்கு இதுதான் எளிய சரியான மார்க்கம் என்பதாலும் நான் அதில் எழுதுகிறேன். அதோடு என் இணைய உறவு முடிகிறது. இணையம் என்பது இப்போதைக்கு ஒரு சைபர் சண்டைதான். அதில் பெரும்பாலும் வம்புகளும் வழக்குகளும்தான். எழுபது, எண்பதுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் நடந்துகொண்டிருந்த சண்டைகள் எல்லாம் இன்று இணையத்தில் நடக்கின்றன.



இன்னொன்று இணையத்தில் எழுதும் பலரும் ஒரு மாதிரி ரொம்பவும் பிற்போக்கான, கண்டனத்துக்குரிய அரசியலைச் சேர்ந்தவர்கள். பெரிய ஆக்கப்பூர்வமான ஒரு ஊடகம் அது. ஆனால் அதை நாம் மிகவும் மோசமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் என் அபிப்ராயம். அதில் ஒழுங்கான விவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ இடமில்லை. நான் ஒரு கட்டுரை எழுதறன்னா கட்டுரையின் அடிப்படை, நோக்கம் என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஏதோ ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு முரசு கொட்டி முழக்கிப் போரைத் தொடுக்கிறாங்க. அது இலக்கிய வளர்ச்சிக்கோ சிந்தனை வளர்ச்சிக்கோ உதவக்கூடிய விஷயம் இல்லைன்னு தோணுது.



இன்னொன்று இணையம் பெரிய சௌகரியங்களை நமக்குத் தருது. இதனால் நம்முடைய எழுத்து மாற்றங்களைச் சந்திக்கிறது. இப்பப் பென்சில்ல எழுதறதுக்கும் பேனாவில் எழுதறதுக்கும் கையெழுத்து வித்தியாசம் ஆகிற மாதிரியே நீங்க பேனாவில் எழுதும் ஒரு கதைக்கும் இணையத்தில் எழுதும் ஒரு கதைக்கும் சின்ன வித்தியாசங்கள் இருக்கு. வாக்கிய அமைப்புகள் போன்றவற்றில் எல்லாம். இது எழுத்தை இன்னும் கொஞ்சம் நீக்ஷீமீணீtவீஸ்மீ ஆன ஜீக்ஷீஷீநீமீss ஆ மாற்றும் என்று நான் நினைக்கிறேன். இதெல்லாம்தான் நமக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்.



ஆனால் இப்ப நான் பார்ப்பது என்னன்னா இணையத்தில் நடக்கும் பல விஷயங்களை அப்படியே காப்பி அடித்து நம்ம மொழியில் எழுதிவிடுகிறார்கள். இந்தத் தலைமுறை வாசகர்கள் பலருக்கும் இணையத்தோடு தொடர்பு உண்டு என்பதைக்கூட கவனத்தில் கொள்வதில்லை. தமிழில் வந்திருக்கும் பல கட்டுரைகளின் ஆதாரத்தை ஏதாவது இணையத்துக்குள்ள போனால் துருவி எடுத்துவிட முடியும். இது நல்லது அல்ல. சமீபத்தில் ஒரு கட்டுரையில், குறிப்பிட்ட பாடகி பாடும்போது சிறகு விரித்துப் பறப்பதுபோல் மனமே சிறகு விரித்து எழும்புகிறது என்று ஒருவர் எழுதுகிறார். இது அப்படியே இணையத்தில் வந்த இன்னொருவர் கட்டுரையில் இருந்து எடுத்த வரிகள். இணையத்தில் இருந்து தகவல்களை எடுப்பது சரி. இது ஒரு மனம் சார்ந்த படிமம். இதை ஒருத்தன் யோசிச்சுத்தான் எழுதியிருக்கிறான். அதனுடைய உரிமை அவனுக்குத் தான். அவனுடைய பேரையே சொல்லாமல் பயன்படுத்துவது இலக்கியத் திருட்டுதான். இந்த மாதிரியான இலக்கியத் திருட்டு தமிழில் நிறைய வருது. இணையம் மூலமா நிறைய வரவும் வாய்ப்பிருக்கு.



தமிழில் சிறுபத்திரிகைகள் எல்லாமே இடைநிலை இதழ்களாகிவிட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கோட்பாட்டு விவாதங்கள் போன்றவை இல்லாமலாகிவிட்டன. சிறுபத்திரிகைச் சூழல் பற்றிய உங்க பார்வை என்ன?



கொஞ்ச நாளுக்கு முன்னால் எனக்கு ஒரு அபிப்ராயம் ரொம்ப அழுத்தமா இருந்தது. தமிழில் இரண்டு இயக்கங்கள் தோத்து போச்சி. ஒன்று சிறுபத்திரிகை இயக்கம். இன்னொன்று திரைப்படச் சங்கங்கள். திரைப்படச் சங்கங்கள் கணிசமான பார்வையாளர்களை உருவாக்கல என்பது என்னுடைய குற்றச்சாட்டா இருந்தது. அப்படி உருவாகாது என்பது எனக்குப் பின்னால் தெரிஞ்ச விஷயம். அதே மாதிரி சிறுபத்திரிகைக்கு நூறு வாசகர்தான் இருப்பாங்கன்னா அவுங்க அத்தனை பேரும் தரமான வாசகர்களா இருப்பாங்க. இன்னும் பத்துத் தலைமுறை கடந்தாலும் இப்படி நூறு வாசகர்கள் இருப்பாங்க. ஆனா இந்த நூறு வாசகர்களிடமிருந்து தொடங்குகிற விவாதம், இந்த நூறு வாசகர்களின் பங்களிப்பாக விரியும். அது விரிகிறபோது உங்களுக்கு இடைநிலையாவும் இதழ்கள் தேவைப்படும். ஆனால் சிறுபத்திரிகைக்கான தேவையும் இருந்துக்கிட்டே இருக்கும். இடைநிலைப் பத்திரிகைக்கான தேவையும் தொடரும். தமிழில் ஆரம்ப காலச் சிறுபத்திரிகைகள் எல்லாமே இலக்கியம் சார்ந்தவைதான்.



ஆனால் எண்பது தொண்ணூறுகளில் பண்பாடு, அரசியல் சார்ந்த விஷயங்கள் எல்லாமே சிறுபத்திரிகைக்குள்ள வருது. இப்ப இந்த விஷயங்கள் சிறுபத்திரிகைக்குள்ள மட்டுமே ஒதுங்கிவிடுவது அவ்வளவு பொருத்தமா எனக்குத் தோணல. ஒரு தலித் பிரச்சினைன்னா அது சிறுபத்திரிகைக்குள்ள மட்டும் விவாதித்து முடிக்கக்கூடியதா எனக்குப் படல. அது விரிவான தளத்தில் விவாதிக்கப்படணும். அதற்கு இடைநிலைப் பத்திரிகைகள்தான் பொருத்தம். அதனால இரண்டுமே இருக்கும். அதேபோலத்தான் திரைப்படம். முதலில் திரைப்பட விழாக்கள் மூலமாத்தான் நல்ல படங்களைப் பார்க்க முடிந்தது. இன்னைக்குத் தொழில்நுட்ப வசதிகள் வந்திட்டதால எந்தப் படத்தையும் எப்பவும் பார்க்கலாம். இந்தக் கட்டத்தில் ஒரு நூறு பேர் சேர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் ஒரு மாற்றா இருக்கும். இது திரைப்படம் என்கிற கலையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கு உதவும். அதனால் இவை எல்லாமே இருக்க வேண்டியவைதான் என்பது இப்போதைய என் கருத்து.



திரைப்படமும் உங்களுக்கு ஆர்வமான துறை. உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்த அனுபவம் இருக்கிறது. தமிழ்ப் படங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயம்?



எனக்கு மூன்று காதல் இருக்கிறது. முதல் காதல் இலக்கியம். இரண்டாவது இசை. மூன்றாவது திரைப்படம். இந்த மூன்றுக்கும் ஆலாய்ப் பறந்த காலங்கள் உண்டு. ஒரு திரைப்படச் சங்கத்தைக் கோயம்புத்தூரில் தொடங்கி நடத்த ஆரம்பிச்சேன். அதற்கெல்லாம் கோயம்புத்தூரைச் சேர்ந்த என் நண்பர் அமரநாதன் என்பவர் பெரிய உதவியாக இருந்தார்.



திரைப்படச் சங்கம் நடத்திக்கிட்டிருந்தபோது சென்னையில் நடந்த Film appreciation course தான் எனக்குப் பெரிய திருப்பம். ராண்டர்கை, வி. கே. நாயர், சத்தீஸ் பகதூர் இவர்கள் எல்லாம் வகுப்பெடுத்தார்கள். அது ஒரு பெரிய உலகத்தைக் காட்டியது. தமிழில் இதுவரை சினிமாவே வரல அப்படீன்னு அப்ப எனக்குத் தோணுச்சு. இங்கே சினிமா என்பது ஆரம்பத்திலேயே பெரும் தோல்வி. இன்னைக்கும் சினிமா இண்டஸ்ட்ரி அப்படீன்னுதான் சொல்றாங்க. சினிமாவை ஆர்ட்ன்னு சொல்றதில்லை. அதனாலதான் இங்க சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர்னு ஒரே நட்சத்திர ஆதிக்கம். சினிமா என்பது இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு முழுமையான கலை. அப்படியான ஒரு பெரிய இயக்குநர் தமிழ் சினிமாவில் வரவில்லை. அப்படி வருவதற்கான வாய்ப்பு இனிமேல் வரலாம்.



நான் பார்த்த எந்தச் சினிமாவிலும் தமிழ் வாழ்க்கை இதுவரைக்கும் காண்பிக்கப்படவில்லை என்பது தமிழ் சினிமாவின் மாபெரும் குறை. ஒரு மாதிரி நடுத்தரமான அல்லது பெரிய, கலை என்கிற உரிமை பாராட்டுதல் இல்லாத மலையாளப் படங்கள் எல்லாவற்றிலுமே அடிப்படையான சில விஷயங்கள் இருக்கும். அவனுடைய வீடு எங்க இருக்கு, எந்த நிலத்தில் நிகழுது, அவன் என்ன மொழி பேசறான், அவனுடைய தொழில் என்ன என்கிற எல்லாமே இருக்கும். தமிழ் சினிமாவில் இதெல்லாம் வருவதே இல்லை. இதெல்லாம் ஒரு கலையின் அடிப்படை விஷயங்கள். கண்முன் காட்டி நம்ப வைக்கிற காட்சிக் கலைக்கு இதெல்லாம் அவசியம் தேவை. இதைப் பற்றிய பொதுஅறிவுகூடப் பார்வையாளனுக்கு வழங்கப்படவேயில்லை. அப்படியான ஒரு அறிவு அவனுக்கு வந்திருக்குமானால் இப்படியான படங்கள் ஓடியிருக்காது. இப்பக் கொஞ்சம் கேள்விகள் கேட்கிற சூழல் வருது. எங்க நடக்குது, ஏன் நடக்குது, எந்தச் சாதிக்காரன், என்ன தொழில் செய்யறான், இவன் வயசு என்ன, நிறம் என்ன இத்தனை கேள்விகளும் இருக்கு. ஒரு நாவல் எழுதும்போது இத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாவலாசிரியன் பதில் சொல்றானே. இரண்டரை மணி நேரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு படத்துக்கு அந்த நியாயமே கொடுக்கப்படல என்பது ஜனநாயகக் கலையின் ஜனநாயக விரோதப் போக்குதான்.



உங்கள் அத்தை மலையாளம் எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்கன்னு சொன்னீங்க. நீங்க எப்ப மலையாளம் கத்துக்கிட்டிங்க?



எனக்கு மலையாளம் பேசத் தெரியும். பேசினாப் புரிஞ்சிக்கத் தெரியும். எஸ்எஸ்எல்சி முடிக்கிற வரைக்கும் ஒரு வரிகூட எழுதப் படிக்கத் தெரியாது. நான் அன்றைக்குப் பேசின மலையாளத்தில் தமிழ் இருக்கும். அதைத் தமிழாளம் என்று சொல்லலாம். எஸ்எஸ்எல்சி முடிச்சபோது இரண்டு தீர்மானங்களுக்கு வந்தேன். ஒன்று கோயம்புத்தூரில் எனக்குத் தெரியாத தெருக்களே இருக்கக் கூடாது. அப்பத்தான் நான் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் முழுக்கச் சுத்தி என்னுடைய புவியியல் அறிவை விருத்திசெய்துகொண்டேன். இரண்டாவது ஏதாவது மொழி கற்றுக்கொள்வது என்பது. அதுக்காக இஸ்கஸ் நடத்திய ரஷ்ய, இந்தி மொழி வகுப்புகளுக்கெல்லாம் போய்ச் சேர்ந்தேன். இந்தியில் முதல் கட்டப் பரிட்சை வரைக்கும் போனேன். அப்புறம் விருப்பம் குறைஞ்சிடுச்சி. ரஷ்ய மொழிய மூணாவது நாளே நிறுத்திட்டேன். ஏன்னா அதில் மக்கிப்போன பைன் மரக் காடுகளை உடைய ஸ்டெப்பிப் புல்வெளியின் வாசனை இருந்துக்கிட்டே இருந்தது. அந்த மாதிரியான வாசகங்கள் ரஷ்யப் புத்தகங்களிலிருந்து வரும். எனக்கு இந்த மொழி சரிவராது அப்படீன்னு தோணிருச்சு.



என்னால் பேச முடிகிற, எனக்குப் புரிகிற மொழியக் கத்துக்கிட்டா என்னன்னு எனக்குத் தோணுச்சு. அப்படித்தான் மலையாளத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக் கத்துக்கிட்டேன். சொற்கள் எனக்குத் தெரியும். வாக்கியங்களின் அமைப்பு முறை எனக்குத் தெரியும். அதனால் பெரிய சிக்கல் இல்லாமல் கத்துக்க முடிந்தது. அப்பவும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. மெல்ல மெல்ல மலையாள இலக்கியங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதில் என்னுடைய மொழி அறிவு கொஞ்சம் வளர்ச்சி அடைந்தது. கொஞ்சம் தைரியம் வந்ததற்கப்புறம் மொழி பெயர்ப்புகளில் ஈடுபட ஆரம்பித்தேன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு. அப்புறம் சூர்யா டிவியின் செய்தி ஆசிரியர் பொறுப்புக்கு வந்த பின்னால் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தேன். இதுவரைக்கும் ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு ஐம்பது அறுபது கூட்டங்கள் மலையாளத்தில் பிரசங்கிச்சிருக்கேன்.



மொழிபெயர்ப்புக்கான விஷயங்களை எப்படித் தேர்ந்தெடுக்கறீங்க? மொழிபெயர்ப்புக்கென்று என்ன மாதிரி கொள்கைகள் வச்சிருக்கீங்க?



மொழிபெயர்ப்பு என்பது என்னுடைய ஆர்வம் சார்ந்த விஷயம். பின்னால் சில கட்டங்களில் தேவை சார்ந்தும் செய்திருக்கிறேன். என்னுடைய ரசனை சார்ந்தவை, என் மனப்போக்குக்கு உகந்தவை என்றுதான் செய்திருக்கிறேன். நான் சொல்லணும் என்று நினைத்துத் தேவையில்லாத தயக்கத்தினாலும் பயத்தாலும் சொல்லாமல் விட்ட விஷயங்களை வேறு யாராவது அழுத்தமாகவும் செறிவாகவும் சொல்லியிருந்தாங்கன்னா அவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்றபடி மொழி பெயர்ப்பு என்னுடைய தொழில் அல்ல.



இந்த மொழிபெயர்ப்பு படிப்பவனுக்கு அதனுடைய சரியான அர்த்தத்தில் புரியணும் என்பதைத்தான் பிரதானத் தேவையாக நான் நினைக்கிறேன். மலையாளத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தைத் தமிழ் வாசகன் ஒருவன் படிக்கிறான். அதனால் தமிழில் அவனுக்குத் தெளிவாப் போய்ச் சேரணும் என்பதுதான் என் முதல் நோக்கம்.



அடுத்து மொழிபெயர்க்கும்போது எந்த அம்சத்துக்கு நியாயமாக இருக்கணும் என்பது முக்கியம். கவிஞனுக்கு நியாயமா இருப்பதா கவிதையின் உள்ளடக்கத்துக்கு நியாயமா இருப்பதா? இது அவ்வப்போது தீர்மானிக்க வேண்டிய விஷயம். சில சமயம் கவிதைகளில் கவிஞனுக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். சச்சிதானந்தன் மாதிரியான கவிஞருடைய கவிதையை நான் மொழிபெயர்க்கும்போது கவிதைக்கு நியாயமாக இருப்பதைவிடவும் கவிஞனுக்கு நியாயமாக இருப்பதுதான் நல்லது. ஏன்னா அவருடைய அரசியல், பண்பாடு எல்லாம் அவர் கவிதைக்குள்ள இருக்கு. சில சமயம் கவிதைக்கு நியாயமாக இருக்க வேண்டி வரும். மலையாளத்தின் முக்கியப் பக்திக் கவியாகிய பூந்தானத்துடைய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்க்கும்போது அதில் கவிதைக்குத்தான் நியாயமாக இருக்க முடியும். ஏன்னா கவிஞரைப் பற்றிய எந்த விவரமும் எனக்கு இல்லை. இது எல்லாவற்றையும்விடப் பிரதானமாக நான் நினைப்பது அது என்ன தொனியில் இருக்கிறதோ அந்தத் தொனியை என் மொழிக்குக் கொண்டுவருவது என்பது. அது நான் என் மொழிக்குச் செய்யும் ஒரு பங்களிப்பு. இன்னொரு புதிய குரலை என் மொழியில் ஒலிக்கவிடுகிறேன் என்பது.



மலையாள இலக்கியம் ஓரளவு தமிழில் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் எந்த அளவு மலையாளத்தில் வந்திருக்கின்றன?



நாம் கொள்முதலில் நியாயமாக இருக்கிறோம். விற்பனையில் அநியாயமாக இருக்கிறோம். அதற்குக் காரணங்கள் உண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது எளிது. மலையாளம் இலக்கணச் சுத்தமாகத் தெரியாமல் மலையாளம் படிக்க மட்டும் தெரிந்த ஒருவர் தமிழுக்கு மொழிபெயர்த்துவிட முடியும். பெரும்பாலும் இப்போது நடப்பது அதுதான்.



நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதிலும் நம்பகமான மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய பெயர்கள் மிகக் குறைவு. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கிற பலதையும் கதைகள் என்றுதான் சொல்ல முடியுமே தவிர இலக்கியப் படைப்பு என்று சொல்ல முடியாது. சுரா என்று ஒருவர் பஷீர் எழுத்துக்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பைப் படிச்சீங்கன்னா தமிழில் ஒரு பத்தாந்தர எழுத்தாளனுக்குக் கீழதான் பஷீர வெப்பீங்க.



மலையாள இலக்கியம் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தில் மலையாள மொழியை மாற்றி அமைத்தது மூன்று பேர். மார்த்தாண்ட வர்மா, ராமராஜ பகதூர் என்ற நாவல்களை எல்லாம் எழுதிய சி.வி.ராமன்பிள்ளை முதலாமவர். இரண்டாவது வைக்கம் முகமது பஷீர். மலையாளத்துக்குள்ள ஒரு மலையாளத்தை உருவாக்கியவர் அவர். மூன்றாவது ஓ. வி. விஜயன். ஆனால் பஷீரை ஒரு கதைக்காரனாகக் காட்டுகிற மொழிபெயர்ப்புகள்தான் தமிழில் வந்திருக்கு. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகிற கவிதைகள் மாதிரியானவை ஏற்கனவே தமிழில் நிறைய இருக்கு. நம்மகிட்டக் குப்பை இருக்கு. அப்புறம் எதற்கு வெளியிலிருந்து காசு கொடுத்துக் குப்பையை வாங்கணும்?



இதில் மலையாளிங்க ரொம்பக் கவனமா இருக்காங்க. ரொம்ப முக்கியமான புத்தகமாத் தேர்ந்தெடுத்துப் பண்றாங்க. இன்றைக்குக் கொஞ்சம் நிலைமை மாறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு ரொம்பவும் குறைவுதான். எனக்குத் தெரிஞ்சு தமிழில் இருந்து ‘சித்திரப்பாவை’ என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஞானபீடப் பரிசு பெற்ற எல்லா நாவல்களையும் மலையாளத்தில் கொண்டுவரும் திட்டத்தில் டி. சி. புக்ஸ் அதை மொழிபெயர்த்தாங்க. அது ஒரு பதிப்பைத் தாண்டிப் போகவே இல்லை. ஏன்னா அதற்கு மிக மோசமான விமர்சனங்கள் வந்தன. இந்தப் புத்தகத்தினுடைய நூறு மடங்கு எடையுள்ள புத்தகங்கள் மலையாளத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணராயர் என்பவர் விமர்சனம் எழுதினார். அதனால் மொழிபெயர்ப்பு என்பது அங்கே தேர்வு சார்ந்தது. விற்பனை வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே ஒரு புத்தகத்தை வாசகன் தலையில் திணிப்பது என்பது இலக்கிய சர்வாதிகாரம்தான்.



பிறந்ததில் இருந்து நாற்பது வருசங்களுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் வசித்த நீங்கள் தற்போது திருவனந்தபுரம் வாசியாக இருக்கிறீர்கள். இரண்டு நில வாழ்க்கை அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? பொருந்திப்போவது சுலபமாக இருக்கிறதா?



நான் இப்ப ரண்டும்கெட்டான் நிலைமையில் இருக்கிறேன். தமிழ்நாட்டை விட்டுப் போனா நான் மலையாள எழுத்தாளனாக ஆகிறேன். கேரளாவில் இருக்கும்போது தமிழ் எழுத்தாளன் ஆகிறேன். அந்த மாதிரியான ஒரு கட்டம் எனக்கு. அப்புறம் திருவனந்தபுரம் என்பது மலையாளக் கலாச்சாரத்தினுடைய பிடிவாதக் கூறுகள் உள்ள ஒரு இடம் கிடையாது. இது ஒரு தளர்வான தலைநகரம். இங்கே இருக்கும் கலாச்சாரக் கூறுகள் பலவும் தமிழைச் சார்ந்தவை. அதனால் எனக்குப் பெரிய வித்தியாசம் எல்லாம் தெரியவில்லை. பிறந்து நாற்பது வருசங்களுக்கு மேல் வாழ்ந்தது தமிழின் நீரும் நிலமும் சார்ந்த வாழ்க்கை. அது மாறிடாது. சாப்பாட்டு முறையில் சின்ன மாற்றங்கள் இருக்கலாமே தவிர வேற ஒன்னும் மாறல.



****

Pramil.












பிரமிள்

வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 7:09 AM
வகை: அறிமுகம், பிரமிள்



(பிரமிள் 1939-1997. தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 20.04.1939-ல் இலங்கைத் திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள காரைக்குடியில் 6.01.1997-ல் மறைந்தார்.



தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த 'எழுத்து' பத்திரிகையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் அவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.



நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமைபடைத்தவர்; இவரது ஆன்மிக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. 'படிமக் கவிஞர்' என்றும் 'ஆன்மிகக் கவிஞர்' என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்.



பிரமிளின் வாழ்நாளில் வெளியான நூல்கள்: கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் (கவிதைத் தொகுப்புகள்), லங்காபுரி ராஜா (கதைத் தொகுதி), ஆயி(குறு நாவல்), ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை (சமூகவியல் விமர்சனம்), ஊழல்கள், விமர்சனாஸ்ரமம், விமர்சன மீட்சிகள் (விமர்சனம்), படிமம்(தொகுப்பாசிரியர்),



புதன், 10 ஆகஸ்ட், 2011

Sangam..Tamil..

காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்




பிரபஞ்சன்







பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1



தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.



நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.



இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.



சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.



சில காதலர்களை நாம் சந்திக்கலாம்.



ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)



குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.



காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.



‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’



- குறுந்தொகை



இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.



சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.



‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’



பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.



குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.



பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.



தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.



இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.



சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.



இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.



களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.



அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.



உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.



மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.



பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார்.



குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.



‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.



காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’



இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.

இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)



தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.



சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.



காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.



இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.



சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.



வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .



ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.



தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.



காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.



திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.



கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.



ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.



கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.



“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”



கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?



பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.



சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.



‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.



வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.



சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.



சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.



2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.



தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.



சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.



தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம், பதிப்பு 1989.



Last Updated ( Wednesday, 20 April 2011 13:02 )

Prabanchan.

பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது




பிரபஞ்சன்



நானும், என் தங்கை பானுவும், தம்பி மூர்த்தியும் எங்கள் வீட்டு நடையில்தான் விளையாடுவோம். மூன்று இடங்களில் விளையாடுவது எங்களுக்குப் பிடிக்கும். ஒன்று நடை. எத்தனை மணிநேரம் விளையாடினாலும் அம்மா எங்களைத் தடையே பண்ணாது. குழந்தைகள் எப்போதும் தன் கண்முன்னே விளையாடிக்கொண்டு இருக்க வேண்டும். அடிக்கடி துண்டு எடுத்து வந்து, எங்கள் வியர்வையைத் துடைத்துவிட்டுச் செல்லும். அப்பாவின் துண்டு. அதில் வீசும் சுருட்டு மணம் எனக்குப் பிடிக்கும். இரண்டாவது இடம், வீட்டுப் புறக்கடை. பெரிய நிலப்பரப்பு இல்லை. ஒரு கிணறு. வலது ஓரத்தில் கழிப்பறை. கிணற்றை ஒட்டி எட்டுமுழ வேட்டியை அகல விரித்தது மாதிரி ஒரு பிரத்யேக இடம். துவை கல் மிகவும் பெரிசு. ஒளிந்து பிடியாட்டம் விளையாட மிகவும் சௌகர்யம்.



பெரிய கல் எங்களைக் காட்டிக் கொடுக்காது. அடுத்த வீட்டு நுணா மரம், தன் பரட்டைத் தலை முழுதையும் எங்கள் வீட்டுப் பக்கமே சாய்த்துக்கொண்டிருக்கும். அம்மா, ஒரு முல்லைக் கொடி போட்டிருந்தது. அம்மாவுக்குக் கோபம் வர ஒரே காரணம், பந்தல் காலை நாங்கள் தட்டிச் சாய்க்கும் போதுதான். கூடுமானவரை, நாங்கள் எங்கள் அம்மாவுக்குக் கோபம் வருவிப்பதில்லை. மூன்றாவது இடம், எங்கள் தெரு முனையில் இருக்கும் தோட்ட வாசலில் இருந்த கொடுக்காப்புளி மற்றும் மகிழ மரத்தடி. அதிகாலையில், அணில் கடித்துப் போட்ட கொடுக்காப்புளிக்காயைப் பொறுக்க ஓடுவோம். அப்படியே மகிழ மரத்தின் அடியில் சிந்திக் கிடக்கும் மகிழம் பூக்களைத் திரட்டிக் கொண்டு வருவோம். மகிழம் பூக்களைக் கோர்த்து பானுவின் தலையில் வைக்கும் அம்மா.



எனக்கு எட்டு வயதும், பானுவுக்கு ஐந்து வயதும், மூர்த்திக்கு நான்குமாய் இருந்தோம். எங்கள் மூவர் விளையாட்டின் போது, நாலாவதாக ஒருவர் விளையாடுவதை நான் அறியவில்லை. அறிந்து கொள்ளும் வயதும் இல்லை. நாங்கள் ஒளிந்து விளையாடும்போது மரணமும் எங்களோடு ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது. மகிழம் பூக்களை நாங்கள் திரட்டும்போது அது எங்களை வேடிக்கை பார்த்திருக்குமோ? இருக்கும். அதுவும் எங்களோடு சேர்ந்து சுளைகளைத் திரட்டிக் கொண்டு போயிருக்குமோ? இருக்கும். இரவு நேரங்களில் முல்லைப் பந்தல்கால் கீழே விழுந்து கிடப்பதை விடிந்து நாங்கள் பார்ப்போம். பானுதான் சட்டென்று ஓடிப்போய், காலை நிறுத்துவாள். தரை மண் படிந்த கொடியின் முதுகைத் துடைத்துவிடுவாள். பானு, அம்மாவைக் கொண்டு வந்ததாக அம்மா சொல்லும். பானுவுக்கு, இரவில் வந்து பந்தக்காலைத் தள்ளிவிட்டுப் போனது பக்கத்து வீட்டு நுணா மரப் பேய்தான் என்பதில் அசாத்தியமான நம்பிக்கை. நாங்கள் கைரேகை மறையும் நேரத்துக்கு மேல், தோட்டத்துக்குப் போக மாட்டோம். பேய், விளையாடும் நேரம் அது.



பானுவின் புகைப்படம் எங்கள் வீட்டில் வெகு காலம்வரை இருந்தது. ஒரு கழுத்தளவு கிருஷ்ண பொம்மை அவள் பக்கத்தில் இருக்கும். கிருஷ்ணர் தோளில் கைவைத்துக்கொண்டு சிரித்தபடி பானு நிற்பாள். பானுவின் முகம் அம்மாவுடையதல்ல. லேசான அப்பா சாயல். பள்ளம் விழுந்த முகவாய். பெரிய கண்கள். வெற்று மார்பில் சங்கிலி தொங்கும். மூர்த்தியைப் படம் எடுக்க வாய்க்கவில்லை போலும். அன்றைய தமிழர்கள் அனேகமாக இரண்டு முறை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். திருமணத்தில் ஒரு முறை. மரணத்து உடம்போடு ஒரு முறை. என் தம்பி மூர்த்தி படம் எடுக்கப்படவில்லை. தேவைப்படவில்லை போலும். அம்மா, ஒரு இடுப்பில் பானுவையும், ஒரு இடுப்பில் மூர்த்தியையும் வைத்திருக்கும். பழுத்துத் தொங்கும் பலா மரம் போலிருக்கும் அம்மா.



கோடை விடுமுறை வந்தது. கோடை விடுமுறை என்பது முழுப் பரீட்சைக்குப் பிறகு வரும் மூன்று மாத விடுதலை. வாத்தியார்களின் சகல அதிகாரங்களும், மூர்க்கங்களும் பறிக்கப்பட்டு, சற்றேறக் குறைய தெருப்பூனைகள் மாதிரி, வீதிகளில் அலைவார்கள். கோடைவிடுமுறை என்றால், எனக்குத் தாத்தா வீடுதான். விருத்தாசலத்தில் தான் என் தாத்தா வீடு. மேட்டுத் தெருவில் இருந்தது. இந்த வீட்டின் விசேஷம், அதன் தோட்டம்தான்.பிரமாண்டமான தோட்டம். அங்கும் ஒரு கிணறு இருந்தது. துவைகல் இருந்தது. அதன் அருகே, எங்களுக்குச் சொந்தமான பெரிய இலந்தை மரமும், கல்யாண முருங்கையும் இருந்தது. அப்புறம், பறக்கும் வர்ணங்கள், எங்கள் ஊரில் நான் பார்க்காத பறவைகள். முதல் முதலாக அந்தத் தோட்டத்தில்தான் பாம்பைப் பார்த்தேன். அப்புறம் எனக்கு விளையாட்டுத் தோழியாக மாதவியும் அங்கு இருந்தாள்.



விடுமுறைக்கு முதல்நாள் என் தாய்மாமன் பழமலை புதுச்சேரிக்கு வந்திருந்தார். விருத்தாசலத்தில் பழமலை என்ற பேர் பலருக்கும் உண்டு. மன்னார்குடியில் ராஜகோபாலன் மாதிரி. (தி.ஜானகிராமன் இந்தப் பெயர்ப்பன்மையை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார்) கவிஞர் பழமலையின் தாய்மாமன் வீடும், எங்கள் தாத்தா வீட்டுக்குப் பத்துவீடு தள்ளி இருந்தது. அந்த வீட்டுக்கு எதிரில் இரண்டு கறுப்பு நிற வெள்ளாடுகள் எப்போதும் இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. விருத்தாசலத்துக் கோயில் சிவனுக்குப் பழமலைநாதர் என்று பேர்.



மாமா திரும்பும்போது, நானும் அவருடன் தாத்தா வீட்டுக்குப் புறப்பட்டேன். உறவினர் வீட்டுக் கல்யாணத்தை முடித்துக்கொண்டு பின்னால் அப்பாவும் அம்மாவும் பானுவும் மூர்த்தியும் பிறகு விருத் தாசலத்துக்கு வருவதாகத் திட்டம். அம்மா என் துணிச் சுமையைப் பையில் அடுக்க ஆரம்பித்தது. பானுவின் முகம் சுண்டிப் போயிற்று. "நானும் அண்ணன் கூடப் போறேன்" என்றது. "சூ. . . குழந்தைகள் தனியாப் போறதாவது. அம்மா கூடத்தான் வருவியாம்" என்றது அம்மா. தம்பி பழமலையிடம், "குழந்தையைப் பார்த்துக்கோ. . . புதனும் சனியும் எண்ணெய் தேய்ச்சுவிட அம்மாகிட்ட சொல்லு. . ." என்றது, "தனியா கினியா வெளியில போயிடப் போறான்" என்று நூறு முறை சொல்லியது. பழமலை சிரித்துக் கொண்டார். நான் புறப்படும்போது, எங்கிருந்தோ ஒரு நாய்த்தோல் பந் தொன்றைக் கொண்டுவந்து என்னிடம் தந்தது பானு. பாருங்களேன். இத்தனை காலமும் நான் பந்தைத் தேடித் திரிந்திருக்கிறேன். அவள் ஒளித்து வைத்திருக்கிறாள். இப்போது எடுத்துக்கொண்டு வந்து தருகிறாள். அம்மா என் பாக்கெட்டில் பணம் வைத்தது. என் நெற்றியில் முத்தம் வைத்தது. அம்மா வெற்றிலையோடு கிராம்பு போடும். பானு அழுதுகொண்டே தெரு முனைவரை வந்தாள். மூர்த்தி, இடுப்பில் இருந்துகொண்டே எனக்கு 'டாடா' காட்டினான். பானு அழுதது எனக்குச் சிரிப்பு சிரிப்பாய் இருந்தது. அம்மா அப்பா இல்லாமல், நான் ஊருக்குக் கிளம்பினேன். நான் பெரியவன் ஆகிவிட்டேனாக்கும். நாய்த்தோல் பந்து, வெள்ளையாக, புதுசுக்கென்று இருக்கிற ஒரு தனி வாசனையோடு இருந்தது.



கர்ணம் பக்கிரிசாமிப்பிள்ளை என்பது என் தாத்தாவின் பெயர். பக்கிரிசாமி கிராமணிதான் அவர். கிராமணி தாழ்ந்த சாதியாம். ஆகவே தன்னைப் பிள்ளையாக ஆக்கிக்கொண்டார். கணக்குப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அது சம்பந்தப்பட்ட அச்சிட்ட பெரிய பெரிய தாள்கள், பைண்ட் செய்யப்பட்ட நோட்டுகள் வைத்திருப்பார். ஒரு சாய்வு நாற் காலியில், நீண்ட பலகையின்மேல், 'பேடை' வைத்து எழுதிக்கொண்டு இருப்பார். வீட்டில்தான் வேலை. துறை சார்ந்த தொழிலாளர்கள் அளவைச் சங்கிலி, தடிகளோடு வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். தாசில்தார், ஜமாபந்தி நடக்கும் போதுமட்டும் தாத்தா, புத்தகக்கட்டுகளை வெட்டியானோ, தலையாரியோ சுமந்து வர, குடை பிடித்துக் கொண்டு கச்சேரிக்குப் புறப்படுவார். தாத்தாவுக்கு நொண்டிக் கணக்குப் பிள்ளை என்றும் ஒரு பேர் இருந்தது. நான் பிறந்த அன்றே, அவர் பயணம் செய்த வண்டி குடை சாய்ந்து அவர் கால்கள் உடைந்து போயின. இரண்டில் ஒன்று சரிப்படவே இல்லை. ஆகவே விந்தி விந்தி நடந்து போவார். என் 'ஜாதகம்' அப்படி.



தாத்தா, ஜில்லாவிலேயே பெரிய ஜோஸ்யர். அவர் சம்பாதனை என்பது ஜோஸ்யத்தில்தான். எப்போதும், தெருவை ஒட்டி இருந்த மூன்று திண்ணைகளிலும் ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருப்பார்கள். குறிஞ்சிப்பாடி, முன்னஞ்சாவடி, நெய்வேலி, இந்தப் பக்கம் தொழுதூர் முதலான பல இடங்களில் இருந்தும் மக்கள், ஜாதகக் காகிதங்களுடன் வருவார்கள். குழந்தைகள் பிறந்தால், ஜாதகம் கணிப்பார். வருபவர்கள் வாழை இலைக்கட்டுகள், பூசணிக்காய், சுரைக்காய், சுண்டைக்காய், மற்றும் வாழைப்பழம் மரியாதைகளோடு வருவார்கள். அவர்களின் உறவு ஜோசியக்காரன், பார்க்க வருபவர்கள் என்பதாக இருக்காது. நெருங்கிய ரத்த பந்துக்காரர்களாக அவர்கள் சம்பாஷிப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். தாத்தாவுக்கு, அவரது ரசிகர்களின் குடும்பச் சங்கதிகள் அத்தனையும் அத்துபடி. பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதிய அவரே, அந்தக் குழந்தையின் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் குழந்தையின் குழந்தைக்கும் ஜாதகம் எழுதியதை நான் அறிவேன். எனக்கும் தாத்தா ஜாதகம் எழுதி இருக்கிறார். பச்சை அட்டை போட்ட பவுண்ட் நோட்டில் எழுதியது. இன்னும் என் மனைவியிடம் பத்திரமாக இருக்கிறது. அதில் என்னுடைய 33வது வயதில் உலகையே சுற்றி வருவேன் என்றும், யோகப் பிரசித்தனாகி, உலகையெல்லாம் ஜெயித்து விக்கிமாதித்த மகாராஜா மாதிரி சிங்காசனம் ஏறுவேன் என்றும், செல்வத்தில் குபேரனாகவும், அழகில் மன்மதனாகவும், எட்டுத்திக்கும் விட்டெறிய ஆட்சிப் பரிபாலனம் பண்ணுவேன் என்று எழுதி இருக்கிறார். இடை இடையே கவிதையாகவும் (எண்சீர் விருத்தத்தில்) புனைந்து தள்ளி இருக்கிறார்.



பாரப்பா புதபகவான் பாரு பாரு

பார்ப்பதனால் ஜாதகனின் ஆயுள் ஓங்கி

பாருலகில் பிரசித்தி தேஜஸ் செல்வம்

பனிபுத்ரி ஜல புத்ரி நிலத்துப் பெண்கள்

பணிபூண்டு பார்யைகளாய் விளங்கி ஒன்று

நூறாண்டு ஆயுளிலே ஜகத்தை வென்று

ஆறோடு இரண்டுமான திக்கை எல்லாம்

காலடியில் இருக்குமாறு கண்பா ரப்பா. . .



என்று கவிதைகள் போகும். பனிபுத்ரி என்றது மலைநாட்டுப் பெண்கள். ஜலபுத்ரி என்றது, கடற்கரை நாட்டுப்பெண்கள். நிலத்துப் பெண்கள் என்றது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பிரதேசத்துப் பெண்கள். இவர்கள் எல்லாம் என் மனைவிகளாக அமைந்து குடும்பம் (எத்தனை குடும்பம்?) நடத்துவார்களாம். ஆயுசு நூறாம். எட்டுத் திக்கும் என் காலடியிலாம். இதற்கு புதபகவான் அருள் செய்வாராம். தாத்தாவின் ஆசை அப்படி இருந்திருக்கும் போலும். தனக்குக் கிடைக்காதது தன் பேரனுக்காவது கிடைக்கட்டுமே என்கிற பேருள்ளம். யதார்த்த நிலைமை என்னவென்றால், தீபாவளியைத்தள்ள நண்பர்களிடம் இருந்து 'செக்கை' எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.



எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாமல்போனது, என் தாத்தா எனக்குத் தந்த ஞானம்தான்.



தாத்தா வீடு இத்துடன் முடிந்து விடவில்லை. அவர் படித்த புத்தகங்கள் கொண்ட கறுப்பு நிறத்தேக்கு அலமாரி. அலமாரியின் மேல் இருக்கும் புத்தகங்களை ஸ்டூல் போட்டு ஏறித்தான் பார்க்க வேண்டும். வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜு, கோதைநாயகி என்று பலரும் அங்கே இருந்தார்கள். தமிழில் வந்த விசித்திரமான துப்பறியும் நாவல்கள், அரேபிய தேசத்து அற்புதக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தமிழ் நாட்டுக் கதைகள், முதல் உலக மகாயுத்தம் என்று வகைவகையான புத்தகங்கள். மேல் அடுக்கில் மிகவும் பத்திரமாக இருந்த கொக் கோகத்தைக் கண்டுபிடித்து, ரகசியமாகப் படித்தேன். படித்தேன் என்றால் சாதாரணமாக அல்ல. எழுத் தெண்ணிப் படித்திருக்கிறேன். பல பாடங்கள் இன்றும் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது.



நான் தாத்தா வீடு வந்து பல நாளாகியும் அப்பாவும் அம்மாவும் தங்கையும் தம்பியும் வரவில்லை. ஊரில் தேர்தல் அறிவிக்கப்பட்டதாம். தாத்தா சொன்னார். எங்கள் மாநில விடுதலை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ்காரன் பெட்டி படுக்கையோடு கப்பல் ஏறிப்போனாலும், புதுச்சேரியை விடப்போவதில்லை என்று பிரஞ்சுக்காரன் முரண்டு பண்ணிக்கொண்டிருந்தான். ஏகாதிபத்யவாதிகளிலேயே மிக மோசமான ஏகாதிபத்ய வாதி பிரஞ்சுக்காரன் என்பது என் அபிப்ராயம். உண்மையும் கூட அதுதான். நேரு மிக நிதானமாக, மீண்டும் ஒரு இந்திய பிரஞ்ச் யுத்தம் வந்துவிடக் கூடாது என்று பட்டேலைச் சாந்தப்படுத்திவிட்டுக்காய் நகர்த்திக்கொண்டிருந்தார். 1954 நவம்பர் முதல் தேதியாகிய எங்கள் சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பா, காங்கிரஸ்காரர் என்ற முறையில் கட்சி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தாத்தா சொன்னார்.



எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பின்னாளில் நர்சாகிய மாதவி எனக்குக் கிடைத்திருந்தாள். மேட்டுத்தெரு வீட்டுத் தோட்டம்.துவை கல். புத்தகங்கள். தெருமுனையில் இருந்த ஏரி. ஏரியை ஒட்டிய புளியந்தோப்பு. என் கற்பனைகள் என்னுடன் இருந்தன. அந்தக் குயில்களுக்கு வேடன் இல்லாத விருந்துத் திருநாள் மாதிரி எனக்குப் பள்ளிக் கூடமும் வாத்தியார்களும் இல்லாத விடுமுறை. எங்கள் தெருவில் இருந்த இடதுசாரி, வலது சாரி வீடுகள் எத்தனை (அரசியல் சாரி இல்லை) என்று எனக்குத் தெரியும். வீடுகளில் மனிதர்கள் யார் யார் என்று எனக்கு அத்துபடி. எங்கள் வீட்டு எதிர்சாரியில் அரியலூர் அம்மாவின் வீடு. அந்த அம்மாவின் மகன் கண்ணன் எனக்குச் சினேகிதம். கண்ணனின் அண்ணன் தமிழரசுக்கழக அனுதாபி. வீட்டு வாசலில்வில், கயல், புலிக்கொடி பறக்கும். சிலம்புச் செல்வரின் படம் வீட்டு அரிவுக்காலில் மாட்டி இருக்கும்.



ம.பொ.சிவஞானத்தின் புத்தகங்கள் அப்போதுதான் எனக்கு அறிமுகம் ஆயின. கண்ணனும் நாளடைவில் கட்சிக்காரர் ஆனார். எல்லைப்போரில் சிறைக்குப் போனதாகவும் பின்னாளில் அறிந்தேன். ஏதோ ஒரு தகராறில் வெட்டுப்பட்டுச் செத்தார். எதிர்ச்சாரியில் ஏழாம் வீட்டில் இருந்த படித்த, அழகான, குடை பிடித்துக்கொண்டு தெருவில் நடந்த, சரஸ்வதி அக்கா திடுமெனக் காணாமல் போய், தெரு களேபரத்தில் ஆழ்ந்தது நினைவில் இருக்கிறது.



ஒருநாள், தாத்தாவீடு வித்தியாசமாகத் தோற்றம் தந்தது. ஆயா, அன்று சோறு ஆக்கவில்லை. எனக்கு ஓட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. ஆயா நடு வீட்டில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருந்தது. ஜோசியம் பார்க்க வந்த ஜனங்களை அனுப்பிவிட்டுத் தாத்தா சாய்வு நாற்காலியில் புதைந்து கொண்டார். திடுமென எழுந்து ஜாதகப் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். மாமாக்கள் மவுனம் காத்தார்கள். ஒன்றிரண்டு வாரங்கள் இது நீடித்தது.



விடுமுறை முடிந்து என் மாமாவின் துணையுடன் தாத்தா தைத்துக் கொடுத்த புதுச்சட்டை, மற்றும் முட்டிவரை நீண்ட அரைக்கால் சட்டையுடன் ஊர் திரும்பினேன். அம்மா என்னைப் பார்த்ததும் கதறியபடி கட்டிக்கொண்டு அழுதது. நான் அம்மாவை விலக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போனேன். அறைகள் எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்தேன். எங்கும் பானுவையும் மூர்த்தியையும் காணவில்லை. 'அண்ணன் எங்கே எங்கேன்னு கேட்டிங்களே, கண்ணுங்களா, அண்ணன் வந்துட்டான், நீங்க போய்ட்டீங்களே' என்று நடுவீட்டில் தரையில் புரண்டு அம்மா அழுதது. அப்போதுதான் கவனித்தேன். நடு வீட்டில் பானுவின் புகைப்படம் சட்டம்போட்டு அதன் உச்சியில் பூக்கள் சொருகி இருந்தன.



அப்போதெல்லாம், அம்மை ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் தவறாமல் வரும். அம்மை நோய் வந்தால், தெருவுக்குப் பத்து, இருபது குழந்தைகள் செத்துப் போவார்கள். அனேகமாக நாலு வீட்டுக்கு ஒரு வீட்டில் கூரையில், வாயிலில் வேப்பிலைகள் சொருகி இருப்பார்கள். வேப்பிலை சொருகிய வீடுகளில் அம்மை வந்திருக்கிறாள் என்று அர்த்தம். வேப்பிலை சொருகி இருக்கும் வீடுகளில் நாலைந்து நாள்களில் அழுகை ஒலி கேட்கும். குழந்தை செத்துப் போயிருக்கும். உடன் நாலைந்து நாட்களில் அந்த வீட்டில் இருந்த இன்னொரு குழந்தை செத்துப் போகும். கோடைக்காலம் வருகிறது என்றாலே, ஜனங்கள் பயந்தபடி அலைவார்கள். எங்கள் ஊரில் பாட்டுகள் பல இது பற்றியே பாடப்பட்டன.



கோடை வந்துடுச்சு எங்கம்மா

கோமாரி வருவாளே. . .

குழந்தைகளை விட்டுடும்மா. . என் குலம் காத்து ரட்சியம்மா. .

குழந்தைங்களை விட்டுட்டு

எங்க உயிரை எடுத்துக்கம்மா. . .



அம்மை மாரி குழந்தைகளைத் தான் அதிகம் நேசித்தாள். ஒரு திங்கட்கிழமை அன்று பானு அம்மை வந்து படுத்திருக்கிறாள். புதன்கிழமை அம்மை உச்சமாகி இருந்தது. வெள்ளிக்கிழமை பானு குளிர்ந்து போயிருக்கிறாள். வியாழக்கிழமையே மூர்த்திக்கும் அம்மை போட்டு மயக்கமாகி இருக்கிறான். ஞாயிற்றுக்கிழமை அவன் குளிர்ந்து போயிருக்கிறான். பானுவுக்கு வெட்டிய குழியும் ஈரம் காயவில்லை. அந்தக் குழி அருகில் அப்பா, மயக்கமாகி விழுந்துவிட்டார். மயக்கம் தெளிவித்து வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் படுத்துக் கிடந்திருக்கிறார். பிறகு, துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு, வடக்கு பார்த்துப் போனார் என்று அம்மா சொல்லி இருக்கிறது. இரண்டு வாரங்களாகியும் அவர் திரும்பாததைக் கண்டு அம்மா பயந்து போனது. தாத்தா வீட்டில் கலவரம். அம்மை போட்ட வீட்டில் சம்பந்திகள் வருகை தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே தாத்தாவும், ஆயாவும், மாமாக்களும் சாவுக்கு வரவில்லை. இப்போது அப்பாவைத்தேடி மாமாக்கள், உறவுகள் திக்குக்கு ஒருவராகப் புறப்பட்டார்கள். ஆயா உடனிருந்து அம்மாவைக் காப்பாற்றி இருக்கிறது. ஒரு மாதத்துக்குப்பிறகு, வள்ளி மலைக்கு அருகில் அப்பாவைச் சாமியார்களோடு இனம் கண்டுபிடித்து தாடி மீசையோடு அழைத்து வந்திருக்கிறார்கள். பல மாதங்கள் அப்பா வீட்டைவிட்டு வெளியே போகாமல் எரவானத்தைப் பார்த்தபடி இருந்தார்.



அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும், எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சிகள் வந்து விடும். அடை அடையாக நாற்காலி, படுக்கை, பாய், கட்டில் இணைப்புகள், சுவர்ப்பள்ளங்களில் அவை வாழும். இரவு படுத்தபிறகு ரத்தம் குடிக்க வந்துவிடும். எனக்கு மூட்டைக் கடியில் தூக்கம் பிடிக்காது. புரண்டு புரண்டு படுப்பேன். அதற்காக அப்பா, ஒரு ஜிமினி விளக்கைக் கொளுத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வெளியே வந்து மாட்டிக்கொள்ளும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து ஜிமினி விளக்கில் போட்டுக் கொன்று கொண்டிருப்பார். மின்சாரம் எங்கள் வீட்டில் நான் ஏழாவது படிக்கும்போது வந்தது. அதுவரை அப்பா இரவில் விளக்கோடு என் அருகில் அமர்ந்திருப்பார். மூட்டைப் பூச்சி அற்றுப் போச்சி என்று சுவரில் என்னை எழுதச் சொன்னார் அப்பா. பிரஷை வர்ணத்தில் தொட்டுக்கொண்டு நானும் அப்படியே எழுதினேன். அப்படி எழுதினால் மூட்டைப் பூச்சி அற்றுப் போகுமாம். எப்படியோ, மூட்டைப் பூச்சி அற்றுப்போயிற்று. அதன்பிறகு அப்பா விழித்துக்கொண்டு, விளக்கை ஏற்றி, விளக்கு வெளிச்சத்தில் என்னைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அடிக்கடி என் மூக்குக்கு அருகில் விரலைப் பிடித்துக்கொண்டு என் மூச்சு சீராக வெளிவருவதைக்கண்டு ஆறுதல் அடைவார். பள்ளிக்கூடத்துக்குக் கூடவே வருவார். நான் பள்ளிக்கூடம் விட்டு வருகிறவரைக்கும் எதிரில் இருக்கும் Ôஜெகனாதம் பிரஸ்Õ மரப் பலகையில் அமர்ந்திருப்பார். பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவார். என்னை மரணம் எடுத்துக்கொண்டு போய்விடாமல் காப்பாற்றுவதாக அவர் நினைத்தார். மரணத்திடம் அவருடைய ஒற்றைக் குழந்தையை விட்டுவிட மாட்டார். அவர் மரணத்தோடு ஒரு யுத்தத்துக்குத் தயாராக இருந்தார். மரணம் அவர் எதிரில் வந்தால் அதை வெட்டிக் கொல்லாமல் விடமாட்டார். அப்பாவை அழைத்துப் போய் ஆந்திராவில் இருந்த ஒரு வைத்திய சாலையில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அப்பா இயல்புக்கு வெகு விரைவிலேயே திரும்பினார்.



கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறந்தது. நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்படியென்றால், புதுச்சட்டை, புது பேண்ட் (முதல் முதலாக அந்த வருஷம் பேண்ட் அணிகிறேன்) தைத்துக்கொள்ளுதல், நாலைந்து புத்தகக் கடைகளில் தேடிப் புத்தகம் வாங்குதல், பேனா, இங்க் பாட்டல், ஜாமெட்ரி பெட்டி முதலானவைகளைச் சேகரித்தல் என்று அர்த்தம். 'நேம் சிலிப்' தருகிற கடைகளாகப் பார்த்துப் பொருள்களை வாங்க வேண்டும். மை ஒட்டி எடுக்கிற, பிளாட்டிங் பேப்பரைச் சில கடைக்காரர்கள்தான் தருவார்கள். அம்மா, எனக்காக முகத்தில் சிரிப்பைப் பூசிக் கொண்டு என் புதுப் பள்ளிக்கூட ஏற்பாடுகளைச் செய்தது. கேக்கும் போதெல்லாம், தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தது. அம்மாவுக்கு நாவற்பழம் பிடிக்கும். அந்தக் கலரும் பிடிக்கும். எனக்கு அந்தக் கலரில் சட்டைத் துணி கிழித்துத் தைக்கக் கொடுத்தது. தையற்காரர் கிருஷ்ணன், அளவே எடுக்காமல் தோராயமாகவே ஆடைகள் தைக்கும் நிபுணர். என்ன, சட்டை என் மாமாவுக்கும் பொருந்துமாறு இருக்கும். வளர்கிற பிள்ளைகளுக்கு அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவர் நியாயத்தை அப்பா மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்வார். அது பரவாயில்லை. பேண்ட் இடுப்புக்குள் ஒரு நாயும் சேர்ந்து இருக்கும் அளவுக்குப் பெரிசாக இருக்கும். அதற்கென்ன. 'பெல்ட்' என்கிற பொருள் பின் எதற்காகத்தான் இருக்கிறது. உடைந்த கைக்குப் போடும் துணிக்கட்டு மாதிரி என் இடுப்பைச் சுற்றி இரண்டு முறை சுற்றி பெல்ட் கட்டுவார்கள். புதிய தொப்பி, புதிய செருப்பு எல்லாம் தயாராக இருந்தன. என் புத்தகப்பையும் புதுசாகவே இருந்தது. என் புதுப் பையோடு இன்னுமொரு புதுப்பையும் அறையில் இருந்தது. 'இது எதுக்கும்மா' என்றேன்.



விடுமுறைக்குப் பிறகு பானுவையும் இந்த ஆண்டு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதாக இருந்தது. அப்பா அதை அழைத்துப்போய் முதல் வகுப்பு புத்தகம், நோட்டு, பென்சில், பென்சில் சீவும் மிஷின் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தப் பைதான் ஆணியில் மாட்டி இருந்தது.



அம்மா சிரித்தபடி என்னை ரிக்ஷா வண்டியில் ஏற்றித் தலையைத் தடவிக் கொடுத்தது. வண்டி நகர்ந்தபின் உள்ளே போனது. எனக்குத் தின்பண்டம் வாங்கக் காசு வாங்கிக் கொள்ளாதது நினைவுக்கு வந்தது. பள்ளிக்கூட வாசலில் சோன்பப்டி விற்கும். எங்கள் குழாத்தில் அதன் பெயர் மயிர் மிட்டாய். வண்டியை நிறுத்தச் சொல்லி வீட்டுக்குள் நுழைகிறேன். அம்மா, பானுவின் புத்தகப் பையை மார்பில் வைத்துக்கொண்டு குலுங்கி அழுது கொண்டிருந்தது.



அப்பாவுக்கும் பெண் இல்லை. எனக்கும் பெண் இல்லை. என் மருமகள்களே என் பெண்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.



ஓவியங்கள்: ஆ.விஜயகுமார்

புதன், 3 ஆகஸ்ட், 2011

Bhavaa.


Wednesday, January 5, 2011அப்பா

கையிலடங்காத நீரின் சுழிப்பு.



வயசோ வருஷமோ ஞாபகத்தில் இல்லை. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே நிலத்திற்குப் போகும் அனுபவம் எப்போதும்போல அன்றைக்கும் வாய்த்திருந்தது.



புதிதாய் வாங்கின புஞ்சை நிலத்தில் கிணறு வெட்டு நடந்து கொண்டிருந்தது. கிணற்று மேட்டில் அப்பாவோடு உட்கார்ந்துகொண்டு நிமிஷத்துக்கொரு தடவை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை மொரம்பு, ஒட்டந்தட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தட்டு மொரம்பும் கொட்டப்படும் போதெல்லாம் அப்பா எதையோ தேடும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே கிணற்றுக்குள் பார்க்கிறார். உள்ளே ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். கடப்பாரைச் சத்தம் மட்டுமே மேலேறி வருகிறது. புதிர்களால் கிணறும் சூழலும் நிரம்பியிருந்தது.



இப்போது வெளியே வந்து விழுந்த மொரம்பில் லேசான ஈரம் தெரிந்தது. இதற்காகவே தவமிருந்ததுபோல் அப்பா ஓடிப்போய் அதை அள்ளித் தன் முகத்தருகே சமீபித்தார். அந்த வெள்ளை மொரம்பைத் தன் முகத்தால் ஸ்பரிசித்தார். அதன் சில்லிடலில் அப்பாவின் முகம் பிரகாசமடைந்தது.



"வையாபுரி, நொசுவுல ஈரம் தெரியுது. இரு இரு நானே உள்ள வரேன்'' என்று ஆர்வம் மேலிட எழுந்த சத்தம் எல்லோரையும் மேல் நோக்கித் திரும்ப வைத்தது.



நீண்டு தொங்கிய ஒரு கயிற்றினூடே அப்பாவும், காலியான அந்த ஒட்டந்தட்டின் வழியே நானுமாய் உள்ளே இறங்கினோம். கிணற்றுக்குள் நல்ல இருட்டு. உள்ளே நின்றிருந்த ஆறேழு பேரையும் கண்கள் பழகிக்கொள்ளச் சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்த்தால் அச்சம் ஒரு விலங்கைப்போலக் கரையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்த அச்சத்தைத் தவிர்த்து, பார்வையைத் தரையிலேயே நிலைக்க முயற்சித்தேன்.



''வையாபுரி மொரம்புல ஈரம் தெரியுது. எந்தப் பக்கம்?"



"சனி மூலையில வாத்தியார"



அப்பா நிதானிக்கிறார்.



தன் அனுபவத்தாலும், பார்வையாலும் அப்பாவின் கண்கள் ஒரு குறிப்பட்ட வெள்ளைக் கல்லின்மீது படிகிறது.



"இந்தக் கல்லுக்குக் கீழ கடப்பாரையால மொள்ள நெம்பு"



எல்லோர் பார்வையும் கடப்பாரை நுனி விழப் போகும் அந்தச் சின்னக் கல்லின்மீது குவிய, வையாபுரி கடப்பாரையால் கல்லுக்கடியில் தாங்கி நெம்புகிறார்.



"நீர்"



இத்தனை யுகமாய்க் கல்லின் முட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம். இருட்டிலும் மிளிர்ந்த அந்த மனித முகப் பிரகாசங்கள் அதற்குமுன் எப்போதும் நான் காணாதவை.



அப்பா என்னைத் தழுவித் தூக்கி, அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன்.



நீர் எங்களின் கால்மீதேறி நனைக்கிறது. நாங்கள் நிறைகிறோம்.



ஊற்றின் வேகம் அப்பாவை இன்னும் ஆர்வப் படுத்துகிறது.



"வையாபுரி உள்ள ஆறு, கீறு ஓடுதா பாருய்யா"



அப்பாவின் அந்தக் குதூகலம், என் வயதுக்கானது.



காலம், காலமாய்ப் பீறிட்ட அந்த ஊற்றை ஒரு சின்ன மொரம்புக் கல் தடுத்து வைத்திருந்தது மாதிரி நானும் அப்பாவைப் பற்றிய என் ஞாபகங்களை எழுதிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். எழுத்தின் தொடர்ச்சி எனக்குத் தெரியும், முடிவு நானறியாதது. எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்.



"அப்பா,"



கொட்டிக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?



எதை விட?



அப்பாவின் ஆசிரியப் பணி முடிந்து ஓய்வுபெற்ற சமயம் அது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாரானது. சி.பி.ஐ.(எம்), திமுகவுடனும், அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்திருந்தது. நான் திமுக வேட்பாளருக்குத் தீவிரமாய்க் களப்பணியிலிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய இரவு காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜண்ட் கிடைக்காமல், மறதியின் பக்கங்களிலிருந்து பழைய காங்கிரஸ்காரரான என் அப்பாவை மீட்டெடுத்து, வாக்குச்சாவடியின் காங்கிரஸ் வேட்பாளரின் முகவராக உட்கார வைத்தார்கள். திமுக சார்பாக அன்று பூத் முகவராக இருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சி. சகலவிதமான தில்லுமுல்லுகளோடும் திமுகவினர் வாக்குகளைப் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.



எங்கள் வீட்டிலிருந்து என் பாட்டியைக் கண் தெரியாதவர் எனச் சொல்லி ஒரு திமுக உடன்பிறப்பு சாவடிக்குள் அழைத்து வந்தது. அதாவது அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது. அதனால் அவர் உதவியோடு வாக்கை அந்தத் திமுகக்காரரே பதிப்பார். அப்பா ஆக்ரோஷத்தோடு இதை எதிர்த்தார். அதிகாரியிடம் "சார் இவங்க என் சொந்த மாமியார், என் வீட்லதான் இருக்காங்க. நல்லா கண்ணு தெரியும் சார்" என நீதியின் குரலைக் கொஞ்சம் உயர்த்தினார்.



நான் "சார் இவங்க என் சொந்த பாட்டி சார், பத்து வருஷமா கண்ணே தெரியாது சார்" என்ற ஒரு பெரும் பொய்யை அநீதியின் பலத்திலிருந்துச் சொல்ல, ஓட்டு அரசியல் எனக்குக் கற்றுத் தந்திருந்தது.



அந்தச் சாவடியின் பூத் அதிகாரி என் பாட்டியின் உயரத்திற்குக் குனிந்து,



"பாட்டிம்மா கண்ணு தெரியுமா?" எனச் சத்தம் போட்டுக் கேட்டார். வரிசையில் நின்ற எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பாட்டி மிகக்கவனமாக,



"பத்து வருஷமாச்சு சார் கண்ணு அவிஞ்சு," என்றது நிதானமாக, வாங்கியிருந்த 50 ரூபாய்க்கு விசுவாசமாக.



அப்பா, "இந்த அரசியலும் வேணாம், ஒரு மயிரும் வேணா"ன்னு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.



அவர் முன் ஜெயித்துவிட்ட திமிரில் நின்ற நான்தான் அடுத்த தலைமுறையின் பிரதிநிதி. தனக்கு அடுத்த சந்ததி நேர்மை, அன்பு, உறவு எல்லாவற்றையும் பணத்துக்காக விற்கத் துணிவதை அவர் மனம் கடைசிவரை ஏற்கவேயில்லை.



அவருக்கான சில நியாயமான கோரிக்கைகளில் கடைசிவரை அவரால் வெற்றியடைய முடியாதபோது, நாங்கள் எவ்வளவு தடுத்தும் தான் பெற்ற நல்லாசிரியர் விருதை (100 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் அது) ஒரு நீண்ட கடிதத்துடன் அரசுத் தலைமைச் செயலருக்குத் திருப்பி அனுப்பினார்.



மத்திய அரசுக்கெதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் அது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் எனப் போலீஸ் கருதிய பட்டியலில் என் பெயரும் நண்பன் கருணா பெயரும் இருந்தது. இன்றிரவு நிச்சயம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய பொழுதில் நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமினோம். எல்லோர் முகத்திலும் பதட்டமும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவுமான அவசரமும் இருந்தது. சாப்பிட்டபிறகு, மூங்கில்துறைப்பட்டுக்குச் சென்று என் நண்பர் வீட்டில் தங்குவது பந்த் முடிந்த பிறகு திரும்புவது என முடிவெடுத்தோம். ஒரு ஈசிச்சேரில் படுத்தபடி எங்கள் திட்டம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்த அப்பா திடீரென நாங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி எழுந்து,



"இங்க பார்டா, இந்த வீட்ல இருந்து போக யாரையும் நான் விடமாட்டேன். பந்த்ல அரெஸ்ட் ஆகுங்க, அல்லது கட்சியில இல்லன்னு எழுதிக் கொடுத்துடுங்க. மீறிப்போனா, நானே எங்க போயிருக்கீங்கன்னு போலீசுக்குச் சொல்லிடுவேன்" என கர்ஜித்தார்?



எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே அன்றிரவு நான் கைது செய்யப்பட்டேன். என் நண்பர்கள் தப்பித்தார்கள். கொள்கையின் மீதான இந்த மூர்க்கத்தைத் தன் இறுதி நாள்வரைத் தனக்குள் வைத்திருந்தவர் அவர்.



என் திருமணம் வரையிலும்கூட நானும் அப்பாவும் தெருவில் நின்று சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்துத்தெருவரை அவர் என்னைத் துரத்தி, துரத்தி அடிப்பது என் கல்லூரிப் படிப்பு முடியும்வரை தொடர்ந்திருக்கிறது. ஒரு முறை நானும் அப்பாவும் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக அவர் பெட்டியை எடுத்து வெளியில் வீசி எறிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் தோலில் மாட்டிய தோள் பையோடு கோணங்கி. அவன் அதிர்ச்சியடைந்தான்.



அந்த அனுபவத்தை "சாரோனின் சாம்பல் இறகு" என்று சிறுகதையாக்கியிருக்கிறான். பேரன்பினால் எழும் பிரச்சனை இதுவென நல்ல வேளை என்னைப் போலவே கோணங்கியும் புரிந்து வைத்திருந்தான். நானும் இவ்வனுபவத்தை என் "சிதைவு" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்.



அப்பா தன் இருபத்தி ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் என்ற ஒரு புகழ்பெற்ற குன்றுக்கருகில் தான்தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த ஒரு எட்டி மரத்தை, தன் தற்கொலையை நிறைவேற்றித்தரத் தேர்ந்தெடுத்தார்.



மறு பரிசீலனைக்கிடமின்றி மாலை ஐந்து மணிக்குக் கோட்டாங்கல் பாறையில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. எதற்கெனத் தெரியாமலே கண்ணிலிருந்து நீர் வழிகிறது. சரியாக ஆறு மணிக்கு இப்பேரமைதியைக் குலைத்து வாணவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் அவரை அலைக்கழிக்கின்றன. தன் அகமனதை ஊடுருவும் இப்புற உலக இயக்கத்தை எத்தனை தடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை.



கண்கள் மேற்கையே வெறிக்கின்றன. சுகுமாரன் சொல்வதைப் போல தற்கொலையில் தோற்றவனின் மௌனமல்ல அது. தற்கொலைக்குத் துணிந்தவனின் மௌனம். எதிரில் ஒரு மங்கலான ஓவியம்போலத் திருவண்ணாமலை மலை தெரிகிறது.



தீபச் சுடரொளி பற்றிப் பிரகாசிக்கிறது. அவ்வொளியின் வெப்பத்தை இம்மலைமேட்டில் படுத்துக்கிடக்கும் அப்பாவின் சரீரம் உணர்கிறது.



துடித்தெழுகிறார்.



அதற்குப்பிறகும் அந்த எட்டி மரத்தில் ஆறேழு நாட்கள் அந்தக்கயிறு தொங்கி கொண்டிருந்ததாகவும், பின்பொருநாள் அப்பாவே அதை அகற்றியதாகவும் சொல்வார்.



தன் இறுதி நாள்வரை அப்பாவை ஒரு நாத்திகனாகவே நாங்களெல்லாம் அறிந்தோம். வெளிவாழ்வு, உள்வாழ்வு இதெல்லாம் தெரியாத மனுஷன் அவர். ஆனால் தன் வாழ்வின் அந்திமம் வரை ஒரு ரகசியத்தை அடைகாத்தார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு கார்த்திகை தீபத்தன்றுதான் அந்த இரகசியத்தை அவிழ்த்துப்பார்த்தோம்.



ஒவ்வொருத் தீபத்தன்றும் காலையிலேயே குளித்து முடித்து, தூய வெள்ளை உடுத்திப் பத்து மணிக்கு சைக்கிளில் புறப்படுவார். எங்கேயெனக் கேட்க யாருக்கும் துணிவிருக்காது. பதிலைக் குடும்பத்துக்குள் கொட்டிவிட்டுத்தான் புறப்படவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.



ஒரு மணிக்குத் திரும்பி விடுவார்.



ப்ராட்டஸ்டன்ட் கிருத்துவக் குடும்பமாகிய எங்கள் வீட்டில் எந்தக் கார்த்திகை தீபத்தன்றும் மத்தியானத்தில் சமைத்ததில்லை. தீபம் பார்த்த பிறகே, மொட்டைமாடியில் இலை போட்டுச் சாப்பாடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் ஏதோ அடங்காத மனதோடு உலாத்திக் கொண்டிருப்பார். தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு. தனக்கு வாழ்வு கொடுத்த தீப ஒளிக்கு பல ஆண்டுகளாக அவர் செலுத்தும் மௌன அஞ்சலி என நான் புரிந்து கொண்டேன்.



ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தோல்வியில் முடிந்த ஒரு தற்கொலை முயற்சியின் அலைக்கழிப்பு இப்படி முடிந்தது.



1999 நவம்பர் 23. அதே தீபத் திருநாள். ஊரே பரபரப்பில் இயங்குகிறது. அப்பாவால் சைக்கிளை எடுக்க முடியாது. முதுகுத் தண்டில் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தார். காலை பத்து மணியிருக்கும், என்னைத் தன் படுக்கையருகே அழைத்து அமரச் சொல்கிறார். கண்களில் துளிர்க்கும் நீர் வழிகிறது.



"பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னக்கி என்னால போக முடியலை. நீ எனக்காகச் செய்வியா? வார்த்தைகளில் கொஞ்சம் அவ நம்பிக்கையிருந்தது."



என் துக்கமும் கண்ணீராய்த்தான் வழிந்தது.



'எனக்கப்புறமும் என் பேர்ல இதைச் செஞ்சுடுப்பா' என் சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனைகளில் வளர்ந்த எனக்கு வீட்டிற்குள்ளிருந்தே ஒரு நாத்திகனால் விடப்படும் முரண்பாடான கோரிக்கை இது.



'கண்டிப்பா செய்வம்ப்பா'



அன்று மாலை தீபம் ஏற்றும் முன் நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் போயிருந்தேன். ஒரு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பில் ஜனக் கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு வந்தேன். ஹாலில் அப்பாவைப் படுக்க வைத்து எல்லோரும் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.



'எப்படி ஷைலஜா?' என்றேன். அப்பாவுடனான கடைசி உரையாடலை அவள் என்னிடம் சொன்னாள்.



'தீபம் பார்க்க மாடிக்கு போறம்பா'



'பாத்துட்டு வாங்கம்மா'



தீப ஒளியை அவசரமாக தரிசித்துவிட்டுக் கீழிறங்கி வந்து,



'அப்பா தீபம் ஏத்திட்டாங்கப்பா' என்றிருக்கிறாள்.



'ரொம்ப சந்தோஷம்மா'



அதுதான் அப்பா பேசின கடைசி வார்த்தை.



ஒவ்வொரு வருடமும் மலைமீது ஏற்றப்படும் தீப ஒளிக்கு, ஒரு மார்க்ஸியக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அப்பாவின் பெயரைத் தாங்கின அரைக்கிலோ நெய்க்குடமும் உண்டு.



Posted by பவா செல்லதுரை at 4:09

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

Sukumaran.

Monday, January 11, 2010


கேணி சந்திப்பு - கவிஞர் சுகுமாரன்

முன் குறிப்பு: கவிதை வாசிப்பில் ஆகச் சிறந்த கோமாளி நான்... கீழே இருக்கும் கவிதைகள் கேள்வி ஞானத்தில் எழுதியது. ஞாபகத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஏமாற்றி இருக்கிறேன். பதிவில் பயன்படுத்தியிருக்கும் கவிதைகள் யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். மாற்றிவிடுகிறேன்.நன்றி...



::::::::::::: ::::::::::::: ::::::::::::: ::::::::::::: :::::::::::::



நீண்ட நாட்களுக்கு முன்பு 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் சென்னை சிறுகதைப் பயிலரங்கம் நடந்தது. முதலில் உலகச் சிறுகதைகள் பற்றிப் பேச கவிஞர் சுகுமாரன் தான் ஏற்பாடாகியிருந்தது. அப்பொழுதே கோழியை அமுக்குவது போல் அமுக்கவேண்டும் என்றிருந்தேன். ஏனெனில் அவருடைய மொழி பெயர்ப்பில் மதில்கள் மற்றும் காளி நாடகம் ஆகிய படைப்புகளை வாசித்திருக்கிறேன். அந்த சந்திப்பில் மொழி பெயர்ப்பு சமந்தமான பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றிருந்தேன். கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போகவே அந்த இடத்தை 'சா. தேவதாஸ்' நிரப்பினார். கவிஞரை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தமாகவே இருந்தது.



25-12-2009 அன்று நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் சிவராமன் கவிஞர் சுகுமாரனை அறிமுகப்படுத்தினார். மூத்த ஆளுமை என்பதால் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. தயங்கித் தயங்கி அவருடன் உரையாடினேன். சகஜமான உரையாடலின் மூலம் நெருக்கமாகப் பேசினார். விழாநாள் என்பதால் அவருடன் விளக்கமாக உரையாட முடியவில்லை. கேணிக்கு வருகிறார் என்றதும், அன்று விட்டதை இன்று பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன்.



ஞானியின் வீட்டை நெருங்கியதும் இன்ப அதிர்ச்சி. சுகுமாரன் அவருடைய நண்பருடன் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் நின்றுகொண்டு "வணக்கம்" என்றேன். ஆமோதித்து சிரிக்கவும் அருகில் சென்றேன். 'காளி நாடகம்' புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கொண்டேன். அருகிலிருந்தவரைப் பார்த்து சிரித்தேன். தன்னுடைய பெயர் க. சீ. சிவக்குமார் என்று கூறினார். நானும் என்னுடைய பெயரைக் கூறினேன். 'நீங்கள் பதிவரா?' என்று சிவா கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு கவிஞரைப் பார்த்தேன்.



சுகுமார்ஜி, நீங்கள் பதிவுகளைப் படிப்பீர்களா?



எப்பவாவது நேரம் கிடைக்கும்பொழுது படிப்பேன்.



பதிவுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



சில பேர் நல்லா எழுதறாங்க. என்ன ஒன்னு நாலு பின்னூட்டம் வந்ததுமே... தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிட்டால் அவ்வளவுதான்.



நீங்கள் சிறுவயதில் எங்கு வளர்ந்தீர்கள் சுகுமார்ஜி....?



"அதைத்தானே உள்ள பேசப்போகிறோம். அப்போ கேட்டுக்கலாமே..." - என்று கூறவும் உன்னியின் சிறுகதைகளை சிலாகித்துப் பேசினேன். நீங்கள் உண்ணியைப் பார்க்கும் பொழுது என்னுடைய பாராட்டுக்களை சொல்லிவிடுங்கள். அப்படியே அவருக்கான ஒரு வாசகர் தமிழில் இருக்கிறார் என்றும் சொல்லிவிடுங்கள். அவர் சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் கரு நன்றாக இருக்கிறது.



மலையாளம் பேசுவிங்களா? - என்று கேட்டார்.



அய்யய்யோ... சுத்தமா தெரியாது...



Can you sepak in English?



ரொம்ப நல்லா பேசமாட்டேன்... கொஞ்சம் கொஞ்சம்...



அதுபோதும், அவனும் ரொம்ப சுமாராத்தான் இங்கிலீஷ் பேசுவான் என்று உன்னிக்கு ஃபோன் செய்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

Unni, this is Krishna prabhu from Chennai. I red your short stories translated by the poet and well known writer Mr. Sugumaran. It is amazing man. You have done a wonderful job. Congratz. என்று அடுக்கிக் கொண்டே போனேன். அவரும் Thank you, Thank you...என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தக் குரலில் ஒரு படைப்பாளி மட்டுமே அனுபவிக்கக் கூடிய சந்தோஷத்தை உணர முடிந்தது.



I saw your E-Mail ID in the same book I suppose to think. So I will send an e-mail to you. Keep in touch with me... என்றவுடன் Sure... Sure... என்றார்.



Take care... Bye Bye...என்று பேசி முடிக்கவும் பாஸ்கர் சக்தி வந்து சேர்ந்தார். அனைவரும் உள்ளே சென்றோம்.





சென்ற வாரங்களில் ஞானிக்கு உடல் நிலை சரியில்லை தெரியுமா?



"இங்க வந்த பிறகுதான் தெரியும். இப்போ எப்படி இருக்காரு?" என்று கேட்டேன்.



ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டாரு. இப்போ உள்ளே தூங்கிட்டு இருக்காரு. இனிமேல்தான் எழுப்ப வேண்டும். நேரம் இருக்கிறதே என்று தரையில் அமர்ந்தார். சின்ன கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய சிறுகதைப் புத்தகங்களை வாங்கிவிட்டேன் சக்தி. இனிமேல் தான் வாசிக்க வேண்டும். அருகில் இருப்பவர் என்னை விட நன்றாக எழுதுவார் என்று அறிமுகப் படுத்தினார். அவர் வேறுயாருமில்லை அதே க. சீ. சிவக்குமார் தான். கன்னிவாடி - தமிழினி, உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - வம்சி, குனசித்தர்கள் - கிழக்கு, நீல வானம் இல்லாத ஊரே இல்லை - உயிரெழுத்து... ஆகியவை இவர் எழுதி சில புத்தகங்கள் என்று கூறினார். அவருடைய புத்தகங்களை இனிமேல் தான் தேடித் பி(ப)டிக்க வேண்டும்.



ஞானிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கேணியைத் தொடங்கினார்கள். புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவாக இருக்கும் பொழுதுதான் இலக்கிய கூட்டத்திற்கான லட்சணம் கூடுகிறது என்று சுகுமாரனைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் நீண்ட உரையாற்றிவிட்டு கவிஞர் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.



"எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது... எதுவும் பேச பயமாக இருக்கிறது..." - என்ற கவிதையுடன் தனது பேச்சை ஆரம்பித்தார். பல வருடங்களுக்கு முன்பு "எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தை 'பழனியப்பா ப்ரதெர்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'தி. ஜா' ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அருமையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு சிறுகதை எழுதித் தருமாறு கேட்டால் வயிறில் புளியைக் கரைக்கும் என்று சொல்லியிருப்பார். குமுதம் டாட் காமில் வேலையிலிருக்கும் போதிலிருந்தே என்னை பேச அழைத்தார்கள். இங்கு தானே இருக்கப் போகிறேன் அடுத்த மாதம் வருகிறேனே என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இப்பொழுது வசமாக மாட்டிக்கொண்டேன். எனக்கு வயிற்றில் புளி கரைகிறது. அந்த உணர்வுடன் தான் உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன்.



என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் மூத்தவன். அப்பாவின் சகோதரி உதக மண்டலத்தின் வெலிங்ஸ்டன் என்ற இயற்கை சூழலில் இருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னை எடுத்து வளர்த்தார்கள். சிறு வயதில் பெற்றோர்களைப் பிரிந்து வளரும் குழந்தைகள் ஒரு விதத்தில் தனிமையை உணர்கின்றன. நானும் அந்தத் தனிமையை உணர்ந்தேன். அந்தத் தனிமையை போக்கவும், என்னை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்தவும் ஏதேனும் ஒரு விஷயம் தேவைப்பட்டது. அது கவிதை வாசிப்பாக அமைந்தது. கையில் கிடைக்கும் காகிதத்தில், அச்சில் உள்ள அனைத்தையுமே படிப்பேன்.



பள்ளியின் இறுதி வாழ்க்கை முடிவதற்குள் 500 செய்யுள் எழுதிவிட்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் செய்யுள் உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதின் மூலம் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நான் கிறுக்கியதற்கு பாராட்டுக்களும் கிடைத்தன. பெண்கள் தான் அதிகம் பாராட்டினார்கள். அதனால் நானும் அக்காக்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். ஒரு முறை எனது பக்கத்து வீட்டு அக்கா கவிதைப் புத்தகம் ஒன்றை பரிசளித்தார்கள். அந்த சம்பவம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. அதன் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் புலவர் குழந்தை எழுதிய 'யாப்பதிகாரம்' என்ற நூல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அதில் எனக்குத் தேவையான இலக்கணத்தைக் கற்றுக்கொண்டேன்.



தமிழ் கவிதைகளையும், புத்தகங்களையும் விரும்பிப் படிப்பதால் என்னுடைய தமிழ் ஆசிரியர்களுக்கு நான் பிடித்த மாணவனாகியிருந்தேன். அவர்களும் எனக்கு பல விஷயங்களை விருப்பமுடன் கற்றுக் கொடுத்தார்கள். கவிதை என்று வரும் பொழுது நிறைய ஆதர்சனகள் இருந்தார்கள். வைதீஸ்வரன் மற்றும் தர்மு சிவராம் ஆகிய இருவரும் என்னை வெகுவாக பாதித்தார்கள். இருவரும் அவர்களுக்கான பாணியில் நன்றாக எழுதி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிடித்திருந்ததால் யாரைப் பின்பற்றுவது என்ற குழப்பம் உண்டாகியது. கடைசியாக யாரும் வேண்டாம் என்று எனக்கென ஒரு நடையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.



இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட நம்முடைய கவிதை மரபில் விவசாயம், வைத்தியம், ஜோதிடம் என்று எல்லாமே கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பெரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதிதான் நான். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால். பாரம் என்று கூட சொல்லலாம். கவிதையில் ஒரு அனுபவம் இருக்கவேண்டும். இல்லையெனில் அது செய்தியாகிவிடும். உதாரணமாக...



யாது ஊரே யாவரும் கேளிர் - என்ற வரியைச் சொல்லும் போது அது ஒரு செய்தி மட்டுமே, அதற்கடுத்துள்ள வாசகம் தான் ஒரு அனுபவத்தைத் தருகிறது, ஒரு நிகழ்ச்சியை கண்முன் நிருத்துகிறது. அப்பொழுது தான் அந்தக் கோர்க்கப்பட்ட வாசகங்கள் கவிதைக்கான வடிவத்தைப் பெறுகிறது. இதுதான் கவிதைக்கும், செய்திக்கும் (Statement) உள்ள வித்யாசம். இரண்டுக்குமே பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அவைகள் தன்னுடைய மதிப்பை எப்பொழுதும் தக்கவைத்துக் கொள்ளும்.



மலையாளத்தில் கவிதை எழுதும் இரண்டு பேரின் பெயர்களைச் சொல்லி இருவரும் வெவ்வேறு தளத்தில் எழுதுபவர்கள். ஒருவர் மென்மையான விஷயங்களையும், இன்னொருவர் தவிப்புகளையும் மையமாக வைத்து எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவரின் சில கூறுகளைக் கழித்துப் பார்த்தால், இரண்டு படைப்பாளிகளின் கவிதைகளும் ஒரே மாதிரி இருக்கும். யார் எழுதியது என்று வித்யாசம் காண முடியாது. ஆனால் தமிழில் இது சாத்தியமில்லை.



அகவற்பா, வெண்பா, செய்யுள், மரபுக் கவிதை என பல வடிவங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது புதுக் கவிதைதான். புதுக் கவிதைகள் ஜனநாயகத்தைப் பிரகடனப் படுத்துவதாக நம்புகிறேன். அதனால் தான் அந்த வடிவத்தை மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக விரும்புகிறேன் போலும்.



என்னைப் பொறுத்தவரை கவிதை மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அவைகளாவன 'வடிவம், மொழி மற்றும் உள்ளடக்கம்'. இந்த நிபந்தனைகள் புரியும் விதமாக நீண்ட விளக்கம் அளித்தார். முனைப்புடன் செயல்படும் பல கவிஞர்களுக்கும் இந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.



சிறுகதையோ, நாவலோ, கட்டுரையோ சொல்ல வரும் விஷயத்தை படைப்பாளி சொல்லியபடியே வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள். கவிதைகள் அப்படி அல்ல. எழுதியவன் ஒன்றை நினைத்து எழுதுவான் படிப்பவர்கள் வேறு ஒரு அனுபவத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஒரே கவிதை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுவேறு அனுபவத்தை ஏற்படுத்திச் செல்லும். இது கவிஞனுக்கு மிகப் பெரிய சுதந்திரமும் கூட என்று சொல்லி அவர் எழுதிய "கையில் அள்ளிய நீர் " கவிதைக்கு வாசகர் அளித்த விளக்கத்தைக் கூறினார். நதியிலிருந்து ஒரு கை நீரை எடுக்கிறார். செடிகளுக்கு அளிக்கிறார். அதை மேகம் கொண்டு மழையாகப் பொழிகிறது. அந்த நீரை எடுத்து மீண்டும் நதியில் கவிழ்க்கிறார்.இந்த அனுபவத்தை கவிதையாக சொல்கிறார்...



அள்ளி

கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்

நதிக்கு அன்னியமாச்சு

இது நிச்சலனம்

ஆகாயம் அலைபுரளும் அதில்

கை நீரைக் கவிழ்த்தேன்

போகும் நதியில் எது என் நீர்?



- இதை நான் சாதாரண அனுபவமாகத் தான் எழுதினேன். நதி என்பது பரமாத்மா... கையளவு தண்ணீர் ஜீவாத்மா... அது போக வேண்டிய இடம் சென்று கடைசியாக பரமாத்மாவிடமே திரும்பியது என்று சுழற்சியைக் கூறினார். அவருடைய யோசனையில் தவறில்லை. இந்த வார்த்தைகள் அவருடைய யோசனைக்குப் பொருந்துகிறது.



நான் திருவனத்தபுரம் தள்ளி இருக்கும் ஆணையடி என்ற இடத்தில் வசிக்கிறேன். ராஜாக்கள் காலத்தில் அங்கு தான் யானைகளைக் கட்டிப் போடுவார்களாம். அந்தப் புறமும் கூடவே இருக்கும். அங்கு ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாளாம். அதன் காரணத்தை அறிய எனக்கு ஆவல். ஒரு வயதானவரிடம் கேட்டேன்.



"நீ... சிறுபிள்ளை" என்று கூறிச் சிரித்தார்.



பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன்.



எவ்வளவு கேட்டும் அதற்கான காரணத்தை கடைசிவரை அந்தப் பெரியவர் சொல்லவே இல்லை.அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய முற்பட்டேன். கடைசி வரை அதற்கான காரணம் தெரியாமல் போனது. ஆகவே அந்த சம்பவத்தை வைத்து ஒரு கவிதை எழுதினேன். இறுதியாக அந்தக் கவிதையை வாசித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.கவிதை வாசிப்பினைத் தொடர்ந்து அவருடனான உரையாடல் நடைபெற்றது.



பல கேள்விகளும் கவிதையை சார்ந்தே இருந்ததால் பேசா மடந்தை போல் உட்கார்ந்திருந்தேன். நேரம் பார்த்து மொழி பெயர்ப்பு சமந்தப்பட்ட கேள்வி ஒன்றைக் கேட்டேன். அதற்கு கவிஞரும், ஞானியும் அவர்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்கள். அவருடைய மொழி பெயர்ப்பு மற்றும் கட்டுரை குறித்து யாரும் பேசாதது வருத்தமாக இருந்தது. ஒரு படைப்பாளி நம் முன் உரையாடுகிறார் என்றால், அவர் நமக்களித்த முக்கியமான படைப்புகளை ஞாபகப்படுத்தி கௌரவிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. மேலும் சுகுமாரனின் கவிதைகளை முன்வைத்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது சற்றே ஏமாற்றமாக இருந்தது.



கவிஞர் சுகுமாரின் வலைப்பூ முகவரி: vaalnilam.blogspot.com

விக்கிபீடியா: கவிஞர் சுகுமாரன்



சுகுமாரைப் பற்றிய கட்டுரைகள்:

1. உருமாற்றத்தின் ரகசியம்: பாவண்ணன்

2. கவிஞர் சுகுமாரன் - கவிதைத் திருவிழா 14 - அந்திமழை

3. சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பல படைப்பாளிகளை தூரத்திலிருந்தும், அருகில் சென்றும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் கவிஞர் வா மணிகண்டன் சுவாரஸ்யமான நண்பர். 10 நிமிடங்கள்அவருடன் பேசியதில் 25 கவிஞர்களின் பெயரை உச்சரித்தார். அவர்களில் சுகுமாரனின் பெயரும் ஒன்று. சுகுமாரனைப் பற்றி எழுதிய பதிவு: கவிஞர் சுகுமாரன்



பின் குறிப்பு:

1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.

2. உரையாடல் கவிதையை மையமாக வைத்து இருந்ததால் சமயத்தில் கவனம் சிதறியது. ஆகவே தகவல் பிழைகள் ஏராளமாக இருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் குறிப்பிட்டால் மாற்றிவிடுகிறேன்.

3. இங்கு பயன்படுத்தியிருக்கும் கவிதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் சரி செய்துவிடுகிறேன்.





Posted by கிருஷ்ண பிரபு at 9:39 PM Labels: கேணி சந்திப்பு