புதன், 22 ஜூன், 2011

Meetchi..

 


சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள்

Friday, October 15th, 2010 10:52 am Sai Ram 12 Comments
சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.
கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.
“ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.
“சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான். இது வரை வாயடைத்து போய் அங்கு நிகழ்பவற்றை பார்த்து கொண்டிருந்த ஓர் ஏழு வயது சிறுவன் ஓடி போய் அந்த மனிதனை, தனது தந்தையை அணைத்து கொள்கிறான்.
அவர்களை காப்பாற்றி விட்டோம்,” என முழங்குகிறார்கள் குழுமியிருந்த தொழிலாளர்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கேமராக்கள் எல்லாவற்றையும் படம் பிடித்து கொண்டிருக்கின்றன.
சிலி நாடு
சிலி நாடு
இடம்
தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் நீண்ட கடற்கரையை கொண்ட நாடு தான் சிலி. 1990-ம் ஆண்டு முடிவுற்ற ராணுவ சர்வதிகார ஆட்சிக்கு பிறகு இன்று பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலையான நிலைக்கு உயர்ந்திருக்கிறது இந்நாடு. உலக சந்தைக்கு கதவை திறந்து விட்டதும் அரசாங்க நிறுவனங்களை படிப்படியாக தனியார்மயமாக்குதலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார்கள் வலதுசாரிகள். ஆனால் இடதுசாரிகளோ உலகமயமாக்கலின் தாக்கத்தால் சிலியில் வறுமை அதிகரித்து விட்டது, அதை அரசாங்கம் மறைத்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சிலியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அங்கு இருக்கும் சுரங்கங்கள். செம்பும் தங்கமும் நாட்டை செழிப்புற வைத்து கொண்டிருக்கின்றன. நாடெங்கும் 500, 700 மீட்டர்களுக்கு கூட ஆழமாய் சுரங்கங்கள் உருவாகி இருக்கின்றன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிலியை தாக்கியது ஒரு உக்கிரமான நிலநடுக்கம். ஐநூறு பேர் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தார்கள். மோசமானதை பார்த்து விட்டோம் என சமாதானமான சிலி நாட்டு மக்களை ஏழு மாதங்களில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் பரபரப்படைய வைத்தது. அது அட்டகாமா பாலைவனத்தில் இருந்த சான் ஜோஸ் சுரங்கத்தில் நடந்த விபத்து. விபத்து நடந்த போது முப்பத்தி மூன்று சுரங்க தொழிலாளர்கள் உள்ளே இருந்தார்கள்.
செம்பு மற்றும் தங்கத்திற்கான சான் ஜோஸ் சுரங்கம் நிலத்தில் இருந்து 720 மீட்டர் ஆழமானது. அதன் அடிமட்டத்திற்கு செல்ல ஒன்பது கிலோமீட்டர் வட்ட சறுக்கு பாதை அமைக்கபட்டிருந்தது.
சிலி சுரங்கத்தின் உட்புறம்
சிலி சுரங்கத்தின் உட்புறம்
நாள் – ஒன்று – ஆகஸ்ட் ஐந்தாம் தேதி
மதியம் இரண்டு மணிக்கு சுரங்கத்தினுள் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்தின் போது தூசி படலம் எங்கும் படர்ந்தது. தொழிலாளர்களில் பலர் கண் எரிச்சலில் அவதிபட்டார்கள். அவர்களால் ஆறு மணி நேரத்திற்கு எதையுமே பார்க்க முடியவில்லை.
நிலச்சரிவு நடந்த போது சுரங்கத்தினுள் இரண்டு பிரிவாக தொழிலாளர்கள் இருந்தார்கள். முதல் பிரிவினர் சுரங்கத்தின் வாயிலில் அதாவது நிலத்தின் மேற்புறத்திலே இருந்த காரணத்தினால் அவர்கள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடிந்தது. ஆனால் சுரங்கத்தின் கீழ் மட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் வெளிவர முடியாமல் மாட்டி கொண்டார்கள்.
சான் ஜோஸ் சுரங்கத்தின் உரிமையாளர்களான எம்பரசா மின்னரா நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடியது. சுரங்கத்தினுள் இருந்த முப்பத்து மூன்று பேரும் என்ன ஆனார்கள் என யாருக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் கூட மறைமுகமாக தொடங்கி விட்டன.
சிலி சுரங்க விபத்து
சிலி சுரங்க விபத்து
தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?
விபத்து நடந்த அடுத்த நாள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது.
சிலி நாட்டில் சுரங்கம் என்பது நூற்றாண்டு தாண்டிய ஒரு தொழிலாகும். உலகிலே அதிகமாய் செம்பு தயாரிப்பது சிலி நாடு தான். தென் அமெரிக்காவிலே சுரங்க தொழிலாளர்களுக்கு அதிக கூலி கிடைப்பது சிலி நாட்டில் தான். இருந்தாலும் சுரங்கங்களில் நடக்கும் விபத்து என்பது அங்கு அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. 2000-ம் ஆண்டில் இருந்து வருடத்திற்கு சராசரியாக 34 பேர் சுரங்கங்களில் விபத்திற்கு உள்ளாகி இறக்கிறார்கள் என சொல்கிறது அரசுதரப்பு புள்ளி விவரம்.
விபத்து நடந்த சான் ஜோஸ் சுரங்கத்திலே ஏற்கெனவே விபத்துகள் நடந்திருக்கின்றன. 2004-ம் ஆண்டில் இருந்து 2010 வரை 42 முறை இந்த சுரங்கத்தின் மீது பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் காட்டி அபராதம் வசூலிக்கபட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்திற்கு பிறகு இந்த சுரங்கம் மூடப்பட்டது. எனினும் 2008-ம் ஆண்டு மீண்டும் சுரங்கம் திறக்கபட்டது. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்ற சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை விட 20 சதவீதம் அதிக ஊதியம் வாங்கி கொண்டிருந்தார்கள்.
சுரங்கத்தினுள் மாட்டி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி மிக கடினமானதாக இருந்தது. மீட்பு குழுவினர் சுரங்கத்தில் உள்ள அத்தனை பாதைகளும் மூடப்பட்டதை கண்டுபிடித்தனர். அதோடு உள்ளே கற்கள் ஆபத்தான வகையில் இன்னும் நகர்ந்து கொண்டிருந்தன. விபத்து நடந்து இரண்டாம் நாள், ஆகஸ்ட் ஏழாம் தேதியன்று மீட்பு குழுவினர் அதிக சக்தி வாய்ந்த இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இதன் காரணமாக மீண்டும் சுரங்கத்தினுள் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நிறுத்தபட்டன. சுரங்கத்தினுள் உள்ள பாதைகள், ஏற்கெனவே உருவாக்கபட்ட தடங்கள் எதையும் பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய மார்க்கத்தில் தான் மீட்பு பணி இனி நடந்தாக வேண்டும்.
பதினைந்து சென்டிமீட்டர் அகலமான துளைகள் நிலத்தில் ஏற்படுத்தபட்டு சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் எங்கு சிக்கி இருக்கிறார்கள் என அறியும் பணி தொடங்கியது. முதல் சிக்கல் அந்த சுரங்கம் தொடர்பான அனைத்து வலைப்படங்களும் தவறானவையாக அல்லது பழையவையாக இருந்தன. இரண்டாவது சிக்கல் நிலத்திற்கு கீழே இருந்த பாறைகள் வலுவானவையாக இருந்தன. இதன் காரணமாக துளைகள் போடும் பணி சரியான வகையில் அமையாமல் போனது.
ஊடங்கள் அனைத்தும் சுரங்கத்தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் குடும்பங்களின் நெஞ்சை உருக்கும் சோகம் சிலி நாடு முழுவதும் பரிதாபத்தை உருவாக்கியது.
ஏற்கெனவே நிலநடுக்கமும் சுனாமியும் நிகழ்ந்து அதன்பிறகான மீட்பு பணிகளும் சரியான முறையில் செயல்படுத்தபடவில்லை என்கிற குற்றச்சாட்டு சிலி நாட்டு அதிபர் பினேரா குறித்து சொல்லபட்ட வந்தது. இச்சுழலில் கொலம்பியா நாட்டில் இருந்த அதிபர் பினேரா உடனே நாடு திரும்பினார். தலையில் ஹலிமெட்டும் சுரங்க தொழிலாளர்களுக்கான ஜாக்கெட்டும் அணிந்து அவரே முன் நின்று மீட்பு பணியை கவனிக்க தொடங்கினார்.
விபத்து நடந்து பதினான்கு நாட்கள் கழித்து 19 ஆகஸ்ட் அன்று சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்பட்ட இடம் வரை துளைகள் அமைக்கபட்டு விட்டன. ஆனால் அங்கு யாரும் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மீட்பு பணியை சிலி நாடே உற்று கவனித்து கொண்டிருந்த சூழலில் எங்கும் இறுக்கமான அமைதி நிலவியது.
மூன்று நாட்கள் கழித்து 21 ஆகஸ்ட் அன்று நிலத்தில் இருந்து 688 மீட்டர் கீழே சென்று வந்த ஒரு போர் பம்ப் மீது ஒரு துண்டு காகிதம் ஒட்டபட்டிருப்பதை மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.
மதியம் 3:17-க்கு அதிபர் பினாரா ஊடகங்களுக்கு முன்பு தோன்றினார். மகிழ்ச்சியில் பூரித்திருந்த முகத்தோடு அவர் ஒரு துண்டு காகிதத்தினை உலகத்திற்கு காட்டினார். அது ஒரு சிறு காகித துண்டு.
பாதுகாப்பு அறையில் நாங்கள் 33 பேரும் பாதுகாப்பாக இருக்கிறோம்,” என்று சிறிய தகவல் அதில் எழுதபட்டிருந்தது. பதினேழு நாட்கள் சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் வெளியுலக உதவியின்றி அதிசயமாக உயிர் தப்பி விட்டார்கள்.
கண்டெடுக்கபட்ட காகிதம்
கண்டெடுக்கபட்ட காகிதம்
பாதாளத்தில் நரக நாட்கள்
விபத்து நடந்தால் ஓடி பதுங்கி கொள்ள பாதுகாப்பு அறை ஒன்று சுரங்கத்தின் கீழே உருவாக்கபட்டிருந்தது. அங்கு தான் 33 பேரும் தஞ்சமடைந்து இருந்தார்கள்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று விபத்து நடந்தவுடன் சுரங்கத்தின் கீழ்மட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் ஏணிகள் மூலமாக வேறு பாதையில் தப்பிக்க முயன்றார்கள். ஆனால் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஏணிகள் அங்கு காணோம். அதோடு தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக விரைவிலே அந்த பாதையும் மூடப்பட்டு விட்டது.
லூயிஸ் உர்சூவா என்பவர் தான் விபத்து நடந்த போது கீழ்மட்டத்தில் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன் நிலைமையின் தீவிரத்தினை முதன்முதலில் உணர்ந்தவர் அவர் தான். சுரங்கத்தின் பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த 33 பேரில் அனுபவமுள்ள சில தொழிலாளர்கள் மட்டும் சுரங்கத்தின் ஏதேனும் ஒரு பாதை திறந்து இருக்காதா, பாதாளத்தில் இருந்து நாம் தப்பி விட மாட்டோமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெளியுலகத்திலிருந்து எல்லா தொடர்பும் பாதைகளும் மூடப்பட்டு விட்டன.
சுரங்கத்திற்கு உள்ளே வெப்பமும் வெக்கையும் மிக அதிகமாக இருந்தது. தொழிலாளர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு அறை ஐம்பது சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதோடு சுரங்கத்தின் துண்டிக்கபட்ட இரண்டு கிலோமீட்டர் சுரங்கப்பாதை அவர்கள் வசமிருந்தது. அங்கே சிறு சிறு குழிகள் தோண்டி நீர் எடுத்தார்கள். அதோடு சுரங்கத்தினுள் இருந்த வாகனங்களின் ரேடியேட்டர்களில் இருந்தும் தண்ணீர் கிடைத்தது. வாகனங்களில் இருந்த பாட்டரிகள் மூலம் தங்களது ஹலிமெட்டுகளின் விளக்குகளுக்கு சார்ஜ் செய்து கொண்டார்கள். பாதுகாப்பு அறையில் உணவு மிக குறைவாக தான் இருந்தது. சாதாரண பயன்பாட்டில் மூன்று நாட்களுக்கு மேல் காலியாகி இருக்க கூடிய உணவினை தொழிலாளர்கள் மிக சிக்கனமாக பயன்படுத்தி கொண்டிருந்தனர். இதன் காரணமாக சில நாட்களிலே ஒவ்வொருவரும் பத்து கிலோ எடை குறைந்து போய் விட்டார்கள்.
மீட்பு குழுவினர் துளைகளை ஏற்படுத்தி போர் பம்புகளை நிலத்திற்கு கீழே அனுப்பி கொண்டிருந்த போது அந்த சத்தத்தினை சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களும் கேட்டார்கள். ஆனால் அந்த சத்தம் அவர்கள் இருக்கும் பக்கம் நெருங்கி வர நாட்கள் ஆயின. தங்கள் பகுதிக்குள் அந்த பம்புகள் நுழைந்தவுடன் அதில் காகிதத்தினை ஒட்டுவதற்கு ஆயுத்தமாக இருந்தனர். அது நிலத்தின் மேற்பரப்பு செல்லும் வரை கிழியாமல் இருக்க அதன் மேல் ஒட்டுவதற்கு டேப்புகளையும் கைவசம் தயார் செய்து வைத்திருந்தனர்.

உலகம் பார்த்த முதல் காட்சி இது தான்
முதல் குரல்
காகிதம் கண்டெடுக்கபட்ட சில மணி நேரங்களில் அதே துளை வழியாக ஒரு கேமரா அனுப்பபட்டது. சுரங்கத்தில் இருந்த 33 பேரும் உயிரோடு இருப்பதை வெளியுலகம் அறிந்து கொண்டது இப்படி தான்.
அடுத்த நாள் தொலைபேசி இணைப்பு கீழ்பகுதியோடு ஏற்படுத்தபட்டது. தொழிலாளர்களின் குடும்பங்கள் அவர்களோடு உரையாட முடிந்தது.
மீட்பு பணிகளில் ஒரு சிக்கலும் நேர்ந்து விடக்கூடாது என்பதால் மிக கவனமாக அடுத்தடுத்த நகர்வுகள் திட்டமிடபட்டன. ஆனால் மீட்பு பணி முழுமையடைய பல மாதங்கள் ஆகலாம் என சொல்லபட்டது. டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் வரை ஆகலாம் என்கிற தகவல் உறுதி செய்யபட்டது.
சூரிய வெளிச்சம் இல்லாத வாழ்க்கை
மனித வரலாற்றில் நிலத்தின் இவ்வளவு ஆழத்தில் தனியே சிக்கி கொண்ட மனிதர்கள் இவ்வளவு நீண்ட காலம் உயிரோடு வாழ்தல் என்பது இது முதல் முறை.
தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் உலகம் முழுவதும் இருந்து கொட்ட துவங்கின. அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தனி குழு ஒன்று மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டது. விண்வெளியில் உள்ள விண்கலனில் மாதக்கணக்கில் தனியே தங்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை போல நிலத்திற்கு கீழே சிக்கியுள்ள தொழிலாளர்களும் சிக்கனமாக லாவகமாக தங்களுக்கான வசதிகளை உருவாக்கி கொள்ள திட்டங்கள் வகுக்கபட்டன.
உளவியல் மருத்துவர்கள் தொழிலாளர்களுக்கு இடையே மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து 33 பேர்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டனர். ஒரு பிரிவு மீட்பு பணிகளுக்கு உதவும். மற்றொன்று பாறைகள் மீண்டும் நகரும் ஆபத்தினை கண்காணித்து பாதுகாப்பினை உறுதி செய்யும். மூன்றாவது பிரிவு 33 பேரின் உடல்நலத்தினை மேற்பார்வையிடும். இவர்கள் எல்லாருக்கும் கண்காணிப்பாளர் லூயிஸ் உர்சூவா தலைமை தாங்குவார். இருப்பதிலே வயது முதிர்ந்தவரான மரியோ கோமஸ் ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு மன உறுதி ஏற்படுத்துவார் என முடிவெடுக்கபட்டது. வெளியுலகில் இரவு பகல் என ஏற்படும் மாற்றத்தை போலவே சுரங்கத்திற்குள்ளும் வெளிச்சத்தை கூட்டியும் குறைத்தும் காட்டும் விளக்குகள் அமைக்கபட்டன.
33 பேரில் பலருக்கு கடுமையான தோல் வியாதிகள் உண்டாயின. அவர்களுக்கு தேவையான மருந்துகளும் தடுப்பு ஊசிகளும் அனுப்பப்பட்டன. மருத்துவர்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொழிலாளர்களோடு உரையாடினார்கள். உறவினர்கள் தொழிலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்ப அனுமதிக்கபட்டனர். ஆனால் கடிதங்கள் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தபட்டது.
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
சுரங்கத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங்
மீட்பது எப்படி?
உலக ஊடங்களின் பார்வை சான் ஜோஸ் சுரங்கத்தின் மீது படிந்து விட்ட நிலையில், மீட்பு பணிகள் மிக துரிதமாக நடக்க துவங்கின.
1955-ம் ஆண்டு ஜெர்மனியில் சுரங்கத்தினுள் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தபட்ட டாக்ல்பஸ்ச் பாம் என்கிற லிப்ட் போன்ற கூண்டினை அடிப்படையாக கொண்டு ஒரு கூண்டு தயாரிக்கபட்டது. அந்த கூண்டிற்கு பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்டது. பீனிக்ஸ் என்கிற பறவை தான் இறந்த பிறகும் தன் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் என்பது மேற்கத்திய பழங்கால நம்பிக்கை.
லிப்ட் போன்று பீனிக்ஸ் சுரங்கத்திற்குள் போய் வர 66 சென்டிமீட்டர் அகலமுள்ள துளை உருவாக்கபட்டது. முதலில் முழு நீளத்திற்கும் சிறிய அளவிலான துளை உருவாக்கபட்டது. பிறகு துளையின் அகலம் விரிவாக்கும் பணி நடந்தது. துளையிடும் பணி நடக்கும் போது மிக பெரிய அளவு தூசியும் கற்துண்டுகளும் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் பகுதியில் நிரம்பின. ஒவ்வொரு நாளும் இருபத்தி நான்கு மணி நேரமும் ஷிப்ட் போட்டு சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்கள் அந்த குப்பைகளை அகற்றியபடி இருந்தார்கள். மூன்று இடங்களில் மூன்று துளைகள் இப்படி போடப்பட்டன.
பீனிக்ஸ் இயந்திரத்தில் பயணிப்பவர் வயிற்றுபகுதி 35 சென்டிமீட்டருக்கு மேல் இருக்க கூடாது. இதனால் துளையிடும் பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் கீழே தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாய உடற்பயிற்சிகளும் சொல்லி கொடுக்கபட்டன.
சிலி நாட்டில் கால்பந்து போட்டி மீது மக்களுக்கு மிக பெரிய காதலுண்டு. முக்கிய கால்பந்து போட்டிகள் நடந்த சமயம் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் தங்களுக்காக அனுப்பப்பட்ட தொலைக்காட்சி பெட்டியில் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்டியினை பார்த்து கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்த நாள் செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் இடம் பெற்றன.
33 தொழிலாளர் குடும்பங்களின் சோகம் உலக அளவில் பேசு பொருளானது. ஒரு தொழிலாளரின் மனைவிக்கு இச்சமயத்தில் குழந்தை பிறந்தது. மற்றொரு தொழிலாளரின் மனைவி தன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி அனுப்பினார். தொழிலாளர்கள் எழுதிய கடிதங்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தன.
மீட்பு பணிகள் துரித வேகத்தில் நடந்தாலும் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 68 நாட்கள் கடந்து போயின. மூன்று இடங்களில் துளையிடும் பணியில் ஓரிடத்தில் மட்டும் வேலை முழுமையாக முடிவடைந்தது. அந்த துளையினுள் பீனிக்ஸ் கூண்டினை இறக்கி தொழிலாளர்களை உடனே மீட்பது என முடிவெடுக்கபட்டது.
மீட்கும் திட்டம்
மீட்கபட்டது எப்படி?
அக்டோபர் 12-ம் தேதி, அறுபத்தி எட்டாவது நாள் சுரங்கத்தில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் இயந்திரத்தில் நிலத்திற்கு மேலே கொண்டு வரபடுவார்கள் என அறிவிக்கபட்டது. பல நாடுகளில் இருந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த மீட்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப துவங்கின.
33 பேரில் யார் முதலில் செல்வது என போட்டி ஏற்படவில்லை. ஆனால் அதற்கு பதில் யார் இறுதியில் செல்வது என்று தான் போட்டி ஏற்பட்டது. 33 பேருக்கும் தலைமை தாங்கிய லூயிஸ் உர்சூவா கடைசி நபராக வெளியேறுவார் என முடிவெடுக்கபட்டது. சுரங்கத்தில் இருந்து வெளியேறும் முதல் நான்கு மனிதர்கள் இருப்பவர்களிலே நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்களாக தேர்ந்தெடுக்கபட்டார்கள். ஐந்தாம் நபர் தொடங்கி இருப்பதிலே மோசமான உடல்நிலையில் இருப்பவர்கள் முதலில் அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவானது.
இரவு ஏழு மணிக்கு மீட்பு குழுவை சேர்ந்த மேனுவல் என்பவர் பீனிக்ஸில் ஏறி கீழ் நோக்கி பயணித்தார். சிலி நாட்டின் அதிபர் பினேரா அவரை வழியனுப்பி வைத்து விட்டு அங்கேயே காத்திருந்தார். சிலி நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களில் பலரும் நடந்து கொண்டிருப்பவற்றை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலி நாட்டில் பள்ளிக்கூடங்கள் அன்றைய தினம் விடுமுறை விடபட்டன.
திட்டமிட்டதை விட மிக தாமதமாக பீனிக்ஸ் இரவு பதினொரு மணி முப்பத்தி ஆறு நிமிடத்திற்கு தொழிலாளர்கள் இருக்குமிடத்திற்கு வந்தடைந்தது. 68 நாட்கள் கழித்து 33 பேரும் புதிய மனிதரை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் மேனுவலை கட்டி அணைப்பதும் உணர்ச்சிவசப்படுவதும் சுரங்கத்தினுள் நடப்பது அனைத்தும் அங்கிருந்த கேமரா மூலம் வெளியுலகிற்கு நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பீனிக்ஸ் இயந்திரத்தின் மேற்கூரையில் இருந்த கேமராவும் மீட்பு பணியை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது.
மேனுவல் கீழே சென்று சேர்ந்தவுடன் பீனிக்ஸ் காலியாக மேலே வரும் அதற்கடுத்து மற்றொரு மீட்பு பணியாளர் கீழே போவார். அதற்கு பிறகே தொழிலாளர்களை மேலே அனுப்புவது என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் மேனுவல் சுரங்கத்திற்கு சென்று சேர்ந்தவுடனே கைவிடப்பட்டது. உடனே 33 தொழிலாளர்களில் ஒருவரான பிளாரன்சியோ அவலோஸ் பீனிக்ஸில் ஏறி மேல் நோக்கி பயணிக்க தொடங்கினார். ஏறத்தாழ பதினேழு நிமிடங்கள் பாதாளத்தில் பயமுறுத்தும் பயணத்திற்கு பிறகு பிளாரன்சியோ நில மேற்பரப்பை வந்தடைந்தார். அவருக்காக அங்கே அவரது மனைவி மோனிகாவும் ஏழு வயது மகனும் காத்திருந்தார்கள். கூடவே சிலி நாட்டு அதிபரும் மீட்பு குழுவினரும் மருத்துவர்களும் இருந்தார்கள். பிளாரன்சியோ தனது மகனை தழுவிய போது அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் இதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த நூறு கோடி மக்களில் பலரும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
68 நாட்கள் கழித்து குடும்பத்தாருடன்
இப்படியாக மீட்பு படலம் தொடங்கியது. ஒவ்வொரு தொழிலாளியும் வெளியே வருவதும் அவரது குடும்பம் கண்ணீரோடு அவரை அணைத்து கொள்வதும் அதனை நாட்டு அதிபர் அருகில் இருந்து பார்ப்பதுமாக உணர்ச்சிபூர்வமான சந்திப்பு காட்சிகள் அரங்கேறின.
33 பேரில் ஒருவர் மட்டும் அருகில் இருக்கும் பொலிவியா நாட்டினை சேர்ந்தவர். அவரை அழைத்து செல்ல பொலிவியா நாட்டு அதிபரே சான் ஜோஸ் சுரங்கத்திற்கு வருகை தந்திருந்தார்.
மீட்பும் கண்ணீரும்
மீட்பும் கண்ணீரும்
பீனிக்ஸ் முதல் ஆறு கீழ் நோக்கிய பயணத்தில் ஆறு மீட்பு குழு உறுப்பினர்கள் சுரங்கத்தின் கீழ்பகுதிக்கு பயணித்தனர். 33 தொழிலாளர்களும் மீட்கபட்ட பிறகு ஆறு பேரும் ஒருவர் பின் ஒருவராக பீனிக்ஸ் மூலம் மேலே வந்தனர். முதலில் பயணித்த மேனுவல் கடைசி நபராக வெளியே வந்தார். எல்லாரும் நிலத்தின் மேற்புறத்திற்கு சென்று விட்ட பிறகு தனி நபராய் அந்த பாதாள அறையில் தான் இருந்ததை மேனுவல் பிறகு பத்திரிக்கைகளுக்கு பேட்டியாக கொடுக்க கூடும். மேனுவல் மேலே நிலபரப்பிற்கு திரும்பிய பிறகு அதிபர் பினேரா இரும்பு மூடி கொண்டு அந்த பாதாளத்தடத்தினை அடைத்தார். இனி இந்த சுரங்கம் சிலி நாட்டு மக்களின் ஒற்றுமையையும் மன உறுதியையும் குறிக்கும் வகையில் நினைவு இடமாக பாதுகாக்கப்படும் எனவும் அதிபர் அறிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக சுரங்கத்தினுள்ளே இருந்து விட்ட காரணத்தினால் மீட்கபடும் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு கண்ணாடி அணிந்தே இருக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு இருந்தது. ஏனெனில் திடீர் வெளிச்சம் அவர்களது கண்களை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினார்கள்.
திட்டமிட்டதை விட மீட்பு பணிகள் விரைந்து முடிந்தன. ஒவ்வொரு ஆளாக மேலே வருவதும் தனது குடும்பத்தை கட்டி அணைப்பதும் தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனியாக இருந்தது. நாள் முழுக்க கூடவே இருந்த அதிபர் பினேராவிற்கு பல நாட்டு அதிபர்களிடம் இருந்து பாராட்டு போன்கால்கள் வந்தவண்ணமிருந்தன. அவருக்கு சிலியில் மக்களிடையேயான செல்வாக்கு வெகுவாக உயர்ந்து விட்டதாக உள்ளூர் பத்திரிக்கைகள் சொல்கின்றன. போப் ஆண்டவர் மீட்பு பணி நடக்கும் போது அது வெற்றி பெறுவதற்காக பிராத்தனை செய்யும் வீடியோவும் ஒளிபரப்பானது.
கிடைக்கும் பணம் பகிர்ந்து கொள்ளபடும்
சுரங்கத்தில் இருந்து மீட்கபடுவதற்கு முன்னரே உள்ளே இருந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்க போகும் மிக பெரிய புகழ் வெளிச்சத்தை அறிந்தே இருந்தனர். தொலைக்காட்சிகளில் பங்கேற்பதற்கு கொடுக்கபடும் பணம், புத்தகம் எழுத கொடுக்கபடும் பணம், பத்திரிக்கை பேட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை யார் சம்பாதித்தாலும் அது 33 பேருக்கும் சரி சமமாக பங்கிட்டு கொள்ளபட வேண்டுமென அனைவரும் ஒருமனதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.
சுரங்கங்களுக்கு பேர் போன சிலி நாட்டில் இனி விபத்து நடக்காமல் தவிர்க்க எல்லாவித பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதி செய்யபடும் என அதிபர் அறிவித்து இருக்கிறார். 33 தொழிலாளர்களும் அதிபரோடு கால்பந்து விளையாடுவதற்காக அழைக்கபட்டு இருக்கிறார்கள்.
பார்த்தவர்கள் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்த இரண்டு மாத கால மீட்பு சம்பவம் ஒரு வழியாக சுபமாக முடிந்தது. மனித வரலாற்றில் மறக்க முடியாத கணங்களில் ஒன்றாக இதுவும் இருக்க போகிறது.

திங்கள், 20 ஜூன், 2011

CHITTHIRAM pesuthadi...

காலம் என்பது கழங்கு போற் சுழன்று - தீராக்காதலி கிறுக்கியது கொழந்த On 15 - May - 2011 26 பின்னூட்டம்




காலம் என்பது கழங்கு போற் சுழன்று

மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்







1940களில் ஒரு நாள்:

My Photo

ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்....கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.





1944:

ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.





1959:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.







“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.







தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.





பி.யூ.சின்னப்பா:





M.T.B - ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை



“பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.





எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்:





கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக - அந்த ஏழு ஆண்டுகளிலும் மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் - மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு "தீராக்காதலி" என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.

எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:

எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது௦) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா...எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்" என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?.புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.





காலம் என்பது கழங்கு போற் சுழன்று

மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்





– மனோன்மணீயம்







இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு - Circle of Zen - உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு - பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.





என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட - சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்" இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு இசை விமர்சகர் ஷாஜி ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி.



ஏனென்றால் சாரு அவர்களே, இந்த புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார்.என் சிற்றறிவிற்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ - சாரு அவர்களைத் தவிர்த்து - எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் - காதல் - இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷத்தை எழுத்தாளர்கலாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.





இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் - அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்து தாராளமாக நீங்களும் சொல்லலாம்.

•ஆரம்ப கால தமிழ் சினிமா (31-41) பாகம்-1 அறந்தை நாராயணன்

•ஆரம்ப கால தமிழ் சினிமா (42-51) பாகம்-2 அறந்தை நாராயணன்

•ஆரம்ப கால தமிழ் சினிமா (52-56) பாகம்-3 அறந்தை நாராயணன்

•பயாஸ்கோப் - அசோகமித்ரன்

•எம் தமிழர் செய்த படம் - தியடோர் பாஸ்கரன்

•சித்திரம் பேசுதடி - தொகுப்பாசிரியர்: தியடோர் பாஸ்கரன் - காலச்சுவடு

Karunthel kannayiram Kanavugal.

Saturday, June 11, 2011


காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை





எழுதியவர்.....ஜோஸ்ஷான்



காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..



பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.



நல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.



மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.



அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.



சுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.



பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..



ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.



நகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.



பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..



இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.



தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.



வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.



ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.



சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.



காலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.



காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.



ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.



ஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.



ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.



அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.



அய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.



கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.



தொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.



நாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.



ஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.



மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills



Charu.

டென்.டௌனிங்கும் நிர்பீஜ ஸமாதியும்…


June 13th, 2011

உங்களுடைய பிரதான எதிரியே நீங்கள்தான் என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நண்பர் ஒருவர். என்னைப் பற்றி எப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகள் பெரும்பாலும் என்னுடைய எழுத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. என்னுடைய ஹீரோ தற்கொலை செய்து கொண்டால் ‘சாரு தற்கொலை முயற்சி’ என்று இணையத்தில் தலைப்புச் செய்தி வருகிறது. அதைப் போலவேதான் நான் எப்போதும் குடியும் குட்டியுமாகவே இருப்பேன் என்பதாகவும் ஒரு வதந்தி. ஆனால் நிஜத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. என் கூடவே வாழும் என் மனைவிக்குக் கூடத் தெரியாது. சேலத்தில் ஆர். குப்புசாமி என்ற ஒரு அறிஞர் உண்டு. இந்தியத் தத்துவத்தை அலசி ஆராய்ந்தவர். கருணாநிதி திருவள்ளுவரை ஏதோ திமுகவின் உறுப்பினர் என்பது போல் ஒரு பில்ட் அப் கொடுத்து வைத்திருப்பது போல் குப்புசாமியை ஜெயமோகன் தன்னுடைய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்டவர். குப்புசாமியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயத்தில் சந்தேகம் கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதியிருந்த பதில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் குப்புசாமி என் கடிதத்தையும் அதற்கு அவர் எழுதிய பதிலையும் அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் தற்செயலாக ஒரு வாசகர் அதை எனக்கு அனுப்பி ”அந்த சாரு நீங்கள்தானா?” என்று கேட்டு எழுதியிருந்தார்.



30 ஆண்டுகளுக்கு முன்பே நான் விவேகானந்தர் எழுதிய ஞான தீபம் தொகுதிகள் 12-ஐயும் படித்திருக்கிறேன். ஓரளவுக்கு இந்தியத் தத்துவ மரபிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் எழுத்தை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அது புரியும். ஸீரோ டிகிரியை இந்துத்துவ நாவல் என்று தாக்கி ரமேஷ் பிரேதன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது நினைவு வருகிறது. இதற்குக் காரணம், இந்தியத் தத்துவ மரபையே இந்துத்துவமாகப் பார்க்கும் குறுகிய மனோபாவம்தான். இந்து மதத்தில் பல தத்துவப் பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று, சூன்ய வாதம். இதற்கும் ஜென் பௌத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸீரோ டிகிரி அந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. மேலும், அந்த நாவல் பல்வேறு கிளைவழிகளையும் புதிர்ப்பாதைகளையும் கொண்டது என்பதால் ஒரே ஒரு தத்துவ மையப் புள்ளியோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியாது.



நான் எழுதும் டென்.டௌனிங் மேட்டரைப் பற்றி மட்டுமே வாசகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து 30 ஆண்டுகளாக மேலை மற்றும் கீழைத் தேசங்களின் தத்துவங்களை விவாதித்து வருகிறேன். நிறப்பிரிகையில் எஸ்.என். நாகராசன் என்பவரின் ஆசார இந்துத்துவம், ஆசார மார்க்சீயம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடி நான் எழுதிய ஜென் பௌத்தம் குறித்த கட்டுரைகளையும் ழான் பால் சார்த்தர், ஃபூக்கோ போன்றவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொடர்களையும் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். பின்வருவது ஆர். குப்புசாமிக்கு நான் எழுதிய கடிதமும் அதற்கு அவருடைய பதிலும்.

dear mr kuppusamy



how are you. hope you remember me. i am charu nivedita.



now i have a doubt in patanjali’s yoga chutra. in pada one (samadhi pada) in the last sloka, he says tasyapi nirodhe sarvanirodhan nirbija samadhi.



then in the second pada (sadhana pada) he talks about ashtanga yoga. 8 limbs. here, samadhi comes as the eighth one. the ultimate state. what is the difference between these two?



would you please explain.



regards and lov

charu



september 10, 2009.



Dear Mr,Charu



I am glad to hear from you.



Patanjali’s ashtanga yoga has 8 limbs:



1.yama,

2.niyama.

3.asana.

4.pranayama,

5.pratyahara,

6.dharana,

7.dhyana ,and

8.samadhi.



Samadhi is the general term.In samadhi there are many types.The last one is callednirbijasamadhi.Bija means seed.Nirbija means seedless.Only in this type of samadhi seeds or vasanas are totally destroyed.Only in this samadhi, a yogi goes beyond the boundary of prakriti and enters for the first time into the region of the Purusha.

Thanking you,



Love



- R.Kuppusamy



mail id : r.kuppusamy@gmail.com



வெள்ளி, 17 ஜூன், 2011

Pattinathar

உடல்கூறு வண்ணம்


உடல்கூறு வண்ணம் பட்டினத்தார் எழுதிய பாடல்,


My Photo


பிறப்பு முதல் இறப்பு வரையான மனிதனின் அத்தனை செயல்களும் ஒரே பாடலில் உள்ளது,



உன்னதமான இந்தப் பாடல் வாழ்வின் நிலையாமையை ஒரே பாடலில் புரிய வைத்துவிடுகிறது



•••





உடல்கூறு வண்ணம்



பட்டினத்தார்



ஒரு மடமாது ஒருவனும் ஆகி, இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி,



உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து, 2



பனியில் ஓர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்து, திரண்டு,



‘பதுமவரும்பு கமடம்இது’ என்று பார்வை, மெய், வாய், செவி, கால், கைகள் என்ற 4



உருவமும் ஆகி, உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து, மடந்தை



உதரம் அகன்று, புவியில் விழுந்து, யோகமும் வாரமும் நாளும் அறிந்து, 6



மகளிர்கள் சேணை தர, அணையாடை மண்பட உந்தி உதைந்து, கவிழ்ந்து,



மடமயில் கொங்கை அமுதம் அருந்தி, ஓரறிவு ஈரறிவு ஆகி வளர்ந்து, 8



ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து,



மடியில் இருந்து மழலை மொழிந்து, “வா, இரு, போ,” என நாமம் விளம்ப, 10



உடைமணி ஆடை அரைவடம் ஆட, உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு,



தெருவில் இருந்து புழுதி அளைந்து, தேடிய பாலரொடு ஓடி நடந்து



அஞ்சு வயதாகி விளையாடியே . . . , 12



உயர்தரு ஞான குரு உபதேசமும், தமிழின் கலையும் கரை கண்டு,



“வளர்பிறை,” என்று பலரும் விளம்ப, வாழ் பதினாறு பிராயமும் வந்து, 14



மயிர்முடி கோதி, அறுபத நீல வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து,



மணி பொன் இலங்கு பணிகள் அணிந்து, மாகதர் பூகதர் கூடி வணங்க, 16



“மதன சொரூபன், இவன்!” என மோக மங்கையர் கண்டு, மருண்டு, திரண்டு,



வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது கண்டு, 18



மனது பொறாமல் அவர்பிறகு ஓடி, மங்கல செங்கலசம் திகழ் கொங்கை



மருவ, மயங்கி, இதழ் அமுது உண்டு, தேடிய மாமுதல் சேர வழங்கி, 20



ஒருமுதலாகி முதுபொருளாகி இருந்த தனங்களும் வம்பில் இழந்து,



“மதன சுகந்த விதனம் இது,” என்று, வாலிப கோலமும்வேறு பிரிந்து, 22



வளமையும் மாறி, இளமையும் மாறி, வன்பல் விழுந்து, −இரு கண்கள் −இருண்டு,



வயது முதிர்ந்து, நரைதிரை வந்து, வாத விரோத குரோதம் அடைந்து,



செங்கையினில் ஓர் தடியுமாகியே 24



வருவதும், போவதும், ஒருமுது கூனும் மந்தி எனும்படி குந்தி நடந்து,



மதியும் அழிந்து, செவிதிமிர் வந்து, வாயறியாமல் விடாமல் மொழிந்து, 26



துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து, வரண்டு,



துகிலும் இழந்து, சுணையும் அழிந்து, தோகையர் பாலர்கள் கோறணி கொண்டு, 28



“கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும்!” என்பவர் சஞ்சலம் மிஞ்ச,



கலகல என்று மலசலம் வந்து, கால்வழி மேல்வழி சார நடந்து, 30



தெளிவும் இராமல், உரையும் தடுமாறிச், சிந்தையும் நெஞ்சும் உலைந்து, மருண்டு,



திடமும் அலைந்து, மிகவும் மலைந்து, “தேறினால் ஆதரவு ஏது?” என நொந்து, 32



“மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்!” என்று தெளிந்து,



“இனியென கண்டம்! இனியென தொந்தம்! மேதினி வாழ்வும் இலாது இனி நின்ற 34



கடன்முறை பேசும்!” என உரை நா உறங்கி விழுந்து, கைகொண்டு மருந்து



கடைவிழி கஞ்சி ஒழுகிட வந்து, பூதமும் நாலும் சுவாசமும் நின்று,



நெஞ்சு தடுமாறி வரும் நேரமே . . . , 36



வளர்பிறை போல எயிறும், உரோமமும், சடையும், சிறுகுஞ்சியும், விஞ்சு



மனதும் இருண்ட வடியும் இலங்க, மாமலை போல எம தூதர்கள் வந்து 38



வலைகொடு வீசி, உயிர்கொடு போக, மைந்தரும் வந்து குனிந்து அழ, நொந்து



மடியில் விழுந்து மனைவி புலம்ப, “மாழ்கினரே இவர்; காலம் அறிந்து 40



பழையவர் காணும்!” எனும் அயலோர்கள் பஞ்சு பறந்திட, நின்றவர் “பந்தர்



இடும்!” என வந்து பறையிட முந்தவே, “பிணம் வேக விசாரியும்!” என்று 42



பலரையும் ஏவி முதியவர் தாமும்,இருந்த “சவம் கழுவும் சிலர்!” என்று,



பணி துகில் தொங்கல் களபம் அணிந்து, பாவகமே செய்து, நாறும் உடம்பை 44



“வரிசை கெடாமல் எடும்!” என, ஓடிவந்து இளமைந்தர் குனிந்து சுமந்து,



கடுகி நடந்து, சுடலை அடைந்து, ‘மானிட வாழ்’வென ‘வாழ்’வென நொந்து, 46



விறகிடை மூடி, அழல்கொடு போட, வெந்து விழுந்து, முறிந்து, நிணங்கள்



உருகி, எலும்பு கருகி, அடங்கி ஒருபிடி நீறும் இராத உடம்பை



நம்பும் அடியேனை இனி ஆளுமே!

புதன், 13 ஏப்ரல், 2011

Padugai.


My Photo

படுகை

Buzz It
வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மேjeyamohan ட்டில், அவர் பெயருடனேயே நினைவில் உதிக்கும் அந்த வினோத பாணியில் கால் மடக்கி அமர்ந்து, முன்னும் பின்னும் அசைந்தாடி, உடும்புத்தோல் உடுகை மூன்று விரல்களால் மீட்டி, எங்களூரின் எழுபது வருடக் கதையைப் பாடுவார். கீழ்வானில் பனைமர மண்டைகளின் ஊடே ஒற்றை வெள்ளி மினுங்க ஆரம்பித்துவிட்ட பிறகும் அவர் குரல் கேட்டுக் கொண்டிருக்கும். வைக்கோற் படுக்கையில் சாய்ந்தபடி தூக்க மயக்கத்துடன் கேட்போம். அப்படியே கனவில் பிரவேசித்து, சிங்கியின் குரல் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரப் பிரமைகளில் அலைவோம். சட்டென்று விழித்துக்கொள்ளும்போது, உலகுடன் பிணைக்கும் நிஜம் போல அவர் குரல் இருட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் கண்களில் மினுக்கம் தெரியும். விடிவதற்கு சற்ற முன்புதான் அவர் தலை சரியும். குரல் உடைந்து இழுபட்டு ஒடுங்கும். அவர் கதை ஒரு போதும் முடிவடைந்ததில்லை. தரையில் அப்படியே சரிந்து விடுவார். விடிந்து வெயிலேறிய பிறகே அவரில் உயிர்க்களை வரும். அவரைச் சுற்றி எச்சில் சிதறிக் கிடக்கும். வாரியலும் கையுமாய் நின்று முத்தம்மா சத்தம் போடுவாள். “சீராத்தேன் இருக்கு, பறப்பயலுக்க ஒப்பரம் சேந்துக்கிட்டு ஏமான்மாரும் தலையெங்க காலெங்க எண்ணு கெடக்கியது. ஏமான், கொச்சேமான் . . .” என்று உசுப்புவாள். “வல்ல காரியம் உண்டுமா, இஞ்ச வந்து கெடக்கியதுக்கு ? பனியோ தீனமோ வந்தெங்கி ஆருக்கு நட்டம் ? இனி நான் காணட்டு. பிலேய் சிங்கி, பறப்பயலுக்க ஒறக்கத்தைப் பாரு. பிலேய் . . .” என்று கத்துவாள். வெறுந்தரையில் விசிறப்பட்டது போல சிங்கி கிடப்பார். அவர் அருகே இரவெல்லாம் எழுப்பிய ஒலியைத் தலைக்குள் ரீங்காரமாய் நினைவுறுத்தும் அந்த உடுக்கு. இரவின் நினைவுகள் பகல் ஒளியில் வெகுதூரமாய், கனவாய் மாறிவிட்டிருக்கும். அதற்கு சம்பந்தமேயற்றவராகச் சிங்கி அப்போது தென்படுவார். பனியும் புழுதியும் படிந்த கரிய வற்றி உடம்பு மூச்சில் மெல்ல அசையும். அவருக்கு வெயில் மழை பொருட்டல்ல, களத்து மூலைப் பனைமரம் போல.
பேச்சிப்பாறை அணைக்காக சர்வே எடுத்தபோது தான் அவர் பிறந்தார் என்பார் சிங்கி. எந்தக் கதையும் அவர் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகும். மெல்ல மெல்ல தாளம் கலந்து, உரை நீண்டு பாடலாக மாறும். உடுக்கு இயல்பாக இணைந்து கொள்ளும். அவருக்கு எத்தனை சொன்னாலும் அலுக்காத கதை செம்பன் துரையின் இதிகாசம்.
அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலிபோட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம் தெரியாமல் இலைப் படப்பு. ஊடு வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒற்றையடிப்பாதை. அது பேச்சி மடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடுமங்காடு சுரம் தாண்டி, அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டு மிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல் நாட்டு வாசியின் வாசம் கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது. பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி. ஆருக்கும் அடங்காத பேச்சியை அடக்க வந்தவன்தான் செம்பன்துரை. அவன் கருப்புக்கட்டியும் கஞ்சாவும் கொடுத்து காணிக்காரர்களைத்தான் முதலில் வசப்படுத்தினான். காற்றுக்கும் அஞ்சாமல், காலனுக்கும் அஞ்சாமல், காடெல்லாம் சுற்றி அலைந்தான். அவன் கால்பட்ட இடமெல்லாம் பச்சை கருகி பாழாகப் போயிற்று. காட்டு மிருகங்களெல்லாம் அவனைக் கண்டு கவைக்கிடையே வால் செருகி, கும்பிப் பதறி ஓடின. பறவையெல்லாம் சிறகடித்து வானத்திலே தவித்தன. அவன் விரல் நீட்டி நில் என்றால் புலிகூட வால் நீட்டி, உடல் நெளித்து, முகம் தாழ்த்தி நின்றுவிடும். செம்பன்துரை மானுடனே அல்ல. இந்திரன் ராஜ்ஜியத்தில் இந்திராணி அரண்மனையில் காவல் நின்று வந்த கரும்பூதம். கடமையிலே தவறு வர, கடும்சாபம் பெற்று, மனித உருப்பெற்று, மந்திரவசப்பட்டு, பூலோகம் வந்தவன். மந்திரத்தால் பூதத்தைக் கும்பினியான் கட்டியாண்டான். தூக்காத சுமையெல்லாம் தூக்க வைத்தான். செய்யாத சோலி எல்லாம் செய்ய வைத்தான். பேச்சியின் திமிரடக்கி, வள்ளியைப் பெண்டாள, வரமும் வரிசையும் கொண்டு, உத்தரவும் தீட்டூரமும் பெற்று, செம்பன்துரை வந்தான் என்று சிங்கி பாடுவார்.
எங்கள் இளம் பருவத்திலேயே வள்ளியாறு ஒரு நீல ரிப்பன் போல ஆகிவிட்டிருந்தது. மழைக்காலத்தில் வெகு அபூர்வமாய் இருகரை தொட்டு சகதி மணக்க சுழித்தோடுவதுண்டு. “அவ கெடந்த கெட என்னா ? நடந்த நட என்னா . . . பிடிச்சிக் கெட்டிப் போட்டோனே செம்பன்தொரெ! கள்ள அறுவாணிக்க ஊற்றத்த அடக்கிப் போட்டானே” என்பார் சிங்கி. கை நீட்டி சிவன்கோயில் முற்றத்தைக் காட்டி, அது வரை வெள்ளம் வரும் என்பார். “நீங்க என்னத்த கண்டிய கொச்சேமான் ? அறுதலித் தேவடியா மொவ கொஞ்ச பேருக்க தாலியவா அறுத்திருக்கா ? கொல நிண்ண வாளையையும் மண்டை பூத்த தெங்கயுமில்லியா பிளுதுகிட்டு வருவா மூடோட ? இப்பம் கண்டுதா மூதிக்க கெடப்ப ? அடிச்சுப் போட்ட சாரப்பாம்பு கணக்காட்டு. அம்பிடும் வெஷம். செம்பன் தொர வராம இருந்தானெங்கி கூறுகெட்ட தேவடியா மவ ராச்சியத்த மிளுங்கிப்போட மாட்டாளா ?” சிங்கி வாயெடுத்தால் வள்ளிக்குக் கெட்ட வார்த்தைதான். ஒரு மழைக் காலத்தில் அவள் பேய் பிடித்து ஓடியதில் சிங்கியின் அப்பனும், அம்மையும், வீடும், சிறு தோப்பும் மொத்தமாய் தேங்காய்ப்பட்டணம் கடலுக்குப் போய்விட்டன. “கண்ணில்லாத மூளி, கொலம் கெடுத்த பாவி” என்பார் சிங்கி.
ஈரக்கண்ணாடி போல வானம் இருந்த ஒரு மாலை நேரம். நாங்கள் பேச்சிப்பாறை பெரிய அணையைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கு ஆக்ரோஷமான வள்ளியைக் கட்டிப் போட்டிருக்கவில்லை. குலஸ்திரீ போல சிமிட்டி வளைப்புக்குள் நீலம் நெளியக் கிடந்தாள். மதகு வழியாகக் கண்ணீர் போலக் கொஞ்சம் நீர் வழிந்தது. விளிம்பெல்லாம் ஓராயிரம் காலடிச்சுவடுகள் பதிந்து உலர்ந்த தவிட்டுநிறச் சேறு. தூரத்து மலையைச் சுட்டிக்காட்டி ராதா கிருஷ்ணன் சொன்னான், அதுதான் சிங்கியின் வண்ணத்துப் பூச்சிகளின் படுகை இருக்குமிடம் என்று. அந்த மலை நீலநிறப் புகையால் செய்யப்பட்டது போலிருந்தது. அதற்கு மேல் இலேசாக ஒளிர்ந்த மேகம் படிகச் சிற்பம் போல உறைந்து நின்று விட்டிருந்தது.
அணைக்கு இப்பால் ஒரு செயற்கைத் தோட்டம். காட்டுக்குள் வழி தவறி வந்த நகரத்துக் குழந்தை போல குரோட்டன்ஸ் சிவப்புடன் நின்று கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஏழெட்டு மரங்கள் தூங்கி விட்டிருந்தன. நீர் நெளியும் ஒலி. பறவைகள் கூடணையும் ரகளை. மேற்கு முனையில், தேக்குமரமொன்றின் அடியில் செம்பன்துரையின் சமாதி கிடந்தது. ஏனோ அதற்குக் கண்ணில் குத்துகிற மஞ்சள் நிறம் பூசியிருந்தார்கள். துரைக்குப் பிடித்தமான பச்சைநிறம் பூசியிருக்கலாம். அல்லது சிவப்பு நிறம். “இஞ்ச பாருங்க கொச்சேமான் சென்னா நம்பாது. அந்த மாதிரி ஒரு மனியன இனிம பார்த்துக்கிட ஒக்காது. கொச்சேமான் செவல நெறத்தில மனியனைப் பாத்திருக்குதா ? செவலத் தலமுடி, செவலக் கண்ணு, செவல மூக்கு . . . தல தொட்டு காலு வரெ செவல நெறந்தேன். என்னத்தைத் தின்னுவானோ பய சிரிச்சாண்ணு சென்னா புலி வாயைப் பெளந்தது மாதிரியேன் இருக்கும். ஒண்ணும் செல்லாண்டாம் ஏமானே, ஆளைக்கண்டா மதி; மூத்திரம் தன்னால போவும். பூதமில்லா அவன், செவலப்பூதம்!”
பேச்சியை வென்ற செம்பன்துரை பறவைகளின் எச்சம் வீச்சமடித்த மரத்தடியில் பசுந்தழைப் புதருக்குள் தனிமையில் கிடந்தார். அந்தப் பெயரை வாசிக்க இயலவில்லை. சகட்டு மேனிக்கு சாயம் பூசி விட்டிருந்தார்கள். அவருக்கு நடமாட முடிந்ததென்றால் அப்பகுதியிலேயே இருக்கமாட்டார் என்றேன். குரோட்டன்ஸ் செடிகளின் நிழலை அவர் எப்படித் தாங்கிக் கொள்வார் ? அவரென்ன பேச்சிக்கூடத்தான் ஓடிப் போயிருப்பாள் என்றான் ராதா கிருஷ்ணன், அந்தச் சிறு பிரதிஷ்டையைச் சுட்டிக் காட்டியபடி, சதுர வடிவிலான பெரிய கல் மேடை மீது கரடு முரடான பிரம்மாண்டமான ஒரு மரம் நின்றிருந்தது. பெரிய, தடித்த இலைகள் மண்டிய, கிளைகள் நான்கு பக்கமும் தழைந்து கீழே வந்து கூடாரம் போலக் கவிழ்ந்திருந்தன. உள்ளே அரை இருள். ஈரமாய் சருகு மக்கிய சொத சொதவென்ற தரை. மரத்திலே அறையப்பட்டதாய் அம்மனின் வெண்கல முகம். கீழே கரிய பலிபீடம். ஒரு வாரத்துக்கு முந்தைய பூக்கள் சிதறிக் கிடந்தன. சகட்டு மேனிக்குக் குங்குமம் அப்பப்பட்டிருந்தது.

பேச்சியம்மன் சோரயில்லா
பேய்ஞ்சுதூ மலை மேலே
பேச்சியம்மன் முடியல்லோ
பிளுதெறிஞ்சான் செம்பன்தொரெ . . .
என்று சிங்கியின் குரல் கேட்பது போலிருந்தது.
காணிக்காரர்கள் வழிகாட்ட, வேட்டை நாய்கள் பின்தொடர. சிவப்புக் குதிரை மீதேறி, செம்பன்துரை வள்ளியைப் பெண் பார்க்கப் போனான். சுழித்தோடிய கன்னியைக் கண்டு உற்சாகம் கொண்டு சிரித்தான். “ஓடுதியா ? ஓடு. எம்பிடு நாளைக்கு ஓடுவே எண்ணு நானும் பாக்குதேன்” என்றான். “ஒன்னியக் கெட்டிப் போட்டுத் தானெடி இந்தச் செம்பன்தொரெ போவான்” என்று பயமுறுத்தினான். பயந்துபோன வள்ளி பேச்சி மூன் சென்று நின்று புலம்பினாள். கோபம் கொண்ட பேச்சி காட்டுக்குள்ளே செம்பன் துரையை வழிமறித்தாள். யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்து, மலை மேலே கால் வைத்து, மேகத்திலே தலை வைத்து, கொடும் பல்லும், விஷ நாக்கும், கனல் கண்ணும், இடிச் சிரிப்புமாய் விஸ்வரூபம் கொண்டு நின்றாள். சகல ஜீவசாலங்களும் அப்படியே உறைந்தன. பறந்த குருவி வானத்திலே நிற்க, விழுந்த அருவி மலைமேலே தொக்க, காடெல்லாம் நடுநடுங்க, வானமெல்லாம் எதிரொலிக்க இடிபோல குரலெழுப்பி, மின்னல் போலே பல் காட்டி பேச்சி கேட்டாள்: “எந் தலமுடிய வெட்டுயதுக்கா வந்தே மக்கா ? என் மவளெ பிடிச்சு கெட்டுயதுக்கா வந்தே மக்கா ? ”
துரை பதறவில்லை. “ஓமெடி பேச்சி, நீ பேயானா நான் பேயன். ஒனக்க ஆட்டத்தைக் கண்டு பயந்து போவேன் எண்ணு நெனச்சியா ? வளிய விட்டு மாறி நில்லுடி மூதி” என்றான். அவன் சாமானியனல்ல, இதில் எதோ சூதிருக்கிறது என்று பேச்சியும் உடனே புரிந்து கொண்டாள். மானம் முட்டும் உடல் சுருக்கி, மலைக்குறத்தி உருவம் கொண்டு, முத்தாரமும் முதுசந்தனமும் அணிந்து, தேன் போல மொழியும் தெவங்காத சிரிப்புமாய் வந்து ஒசிந்து நின்றாள். சிருங்கார பாவம் காட்டிச் சிரித்தாள். ஒன்றுக்கு நூறென்று மாயங்கள் சொல்லி வாதம் செய்தாள். பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு . பேச்சி தந்த வரம் வள்ளிக்க. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். மலையரசி பேச்சி நாடு காக்கும் தெய்வம். நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்ககு வாசனையும் தந்து ரட்சிப்பவள். காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டு அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது. பேச்சி தாங்கமாட்டாள். அம்மை கோபம் குலமழிக்கும். ஊர் முடிக்கும். சோதிக்காதே ஓடிப் போ என்றாள். துரை மசியவில்லை. “சோலியைப் பாத்துக்கிட்டுப் போடி. நான் வள்ளியைக் கெட்டத்தான் வந்தேன். கெட்டிப் போட்டுத்தான் போவேன். ஒன்னால முடிஞ்சதைச் செய்யி” என்று சொல்லிவிட்டான்.
கோபம் தாங்காமல் பேச்சி உடல் நடுங்கினாள். மார்பை அறைந்து, மதம் கொண்டு அலறி, காற்றாய் மாறிக் காட்டுக்குள் விரைந்தாள். நாணல்புதல் போலே காட்டு மரம் கூத்தாட, மானும் மிளாவும் மானத்திலே பறக்க, சுழற் கூத்தாடினாள். மலையிறங்கி ஊருக்குள் புகுந்தாள். வீட்டுக் கூரையெல்லாம் பட்டம் போலே பறக்க, ஆடும் மாடும் பறந்து விழுந்து சாக, ஊரைச் சூறையாடினாள். நாலாம் நாள் பேய்மாரி. வீடேது தோப்பேது வயலேது வரப்பேது என்று தெரியாதபடி வெள்ளம். ஐந்தாள்நாள் வள்ளி வந்தாள். பனங்குலைபோலே கூந்தலவிழ்த்துப் போட்டு, மார்பில் அறைந்து கூவியபடி, சிவப்புச் சேலை அலைபாய ஊருக்குள் புகுந்தாள். வைக்கோல் போர் முதல் அடுக்களைப் பானை வரை அள்ளிச் சுருட்டிச் சென்றாள். பத்தாம் நாள் விடியலில் மெழுகிப் போட்டது போல் ஊரெல்லாம் சேறு. எங்கிருந்து வந்தனவோ, எங்குப் பார்த்தாலும் பறவைகள். காக்கையும், கழுகும், கொக்கும், குருவியும் சேற்றுப் பரப்பின்மீது சிறகடித்தன. குரலெழுப்பிச் சண்டை போட்டன. ராத்தியெல்லாம் வீட்டுக் கூரைமீது வந்தமர்ந்து ‘பேச்சியம்மோ பேச்சியம்மோ’ என்று குரலெழுப்பின. ஜனங்கள் பயந்தனர். பிரம்ம கோபமோ இந்திர சாபமோ என்று நடுங்கினர். மலைக்கோவில் பகவதிக்கும் முடிப்புரையில் தேவிக்கும் கொடை நேர்ந்தனர். கும்பி கொதிப்பாற்ற ஆம்பற்கிழங்கும் சேற்றுமீனும் சேகரிக்க சகதியில் துழாவி அலைந்தனர்.
பேச்சி அடங்கவில்லை. அவள் கல்மனசு கரையவில்லை. தழையுடை அணிந்து, நார்ப்பெட்டி இடையில் ஏந்தி கனல் போலக் கண்ணும் துருத்தி போல மூச்சுமாய் ஊருக்குள் நடமாடினாள். “ஏனக்க பிள்ளியள விட்டுப்போடு பேச்சி” என்று காலில் விழுந்த முடிப்புரை அம்மையை, பேச்சி முடியைப் பிடித்து சுழற்றி வீசினாள். வாளும் சூலமும் ஏந்திப் போருக்குப் போன மலைக்காவில் தேவியை உதைத்துக் தள்ளினாள். பிரம்மா சொன்னாலும் அடங்கமாட்டேன் என்று கொக்கரித்தாள். கை நிறைய விஷவித்துக்களை வாரி ஊரெங்கும் தூவினாள். மின்னல்பட்ட காடுபோல விஷம் விழுந்த இடமெல்லாம் கருகிப் போயிற்று. அவள் கால் போன இடமெல்லாம் மசானப் புகை மணத்தது. மலைக்காவில் பகவதியும் முடிப்புரையில் அம்மையும் கோயில்களுக்குள் முடங்கி கண்ணீர் வடித்தனர். பேச்சியைக் கட்ட ஆளில்லை. அவள் நடமாட்டத்தைக் கண்டவன் பூசாரி முத்தன் மட்டுமே. “பேச்சி எறங்கிப் போட்டா, ஊரைக் குளம் தோண்டிப் போட்டுத்தான் அடங்குவா” என்று அவன் தெருத்தெருவாய் நின்று பிரச்சாரம் பண்ணினான். துரை பேச்சியைத் தீண்டி அசுத்தம் செய்ததுதான் ஊர் அழியக் காரணம் என விளக்கினான். பேச்சியை தணுப்பிக்க வள்ளியாற்றங்கரையில் கிடா வெட்டி, பூஜை போடவேணும் என்றாள். “அங்களம் முடிஞ்ச பூசெ. அதுக்கிப்பம் கிடாய்க்கு எங்க போறது பூசாரியாரே” என்றவர்களை முத்தன் ரத்தம் கட்டிய கண்களால் உற்றுப் பார்த்து, “முத்தனுக்ககிட்ட சென்னது போகட்டும். பேச்சிக்க அடுக்க செல்ல நிக்காண்டாம். பிடாரியாக்கும் அவ” என்று எச்சரித்தான். எல்லாரும் துரையைச் சபித்தார்கள். அவனை ஒழித்த பூசாரி முத்தன் செய்வினை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அது அத்தனை எளிதல்ல என்றான் முத்தன். மாந்திரிக திருஷ்டியால் பார்த்து துரை மனிதனல்ல பூதம் என்பதைக் கண்டு வெளிப்படுத்தினான். பசியில் பறந்த ஜனம் செலவேறிய பூசைக்கு மட்டும் ஒப்பவேயில்லை.
அப்போதுதான் துரையே குதிரைமீது ஏறி அங்கு வந்ததாய் சிங்கி உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வார். சிவப்புக் குதிரைமீது அமர்ந்து, தொப்பியும் கால்சராயும் சட்டையும் அணிந்து, ரெட்டைக்குழல் துப்பாக்கியும் கையுமாய், செண்டை வாத்தியக்காரன் முன்னால்வர, ஊர் நாய்கள் புடைசூழ, காணிகள் இருவர் காவல் வர, அவன் வந்த ஜோரைக் கண்டு பெண்களும் குழந்தைகளும் ஓடி ஒளிந்து கொண்டனர். செண்டைக்காரன் ஊர் ஜனங்கள் வந்துகூட வேண்டும் என அறிவித்தும் ரொம்ப தைரியசாலிகளான சிலர் மட்டும் வந்து பார்த்தார்கள். பேச்சிப் பாறையில் கூலி வேலைக்கு வருபவர்களக்குத் தினம் இரண்டணா படித்தரமும், வயிறு முட்ட சீரகச் சம்பா அரிசிச் சோறும் என்று செண்டைக்காரன் கூவினான். அதெல்லாம் தரமாட்டான், சும்மா சொல்கிறான் என்று ஊரார் தயங்கினார்கள். உடனே துரை அதை மூன்றணாவாய் உயர்த்தினான். தலைப்புலையன் கண்டன் ஏழெட்டுதரம் அதைக்கேட்டு உறுதி செய்து கொண்டபிறகு, “எங்க சாதியே அங்க வாறதுக்கு ஒருக்கம்தேன் ஏமானே” என்று செண்டைக்காரன் காலிலே விழுந்தான். மூன்று வேளை சோறும் மூன்றணாவும் என்ற மந்திரம் ஊர் ஊராகப் பரவியது. பேச்சியின் ராச்சியத்திலா என்று மூத்த பறையர்கள் பிரமித்தார்கள். ஊர் அழியப் போகிறது என்று நாயர்கள் அடியாளரைக் கூட்டி உபதேசம் செய்தார்கள். “பேச்சியைக் செண்ணு மயித்துச் செல்லு” என்று இளவட்டங்கள் காறித் துப்பினார்கள். வயிற்றுப்பாட்டுச் சனம் அலை பாய்ந்தது. பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா ? திருட்டாந்தம் காட்டணுமா ? காட்டினது போராதா ?” என்று துள்ளினான். முதற்கும்பல் புறப்படுவதுவரை குழப்பம்தான். “இங்க கெடந்து நாறுவதைக் காட்டிலும் அங்க செண்ணு சாவிலாம். தொரை கஞ்சி வெள்ளமெங்கிலும் தாறதாச் செல்லுதான். பேச்சி இஞ்ச மட்டும் கெடக்கவிடுதாளா அறுதலி மூதி” என்று கண்டன் புலையன் ஒரு கும்பலோடு கிளம்பிப் போனான். மறுநாள் முதல் ஊரே குடிபெயரத் தொடங்கியது. மந்தைகள் வள்ளியாற்றங்கரையில் கண்ணில் பட்டதையெல்லாம் மேய்ந்தும், கழிவிட்டும், கூச்சலிட்டு ரகளை செய்தும், இராத்தங்கி முன்னேறின. அவற்றின் குளம்படியோசை சேறுபடிந்த ஊர்களின் மீது எதிரொலி செய்தது. நிம்மதி கெட்டு இடம் பெயர்ந்த நதிக்கரை நீர்க்கோழிகள் ஊருக்குள் புகுந்து குரலெழுப்பி அச்சான்னியம் சொல்லின. ஊர்களெங்கும் பீதியும் மவுனமும் நிலவியது. ரொம்பவும் விசுவாசமாய் இருந்தவர்கள் கூட கடைசியில் புறப்பட்டு விட்டமை கண்டு மனம் பொறாத பூசாரி முத்தன் குறுக்கே பாய்ந்து வழிமறித்தான். ஞானமணி என்ற விடலை அவனைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டான். நீந்திக் கரையேறிவிடுவான் என நம்பியே அப்படிச் செய்ததாய் அவன் பிற்பாடு சொன்னான். ஆனால் பூசாரி முத்தன் பிறகு தென்படவில்லை. எங்கோ எப்படியோ முளைவிட்டு, எளிதில் மந்தை தோறும் பரவிய, ஒருவித உற்சாகம் அவர்களையும் ஆட்கொண்டது. களிவெறி கொண்ட கும்பல் உரத்த குரலில் பாடியது. தாளமிட்டுக் கூத்தாடியது. வானம் சிவக்கும்போது மரத்தடிகளில் நெருப்பு மூட்டி சமையல் செய்கையில் ஆணும் பெண்ணும் வட்டமிட்டு நின்று ஆடினார்கள். பள்ளுப்பறை பதினெட்டு சாதியும் உறவு முறை மறந்து புணர்ந்தன. இரவின் அமைதியில் தூக்கமின்றிக் கிடக்கும் ஊரார் காதுகளைக் கூசச் செய்யும் பாடல்கள் மிதந்தலைந்தன.
வண்ணத்துப் பூச்சிகளின் படுகையில் மரங்களே இல்லையென்பார் சிங்கி. சரிவான சதுப்பு நிலம் அது. அங்கு ஒரு போதும் ஈரம் ஆறுவதில்லை. அங்கு வெயிலுக்கு ஒளி மட்டும்தான் உண்டு. அங்குள்ள காற்று பட்ட இடம் ஈரமாகிவிடும். அங்கு முழுக்க செடிகள்தான். “பச்ச நெறத்த அங்கு மாதிரி வேற எங்கயும் பாத்துக்கிட ஒக்காது கொச்சேமான்! வெயிலு கேறியாச்சிண்ணு சென்னா, ஆகெ ஒரு மணந்தேன். பச்சில மணம் கேட்டு தலை தரிச்சு நிக்கப் பளுதில்ல அங்க. செடி நெறச்சு பூக்க . . . எல காணாம எதளு . . . செவலயும் மஞ்சயும் நீலமும் . . . என்னத்துக்கு செல்லுயது, அங்க இல்லாத நெறம் உண்டுமா ? அங்கு இல்லாத பூ உண்டுமா ? அது பேச்சிக்க அடிவயிறுல்லா! அவ ஆரு ? அம்மெயில்லா!” என்பார். கண்கள் விரியும். வார்த்தைகள் தடைபடும். மவுனத்தில். உடுக்கு துரித கதியில் முழங்கும். சட்டென்று தலையை முன்னால் தழைத்து மூச்சிழுத்துப் பாட ஆரம்பிப்பார்.
கொரட்டி மலையின் வடக்கு வளைவில் வள்ளியைத் தடுத்து நிறுத்தத்தான் செம்பன்துரை முதலில் திட்டம் போட்டான். வள்ளி சற்று உடல் ஒடுங்கிப் போகும் இடம் அது. பேச்சியின் உடலை எறும்புகள் மொய்க்க ஆரம்பித்தன. வலது முலையை அரித்துக் குடைந்தன. இடது முலையில் வீக்கம். இம்சை தாளாமல் பேச்சி புரண்டாள். ஒரே தேய்ப்பு. எறும்புகளும் அவற்றின் கூடுகளும் கூளம். வள்ளி பிடியை உதறி எக்காளமிட்டபடி, சரிவில் சாடினாள். மலையிருந்த இடத்தில் கணவாய். துரை மனம் தளரவில்லை. நொய்யரிசி கையிலிருக்க எறும்புக்கென்ன பஞ்சம் ? சற்று தள்ளி மீண்டும் கட்டிப் பார்த்தான். வான்மீது பேச்சியின் யானைப்படை குவிந்தது. வெள்ளித் தந்தம் மின்ன மோதிப் புரண்டது. பூமியும் வானமும் மூட, நீர் கொட்டியது. யானை புரளும் ஓட்டம் வள்ளிக்கு. பெரும்பாம்பு போல அவள் மலைகளைச் சுற்றிப் பிணைத்துக் கொண்டு நெளிந்து துடித்தாள். இலுப்பமலை நொறுங்கி விழுந்தது. கடம்பமலை விரிசல் கண்டது. பத்து நாள் கழித்து வானம் வெளுத்தபோது கால் தடங்கள் கழுவப்பட்டுக் காடு பரிசுத்தமாய் இருந்தது. பச்சையிலைப் படப்பெங்கும் “பேச்சி”, “பேச்சி” என்று பாடின. இரை விழுங்கிய வள்ளி மெல்ல வளைந்தபடி கிடந்தாள்.
அதற்கு மேல் தாங்க துரைக்கும் திராணி இருக்கவில்லை. பேச்சி காலில் விழுந்தான். “பிழை பொறு பேச்சி” என்று கண்ணீர் விட்டான். கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான். ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். கூடப் பிறந்த பூத கணங்களையெல்லாம் கூட்டி வைத்துப் பேச்சிக்குக் கொடை போட்டான். பேச்சி மசியவில்லை. கெஞ்சி அழுதான். வழிமூட்டியபோது உடைவாளை உருவிக் கழுத்தில் வைத்து துரை கர்ஜனை செய்தான். “பூதத்தலை இண்ணா பேச்சி. பிரம்மாமேல சத்தியம்! பலிய எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு.” வாளை ஓங்கிய தருணம் பேச்சி மனமிரங்கினாள். ஓமத்தீயில் உருக்கொண்டு கூத்தாடினாள். காற்றாக வந்து திசை அதிரச் சிரித்தாள். “கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள். “எம்பிடு வேணும் ? அத மட்டும் செல்லு” என்றான் துரை. “ஆயிரத்தொண்ணு” என்றாள் பேச்சி. “அதுக்கென்ன தாறேன்” என்றான் துரை சற்றும் அயராமல். “எங்க ? எங்க ?” என்று பறந்தாள். “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள். “சத்தியம் பண்ணு, குடிச்ச சோரைக்க கட்டுப்படுவேன் எண்ணு சத்தியம் பண்ணு” என்றான் துரை. பேச்சி வெறி கொண்டு ஆடினாள். கூந்தலைச் சுழற்றி நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தாள்.
அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.
பன்றிமலைச் சரிவிலே இளவெயில் பரந்த வண்ணத்துப் பூச்சிகளின் படுகை சிங்கியின் நினைவை மெல்லிய வலிபோல உணர வைத்தது. கண் எட்டிய தூரம் வரை செடிகள் அடர்ந்து கிடந்தன. கண்களை நிரப்பித் தவிக்கச் செய்யும் நிறவிரிவாய்ப் பூக்கள். ஒரு சிறு காற்றில் மலர்க்கம்பளம் நெளியத் தொடங்கிவிடும். பறக்கும் பூக்கள் போல எங்கும் வண்ணத்துப் பூச்சிகள். நம்ப முடியாத அளவு பெரியவை. “மண்ணாத்திப் பக்கிய பிடிச்சப்பிடாது கொச்சேமான்” சிங்கி சொல்வார். “செத்து போனவியளுக்கு கண்ணாக்கும் அதொக்கெ. துடிச்சு துடிச்சு அலையுத கதிகிட்டாத்த ஆத்மாக்களாக்கும்” இமையிறகுகளை அடித்தபடி பறந்தலையும் கண்கள். திசைகளெங்கும் அவற்றின் பார்வை. நான் ராதாகிருஷ்ணன் கைகளைப் பற்றிக் கொண்டேன். “போலாம்” என்றேன். படுகையிலிருந்து வந்த பூச்சிகள் சரிவிலும் பள்ளத்தாக்கிலும் பரவியிருந்தன. நீர்ப்பரப்பில் உதிர்ந்து சுழித்தன. குடிநீரில் விழுந்து துடித்தன. பேச்சியின் உடலத் துளைத்துத் தடதடத்த யந்திரங்கள் மீதும், அவள் உயிரை நகரங்களுக்குக் கொண்டு செல்லும் கம்பிகள் மீதும் அமர்ந்து அதிர்ந்தன. சகதியில் வண்ணக் காகிதக் கிழிசல்கள் போல பரவிக் கிடந்தன. கரிய ஈரமான கூரைகளின் மீது ஒட்டியிருந்தன. பேருந்து முகப்புக் கண்ணாடியில் அறைபட்டு சரிந்தபடியே இருந்தன. காட்டின் பசிய ஈரத்தின் உள்ளேயிருந்து அவை முடிவற்று வந்து கொண்டிருந்தன.
[

BHARATHI

barathiyarஅம்ஷன் குமார்barathiyar
‘சுப்பிரமணிய barathiyarபாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க barathiyarbarathiyarவேண்டும் என்று barathiyarஅதன் barathiyarதயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த, பணியாற்றிய பத்திரிகைகள் ஆகியனவெல்லாம் படம்பிடிக்கப்பட்டன. பாரதியை ஏதாவது காரணம் காட்டிக் கைதுசெய்யத் துடித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தடைசெய்யப்பட்ட ‘காலிக் அமெரிக்கன்’ என்னும் அமெரிக்காவிலிருந்து வெளியான அயர்லாந்து விடுதலை ஆதரவுப் பத்திரிகையின் சந்தாதாரர் என்னும் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவர்மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற வேண்டி அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து மிகுந்த பிரையாசைக்கிடையில் வரவழைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. பல தடயங்கள் அழிந்துபோயிருந்தன. எஞ்சிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்க்க வேண்டிப் புதுவை, சென்னை, எட்டயபுரம், கடையம், மதுரை, திருநெல்வேலி, கானாடுகாத்தான், காரைக்குடி, காசி ஆகிய இடங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தினேன்.
barathi-back-copy அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள வயது முதிர்ந்தவர்களையெல்லாம் பார்த்தபொழுது அவர்கள் யாராவது பாரதியைச் சந்தித்திருக்க மாட்டார்களா அவர்களது அனுபவங்களைச் சொல்ல வைத்துப் படம்பிடிக்கமாட்டோமா என்னும் ஏக்கம் எனக்குள் தலைதூக்கியது. பாரதி இறந்தது 1921இல், நான் 1998இல் படம் பிடிக்கிறேன். பாரதியை நேருக்குநேர் சந்தித்த சமயத்தில் அவர்களுக்குக் குறைந்தது பத்து வயதாவது இருந்திருக்கும் பட்சத்தில் தற்சமயம் அவர்கள் 88 வயதுக்காரர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அபூர்வ மனிதர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ என்ற எண்ணத்துடன் நான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால் என்னால் பாரதியுடன் பழகிய நிறையப் பேர்களைச் சந்தித்திருக்க முடியும். இதற்கு முன்னால் தமிழ்நாடு பிலிம்ஸ் டிவிஷன் 16 எம்.எம்.மில் எடுத்திருந்த பாரதி டாக்குமெண்டரி ஒன்றில் அவருடைய இளைய சகோதரர் சி. விசுவ நாதனின் பேட்டியைப் பார்க்க முடிந்தது. அவரைத் தவிர பாரதியுடன் பழகிய வேறு எவருடைய நேர் காணலும் படம் எடுக்கப்படவில்லை. இப்பொழுது அவரும் உயிருடன் இல்லை.
சில இடங்களில் பாரதியுடன் நன்கு பழகியவர்கள் இருப்பதாகஅம்ஷன் குமார் எனக்குத் தகவல்கள் கிடைக்கும். அவர்களைத் தேடிச் சென்று சந்தித்த உடனேயே அவர்கள் பிறந்த ஆண்டைத் தெரிந்துகொள்வேன். எந்தெந்த ஊரில் பாரதி எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதுடன் அவர்கள் சொல்லும் வருடத்தையும் ஒப்பிட்டு ஒரு  மனக்கணக்குப் போட்டுவிடுவேன். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவர்கள் தாங்களாகவே பாரதியைச் சந்தித்தது கிடையாது என்று கூறிவிடுவார்கள். பாரதி பற்றித் தங்களுக்கு அங்கு வாழ்ந்த தங்களைவிட மூத்தவர்கள் கூறிய தகவல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிவிடுவார்கள். ஓரிருவர் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. அவர்கள் பாரதியை நேரடியாகத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிச் சுற்று வட்டாரத்தில் அதன் காரணமாகச் செல்வாக்கை அனுபவித்தவர்கள்.
கடையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குழுவினருடன் வேனில் செல்ல முற்பட்டபொழுது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னை அணுகினார். பாரதியை நேரில் அறிந்தவர்கள் அங்கு யாரும் இருக்கிறார்களா என்று நான் விசாரித்துக்கொண்டிருந்ததை அவர் கேட்டதாகவும் தொண்ணூறைக் கடந்த ஒரு முதியவர் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த முதியவரின் பெயர் கல்யாணசுந்தரம் என்றும் அவர் தற்சமயம் விக்கிரமசிங்கபுரத்தில் தன் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.
kalyanasundaram எதற்கும் அங்கு சென்று பார்த்துவிடுவோமே என்று எனக்குத் தோன்றியது. மாலையில் விக்கிரமசிங்கபுரத்தை சென்றடைந்தபொழுது லேசாக மழை தூறி நின்றிருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடிப்பது ஒருவர் வழிகாட்டியபின் சுலபமாக இருந்தது. கைவைத்த பனியன் போட்ட சிவந்த நிறமுடைய க. பி. கல்யாணசுந்தரம் ஈஸிசேரில் அமர்ந்து ‘கல்கி’ படித்துக்கொண்டிருந்தார். தலையில் போதுமான நரைமுடி. வயதைக் குறைத்து மதிப்பிடலாம் என்பது போன்ற உடல் தோற்றம். ஒரு பருவத்திற்குமேல் உடலின் மூப்படையும் வேகம் குறைத்துவிடுகிறது. என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டேன். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தவரிடம் ‘உங்களுக்குப் பாரதியைத் தெரியுமா?’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைக் காட்டினார். ‘ஓ! தெரியுமே! என்றவர் கடகடவென்று தனது நினைவுகளை வெளிக்கொணர்ந்தார். அவர் பேச ஆரம்பித்த முப்பது விநாடிகளுக்குள் அவர் பாரதியுடன் உண்மையிலேயே பழகியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. கேமராவையும் உபகரணங்களையும் வேனிலிருந்து இறக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவரிடம் வேறு திசையில் சம்பாஷணையைத் தொடங்கினேன்.
திரைப்படத்திற்காகப் பேட்டி எடுப்பது பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பதிலிருந்து வேறுபட்டது. பத்திரிகைப் பேட்டியில் முகபாவங்கள், சைகைகள், குரலிறக்கங்கள் முக்கியமல்ல. வார்த்தைகள் கிடைத்தால் போதும். படத்திற்குத் தரும் பேட்டியில் பேட்டி தருபவரின் உடல்மொழி பதிவுசெய்யப்பட வேண்டும். சிலர் பேட்டி காணச் சென்றவுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரிப்பார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள். அவர்கள் திரும்பவும் கேமராவின் முன் அவற்றைச் சொல்லும்பொழுது அந்த உணர்வுகள் வெளிவராது. பழகிப்போன ஓர் உணர்வுடன் அவற்றைப் பேசுவார்கள். எங்கே என்னிடம் பேசும்பொழுது தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துவிடுவாரோ எனப் பயந்தேன். படத்திற்காகப் பேசும்பொழுது அவை முதன்முதலாக வெளிவரட்டும் என்பதற்காக அவரிடம் அவர் வாழ்க்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றிருந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பேட்டி எடுத்தபொழுது அவருக்கு 92 வயது. இடையிடையே பாரதி பற்றி ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். 1919இல் பாரதியுடன் பழகியிருந்தார்.
கேமரா கொண்டுவரப்பட்டுப் படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராக இருந்தோம். அவர் வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவித்து நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்தனர். என்னுடைய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் கூறினர். அவ்வப்போது ஒன்றுக்கு வருகிறது என்று பள்ளிச் சிறுவன்போல் விரலைக்காட்டி அனுமதி கேட்டார்.
நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள்? பிறந்ததிலிருந்தே கடையத்தில்தான் வாழ்கிறீர்களா?
நான் 1908 ஜனவரி 16ஆம் தேதி பிறந்தேன். தாயார் வீடு தென்காசி. என் தாத்தா புலியூர் கர்ணம். தைப் பொங்கலிட்ட சமயம் பொங்கல்படி வாங்குவதற்காக மேளதாளம் தப்பட்டைகளுடன் வந்து பொங்கலிட்ட சமயத்தில் நான் பொறந்தேன். நான் பொறந்ததிலிருந்து கடையத்தில்தான் வாழ்கிறேன்.
பாரதியாரைச் சந்திக்கிற சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அவருடன் எவ்வாறு பழகினீர்கள்?
எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்க எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட்- அல்பகா கோட்- போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்குமேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆ கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு . . . முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள்- ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி அப்படிங்கற எண்ணத்திலே அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம். அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு ப்ரண்ட்ஷிப் நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது. அப்ப என்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர். அவருக்குத் தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும்பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறைய தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய்ப் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.
அந்தத் தபால் கார்டுகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீங்க...
என்னுடைய தோழன் ஒருவன். அவன் பின்னால் வாத்தியார் வேலை பார்த்தான். அவன் என் க்ளாஸ்மேட். அவன் பாரதி வெச்சிருந்த அந்தக் கார்டுகளில் சிலதைத் தனக்கு உபயோகப்படும்னு எடுத்தானோ என்ன காரணமோ. அவன் கார்டு எழுதக்கூடிய பையனாவும் தெரியலே. எதுக்கோ எடுத்து மடியிலே வைச்சிகிட்டான். பாரதியார் இன்ன இன்னார்க்கு எழுதனும்னு ஒரு திட்டத்தோட நிறையக் கார்டு வாங்கி வச்சிருப்பாரு. அதில நாலு கார்டு காணலேன்னா தேடத்தானே செய்வாரு! ஏழெட்டுக் கார்டை எடுத்து மடிக்குள்ளே வைச்சுக்கிட்டான். அவரு பத்து இருபது கார்டு வாங்கிக்கொண்டு வந்து வச்சிருந்தார்னு நெனைக்கேன். அவர் வந்த உடனே எழுத ஆரம்பிச்சாரு. நாங்க அப்போ வீட்டுத் தோட்டத்துக்கு முன்னாலே பின்னாலே ஓடி விளையாடிகிட்டு இருப்போம். அப்ப இவர் பார்த்து ‘இங்கே வாங்கடா. இதிலே இருந்து போஸ்ட் கார்டை யாராவது எடுத்தீங்களா?’ அப்படின்னு கேட்டாரு. எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. நான் பரக்க பரக்க முழிச்சேன். யார் அவர் எழுதற இடத்தில உள்ளதை எடுக்கப்போறா. அங்க நாங்க போகமாட்டோம். அவன் ஒருத்தன் மட்டும் ஒரு மாதிரியா முழிச்சான். ‘யாரும் எடுக்கலியே, ஒண்ணும் எடுக்கலியே’ அப்படின்னான். அவர் கூர்மையா அவன் மடி கனமா இருந்ததைப் பார்த்துக்கிட்டு ‘வேட்டியை அவுருடா’ அப்படின்னு சொன்னார் (சிரிப்பு). அவன் வேட்டியை அவுக்கும்போதே கீழே மடியிலே சொருகி வச்சிருந்த கார்டு பொலுபொலுன்னு விழுந்தது. உடனே அவருக்கு மகாகோபம் வந்து அவனை அடிச்சிட்டாரு. அடிச்சவுடனே ஓன்னு அழுதான். தெரியாம செஞ்சிட்டேன். அப்படி இப்படின்னு.
‘ஏண்டா, மத்த பையனுங்களையும் சேர்த்துத் திருட்டுப் பயலாக்க பாத்தியே நீ! இப்படிச் செய்யலாமா? செய்யறது தப்பு இல்லையா? நீ உணரல்லையா?’ அப்படியெல்லாம் கேட்டாரு. அவர் அவன் அறியக்கூடிய சக்திக்கு மேற்பட்ட அளவிலே கேள்விகள் கேட்டாரு. தெரியாம செஞ்சிட்டேன். தெரியாம செஞ்சிட்டேன்னு’ சொல்லிக்கிட்டிருந்தான்.
‘சரி. அழாதே. இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்’. கொஞ்ச நேரம் கழிச்சு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார். ‘இனிமேல் நீ நல்ல பையனா இருக்கணும். நீ பொய் பேசக் கூடாது. அதனாலதான் உன்னை அடிச்சேன். கோழைப்பயல், தைரியம் இல்லாதவன்தான் பொய் பேசுவான். உள்ளதை மறைச்சுப் பேசணும்கிற அவசியம் அவனுக்குத்தான் உண்டு. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். பொய் சொல்லப் பயப்படணும். உண்மை சொல்றவன் யாருக்கும் பயப்படத் தேவை கிடையாது’ அப்படின்னு அவனுக்குப் பெரிசா ஒரு உபந்நியாசமே செய்து முடிச் சிட்டாரு. அப்புறம் எங்களோட விளையாட விட்டுட்டாரு. அவன் நாலஞ்சு நாள் வராமல் இருந்தான். பாரதியார் கேட்டாரு ‘ஏண்டா, ராமையா உங்ககூட வரலையா?’ன்னு.
‘என்னமோ வரலை சார்.’ அப்படின்னேன்.
‘அவன் வந்தா வரட்டும். அவன வரவேண்டாம்னு நான் சொல்லலை’ அப்படின்னு சொன்னார். அப்புறம் அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வந்தான். தொடர்ந்து பாரதியாரோட ஒத்துப்போகிற ஆள் நான் ஒருத்தன்தான். மத்த பசங்க எல்லாம் விளையாடிட்டுப் போயிடுவாங்க.
நீங்கள் சொல்வதிலிருந்து பாரதியுடன் நீங்களெல்லாம் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவர் பாடக் கேட்டிருக்கிறீர்களா?
எங்க ஊர்ல பெரிய மணல் பரப்பு. அதிலே போய் உக்காருவோம். சாயங்கால நேரத்தில் அவர் பாடுவாரு. அவர் கவிதைகளை புனைவதற்குத்தான் பாடுகிறாரா அல்லது புனைந்து வைத்த கவிதைகளைத்தான் பாடுகிறாரான்னு எனக்குத் தெரியாது. கார்வையான தொண்டை. கடுவா மாதிரி இருக்கும். ஆனால் நல்ல இசை நுட்பத்தோடதான் அவர் பாடுவாரு. அவர் பாடிகிட்டு இருக்கிறதை நாங்க கேட்டுக்கிட்டே இருப்போம். முடிஞ்ச உடனே போகலாமான்னு கேட்பாரு. அவருக்குப் பின்னாலே போவோம். எங்க ஊர்ல கல்யாணி அம்மன் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்பக்கம் பொத்தைன்னு சொல்லுவாங்க. சிறு குன்றுகள், நிறைய இருக்கும். அதுமேல போய் உச்சிக்குப் போவாரு. அது ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்க எல்லாம் அது கிட்டப் போகப் பயப்படுவோம். இவரு போறாரேன்னு கூடவே போவோம். அப்போ இடையிலே சத்தம் போடுவாரு. எதிரொலிச் சத்தம் கேட்கும். அதுல அவருக்கு ஒரு வேடிக்கை. இரண்டு மூணு தடவை சத்தம் போடுவாரு. ‘அங்க ஒருத்தன் பதில் சொல்றான் பாத்தியா’ அப்படின்னு எங்ககிட்ட வேடிக்கை பண்ணிகிட்டே கூட்டிப் போவாரு. மேலே போய் நின்னு பாடுவாரு.
பாரதி மேலே கடையத்து மக்களுக்கு ஒரு பகை உணர்வு இருந்தது இல்லையா? அந்தச் சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழகின உங்களுக்கெல்லாம் அங்கே உள்ளவங்க என்ன மாதிரி வரவேற்பு கொடுத்தாங்க?
Bharathiyar-1 எங்க வீட்ல பாரதியார் வீட்டுக்குப் போறேன் அவரோட பழகிறேன்னு கேள்விப்பட்டு எனக்கு உதைதான் கிடைக்கும். சண்டை பிடிப்பாங்க. எங்க வீட்ல நான் சொல்லவேமாட்டேன். அவங்க எப்படியோ தெரிஞ்சு ‘ஏண்டா, அந்த ஐயர் வீட்டுக்கு போறே. பாரதி வீட்டுக்குப் போறியாமில்லே. அவன் ஒரு கிறுக்கன்.’ பாரதியாரை ஒரு கிறுக்கன் என்றே வைத்திருந்தார்கள். அவருடைய உடை இவர்கள் உடை மாதிரி இல்லே. அவர் ஒரு மாதிரி பஞ்சகச்சம் வைச்சுக் கட்டியிருப்பாரு. அதுக்கு மேல ஒரு வேஷ்டியைப் போத்தி அதுக்குமேலே அல்பகாக் கோட்டை போடுவாரு. அதுமேல ஒரு டர்பன் கட்டியிருப்பாரு. அப்படியே அகலமா ஜவ்வாது பொட்டுப் போட்டிருப்பாரு. இதுதான் அவரது அலங்காரம். பெரிய ஆளுங்க எல்லாம் உக்கார்ந்து பேசுவாங்க. இவர் போனா ஒருத்தரும் அவர்கிட்டே பேசமாட்டாங்க. இவர் பாட்டுக்கு அதைச் சட்டை பண்ணாமப் போவாரு. இவரோட நோக்கம் என்னவோ அதைப் பாத்துக்கிட்டு வருவாரு.
சிறுவர்களைத் தவிர பாரதியுடன் அங்கு பழகியவர்கள் வேறு யார்?
அப்ப எல்லாம் சிலபேர் கொஞ்சம் பழகிறவங்களும் இருப்பாங்க. சில பழக்கங்கள் உள்ளவர்களிடம் இவர் போய்ப் பழகுவாரு. கொஞ்சம் குடி, மதுபான பழக்கம் இவர்கிட்டே உண்டு. நாராயணசாமி பிள்ளைன்னு ஒருத்தர் இருப்பார். அவர் பாட்டிலில் நிறைய பிராந்தி, விஸ்கி எல்லாம் வைச்சு கிளாஸ்ல ஊத்திக் கொடுப்பார். ‘பாரதி, நீங்கள் என்னவெல்லாம் கவிதை பாடுவீங்க?’ன்னு கேட்பார்.
‘எது எல்லாம் தோணுதோ அதை.’
‘நான் கொடுக்கிற கவிதையை நீங்க புது மாதிரியாப் பாட முடியுமா? கவிதையில அகவல்னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடுங்க’ன்னாரு.
‘அப்படியா. நீங்க அதைச் சொல்லுங்க. நான் எப்படிப் பாடறேன்னு காட்டறேன்.’
‘நான்முகன் படைத்த நானாவித உலகில்’ அப்படின்னு அவர் பாடிக்காட்டுனாரு.
உடனே பாரதி தடையில்லாமல் நான்முகன் படைத்ததுவாம். இந்த நானாவித உலகில்’ அப்படின்னு தனிச் சீர் வைச்சு இப்படிப் பூராவையும் பாடினார். இது ஒரு நாள் நடந்தது.
பாரதியோட ஒத்திசைந்த சிறுவனா நீங்க இருந்தீங்கன்னு சொன்னீங்க. பாரதிக்கும் உங்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எதுவும் ஞாபகம் இருக்கா?
அநேகமா ஞாபகம் இருக்கு. சில விஷயம் மறந்திருக்கு. அந்தச் சமயத்தில என் வயசில கனமான சம்பாஷணை எதுவும் இருக்காது. விளையாட்டுப் போக்கிலதான் இருக்கும். அதைத்தான் கவனிப்போம். அந்த வயசு அதுதானே? ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. கழுதைக்குட்டி நல்லாதானே இருக்கும்! (சிரிக்கிறார்.) அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப ஆர்தடாக்ஸ். ஆத்தங்கரையில குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. ‘இவனைப் போய் . . . கர்மம் கர்மம்’னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே. என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு’ம்பாங்க.
‘நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்’ அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு.
பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?
Bharathiyar-2 அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு.
எல்லோர் கூடவும் அவர் பழகியிருக்காரு. அவரோட மைத்துனர் அண்ணாத் துரைன்னு ஒருத்தர் சிங்கப்பூர் அங்கே இங்கே எல்லாம் போய்ட்டாரு. அவர் ரொம்ப வேகமாகப் பேசுவாரு. அவருக்கு இவரைப் பத்தி அப்ரிசியேஷன்தான். ஆனா வீட்ல அவரை யாரும் விரும்பமாட்டாங்க. பேச்சே வச்சுக்கமாட்டாங்க. மத்த பிராமணர்களும் அவரோட பழக்கம் வச்சுக்கமாட்டாங்க. ஆக பிராமணர் இல்லாத கூட்டம். அதிலேயும் கொஞ்சம் தன் கூட்டத்திலே சேருகிற மாதிரி ஆட்களைத்தான் வச்சுக்குவாரு. ஆக நாங்களே அவருக்குத் துணைவர்களா ஆயிட்டோம். எங்களுக்கு அது ஒரு பெருமை. நாங்க சின்னப் பையங்க. அவர் ஒரு பெரிய புலவர். வரகவி. நாங்க பள்ளிக்கூடத்துப் பாடத்தையே சரியாப் படிக்கத் தெரியாதவங்க. எங்க தொடர்பு அந்த மாதிரி ஆரம்பிச்சுது. அவர் எங்கமேலே ரொம்பப் பிரியமா இருப்பாரு. கல்யாணசுந்தரம் இன்னைக்கு வரக் காணோமேன்னு சொல்லுவாரு. வராதவனையெல்லாம் நோட் பண்ணிக்கிடுவாரு. அந்த அளவுக்கு எங்ககூடப் பழகினாரு. அந்த அம்மாவுக்கு எப்பவும் கஷ்டம். வறுமைதான். அவங்க எங்கேயோ போயி ரவை உப்புமா கிண்டி டிபன் எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பாங்க. இவர் அந்த வீட்டுச் சுவர்மீது ஏறி உச்சிக்குப் போயிடுவாரு. அங்கே உக்காந்து அதைத் தூக்கித் தூக்கிப் போடுவாரு. கடன் வாங்கித் தன் புருஷன் பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு சொல்லி ஆதங்கத்தோட கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அநாயாசமா வீசுவாரு. உடனே வரும் காக்கா குருவி எல்லாம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ இவரோட நோக்கம் பரந்த நோக்கம். இவரிடம் எவ்வளவு பரந்த இதயம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கம் அவங்களுக்கு. இவரை அவங்களாலே புரிஞ்சிக்க முடியாது.
பாரதியோட புதல்வி சகுந்தலா உங்களோட படிச்சவங்கன்னு சொன்னீங்க?
அது ஒரு க்ளாஸ். என்னோட ஜூனியர். ‘ஓடி விளையாடு பாப்பா’ன்னு அதுக்காகத்தான் பாடினார். பாரதி அதைப் பாடச் சொல்லுவார். அது பாடும். எங்களுக்கும் சொல்லித்தருவார். ஒரு ஆர்மோனியம். மிருதங்கம் இருக்கும். மிருதங்கம் படிக்கிறாரு. அந்தத் தாள லயம். ததிதும்நம் அப்படின்னு அந்த விரல். அவருகிட்டேதான் நான் படிச்சேன். அதுதான் மிருங்கத்திற்கு முதல் பாடம். மிருதங்கத்தை எவனோ கொண்டுவந்து போட்டிருந்தான். அநேகமாக அது ஆறுமுகமாத்தான் இருக்கும். அப்புறம் ஒரு ஆர்மோனியம். ஆர்மோனியம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும். அதையும் வச்சுப் பாடுவாரு. பாட்டுக்குச் சுரம் வாசிச்சுப் பாத்துக்கிடுவாரு. சுரத்தை எழுதி அந்தச் சந்தத்திலேயே பாட்டுப் பாடுவாரு.
செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?
Bharathiyar-4 எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். ‘சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா’ன்னு கேட்பாரு. நான் பயப்பட மாட்டேன். அவர் ‘வா போகலாம்’னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.
பாரதி மது அருந்திவிட்டுக் கலாட்டா ஏதாவது பண்ணினார்னு செய்திகள் உண்டா?
பண்ணமாட்டார். ரொம்ப டீஸண்ட் ஆனவர் அவர். ஒழுக்கம் உடையவர். நல்லொழுக்கம் பற்றி எவ்வளவோ பாடியிருக்கிறார். பேசியிருக்கார். அவங்களெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கவிதை எழுதறேன்னு சொல்லுவார். ஸ்தோத்திர கீதங்கள், தேசிய கீதங்கள், பாப்பா பாட்டு இப்படித் தனித்தனியா புஸ்தகம் ப்ரிண்ட் பண்ணினார். யார் வாங்குவா? எங்ககிட்டேக் கொடுத்து இதையெல்லாம் வித்துக்கொண்டு வாங்கடான்னு சொல்லுவாரு. நாங்க அதை எடுத்துக்கிட்டுச் சுற்றுவோம். சார், ஒண்ணு வாங்கிக்கிறீங்களா’ன்னு மத்தவங்ககிட்டே கேப்போம். ‘பாரதி எழுதின பாட்டுன்னு, என்கிட்டே அந்தக் கதையெல்லாம் விடாதே போ அப்படிம்பாங்க. நாங்க மனம் ஒடிஞ்சு, ஒரு புஸ்தகம்கூட விக்கலேன்னு அவர்கிட்டே சொல்லுவோம். இப்படி ஒருத்தரும் வாங்காமல் இருந்ததுதான் ‘பாரத ரத்னா விருது’ வாங்கக்கூடிய அளவுக்கு மேல் மதிப்பு பெற்றது.
பாரதிக்கு யானையைப் பிடிக்கும்னு சொன்னீங்க!
Bharathiyar-5 யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலுக்குச் சித்திரை மாத உற்சவத்திற்குச் சங்கரன் கோவிலிலிருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். நாராயணசாமி பிள்ளைன்னு கவிதை அகவல் பத்தி சொன்னேனே அவர்தான் கோவில் ட்ரஸ்டி. இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் ‘யானைகிட்டே நான் விளையாடப் போகணும்’னு சொல்லுவார். ‘சரி கிட்டே போங்க. ஆனா அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்’ என்றான்.
அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் ‘வரோம்’ன்னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பாய்ச்சை மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து டிசண்டரி மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.
பாரதி இறந்த செய்தி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
நாங்க (நானும் எனது நண்பரும்) பாளையங் கோட்டையிலே படிக்கப் போனோம். செயிண்ட் சேவியர் காலேஜ். அப்போது அது ஹைஸ்கூலா இருந்தது. அங்க ஒரு ஹாஸ்டல்லே நாங்க படிச்சுக்கிட்டு இருந்தோம். 21ஆம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒருத்தன் வந்து பாரதி செத்துப்போயிட்டாராண்டான்னு சொன்னான். சொன்னவுடன் நான் நம்பலே. யானை தூக்கிப்போட்டு அவரைக் கொன்னுட்டதாம்ன்னு அவன் சொன்னான். உடனே நானும் எனது நண்பனும் அழுதுகிட்டு இருந்தோம். ‘என்னடா, ரொம்ப அழுதுகிட்டு இருக்கீங்க’ன்னு வார்டன் வந்து கேட்டார். ‘எங்க ஊர்ல பாரதின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப ப்ரண்டு. அவர் வீட்டிலேயே போய் இருப்போம் ‘அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லவரா இருந்தார்’ அப்படின்னோம். அதோட எங்களோட உறவு முடிஞ்சிப்போச்சு. பின்னால அவர் வீட்டு ஆட்களோட எனக்குத் தொடர்பில்லை.
***
படப்பிடிப்பு முடிந்து சென்னைக்குத் திரும்பிய சில நாட்களில் கல்யாணசுந்தரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பற்றிய ஞாபகங்களைத் தன்னுள் தூண்டிவிட்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார். டாகுமெண்டரி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். இணையதளங்களில்கூட அவரது பேட்டிகள் வெளிவந்தன. அவருக்கு டாகுமெண்டரியின் வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன். அதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். நள்ளிரவில் இறந்த அவர் அன்று மாலைகூட அப்படத்தைப் போடச்சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார் என்று அவரது உறவினர் கூறினார். 2003இல் அவர் இறந்தபொழுது அவருக்கு 95 வயது.
***
நா. ராமசாமி ஐயர் என் கண்டுபிடிப்பு அல்ல. அவர் பாரதியை நேரிடையாகப் பார்த்துப் பழகியவராக ஏற்கனவே டி.ஜி.என். ஆன்மிக மையம் வெளியிட்ட ‘பாரதி விழா மலர்’ ஒன்றில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்தியாவின் அடிஷனல் சொலிசிட்டராகப் பணியாற்றிய அவரது மகன் என்.ஆர். சந்திரனுடன் தொடர்புகொண்டு படப்பிடிப்பிற்கான நாள் குறித்தேன். அடையாறிலுள்ள பத்மநாப நகரிலுள்ள அவர் வீட்டிற்கு ஒரு நாள் சென்றபொழுது அவர் ஜிப்பா, உருத்திராட்ச மாலை, பச்சை சால்வை ஆகியன அணிந்து எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். உடல் உறுதியாக இருந்தது. கணீரென்று பேசினார். கேட்கும் சக்தியை காது வேகமாக இழந்துகொண்டிருந்தது என்பதைத் தவிர 97 வயதில் மிக ஆரோக்கியமாக இருந்தார். புதுக்கோட்டையில் பலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். சில காலம் அமெச்சூர் நாடகங்களில் நடித்ததாகவும் கூறினார். 1901இல் பிறந்தவர். பாரதியுடன் 1920இல் பழகியிருந்தார். கல்யாணசுந்தரம் போலவே இவருக்கும் கேமராக் கூச்சம் அறவே இல்லை. இருவரது பேட்டிகளும் 1998இல் எடுக்கப்பட்டவை.
நீங்க முதன்முதலா பாரதியை எப்பொழுது பார்த்தீர்கள்?
N.-Ramasamy நான் புதுக்கோட்டைவாசி, எனக்கு இப்ப வயசு 97 ஆகிறது. “நான் ஆதியிலே 1919லே புதுக்கோட்டைக் காலேஜிலே எம்.ஏ. படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ பாரதியோட மருமான் (சகோதரியின் மகன்) டி. சங்கரன்ங்கிறவர் அரசர் கல்லூரியில் வாத்தியாரா இருந்தார். ஸ்கௌட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பாரதியோட பாட்டையெல்லாம் பாடுவார். அவர் பேசும்பொழுது வாய் திக்கினாலும், பாரதியார் பாட்டுப் பாடும்பொழுது வாய் திக்கவே திக்காது. அது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பாரதியார் பாட்டிலே எனக்கொரு மோகம் வந்து அவர் பாடிய பாட்டை நெட்டுரு பன்னிப் பாடியிருந்தேன். சங்கரனை எனக்குத் தெரிஞ்சது பெரிய அதிர்ஷ்டம். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்லே பி.ஏ. வாசிக்க வந்தேன். அப்ப என்னோட ஒன்னுவிட்ட மாமா வீட்லே 12, மேட்டுத் தெருவிலே ஒரு போர்ஷன்ல தங்கும்படியா நேர்ந்தது. ஹாஸ்டல்ல சீட் கிடைக்காததால அங்கே ஒரு நாலைஞ்சு மாசம் தங்கியிருந்தேன். மேட்டுத் தெரு ப்ரண்ட் போர்ஷன். தம்புச்செட்டி தெரு. அதன் நம்பர் 209. எண்ட்ரன்ஸ் மேட்டுத்தெருன்னு சொல்லுவா ஆனால் நடுவிலே வாசப்படி தொறப்பு உண்டு. பாரதியார் 209இல் இருந்ததால் பின் போர்ஷனில் இருந்த எனக்கு அவரை அடிக்கடி சந்திக்கிற சான்ஸ் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை சந்திச்சு நான் புதுக்கோட்டைவாசி, உங்க மருமான்கிட்டே உங்க பாட்டையெல்லாம் கேட்டு நெட்டுரு பண்ணியிருக்கேன்னு அறிமுகமானேன். அவர் என்னை ராமுன்னு தான் கூப்பிடுவார்.
அவருடன் வேறு யார் இருந்தார்கள்? அவர் என்ன செய்தார்னு ஞாபகம் இருக்கா?
அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் ‘சுதேசமித்திர’னில் சப்-எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அந்தச் சமயங்கள்லே எங்களைப் போல முட்டாள்ங்ககிட்டே அந்த அம்மா வந்து சொன்னாக்கா, நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். ‘மாமா, மாமி குழந்தையெல்லாம் சாப்பிடாம காத்திண்டிருக்காளே. நீங்க இப்படிக் கதவை சாத்திண்டிருக்கேளே’. ‘அடடே நாழியாயிடுச்சா’ன்னு சொல்லிச் சிரிச்ச முகமா இருப்பார். கோபமே வராது அவருக்கு. குடும்ப ஞாபகமோ பண ஞாபகமோ லட்சியம் பண்ணமாட்டார். அந்த வகையிலே அவர் ஒரு ஞானி. இந்தக் குடும்ப பாரம் பணத்தைப் பத்திய கவலை அதெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. அவருக்குத் தங்கமும் ஒண்ணுதான். மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். அப்படிப்பட்ட மனுஷன். அவர் அடிக்கடி சகஜமாப் பேசுவார். வாரத்திலே ரெண்டு மூணு நாளு ராத்திரி வேளையிலே தம்புச்செட்டி வீட்டு முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். நல்ல ஜனக்கூட்டம். தெருவிலே டிராபிக்கெல்லாம் இடைஞ்சல் ஏற்படற மாதிரி ஜனக் கூட்டம் சேர்ந்துடும். அவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்லுவார். ரசிகா ரொம்ப பேர். தெருவிலே இருக்கிற ஆட்கள் எல்லாம் கூடிடுவா. அது இரண்டு மணிநேரம் இருக்கும்.
பாரதி பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?
எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.
பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். ‘சுதேசமித்திரன்’ எடிட்டர் சி.ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு விசை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாகாரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு ‘இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாகாரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை’ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சதுபோகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாகிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.
செல்லம்மா எப்படி இருப்பார்?
எனக்கு அந்த அம்மாகிட்டே ரொம்ப மரியாதை. ஏன்னா நம்ம ஹிந்துப் பெண்கள் எப்படி இருக்கணுமோ கிரஹனி எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. மடிசார்தான் கட்டிக்குவாங்க. மேலாக்கை எடுக்கவே மாட்டாங்க. ராமுன்னுதான் (என்னை) கூப்பிடுவாங்க. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதாவது வீட்ல பண்ணியிருந்தா எனக்குக் கொடுப்பாங்க. அந்த அம்மாவுக்கு ஏதாவது அப்பப்ப எங்களால் ஆன உதவி நாங்க செய்வோம். எதிர்பார்க்கமாட்டாங்க. நாங்க வாலண்டர் பண்ணிக்குவோம். ஏன்னா அவங்க தனியா இருப்பாங்க. வெளிவாசல் போறதே இல்லே. அதை நான் பார்த்ததே இல்லே. எனக்கு இன்னிக்கும் அந்த அம்மாவின் முகம்தான் முன்னால் நிக்கறது. பாரதியாரைவிட. எனக்கு அவங்ககிட்டே பிரமாத பக்தி. ரொம்ப பிரியமா இருப்பாங்க. எனக்கு இந்த நாலு மாசமும் ஏண்டா முடிஞ்சதுன்னு இருந்தது. நான் அதுக்குமேலே ஹாஸ்டலுக்குப் போய்ட்டதனாலே பழக முடியலே. என்னோட வாழ்க்கை பாரதியார் குடும்பத்தோட ஏற்பட்ட தொடர்ச்சியை மறக்கவே முடியலே. எப்பவும் அதை நினைச்சிண்டு இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி.
***
சென்னையில் ஜூலை 1999இல் நடைபெற்ற டாகுமெண்டரி வெளியீட்டு விழாவிற்குச் சென்னைவாசி என்பதால் ராமசாமி ஐயர் அழைத்துவரப்பட்டார். ஜெயகாந்தன் வீடியோ கேசட்டை வெளியிட அதன் முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டார். பல மாதங்களுக்குப் பிறகு அன்று அவரை மீண்டும் சந்தித்த பொழுது அவர் சக்தி இழந்தவராகத் தோன்றினார். ‘நீங்க கூப்பிட்டதாலே வந்தேன். என்னாலே முடியல்ல’ என்று கூறிவிட்டு உடனே சென்றுவிட்டார். அவரை அப்படிப் பார்த்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. மறுவருடமே அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 99.
***
‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டது. மிக அதிகமான தடவைகள் திரையிடப்பட்ட தமிழ் டாகுமெண்டரி இதுவாகத்தான் இருக்கும். பாரதிமீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் அத்தகையது. பாரதியின் நண்பர்களின் பேட்டிகள் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டன. கூடவே விமர்சனங்களும் எழுந்தன.
படத்திற்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி ஆய்வுநுட்பம் மிக எழுதியிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்பொழுது மேலும் தேவையான பகுதிகளுக்கு அவருடன் ஆலோசித்து நான் வர்ணனைகளை எழுதிச் சேர்த்துக்கொண்டேன். ‘குடும்ப வறுமை, நியாயமான எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த தோல்விகள், பலகாலமாகத் தொடர்ந்துவந்த அரசாங்க அச்சுறுத்தல்கள், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே நலிவுற்றிருந்த உடலும் மனமும் மேலும் சீர்கெட்டது’ என்று எழுதி அவரது முடிவுக் காட்சிகள் மீது அதை ஒலிக்கச் செய்திருந்தேன். ‘போதைப் பொருள் பழக்கம்’ என்கிற தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். இளைஞர்கள் அதை அறிந்து கெட்டுப்போய்விடுவார்கள் என்பது அவர்களது வாதம். ‘போதைப் பழக்கம் கொடியது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அது சிகரெட் விளம்பரம்போல் கவர்ச்சியாக்கப்படவில்லை. பாரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது வாழ்க்கையை முழுதாக அறிந்துகொள்ள வேண்டும். வ.உ.சி, வ.ரா, யதுகிரி அம்மாள் ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார்கள்’ என்று கூறியதைக் கேட்டுச் சிலர் சமாதானமடைந்தார்கள்.
இங்கே தரப்பட்டுள்ள கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரின் பேட்டிகளிலிருந்து படத்தின் மைய ஓட்டத்திற்குத் தேவையான சில பகுதிகளைத்தான் படத்தில் இணைத்திருந்தேன். பாரதி சிலும்பியில் கஞ்சா புகைத்தது, பட்டைச் சாராயம் அருந்தியது ஆகியவற்றையெல்லாம் கல்யாணசுந்தரம் சொல்வதைக் காட்டியிருந்தால் எத்தகைய எதிர்ப்புகள் தோன்றியிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
அவர்களது பேட்டிகள் முழுவதையும் பரந்த நோக்குடன் பார்த்த பாரதி அன்பர்கள் அவற்றின் அரிய ஆவண மதிப்பைச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை எங்கும் வெளிப்படாத பாரதியை அவற்றில் பார்க்க முடிவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரிடம் பாரதியின் வெவ்வேறு நடத்தைகள் பதிவாகியுள்ளன. கடையத்தில் தன்னிடம் வம்பு செய்தவர்களைக் கலவரப்படுத்த வேண்டி அவர் மேற்கொண்ட நடை உடை பாவனைகளைச் சென்னையில் அவரிடம் நாம் காணவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அவர் செயல்பட்டிருக்கிறார். வெளிப்படையான கொந்தளிப்பை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடியவில்லை. பஜனைகள் பாடித் தன்னையும் பிறரையும் மகிழ்வித்திருக்கிறார். தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குப் பொருளுதவி கேட்டுப் பலருக்கும் கடிதங்கள் எழுதித் தோல்வி சுமந்த பின்னணியில்தான் தபால் கார்டு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவரும். பாரதி சிறுவர்களுக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருக்கிறார். குன்றுகளில் அவர்களுடன் சுற்றித் திரிந்ததைக் கேட்கும்பொழுதே கவித்துவமான காட்சிகள் மனத்தில் தோன்றுகின்றன.
‘சுதேசமித்திர’னில் உதவி ஆசியராக வேலைபார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய்ச் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத்தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது
flow1