செவ்வாய், 12 ஜூலை, 2011

gov.servant

சுட்டபின் நெருப்பு என்றும் My Photo


உஷாதீபன்





அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் இருக்கின்றன. அவை அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிறழ்ச்சி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது அதிகாரி மீது இந்த நடவடிக்கைகள் பாய்வது உண்டு. இன்னின்ன மாதிரியெல்லாம் விதிமுறைகள் உள்ளன, இதற்கெல்லாம் கட்டுப்பட்டே நீங்கள் அரசு ஊழியராகப் பணிபுரிகிறீர்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து, நன்கு அறிந்து தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியில் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (அதாவது ஓராண்டு அல்லது ஈராண்டு) இன்னின்ன தேர்வுகளையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட அரசுப்பணியாளர் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும் அப்படித் தேர்ச்சி பெற்றால்தான் அவருக்கு இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு உண்டு (அதாவது முதல் ஆண்டு முடித்தவுடன் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக எடுத்த எடுப்பிலேயே தடை என்பது கூடாது என்பதன் பொருளாக முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு விடுகிறது) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.



குறைந்த பட்சம் இந்த விதிமுறைகளெல்லாம் ஒரு அரசுப் பணியாளர் அறிந்திருத்தல் கட்டாயம் என்கிற ரீதியிலேயே மேற்கண்ட தேர்வு முறைகள் ஒரு அரசுப் பணியாளரின் நலன் கருதி, அவரின் கடமையாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நடைமுறையில் உள்ளன. அதற்கு மேல் இருக்கும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தல் என்பது அவரவர் விருப்பம் மற்றும் ஆர்வம் சார்ந்ததாகும்.



இவை சட்டமல்ல. விதிமுறைகள். அதாவது ஒழுங்குமுறை நடவடிக்கைகள். அலுவலக நடைமுறை விதிகள். நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக வழிவகுக்கப்பட்டவை.



இந்த விதிமுறைகள் மீறப்பட்டாலே ஒருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மீறல் என்கிற விதி பாயும். அவர் சார்பாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு அது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கு சம்பந்தப்பட்டவரின் தன்னிலை விளக்கம் பெறப்பட்டு, இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையிலும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், அன்னார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்தக் குறிப்பிட்ட அரசுப் பணியாளருக்கு ஊதிய உயர்வு தற்காலிக நிறுத்தமோ, தொடர் நிறுத்தமோ, தற்காலிகப் பணி நிறுத்தமோ அல்லது கண்டனமோ அல்லது வெறும் எச்சரிக்கையோ போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.



ஆக அரசுப் பணியாளராய் இருப்பதில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒழுங்கு முறைகள் உள்ளன. என்னவோ போனோம் வந்தோம் என்று இருந்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்தான் கண்டிப்பாக வேலை பார்த்தாக வேண்டும். காலையில் அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தால், மாலை அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பும்வரை அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் விதிமுறை தவறாமல், இன்னின்னவகைக்கு இவைதான் விதிமுறைகள் என்பதைச் சரியாகக் குறிப்பிட்டு, தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்து, அந்தக் குறிப்பிட்ட பத்திகளையும, விதி எண்களையும் சொல்லி இந்தப் பணி இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுத்து எழுதுவதில் ஒரு எழுத்தருக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.



இம்மாதிரிக் குறிப்பிட்டு ஆணி அடித்தாற்போல் சொல்லி, என்னை விட்டால் வேறே ஆள் கிடையாதுய்யா இதுக்கு என்கிற பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்றுகிற ஏராளமான, லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 58 வயது வரைக்கும் நான் இதில் இருந்தாக வேண்டும். எனவே இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று இருக்கும் நடைமுறை விதிமுறைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்து, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, எதானாலும் அந்தக் குறிப்பிட்ட க்ளார்க்கைக் கூப்பிடு என்று அலுவலரே தாங்கித் தடுக்கி அழைக்கும் இடத்திலும், அவரின்றி ஒன்றும் அசையாது என்கிற இடத்தில் தங்களை வாழ்நாள் பூராவும் நிறுத்திக் கொள்ளும் அரசுப் பணியாளர்கள் ஏராளம்.



ஒரு அலுவலகத்தில் பியூன் முதல் அலுவலர் வரை அரசுப்பணி நடைமுறை விதிகள், ஒழுங்குமுறை விதிகள் என்பது பொது. யார் தவறு செய்தாலும், செய்கின்ற தவறுக்கேற்றமாதிரி அவருக்குத் தண்டனை என்பது உறுதி. இதற்கு பயந்துதான், கட்டுப்பட்டுத்தான் வேலை செய்தாக வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். நேரம் காலம் மாறலாம். அலுவலக நேரம் கடந்து வேலை பார்க்கலாம். விடுமுறை நாட்களில் பணியாற்றி முடிக்கலாம். எல்லாமும் உண்டுதான். ஆனால் பொறுப்பு என்கிற கட்டுப்பாட்டு வளையத்திற்குள்தான் வலம் வந்தாக வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. இது மீறப்படும்போதுதான் என்றாவது எக்கச்சக்கமாக விஷயம் மாட்டிக் கொள்கிறது.



ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஒரே வரி. வேறு எதுவொன்றாலும் இதை வரையறுக்க முடியாது. இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கும், கல்வி வியாபாரத்திற்கும், வாழ்நிலை உச்சங்களுக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. ஆகையினால் சமயத்திற்குத் தகுந்தாற்போல் நான் என்னை மாற்றிக் கொள்ளத்தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இந்த வேலைக்கு வரவில்லை. இந்த நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்கிறேன் என்றுதான் வேலையில் சேர்ந்தோம். அப்படியென்றால் அதற்கு என்ன பொருள்? என் சுய ஆசைகள் அதில் குறுக்கிடாது, சுய நலன்கள் உள்ளே வராது, பொறுப்பின்மை தலையிடாது என்பதெல்லாம்தான். சொந்த வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுக்கு நான் பார்க்கும் உத்தியோகம்தான் ஈடு கொடுத்தாக வேண்டும் என்று தவறுகள் செய்ய முனைந்தால் பிறகு கஷ்டப்பட வேண்டியதுதான். அதற்கான தண்டனைகள் வருகையில் எதிர்கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.



இப்படியான தவறுகளைச் செய்து, மாட்டிக் கொண்ட அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் உண்டு. அரசுப் பணியில் இருந்த ஆண்டுகளில் தொடர்ந்து தவறுகளே செய்துகொண்டு, அதையே நடைமுறையாய் ஆக்கிக் கொண்டு, கடைசியில் ஓய்வு பெறுகையில் ஓய்வு பெற முடியாமல் கண்டனப் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வுப் பலன்கள் எதையுமே பெற முடியாமல் போனவர்கள் இருக்கிறார்கள். பிறகு பத்தாண்டுகள் கூடக் கடந்து, அவர் பெயரிலான குற்றச்சாட்டுக்கு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு தனது ஓய்வூதியப்பலன்களைப் பெற்று, வீட்டில் பெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பார்த்தவர்கள், தண்டனையில் இருக்கையிலேயே மண்டையைப் போட்டவர்கள், வரும்போது வரட்டும் என்று அத்தனை காலம் விதிகளுக்குப் புறம்பாகச் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு கொடிகட்டிப் பறந்தவர்கள், என்ன சம்பாரிச்சு என்ன செய்ய (இங்கே சம்பாத்தியம் என்பது உண்மையான சம்பளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்க) என்று வியாதியில் விழுந்து இருதய ஆபரேஷன், பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர், நோய் நொடி என்று விழுந்து நசிந்து போய் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.



எல்லாமும் உண்டுதான். ஆனால் அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் என்பது எல்லாருக்கும் பொது. அதை நாம் எவ்வளவு மரியாதையோடு கடந்து செல்கிறோம் என்பதைப் பொறுத்து அவை நம்மை வாழ வைக்கிறது. அல்லது வீழ்த்தி விடுகிறது.



லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது. பிறந்த நாள் சான்று வழங்க லஞ்சம்பெற்ற எழுத்தர் கைது. மின் இணைப்பு வழங்க கையூட்டுப் பெற்ற பொறியாளர் கைது.வண்டி லைசன்ஸ் வழங்க லஞ்சம். ஓட்டுநர் தகுதிக்கு லஞ்சம். இப்படி எத்தனை எத்தனையோ லஞ்ச லாவண்யச் செய்திகளை அவ்வப்போது நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.



கையும் களவுமாகப் பிடிபட்டார் என்ற செய்தியை வெறும் செய்தியாகத்தான் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மறைந்து நின்று பவுடர் தடவிய அந்த ரூபாய் நோட்டுத் தாள்களைக் குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் அல்லது அலுவலர் பெறும்போது பாய்ந்து சென்று மறைவிலிருந்து திடீரென வெளிப்பட்டுப் பட்டென்று முன்னே தோன்றிப் பிடிக்கிறார்களே அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யத் துணியவே மாட்டார்கள். பவுடர் பட்ட கை விரல்களை டம்ளரில் நனைக்கச் சொல்வதும், அதில் அந்தப் பவுடர் கலந்து சாட்சியாவதும், உடனடியாகப் பிடிபட்டவரைப் பழகிய அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையில் சட்டையைக் கழற்றி அமர்த்துவதும், சட்டென்று மாறிய சூழலில், மானக்கேடில் அவர் வியர்த்து விறுவிறுத்து தொப்பென்று நனைந்து கிடப்பதும், கைகளும் உடம்பும் நடுக்கம் கொள்வதும், வாய் குழறுவதும், கண்கொள்ளாக் காட்சிகள். அய்யோ பாவமே! என்று எப்படிப்பட்ட மனிதனுக்கும் சற்று ஈரம் சுரக்கத்தான் செய்யும். இவையெல்லாம் எதுவுமே இல்லாமல் என்ன பெரிய இது என்று இருக்கும் கடுவன்களும் உண்டுதான்.



வாழ்க்கை பூராவும் படு நேர்மையாக இருந்து, கடமையே கண்ணாகக் கழித்து, அலுவலருக்குக் கொடுத்த சொந்தப் பணம் திரும்ப வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் அதை இப்படித்தான் நேர் செய்தாக வேண்டும் என்கிற முடிவில் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தவறு செய்து மாட்டிக் கொண்டு சிறையில் அடைபட்ட பரிதாபமான அரசு ஊழியரைக் கூட பலர் அறிவர். குறைந்தது ஐந்தாண்டு, பத்தாண்டு என்று கூட வழக்குகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன.



அரசன் முதல் ஆண்டிவரை என்று சொல்வதைப்போல் ஒரு சாதாரண பியூன் முதல் மேலதிகாரி வரை விதிமுறைகள் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தண்டனை தண்டனைதான்.



இதெல்லாம் இப்படியிருக்கையில் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று பொது ஜனத்தால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ. ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சரும் ஆனவர்கள் அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படுவேன், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம் கொடேன் என்று கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டு, எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள்.எப்படியெல்லாம் இஷ்டப்படி செயல்படுகிறார்கள். இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்தான் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் அவ்வப்போது நம்மை வந்து தாக்குகின்றன. புதிது புதிதாக வரும் செய்திகள், இது இன்னும் எங்கெங்கு நீளுமோ, யார் யார் மீது பாயுமோ என்றெல்லாம் நாளும் எதிர்பார்க்க வைக்கின்றனவே?



மக்களுக்கு என்ன தெரியும், ஓட்டுப் போடுவதோடு அவர்களின் வேலை முடிந்து போனது என்கிற கதையாகவல்லவா இருக்கிறது இவர்களின் இந்தத் துணிந்த செயல்பாடு.



பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள் என்னவாயிற்று? அவற்றில் ஒன்று கூடக் கடைப்பிடிக்கப்படவில்லையா? யார் நம்மைக் கேட்பதற்கிருக்கிறது இனி எல்லாமே நம்மளதுதான் என்பதுபோலும், இனி என்றும் எப்பொழுதும், நாம்தான் என்பதுபோலவும் அல்லவா செயல்பட்டிருக்கிறார்கள். வாய் நீண்டு, கை நீண்டு, செயல் நீண்டு அதல பாதாளம்வரையல்லவா பாய்ந்திருக்கிறது.



மக்கள் வியந்து, விக்கித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா? அவர்களால் அறியப்படாததா? வெறும் ஓட்டுப் போடுறதோட உதறிட்டுப் போயிடறது இல்ல மச்சான்....எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்...



அதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. இதோ நான் சொல்கிறேன் எழுதிக் கொள்ளுங்கள்.



இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும், எவரையும் இழிவுபடுத்திவிட முடியும். எந்தப் பொய்களையும் உண்மையென்பதுபோல் சித்தரிக்கமுடியும். நடக்காததையெல்லாம் நடந்ததுபோல் காட்டிவிட முடியும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.... இதுதான் இன்றைய உண்மை.



ஆக, எந்தத் தப்பையும் மனம் திறந்து ஒத்துக்கிற மாதிரி இல்ல....



அதெப்படிங்க முடியும்...சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு...



மனசாட்சின்னு ஒண்ணு உண்டா இல்லையா?



மனமாவது சாட்சியாவது...யார் சொன்னா அப்டி? கிலோ என்ன விலை?



ஆஉறாஉறா...இந்தப் பாமர அப்பாவி மக்களின் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு...! இல்லையென்றால் இப்படியெல்லாம் பேச முடியுமா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், விடாமல் சொன்னால், காலம் பூராவும் சொல்லிக்கொண்டிருந்தால், ஓ! அதுதான் உண்மை போலும்? என்று என்றாவது சந்தேகம் வர ஆரம்பிக்காதா? கண்டிப்பாக வருமய்யா...வரும். அப்படித்தானே இத்தனை ஆண்டு கால அரசியல் நகர்ந்திருக்கிறது. அரசியல் என்றாலே இதுதான் என்கிற அளவுக்குக் கொண்டு வந்தாயிற்றே? மக்களின் நம்பிக்கைதான் ஆதாரம். ஆனால் எதை நம்புவது? எப்படி நம்ப வைப்பது? இப்படித்தான். பாடப் பாட ராகம். பொய் சொல்லச் சொல்ல உண்மை!



திருவாளர் பொதுஜனம் அவர்களே...



இந்தளவுக்கு, இத்தனை ஆண்டு காலமாக வளர்த்து விட்டது யார்? நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள்தானே...படுங்கள்...!! நன்றாகப் படுங்கள்