செவ்வாய், 6 ஜனவரி, 2015

Shaji..

20141213

இணையம் தழுவும் எழுத்து



நமது காலம் நமது ரசனை – 2
உயிர்மை, டிசம்பர் 2014 
இலைகள்
மரப்பட்டை
விலங்குத் தோல்
பருத்தி இழை
செயற்கை இழை....
தடித்த எழுத்துக்களில் வேறு வேறு வண்ணங்களில் எழுதி மகளிடம் கொடுத்தேன்.
“இது போதுமா அப்பா? என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“அது இவ்வளவுதான்டா செல்லம் என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த கீதிப் பாப்பாவின் முகம் வாடிப்போயிருந்தது!
“என்னடா ஆச்சு?
“நேஹா, தியா, நித்தியா, மாதவ், அசுவின்.. அல்லாரும் நெறய பேஜில கலர் போட்டோ அல்லாம் ஒட்டி வச்சு எடுத்தினு வந்தாங்க. அவங்களுக்கல்லாம் மிஸ் அஞ்சு ஸ்டார் தந்தாங்க.. என்னோட புக்கப் பாருங்க!”. நான் அவளது வீட்டுப்பாடப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எதுவுமில்லை! மேலும் எல்லாமே தவறு என்பதுபோல் வெட்டியும் போட்டிருக்கிறார் வாத்தியாரம்மா! மனிதன் அணியும் உடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதத்தானே கேட்டிருந்தார்!
அடுத்தநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது என்ன நடந்தது என்று தெளிந்து விட்டது. வண்ணப்படங்களை ஒட்டி, விரிவான அட்டவணைகளைப் போல் தயாரித்த பல பக்கங்களில் மனித உடைகளின் வரலாற்றை விரிவாக விளக்கியிருந்தனர் பெரும்பாலான குழந்தைகள்! 135000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததிலிருந்து துவங்கும் தகவல்கள்! இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மின் அச்சிட்டவை!
“அதெல்லாம் தப்புடா.. நெட்டிலிருந்து அப்படி டவுண்லோட் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து ஒட்ட யாராலயும் முடியும். அப்பா எழுதிக் கொடுத்தது தான்டா ரைட்டு.... "ஆனால் எனக்கு ஒரு ஸ்டார் கூட கெடைக்கலையே...என்று ஏமாற்றத்தில் சோர்ந்த எனது மகளின் வார்த்தைகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
யோசித்துப் பார்த்தேன்! நான் அவளிடம் சொன்னது உண்மையா? இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பாடங்களை நிரப்புவதில் என்ன தவறு? மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததன் வரலாற்றை அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டுமா? அத்தகவல்கள் கிடைக்குமிடத்திலிருந்து எடுக்கலாமே! எதைவேண்டுமானாலும் எடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்துவது நல்லது தானே? அறிவுஜீவிகளான எழுத்தாளர்களே இணையத்திலிருந்து எண்ணற்ற விஷயங்களை எடுக்கிறார்களே!
இணையம் உலகை முற்றிலுமாக ஆக்கிரமித்திருக்கும் கடந்த பதினைந்தாண்டுகளில் இணையத்திலிருந்து தழுவி எழுதுகிறார் என்கின்ற குற்றச்சாட்டை சந்திக்காத எழுத்தாளர்கள் குறைவே. இணையம் இருப்பதனால் மட்டுமே பலர் எழுத்தாளர்களாகத் தங்களை முன்வைக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் இணையத்தின் வருகைக்கு வெகுகாலத்திற்கும் முன்னரே எழுத்தாளர்களாக தங்களை நிலைநாட்டியவர்களையும் இந்த குற்றச்சாட்டு விட்டபாடில்லை! தழுவல்தான் இங்கு பிரச்சினை என்றால் இணையம் வருவதற்குப் பல பதிற்றாண்டுகளுக்கு முன்பே தழுவி எழுதுவதை மும்முரமாக கையாண்டவற்களில் ஒருவன் நான்!
பத்தாவது வயதில் எனது முதல் எழுத்து பிரசுரமாது. ஒரு கவிதை! அது தந்த ஆர்வத்தில் எழுத்தாளன் ஆகியே தீருவேன் என்று முடிவெடுத்தேன். ஆனால் என்ன எழுதுவது? அப்பா என்னை அடித்துத் துவைத்தார் என்று எழுதினால் அதில் என்ன புதுமை இருக்கிறது? மகன்களை அடித்துக் கொடுமைப்படுத்தாத அப்பாக்கள் அந்த காலத்தில் எங்கிருந்தார்கள்! எழுத்தாளன் ஆகியே தீரவேண்டுமே! என்ன செய்வது?
ஒருநாள் ஜூனியர் விகடனில் தமிழ்நாட்டின் மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான எருமைகளை ஒரு கோவில் சடங்கின் பகுதியாக பலி கொடுத்ததைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். உடனடியாக அதை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துக் கேரள சப்தம் எனும் இதழுக்கு அனுப்பி வைத்தேன். எனது உண்மையான வயதோ தமிழோ தெரியாத ஆசிரியர், சம்பவ இடத்திற்கு நான் விரைந்து எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து எழுதியதாக நினைத்து அதைப் பிரசுரித்து 25 ரூபாய்க்கான காசோலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்! வாழ்க்கையில் முதலில் பார்த்த அந்தக் காசோலையைக் காசாக்க என்னால் முடியவில்லை என்றாலும் எழுதினால் பணம் கிடைக்கும் என்று அப்போது தெரியவந்தது. (அது அவ்வப்போது மட்டுமே நடக்கும் ஓர் அதிசயம் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டேன்!)
பதினாறு வயதிருக்கும்போது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரதியில் முதியவயது உடலுறவுக்கு ஒரு கைப்புத்தகம் எனும் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். அந்த வயதின் காமக் கிளுகிளுப்பில் அதை படிக்க ஆரம்பித்த நான் அக்கட்டுரையை மொழிபெயர்த்து குடும்ப டாக்டர் எனும் ஆரோக்கிய மருத்துவ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பெரிய பீரங்கிக் குழலுக்கு இருபுறமும் ஒரு கிழவனும் கிழவியும் நிற்பதுபோன்ற அட்டைப் படத்துடன் அட்டைக் கட்டுரையாக அதைப் பிரசுரித்தனர்!
சில வாரங்கள் கழித்து அவ்விதழின் ஆசிரியர் மனோகரன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஷாஜிக்கு, பழைய ரீடர்ஸ் டைஜஸ்டிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை சுட்டு எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பும்போது குறைந்த பட்சம் நன்றி – ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஒரு குறிப்பையாவது வைத்திருக்கலாம். இத்தகைய கட்டுரைகளைப் பிரசுரிப்பது பல வகையான  சட்டச் சிக்கல்களை வரவழைக்கக்கூடியது. அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்லை. பயந்து நடுங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துபோனேன்.
இதுபோன்ற எழுத்துக்களின் வழியாக எழுத்தாளனாக வேண்டியதில்லை என்று அன்று முடிவெடுத்தேன். தனது கடிதத்துடன் ஆசிரியர் 50 ரூபாய் காசோலையையும் வைத்திருந்தார்! முழுத்தேங்காய் கிடைத்த நாய் போல் அதைப் பலமாதம் கையில் வைத்திருந்தேன். வறுமை ஒரு மனிதனை எதுவும் செய்ய வைக்கும்! பணமில்லாமல் திண்டாடிய நாளொன்றில் அக்காசோலையை எடுத்து கோட்டயத்தில் உள்ள அவ்விதழின் அலுவலகத்திற்குச் சென்றேன். காற்றில் வளைந்து நிமிர்வதுபோன்ற ஒல்லி உடம்புக்கு மேல் அசைந்து தொங்கும் உடைகளுடன் பலவீனமாக நிற்கும் அந்தப் பதினாறு வயதுப் பையன் எழுதிய முதிவயது உடலுறவுக்கான் கைப்புத்தகத்தை நினைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஜனனி பிரசுரம் என்கின்ற பெயரில் பல இதழ்களை நடத்திக்கொண்டிருந்த அக்குழுமத்தின் தலைவர் தாமஸ் டி அம்பாட் அப்போது மலையாள களிப்புனைவு (Pulp Fiction) இலக்கியத்தின் பேய் மற்றும் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் ஓர் உச்ச நட்சத்திரம். ஒருகாலத்தில் அவர் எங்கள் ஊர்ப் பகுதிகளில் தங்கி கூலிவேலை செய்திருக்கிறாராம்! அந்த நினைவுகளாலோ என்னமோ, என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார். காசோலையைத் திருப்பி வாங்கி வரும்காலத்தில் நீ எழுதப்போகும் அசல் எழுத்துக்களுக்கு இது ஒரு முன்தொகை என்று சொல்லி ஒரு 100 ரூபாய் நோட்டை கையில் வைத்துத் தந்தார். எழுத்துக்காக எனக்கு கிடைத்த முதல் ஊதியம்!
எழுத்தில் அவர் ஒருபோதும் எனது ஆதர்சமாக இருந்தவரல்ல என்றாலும் பின்னர் பலமுறை நான் அவரைச் சந்தித்தேன். புகழும் செல்வமும் வாய்த்திருந்த ஒரு நட்சத்திர எழுத்தாளர் அவர். என்னை வைத்து அவருக்கு எந்த லாபமும் இருந்ததில்லை. ஆனால் நான் நேரில் சந்தித்த அந்த முதன்முதல் எழுத்தாளர் என்னிடம் மிகுந்த கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தினார். கார்கள் இருந்தபோதிலும் இருசக்கர வாகனங்களை நேசித்தவர். தனது புல்லட்டில் நெடுந்தொலைவு பயணம் செய்வதை விரும்பிய அவர் அத்தகைய ஒரு பயணத்திற்கு நடுவே சாலை விபத்தில் சிக்கி பரிதாபமக இறந்துபோனார்.
ஒரு முறை கோழிக்கோட்டின் ஒரு நட்சத்திர விடுதியில் நாவல் எழுதுவதற்காக தங்கியிருந்த அவரைச் சந்தித்த நாள் மறக்க முடியாது. எனக்கு நாரங்ஙா வெள்ளம் வாங்கித் தந்து அவர் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தார். அறை முழுவதும் பலவிஷயங்களைப் பற்றி இதழ்கள், கருப்புப் புத்தகங்கள் (Black Books), ஆங்கிலப் புனைவிலக்கியப் புத்தகங்கள், அறிவுத் தகவல் களஞ்சியங்கள் போன்றவை விரவிக் கிடந்தன. இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் வழியாகவும் அவற்றிலிருந்து தகவல் தேடல் செய்வதன் வழியாகவும் நாம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்றும், நமது எழுத்திற்கான தகவல்களைச் சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.
எழுத்திற்கான தகவல்களை நாம் எங்கிருந்தாவது எடுத்தே ஆகவேண்டும். ஆண்டுகள், இடங்கள், பெயர்கள் போன்ற தகவல்களை படைப்பூக்கத்தால் உருவாக்கிவிட முடியாது. ஒரு காலத்தில் அதற்காக இதழ்களையும் புத்தகங்களையும் களஞ்சியங்களையும் பயன்படுத்தினோம். புத்தகங்கள் ஒருசிலருக்கு மட்டுமே கையெட்டும் தொலைவில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன! ஆனால் இணையம் ஒவ்வொருவரின் விரல் நுனிக்குமே இன்று வந்துவிட்டது! ஒரு தகவலுக்காக தடிமனான பல புத்தகங்களைப் பலமணிநேரம் இப்போது புரட்டவேண்டியதில்லை. இணையம் அனைத்தையும் எளிதாக்கியிருக்கிறது.
இணைய தளங்களிலிருந்து எடுக்கும் தகவல்களை உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த எழுத்துக்களைப் படித்த பின்னர் யோசனை பொங்கும் சில நண்பர்கள் இணையத்தில் அதைப் பற்றி வேறு என்னென்ன இருக்கிறது என்று தேடிப்பிடித்து ‘மார்க் ஷட்டர் பக் என்பவர் 1995லேயே இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதுகூட இவருக்குத் தெரியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்! இதற்கு ஒரு மறுபக்கமும் இருக்கிறது. விஷயமே அறியாத பலர் அங்கும் இங்குமிருந்து கிடைக்கும் குறிப்புச் சொற்களை கூகிள் செய்து தோ ஒன்றைப் படித்து, எல்லாம் தெரிந்தவர்களைப்போல் நடமாடும் அபாயம் நிகழ்கிறது.
சமீபத்தில் ஒரு விளம்பர நிறுவன அலுவலகத்தில் வரப்போகும் விளம்பர வரிசை ஒன்றுக்கான விவாதத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அசாதாரணமான கூற்றுகளுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்று கார்ல் சேகன் (Carl Sagan) சொல்லியிருக்கிறார்... என்று நான் சொன்னபோது அந்த நிறுவனத்தில் அதிகாரியாயிருக்கும் ஓர் இளைஞர் வான் அறிவியலாளர் கார்ல் சேகனைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்? என்று கேட்டார்!
அறிவியல் மேதையும் விண்வெளி ஆய்வாளரும் சிந்தனையாளரும் எழுத்தாளருமான கார்ல் சேகனைப்பற்றி இந்த இளைஞர் தெரிந்து வைத்திருக்கிறாரே! பரவாயில்லையே என்று ஒரு கம் நினைத்துக்கொண்டேன்! ஆனால் நான் பேசுவது எதையும் சரியாகக் கவனிக்காமல் முழுநேரமும் அவர் தனது ஐஃபோனில் நோண்டிக்கொண்டுதானே இருந்தார் என்று யோசித்தபோதுதான், அலைபேசி ஒலகத்துல கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்து தான் கார்ல் சேகன் யாரென்று அவர் கண்டுபிடித்தார் என்பது எனக்கு வெளிச்சமானது!
ஷாஜி என்கின்ற வார்த்தையின் பொருள் உருது மொழியில் தைரியமானவர் என்று. ஆனால் மவோரி மொழியில் அது....ஒரு படத்தில் என்னுடன் நடித்த ஒரு நடிகனின் இணைய விஞ்ஞானம் இப்படித்தான்போகிறது. நாம் எதைச் சொன்னாலும் அவர் அதை நமக்குத் தெரியாமல் கூகிள் பண்ணி தகவல்களை எடுப்பார்! பின்னர் யாருக்குமே தேவையில்லாத அத்தகவல்களை நமக்கு முன் கக்கி உயிரெடுப்பார்!
தனக்குத் தொடர்போ அக்கறையோ இல்லாத விஷயங்களை இணையத்திலிருந்து எடுத்துத் தன்னுடைய கண்டுபிடிப்பைப் போல் வழங்கிப் புகழைக் கோரும் ஆட்களின் எண்ணிக்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக அதிகம். வேடிக்கை என்னவென்றால் பலமுறை சரிபார்க்காமல் இணையத்தில், முக்கியமாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல இணைய தளங்களில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்த முடியாது என்பதுதான். அங்கு தகவல்களைவிடத் தகவல் பிழைகளே நிரம்பி வழிகின்றன.
ஒரு விஷயத்தைப்பற்றித் தனக்கு முன்பின் எதுவுமே தெரியாது, தன்னுடைய சிந்தனைகளுக்கு அத்துடன் எந்தச் சம்பந்தமுமில்லை என்றிருக்கும்போதிலும், வாசகர்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும் வகையில் இணையத்தில் எங்கேயோ பார்த்த சிலவற்றை எடுத்து,பலகாலமாக இதைப்பற்றித்தான் நான் தியானித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பழம்பெரும் பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்துபோனபோது பிரபல மலையாள இசை விமர்சகர் ஒருவர் சமகாலப் பாடகர் ஸ்ரீநிவாஸைப் பற்றிய இணையத் தகவல்களை எடுத்து ஒரு கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின்படி 2008இன் சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்ற பின்னர்தான் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்தார்!
ஃபிலோமினா குட்டி என்று ஒரு பாடகியிருக்கிறாள், கேட்டிருக்கிறீர்களா? என்று ஓர் அன்பர் என்னிடம் கேட்டார்! ஏதோ புதிய மலையாளிக் குட்டி ஒருவள் பாடகியாக வந்திருக்கிறாள் என்று நினைத்தேன்! ஆஃப்ரோ பீட் எனும் ஆப்ரிக்க இசை வடிவத்தை நிறவெறிக்கு எதிரான போராட்டமாக முன்வைத்த நைஜீரிய கருவியிசைக் கலைஞரும் அரசியல் போராளியுமான ஃபெலா குடி (Fela Kuti) குறித்துத்தான் அவர் சொன்னார் என்று பிறகு எனக்குத் தெரியவந்தது. ஃபெலா குடி இறந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகளாபின்னர் அவரை ஃபிலோமினா குட்டி எனும் பாடகி ஆக்குகிறார்கள்!
நீங்கள் பல ஆங்கிலப் பாடகர்களைப்பற்றி சொல்லியிருக்கிறீர்களே..... ஆனால் எர்த்தா கிட்டை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று ஒருபெண்மணி எனக்கு மடல் அனுப்பினார். எர்த்தா கிட்டா? அந்தப் பெயரை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதேயில்லை! உலகில் இருக்கும் அனைத்து பாடகர்களையும் எனக்கு எப்படித் தெரியும்? இணையம் சரணம் கச்சாமி! தேடினேன்.
1950-60களில் அமேரிக்காவில் இருந்த ஒரு காபரே நடனப்பாடகி எர்த்தா கிட்ட். சில பாடல்களை இணையத்திலேயே கேட்டுப் பார்த்தேன். பாட்டு என்பதை விட உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பேச்சுகள் அவை! காமச்சுவை கசியும் பாடல்களைத் தாம் அதிகமும் பாடியிருக்கிறார். அவரைக் கேட்காததில் எனக்கு வருத்தமேதும் தோன்றவில்லை! மடலுக்குப் பதில் அனுப்பினேன். ‘நீங்கள் எர்த்தா கிட்டின் ரசிகையா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?
“எனக்குத் தெரியாது. பிரின்ஸ் ராமவர்மா எழுதியதை நெட்டில் படித்தேன். நெட்டில் பாட்டு கேட்டேன். ஒன்றுமே புரியவில்லை. அதுதான் உங்களிடம் கேட்டேன் என்று பதில் வந்தது! பிரின்ஸ் ராமவர்மா என்ன எழுதியிருக்கிறார் என்று நானும் நெட்டில் பார்த்தேன்.
எனக்கு ஷோப்பாங் பிடிக்கும், பிசெட் பிடிக்கும்
பழையகாலப் பாடல்கள் பிடிக்கும்
நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு பிடிக்கும்
கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை பிடிக்கும்
ஆனால் எண்ணைக் கிணர்கள் பீப்பய்க்களில் எண்ணை நிரப்பும்
சளர்ர்ர்ப்ப் ஒலிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்... அமேரிக்காவின் முக்கியப்பாடகி எர்த்தா கிட்ட் இப்படிப் பாடினார்..என்று எழுதியிருக்கிறார்!
திருவாங்கூர் அரச பரம்பரையைச் சார்ந்தவரும், கர்நாடக இசைப் பாடகரும், இசை ஆசிரியரும், செவ்வியல் இசை ஆய்வாளருமான பிரின்ஸ் ராமவர்மா எதற்காக இதை எழுதினார் என்று அந்த கட்டுரையிலிருந்து எனக்கு விளங்கவில்லை! உழைக்கும் வர்க்க இசையின் முக்கியத்துவத்தை உணர்த்த ந்த வரிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார் என்று குத்துமதிப்பாக வைத்துக்கொண்டேன். ஆனால் அந்த வரிகளை எழுதியவர் எர்த்தா கிட்ட் இல்லையே! மார்வின் ஃபிஷெர் எனும் கறுப்பினப் பாடலாசிரியர் எழுதிய வரிகள் அவை!
பல இணைய தளங்களில் பல மணிநேரம் ஒத்துப்பார்த்துத் தேடித்தான் மேற்சொன்ன தகவல்களைக் கண்டுபிடித்தேன். அந்தப் பெண்மணியும் பிரின்ஸ் ராமவர்மாவும் நானும் இணையத்திலிருந்துதான் இந்த  தகவல்களை எடுத்திருக்கிறோம். ஆனால் தகவல்களை ஒவ்வொருவரும் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஷோப்பாங் (Chopin) மற்றும் பிசெட் (Bizet), மிக முக்கியமான மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர்கள் என்று அறியாத,  நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு (String quartet), கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை (Polynesian carol) போன்றவை என்னவென்று உணராத ஆட்களுக்கு இந்த வரிகள் எப்படிப் புரியும்?
இலைகள், மரப்பட்டை, விலங்குத்தோல், பருத்தி இழை போன்றவற்றிலிருந்து அன்றும் இன்றும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மையைத் தெரியாதவர்களும் இணையத்தின் உதவியால் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தை நிரப்பலாம். அவர்கள் அக்குழந்தைகளின் பள்ளி ஆசிரியர்கள்கூட ஆகலாம். ஆனால் மனித உடைகளின் உண்மையான வரலாற்றை அறிய அவர்களால் ஒருபோதும் முடியாது.
1915 டிசம்பர் மாதத்தின் ஒரு மாலையில் இருட்டும் அழுக்கும் குழைந்த பாரிஸ் நகரத் தெருவொன்றில் ஒரு விளக்குக் கம்பத்தின் கீழ் பிறந்து விழுந்தாள் பிரான்சு நாட்டின் எக்காலத்திற்குமுரிய அதிசயப் பாடகி எடித் பியாஃப். தெருமுனைகளில் நின்றுகொண்டு பலர் பரிதாபமான அந்த மகப்பேற்றை வேடிக்கை பார்த்தனர். ஆடுமாடுகள் குட்டி போடுவதுபோல் பனிகொட்டும் சாலையோர நடைமேடையில் தனது மகளை பெற்றுப் போட்டாள் ஒரு தாய் என்று உள்ளுடைந்து எழுதும் ஓர் எழுத்தாளனை இணையத்தால் உருவாக்க முடியுமா?..

20141230

புத்தகங்களின் இறுதியில்


‘’டேய் ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாக்கிட்ட சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி கடுமையா நடவடிக்கை எடுத்துருவேன்’’ என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவரது கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துவந்தேன் என்றாலும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கி விடுவேன். எண்ணற்ற ’கடைசி’ எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும்? அந்த நிர்மலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம்! அவளுக்கென்ன? நடவடிக்கை வரப்போவது என்மேல்தானே!
செண்பகப்பாறை பொது மக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும் மானிச் சேட்டன்தான். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியவை வெறும் பதினைந்து வயதிலிருந்த எனது செயல்பாடுகள்! அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் தொல்லை தாங்க முடியாமல் சிலபோது இரண்டு மூன்று புத்தகங்களை எடுக்க அனுமதிப்பார். புத்தகங்களும் வாசிப்பும் மட்டுமே வாழ்வின் ஒரே கனவாக இருந்த காலம் அது.
விக்டோர் யூகோ (Victor Hugo), அலெஹான்ட்ரே டூமா (Alexandre Dumas) போன்ற பிரஞ்சு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து உலக இலக்கியங்களில் ஆர்வமுடையவனாக நான் மாறியிருந்தேன். ஒருநாள் நார்வே நாட்டு எழுத்தாளர் க்னூட் ஹாம்ஸுன் (Knut Hamsun) எழுதிய விசப்பு (பசி) என்ற நாவலையும் மலையாள எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த எஸ் கே பொட்டெக்காட் எழுதிய விஷ கன்யக என்ற நாவலையும் எடுத்தேன். ‘ன்யூட் ஹாம்ஸன்’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்தாளரை அதன்முன் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் ’பசி’யைப் படித்தேன். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் போராட்டத்தின் உருகவைக்கும் கதை அது.  
”தெளிந்த இந்த பகலில் எதாவது சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கொஞ்சம் எதாவது போதுமே என்று வெளியே வந்த என்னை அழகான அந்த பகல் பொழுதின் துல்லியம் குதூகலப்படுத்தியது. கிழிந்த பையுடன் கசாப்பு கடையின் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்கு ஒரு இறைச்சித் துண்டைத் தருமாறு அவள் கடைக்காரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடந்து சென்றபோது அவள் தலை தூக்கி என்னைப் பார்த்தாள். அவளது கீழ் ஈற்றிலிருந்த ஒரே ஒரு பல் சீழ் மஞ்சள் நிறத்தில் விரல்போல் துருத்தி நின்றது. ஒரு பச்சை இறைச்சித்துண்டின் கனவு அவளது கண்களை ரத்தச் சிவப்பாக்கியது. எனது பசி மரத்துப் போனது. நான் வாந்தியெடுக்கத் துவங்கினேன்” (பசி - க்னூட் ஹாம்ஸுன்)
இரண்டு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்து முடித்துத் திருப்பிக் கொடுக்க நூலகம்  சென்றுகொண்டிருந்தேன். காமாட்சி வயல் கடந்து பாட்டுபாறை வாய்க்காலை தாண்டும்போது நிர்மலாவின் வீட்டின் முன்றிலை எட்டிப் பார்த்தேன். அவள் தென்படவில்லை. மூன்றுமணி கடந்த நேரம். வயல்புறங்களுக்கும் தோட்டங்களுக்கும் மேல் மினுமினுக்கும் சூரிய ஒளியைத் தவிர யாருமற்ற இடங்கள். வேகமாக நடந்தால் நாலு மணிக்குள்ளே நூலகத்தை அடையலாம். இதழ்களைப் படித்து, புத்தகங்களைத் தேடி எடுத்து இருளும் முன் வீடு திரும்பலாம்.
மெலிதான மேடுபள்ளங்களில் சாய்ந்துகிடக்கும் காரிக்கொம்பு பாறையைக் கடக்கும்போது சூ… சூ…. என ஒரு சத்தம் எனது காதில் விழுந்தது. திரும்பி பார்த்தேன். மூச்சிரைக்க ஓடி வருகிறாள் நிர்மலா. அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கோதுமை நிறத்தில் துடிப்புடன் வளரும் பதின்பருவப் பெண்மையின் வனப்பும் வசீகரமும் அவளுக்கிருந்தது. நிர்மலாவும் நானும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு உயிர்கள். ஒருவர்மேல் ஒருவருக்குக் காதல் எதுவும் இருக்கவில்லை. நட்பும் இருக்கவில்லை. ஆனால் மோகம் இருந்தது. யாருமற்ற கிராம வழிகளில் எங்கேயாவது அவ்வப்போது சந்திப்போம். எதாவது பேசுவோம். அவள் பேசுவது எதுவும் எனக்குப் புரியாது. நான் பேசுவது அவளுக்கும்.
ஓடி வந்து நின்ற நிர்மலாவின் மூக்கின்மேல் வியர்வைத் துளிகளாக சூரியன் மின்னியது. பாறைகளுக்கு மேல் பலகாலமாக மனிதர்கள் நடந்து வெளிர் பழுப்பு நிறத்தில் உருவான நடைபாதையில் நாங்கள் சேர்ந்து நடந்தோம். எனது கையிலிருந்து புத்தகங்களைப் பறித்து புரட்டிப் பார்த்தாள். “இதென்ன எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே! இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே? அப்டி என்ன இருக்கு இதுல? நீ வர்றதப் பாத்து வீட்டுக்குப் பின்னாடி நின்னிட்டிருந்தேன். அம்மாவோட கண்ணுல படாமக் கிளம்பறதுக்குக் கொஞ்சம் நேரமாச்சு” அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள். யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நான் நாலாபக்கமும் பார்த்தேன். பாறை இடுக்கில் ஓடும் வாய்க்கால் நீரின் ஓசையும் பின்நேரப் பறவைகளின் ஒலிகளும் மட்டுமே அங்கு இருந்தன.
வாய்க்காலின் கரையில் பெரிய கரும்பச்சை இலைகளுடன் அடர்ந்து நின்ற மேட்டுக் காப்பி மரம் ஓர் இலைக் குடிலாக எனக்குத் தோன்றியது. வளர்ந்திறங்கிய கிளைகள் மண்ணைத் தொட்டு நிற்கின்றன. அதன் அடியில் நுழைந்தால் யார் கண்ணுக்குமே தெரியாது. நாம் அங்கே புகுந்திடலாமா என்று அச்சத்துடன் நிர்மலாவைக் கேட்டேன். ”ச்சீ.. போ” என்று சொன்னவள் உடனே ‘நீ என்னை என்ன பண்ணப்போறே?’ என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா’ என்று என்னைத் தள்ளிவிட்டாள். ’சரி போறேன்’ என்று ஓடி வாய்க்காலைத் தாவிக் கடந்து திரும்பிப் பார்த்தேன். அதோ நிர்மலாவும் ஓடி வருகிறாள்! வெளிச்சம் குறைவான காப்பி மரத்தடியில் தவழ்ந்து புகுந்தேன். கண நேரத்தில் நிர்மலாவும் வந்து உள்ளே புகுந்தாள்.
கையிலிருந்த புத்தகங்களை ஒரு கல்லின்மேல் வைத்து அவசர அவசரமாக நான் நிர்மலாவைக் கட்டியணைத்து என்னென்னமோ செய்ய முயன்றேன். ‘ச்சீ... உனக்கு வெட்கமே இல்லையா?’ என்றெல்லாம் கேட்டு நிர்மலா ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள்! இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி நான் சில வீண்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத்தின் பின்னருகில் தாமஸ் வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது! வேறு எதுவுமே யோசிக்காமல் நான் தவழ்ந்து வெளியேறித் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. மரத்தின் கீழிருந்து நான் இறங்கி ஓடுவதை யாராவது பார்த்திருப்பார்களா? அந்த இருமல்காரர் யார்? அவர் என்னையும் நிர்மலாவையும் பார்த்திருப்பாரா? நிர்மலாவுக்கு என்ன ஆயிருக்கும்? அவள் பிடிபட்டிருப்பாளா? ‘உன்னுடன் இருந்தவன் யாருடீ?’ என்ற கேள்விக்கு அவள் என் பெயரைச் சொல்லியிருப்பாளா? ஒரு வேளை அவள் சொல்லவில்லை என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே! நான்தான் என்று எளிதில கண்டுபிடிப்பார்கள். நூலகப் புத்தகங்களைக் காட்டில் எறிந்து விட்டு பொன்னம்மாவின் மகளுடன் காப்பி மரத்திற்குக் கீழே உல்லாசத்திற்கு ஒதுங்கிய வெட்கம் கெட்டவன்!
இல்லை… எதுவுமே நடந்திருக்காது. நிர்மலா என்னை விடத் தைரியமானவள். அவள் தப்பித்திருப்பாள்.. காலையில் சென்று புத்தகங்களை எடுத்துவிடலாம் என்று எனக்கே சொல்லிக்கொண்டு தூங்க முயலும்போது திடீரென்று மழை விழத்தொடங்கியது. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த அந்தக் கனமழையில் எனது புத்தகங்கள் கரைந்து ஒழுகுவதை நினைத்து நான் நடுங்கினேன்.
நிர்மலா சில சிறு குழந்தைகளுடன் சில்லி விளையாடிக் கொண்டிருந்தாள். என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொன்னாள். நான் ஓடின உடனே வேறு திசையில் வேகமாக ஓடி அவள் வீடு வந்து சேர்ந்தாளாம். புத்தகங்களைப் பற்றி கேட்டபோது ‘எனக்கென்ன தெரியும்?’ என்றாள். பயத்தின் ஆதிக்கத்தில் நானே மறந்துவிட்ட புத்தகங்களை அவள் எப்படி நினைவு கூர்ந்திருப்பாள்! காப்பி மரத்தின் கீழே கருகிய இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. அங்கு புத்தகங்களின் தடையமே இல்லை! அந்த புத்தகங்கள் எங்கே போயின என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது.
”புத்தகமென்பது வலுவற்ற ஓர் உயிரினம். அதைக் காலப்பழக்கத்தின் பிடியிலிருந்தும், வானிலையின் பிடிலிருந்தும் கொறித்துத் தின்னும் பூச்சிகளின் வாயிலிருந்தும், கவனமற்ற மனிதனின் எண்ணையழுக்குப் படிந்த கைகளிலிருந்தும், அவனது மறதிகளிலிருந்தும் காப்பாற்றுகிறவர் நூலகர்” என்று உம்பேர்தோ எகோ (Umberto Eco) சொல்லியிருப்பது மானிச் சேட்டனைப் பற்றியேதான் என்று நான் பிற்பாடு பலமுறை யோசித்ததுண்டு. இறுதியில் பொறுமை இழந்த அவர் நூலகத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அப்பாவிடமிருந்து புத்தகங்களின் விலையை வசூலித்தார். அப்பா வழக்கம்போல் என்னை வெளுத்து வாங்கினார். வயதுக் கோளாறினால் நடந்த அந்தத் தவறு புத்தகங்களுடனான எனது தொடர்பை சிலகாலத்திற்கு அறுத்துவிட்டது.
புத்தகம் படிப்பவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம் அது. புத்தகங்களை விலைக்கு வாங்கும் பழக்கம் யாருக்குமே இருக்கவில்லை. எனது நண்பர் ஸ்ரீநிவாசன் கரண்ட் பதிப்பகத்தின் ’வீட்டில் ஒரு நூலகம்’ திட்டத்தில் சேர்ந்து தவணை முறையில் பணம் செலுத்திப் புத்தகங்களை தபால் வழியாக வாங்கியது தான் நான் அறிந்த முதல் இலக்கியப் புத்தகம் வாங்குதல். சிலகாலம் அப்புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தேன். வீட்டையும் ஊரையும் விட்டு ஏதேதோ திசைகளில் பயணித்து ஒழுகிய எனது வாழ்க்கையில் போகுமிடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தவை நூலகங்களும் புத்தகங்களும் மட்டுமே.
புத்தகங்கள் இடையறாமல் மனிதனை, வாழ்க்கையை, இயற்கையைப் பேசுவதோடு மற்ற புத்தகங்களையும் பேசுகின்றன. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு வழி வகுக்கிறது. புத்தகம் அதிலிருக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல. வார்த்தைகளுக்கு அப்பால் சென்று வாசகன் தனதுக்குள் இருக்கும் கற்பனை வளத்தைத் தொட்டு அறியும் பயணம் அது. எழுத்தாளனுடன் அவன் நிகழ்த்தும் மௌனமான உரையாடல். காலங்கள் கடந்தோடினாலும் நினைவில் மிதந்துகொண்டேயிருக்கும் புத்தகங்களின் வாசனை. ஒரு நல்ல புத்தகம் ஒருபோதும் மறக்கமுடியாத அனுபவம்.
புத்தகங்களை விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தபோது எனக்கு ஒன்று வெளிச்சமானது. நூலகங்களிலிருந்து எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் நாம் கட்டாயம் படித்துவிடுவோம். விலைகொடுத்து வாங்கும் புத்தகங்கள் நம்மிடமே இருக்கின்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே என்ற எண்ணம் தானாக வந்துவிடும். உடனடியாகப் படிக்கப்படாமல் அப்புத்தகங்கள் தள்ளி வைக்கப்படும். சிலசமயம் ஒருபோதும் படிக்கப்படாமல் அடுக்கத் தட்டுகளிலேயே அவை அமர்ந்திருக்கும். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் வரிக்கு வரி நாம் படித்திருக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் படிக்காத புத்தகங்களைக் கையில் வைத்திருப்பதால் என்ன பயன்?
தமிழ்த் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் புத்தகங்களின் தீராக்காதலன். புத்தகம் வாங்க வழியில்லாத காலத்தில் புத்தகங்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும் படிப்பதற்கும் ஒரு புத்தகக் கடையில் வேலை பார்த்தவர். ஓயாமல் படிப்பவர். இருபதாயிரத்திற்கும் மேல் புத்தகங்களை இதுவரைக்கும் வாங்கியிருக்கிறார்! வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களுக்கு எந்தவொரு புத்தகத்தையும் அன்பளிப்பாக எந்த நேரமும் கொடுக்கத் தயங்காதவர். நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எனக்கு மட்டும் தந்திருக்கிறார்! பதினெட்டாயிரம் புத்தகங்களை இப்போதும் வைத்திருக்கிறார்!
தனது புத்தகங்களை அரங்கத் துணைப்பொருட்களாக மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டையெல்லாம் பலமுறை சந்தித்தவர் மிஷ்கின். தனது பதினெட்டாயிரம் புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா? சிந்தனையாளர் சேலம் ஆர் குப்புசாமி 65000 புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர். அந்த 65000 புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா? கடந்த 28 ஆண்டுகளில் ஒவ்வொன்றாகச் சேகரித்த ஐயாயிரத்திற்கும் மேலான ஆங்கில, தமிழ், மலையாளப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் அந்த புத்தகங்கங்களையெல்லாம் படித்திருக்கிறேனா? 
ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்குவதே அது தனக்குத் தேவையானது அல்லது அது  உயர்வானது என்கின்ற எண்ணத்துடன்தான். புத்தகங்களை நேசிப்பவர்களும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் கொண்டவர்களும் மட்டும்தான் இடைவிடாமல் புத்தகங்களை வாங்குவார்கள். ஆனால் தங்களிடமிருக்கும் அனைத்து புத்தகங்களையும் அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வாங்கிப் பலகாலமாகிய ஒரு புத்தகத்தை படிக்கலாமென எடுக்கும்போது அந்த புத்தகம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானதாகத் தோன்றும் அனுபவம் எனக்குப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எப்போதாவது அதை புரட்டிப் பார்த்து மறந்திருக்கலாம். படித்த சில புத்தகங்களில் அதைப்பற்றியான குறிப்புகள் வந்திருக்கலாம். படித்த ஏதோ ஒரு நண்பர் அதைப்பற்றிச் சொல்லியிருக்கலாம்.
முழுமையாகப் படித்த புத்தகங்களைப் பற்றியே நம்மிடம் இருப்பது தோராயமான சில நினைவுகூறல்கள்தாம். முழுப்புத்தகத்தையும் நம்மால் ஒருபோதும் நினைவுகூற முடியாது. அனைத்தையும் நினவில் வைக்குமளவில் நினைவாற்றல் இருக்கும் ஒருசிலருக்கு அது சாத்தியப்படலாம். அவர்கள் கணினிகளைப் போன்றவர்கள். ஆனால் அது ஒரு தனித்திறனாகவோ சாதனையாகவோ நான் கருதவில்லை. பாகுபாடில்லாமல், பகுத்தறியாமல் அனைத்தையும் நினைவில் சேமித்து வைப்பதனால் யாருக்கு என்ன பலன்?
படித்தவை படிக்காதவை என்பதைக் கடந்து புத்தகங்கள் என்னிடமிருக்கும்போது நான் தனியனல்ல என்பதை உணர்கிறேன். என்றைக்காவது படிக்க முடியும் என்கின்ற கனவுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குகிறேன். வாழ்க்கையில் வாசிப்பு மட்டுமே இருக்கும் ஒரு காலம் கனவில் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது நடக்காது என்று அறிவேன். என்னிடமிருக்கும் புத்தகங்களில் பலதையும் படிக்காமலேயே நான் இறந்து போகலாம். இருந்தும் கையில் பணமிருந்தால் நான் புத்தகங்களை மேலும் வாங்குவேன். என்னிடம் இருக்கவேண்டும் என நினைக்கும் புத்தகங்களை யார் தந்தாலும் வாங்குவேன்.
காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் பற்றித்தான் இதுவரைக்கும் சொன்னேன். ஆனால் அந்தப் புத்தகங்களின் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டிருக்கிறது. மின் புத்தகங்களின் (eBook) காலம் ஆரம்பமாகிச் சில ஆண்டுகளாகிவிட்டன. 5000 காகிதப் புத்தகங்களை சேகரிக்க எனக்கு 28 ஆண்டுகளாகியது. ஆனால் கடந்த ஒராண்டில் மட்டும் 1000 மின் புத்தகங்களைச் சேர்த்திருக்கிறேன்! அச்சிட்ட வடிவத்தில் என்னிடம் இல்லாதவை அவை. அப்புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன என்கின்ற உடைமை உணர்வுக்காகத்தான் அவற்றை நான் சேர்க்கிறேன் என்றாலும் ஒரு புத்தகம் கையில் இருக்கிறது என்ற உணர்வை மின் புத்தகத்தால் ஒருபோதும் தரமுடியாது.
கின்டில் (Kindle), நூக் (Nook), கோபோ (Kobo), ஐ பேட் (iPad) போன்ற கைக்கணினிகளில் மின் புத்தகத்தைப் படிக்கலாம். கின்டிலில் புத்தகம் படிக்கும் பெரும்பாலானோர் அச்சிட்ட புத்தகங்களுக்கு வைத்திருக்கும் பெயர் ’பழங்காலத்து காகித அட்டை’ (Old Fashioned Paperback) என்று! ஆனால் வேடிக்கையைப் பாருங்கள்! உயர் ரக கின்டில் கருவியின் பெயரே ‘காகித வெண்மை’ (Paper White) என்றுதான்! மின் புத்தகங்களைப் பல மணிநேரம் தொடர்ச்சியாகப் படித்தால் கண் வீங்கிவிடும், அவை கண் பார்வையை வேகமாக மங்கலாக்கும் என்று சொல்லப்படுகிறது.
மின் புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்க முடியாதே! பழைய புத்தகங்களை விற்கும் கடைகளில் ஒரு பழைய மின் புத்தகத்தை கண்டடைந்து சந்தோஷப்பட முடியாதே! வெயிலில் மின் புத்தகம் படிக்க முடியாதே! சுவாரசியமான ஒரு பக்கத்தைப் படித்துகொண்டிருக்கும்போது திடீரென்று மின்சாரம் தீர்ந்து விடுமே! அபிமான எழுத்தாளரின் கையொப்பம் மின் புத்தகத்தின்மேல் வாங்க முடியாதே! புத்தகக் கடைகளின், நூலகங்களின் காகித வாசனையை உணரமுடியாதே! என்றெல்லாம் மின் புத்தகங்களுக்கு எதிராக எவ்வளவு நான் யோசித்தாலும் வரப்போகும் ஆண்டுகளில் காகிதப் புத்தகங்களின் இடம் இல்லாமலாகிவிடும் என்பது உறுதி.
தில்லி விமான நிலையத்தின் புத்தகக் கடையிலிருந்து றஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய பல வண்ணங்களிலான அறை (The Room With Many Colours) எனும் குழந்தை இலக்கியப் புத்தகத்தை வாங்கினேன். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான புத்தகம். விமானத்தில் ஏறின உடனே படிக்கத்துவங்கினேன். எனது பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தவர் மின்புத்தகக் கருவியை வெளியே எடுத்து அதன் குரல்வாங்கியை காதில் சொருவினார். பாட்டு கேட்கப் போகிறாரோ என்று யோசித்து அதன் திரையைப் பார்த்தேன். ஒரு புத்தகம் ’ஓடி’க்கொண்டிருக்கிறது. ஒரு பெண்குரல் மென்மையாக அவரது காதில் அப்புத்தகத்தைப் படித்துக் கொடுக்கிறது. புத்தகங்களை இனிமேல் நாம் படிக்கவும் தேவையில்லை!
பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமா என்னிடம் சொன்னார் ”எங்களது பழைய வீட்டைவிடப் பெரிய வீடு இது. இங்கே வரும்போது, பத்து பைசாவுக்கு உதவாத இதையெல்லாம் வைக்கப் புதுவீட்டில் இடமில்லை என்று சொல்லி, நூற்றுக்கணக்கான எனது புத்தகங்களையும் நாற்பதாண்டுகாலம் நான் எழுதிய நாள் குறிப்புகளையும் தூக்கிப் போட்டார்கள். பழைய அட்டை விலைக்கு கூட அதை வாங்க யாருமே வரவில்லை”. ஈரமான கண்களுடன் அவர் அதைச் சொல்லும்போது இனம் புரியாத ஒரு துயரத்தில் நான் உலைந்துபோனேன். ஒரு வாழ்நாளின் விலையாக நான் வாங்கிய எனது புத்தகங்கள் இடத்தை அடைக்கும் பழங்காலக் குப்பைகளாக ஒருநாள் வெளியே தூக்கி எறியப்படும். அந்த நாளைப் பார்க்க நான் உயிருடன் இருக்கக் கூடாது என்பதுதான் எனது ஆசை..

shaajichennai@gmail.com

சனி, 15 நவம்பர், 2014

கனவு-அன்று-கனவு

எல்லாம் முடிந்துவிட்டது எனக்
கடைசியாக வெளியேறிய போது
கவனித்தான்
பின்புலமற்ற
தூய நிலவிரிவு ஒன்றுabi_photobw01
அவனுக்காகக் காத்திருப்பதை

கனவுபோன்று இருந்தாலும்
கனவு அன்று அது

ஒளியிலிருந்து
இருளை நோக்கிப்
பாதிவழி வந்திருந்தது
அந்த இடம்

கிழக்கும் மேற்கும்
ஒன்றாகவே இருந்தன
தூரமும் கூடத்
தணிந்தே தெரிந்தது

தெரிந்ததில்
எப்போதாவது ஒரு மனிதமுகம்
தெரிந்து மறைந்தது
ஒரு பறவையும் கூடத்
தொலைவிலிருந்து தொலைவுக்குப்
பறந்துகொண்டிருந்தது

சஞ்சரிக்கலாம்
மறந்து மறந்து மறந்து
மடிவுற்றிருக்கலாம் அதில்
நடக்க நடக்க
நடையற்றிருக்கலாம்

ஆயினும்
உறக்கமும் விழிப்பும்
துரத்திப் பிடிப்பதை
அவற்றின் மடிநிறைய
தலைகளும் கைகால்களும்
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்
பார்க்கும் நிமிஷம்
ஒருவேளை வரலாம்

கனவு அன்று எனத் தோன்றினாலும்
கனவாகவே இருக்கலாம்


மாலை - எது

தூசி படிந்த புளியமர வரிசையை
வைதுகொண்டே
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்

வண்டுகளும் பறவைகளும்
தோப்புகளுக்குள்
இரைச்சலைக் கிளறி
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன

இருண்டு நெருங்கி வளைக்கும்
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்
ததும்புகிறது
என் வலி

பொழுது நிரம்புகிறது
ஒரு இடுக்கு விடாமல்
O

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்
சாத்வீக கனத்துடன்
இது எது?

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்
இடறாத என் பாதங்களினடியில்
இது எது
என் சாரங்களின் திரட்சியுடன்
வலியுடன்
அலங்கரித்த விநோதங்களை
அகற்றிவிட்டு
எளிய பிரமைகளின் வழியே
என்னைச் செலுத்தும்
இது எது?


மாலை - தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்
மேய்ந்து களைத்துத்
தணிந்தது வெயில்
என்னோடு சேர்ந்து

இதோ இதோ என்று
நீண்டு கொண்டே போன பாதைகள்
மடங்கிப்
பாலையினுள், முள்வெளி மூழ்கச்
சலனமற்று நுழைந்துகொண்டன

விவாதங்கள்
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன
வழிகளில்
அறைபட்டுத் திரும்பின

முடிவுகள்
அரைகுறைப் படிமங்களாக வந்து
உளறி மறைந்தன

பசியும் நிறைவும்
இரண்டும் ஒன்றாகி
என் தணிவு

வேறொரு விளிம்பைச்
சுட்டிக் காட்டாத
விளிம்பில்
தத்தளிப்பு மறைந்த
என் தணிவு

நிகழும் போதே
நின்றுவிட்ட என் கணம்
குளிரத் தொடங்கியது
என் தணிவைத் தொட்டு


மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது

அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்

உண்டு-இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
O

காத்திருக்கிறேன்
இதுவே சமயமென
எனது வருகைக்காக
என் குடிசையில் வாசனை தெளித்து
சுற்றிலும் செடிகொடிகளின்
மயக்கம் தெளிவித்து
அகாலத்திலிருந்து
இந்த மாலைப்பொழுதை விடுவித்து-

காத்திருக்கிறேன்
மறுபுறங்களிலிருந்து
வெற்றி தோல்வியின்றித் திரும்பும்
என் வருகையை எதிர்நோக்கி

விடைகள்
விடைகள்
மிகவும் மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை

தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை

முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்

என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது

தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது

நான்
ஒன்றும் சொல்லவில்லை

நெளிந்தது

கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது

சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது

நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது

எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்

திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில
சாகசங்கள் மட்டும்


காலம் - புழுதி

எங்கிலும் புழுதி
வாழ்க்கையின் தடங்களை
வாங்கியும் அழித்தும்
வடிவு மாற்றியும்
நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

புழுதி அள்ளித்
தூற்றினேன்

கண்ணில் விழுந்து
உறுத்தின
நிமிஷம் நாறும் நாள்கள்


காலம் - சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்

பழைய
சுள்ளிகள் கிடைத்தன

நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின

குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது

அணைத்து,
கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்

தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

சனி, 27 ஜூலை, 2013

நவீன கவிதை செல்லும் திசை - கலாப்ரியா



நவீன கவிதை அல்லது இன்றைய கவிதை என்னும்போது, நவீன கவிதையின் அரை நூற்றாண்டுக்கும் மேலான பின்புலத்தைத் தொட்டுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன். எழுத ஆர்வமுறுகிற எவரும் முதலில் கவிதையைத் தேர்வு செய்கிறார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாய் இருக்கிறது.நான் பல உரைநடை,சிறுகதை, நாவல் எழுதும் பிரபலமானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ நான் முதலில் எழுதியது, கவிதை”, என்று. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். என்றாலும் அவை எல்லாமும் ஒரே அடித்தளத்தில் சமைந்த பலமாடிக் கட்டிடமாகவோ, ஒரு மரத்தின் பல வேறு கிளைகளும், அதன் இலைகளும், பூக்களும் கனிகளுமாகவே இருக்கின்றன.ஒரு இலக்கிய வாசகனுக்கு அவனது தாய்மொழியில் அமைந்த கவிதைகளே மிகப் பெரிய சொத்து எனலாம்.அதிலும் தமிழ் போல, நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு செம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கு இது மாபெரும் வரம். தினசரி வாழ்வில் கூட நாம் சாதாரணமாய், ஒரு நல்ல உரைநடை வரியைப் படிக்க நேரிட்டால், பொதுப்புத்தி சார்ந்து பலரும், ’ஆகா இது கவிதை” என்று சொல்வதை நாம் கேட்கிறோம்.அந்த அளவுக்கு கவிதை ஆதியானதும் ஒரு உன்னதம் மிக்கதுமாக இருக்கிறது.காலையில் பரபரப்புடன் இயங்கும் ஹாஸ்டல அல்லது மேன்ஷனின் பாத்ரூம்கள், நடுப்பகலில் அமைதியுடன் இருப்பது போல, இயக்கமின்றி, வெற்று அரட்டையை நாடி நிற்கும், சோர்ந்து இருக்கும் மூளையில் திடீரெனத் தோன்றுகிறது, 


”உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னாருடைத்து”.....

என்று ஒரு குறள்.அந்த ’உருள்பெருந்தேர்’ என்ற அற்புதமான சொல்க்கட்டு நினவில் ஒரு பெரிய தேரை உருட்டுகிறது. வலிய தேர்ச்சக்கரப் பதிவாய், மனம் திரும்பத் திரும்ப அந்த வார்த்தையைச் சொல்லிச் சொல்லி அதிசயிக்கிறது.இது கவிதைக்கே சாத்தியம். மரபுக்கவிதை என்றில்லை,நவீன கவிதையிலும் “விரிகிறதென் யோனி” என்ற சொல்ச்சாட்டை சோர்ந்த மூளையைச் சொடுக்கும்போதும் இது சாத்தியமாகிறது. இதையே “நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும் போது நமது உலகமே மாறிப் போகிறது” என்ற ஆங்கில மேற்கோள் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் மொழியின் பரிணாமத்தைப் பார்க்கும் போது, “கவிதை என்பது சிறந்த வார்த்தைகளின் சிறந்த வரிசை” (POETRY IS BEST WORDS IN BEST ORDER) என்கிற ஒரு விளக்கத்தின் படி, சொல்லாடலின்படி - இதை ஒரு கவிதைக்கான வரையறையாகக் கொள்ள முடியாது, கவிதையை அப்படி எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்க முடியாது-பார்த்தோமானால் கவிதைக்கு முந்தியே பல வெளிப்பாட்டு முறைமைகள் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பாடல்கள், பாணர் பாடல்கள் எல்லாம் இவற்றிற்கு உதாரணம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.இன்றைக்கு முப்பத்தியிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களை ஃப்ரான்ஸின் ஒரு குகையில் கண்டு பிடித்துள்ளார்கள். குகை ஓவியங்களின் முதல்க் கண்டுபிடிப்பு இது என்கிறார்கள். அவை சுண்ணாம்புக்காரையின் மீது தீட்டப்பட்டுள்ளன. அவற்றில், பெண்ணின் பிறப்புறுப்பும், மிருகங்களும் உள்ளன என்பது மனோஆராய்ச்சியாளருக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும், மொழி வல்லுனர்களுக்கும் கூடுதல் சுவாரஸ்யம் தரக் கூடியவை. இதைப் பார்க்கையில் முதன் முதலில் சித்திர எழுத்துக்களாலான ஒரு வகை வெளிப்பாட்டு உத்தியே மானுட சிந்தனையின் ஆதி வித்து என்று உணர முடிகிறது. தவிரவும் உடல் - அதன் வலி, தாகம், பசி, பயம், சுகம் ஆகிய புலனுணர்வுகள் – சார்ந்தே சிந்தனை ஆற்றல் வேர் விட்டிருக்கிறது.. அரவிந்தாஸ்மரத்து அன்னை சொல்கிறார். ”உடலைப் பொறுத்து அதன் உழைக்கும் திறனே அறிவு” என்று. இது ஆதி மானுட நிலை பற்றிய பரிணாமத் தேடலின் விளைவு என எண்ண வைக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆதி மனிதனின் உடலுக்கு நேர்ந்த பல அனுபவங்களே அவனைச் சிந்தனையின்பால் செலுத்தியிருக்க வேண்டும்.இதில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிற்கு, அவர்களது நிலவியல் அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள், ஏதோ ஒரு வெளிப்பாட்டு உத்தியினால், தங்களுக்கிடையே பகிர்ந்து, தொகுத்து,ஏதோ ஒரு கருத்துக்கு வந்திருக்கலாம். இந்த அனுபவப் பகிர்தல் நிகழ்வினை சிந்தனை, மூளை என்ற அலகுகளால் பின்னர் குறிப்பிட்டிருக்கலாம்.

நவீன கவிஞர் திரு க. மோகனரங்கன் இதனையே “மனித மனத்தின் இயக்கமானது சிந்தனை, உணர்ச்சி என்ற இருவேறு எல்லைகளுக்கு நடுவே பல நிலைகளில் நிகழ்கிறது.இதில் சிந்தனை என்பது பொதுவாக நேரிடும் அனுபவங்களைத் தொகுத்து ஆய்ந்தறியும் அறிவு ஒருமுகப்படுத்தும் எண்ணங்கள் அதன் வழி உருவாகும் திட்டவட்டமான கருத்துக்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.இதன் குறியீடாக ‘மூளை’உருவகப் படுத்தப் படுகிறது.மாறாக உணர்வுகள் என்பது நினவுகள் மொழி, இனம் நம்பிக்கைகள்,அதன் காரணமான நெகிழ்ச்சி மற்றும் புலன் மெய்ப்பாடுகள் சார்ந்து ஒரு வசதி கருதி ’இதயம்’ என்பதுடன் அடையாளப்படுத்தப் படுகிறது..”, என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார்.

சிந்தனையும் உணர்ச்சியும் என்கிற ’இருமை’(BINARY) ஒன்றுக்கொன்று எதிரானதாகத் தோன்றினாலும், சிந்தனை என்பது தர்க்க பலத்தைக் கொண்ட தத்துவம் சார்ந்து இயங்குகிறது, என்றாலும், உண்மையில் உணர்வின் சாரமில்லாமல் தத்துவம் சாத்தியமில்லை.கவிதை தர்க்க ஒழுங்கை மீறி உணர்வின் பிரவாகமாவே எப்போதும் இருக்கிறது.ஏனெனில் சிந்தனை நிலைப்படுத்துகிற தத்துவமும்,அது நிர்ணயிக்கிற சமூக ஒழுங்கும் காலந்தோறும் சிதைந்து மாறுகிற தன்மையுடையது.இங்குதான் கவிதை கால தேச வர்த்தமானங்கள் தாண்டி நிலைக்கிறது. சமூகச் சிதைவுகளை காட்டி, தத்துவங்களை எள்ளி நகையாடுகிறது.

இயற்கை நிகழ்வுகளும், வாழ்வியல் சித்திரங்களும், அவற்றைக் காட்சிப் படுத்துதல் வழியே அபூர்வமான படிமங்களாக, கவிதையில் இடம்பிடிப்பது, நமது தமிழ்க் கவிதையில் சங்ககாலம் தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.ஆனால் இந்நிகழ்வுசார் படிமங்கள் காலத்திற்கேற்றாற் போல,நவீன கவிதையில் அர்த்த மாறுதல்களை அடைகின்றன..சமூக நிகழ்வுகளுக்கு திட்டவட்டமான வரையறை கிடையாது என்பதால் கோட்பாடுகளையும் சட்டகங்களையும் மீறி புது வியாபகம் கொள்கின்றன.

அகநானூற்றில் ஒரு கவிதை கயமனார் எழுதியது. அதில் ஒரு வரி, ”வேர்முழுது உலறி நின்ற புழற்கால்

தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்..” என்று தொடங்கும்..’முற்றிலும் காய்ந்த மரத்தில் சிள் வண்டுகள், தேரின் மணிகள் போல ஒலிக்கின்றன..’.என்ற அர்த்தத்தில்.இந்தக் கவிதை முழுவதுமாக அகச்சுவை கொண்டது. ஆனால் இன்றைய ஒரு கவிதை, சங்கர ராம சுப்ரமணியன் என்ற கவிஞர் எழுதியது......

”மலையும் மலை மேல் ஒளிரும்
பசுந்தளிரும்
இன்று புதிது.
அந்த மரத்தைக் குடையத்
தொடங்கியுள்ள
வண்டின் ரீங்காரம் போல்
என் சந்தோஷம்
புராதனம் மிக்கது.”

முன்னதில் ஒரு சோகம் நேரிடையாய் இழையோடுகிறது. மேற்சொன்ன இன்றைய கவிதையின் தொனி நமக்கு விவரிக்கும் அனுபவம் வித்தியாசமானது. கவிமனம் பசுந்தளிர் பார்த்து சந்தோஷம் கொள்கிறது. ஆனால் அதே வேளை வண்டுக் குடைச்சலால் மரம் அனுபவிக்கும் துயரையும் அது உணர்கிறது. அதனாலேயே கவிஞன் வண்டின் ரீங்கார இசையைப் புராதானமான ஒன்றாய்க் காண்கிறான். இது ஒரு தொடரும் முரணாகப் படுகிறது அவனுக்கு. நவீன கவிதை பல்வேறு வித வாசிப்புக்கு இடம் தருவதை நாம் அறிய முடிகிறது

அதே போல இதன் அடுத்த வரியில்

“வற்றல் மரத்த பொன்தலை ஓந்தி

வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள.”- என்று வரும். காய்ந்த அந்த வற்றல் மரத்தில் பொன் நிற ஓந்தி வெப்பம் தாங்காமல் உச்சிக்கு ஏறுகிறது.இப்படியெல்லாம் அற்புதமான காட்சிகள் நம் சங்கக் கவிதையெங்கும் விரவிக் கிடக்கின்றன.இந்தக் காட்சியை வாசிக்கையில் இன்னொரு நவீன கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

”தவறுதலாய்
புகைக் கூண்டு வழியே
வீட்டிற்குள் வந்துவிட்ட
ஓணானுக்கு
என்ன நிறம்
மாற்றிக் கொள்வது என்று
தெரியவில்லை.”

வீட்டிற்குள் பலவகையான வண்ணத் துணிகள், படங்கள். காணாததற்கு வண்ணத் தொலைக் காட்சி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது (இது இலவச தொலைக்காட்சிக்கு முந்தியகாலக் கவிதை).இப்போது ஓணானின் நிலை திண்டாட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நினக்கிறேன்.இவை எனது கவிதை வரிகள்.

நவீன கவிதையின் பின்புலம் பெரும்பாலும் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்து உருவானது.’கசடதபற’ என்ற அற்புதமான பத்திரிக்கையும் வானம்பாடியும் ஒரே காலகட்டத்தில் வெளியானது.’கசடதபற’, ‘எழுத்து’, ’நடை’ போன்ற பத்திரிக்கைகளின் தொடர்ச்சி என்றாலும், அதில் வெளித்தெரிந்த கவிஞர்கள், தமிழில் ஒரு புதிய திறப்பை உண்டு பண்ணினார்கள்.ஞானக்கூத்தன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, வா.மூர்த்தி, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், என்று பலர். எல்லோரும் ஏதாவது பணியில் இருந்த அல்லது பணி தேடிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள்.(அதற்கு முந்திய தலைமுறையை பிரதிநிதித்துவப் படுத்தும், க.நா.சு, பிச்சமுர்த்தி, கு.ப.ரா . போன்றோர்,முழுநேர இலக்கியவாதிகள், அவர்களது சோதனை முயற்சிகள் பெரும்பாலும் மேலை நாட்டுத் தாக்கத்துடன்.இருந்தது.) இந்த இளைஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் போல் கவிதையின் உள்ளடக்கத்திற்காக எந்த வகையிலும் மேலைத் தாக்கத்தை சார்ந்திருக்கவில்லை. ஒரு வகையான தமிழ்ப்படுத்துதல் (TAMILISATION) இவர்கள் கவிதைகளின் உள்ளடக்கத்தில் காணப்பட்டது தமிழ்நிலம், தமிழ் வாழ்வு விரிவாகவே பேசப்பட்டது. நகுலன், பசுவய்யா, பிரமிள், ஞானக்கூத்தன் போன்றோர் முந்திய தலைமுறையின் நீட்சியாக இளைய தலைமுறையினருடன் கூடவே வந்தவர்கள். ஞானக்கூத்தனின் சர்ரியலிஸக் கவிதைகளின் பாதிப்பு 70-களின் கவிஞர்களிடம். வெகுவாகவே இருந்தது.

ஆங்கில வார்த்தைகளை சரளமாக உபயோகித்து எழுதப்பட்ட கவிதைகளைப் பார்க்கையில் (அதை எழுதியவர்களேயும், மற்றவர்களும்) எவ்வளவு தூரம் இன்று அதை விடுத்து வந்திருக்கிறர்கள் என்று பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது

உதாரணமாக (எஸ்.கே.)ஆத்மாநாமின் ஒரு கவிதை-1972-ல் கசடதபற இதழில் வெளிவந்தது.

“வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
‘பக்கெட்டு’ நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்?

தமிழின் முக்கியக் கவியாகப் பரிணமித்த ஆத்மாநாமின் ஆரம்பகாலக் கவிதைகள் போல 70-களில் நிறையவே வந்தன.ஆத்மாநாம் போலவே பலரும், பின்னாளில் மிகச் சிறந்த கவிதைகளைத் தந்தார்கள். கவிஞர்.சுகுமாரன் குறிப்பிடுவது போல்70-களுக்கு முன் எழுதியவர்கள், பெரும்பாலும் திருமணமானவர்கள்.அவர்களுடைய கவிதைகளில் ”காதலி என்றால் மனைவிதான்” என்ற நிலை இருந்தது. காதல் மட்டுமென்றில்லை. பல்வேறு உளக்கிடக்கைகளை பகிரங்கப் படுத்த தயக்கம் காட்டினார்களோ என்று தோன்றுகிறது. இந்தத் தயக்கம் எல்லாம் உடைபட்டது 70களில். ஞானக்கூத்தன் தொடங்கி கலாப்ரியா ஈறாக பலர் இதன் காரணகர்த்தாக்களாக இருந்தனர். ”மத்தியவர்க்க அகஜீவிகளின் அந்தரங்க டைரியாக மட்டும் கவிதை தேங்கிய நிலையில், அவ்வறைக்குள் ததும்பி நுரைத்தபடி கலாப்ரியா கவிதைகளினூடாக நிதரிசனத்தின் சாக்கடை உள்ளே நுழைந்தது.....” என்கிற ஜெயமோகனின் அவதானிப்பு இதை விளக்கக்கூடும்.எங்கள் தலைமுறையில் மனத்தடையின்றி காதலைச் சொன்னோம் என்றால், அடுத்த தலைமுறை காமத்தைச் சொல்லுவதில் தயக்கம் காண்பிக்கவில்லை என்கிற சுகுமாரனின் பதிவும் உண்மையே.

வானம்பாடி தன்னை ஒரு இயக்கமாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டது.விலையில்லாக்கவி மடலாக வெளிவந்த ”மானுடம் பாடும் வானம்பாடி” தனது தனித்த தடத்தை தமிழில் பதித்தது.திராவிட அழகியலின் சாரத்துடன் மார்க்ஸீய கண்ணோட்டத்துடன் அதன் கவிதைப் போக்கு அமைந்திருந்தது. இயக்க ரீதியிலான தொனியில் அதன் கவிதைகள் இருந்தாலும் புவியரசு, , சிற்பி, கங்கை, தமிழ்நாடன், ஞானி போன்றோரின் கவிதைகளில் ஒரு தனித்தன்மை இருந்தது.தமிழ்நாடனின் ‘அம்மா அம்மா’ தொகுப்பு ஒரு கலைக்களஞ்சியமாக இருந்தது.அதே போல் புவியரசின் ’மீறல்’, சிற்பியின் ’ஒளிப்பறவை’ ஆகியன பரவலான வரவேற்பைப் பெற்றன.அப்துல் ரகுமானின் பால் வீதி குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பு வானம்பாடியில் வெளியான பல மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனக்கு உத்வேகம் தந்தவை பல உண்டு. ஒரு கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.ஆதித்ய பிரதாப்சிங் என்ற இந்திக் கவிஞர் எழுதியது.

வியட்நாம்

“அக்கம் பக்கம்
வசந்தமில்லை-ஒரு
கபாலத்தின் மீது
வண்ணாத்திப் பூச்சி”

இவை எதிலும் சாராமல் ஆழ் மன அதிசயங்களில் முத்துக்குளித்து அதன் சிக்கலான ரகசியங்களை அருமையாகக் கவிதையில் சொன்னவர் அபி. இவர் அதிகமும் உணரப்படாமல்ப் போனது தமிழின் துரதிர்ஷ்டமே.மோகனரங்கன் சொல்வது போல். “ஓசைகளின் குழப்பத்திலிருந்து மௌனத்தின் தெளிவிற்கு உள்ளிறங்கிச் செல்லும் இவருடைய சொற்கள் அதன் அடங்கிய தொனி காரணமாகவே அதிகம் வெளித்தெரியாமல் தங்கிப் போயின” என்பதில் ஓரளவு உண்மையிருக்கிறது.

70-களின் கவிதை கவிஞர்கள் பற்றிப் பேசும்போது, நாம் ஏற்கெனவே சொன்னோம், இவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் பற்றி. அதன் ஒரு கூறாக ஒரு விஷயத்தைக் காணலாம். இவர்கள், தங்கள் கவிதைகளின் சாரத்தை மேற்கிலிருந்து பெறுவதில் இருந்த முனைப்பு நமது செவ்வியல்க் கவிதைகளின்பால் இல்லை என்பதே அது.ஆனாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அதாவது இன்றைய தேதியில் நவீனத் தமிழ்க் கவிதைகளை மீள் வாசிப்புச் செய்யும் போது, நம்முடையை செவ்வியல்க் கவிதைகளின் மறைமுகமான தாக்கத்தை பலருடைய கவிதைகளில் உணர முடிகிறது.தேவதச்சன்,தேவதேவன், கலாப்ரியா என்று மூத்த தலைமுறையும் சரி,மனுஷ்யபுத்திரன், ரவி சுப்ரமணியன், கனிமொழி, ஃப்ரான்சிஸ்கிருபா என்று அடுத்த தலைமுறையும் சரி... அவர்களது கவிதைகளில் சங்கக் கவிதைகளோ அதற்குச் சற்றே பிந்திய கவிதைகளோ அவற்றின் உள்ளார்ந்த பாதிப்பு, ஒரு அந்தர நதியாக ஊடோடியிருப்பதைக் காண முடிகிறது.உதாரணமாக மனுஷ்யபுத்திரன் கவிதை ஒன்று.


சொற்களைத் தின்னும் பூதம்

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக்கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்று வர முடியுமா
உன்னால்.

இது முழுக்க முழுக்க ஒரு நவீன கவிதை. ஆனால், ஒரு விதமான வாசிப்பில் பூதம் –சதுக்க பூதமாகவும், கண்ணீர் மல்கும் பெண் கண்ணகியாகவும் (மாதவியுமாகவும்) உருக்கொள்வது தவிர்க்க முடியாத செவ்வியல் தாக்கமாவே தோன்றுகிறது.

இதேபோல்

“சிலிர்க்கச் சிலிர்க்க
அலையை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத்துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்கு தருகிறது

இக்கடல்”

பிரான்சிஸ் கிருபாவின் கவிதை இது.தன்னளவிலேயே இது அற்புதமான கவிதை. ஆனாலும்

”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”

என்கிற குறள் நினைவில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.இரண்டின் இயங்குதளமும் சற்றே ஒன்று என்றாலும் இன்றையக் கவிதை ”வலி உணரும் மனிதனி”ன் கவிதை. மேற்குறிப்பிட்ட மனுஷ்யபுத்திரன் கவிதையில் தலைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.கவிதைகளுக்கு தலைப்பு என்பது மேலை நாட்டுத் தாக்கம்.ஆனால் தமிழில் அது கவிதைகளுக்கு கூடுதல் பரிமாணத்தையும், இருண்மையைப் போக்குகிற/விளக்குகிற விதமாயும் இருந்தது.அது இன்னமும் தொடர்கிறது.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”-

இது வள்ளுவரின், இரண்டு அற்புதமான அவதானிப்புகளை ஒன்றிணைத்துச் செய்யப்பட்ட, கவிதை. இதன் வாசிப்பனுபவம் தரும் மனநிலையோடு ரவி சுப்ரமணியனின் ஒரு அழகான கவிதையைப் பார்ப்போம்.

காரல் கமறும் வேளை

“அவனும் நண்பன்தான்
இந்த இடத்திற்கு
இப்போது வருவான்`என
எதிர்பார்க்கவில்லை
என்னை விரும்பியவளை
பிறகு விரும்பியவன்

திரையரங்க இடைவேளையில்
பக்கத்துப் பக்கத்து தடுப்பில்
சிறுநீர் கழிக்கும் வேளையில்
முகமன் கூறும் சங்கடம் போல்
வணக்கம் சொல்லிக் கொண்டோம்..

இந்த விஸ்கி
இப்போது
மேலும் கசக்க ஆரம்பித்துவிட்டது.”

சமகால சராசரி வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை, அதன் சாதாரணத் தன்மையில் பொதிந்திருக்கிற குரூர அல்லது மூக்கைப் பொத்திக் கொள்ளவைக்கிற ஒரு காரியத்தைக் கூட இன்றைய கவிஞன் அழகியல் நிறைந்த கவிதையாக்குகிறான். இது நமக்கு நம் செவ்வியல் கவிகள் தந்த வரத்தினால் விளைந்தது. இதன் மூலம் நாம் கடந்து வந்திருக்கிற தமிழ்க்கவிதையின் பரப்பும் திசையும் இப்போதும் எப்போதும் மிக ஆரோக்கியமானது என்று தோன்றுகிறது.

”ஒரு நல்ல கவிதை புரிவதற்கு முன்பே தன்னை உணர்த்திவிடும்” இது எஸ்ராபவுண்ட் சொன்னது.புரியாமையும் இருண்மையும் நவீன தமிழ்க் கவிதைக்கெதிராக வைக்கப் படுகிற ஒரு குற்றச்சாட்டு. இதைக் குற்றச்சாட்டாகக் கொள்ள் முடியாது.நவீன கவிதை சொல்லியதை விட சொல்லாததன் மூலமே அதிகம் உணர்த்துகிறது. இதற்கும் தமிழில் முன் மாதிரிகள் இல்லாமல் இல்லை. ஒட்டணி என்று சொல்லக்கூடிய பிறிதுமொழிதலணி இலக்கணத்தின் பாற்பட்டு பல கவிதைகளை நாம் புரிந்து கொள்கிறோம். இதற்கு உரையசிரியர்கள் பலவகைகளில் உதவியிருந்தாலும், அவ்வுரைகள் முற்றான முடிவுகளில்லை என்பதை உணர்த்துவதே நவீன கவிதையின் இருண்மைக் கூறுகளில் ஒன்று.ஒரு கவிதை காலம் கடந்து நிற்கவேண்டுமெனில் அதன் உள்ளடக்கம், அது பாடப்பெற்ற காலத்தின் நிகழ்வுகளைத் தாண்டி இன்றைய வாழ்நிலைகளுக்கும், இன்றைய சமூக நிகழ்வுகளுக்கும் பொருந்தி வரவேண்டும்.

“இழைதாக முள்மரம் கொல்க கழையுநர்

கைக்கொள்ளுகம் காழ்த்த இடத்து” - என்ற குறளுக்கு உரையாசிரியர்கள் தருவது, எதிரிகளை அரசன் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பது போல் அமைந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலில், எல்லோருமே இந்நாட்டு மன்னர்களாகி விட்ட சூழலில், இன்றைக்கு அது சொல்லும் செய்தி என்னவாயிருக்கும். இன்று அது பொருள் இழந்த கவிதையா..இல்லை.. முள்மரம் என்ற படிமத்தை கவலை அல்லது பயம் என்று கொள்வோமானால் அது இன்றைக்கும் பொருத்தமான கவிதையாக்வே இருக்கிறது.இப்படிக் ”கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும்” சுவாரஸ்யததைத் தருவதே கவிதை.

தேவதச்சன் எனது காலத்தின் முக்கியமான கவிஞர்.அவருடைய கவிதைகள் தத்துவார்த்தப் பிண்ணனி கொண்டவை. எனினும் மிக எளிமையான சொற்கள் கொண்டவை.

”குளத்துப் பாம்பினது
ஆழத்தில்
தாமரைகள் தலைகீழாய் முளைத்திருக்கின்றன.
மத்-
தியான வெயிலின் தித்திப்பு.
படிக்கட்டில்
ஓரிரு அரசிலைகள்.
இன்னும் ஆழத்தில்
சாவகாசமாய் ஒரு
விண் பருந்து”

இந்தக் கவிதையின் வரிகளில் எந்தப் புதிய சொல்லும் இல்லை. ஆனால் கவிதை அற்புதமான ’சொற்சேர்க்கை’ கொண்டு விளங்குகிறது..

ஒரு பாம்பு குளத்தினாழத்தில் இருக்கிறது.கவிதை முழுமையும் அதன் பார்வையிலேயே சொல்லப் பட்டிருக்கிறது.அதைப் பொறுத்து, தாமரை தலைகீழாய்த் தெரிகிறது...மத்தியான வெயிலின் கடுமை ஆழக்குளிர்ச்சியில் தெரியவில்லை.அது விண்பருந்திடமிருந்து தப்பித்திருக்கிறது அல்லது அது பற்றி அதன் ஆழத்தில் அதற்கு பயமில்லை.சாவகாசமாய் இருக்கிறது.வானில் உயரே பறக்கும் பருந்துக்கு, பாம்பு தரையை விட அதிக ஆழத்தில் இருக்கிறது.” நீ இன்னும் உயரத்திற்குப் போ, அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய்” என்கிற தத்துவார்த்தச் சொல்லாடலைச் சொல்லாமல் சொல்லுகிறது கவிதை. இதை நீங்கள் இன்னும் கூட அற்புதமாக உங்கள் பார்வையில் உணர முடியும்.

80-களின் மத்தியில் அறியப்பட்ட ஒரு முக்கியமான கவிக்குரல் . சுகுமாரனுடையது. அவருடைய பன்மொழி வாசிப்பனுபவம் அவரை ஒரு சிறந்த இலக்கியவாதியாக நிறுவியிருக்கிறது. இறுக்கமான சொற்கள், கச்சிதமான வரிகள்,அதே சமயம், வெற்று அழகியலைத் தூக்கிப் பிடிக்காத உள்ளடக்கம் என்று எனக்குப் பிடித்த கவிஞர்களில் முதலிடத்தைப் பிடிப்பவர். அவரது அருமையான கவிதை-

ஸ்தனதாயினி

இனிய வெண்கலப் பழங்கள்
உன் மர்ர்பகங்கள்
உள்ளே
உயிர் தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால் மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
குழந்தைமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை
பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்
காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்த மனவேளையில்
மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை..

90-களில் தமிழ்க்கவிதை மகத்தான உயரங்களுக்குப் போயிருக்கிறது.அதனால் ஆழமும் அதிகமாய் இருக்கிறது.இந்தக் காலக் கட்டத்தில், எழுதவந்த கவிஞர்கள் பரந்துபட்ட வாழ்க்கை நிலையிலிருந்து கிளம்பியவர்கள், பார்ப்பன வெள்ளாள ஆதிக்கம் மிகுந்திருந்த கவிதையின் சாதிய அடையாளங்களைத் தகர்த்தார்கள். ஃப்ராய்டிய தத்துவம்,சில ஆதித்தடைகள் பற்றி நன்கு விளக்குகிறது.(TOTEM AND TABOO). ஆதிகாலத்தில் எல்லாப் பெண்களும் தனக்கே வேண்டுமென்று எண்ணுகிற தந்தை, வயது வந்த தன் மகன்களை விரட்டி விடுகிறார், அவர்கள் ஒன்று சேர்ந்து தந்தையைக் கொன்று சாப்பிட்டு விட்டு, அந்தக் குற்ற உணர்வோடு, அண்ணன் தங்கை என்ற தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உடலுக்காவே தன்னை ‘நிறுவ’ ஆரம்பித்து பெண்ணை அடிமை கொண்டிருந்த ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பல பெண்ணியக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.பல விலக்கங்களை (டேபூஸ்) பெண்கள் அதன் ஆதித்தன்மையிலிருந்து உணர்ந்து அதை தோலுரித்துக் காட்டுகிறார்கள், தங்கள் கவிதைகளில்.

பெண் என்ற பால் அடையாளத்தால் தான் அடைந்த துயரங்களை தமிழ்க்கவிப்பரப்பில் முதலில் அழுத்தமாகச் சொன்னவர். சுகந்தி சுப்ரமணியன். அதன் பின்னர் உமாமகேஸ்வரி சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.உதாரணமாக

“தொட்டி மண்ணிற்குள்
இட்டவிதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
சமையலறையின் வெம்மையில்
குளீயலறையின் அவசர நிர்வாணத்தில்
படுக்கையறையின் புழுக்க மோகத்தில்
அலைகிறது அதன் அமைதி
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று”

மென்மையான மொழிகளில் கவிதை சொன்ன இன்னொரு பெண்குரல், கனிமொழியினுடையது.

”எமக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை
எனக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களோ
செவிகளோ, கால்களோ
இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்.
தருவதைத் தவிர.”

குட்டி ரேவதி, சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி ஆகியோர் தனித்துவமும் தீவிரமும் கூடிய குரலில் சாதனை படைத்து வரும் கவிஞர்கள்.. “பெண்ணையும் பெண்ணுடலையும் அனைத்தையும் பிறப்பித்து ஊட்டி வளர்க்கும் இயற்கையின் உயிர்சக்தியோடு இணையாகவைத்துக் காணுபவராக..” மாலதி விளங்குகிறார்., என்கிறார் மோகனரங்கன்.இதை இவருடைய ‘நீலி’ தொகுப்பு நன்கு விளக்கும். இவர்கள் தவிர பெண் கவிஞர் என்று தனித்துப் பார்ப்பதை அவ்வளவு விரும்பாத ஆனால் அதே சமயத்தில் பெண்ணீயக் கருத்தாக்கங்களுக்கு ஆதரவாளர்களாக விளங்கும், பல கவிஞர்கள், லதாராமகிருஷ்ணன் (ரிஷி)இளம்பிறை, மு.சத்யா, செ.பிருந்தா, தேன்மொழிதாஸ், தமிழச்சி தங்கபாண்டியன், சக்திஜோதி, லாவண்யா, எனப் பெரிய காத்திரமான பட்டியல் உள்ளது.

80 களின் பிற்பகுதியில் தங்கள் ‘கிரணங்கள் கவிதைகள் மூலம் கண்டெடுக்கப்பட்டு 90 களிலும், இன்றளவும் எழுதி வருகிற மிக முக்கியமான கவிஞர்களாக பிரேம் ரமேஷைச் சொல்லவேண்டும்.இருவரும் பலதளங்களில் இயங்குபவர்கள்,பின் நவீனத்துவம் பற்றிய அதிக பட்ச புரிதல்களுடன் இயங்கிவருபவர்கள்..இன்றைய உலகமயமாக்கல் என்கிற சந்தைப் பொருளாதாரம் - உலகையே தங்கள் உற்பத்திப் பொருட்களுக்காக சந்தையாக்குதல்- நுகர் பொருள் வேட்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க பல அரசியல், கலாச்சார அழகியல் அமைப்புகளை, வளர்ந்த நாடுகள் உருவாக்கி அலைய விட்டிருக்கின்றன. இதன் மூலம், பல்வேறு பட்ட இனக்குழு அடையாளங்களை அழித்து அவர்களின் நிலம், உற்பத்தி,சுயச்சார்பு எல்லாவற்றையும் பிடுங்கி ஒரே மையத்தில், ஒரு முற்றொருமை அடையாளத்தோடு, அவ்வினக்குழுக்களை நிறுத்த முனைகிறார்கள். இதற்கு வளரும் நாடுகளின் அரசியல்வாதிகள் துணை போகிறார்கள்., அவர்கள் செய்வது என்னவென்று தெரிந்தோ தெரியாமலோ.பின் நவீனத்துவம் இம் மையங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.இந்த அரசியல் கலாச்சார சதிகளை உடைக்க முற்படுவதே பின் நவீனத்துவம்.அவர்களின் அற்புதமான கவிதை ஒன்று-

“கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்து விட்டால்
மதிலின் பக்கவாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்

அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று
நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

ரமேஷ் பிரேமின் இன்னொரு கவிதை,

இமயவரம்பன்

பனையோலையில் நீ எழுதிய
காதல் கடிதம் தனது
மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிகொண்டு
அச்சேறுகிறது செவ்விய கவிதையாய்

யோனிப் பிளவை
சரிசமமாக அரிந்த ஆப்பிளின்
உட்பகுதிக்கு உவமை கூறியிருந்தாய்

சங்கம் மருவிய காதலனே
உன் காலத்தில்
காஷ்மீரத்து ஆப்பிள்
தமிழ் மண்ணில் கிடைத்ததா

சங்கம் மருவிய காலமும், மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் முறை ஏற்பட்ட காலமும், காஷ்மீர் ஆப்பிளும் ஒன்றுக்கொன்று முயங்கி நிற்கின்றன.ஆனால் கவிதை முழுமையாக இருக்கிறது.கொஞ்சமான புரிதலுடன் சொன்னால், காலத்தின் மையம் அழிக்கப்ப்ட்டு நிற்கிறது இந்தக் கவிதையில்.

தாயகத்தமிழ்க் கவிதைகளின் பரந்துபட்ட தன்மை, இறுக்கம், சிக்கலான படிமம், இவையெல்லாம் அதிகம் பாதிப்பேற்படுத்தாமல்,பெரிதும் ”சென்றொழிந்த காலத்து மீட்டல்களிலிருந்து விலகிச் செல்ல முடியாத துயரைச் சொல்லுகிற விதமாய் அமைந்துள்ள ஈழக்கவிதைகள், மனதை தைத்து நம் கையாலாகாத்தனத்தை பகடி செய்கின்றன.சேரன், வ. ஐ.ச ஜெயபாலன், கருணாகரன், திருமாவளவன், சிவரமணி, தமிழ்நதி என்று நீளும், இந்தப் பட்டியல். சிவரமணியின் வித்தியாசமான கவிதைகள் முக்கியமானவை.

90 களுக்குப் பின் வந்த கவிஞர்கள் ஏராளம்.இது தவிர்த்து இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் ஏராளம் அதிலும் நல்ல கவிதைகள் கிடைக்கின்றன.

90 களுக்குப் பின்னான முக்கியமான கவிஞர் பாலை நிலவனின் கவிதை ஒன்றைப் பார்க்கலாம்

“சாட்சியம்”

இந்த நிலா ஒளியைத்தான்
நான் யாசித்தது.
ஒரு பழத்தைப் பிழிவது போல்
பிழிந்து அத்ன் சாற்றை
இப்படிஎன் கையில் ஊற்றுங்கள்.
ஒரு மிடறு குடித்தபின் பாருங்கள்.
சகதியும் அகோரமுமான நான்
ஒளித்துண்டாய் விழுவேன்
என் மீது நீங்கள் சுமத்தும்
குற்றங்களுக்கெதிராய்.....
அதுவரைக்கும் இப்படித்தான்.
ஒரு கொடியைப் போன்று காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
உங்களால் கழற்ற முடியாத
என் வன்மம்.

எதற்கு இந்த வன்மம். ஏன் கவிஞன் அந்நியப்பட்டு நிற்கிறான். நவீன வாழ்வின் பதற்றம் இளைஞர்களை சமூக அரசியல் நிகழ்வுகளில் ஒன்ற விடாமல் செய்திருக்கிறது.. இந்த வகையான அந்நியமாதல் இளைஞர்களின் வாழ்க்கையில் காலந்தோறும் நிகழ்வதுதான்.ஆனால் நவகாலனீய ஆதிக்கத்தின் நிழலில் அவர்களால் நிம்மதியாய் உறங்க முடிய்வில்லை. இது அகவயச் சிக்கல் என்ற போதும் புறக்காரணிகளின் தாக்குதலே அச்சிக்கலுக்கு காரணம்.அவர்களுக்கு நேரிடும் வலி கூட்டுணர்வின் வலி. ஆனால் ஒவ்வொருவரின் மொழியும் தனியாக ஒலிக்கிறது.முந்திய காலகட்டங்களில் தனித்தனி தீவுகளாக அந்நியப்பட்ட இளைஞர்களைக் காண நேரிட்டது .இப்போது ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருப்பதாகக் கொள்ளலாம்.

பாலை நிலவனின் வார்த்தைகளில் சொல்வதானால், ”முற்றிலுமாகச் சிதைந்து விட்ட நவீன வாழ்வில், அதன் மீது ஓயாத எதிர்வினை புரிந்து கொண்டிருக்கும் துயர் மிகுந்த வேலையே கவிஞனுக்குச் சாசுவதமாகி விட்டது.தார்மீகமான நம்பிக்கைகள் அழிந்துவிட்ட பெருநகரத்தில் வீடும் அது சார்ந்த அறங்களும் நழுவி விட்டன.கலைஞன் வீட்டைத் துறக்க எத்தனிக்கும் போதெல்லாம் வீடு ஒரு பூனை போல அவன் காலைச் சுற்றுகிறது..தப்பிக்கும் வழியற்றவன் கவிஞன்.ஒரு பூனை போல தன் வீட்டை அவன் சுமந்தாக வேண்டும்.சமூகம் வனவிலங்காகிவிட்ட பின்பு அதில் வாழ்பவனும் வனவிலங்காகி விடுகிறான்.சமூகம் பார்வையற்றது. கலைஞனோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

ரசனை வாசகனாக ஒரு கவிதையை பின் தொடர்பவருக்கு இந்தக்காலக் கவிதைகள் பேரதிர்ச்சியைத் தருவதில் வியப்பில்லை ’மொழியின் பெருங்குகையினுள்’நுழைந்து விட்டவனாகவே இன்றையக்கவிஞன் இருக்கிறான். இதற்கு முந்தைய காலகட்டங்களில் ‘அனுபவங்களின் கொந்தளிப்பா’க மொழி கவிதையில் செயல்பட்டது. இன்று அது புதிர்மொழியாகச் செயல் படுகிறது. வாழ்வை புதிர் வழிப்பாதைகளால் கடக்க நேரிடுவதால் இது நேரிட்டிருக்கலாம்.

இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாக யூமா வாசுகி,கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், சங்கரராம சுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், கடற்கரய், முகுந்த் நாகராஜன்,வா.மணிகண்டன் என்று பலபேரைச் சொல்லலாம்.பட்டியல் முழுமையானதில்லை

நவீனகவிதை வரலாற்றில், ஒடுக்கப்பட்டவர்களின் ஓங்கிய குரல் ஒலிக்க ஆரம்பித்தது 90-களில்தான்.பெண்ணியக்குரல் போலவே தலித்தியம் தன் முழ் வீர்யத்துடன் தடம் பதித்தது.மராத்திய, கன்னட தலித் எழுச்சியைத் தொடர்ந்து தமிழிலும் தலித் எழுத்துக்கள் தோன்றின. இது அம்பேத்கார் நூற்றாண்டை சரியானபடி கொண்டாடும் விதமாக அமைந்ததைக் குறிப்பிட வேண்டும்.தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்படவர்களின் ‘தலைமுறைக்கோபம்’ ஒரு புதிய அழகியலுடன் வெளிப்பட்டது.அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், மதிவண்ணன், கண்மணிகுணசேகரன், ஆதவன்தீக்ஷண்யா, ரவிக்குமார்,என்.டி.ராஜ்குமார்.... என பல படைப்பாளிகள் தோன்றினர்.விளிம்புநிலை மனிதர்கள் பற்றி, நான்,பழமலய் போன்றவர்கள் எழுதியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட புதியவர்களின் இரவல் அனுபவமற்ற கவிப்பரப்பு வேர்வையும் ரத்தமும் சதையும் கொண்டது.ஆனாலும் தலித்திய நாவல்கள், சிறுகதைகள் ஏற்படுத்திய உச்சபட்ச தாக்கத்தை தலித்திய கவிதைகள் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இன்றைய கவிதையின் திசை என்று எடுத்துக் கொள்ளும்போது இன்று முனைப்புடன் இயங்குகிற பழைய புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தையும் சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கட்டுரை அமைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.இந்த கட்டுரைக்கு பல கவிஞர்களின் நூல்கள் குறிப்பாக, க.மோகன ரங்கனின் ’சொல், பொருள், மௌனம்’ நூல், சுகுமாரன், கரிகாலன், பாலைநிலவன், பிரேம் ரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் உதவியாயிருந்தன, அவர்களுக்கு என் நன்றி.