புதன், 20 ஜூலை, 2011

A Great meeting...

மகத்தான சந்திப்பு My Photo






ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,



அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,



வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை



நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,



இருவருமே சகோதரிகள், Muscular Dystrophy எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,



அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப் பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,



நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை



எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.



அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,



வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,



உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,



பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.



படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,



பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,



இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்



சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்



இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,



வானவன் மாதேவிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு தசைச் சிதைவு நோய் அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்



.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,



வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்

எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,



ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்



இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்



அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்



அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்



அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி



அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது



தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து



நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள், அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,



அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது



அவர்கள்’ஆதவ் அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில் ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்



மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�

பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவர்கள் கண்களில் மின்னுகிறது.



ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்



நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.



புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,



புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,



வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை,



,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும் நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து



வானவன் மாதேவி வல்லபி இருவரும் படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில் கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,



எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.‘

தொடர்புக்கு:�

ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust�

கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,�

எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,�

சேலம் – 636005,�

அலைபேசி : 99763 99403 .9976399409

Pasumai..

அன்பு ஜெயமோகன்!My Photo




பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இணையத்தில் உலா வரும் எல்லா இளைஞர்கள் போலவே, எங்கோ சுற்றி அலைந்து, கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.



ஆன்மீகம் முதல் அரசியல் வரை தாங்கள் தொட்டுக்காட்டும் அத்தனை விஷயங்களும் வாசகனுக்கு ஞானத் தெளிவை ஏற்படுத்துகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட மசானோபு ஃபுகோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ பற்றித் தெரியாது. ஆனால், ஃபுகோக்காவின் இயற்கை வேளாண்மை பற்றிய தங்களின் பதிவு அருமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.



சரி, விஷயத்திற்கு வருவோம். தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ கட்டுரையை வாசித்த போது, எனக்குப் பெண் தேடும் படலம் நடந்து கொண்டு இருந்தது. வேடந்தாங்கல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், பெண்ணைப் பார்த்தேன். அழகும், அறிவும்… கொண்டவர். ஆனால், இடது கால் போலியாவல் பாதிக்கப்பட்டதால் தாங்கித் தாங்கி நடக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் நித்யா சொன்னதாக எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தது.(பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்குக் கண் தெரியாதைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய்ப் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.)



எங்கள் வீட்டில் பலரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் சாந்தப்படுத்த உங்கள் எழுத்துக்களே உதவியது. வரும் செப்டம்பர் 16 -ம் தேதி செங்கல்பட்டு நகரில் திருமணம் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். தங்களது வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை.



மேலும், பத்திரிகைத் துறையில் நான் சந்தித்த சுவையான நிகழ்வுகளை எனது http://sannachi.blogspot.com/வலைப்பூவில் எழுதி வருகிறேன். ஒரு முறை அதை எட்டிப் பார்த்தால் மகிழ்வேன்.

நேசத்துடன்,

பொன்.செந்தில்குமார்







அன்புள்ள செந்தில்குமார்



நான் தொடர்ச்சியாகக் காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் ஒரே இதழின் ஆசிரியராக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி அளித்த கடிதம். மானசீகமாக எப்போதுமே விவசாயியாக இருக்கிறேன் என்பதனால் இயற்கை விவசாயம் மேல் எப்போதுமே ஆர்வமுண்டு.



உங்கள் இணையதளம் மிக நன்றாக உள்ளது. நம்மாழ்வார், அண்ணாஹசாரே போன்ற மனிதர்களைப் பற்றிய நேரடிப் பழக்கத்தை எழுதியிருப்பதை விரும்பி வாசித்தேன். முக்கியமான பணி. குறிப்பாக வீடுதோறும் தத்துவஞானிகள் என்ற கட்டுரை. நம்முடைய மண்ணில் விவசாயிகள் அவர்களின் வாழ்க்கையினூடாகவே கனிந்து மலர்வதை எப்போதுமே கண்டுகொண்டிருக்கிறேன். அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் நம்முடைய பெரும் செல்வம்.



உங்கள் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திப்போம். என் வாழ்த்துக்களை மனைவிக்குத் தெரிவியுங்கள்.



ஜெ

Kuttu..

My Photoஎதிர் துருவ அரசியலும் ஜெயலலிதாவின் மாறாத சர்வாதிகாரமும்: சமச்சீர் கல்வியில் கிடைத்த குட்டுக்குப் பிறகாவது மக்கள் உணர்வுகளுக்கும் சமூக நலனுக்கும் மதிப்பளிக்கப்படுமா?


மாயா





ஒரு ஜனநாயக தேசத்தை மன்னராட்சிப் பாணியில் ஆட்சி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமீபத்திய தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த தோல்வியே சாட்சி. அதே போல, ஒரு மக்களாட்சியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்தால் சில சமயங்களில் அவமானங்களையும் சந்திக்க நேரும் என்பதற்கு சமச்சீர் கல்வி விவகாரமே சாட்சி. இதே போல சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதாலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச நினைக்கும் ஜெயலலிதா நீதித் துறையிடம் வரிசையாக மூன்று முறை தோற்றிருக்கிறார். இந்த வருடம் சமச்சீர் கல்வியையே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தெளிவான தீர்ப்பையும் மீறி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்லக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு பிடிவாதமிக்கவராக ஒரு தலைவர் இருப்பது ஆபத்தானது. அ.தி.மு.க அரசின் பிடிவாதம் மக்கள் மத்தியில் அக்கட்சியின் ஆட்சிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது என்ற தகவல் அவரைச் சென்று சேர்கிறதா என்று தெரியவில்லை.



ஒரு வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வரும் சமயத்தில் ஜெயலலிதா இவ்வாறு வலியப் போய் பிரச்சனையை சந்திப்பது அவரின் மாறாத இயல்பைக் காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சி குறித்து என்னென்ன நல்லெண்ணங்கள் உருவானதோ அவை அனைத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தில் அவரது பிடிவாதம் நாசமாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2001-06 ஆட்சிக் காலம் போலவே ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்படும் தலைவியாக மாறிவிடக்கூடும். 1 கோடி மாணவர்களின் கல்வியை நிர்கதியில் வைத்திருப்பது அவரின் முந்தை ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.



உண்மையில் ஜெயலலிதா கெட்ட பெயருக்கு பதில் நிறைய நிறைய நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில் ஒரு மிகப் பெரிய கண்டத்தை அடுத்து கடக்கவிருக்கிறார் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா. பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் அவர் சிறை செல்வது உறுதி என்று சட்டத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக ஜூலை 27ந் தேதி நேரில் ஆஜராகி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிற்பதே அவரின் பிம்பத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும். தி.மு.கவினர் ஏராளமானோர் வரிசையாக சிறை சென்றாலும் ஒரு கட்சியின் தலைவரே சிறை செல்வது என்பது அக்கட்சியின், ஆட்சியின் பிம்பத்திற்கு தீராத களங்கத்தை உண்டாக்கும்; மற்ற அனைத்தையும்விட மோசமான களங்கமாக அது இருக்கும். மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை உருவாகி வரும் ஒரு காலக் கட்டத்தில், ஜெயலலிதா தனது சர்வாதிகார குணங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பது அவரது கட்சிக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது.



கருணாநிதியின் எதிர் துருவமாக செயல்படும் ஜெயலலிதா, தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்றோ, சமச்சீர் கல்வியில் உள்ள குளறுபடிகளை வைத்து அதை நிராகரிக்க வேண்டும் என்றோ நினைப்பது ஒரு வழி. மாநில வாரியம், மெட்ரிக் வாரியம் என்ற பிரிவை அகற்றியது மட்டுமே தி.மு.கவின் சமச்சீர் கல்வியின் ஒரே சாதனை என்பதை புரிந்துகொண்டு கல்வியாளர்கள் அனைவரும் விரும்பும் பொதுக் கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பது இன்னொரு வழி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை புதிய முழுமையான காப்பீட்டுத் திட்டம் என்றும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என்று கொண்டு வர முடிந்த ஜெயலலிதாவால், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட பொதுக் கல்வித் திட்டமாக கொண்டு வர முடியாதா? அதைத் தடுப்பது யார்? சோ போன்ற வலதுசாரி, அடித்தட்டு மக்கள் விரோத ஆலோசகர்களா? தங்களின் கல்விக் கொள்ளைக்கு எந்த கடிவாளமும் வர விரும்பாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பண செல்வாக்கா? ஜெயலலிதாவுக்கும் மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அவரின் மனசாட்சிக்குமே வெளிச்சம்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

rvr.

My Photoவாசித்த புத்தகங்களும் வாசிக்கும் வலைத்தளங்களும maduraivaasagan in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்.



– ஹென்றி டேவிட் தோரோ

என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகங்களோடு நான் என்று முன்பு எழுதிய பதிவின் தொடர்ச்சிதான் இப்பதிவு. நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப் பார்க்கும் போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.







நாவல்கள்



1.துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்

2.கொற்றவை – ஜெயமோகன்

3.விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

4.பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

5.குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி

6.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்

7.வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

8.நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

9.கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

10.பார்த்திபன் கனவு – கல்கி

11.பொன்னியின் செல்வன் – கல்கி

12.ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்

13.நிழல்முற்றம் – பெருமாள்முருகன்

14.கல்மரம் – திலகவதி

15.ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி

16.பொய்த்தேவு- க.நா.சு

17.கானல் நதி – யுவன் சந்திரசேகர்

18.அபிதா – லா.ச.ரா

19.வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்

20.அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்

21.குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்

22.பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்

23.தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்

24.இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்

25.ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்

26.அந்நியன் – ஆல்பெர் காம்யூ

கட்டுரைத்தொகுப்புகள்



27.பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்

28.தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்

29.தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்

30.விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்

31.கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்

32.வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்

33.காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்

34.இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்

35.காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்

36.சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி

37.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி

38.கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி

39.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்

40.தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்

41.என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்

42.உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்

43.கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்

44.மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்

45.தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி

46.உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்

47.இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்

48.தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்

49.நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்

50.இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்

சிறுகதைத்தொகுப்புகள்



51.நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்

52.மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்

53.மதினிமார்கள் கதை – கோணங்கி

54.உயரப்பறத்தல் – வண்ணதாசன்

55.ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்

56.திசைகளின் நடுவே – ஜெயமோகன்

57.மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்

58.ராஜன் மகள் – பா.வெங்கடேசன்

59.பீக்கதைகள் – பெருமாள் முருகன்

60.வெண்ணிலை – சு.வேணுகோபால்

61.மண்பூதம் – வா.மு.கோமு

62.புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்

63.அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்

64.ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்

ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்



65.மாவீரர் உரைகள், நேர்காணல்கள்

66.சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி

67.எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்

68.பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா

69.ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா

மதுரை



70.எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்

71.அழகர் கோயில் – தொ.பரமசிவன்

72.எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்

73.மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்

74.கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்

கவிதைகள்



75.விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி

76.என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்

77.மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்

78.நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி

79.நட்பூக்காலம் – அறிவுமதி

கதைகள்



80.பஞ்சதந்திரகதைகள்

81.தெனாலிராமன் கதைகள்

82.பீர்பால்கதைகள்

83.மரியாதைராமன் கதைகள்

84.விக்ரமாதித்தன் கதைகள்

85.ஜென் கதைகள் – புவியரசு

86.திராவிடநாட்டுப்புறக்கதைகள்

87.மதனகாமராசன் கதைகள்

88.பரமார்த்த குரு கதைகள்

89.மகாபாரதக்கதைகள்

90.சூஃபி கதைகள்

91.முல்லா கதைகள்

92.ஆயிரத்தோரு அராபிய இரவுகள்

93.கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்

94.நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்

95.மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி

96.மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்

மற்றவை



97.திசைகாட்டிப்பறவை – பேயோன்

98.நவீன ஓவியம் – இந்திரன்

99.கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்

100.தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ

101.கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

இப்பட்டியல் இன்னும் தொடரும். நிறைய புத்தகங்களை இன்னும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பில் பத்து கதைகள் மட்டும் படிக்காமல் விட்டதால் அதைக்குறிப்பிட முடியவில்லை. சிலநேரம் புத்தகங்களை வாசிக்கவே விடாமல் காலம் கொடுமை செய்துவிடும். மொத்தத் தொகுப்பை வாசிக்கும்போது இப்படி அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.



வலைத்தளங்கள்



பாரதி சொன்னது போல “நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்” என்று இணையத்தில் தமிழை பார்த்து, பார்த்து பேருவகை அடைகிறேன்.



தொகுப்புகள், எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்



1.மதுரைத்திட்டம் http://www.tamil.net/projectmadurai

2.நூலகம் http://noolaham.net/

3.தமிழ்பல்கலைகழகம் www.tamilvu.org

4.தமிழ்விக்கிபீடியா http://ta.wikipedia.org/

5.கீற்று www.keetru.com

6.தமிழ்த்தொகுப்புகள் http://thoguppukal.wordpress.com/

7.அழியாச்சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com

8.கூடு www.koodu.thamizhstudio.com

9.உயிர்மை www.uyirmmai.com

10.காலச்சுவடு http://kalachuvadu.com/

11.நட்பூ www.natpu.in

12.முத்தமிழ்மன்றம் http://www.muthamilmantram.com/

13. உலகபுத்தகதினம் http://bookdaytn.blogspot.com/

எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்



14.எஸ்.ராமகிருஷ்ணன் www.samakrishnan.com

15.பிரபஞ்சன் www.prapanchan.in

16.ஜெயமோகன் http://www.jeyamohan.in

17.வண்ணதாசன் www.vannathasan.wordpress.com

18.நாஞ்சில்நாடன் www.nanjilnadan.wordpress.com

19.சாருநிவேதிதா http://charuonline.com/

20.கலாப்பிரியா http://kalapria.blogspot.com/

21.ச.தமிழ்ச்செல்வன் http://satamilselvan.blogspot.com/

22.கீரனூர்ஜாகிர்ராஜா http://jakirraja.blogspot.com/

23.மகுடேஸ்வரன் www.kavimakudeshwaran.blogspot.com

24.சுகுமாரன் http://vaalnilam.blogspot.com/

25.பவா.செல்லத்துரை http://bavachelladurai.blogspot.com/

26.தி.க.சி http://thikasi.blogspot.com/

27.வாமு.கோமு www.vaamukomu.blogspot.com

28.க.சீ.சிவக்குமார் http://sivakannivadi.blogspot.com

29.நாகர்ஜூணன் http://nagarjunan.blogspot.com/

30.காலபைரவன் http://kalabairavan.blogspot.com/

31.தமிழ்நதி www.tamilnathy.blogspot.com

32.சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.com

33.கிழக்கு பதிப்பகம் பத்ரி http://thoughtsintamil.blogspot.com

34.புத்தகம் http://puththakam.blogspot.com/

35.தமிழ்ச்சமணம் www.banukumar_r.blogspot.com

36.ஷாஜி http://musicshaji.blogspot.com/

37.மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.com

38.வெயிலான் http://veyilaan.com/

39.பிச்சைப்பாத்திரம் www.pitchaipathiram.blogspot.com

40.தனிமையின் இசை http://ayyanaarv.blogspot.com

41.ஆடுமாடுகாடு http://aadumaadu.blogspot.com/

42.தீராதபக்கங்கள் www.mathavaraj.com

43.மொழிவிளையாட்டு http://jyovramsundar.blogspot.com/

44.தமிழில் http://linguamadarasi.blogspot.com

45.பதியம் http://www.pathiyam.com

46.நிசப்தம் www.nisaptham.com

47.பி.கே.பி. http://pkp.blogspot.com/

48.கூட்டாஞ்சோறு http://koottanchoru.wordpress.com

49.என் காலடி ஓசை http://adhiyaman.blogspot.com/

மதுரைப்பதிவர்கள்



50.மதுரை சரவணன் http://veeluthukal.blogspot.com/

51.தருமி http://dharumi.blogspot.com

52.யாழிசை http://yalisai.blogspot.com

53.ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com

54.ஸ்ரீ http://sridharrangaraj.blogspot.com

55.பொன்னியின் செல்வன் http://ponniyinselvan-mkp.blogspot.com

56.ஆம்பல் www.aambal.wordpress.com

57.கல்வெட்டு http://kalvetu.blogspot.com/

58.மதுரைக்காரன் http://maduraipandi1984.blogspot.com/

59.தீதும்நன்றும் பிறர்தரவாரா http://yaathoramani.blogspot.com/

60.மதுரைவாசகன் http://maduraivaasagan.wordpress.com/

வலைத்தள வாசிப்புக்கு நான் வந்தே இரண்டு ஆண்டுகள்தானிருக்கும். எனவே மேலே உள்ள பட்டியல் நீளும். இதில் உள்ளதைத் தாண்டியும் வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன். பின்னூட்டமிடும் நண்பர்களின் தளங்கள் மற்றும் கீழேயுள்ள தளங்களில் உள்ள இணைப்புகளில் இருந்து புதிய முகவரிகளுக்கு சென்று வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன். மதுரைப்பதிவர்களின் தளங்களையோ, மதுரையையோ குறித்து வாசிக்கும்போது அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையே இல்லை. இன்னும் நிறைய வாசிக்கணும்.



எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தளம்தான் முதலில் வாசித்தது. அவரது தளம்தான் என் இணைய வாசிப்பை அதிகரிக்க காரணம். எனவே, எஸ்.ரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. எனக்கு முதன்முதலில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய மதுரைசரவணன் அவர்களுக்கும் நன்றி. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி!

புதன், 13 ஜூலை, 2011

APPAA..!

இன்றைக்கு  yen  அப்பாvin  Ninaivu  தினம். [14.07.2007] I LOVE MY DAD..and I MISS HIM SMy PhotoO MUCH. r.v.rajendiran 14.07.2011.

Jayamohan.

This Blog


This Blog



Loading...

Saturday, September 4, 2010

ஜெயமோகன் பற்றி சுஜாதா
My Photo


சுபமங்களாவில் மார்ச் 1993இல் வந்தது.



---



தற்போது தமிழில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்களில் கவனிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஜெயமோகனின் பெயர் இருக்கிறது. சில ஆண்டுகளாக எழுதிவரும் இவர் கதைகளை நான் அவ்வப்போது கவனித்ததுண்டு. போன வருஷம் இவர் கதையான ‘ஜகன் மித்யை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜனாதிபதி பரிசு பெற்றது சந்தோஷமாக இருந்தது. (இவருடைய வேறு நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது வேறு விஷயம்.) சிறு பத்திரிக்கைகளில் எழுதிவரும் ஒரு இளம் எழுத்தாளருக்கு இந்த மாதிரி அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமான விஷயமே.







”திசைகளின் நடுவே”. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் ஏற்கனவே வெளிவந்து ‘நல்ல கவனிப்பு பெற்றது’ என்று பின்னட்டை சொல்லும் இந்த புத்தகம் - பதினாலு சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதை திறமையை கவனிக்க போதுமான கதைகள் உள்ளன.



என்னை பொறுத்த்வரையில் நான் ஒரு சிறுகதையின் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தில் பங்கேற்கும்போது தான் அது எனக்கு நல்ல கதையாகிறது. இல்லையெனில் நான் அதை உடனே நிராகரித்துவிடுகிறேன். மற்றவன் அனுபவம் எனக்கு முக்கியமில்லை.



இந்த பரீட்சையில் ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” தொகுப்பில் பதினான்கு கதைகளில் ஐந்து தேர்ந்தன. இதனால் மற்றவை நல்ல கதைகள் இல்லை என்று சொல்லவில்லை. எனக்கு அவை உறைக்கவில்லை.



‘பல்லக்கு’ என்ற அபாரமான கதையில் நான் சொன்ன நல்ல கதைக்குரிய அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன. முதலில் கதாசிரியன் சிருஷ்டிக்கும் தனிப்பட்ட யதார்த்தம். அந்த மலையாளச் சூழல். “ஓர்மிச்சா எனகு கரிச்சல் வரது, ஏமானே” போன்ற வினோத உரையாடல்கள். அற்புதமான வர்ணனைகள். இந்த வகை வர்ணனைகள் அந்தக் கதை சூழலை முழுவதும் அங்கீகரிக்க வைக்கின்றன்.



இந்தச் சூழலில் சொல்லப்படும் சம்பவங்கள் நமக்கு ஏற்படுத்தும் ‘ரியலைஸேஷன்’ தான் அந்த கதையின் இலக்கியத்தரத்தை உயர்த்துகிறது.



ஜெயமோகன் ஒரு வேற்று மொழிக்காரரின் அசாத்திய தைரியத்துடன் சிறுகதையின் பலவித வடிவங்களை முயற்சிப்பதை பாராட்ட வேண்டும். வேதகாலக் கதைகள், சாமியார் கதைகள், பிலாசபி கதைகள் எல்லாமே தயங்காமல் முயற்சிக்கிறார்.



”திசைகளின் நடுவே”யின் முன்னுரையில் “அறச்சார்பே எனது கடவுள். அறச்சார்பற்ற படைப்பை இலக்கியமாக மதிக்க மாட்டேன். கால் சுண்டு விரலால் எற்றித்தள்ள தயங்க மாட்டேன். அவற்றின் சகல அங்கீகாரங்களுடனும் கூட!” என்கிறார். இந்த ஆரவாரமான அலட்டலான முன்னுரையின் தேவையில்லாமலேயே ‘நதி’, ‘வலை’, ‘போதி’, ‘படுகை’ போன்ற கதைகளை ரசிக்க முடிகிறது.



அறசார்பு என்று எதை சொல்கிறார் என்பது குழப்பமாக இருப்பினும் ஒரு தொகுதிக்கு ஒரு ‘பல்லக்கு’ வந்தாலே போதும்.



.

செவ்வாய், 12 ஜூலை, 2011

gov.servant

சுட்டபின் நெருப்பு என்றும் My Photo


உஷாதீபன்





அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் இருக்கின்றன. அவை அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிறழ்ச்சி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது அதிகாரி மீது இந்த நடவடிக்கைகள் பாய்வது உண்டு. இன்னின்ன மாதிரியெல்லாம் விதிமுறைகள் உள்ளன, இதற்கெல்லாம் கட்டுப்பட்டே நீங்கள் அரசு ஊழியராகப் பணிபுரிகிறீர்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து, நன்கு அறிந்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியில் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (அதாவது ஓராண்டு அல்லது ஈராண்டு) இன்னின்ன தேர்வுகளையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட அரசுப்பணியாளர் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும் அப்படித் தேர்ச்சி பெற்றால்தான் அவருக்கு இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு உண்டு (அதாவது முதல் ஆண்டு முடித்தவுடன் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக எடுத்த எடுப்பிலேயே தடை என்பது கூடாது என்பதன் பொருளாக முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு விடுகிறது) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.



குறைந்த பட்சம் இந்த விதிமுறைகளெல்லாம் ஒரு அரசுப் பணியாளர் அறிந்திருத்தல் கட்டாயம் என்கிற ரீதியிலேயே மேற்கண்ட தேர்வு முறைகள் ஒரு அரசுப் பணியாளரின் நலன் கருதி, அவரின் கடமையாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நடைமுறையில் உள்ளன. அதற்கு மேல் இருக்கும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தல் என்பது அவரவர் விருப்பம் மற்றும் ஆர்வம் சார்ந்ததாகும்.



இவை சட்டமல்ல. விதிமுறைகள். அதாவது ஒழுங்குமுறை நடவடிக்கைகள். அலுவலக நடைமுறை விதிகள். நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக வழிவகுக்கப்பட்டவை.



இந்த விதிமுறைகள் மீறப்பட்டாலே ஒருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீறல் என்கிற விதி பாயும். அவர் சார்பாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு அது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்டவரின் தன்னிலை விளக்கம் பெறப்பட்டு, இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையிலும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், அன்னார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட அரசுப் பணியாளருக்கு ஊதிய உயர்வு தற்காலிக நிறுத்தமோ, தொடர் நிறுத்தமோ, தற்காலிகப் பணி நிறுத்தமோ அல்லது கண்டனமோ அல்லது வெறும் எச்சரிக்கையோ போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.



ஆக அரசுப் பணியாளராய் இருப்பதில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒழுங்கு முறைகள் உள்ளன. என்னவோ போனோம் வந்தோம் என்று இருந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்தான் கண்டிப்பாக வேலை பார்த்தாக வேண்டும். காலையில் அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தால், மாலை அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பும்வரை அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் விதிமுறை தவறாமல், இன்னின்னவகைக்கு இவைதான் விதிமுறைகள் என்பதைச் சரியாகக் குறிப்பிட்டு, தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்து, அந்தக் குறிப்பிட்ட பத்திகளையும, விதி எண்களையும் சொல்லி இந்தப் பணி இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுத்து எழுதுவதில் ஒரு எழுத்தருக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.



இம்மாதிரிக் குறிப்பிட்டு ஆணி அடித்தாற்போல் சொல்லி, என்னை விட்டால் வேறே ஆள் கிடையாதுய்யா இதுக்கு என்கிற பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்றுகிற ஏராளமான, லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 58 வயது வரைக்கும் நான் இதில் இருந்தாக வேண்டும். எனவே இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று இருக்கும் நடைமுறை விதிமுறைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்து, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, எதானாலும் அந்தக் குறிப்பிட்ட க்ளார்க்கைக் கூப்பிடு என்று அலுவலரே தாங்கித் தடுக்கி அழைக்கும் இடத்திலும், அவரின்றி ஒன்றும் அசையாது என்கிற இடத்தில் தங்களை வாழ்நாள் பூராவும் நிறுத்திக் கொள்ளும் அரசுப் பணியாளர்கள் ஏராளம்.



ஒரு அலுவலகத்தில் பியூன் முதல் அலுவலர் வரை அரசுப்பணி நடைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் என்பது பொது. யார் தவறு செய்தாலும், செய்கின்ற தவறுக்கேற்றமாதிரி அவருக்குத் தண்டனை என்பது உறுதி. இதற்கு பயந்துதான், கட்டுப்பட்டுத்தான் வேலை செய்தாக வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். நேரம் காலம் மாறலாம். அலுவலக நேரம் கடந்து வேலை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் பணியாற்றி முடிக்கலாம். எல்லாமும் உண்டுதான். ஆனால் பொறுப்பு என்கிற கட்டுப்பாட்டு வளையத்திற்குள்தான் வலம் வந்தாக வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. இது மீறப்படும்போதுதான் என்றாவது எக்கச்சக்கமாக விஷயம் மாட்டிக் கொள்கிறது.



ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஒரே வரி. வேறு எதுவொன்றாலும் இதை வரையறுக்க முடியாது. இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கும், கல்வி வியாபாரத்திற்கும், வாழ்நிலை உச்சங்களுக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. ஆகையினால் சமயத்திற்குத் தகுந்தாற்போல் நான் என்னை மாற்றிக் கொள்ளத்தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இந்த வேலைக்கு வரவில்லை. இந்த நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறேன் என்றுதான் வேலையில் சேர்ந்தோம். அப்படியென்றால் அதற்கு என்ன பொருள்? என் சுய ஆசைகள் அதில் குறுக்கிடாது, சுய நலன்கள் உள்ளே வராது, பொறுப்பின்மை தலையிடாது என்பதெல்லாம்தான். சொந்த வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு நான் பார்க்கும் உத்தியோகம்தான் ஈடு கொடுத்தாக வேண்டும் என்று தவறுகள் செய்ய முனைந்தால் பிறகு கஷ்டப்பட வேண்டியதுதான். அதற்கான தண்டனைகள் வருகையில் எதிர்கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.



இப்படியான தவறுகளைச் செய்து, மாட்டிக் கொண்ட அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் உண்டு. அரசுப் பணியில் இருந்த ஆண்டுகளில் தொடர்ந்து தவறுகளே செய்துகொண்டு, அதையே நடைமுறையாய் ஆக்கிக் கொண்டு, கடைசியில் ஓய்வு பெறுகையில் ஓய்வு பெற முடியாமல் கண்டனப் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வுப் பலன்கள் எதையுமே பெற முடியாமல் போனவர்கள் இருக்கிறார்கள். பிறகு பத்தாண்டுகள் கூடக் கடந்து, அவர் பெயரிலான குற்றச்சாட்டுக்கு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு தனது ஓய்வூதியப்பலன்களைப் பெற்று, வீட்டில் பெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பார்த்தவர்கள், தண்டனையில் இருக்கையிலேயே மண்டையைப் போட்டவர்கள், வரும்போது வரட்டும் என்று அத்தனை காலம் விதிகளுக்குப் புறம்பாகச் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு கொடிகட்டிப் பறந்தவர்கள், என்ன சம்பாரிச்சு என்ன செய்ய (இங்கே சம்பாத்தியம் என்பது உண்மையான சம்பளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்க) என்று வியாதியில் விழுந்து இருதய ஆபரேஷன், பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர், நோய் நொடி என்று விழுந்து நசிந்து போய் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.



எல்லாமும் உண்டுதான். ஆனால் அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் என்பது எல்லாருக்கும் பொது. அதை நாம் எவ்வளவு மரியாதையோடு கடந்து செல்கிறோம் என்பதைப் பொறுத்து அவை நம்மை வாழ வைக்கிறது. அல்லது வீழ்த்தி விடுகிறது.



லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது. பிறந்த நாள் சான்று வழங்க லஞ்சம்பெற்ற எழுத்தர் கைது. மின் இணைப்பு வழங்க கையூட்டுப் பெற்ற பொறியாளர் கைது.வண்டி லைசன்ஸ் வழங்க லஞ்சம். ஓட்டுநர் தகுதிக்கு லஞ்சம். இப்படி எத்தனை எத்தனையோ லஞ்ச லாவண்யச் செய்திகளை அவ்வப்போது நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.



கையும் களவுமாகப் பிடிபட்டார் என்ற செய்தியை வெறும் செய்தியாகத்தான் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மறைந்து நின்று பவுடர் தடவிய அந்த ரூபாய் நோட்டுத் தாள்களைக் குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் அல்லது அலுவலர் பெறும்போது பாய்ந்து சென்று மறைவிலிருந்து திடீரென வெளிப்பட்டுப் பட்டென்று முன்னே தோன்றிப் பிடிக்கிறார்களே அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யத் துணியவே மாட்டார்கள். பவுடர் பட்ட கை விரல்களை டம்ளரில் நனைக்கச் சொல்வதும், அதில் அந்தப் பவுடர் கலந்து சாட்சியாவதும், உடனடியாகப் பிடிபட்டவரைப் பழகிய அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையில் சட்டையைக் கழற்றி அமர்த்துவதும், சட்டென்று மாறிய சூழலில், மானக்கேடில் அவர் வியர்த்து விறுவிறுத்து தொப்பென்று நனைந்து கிடப்பதும், கைகளும் உடம்பும் நடுக்கம் கொள்வதும், வாய் குழறுவதும், கண்கொள்ளாக் காட்சிகள். அய்யோ பாவமே! என்று எப்படிப்பட்ட மனிதனுக்கும் சற்று ஈரம் சுரக்கத்தான் செய்யும். இவையெல்லாம் எதுவுமே இல்லாமல் என்ன பெரிய இது என்று இருக்கும் கடுவன்களும் உண்டுதான்.



வாழ்க்கை பூராவும் படு நேர்மையாக இருந்து, கடமையே கண்ணாகக் கழித்து, அலுவலருக்குக் கொடுத்த சொந்தப் பணம் திரும்ப வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் அதை இப்படித்தான் நேர் செய்தாக வேண்டும் என்கிற முடிவில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தவறு செய்து மாட்டிக் கொண்டு சிறையில் அடைபட்ட பரிதாபமான அரசு ஊழியரைக் கூட பலர் அறிவர். குறைந்தது ஐந்தாண்டு, பத்தாண்டு என்று கூட வழக்குகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.



அரசன் முதல் ஆண்டிவரை என்று சொல்வதைப்போல் ஒரு சாதாரண பியூன் முதல் மேலதிகாரி வரை விதிமுறைகள் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தண்டனை தண்டனைதான்.



இதெல்லாம் இப்படியிருக்கையில் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று பொது ஜனத்தால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சரும் ஆனவர்கள் அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படுவேன், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம் கொடேன் என்று கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டு, எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள்.எப்படியெல்லாம் இஷ்டப்படி செயல்படுகிறார்கள். இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்தான் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் அவ்வப்போது நம்மை வந்து தாக்குகின்றன. புதிது புதிதாக வரும் செய்திகள், இது இன்னும் எங்கெங்கு நீளுமோ, யார் யார் மீது பாயுமோ என்றெல்லாம் நாளும் எதிர்பார்க்க வைக்கின்றனவே?



மக்களுக்கு என்ன தெரியும், ஓட்டுப் போடுவதோடு அவர்களின் வேலை முடிந்து போனது என்கிற கதையாகவல்லவா இருக்கிறது இவர்களின் இந்தத் துணிந்த செயல்பாடு.



பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னவாயிற்று? அவற்றில் ஒன்று கூடக் கடைப்பிடிக்கப்படவில்லையா? யார் நம்மைக் கேட்பதற்கிருக்கிறது இனி எல்லாமே நம்மளதுதான் என்பதுபோலும், இனி என்றும் எப்பொழுதும், நாம்தான் என்பதுபோலவும் அல்லவா செயல்பட்டிருக்கிறார்கள். வாய் நீண்டு, கை நீண்டு, செயல் நீண்டு அதல பாதாளம்வரையல்லவா பாய்ந்திருக்கிறது.



மக்கள் வியந்து, விக்கித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா? அவர்களால் அறியப்படாததா? வெறும் ஓட்டுப் போடுறதோட உதறிட்டுப் போயிடறது இல்ல மச்சான்....எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்...



அதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. இதோ நான் சொல்கிறேன் எழுதிக் கொள்ளுங்கள்.



இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும், எவரையும் இழிவுபடுத்திவிட முடியும். எந்தப் பொய்களையும் உண்மையென்பதுபோல் சித்தரிக்கமுடியும். நடக்காததையெல்லாம் நடந்ததுபோல் காட்டிவிட முடியும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.... இதுதான் இன்றைய உண்மை.



ஆக, எந்தத் தப்பையும் மனம் திறந்து ஒத்துக்கிற மாதிரி இல்ல....



அதெப்படிங்க முடியும்...சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு...



மனசாட்சின்னு ஒண்ணு உண்டா இல்லையா?



மனமாவது சாட்சியாவது...யார் சொன்னா அப்டி? கிலோ என்ன விலை?



ஆஉறாஉறா...இந்தப் பாமர அப்பாவி மக்களின் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு...! இல்லையென்றால் இப்படியெல்லாம் பேச முடியுமா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், விடாமல் சொன்னால், காலம் பூராவும் சொல்லிக்கொண்டிருந்தால், ஓ! அதுதான் உண்மை போலும்? என்று என்றாவது சந்தேகம் வர ஆரம்பிக்காதா? கண்டிப்பாக வருமய்யா...வரும். அப்படித்தானே இத்தனை ஆண்டு கால அரசியல் நகர்ந்திருக்கிறது. அரசியல் என்றாலே இதுதான் என்கிற அளவுக்குக் கொண்டு வந்தாயிற்றே? மக்களின் நம்பிக்கைதான் ஆதாரம். ஆனால் எதை நம்புவது? எப்படி நம்ப வைப்பது? இப்படித்தான். பாடப் பாட ராகம். பொய் சொல்லச் சொல்ல உண்மை!



திருவாளர் பொதுஜனம் அவர்களே...



இந்தளவுக்கு, இத்தனை ஆண்டு காலமாக வளர்த்து விட்டது யார்? நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள்தானே...படுங்கள்...!! நன்றாகப் படுங்கள்

சனி, 9 ஜூலை, 2011

Stella Broose..

எழுத்து / வகை : ஸ்டெல்லா புரூஸ் My Photo







short story









அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட - நடனத்தில்.







எனது மயில்....ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே....பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் - ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு - அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு - அவள் பெப்பி பெப்பி பெப்பி........







பெப்பி - என் நினைவே, என் கனவே.......ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? - இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். 'என் மயிலின் மடியில்.' ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும்.







ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப்பி என்கிறேன்? சொல்கிறேன். உங்கள் வீட்டில் பியானோ இருக்கிறதா? பெப்பி ஆரோமெல்லோ என்ற இளைஞனின் பியானோ இசையில் உங்களுக்குப் பைத்தியம் உண்டா? மயிலிடம் இரண்டும். எனது மயிலும் பிரமாதமாக பியானோ வாசிக்கும். அதனால்தான் பெப்பியென்று என் மயிலை நான் மட்டும்...







லைட் ப்ளு வர்ண சுவர்கள். மூலையில் ரெட் கார்ப்பெட்..பியானோ. மயில் பியானோ வாசிக்கிறது. மயிலின் டிரஸ் குரு ரெட்டில். மயிலின் பொன் வர்ணக் கூந்தல் - தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு அருவி அமைதியாக வழிவதைப் போல. மயிலின் அருவியை மெதுவாக ஸ்பரிக்க ஒரு மலராத ரோஜாவை அந்தப் பொன் வர்ணக் கூந்தலில் சூட்ட நான் - பைத்தியமாக...







பெப்பி எனக்கு இன்ஸ்பிரேஸன். எனக்கு அவள் அடுத்த வீட்டுப் பெண். அதனாலா மயிலை நான் 'படோசன்' பார்க்க அழைத்துப் போனேன். மயிலுக்கு இந்திப் படம் பிடிக்கவில்லை. ஆனால் நஸீம் பானுவின் பெண்ணைப் பிடித்தது. 'ஸி ஹர் அய்ஸ்' என்றாள். பார்த்தேன். மயிலின் கண்களை; நீல நிற விழிகளில் நான்.







எனக்கு மயிலின் வீட்டில் மிகவும் சுதந்திரம். அந்த சுதந்திரம். அந்த சுதந்திரத்தின் ஆரம்பம் - புத்தகம். மயிலின் அப்பா - அவருக்கு எல்லா இடங்களிலும் ஒரே பெயர்தான். மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 50 வயது ஜென்டில் மேன். பார்த்தால் 30 வயது. மிஸ்டர் தாமஸ் ஒரு புத்தகப் பூனை. நான் சொல்லவில்லை. எல்லாம் என் மயில்தான். தூங்குவதும்கூட மயிலின் அப்பாவிற்குப் புத்தகத்தில்தான். புத்தகத்தில் தூங்கினால் பூனையா? அப்படியானால் நானும்தான்.







மகளை மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன் சொல்வார் : "மகளே நீ கூட நமது புஸ்ஸி போல," புஸ்ஸி? யெஸ், மயில் வீட்டுப் பூனைக்குட்டி.







"பரிஹரின் டெரிடோபைட்டைப் படிக்கும்போது தான் நினைத்தேன். உன் அம்மாதான் சொன்னாள் - ஜெனிடிக்ஸ் படிக்கும்போதுதானாம்.. பரீட்சையிலும் போய் தூங்காதே மகளே..."







நானும் மனதிற்குள் சொல்கிறேன்.. "பரீட்சையிலும் போய் தூங்காதே மயிலே..." என்னுடைய மயில் பாட்டனி ஸ்டூடண்ட்..எனக்கென்ன தெரியும் பாட்டனியில்? ஆங்கிலம் தெரியாதவனுக்கும் எ பி ஸி டி என நான்கு எழுத்துக்கள் தெரியும்போது. எனக்கும் பாட்டனியில் தேலோபைட்டா, பிரையோபைட்டா என இரண்டு பெயர் சொல்லத் தெரியும். பூக்கும் தாவரம் பூக்காத தாவரம் என்று மயில் பெரிய லெக்சரை ஆரம்பிப்பாள். பாதியில் நிறுத்தி, 'போரடிக்கிறேனா,' என்பாள். நான் என்ன சொல்வேன்? பேசாமல் இருப்பேன்.







நான் இல்லாமல் மயிலின் வீட்டில் கிறிஸ்துமஸ் இல்லை. மயிலின் பிறந்த நாள் இல்லை. எப்படி இவ்வளவு நெருக்கமானேன்? சொல்கிறேன். எனக்கு முதலில் அறிமுகம் மயில் இல்லை. மயிலின் அப்பாதான்.







ஒருநாள் தலைமைச் செயலகம் பக்கம். சிகப்பு வர்ண பஸ் நின்றுவிட்டது. பஸ் போகாதுயென்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் அந்த மஞ்சள் வர்ண ஹில்மன் கேம்பிரிட்ஜி. நிலைமை புரிந்து, என்னைப் பக்கத்து வீட்டுக்காரனாகத் தெரிந்து கொண்டார் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன். 'கெட் இன்' சொல்லிக் கதவைத் திறந்தார். முன் ஸீட்டில், அவருக்கு வலது பக்கம் நன்றி சொல்லி உட்கார்ந்தேன். அறிமுகப் பரிமாற்றம், கார் போகிறது என்பதை 'வார் மெமோரியலைப் பார்த்துத்தான் தெரிந்தேன்.







"என்ன அது புத்தகம்?" - தாமஸ் கேட்டார்.







"சாத்தர் - ட்ரபிள்ட் ஸ்லீப்..." தாமஸ் ஆச்சர்யப்படவில்லை. சந்தோஷப்பட்டார்.







"சாத்தரில் வேறு என்ன படித்திருக்கிறீர்கள்?"







"த ஏஜ் ஆஃப் ரீஸன்."







"வேர்ட்ஸ்?"







"படித்ததில்லை."







"அவசியம் படியுங்கள்."







"வேர்ட்ஸ் எனக்குக் கிடைக்கவில்லை."







"நான் தருகிறேன்..." சாந்தோம் வந்தது. க்ரீன் வேஸ் ரோட் வந்தது.







'பொகைன் வில்லா' மயிலின் வீட்டிற்குப் பொருத்தமான பெயர்தான். சுற்றுச்சுவர் பூராவும் வெள்ளையாய், ஆரஞ்சாய். இரண்டும் கலந்ததாய் - பொகைன்விலா பூக்கள் - இலைகளே இல்லாமல.







தாமஸ் ஆண்டர்ஸன் என்னை வீட்டிற்குள் அழைத்தார். போனேன். மயிலையும் மயிலின் அம்மாவையும் அறிமுகம் செய்தார். வெளிச்சமான ஃப்ரிஜ்ஜிலிருந்து புகை நெளியும் கொக்காகோலா.







மயிலின் அப்பாவிடம் எவ்வளவு புத்தகங்கள்......ஒரு புத்தகம் வாங்கப் போனவன் இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டு வந்தேன். ஆஸ்கர் வயில்டின் - தாஸ்தாவ்ஸ்கியின் - இன்னும் நிறைய...







மயிலின் அறையிலும் நிறைய புத்தகங்கள்.. என்ன புத்தகங்கள்? கார்ட்டூன்ஸ். நாய் வளர்ப்பு. பூனை வளர்ப்பு. மீன் வளர்ப்பு. வீட்டை அலங்கரிப்பது. தோட்டக் கலை. இவைகளைத் தவிர்த்து பெரிய பெரிய உறை போட்ட வால்யூம்கள் - இசையைப் பற்றி... இசை விற்பன்னர்களைப் பற்றி; அவர்களுடைய சாதனைகள் பற்றி...போகட்டும்.







மயிலைப் பற்றிய பிற விஷயங்கள் - ஸ்டெல்லா மேரீஸில் பி எஸ்ஸி இறுதி ஆண்டு. பாட்டனி மெயினில் முன் வரிசையில். கல்லூரி முழுவதுக்குமே கனவுக் கன்னியாக.







என்னைப் பற்றி - ப்ரசிடென்ஸியில் எம்.ஏ இறுதியாண்டு - ஆங்கில இலக்கியத்தில் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம். புரபஸர் உறுதி சொல்லி இருக்கிறார். ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அப்புறம்? பான் அமெரிக்கனில், பாரிஸ் வழியாக, சுதந்திரச் சிலை வரவேற்க - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. ஹார்வர்ட் யுனிவாஸிட்டியில் மஞ்சள் நிறப் பூக்கள் உதிர்ந்த விரிப்பாய் விரிந்திருக்கிற மைதானத்தில், மூடுபனியில், பக்கத்தில் மயில். மயிலின் அருவி என்னுடைய தோளில்..சபையரில் மீசை வைத்த மஹாராஜாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மஹாராணியுடன் சுதந்திர சிலையைப் பார்த்து வருவேன்.







என் மயிலை, என் பெப்பியை நான் காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலை அவளிடம் நான் வெளிப்படுத்தவில்லை. காரணம்? காதலுக்கு அர்த்தம் காதல் இல்லையாம். பின்? காதலுக்கு அர்த்தம் செக்ஸôம்? என் மயில்தான் சொல்கிறாள். இதை என் பகுத்தறிவும் இருதயமும் ஒப்புக் கொள்ளவில்லை;. காதல் வெறும் செக்ஸ் இல்லை என்பதை எப்படி விளக்குவேன்? காத்திருக்கிறேன்; காலத்திற்காக.







என்னுடைய மயிலைப் பியானோ பைத்தியம் என்றேன். பியானோவுக்கு மட்டுமல்ல, இசைக்கே அவள் பைத்தியம். இசைக்குஞ்சு என் மயில். கிளாரினெட்டில் தனித்வம் காட்டியவன் மொஸôர்ட் என்பாள். ஷைக்காவ்ஸ்கியின் ஃபிரான்ùஸஸ்கா - டி - ரிமினியாம். அதை அந்த ஸ்டீரியோவில் போட்டுக்கொண்டு ரெட் கார்பெட்டில் மயில் ஆடும் ஆட்டம்... ஆடு மயிலே ஆடு. பொன் வர்ணக் கூந்தலுக்கு பீர் ஊற்றிக் குளிக்குமா என் மயில்? அவளின் கூந்தல் அந்த வர்ணமாய்; அந்த நுரைபோல்...







ஃப்ரான்ஸ் ஷ÷பருக்கு பித்தோவன் கடவுள் மாதிரியாம். இசைஞர்களைப் பற்றி மயிலுக்குத் தெரியாத விஷயமே கிடையாதோ?







ஸம்மர். மயில் அப்பாவோடும் அம்மாவோடும் லோனாவாலாவில். லோனாவாலா என்ற பெயரைக் கேட்டாலே என் மயிலின் கண்கள் ஒரு மயக்கம் மயங்கிச் சிரிக்கும். கண்களுமா சிரிக்கும்? சிரிக்கும். என் மயிலுக்கு மட்டும். பத்து நாட்கள் மயில் அந்த மலைச் சரிவுகளின் ஈரக் காற்றில. அதெல்லாம் பித்தோவன் ரசனை மாதிரியாம். லோனாவாலா ரசனை. போகட்டும்..







மணக்கும் எங்கள் பாத்ரூம். ஜில்லென்ற ஷவரின் கீழ் பச்சை நிற ரப்பரின் மேல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். பெப்பி பெப்பி பெப்பி.. மயிலே மயலே. என்னென்னவோ நினைக்கிறேன். மயில் பீர் வர்ணக் கூந்தல். ரெட் கார்பெட். ஜ÷ம் ரீவ்ஸ். ஜøலி ஆண்டரூஸ். ரசனை. ஓவியம். வாஷ்கோ. ரசனை. சீன்கானரி 007. ரெக்யல் வெல்ச். ரசனை, மயில், ரசனை. கண்டு பிடித்து விட்டேன். கண்டு பிடித்து விட்டேன். ஷவருக்கும் பச்சை நிற ரப்பருக்கும் இடையே போய் போய் வந்தேன். குளிரும் ஷவரில் ஷேக்.







மயிலே. நீ இறகு போடப் போகிறாய். குயிலாக இந்த ஷோல்டரில் சாய்ந்து பாடப் போகிறாய். ஆர்க்கமிடிஸ் போல ஓடினால் என்ன? பாம்பே டையிங்கின் கதகதப்பில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறேன். ஷவரை நிறுத்துகிறேன். நீர் சொட்டுச் சொட்டாக பச்சை நிற ரப்பரில் உருண்டு உருண்டு ஓடுகிறது.







கதவுக்கு வெளியே தங்கையின் குரல். "அண்ணா, என்ன பண்ணுகிறாய்? குளிக்கிறாயா, இல்லை பாத்ரூமை கழுவி விட்டுக்கொண்டு....." "ஷட்டப்," கதவைத் திறக்கிறேன்.







"லிட்டில் நெல் ; இந்த பாத்ரூமில் நான் ஓர் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறேன்.."







"உனக்கென்னப்பா, நீ பெரிய ஆர்க்கிமிடிஸ்."







எங்கள் வீட்டில் லிட்டில் நெல் பிரியம் வந்துவிட்டால் வீட்டில் எல்லோரையும் போப்பா வாப்பா என்றுதான் பேசும். ஒன்றும் சொல்லக்கூடாது. அருமையான குழந்தை..







என் அறைக்குள் ஓடுகிறேன். என் மயிலுக்கு ரோஜா நிறக் காகதிதங்களில் காதலுக்கு ஒரு தீஸிஸ். என்னுடைய காதல் ராணிக்கு காதல் சாசனம் எழுதுவது இந்தப் பட்டையடித்த லுங்கியைக் கட்டிக்கொண்டா? சுருட்டி எரிகிறேன். டார்க் ப்ளூ பேண்ட். சில நிமிடங்கள் மயிலின் கூந்தல் நினைப்பில். எழுத ஆரம்பிக்கிறேன்.







அன்புத் தோழி பெப்பி,

உன் நண்பன் ஆனந்த்ஷங்கர் எழுதும் இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தைத் தருகிறதா?பிரியமுள்ள பெப்பியே. எங்கள் வீட்டு பாத்ரூமில் நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறேன். அது என்ன? எழுதுகிறேன். பெப்பி; கோடை வந்தால் நீ லோனாவாலா, லோனாவாலாயென்று ஓடிப் போகிறாயே.... அதை என்ன வென்று சொன்னாய்? ரசனையென்று. இப்போதும் இல்லையென்று மறுக்க மாட்டாய். உதகமண்டலத்தை விட அந்த லோனாவாலா உனக்கு சுகமாக. இனிமையாக..லோனாவாலா ரசனை. இது உன் ரசனை. உன்னுடைய இன்னொரு ரசனை - நிறைந்து வழியும் பீர் கிண்ணத்தில் பொங்கிப் பூரிக்கும் பொன்னிற நுரைகள் உரசி நொறுங்கும் ஓசை எப்படி இருக்கும்? நீ சொல்வாய் - ஜøலி ஆண்ட்ரூஸ் குரல் போல்யென்று. அந்தப் பீர் நுரைக் குரலுக்காக 'நட்சத்திர' படத்தை மூன்று தடவைப் பார்த்தது நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய் என் அம்மாவிற்கும் ஜøலி ஆண்ட்ரூஸ் ரசிக்குமா? ரசிக்கவில்லை. அவளுக்கு டி.கே பட்டம்மாளின் ஆலாபனை. சங்கராபரணம். புன்னாகவராளி. இது அவள் ரசனை.







இன்னும் உன் ரசனைகளின் அட்டவணை.







சௌன்ட் ஆஃப் ம்யூஸிக் ஏழு தடவை ஏன்? அந்த ரெஸ்பிகி அவனுடைய ரோமாபுரி ஊற்றுக்கள். ஜிம் ரீவ்ஸ். க்ளிப் ரிச்சர்ட். கார்லோ பான்டியின் மனைவியும் அவளுடைய நடிப்பும் - இவை அத்தனையுமே உனது ரசனை ரசனை ரசனை. அந்த ரசனை சுகமானது. ஆனந்தமானது - இதயத்திற்கு; அதன் உணர்வுகளுக்கு. இந்த சுகானுபவமான ரசிப்புக்குச் சரியான பொருள்தான் காதல். ஒப்புக்கொள். கர்ஸ்ங்ழ் ர்ச் அழ்ற்ள் என்றால் அர்த்தம் என்னவோ - காதலுக்கு அர்த்தம் அதுதான். அவசரப்பட்டு விடாதே பேபி. ரசனை எல்லாமே காதலா? உனக்கு ஒப்புக்கொள்ள சங்கடமாக இருக்கலாம். விளக்கமாகச் சொல்கிறேன். கவனமாய்ப் படி.







லோனாவாலாவின் அமைதியான புல்வெளியில் ஓடி ஓடி வண்ணத்துப் பூச்சி பிடிக்கிற உன்னுடைய ரசனை; ஜøலி ஆண்ட்ரூஸின் பாட்டில் மயங்கும் உன் ரசனையின் சுகம் - இவற்றிலெல்லாம் செக்ஸ் - பாலுணர்வு ஒட்டி இருக்கின்றதா? அல்லது இதற்கு அடிப்படை செக்ஸô? சொல்வாயா நீ? சொல்ல மாட்டாய். ஜாக்கிரதையாக வாசி தோழி. இது ப்ரையோபைட்டா இல்லை. ரசனை என்பது காதல்தான். செக்ஸ் அல்ல. காதல் வேறு, செக்ஸ் வேறு. இரண்டையும் ஏன் பிணைத்து நோக்க வேண்டும்? கூடாது - அது தப்பு. செக்ஸ் என்றால் என்ன?







Sex is an instinct ; A biological need. காதல் அது போன்ற instinct அல்ல. உடல் பூர்வமான தேவையும் அல்ல. பாலுணர்வு எல்லோருக்குமே பொதுவாக. ஆனால் காதல், ரசனை - எல்லோரிடமும் இருக்கிறதா சொல்? இல்லை. எல்லா மனிதர்களுமா காதலிக்கிறார்கள்? சொல் பேபி. அப்பாவின் அறையில் 'கிங்ஸ்' ஸ்டோரி இருக்கும். படித்துப்பார். எல்லோருக்குமே பொதுவான பாலுணர்வோடு எல்லோருக்கும் பொதுவாக இல்லாத காதலையும் ரசனையும் பிணைப்பது கூடாது. காதல் வயப்படும் ஒரு ஆண் பெண் இருவரிடையே பாலுணர்வு கிடையாது என்பதல்ல நான் சொல்லிக் கொண்டு வருவது. அந்தக் காதலுக்கு அடிப்படை பாலுணர்வு உடலில் இருந்து - அதாவது Physical. காதலுணர்வு உள்ளத்தில் இருந்து - அதாவது psychical.







உடலின் உஷ்ணமான எழுச்சியும்; ஹிருதயத்தின் ஆன்ம ரசிப்பும் ஒன்றா பேபி? இப்போது நீ ஒப்புக் கொள்வாய் - காதல் செக்ஸ் அல்ல என்பதை. காதல் ஒரு ரசனைதான். ஆனால் ரசனைகள் எல்லாமே காதலா? சந்தேகம் வரலாம் உனக்கு. சொல்கிறேன். ஒரு பொருளின், இசையின், நபரின் மீது நமக்கு ரசனை உள்ளது என்றால் அந்த ரசனை என்பதுதான் முதல் கட்டம் என்பதல்ல. ரசனை நமக்கு ஏற்பட்டிருக்கிற பொருளின் மீது முதலில் ஏற்படுவது அட்மிரேஸன்தான. அந்த அட்மிரேஸன் நேற்று இன்று நாளை என்ற அப்பியாசத்தில்தான் ரசனையாக மலர்கிறது. கவனமாகப்படி. அந்த ரசனையின் பரிணாம மலர்ச்சிதான் காதலா? பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல - ஒரு பெண்ணின் இயல்புகளை ரசிக்கின்ற ஆண் மகனை அதே பெண்ணும் ரசிக்கும்போது ஒருமிக்கின்ற ரசனைதான்; ரசனையின் பரிவர்த்தனை காதல.







என் அன்புள்ள பெப்பியே ; இனியும் நீ காதல் என்றால் செக்ஸ் என சொல்லமாட்டாய். மை டியர் ஸில்வியா ஆண்டர்ஸன், காதலைப் பற்றி இவ்வளவு நீண்ட விளக்கத்தை உனக்கு எழுதியிருப்பது, காதல் செக்ஸ் அல்ல என்பதை வெறுமே விளக்குவதற்கு மட்டும்தானா? இல்லை பெப்பி, இல்லை. இக் கடிதம் வெறும் காதல் பற்றிய சாஸனம் அன்று. என் காதலின் வெளிப்பாடு. உன்னுடைய குயில் இசையை நான் ரசித்த ரசிப்பும்; அந்த ரெட் கார்பெட்டில் அண்டனியாக ஹாம்லெட்டாக எனது நடிப்பாற்றலை நீ ரசித்த ரசிப்பும் உன் நாட்டியத்தில் நான்; கீட்ஸிற்கு ஒப்பாக கிதை இயற்றும் என் கவித்துவத்தில் நீ; உன் ஆடை அலங்காரத்தில் நான்; ஷேக்ஸ்பியரின் முப்பத்தேழு நாடகங்களையும் பிளந்து பிளந்து சொல்லித் தருகிற என் ஆங்கில இலக்கியப் புல1மையில் - நீ இப்படி உன்னில் நானும், என்னில் நீயும் கொண்ட, பாலுணர்வின் நெடியே அற்ற ஒருமித்த ரசனையின், ரசனைப் பரிவர்த்தனையின் அர்த்தம் என்ன சொல் தோழீ? ஸôரி நான் அழுகிறேன். என்னைச் சில நாட்கள் காணாமல் நீயும், உன்னைச் சில நாட்கள் காணாமல் நானும் எப்படி சோகமாகிச் சோர்வடைந்து போகிறோம். ஏங்கிக் கலங்கிப் போகிறோம். மீண்டும் கண்டதும் அந்த ரெட் கார்ப்பெட்டில் நீ ஆடும் ஆட்டம் என்ன, பாடும் பாட்டென்ன? - இதற்கெல்லாம் பொருள் என்ன ராணி? நான் சொல்லட்டுமா கோடிட்டு எழுதுகிறேன். லவ். ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அட்மிரேஸன் ரசனையாக உயர்ந்து காதலாக மலர்ந்திருப்பதை நீ புரியவில்லையா? உணர்வு வயப்பட்டுக் கண் கலங்கி எழுத முடியாமல் தவிக்கிறேனே - அதே கண்ணீரும் உணர்ச்சி நெரிசலும் உன்னில் ஏற்படவில்லையா? அந்த மன நெரிசலை காதல் என நீ புரிந்து கொண்டால் - தோழி; உனக்காக எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு மெரீனா ரெஸ்டாரண்ட்டில் காத்திருப்பேன் - அன்புடன் வந்து சேர்...







உன் அன்பு நண்பன்







ஆன்ந்த் ஷங்கர்







கடிதத்தை முடித்தேன். தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டி போல சிகப்பு நிற தகர டின்; என் காதல் ராணிக்குத் தூது போகிற காதல் அஞ்சலும் இதற்குள் தானா? ஒரு பால் வெள்ளை அன்னம் கொண்டு செல்லாதா? ஒரு பஞ்சு மேனி பொமரேனியன் எடுத்துப் போகாதா? வழியில்லை. கடிதத்தைத் தெரு முனை பாக்ஸில் போடுகிறேன்.







ஏழாம் தேதி இரவு நான் தூங்கவில்லை. மகத்.தான காதல் காவியங்களை எடுத்து வாசிக்கிறேன்.







எட்டாம் தேதி. சரியாகச் சாப்பிடவில்லை. யாரோடும் பேசவில்லை. என் மயில் வராவிட்டால்? என் காதலை நிராகரித்து விட்டால்? என்ன செய்வேன் நான்? ஸலீம் மாதிரி கண்ணீர் விடுவேனா? தாடி வைத்துக்கொண்டு தாஜ்மஹாலில் பெப்பி பெப்பி யென்று அலைவேனா? இல்லை - அண்டனியைப் போல கண் கலங்கியது.







கலகத்திலும் கவனமாய் ட்ரெஸ் செய்கிறேன். கிளம்புகிறேன். மயில் வீட்டுப் போர்டிகோவில் மஞ்சள் நிற ஹில்மன் கேம்பிரிட்ஜ். டேவிட் அதைத் துடைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கு வியர்க்கிறது. மயிலைச் சுமந்துகொண்டு அந்த மஞ்சள் வர்ணம் புறப்படுமா? காதல் தேவதையைப் பிரார்த்திக்கிறேன்.







பஸ்ஸில் கிளம்புகிறேன். 4.46 சாந்தோம். 4.48 ராணிமேரி. 4.50 மெரீனா. இறங்கி நடக்கிறேன். 5 மணி. ரெஸ்டாரண்ட்டில் மஞ்சள் வெயில் முகத்தில் அடிக்கிறது. பிரதான வாயிலில் கூர்க்காவின் ஊதல். மஞ்சள் வர்ணமா? இல்லை. வேறு கார். 5.05. வருவதெல்லாம் எம்எஸ் க்யு; எம்எஸ்ஆர்..எங்கே அந்த சிசி. எங்கே என் மயிலின் மயில் வாகனம்?







கூர்க்கா ஒரு முட்டாள். ஊத மறந்து நிற்கிறான். ஹில்மன் கேம்பிரிட்ஜ் ஆகாயத்திலிருந்து வழிந்து வருவதைப் போல..டிரைவிங் ஸீட்டல் மயில. மயிலின் கண்களில் சிரிப்பு. தாமரை இதழ் என்னை நோக்கி அசைகிறது. அழைக்கிறது. சிரிக்கிறேன். ஓடுகிறேன். கதவைத் திறக்கிறேன். மயிலுக்குப் புடவை என்ன அழகாய்...







மயிலின் கண்கள் ஆனந்த ஷங்கரின் கண்களை. ஆனந்த் ஷங்கரின் கண்கள் மயிலின் கண்களை. ஜுய்க் பாக்ஸ் பாட்டுப் பாடி எங்களை வரவேற்கிறது.







ப்ளு டயமண்டில் ரோஸ் மேரீஸ் பேபி. கேலார்டில் ரத்தச் சிகப்புக் கம்பளத்தின் மேல் வெளிச்சமான நடனங்கள். ட்ரைவ் இன். கடற்கரைக் கோயில்.







மயில் ஒரு நாள் என்னிடம் சொன்னது : "தாடி வைத்துக் கொள்ளுங்கள்." நான் சொன்னேன் : "நானென்ன ஆப்ரஹாம் லிங்கனா? ஆஃப்ட்ரால..." க்யூடெக்ஸ் முலாமிட்ட மயிலின் நகங்கள் என் உதடுகளை மூடின. மயில் கேட்டாள். "யாரெல்லாம் உங்கள் குருஜிகள்; யாருக்கெல்லாம் நீங்கள் அட்மைரரர்?" தொடர்ந்தும் மயிலே சொன்னாள்.







"ஷேக்ஸ்பியர்?"







"யா.."







"ஷா.."







"யா.."







"டால்ஸ்டாய் அன் ஹேமிங்வே?"







"யா.."







"யுவர் செகால்."







"யா.."







அவர்களைப் போலவே நானும் தாடி வைத்தேன். தாடியுடன் நான். என்னுடன் மயில். எங்களுடைய காதலை எப்போது வீட்டில் சொல்லப் போகிறோம்? விரைவில் மயிலின் அப்பா தெரிந்தால் சந்தோ1ப் படுவார். ஆனந்த் ஷங்கர் ஒரு நவீன ஷேக்ஸ்பியர் ஆயிற்றே...என் அம்மாவிற்குத் தெரிந்தால்? மயிலுக்கும் காது குத்தி வைரத்தோடு போடுவேன் என்பாள்.







நானும் மயிலும் கலாம் கனியக் காத்திருக்கிறோம்.







ஓடியன் கடைசி வரிசையில் நானும், மயிலும். எல்லோரின் கண்களும் எங்கள்மேல்.







'க்ராஜ்யேட்' ஆரம்பத்தில் மயில் வெட்கமடைந்தது. அப்புறம் சிரித்தது. பின் மௌனம். சந்தோஷம். வருத்தம். கடைசியில் அதிகமான பூரிப்பு. அருமையான திரைப்படம். பின் மயில் ஏனோ சிந்தனையானாள். மஞ்சள் வர்ணத்தை மௌனமாகச் செலுத்துகிறாள். ஒரு வாரமாகவே அவள் ஏதோ சிந்தனையில்.







ஒரு நாள், என்ன மழை என்ன காற்று. ஸ்வப்னாவிலிருந்து நாங்கள். காரின் கண்ணாடிகளில் பனிப்போர்வை. குளுமையாக, மஞ்சள் தேய்த்துக் குளித்தது போல ஹில்மன் கேம்பரிட்ஜ் நீர் வழிந்து அதன் மஞ்சள் வர்ணமே கரைவது போல். நாங்கள் இருவரும் மௌனமாக.







வைப்பர்கள் இயங்குகின்றன. கார் கிளம்புகிறது. அண்ணாசாலை, சேப்பாக், மாநிலக் கல்லூரி...க்வின் மேரிஸ்.







மயில் என்னைப் பார்க்காமலே, "ஆனந்த்; உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்..."







சாந்தோம். க்ரீன்வேஸ்ரோட்...







'பொகைன்வில்லா - ஈரம் சொட்டச் சொட்ட..







ஒட்டப்பட்ட வெள்ளைக் கவரை என்னிடம் நீட்டுகிறாள்.







"குட் நைட்.."







"குட் நைட்"







மேலே மேகங்கள் முட்டி மோதி வெடிக்கின்றன. கடிதத்துடன் என்னுடைய அறைக்கு ஓடுகிறேன். கதவைப் பூட்டுகிறேன். மயிலின் கடிதத்தைப் பிரிக்கிறேன்.







அன்புள்ள நண்பரே -









ஐந்து தினங்களுக்கு முன்பாக ஷைக்காவ்ஸ்கியின் குளிர்காலக் கனவுகளை ரிக்கார்ட் ப்ளேயரில் போட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது? சிவப்பு விரிப்பில் என்னைக் கூத்தாட வைக்கும் அந்த இசை வறண்டு போயிருந்தது. மயங்கி மயங்கி நான் ரசித்த ரசிப்பெல்லாம் எப்படி எதனால் சலித்துப் போயிற்று. பாதியில் நிறுத்தினேன். சிந்தித்தேன். ரசனையும் சலித்துப் போகுமா?







ஒவ்வொரு சம்மருக்கும் லோனாவாலா இன்னும் சலித்துப் போகவில்லையா? அங்கு போய்ச் சேரும் நாளில் நான் எப்படி மகிழ்ச்சி கொள்வேன்? பிரியும்போது எப்படி மனம் கனத்துக் கலங்குவேன். அப்படிப் பிரிந்து வந்து விடுவதாலேயேதான் அந்தப் பள்ளத் தாக்குகளின் மேல் உள்ள ரசனை மாறாமல் சலிக்காமல் இருக்கிறேனா? அதை விட்டு வர முடியவில்லை என்பதற்காக அந்தப் பள்ளத்தாக்கிலேயே என் வாழ்க்கையை நிரந்தரமாகப் பிணைத்துக் கொண்டால், அப்படிப் பிணைத்துக் கொள்வதாலேயே என் ரசனை என்ன வாகும்? காலத்தில் உலர்ந்து ஆவியாகிப் போகும்.







- அப்படி உலர்ந்து போய்விடக்கூடாது என் ரசனை. அந்த ரசனையின்; காதலின் இனிமையை உலரவிட மாட்டேன் நான். அந்த லோனாவாலாவைப் பிரிந்திருக்கிற பிரிவுதான்; அந்தப் பிரிவின் ஏக்கம்தான் - ரசனையின் காதலின் ஜீவன். சாரம். லோனாவாலாவிலேயே என் வாழ்வைப் பிணைத்து ரசனையின் சுக உயிரை இழப்பதைவிட அதைப் பரிந்திருந்து காலமெல்லாம் கரையாத காதலுடன் வாழவே நான் விரும்புகிறேன்.







ஆனந்த் : வாழ்க்கையில் நாம் நம்மை நிரந்தரமாக பிணைத்துக் கொண்டு சலிப்படையக் கூடாது. பெரு மூச்சுக்களின் உஷ்ணத்தில் நம் காதல் கனலாகிவிடக் கூடாது. நம் நெஞ்சங்களின் ஆழத்தில் என்றும் அது ஜீவ ஊற்றாக ஜீவித்திருக்க. நம் நினைவுகளிலும் கனவுகளிலும் காதல் என்றைக்கும் உயிர்த்திருக்க ; பசுமையாக நிலை பெற்றிருக்க - நாம் நம்மைப் பிரித்துக் கொள்வோம். பிரிவின் ஏக்கம்தான்; அந்தக் ஏக்கத்தின் கண்ணீர் தான் நம் காதலுக்கு உரம். அந்த உரத்துடன் வாழ்ந்திருப்போம் - கண்ணீருடன்; மாறாத காதலுடன் உங்களுடன் விடை பெறுவது - ஸில்வியா ஆண்டர்ஸன் என்ற - உங்களின் பெப்பி...







நான் கண்ணீர் விட்டேன். பெட்ரூமில். பாத்ரூமில். இனி நான் என்ன செய்யப் போகிறேன்? யாரிடம் சொல்வேன்? மயிலின் பொன் வர்ணக் கூந்தலை வாரிவிடாமல்; அவளின் நீல நிற விழிகளைக் காணாமல் - இவ்வளவு அருகாமையில் என்னால் சிறைப்பட்டிருக்க முடியாது. நான் போய் விடுகிறேன். ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. உறுதி செய்து விட்டேன்.







ஸாண்டாகுரூஸ். அப்பா, அம்மா, புரபஸர் மிஸ்டர் தாமஸ் ஆண்டர்ஸன்; நீலவிழிகளில் நீர்படிய என் மயில்...







ஜூஹிவில் இருந்து குளிர்ந்த உப்பங்காற்று. அந்தக் காற்றில் பொன் வர்ணக் கூந்தல் தலைதெறிக்க விடை தருகிறது. குலுக்கிய தாமரைக் கையை ஒரே ஒரு முத்தம்? முடியவில்லை.







விமானத்தின் கதவுகள் மூடுகின்றன.







ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டியில் ; மஞ்சள் நிறப் பூக்கள் விரிப்பாய் உதிர்ந்திருக்கின்ற மைதானத்தில்; மூடு பனியில் - நான் மட்டும்.....கண்ணீருடன்

வெள்ளி, 8 ஜூலை, 2011

A muthulingam.

'எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை!'My Photo




சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.

'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’

இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.



'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’

நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.



அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.



இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.

உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.



அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.



இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.



இது போதிக்கும் பாடம் என்ன? நேர்மையைக் கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.



திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன் தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!

நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.



அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.



ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத் தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.



நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?



எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!

அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.



'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை.’

ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!



மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!



அ.முத்துலிங்கம்

A muthulingam.

த்ரிஷாவும் திருக்குறிப்பு நாயனாரும் — ராமானுஜம்




தமிழ் இலக்கிய வட்டாரத்தில் ‘வாசிப்பு இன்பம்‘ என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது ‘களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும். ஆங்கிலத்தில் வுட் ஹௌஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் எழுத்து அவ்வகையானது. தமிழில் கல்கிக்குப் பின் அந்த இடத்தை வெகுகாலம் ஆக்கிரமித்தவர் சுஜாதா என்று தயங்காமல் கூறலாம்.எந்த விஷயத்தையும் அவரது அபார நடைமூலம் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவார்.ஒரு முறை ஜெட் லாக் பற்றிக் குறிப்பிடும் சுஜாதா ‘நாளை கிளம்பி நேற்று வந்து சேர்ந்தோம்‘ என்று குறிப்பிடுகிறார்.அவரது எழுத்துக்கள் கனமானவை அல்ல மேலோட்டமானவை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.இருப்பினும் அந்த எழுத்துக்களை வாசிப்பு இன்பத்திற்காக இன்றும் வாசிக்கலாம்.





அது போல் வாசிப்பை ஒரு இனிய அனுபவமாக்குபவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்.எந்த ஒரு சொல்லும் அலுப்பூட்டாமல் இருக்கும் எழுத்து அவருடையது.அவர் பெயரை நான் கவனிக்க ஆரம்பித்தது 2004 வாக்கில் உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்த அங்கதம் நிறைந்த கட்டுரைகளை வாசித்த பின்புதான்.





ஆனால் நான் அவரது பெயரைக் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று இன்று தெரிந்து என்னையே நொந்து கொண்டேன்.இன்று வெளிவந்த ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்‘ பகுதியில் அவர் 1999 இல் எழுதிய ‘எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை‘ என்ற கட்டுரை மீண்டும் வந்துள்ளது.அதில் நடிகை த்ரிஷா மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்படக் காரணமாக இருந்த கேள்வியான ‘மனிதனுக்குத் தேவையான முக்கிய குணம் என்ன? என்பதற்கு அவர் ‘நேர்மை‘ என்று பதிலளித்த செய்தியிலிருந்து தொடங்குகிறது கட்டுரை.







எல்லோருக்கும் தெரிந்த காக்காய் வடைக் கதையின் நீதி (moral) யையே கேள்விக்குரித்தாக்குகிறார் அ.மு. ஒரு அமெரிக்கச் சிறுமி ‘வாயிலே உணவை வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்பதே இக்கதையின் நீதி’ என்று கூறும் இடம் நல்ல நகைச்சுவை. ஏமாற்றினால் பிழைக்கலாம் என்ற நீதியைப் போதிக்கிறது அக்கதை என்கிறார்.

அதே போல் விறகுவெட்டி கோடாரியைத் தொலைத்த கதையும் நேர்மையாக இருந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.ஆனால் நேர்மைக்கும் செல்வம் சேர்ப்பதற்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை என்கிறார் .வேறு எதற்காகவும் இல்லாமல் நேர்மையாக இருப்பது ஒரு அறம் .அதற்காக நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அ.மு வின் கருத்து.







அறம் என்று ஒரு பிரமாதமான சிறுகதை ஒன்றை ஜெயமோகன் எழுதியிருப்பது நினைவு இங்கு கூரத்தக்கது.







அதன்பின் திருக்குறிப்பு நாயனார் கதை இக்கட்டுரையில் வருகிறது.அடியார்களின் துணிகளைச் சலவை செய்துதரும் பணியில் ஒரு நாள் மழை பெய்து துணியை உணர்த்த முடியாமல் போய்விடுகிறது. அது அவர் பிழை அன்று என்றாலும் மனசாட்சி உறுத்தத் தன் தலையைக் கல்லில் முட்டிக் கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது.

பின்னர் அ.மு. விற்கு ஆப்பிரிக்காவில் ஏற்படும் அனுபவத்தைக் கூறுகிறார்.தன்னுடைய இரு குழந்தைகள் இறந்ததும் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் குழந்தைப் படி இனி வேண்டாம் என்று கூறும் ஒரு படிப்பறிவில்லாத தொழிலாளியின் நேர்மை நெகிழ வைக்கிறது.நம் ஊரிலும் சுனாமியால் இறந்ததாகக் கருதப்பட்ட தன் மகன் உயிருடன் வந்த பின் அவர் இறந்து விட்டதாக எண்ணி வழங்கப் பட்ட நஷ்ட ஈட்டை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்த தந்தையின் கதை செய்திகளில் வெளிவந்தது.

த்ரிஷா, காக்காய் வடை கதை, திருக்குறிப்பு நாயனார் என்று பலவிதமான சம்பவங்களைத் தொகுத்து சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் அ.முத்துலிங்கத்தின் எழுத்து அன்று போல் இன்றும் வசீகரமாகவே உள்ளன.





அவரது கதைகள் தன்மை(first person) யிலேயே பெரிதும் எழுதப்படுகின்றன. அதுவே கட்டுரைக்கும் புனைகதைக்கும் உள்ள இடைவெளியை வெகுவாகக் குறைகின்றன.கட்டுரைகள் புனைகதை போல் சுவாரஸ்யமாகவும் கதைகள் வரலாற்று, புவியியல் தகவல்களோடு கட்டுரை போல் செறிவாகவும் தோன்றும் எழுத்துக்கள் அவருடையது.அவரது ஒரு நூலின் தலைப்பே ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘ தான்.

உலக உருண்டையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த அனுபவமும், உலக இலக்கியத்தின் ஆழ்ந்த வாசிப்பும் இவரது எழுத்தில் காணலாம். உலக எழுத்தாளர்களை இவர் பேட்டி கண்டு எழுதிய நூலான ‘வியத்தலும் இலமே‘ நம்மை வியக்க வைக்கும்.

திருநெல்வேலி பகுதியில் ‘தன்மையாகப் ‘ பேசுகிறான் என்றால் இனிமையாகப் பேசுகிறான் என்று பொருள்.அ.மு.தன்மையாக எழுதுகிறார்.

குறிப்பு: என்ன செய்வது !அ.மு வின் பெயரை விட த்ரிஷாவின் பெயரைத் தலைப்பில் வைப்பதுதான் கவர்ச்சிகரமாக இருக்கிறது!த்ரிஷாவின் படத்தைக் கூடப் போட்டிருக்கலாம்.ஆனால் நமக்கும் நேர்மை என்று ஒன்றிருக்கிறதல்லவா?



–ராமானுஜம்



பிறந்ததும் படித்ததும் திருநெல்வேலி . MD psychiatry

செவ்வாய், 5 ஜூலை, 2011

Veerappan.

My Photo

Apr 27, 2010


இறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா


தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன.

சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார்.

சுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சோளகர் தொட்டியைச் சென்றடைந்தபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. நாங்கள் ஒரு பத்திரிகையிலிருந்து வந்ததையும் பாலமுருகன் அனுப்பி வைத்த விவரத்தையும் எங்களுடன் வந்த சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜீவா சொல்லி முடித்தபோது அந்தச் சூழலில் சின்னதாக ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. சாலையில் நாற்காலிகள் போட்டு அமரவைத்தார்கள். மக்கள் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். சித்தி அழைத்து வரப்பட்டார். தன்னைத் தலையிலிருந்து கால்வரை அவர் புடவையால் மூடியிருந்ததற்குக் காரணம், வெறும் குளிர்தானா? ‘உன் கதையச் சொல்லு’, என்று யாரோ சித்தியிடம் சொன்னார்கள். “எத்தனதடவதான் சொல்லுவா, என்ன பிரயோஜனம்” என்று யாரோ பதில் சொன்னார்கள். சித்தி அமைதியாகவே இருந்தார். அந்த உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நான் தயங்கியபோது சித்தி வெகு இயல்பாக எனது கைகளைப் பிடித்துக்கொண்டு “காபி சாப்பிடறீங்களா” என்று கேட்டார். “உங்களுக்கு எதாவது சொல்லணும்னு தோணுதா?” என்று கேட்டேன். “இந்த உடம்புல ஒரு ஓட்டையைக்கூட விடாம அவங்க மின் கம்பி பாய்ச்சியிருக்காங்க. இப்போகூட வலிக்குது” என்று மட்டும் சொன்னார். கதைகளைச் சேகரிப்பதில் எனக்கிருக்கும் பத்து வருட அனுபவம் சித்தி சொன்ன அந்தச் சில வரிகளுக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. அதற்கு மேல் சித்தியிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. அவரும் எதுவும் சொல்லவில்லை. இழப்பீடாகச் சித்திக்குக் கிடைத்திருக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வலிகளை நீக்கிவிடவில்லை என்பது மட்டும் புரிந்தது.

வீரப்பன் இறந்த பிறகு தடதடக்கும் காவல் துறை வாகனங்கள் அதிர அதிர வந்து அவர்களை அலறவைப்பதில்லை என்பதைத் தவிர சோளகர் தொட்டியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. மிக அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டுமென்றாலும் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் நடக்க வேண்டும். அங்கிருக்கும் நாற்பது பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அப்படி நடந்து சென்றுதான் படிக்கிறார்கள். “அதுவும் பத்தாவது வரைக்கும்தான். அதன் பிறகு படிக்க வேண்டுமானால் வேறு எங்கேயாவது தான் போக வேண்டும்” என்றாள் ஏழாவது படிக்கும் ஜோதிகா. “நான் சென்னையைப் பார்த்ததில்லை, அங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்களா? நான் மேலே படிக்கணும்.” சோளகர் தொட்டி உள்பட சத்தியமங்கலம் பகுதியிலுள்ள எந்த அரசுப் பள்ளிக்கும் அனேகமாக ஆசிரியர்கள் வருவதில்லை. வீரப்பன் இருந்தபோது பயம் காரணமாக வராமல் இருந்த ஆசிரியர்கள் அதன் தொடர்ச்சியாக இப்போதும் வராமல் இருக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அனேகமான இடங்களில், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த சுமாராகப் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏதோ பணம் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சில ஆசிரியர்கள்.

சோளகர் தொட்டிக்குச் சவாலாக விளங்கும் இன்னொரு பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு. வீரப்பன் பயம் இல்லாத காரணத்தால் பல பணக்காரர்கள் இந்த வளமான பகுதியில் நிலம் வாங்குகிறார்கள். ஆண்டாண்டு காலமாகக் காடு, மலைகளில் புழங்கிவந்த சோளகர் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவது இந்தப் பிரச்சினையால்தான். “நாங்கள் வளர்ந்து திரிந்த நிலங்களுக்கு வேலிகளைப் போட்டு நாய்களைப் போல விரட்டுகிறார்கள்” என்கிறார் ஊர்த் தலைவராக அறியப்படும் ஜவுனா. வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்படும் பழங்குடியினரின் எதிர்வினைகள் நமக்கான படிப்பினைகளாக இப்போதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன. அந்த நிலை சோளகர் தொட்டிக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடியுமா எனத் தெரியவில்லை.


மலைகளில் மட்டுமல்ல, சமவெளிகளிலும் வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை ஐந்து வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாகப் பெண்களின் நிலை. பாலமுருகன் சொல்லும் வள்ளியின் கதை, யாரையும் நிலைகுலையவைக்கும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்களில் வள்ளியும் ஒருவர். சேத்துக்குளியைச் சேர்ந்த வள்ளியைப் பல பெண்களைப் போல அவரது கிராமமும் தள்ளிவைத்திருக்கிறது. காரணம், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது. அப்படித் தள்ளிவைக்கப்பட்ட வள்ளியை அவரது உறவினர்களே மீண்டும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக் கொலைசெய்திருக்கிறார்கள்.

வீரப்பன் தேடுதல் வேட்டை விட்டுச் சென்ற பாதிப்புகளின் பல்வேறு வடிவங்களால் இன்னும் அச்சத்தில் வாழ்கிறார்கள் பல பெண்கள். 30 வயது சின்னப் பொண்ணுவைப்போல. மேட்டூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவர் சித்தாள் வேலை செய்துகொண்டிருந்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவரது முதல் கணவர் கொல்லப்பட்டார். “அப்போ நான் பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவன்னு தெரிஞ்சதும் எங்க வீட்டிலேயே என்னை ஒதுக்கிவச்சுட்டாங்க. எனக்கு இழப்பீடு வாங்கித்தந்த மனித உரிமை ஆர்வலர்கள் அக்கறையாச் சொன்னதால இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சொல்லும் சின்னப் பொண்ணு, தன் அம்மா தன்னை ஏசியதுபோல வேறு யாரும் தன்னைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதாலேயே காது கேளாத வாய் பேச முடியாத ஒருவரைத் திருமணம் முடித்திருக்கிறார். ஆனால் சின்னப் பொண்ணுவின் கணவர் முருகன், அவருடைய ‘களங்கப்பட்ட’ மனைவி பற்றி எழுதி எழுதிச் சித்ரவதை செய்வாராம். “இப்போதுகூட அவரைத் தெய்வமாத்தான் நினைக்கிறேன், பாலியல்ரீதியாப் பாதிக்கப்பட்டவ, ஏற்கனவே கல்யாணமானவ, என்ன யார் மறுமணம் செய்ய முன்வருவாங்க?! அவருக்கு நல்ல மனைவியாதான் இருக்கணும்னு நினைக்கிறேன். வீரப்பன் தொந்தரவெல்லாம் முடிஞ்சு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு நினைக்கறப்ப வேறவிதமான தொந்தரவுகள் இருந்துகிட்டுதான் இருக்கு. ரொம்பக் கொடுமையான வார்த்தைகள எழுதிக் காட்டுவாரு. படிக்கறப்ப செத்துடலாம்னு தோணும்” என்கிறார்.

செல்வியின் நிலையும் கிட்டத்தட்ட அதேதான். “தினம் தினம் சாகறேன், பேச்சுவாக்குலகூட யாராவது எனக்கு இப்படியொரு கொடுமை நிகழ்ந்திருக்குன்னு சொன்னாங்கனா அன்னிக்கு முழுவதும் நரகத்தில இருக்கறது மாதிரி இருக்கும்” என்கிறார் செல்வி.

செல்வி, சின்னப் பொண்ணு, சித்தி போன்று பல பெண்கள். இவர்கள் எல்லோருக்கும் இழப்பீடு கிடைத்திருக்கிறது. சமயங்களில் இவர்களது மறுமணத்துக்குத் தூண்டுதலாய் இருந்தது இந்த இழப்பீட்டுத் தொகைதான் எனச் சொல்லப்படுகிறது. பணத்துக்காக மணந்துகொள்பவர்கள் பிறகு வீரப்பன் தேடுதல் வேட்டை என்னும் இறந்துபோன பூதத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். வீரப்பனின் தேடுதல் வேட்டை புரட்டிப்போட்ட பாதையிலிருந்து இவர்களது வாழ்க்கை இன்னும் விலகவில்லை என்பதுதான் உண்மை. இனியும் விலகுமா எனத் தெரியவில்லை. சின்னப் பொண்ணு சொல்வதுபோல அந்தப் பெருவேட்டையின் தடயங்களை அவர்கள் தங்கள் உடல்களில் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியாக இன்னும் இறுக்கமாகவே இருக்கும் ஒரு சமூகத்தில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீடோ மறுமணமோ அந்தத் தடயங்களை முழுவதுமாக நீக்கிவிடப்போவதில்லை.

அதனாலேயோ என்னவோ, அதிகார எதிர்ப்பைத் தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருந்த வீரப்பன் இன்னமும் இங்கு ஒரு கதாநாயகன். வீரப்பனின் வீரம் பற்றிப் பல புனைவுகள் இந்தப் பகுதிகளில் இன்னமும் காற்றில் அலைந்துகொண்டிருக்கின்றன. மூலக்காட்டில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தில் “இங்கே வீரம் விதைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

செல்வியின் நான்கு வயது மகன் பார்த்தனுக்கு எதிர்காலத்தில் ‘வீரப்பனாக வேண்டும்’ என்பதுதான் ஆசை. செல்வி அதிர்கிறார். “ஒரு வீரப்பனால பட்டததான் இன்னிக்கு வரைக்கும் அனுபவச்சிட்டிருக்கிறோம். பேச்சுக்குக்கூட அப்படிச் சொல்லாத” என்று அவனை அணைக்கிறார்.

சித்தியின் மீதும் செல்வியின் மீதும் சின்னப் பொண்ணுவின் மீதும் பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம், வாழ்வு அவர்கள்மீது செலுத்திய வன்முறையை அவர்கள் எதிர்கொண்ட விதமும், வாழ்வின் மீது அவர்கள் இன்னமும் வைத்திருக்கும் தகர்க்க முடியாத எளிய நம்பிக்கைகளும்தான். ஜோதிகா உள்பட நாற்பது பிள்ளைகளும் ஆறு கிலோ மீட்டர் நடந்தாவது படித்தால்தான் தனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஏற்படாது எனத் திடமாக நம்புகிறார் சித்தி. பார்த்தனையும் தன்னுடைய பிற குழந்தைகளையும் எப்படியாவது படிக்கவைத்து, பெரிய இடத்தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் செல்வி. அவர்கள் எல்லோருமே மிச்சமிருக்கும் வாழ்வை வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

Penniyam...

My Photo

கீப் என்பதை வைத்துக்கொள்ளலாமா ? - ரவிக்குமார்


திருமண பந்தத்துக்கு உட்படாமல், சேர்ந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரியும்போது, அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டுமா என்ற வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.அப்போது, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் டி.எஸ். தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டது.அதில், திருமணம் செய்துகொள்ளாமல், ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு வைத்திருக்கும் நிலையில், அந்த பெண்ணை '" கீப் " என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தி நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதே நீதிபதிகள் முன்பு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் ஆஜரானார். அப்போது, வியாழக்கிழமை தீர்ப்பின்போது, திருமணமாகாமல், ஓர் ஆணுடன் உறவு வைத்திருக்கும் பெண்ணை, வைப்பாட்டி என்று பொருள்படக்கூடிய, 'கீப்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்துக்குரியது என்று இந்திரா ஜெய்சிங் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்தியாவின் உச்சநீதிமன்றம், 21-வது நூற்றாண்டில், பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பயன்படுத்த முடியும்? தான் ஒரு ஆணை வைத்திருப்பதாக ஒரு பெண் கூற முடியுமா என்று கேட்டார் இந்திரா ஜெய்சிங்.அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாகக் கூறிய அவர், அந்த நீதிமன்றத்தின் முன் தான் ஆஜராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.ஆனால், தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்குத் தொடர்பாக மட்டும் பேசுமாறு கூடுதல் சொலிடர் ஜெனரலை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அறிவுறுத்தினார்.

அப்போது நீதிபதி தாகூர் குறுக்கிட்டு, 'கீப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆசைநாயகி என்ற பொருள்படும் கான்குபைன் என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று இந்திரா ஜெய்சிங்கிடம் கேட்டார்.தனது ஆட்சேபம், வியாழக்கிழமை தீர்ப்பில் 'கீப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மட்டும்தான் என்று தெரிவித்த இந்திரா ஜெய்சிங் ஆசைநாயகி என்ற வார்த்தை கீப் என்பதைக்காட்டிலும் மோசமானது என்று பின்னர் தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்ப நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட் செய்திருந்தார். அதை விசாரித்தபோதே உச்சநீதிமன்றம் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டது. அந்த ஆசிரியர் தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனவும் இப்போது தன்னைக் கைவிட்டுவிட்டார் எனவும் பெண் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு மாதம் ஐநூறு ரூபாய் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனவும் எனவே தன்னால அந்த ஜீவனாம்சத் தொகையைக் கொடுக்க முடியாது என்றும் அந்த ஆசிரியர் கூறிவிட்டார்.

திருமண பந்தத்துக்கு உட்படாத ஆணும் பெண்ணும் பிரியும்போது, அவர்கள் இருவரும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்திருந்தால்தான், அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. '" ஒரு ஆண் ஒரு பெண்ணை '"கீப் " ஆக வைத்துக்கொண்டு பாலியல் தேவைகளுக்காகவோ அல்லது வேலைக்காரியாகவோ அவரை பொருளாதார ரீதியில் பராமரித்துவந்தால் அதைத் திருமண உறவுக்கு இணையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது " என்று நீதிபதிகள் கூறினர்.

இந்த ஆண்டுத் துவக்கத்தில் வேறொரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறொன்றுமில்லை எனக் கூறியிருந்தது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை உச்ச நீதிமன்றம் பரிவோடு அணுகத் தொடங்கியிருப்பது இந்திய நீதித்துறையின் மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றத்தையே வெளிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கும் இந்திரா ஜெய்சிங் வழக்கறிஞர் மட்டுமின்றி புகழ்பெற்ற பெண்ணியவாதியும் ஆவார். சிரியன் கிறித்தவ பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பை புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் அம்மா மேரி ராயின் வழக்கில் வாங்கித் தந்தவர் இவரே. குடும்ப வன்முறைச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தவரும் இவர்தான்.