வியாழன், 30 ஜூன், 2011

Chinna ..chinna..




































பட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி.

My Photo

சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்பூம்பட்டினம். திருவெண்காட்டின் கடவுளான ஸ்வேதாரண்யப்பெருமாளைக் குறிப்பதாய் சிறுவயதில் ஸ்வேதாரண்யன் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.



வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் கடல்கடந்தும் பொருளீட்டி மன்னரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். இவரின் செல்வாக்கைக்கருதி மரியாதை நிமித்தமாய் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கும் வகையில் மக்கள் இவரைப் பட்டினத்தார் என்றழைத்தனர்.



சிவகலை எனும் பெண்ணை மணந்த ஸ்வேதாரண்யனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறின்றி வருத்தம் கொண்டிருந்தார். திருவிடைமருதூர் சென்று இறைவனை வழிபடும்போது ஓர் ஆண்குழந்தையை சிவசருமர் என்ற சிவபக்தர் ஒருவர் குளக்கரையில் கண்டெடுத்து அதை பட்டினத்தாரிடம் கொடுக்க அவரும் அக்குழந்தைக்கு மருதபிரான் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தார்.



மகன் வளர்ந்து பெரியவனானதும் வணிகத்துக்காக அவனைத் தயார் செய்து கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். அவனோ திரும்பிவரும்போது எருவரட்டியும் தவிட்டு மூட்டைகளுமாய் வந்திறங்கவே மிகுந்த கோபமுற்றார்.



மருதபிரானோ பதிலேதும் சொல்லாது ஒரு ஓலைத் துணுக்கையும் காதற்ற ஊசி ஒன்றையும் ஒரு பேழையில் வைத்துக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு எங்கோ சென்று விட ஓலைத் துணுக்கைப் பட்டினத்தார் எடுத்துப் படித்துப்பார்த்தார்.



அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.



அந்த வாக்கியமே அவரின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது. தன் ஒப்பற்ற செல்வம் பொருள் அனைத்தையும் துறந்து ஒரு கோவணம் மட்டுமே தரித்துத் துறவு பூண்டார். அவரின் இந்தத் துறவு புத்தரின் துறவுநிலைக்கு இணையான துறவாகக் கருதப்படுகிறது.



அவர் துறவிக் கோலம் தம் குடும்ப கௌரவத்துக்கு அவமானம் உண்டாக்குவதாய் எண்ணிய அவருடைய மூத்த சகோதரி விஷம் தோய்த்த அப்பத்தை உண்ணுவதற்குக் கொடுத்தார்.



அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவரை ஒரு சித்தராகக் கருதி பட்டினத்தடிகள் என்று எல்லோரும் மதிக்கத் தொடங்கினார்கள்.



பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னை மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.



அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையை அடுக்கிப் பற்றச் செய்தார். அன்னையை எண்ணி கொழுந்துவிட்டெரியும் சிதையின் முன்னே பத்துப் பாடல்களைப் பாடினார்.



பெரும் புகழ்பெற்றவையாயும் கேட்பவரின் மனதை உருக்குவதாயும் இருக்கின்றன. அந்தப் பத்துப் பாடல்களும்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்

தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்





பொறுமையாய் இந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க அவற்றின் பொருள் மிக எளியதாய் விளங்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு