திங்கள், 16 ஜூலை, 2012

A .MUTHULINGAM

he Immigration Officer 94/11/ 22
200, St Catherene Street
Ottawa, Ont
K2P2K9
( Please translet Sri Lankan Tamil Language )A.Muthulingam
[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]
கனம் ஐயா அவர்களுக்கு,
சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.
என்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.
என் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.
வாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.
என்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் வேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.
இரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.
இங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.
நான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எஙகள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.
என்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.
பெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய் குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.
எங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.
இங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.
என்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.
ஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்லான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
எங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.
ஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.
இவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.
அவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இது கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.
பின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.
பெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.
தானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.
இதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை
இது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்குள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.
விஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.
இப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.
ஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.
என்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.
அன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)
நான் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.
முந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.
திடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.
அவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.
அவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.
என்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.
இந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.
என்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.
இரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.
என்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.
ஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.
கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.
மேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.
என்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.
இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.
அங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.
நிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் கீழ்ப்படிவான
சண்முகலிங்கம் கணேசரட்டினம்
சிறைக்கூடம் எண் 37
Kingston Penetentiary
555, King Street W
Po Box 22
Kingston, Ontario
K7L4V7

*****
நன்றி: திண்ணை

SellammalBHARATHI.

மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).
bharathi1a
திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.
எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.
என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.
ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.
images (1)
1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...
விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும்
அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை  எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.
பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

La.Sa.Raa.

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.
‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.  அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.  LAA-SA-RAA-17
“எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன். அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது’ இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing-லே புது டெக்னிக்கா?’
“இல்லேம்மா,  நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிலே வரவா நினைப்பேயில்லே.’’
“உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும்.’’
“அது ஸ்கூல். நான் படிச்சி ஸ்கூல்.”
“இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு. ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து.”
“ஓ quite possible.. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க, L.K.G.யிலிருந்து.”
“ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால் அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே.’’
“எனக்குக் கோபம வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போ இருக்காங்களோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!’
அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. “நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?’
“டீச்சர் சுமதி.”
“நான் தான் டீச்சர் சுமதி.”
அவன் திக்கெனப் பின்னடைந்தான். “நான் விளையாடல்லேம்மா.”
“ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வரஷம் ரிடையர்மெண்ட்” அதன் Problems அதுக்கு மேலே இருக்கு. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?”
அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம். இருக்கக்கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். அவளேதான். அந்த அடையாளம் நிச்சயமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான்.
“என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா!’’
“இந்த சர்வீஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள், கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது?’’
“ நான் ஸ்பெஷல் துஷ்டை.”
“சர்க்கரை போட்டிருக்குமா. இல்லே ஸ்பெஷல் மசாலா சேர்த்திருக்குமா?”
“அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்” பையன் படு உற்சாகமாகிவிட்டான்.
“பக்கத்ததுப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன். பின் பெஞ்சைக்கூட விடமாட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்ககுட்டியாட்டம் நக்கறது. கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்.”
“எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?”
“இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார். அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போ உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு,  நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க.”
“எல்லாம் வானரங்கள்னா, வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L.K.G.லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு  Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. அடுத்த வருஷத்திலிருந்து வேறு பிழைப்பைத் தேடியாகணும். சே! என்ன பிழைப்போ?”
அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போகுமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை.
அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி “என் தாத்தா இது வேறே சொன்னார்: “இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான்.”
மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியில் அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குத்தான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன்.
பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி, “சிஸ்டர் என்ன சொல்றீங்க?”
நீங்கள்: “இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம். பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே. I wish him all luck in his next school      அங்கே போய் சரியாக மாறலாம். இஙகே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. We have given him all chances” பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கி கையை விரித்தார்.
“நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும். And we have to live you know. I am sorry, next year வாங்க. பார்க்கலாம்.’’
தாத்தா சிரித்தார். “Next Year நான் இருக்கேனோ இல்லேயோ?”
பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுந்தார். “நாம டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு. டயம் வீணாவுது.”
நீங்களும் எழுந்தீங்க. “வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்.”
“ஆகவே நீங்க ‘Out’ முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு.”
“ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தேங்காய் மாதிரி உருண்டையாய் இருக்கும். Special feature”
“Correct”      பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். “பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் – குறைமாஸம். அதனால் Hyporactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு. ஆக்ஸிடென்ட். அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே.”
“இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் “நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே.”
“ம்ம்………”
அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று.
“ஆமாம் கண்ணன். உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?”
“தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர், சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்.’’
அவள் முகம் லேசாக வெளிறிற்று. “அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!”
“எல்லாம் பெரியவா ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க.”
“என்னை என்னப்பா பண்ணச் சொல்றே. அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?”
“வஞ்சம் தீர்ப்பதா? அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் – அவள் வழக்கை மன்றாட, அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக் கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடி விட்டது.
டம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை. வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் – அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டான்.
‘Ok?” அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே”?
மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவான். பையன்கள் சத்தம் போடாதிருக்க அது நடக்கிற காரியமா? “தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு.”  ஸீட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உறைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்…. ஏதோ பெருமையாயிருக்கும்.
அவள் சொல்லும் பாடங்களைக் கேட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி…
அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ. அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்?    Why not இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மாவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சுப்போச்சு?
குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கை தான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன்மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை.
ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். ‘திக்’கென ஆகிவிட்டது.
“அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்”
பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள்.
“அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே? அம்மா இல்லே.”
அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அது இருக்குமோ?   Damn it, எனக்குப் பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா?
மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை. அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு…
அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒருநாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது. “இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப் போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைகள் புழங்குகிற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்க வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க.”
அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும்.
அவளுக்கு ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு.
இப்போது அவர் இருக்கிறாரோ?
பாரதியைக் காட்டி “இவள் யார்?”
‘இவள் என் பெண்?’ சுமதி டீச்சர் மாதிரி இவள் இல்லை: சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை. தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்.’
“அது சரி. உன் சுபிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே. சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?”
“டீச்சர். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்கமுடியல்லே. I was in love with you.”
“So, you have come to declare your love?” கைகொட்டிச் சிரித்தாள்.
“நீங்கள் சிரிக்கிற மாதிரி இல்லை. இருவத்தி மூன்று வருஷங்கள் டீச்சர்.”
சட்டெனத் தெளிந்தாள். “That happens sometimes; that is called puppylove” – ஒரு  disease,  வந்து இருந்துவிட்டுப் போயிரும்.
“அது மாதிரி டீச்சருக்கு  Student மேல் நேர்வதில்லையா?” அவன் பரிதாபமாயிருந்தான்.
“Oh. Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்குத் தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!”
“நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை.’
“புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப்பிரேமி ஆகிவிடுகிறாள். ஹே ராதா கிருஷ்ணா, பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே ஒழிய அப்படி நிகழ்வது ரொம்ப அபூர்வம். பையன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர். எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறுவதில்லை.”
“கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர்விட்டு, நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக்கொண்டு விடுகிறோமே!”
அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு ‘சுறீல்.’
ன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக – பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானோ இருவரும் மோதிக் கொண்டனர். அவள் மார்பின் விம்மலில் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது.
அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு,
“என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?’ குரல் உயரக்கூட இல்லை. Soft and melodies. அவனுக்குக் கேட்டதோ இல்லையோ? மூர்ச்சையாகிவிட்டான்.
ஜன்மம், ஜீவராசி
யாவதுக்கும் பொதுவாய்
ஆண், பெண் எனும் அடித்தளம்
தான் உண்மைநிலை.
தன் முகம், இனம்
இழந்த ஆதிவேட்கை
அவன் பச்சைப் பாலகன்
அவள் முதிர்ந்த மாது
பகலிலிருந்து இரவா?
இரவிலிருந்து..
எது முன்? எது பின்?
விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி
எதைத்தான் யார் அறிவார்.
ஆனால்
Ecstasy
அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று
பாவம் அதையும் அறியான்.
திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான்.
அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள்.
Yes, that is as it should be.
We Forgot because we must.
Such is the cavalcade of life.
முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் “சரி. உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?”
“என்ன உளறல்?”
“இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சுப் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா.  அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழுநீர் பானையில் கைவிடாமல் இருந்தால் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?’
பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, “அவள் தடுத்தாள்” “நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். இவளுக்கு அப்பா இல்லை’”
“அப்படின்னா அன்னிக்கு அவரைப் பார்த்தேனே” குழம்பினான்.
“இவளுக்கு அப்பா இல்லை. நான் ஏமாந்து போனேன் கண்ணா. இவள்தான் அவர் தந்த பரிசு.”
அவன் ஆச்சர்யம்கூடக் காட்டவில்லை.
“ So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா?  A simple Affire”
“கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?”
“அட. தெரிந்தால்தான் தெரியட்டுமே.”
அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள்.
அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ? வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள். பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக் கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள். இனிமேல் வரமாட்டாள்.
அழியவும் மாட்டாள்.
*******
நன்றி: http://www.natpu.in
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Thi.Janagiraman.

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

சனி, 14 ஜூலை, 2012

bharathimani.

பரமானந்த குருவும், ஆங்கில சிஷ்யையும்!

by Bharati Mani on Friday, July 13, 2012 at 10:19am ·
முந்தாநேற்று, டைரக்டர் ஷங்கர் ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது, உடனே ஆபீஸ் வரும்படி. நான்கு விருதுப்படங்களில் என்னோடு பணிபுரிந்த சூட்டிகை ஜெயராம் தான் இப்போது ஷங்கரின் வலதுகை. அன்று மாலையே மும்பை போய் புதுப்படம் “ஐ” கதாநாயகி ஆங்கில நடிகை எமி ஜாக்ஸனுக்கு -- மதராச பட்டணம் கதாநாயகி -- தமிழ் வசனங்களும், தமிழக உடல்மொழியும் கற்றுத்தரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மும்பைக்கான விமான டிக்கெட் வந்துவிட்டது

’பாரதி’யில் அப்பாவாக நடித்ததை விட, நான் முக்கியமாக்க்கருதுவது ‘பாரதி யார்?’ என்று கேட்ட மராத்திய நடிகர் சாயாஜி ஷிண்டேயை படத்தில் ’பாரதி’யாக மாற்றியது…..நடிப்பிலும், உதடசைவுகளிலும். இது ஜெயராமுக்கு  நன்றாகவே தெரியும். 

மாலையே மும்பை போய் எமி ஜாக்ஸனை சந்தித்து இரு நாட்கள் கூட இருந்து என்னால் இயன்றதை சொல்லிக்கொடுத்தேன். எனக்கு வாய்த்த நடிகை கர்ப்பூரம் மாதிரி…..அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பலரும் என்னை நல்லவன் என்கிறார்கள். அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஏமியும். ”Mani Sir! Hug me…and bless me! You are a great person!’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டும் கொடுத்து, அணைத்துக்கொண்டு விடை பெற்றார்.

ஷங்கரின் புதுப்படம் “ஐ” மிக மிக பிரும்மாண்டமான படம்! வரும் ஜூலை 15-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம். மற்ற விவரங்கள்…..மூச்…..நான் சொல்லக்கூடாது!

பாரதி மணி



குருவும் சிஷ்யையும்.

கர்ப்பூரம் போல....

'Mani Sir! Hug me...and bless me!'

'See you in Chennai..!'
· · Share

  • 13 people like this.
    • ஆனந்தன் அமிர்தன் அவங்களுக்கு வகுப்பெடுக்கும் போது என்னைப் போன்ற அப்பிராணிகளையும் அழைத்துச் சென்றிருக்கலாம் சார் நீங்க....
      உங்களுக்கு மனசு இன்னும் கொஞ்சம் விசாலமாகணும்னு பிராத்திக்கிறேன். :)
    • Chandramowleeswaran Viswanthan தியேட்டரிக்கல் சமாச்சாரங்கள் பற்றி உங்களிடம் நிறைய பேசணும்
    • Ks Suka ஐயா, இதை ஒத்துக்கிறதுக்கு முன்னாடி, யாரோ ‘நாலும் தெரிந்த ஒரு பெரியவரிடம்’ டிஸ்கஸ் பண்ணினீங்களாமே! அப்படியா? அது உண்மைன்னா, அந்த அண்ணாச்சிக்கு என் நமஸ்காரங்கள்.
    • Bharati Mani அவென் ‘அண்ணாச்சி’ இல்லெடே...நம்ம பய தான்!
    • Varadarajan Srinivasan சந்தோஷம் சார். நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா?
    • Sisulthan Eruvadi ம்ம்ம்ம்ம்.....கும்பமுனிதாசனின் வயித்தெறிச்சலே வேற???
    • Bharati Mani சுல்தான்! ஏன்.....கும்பமுனிக்கும் இந்த வயத்தெரிச்சல் இருக்கக்கூடாதா என்ன?
    • Sisulthan Eruvadi கும்பமுனி சீச்சி இந்த பழம் புளிக்கும் என்றும் , கிடைக்காது கிடைக்காதுண்னும் எழுதி மட்டும் புகழடைந்ததை எல்லாம் இப்ப போதும் போதும்ண்ணு சொல்லுற அளவு வாரிக் குமிக்கிறார்...ம்ம்ம்...
    • Bharati Mani சினிமா ஒரு மாயலோகம் தான்! இன்னிக்குப்பாருங்க.... எத்தனை கமெண்ட்....எத்தனை லைக்ஸ்! நானும் நாடகத்திலெ அறுபது வருசமா கத்திக்கிட்டிருக்கேன். எவனாவது கண்டுக்கிறானா....ம்ம்... அது தாண்டே சினிமா!
    • Saravanan Savadamuthu வாழ்க வளமுடன்.. (கொஞ்சம் வயித்தெரிச்சலுடன்)
    • Madhumitha Raja எல்லா படமும் அழகு. ஆமா. இத்தனை பேரு ஏன் பொறாமையும் வயித்தெரிச்சலும் படறாங்க. குருவே சரணம் நல்லா இருக்கு.
      21 hours ago · · 1
    • Sisulthan Eruvadi ‎////ஆமா. இத்தனை பேரு ஏன் பொறாமையும் வயித்தெரிச்சலும் படறாங்க. //// என்ன கேலியா? நக்கலா?????
      18 hours ago · Edited ·
    • Sisulthan Eruvadi ‎////சுல்தான்! ஏன்.....கும்பமுனிக்கும் இந்த வயத்தெரிச்சல் இருக்கக்கூடாதா என்ன?//// நான் சொன்னது கும்பமுனியின் ........தாசனைப் பற்றி...
      18 hours ago ·

செவ்வாய், 3 ஜூலை, 2012

La.Sa.Raa.

“நேற்றைய நினைவின் மணத்துடன் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்” – லா.சா.ரா
1
கனவுகள், காதல், கிளர்வுகள் மற்றும் இதம்தரு மென்னுணர்வுகளாலும் தனிமையாலும் நிரம்பியிருக்கிற பதின்மவயதுகளின் நடுப்பகுதியில் லா.சா.ராவின் பிரதிகள் எனக்கு அறிமுகமாகின. தற்செயலாய்க் கைக்குக் கிட்டிய இந்தியாடுடே இலக்கிய ஆண்டுமலரில்(1994) இரண்டு கதைகள் பிடித்திருந்தன: ஒன்று வாசந்தியினுடைய நல்ல கதைகளில் ஒன்றான ‘கொலை’ மற்றது லா.சா.ராவின் வழக்கமான பாணியிலமையாத மிகவும் மனோரதியமான கதையான ‘அலைகள்’. இந்தக் கதைகளுக்குப் பின்னர்தான் நூலகத்தில் லா.சா.ராவையும், வாஸந்தியையும் தேடத் தொடங்கினேன். வாசந்தியின் ‘நான் புத்தனில்லை’ எனும் நாவல் அடுத்து வந்த வாரங்களில் என் ஆதர்ச நூலாக இருந்தது. லா.சா.ராவின் அபிதாவையும் எடுத்து வந்திருந்தேன்; ஆனாலும் அபிதாவின் மொழி ‘அலைகள்’ சிறுகதை போலன்றி விளங்கிக் கொள்ள மிகவும் கஷ்டமாக இருந்தது. லா.சா.ராவுக்கு முன்பு நா.பாவின் ‘மணிபல்லவம்’, கல்கியின் புனைவுகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்து கொண்டிருந்தன. சமஸ்கிருதத்தன்மையும் ஒருவித தொன்மம் கலந்த குறியீடுகளும் விளங்காதுபோயினும் சரித்திரப்புனைவுகளை வாசிப்பது போன்ற உணர்வு இருந்தது. ‘அபிதா’வின் பூடகமான மொழிவேறு ஒரு விடுகதையின் மர்மக் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. இருண்மையான அந்த மொழிக்கும் எனக்கும் நடந்த ஒருவித போராட்டத்தில் லா.சா.ரா வெகு சீக்கிரத்தில் நான் தேடிப்படிக்கிற பெயராயிற்று.
இன்றைக்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், லா.சா.ராவின் (பௌதீக)மரணிப்பின் பின்னராக, இழப்பின் வலியென்பது உசுப்புகிற நினைவடுக்கில் ‘அபிதா’வின் மீது, அந்த மொழியின் மீது பித்துப் பிடித்துக் கிடந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். நிச்சயமாய் அந்த நிலை இப்போது நினைக்கும் போது ஆச்சரியமூட்டுகிற ஒன்றுதான். அந்த நாட்களில் லா.சா.ராவைக் கிறக்கத்துடன் வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த கட்டுடைப்புக்கருவிகளுடனான வாசிப்பு, விமர்சனப்புத்தி என்கிற எல்லாவற்றுக்கும் அப்பால் லா.சா.ராவின் மரணம் வலிதருவதாயிருக்கிறது என்பதுவே நான் பகிர விரும்புவது.
2
முதன்முதலில் நான் வாசிக்க நேர்ந்த லா.சா.ராவின் சிறுகதையான ‘அலைகள்’ மனோரதியமான சிறுகதையென்பதை முதலிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் ‘அபிதா’ மிகவும் இருண்மையானது. விடுகதையின் மாயக்கவர்ச்சி நிரம்பிய அப்பிரதியை ஒரு ஒழுங்கில் வாசித்தேனில்லை. அப்படி வாசிப்பது கடினமாகவிருந்தது. மூச்சுத்திணறவைக்கிற மொழிதல்களுக்கிடையில் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தேன், அந்த அலைதலின் சுவாரசியம் பிடித்துப் போக மூன்றுதடவைகளுக்கு மேலாக நூலகத்தில் புத்தகத்தைத் திகதி மாற்றம் செய்து என்னுடனேயே வைத்திருந்தேன். உணர்வுகளின் மிதமிஞ்சிய பெருக்கத்தில் மொழி நீர்மையானதாக மாறிப் பாய்ந்துகொண்டிருக்க அதனடியில் இழையும் சம்பவக் கோர்வைகளைக் கண்டெடுத்தல் நீண்ட நாட்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று.
தர்க்கங்களுக்கு அப்பால்பட்ட, புலனுணர்வுகளாய் மாறிவிடுகிற இசைத்தன்மை கொண்ட மொழி லா.சா.ராவினுடையது. நுட்பமான இசைக்கோர்வையொன்றின் கட்டமைப்பை லா.சா.ரா பிரதிகளில் காண்முடியும். 1989 சாகித்ய அக்கடமி விருது ஏற்புரையில் musical effectஐ எழுத்தில் கொண்டுவருதல் குறித்து லா.சா.ரா விரிவாகப் பேசுகிறார்.
இத்தகைய இசையுடன் ‘அபிதா’வில் இருந்த பிடித்தாட்டும் வேட்கை, வெளிப்படுத்தப்பட முடியாத தாபங்களின் பெரும் ஓலம் என்பன நடுங்க வைப்பதாய் இருந்தன. அர்த்தங்களைத் தேடுதல், தேடுதல் மேலும் தேடிக்கொண்டேயிருத்தலின் இன்பம் அக்காலங்களில் என் வாசிப்பிலிருந்த பிரதியாளர்கள் பட்டியலில் லா.சா.ராவிடம் மட்டுமே சாத்தியமாகிற்று.
லா.சா.ராவின் பிரதியுலகம் மர்மமான சங்கேதங்கள், குறியீடுகளாலானது. இவற்றால் பின்னப்படுகிற அவருடைய மொழி போதையும் லயிப்பும் தருகிற கவித்துவமிக்க ஒன்று. இந்த மொழிக்குள் வைக்கப்படும் கதையென்பது துண்டுகளாலானது(fragments). துண்டுகளாக்கப்பட்ட கதைசொல்லல் முறையில்(fragmented narration) கதைகளைக் கண்டெடுக்க முடிவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அந்நாட்களில் எனது குறிப்புப் புத்தகம் லா.சா.ராவின் வார்த்தைகளால் நிரம்பியிருந்தது. உக்கிரமான உணர்வுகளால் நான் காவிச்செல்லப்படுகிற போதெல்லாம் அந்த மூர்க்கத்தை, தகிப்பை சில சமயங்களில் உறைந்து போதலைப் பகிரக் கூடிய பிரதிகளாய் லா.சா.ராவினுடைய பிரதிகள் இருந்தன. எப்போதெல்லாம் ஒருவித metaphysical train of thought (அபௌதீகச் சிந்தனைத் தொடர்ச்சி?) மனதில் ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் லா.சா.ராவின் வார்த்தைகளில் சிந்திக்கப் பழகியிருந்தேன். இப்படியான ஒரு உத்தியை மிகவும் physicalஆன எனது அந்நாளைய பிரச்சனைகளைக் கடந்து செல்கிறதற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். (எனதல்லாத இன்னொருத்தரின் வார்த்தைகளில் என்னைப்பற்றிச் சிந்திப்பது குறித்த சிக்கலின் உக்கிரத்தைத் தணிக்க உதவிற்றுப் போலும்.)
லா.சா.ராவைப் புரிந்து/உணர்ந்து கொள்வதும் சரி, புரியாமல் தவிப்பதும் சரி மிகவும் இன்பமான அனுபவங்கள் தான். புரியாது/உணரமுடியாது போய்விடின் அந்த நிலமை தருகிற அந்தரிப்பு, தவிப்பு, அலைக்கழிப்பு என்பன ஒருபுறம்; புரிந்து/உணர்ந்து கொண்டால் அந்தப் புரிதலின் வலி, தன்னை உணர்தலில் ஏற்படுகிற சுயபச்சாத்தாபம் என்பன மறுபுறம்… இப்படியாக லா.சா.ராவின் பிரதி தருகிற இன்பம் விநோதமான ஒன்று.
அக்காலப்பகுதியில் பிடித்தமாயிருந்த பெண்னுடல், தாபம், காமம் பற்றிய விபரிப்புகளை லா.சா.ராவிடம்(ஓரளவுக்கு ஜானகிராமனிடத்திலும்) நான் லயிப்புடன் அனுபவித்திருக்கிறேன். ஜானகிராமனின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் யதார்த்தமானவை, உலர்ந்து மரக்கட்டையாகிவிட்ட ‘மோகமுள்’ ஜமுனாவின் உதடுகள் யதார்த்தமானவைதான் என்றாலும் பதின்மவயதின் கனவுகளை அது குலைப்பதாய்த் தான் இருந்தது. லா.சா.ராவின் பெண்ணுடல் பற்றிய விபரிப்புகள் இப்படியான இடையூறுகளைத் தந்தது இல்லை. அது ஒரு fantasy. அன்றைய மனோநிலைக்கு யதார்த்தநீக்கம் செய்யப்பட்ட பெண்ணுடல் அவசியமானதுதானில்லையா? மிகவும் physicalஆன Sensualityயாக தி.ஜா இருக்க லா.சா.ரா ஆணின் fantasyகளுக்கான பெண்ணுடல்களை தனது பிரதிக்குள் வைத்திருந்தார். இதனால்தான் தமிழ் எழுத்துப்பரப்பில் ஆண்மொழியைச் (masculine language) என்பதைச் சாத்தியமாக்கிக் காட்டியவரென லா.சா.ரா குறிப்பிடப்படுவது உண்டு. (இங்கு தி.ஜாவின் விபரிப்புகளின் வலிமையை நான் குறைக்கிறேன் என்றில்லை, அவை வலிமையானவைதான் ஆனால் ஒரு பதின்ம வயது இளைஞனுக்கல்ல.)
லா.சா.ரா தனது நேர்காணலொன்றில் பின் வருமாறு கூறுகிறார்: “I live in terms of music, I speak in terms of music.” இந்த இசையின் மாபெரும் ரசிகனாய், அடிமையாய் அல்லது லா.சா.ராவின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘அந்த சௌந்தர்யத்தின் மாபெரும் உபாசகனாய்’ மாறிப்போய்விட்டிருந்தேன். “பொதுவாக ஒரு தத்துவ விசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும்” தன் எழுத்தின் உள்சரடாக ஓடிக்கொண்டிருப்பதாய் கூறுகிறார் லா.சா.ரா. அவரது பிரதிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீடு இதுவாய்த்தான் இருக்க முடியும்.
பதின்மங்களில் லா.சா.ரா பிரதிகளில் வேட்கையை, அவர் குறிப்பிடுகிற ஆத்மதாபத்தை வாசிக்க முடிந்ததே தவிர லா.சா.ராவின் ‘தத்துவ சாரத்தையோ’ அதற்கிருக்கக் கூடிய அரசியலையோ இனம்கண்டு வாசிக்க முடிந்தது இல்லை. ‘தொனி’ என்கிற தமிழ்ப்பதிலி இருக்கும்போது லா.சா.ரா ஏன் ‘த்வனி’ என்கிற சமஸ்கிருதச் சொல்லைக் கையாளவேண்டும் என்கிற மிகச்சிறு விடயம், திராவிட இயக்கங்கள் இத்யாதி இத்யாதி எல்லாம் அப்போது உறைக்காமல் போய்விட்டதற்கு என்ன காரணம்?
3
யாழ்.பொது நூலகம் திறக்கப்பட்டதையொட்டி லா.சா.ரா., தி.ஜானகிராமன், ஜெயகாந்தனுக்கப்பால் நகர முடிந்தது. காலச்சுவடு, உயிர்மை எல்லாம் அங்குதான் முதன்முதலில் கண்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என வாசிக்கத் தொடங்கி கோணங்கி, பிரேம்-ரமேஷ் எனப் பலரது பிரதி உலகங்களுக்குள் மூழ்கிப்போனதில் லா.சா.ரா போன்ற பழைய ஆதர்சங்களின் மீதான ஈர்ப்புக் குறைந்து போய்விட்டிருந்தது. ஆனால் கோணங்கியின் மொழியை அவ்வளவு சீக்கிரம் உணர்ந்துகொள்ள முடிந்ததில் லா.சா.ராவின் மொழியுடனான பரிச்சயம் உதவி புரிந்தது என்பதைச் சொல்லவேண்டும்.
பின்னர் நிறப்பிரிகையின் பழைய இதழ்களையும், அப்பிரதிகள் சுட்டுகிற பிரதிகளையும் படித்ததில் கிடைத்த மிகவும் சுவாரஸ்யமான வாசிப்புக் கருவிகளுடன் எனது முன்னாள் ஆதர்சங்களின் பிரதிகளுக்குள் மீள நுழைந்த போது முதலில் இற்று வீழ்ந்தவர் க.நா.சு. லா.சாராவைப் பொறுத்தவரை, பின்-நவீன புரிதல்களினடியாய் அவரது ‘தத்துவ சாரத்தை’ அபாயகரமான ஒன்றாக இனம்கண்ட போதும், அவருடைய பிரதிகளின் கவர்ச்சியை, ஈர்ப்பை என்னால் மறுக்கவோ/மறைக்கவோ முடிந்தது இல்லை. லா.சா.ரா எனக்குப் பிடித்த பிரதியாளராகத் தொடர்ந்தும் இருப்பதில் சிலகாலம் பயங்கரமான குற்ற உணர்வு இருந்தது.
லா.சா.ராவின் ‘அகம் சார்ந்த தேடல்’ என்பது இந்திய இந்துத்துவப் பெருமரபைச் சேர்ந்த ஒன்று. அது தனது பண்பாட்டு எல்லைகளை மீறுகிற முனைப்புடன் எங்குமே இருந்தது இல்லை. உண்மையில் நான் ‘அபிதா’வில் இருந்த உணர்ச்சிக்குவிப்பு, மூர்க்கமிக்க அலைக்கழிக்கும் விபரிப்புகளில் ஊறிப்போய், ‘இறுதிவரை அம்பி, அபிதாவின் விரல்நுனியைக் கூடத் தீண்டாமல் இருந்தான்’ என்பதற்கு இருக்கும் மரபார்ந்த அற உணர்ச்சிசார் பொறுப்புணர்வைக் கவனிக்கவில்லை. அபிதா நாவலின் முன்னுரையின் ‘அபிதா’ என்பதை ‘உண்ணாமுலையம்மன்’ என்கிற அர்த்தம் வரும்படிக்கு விளக்கியிருப்பார் லா.சா.ரா. வேட்கை, காமம் பற்றிய விபரிப்புகள் கூட எல்லை மீறாமல் ஒருவித புனிதப்படுத்துகையுடன் இடப்படுத்தப்பட்டிருப்பதையும், அதன் மூலம் கிரேக்கக் கதார்ஸிஸ் ஒன்று நிகழ்த்தப்பட்டு மனதை நிர்மலமாக்குகிற ஆன்மீகநோக்கமே இயங்குகிறது என்பதையும் அதிர்ச்சியுடன் உணர நேர்ந்தது.
தனது பிரதியாக்கமுறை பற்றி எழுதுகிற லா.சா.ரா Mysticismஉடன் தன்னை இனம்காட்டிக்கொள்ள விரும்புவதைக் காணலாம். லா.சா.ராவின் mysticismஉம் பின்நவீனம் ஆதரிக்கிற சிறுமரபுசார் தொன்மங்களின் mythopoetic textsஉம் வேறுவேறு. லா.சா.ராவின் Mysticism ஆன்மீகத்தன்மையான சங்கேதங்கள், புனிதக் குறியீடுகள், மர்மம், ஆன்மவிசாரத்தைச் சாத்தியமாக்குகிற கவிதையியல், கதார்ஸிஸைக் கொணரும் அழகியல் விபரிப்பு என்பதையே தனது கூறுகளாய்க் கொண்டியங்குகிறது. இந்தவகை எழுத்து முறையை லா.சா.ரா இந்துத்துவக் கூறுகளுடன் இணைக்கும்போது அவரது பிரதி ஓர் இந்துத்துவ அரசியல் பிரதியாக மாறி விடுகிறது.
லா.சா.ராவின் பிரதியாக்க நுட்பத்தை ‘நனவோடை உத்தி’(Stream of consciousness) எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த உத்திக்காக அறியப்படுகிற ஜேம்ஸ் ஜொய்ஸையும் லா.சா.ராவையும் ஒருசேரப் படிப்பவர்கள் லா.சா.ராவின் பிரதிகளில் இயங்குகிற ‘புனித ஒழுங்கை’ உணர முடியும்.
ஜேம்ஸ் ஜொய்ஸ் குறித்து லா.சா.ராவிடம் கேட்கப்பட்ட போது யுலிஸிஸ் நாவல் ‘அப்பட்டம், வக்கிரம், குப்பை, ஆபாசம், சாக்கடை கலந்தது’ எனக் கூறி நிராகரிக்கிறார். அந்த நேர்காணலிலேயே தனது பிரதிகளில் கையாளுகிற நனவோடை உத்தியை ஜேம்ஸ் ஜொய்ஸிடமிருந்து வேறுபிரித்து அணுகும்படியும் லா.சா.ரா கேட்டுக்கொள்கிறார்: “நீங்களெல்லாம் எண்ணுகிற நனவோடை அல்ல அது. எண்ணத்திலேயே பரிசுத்தமாக அதை நான் கையாண்டு இருக்கிறேன். குதிரை பசும்புல்லைத்தான் தின்னும், வைக்கோலைத் தின்னாது. அது போலப் பசும்புல்லை மேயவிட்டிருப்பேன்.”
இக்கூற்றிலிருந்து லா.சா.ராவின் பிரதிகளில் வைக்கோலைத் தின்னுகிற கழுதை, மலத்தை உண்கிற பன்றி அன்னபிற விலங்குகளுக்கு வழங்கப்படுகிற இடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். தலித்துக்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனப்பிறழ்வுற்றோர், வன்முறையாளர்கள் எல்லாம் லா.சா.ராவின் நனவோடையின் புனித எல்லைகளுக்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். லா.சா.ரா கூறுவதுபோல அங்கு பசும்புற்கள் தான் உண்டு, கருகிய புற்களின் கதியென்ன? இதனடியாக லா.சா.ரா தனது பிரதிகளை, அவற்றின் அழகியலை எந்த வர்க்கத்தின்/சாதியின் சொல்லாடல்களுடன் இணைக்கிறார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
[இடதுசாரி விமர்சகர்களின் கண்டனத்துக்குள்ளான சௌந்தர்ய உபாசகம்Xவியட்னாம் நிலமைகள் சிக்கலில் லா.சா.ராவின் சாய்வே எனக்கு இப்போதும், அதில் அவர் ஒரு நேர்மையான மனிதராய் நமக்குத் தெரிகிறார். அன்றாடம் கொலை நடக்கிற இந்தச்சூழலிலும் எமது அதிகாலைத் தேநீரை ரசித்துக் குடிக்க முடிகிறதே அது போலத்தான்.]
லா.சா.ராவின் மறைவையொட்டி நான்காவது பரிமாணம் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்(Nov.03 ‘ஐ’ அலைவரிசை) உரையாடலில் கலந்துகொண்ட எஸ்.எல்.எம் ஹனீபாவின் கருத்துக்களைக் கேட்ட போது லா.சா.ரா பிரதிகளின் மரபுவாத/பழமைவாதக் கூறுகளை மேலும் தீவிரமாய் உணர முடிந்தது. எஸ்.எல்.எம்.ஹனீபா லா.சா.ராவின் மொழி, பிரதிநுணுக்கங்கள் பற்றிக் கவனம் குவிக்கவேயில்லை; மாறாகா லா.சா.ராவிடமிருந்து இக்காலத்திய இளைஞரொருவர் ‘கற்றுக்கொள்ள’ வேண்டிய விடயங்களைப் பட்டியலிடுகிற காரியத்தையே அவர் (மிகவும் உவப்புடன்) செய்தார். லா.சா.ராவின் பிரதிகள் வலியுறுத்துகிற கூட்டுக்குடும்ப மரபுகள், அவர்களின் பண்பாட்டு ஒழுங்கமைப்பு, வாழ்தல் நோக்கங்கள் ஆகியவற்றின் உயரிய தன்மை என்பன சிலாகிக்கப்படுகையில் குறித்த குடும்ப நிறுவனத்திற்குள் சிக்குண்டு மூச்சுவிடவே திணறிக்கொண்டிருக்கிற ஒரு சிறு பொடியனாய்/பெட்டையாய் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களிடம் லா.சா.ரா பற்றி உருவாக்கியளிக்கப்படுகிற சித்திரம் எதுவாயிருக்கக் கூடும்?
லா.சா.ராவை இவற்றுக்காக நிராகரித்துவிடுதல் சாத்தியமில்லை. அவரது பிரதிகளில் மிக இளம் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நிறைய வேறு விடயங்கள் உண்டு. எஸ்.எல்.எம் கூறிய விடயங்களை/ அல்லது லா.சா.ராவின் பேட்டிகள் வலியுறுத்துகிற விடயங்களைத் தான் நாம் அப்பிரதிகளில் வாசிக்க வேண்டுமென்பது இல்லை.
இன்றைக்கு லா.சா.ராவை நான் வாசிக்கும்போது முன்புபோல் அவரது மொழியின் போதையேற்றலில் மயங்கிக் கிடப்பதில்லை. அவரது பிரதியின் சொல்லப்படாத பக்கங்களைச் சேர்த்து வாசிக்க முடிகிறது. இதுவும் கூட இன்பம் தருவதுதான். மொழிபுகளின் லாவகமான நெளிவு சுளிவுகளில் வழுக்கியபடி லா.சா.ராவின் அரசியலை வாசிப்பது இன்னொருவித கிறக்கத்தைத் தருகிறது. இதுகூட அவரது மொழியின் அசாத்தியமான தன்மையால்தான் என நினைக்கிறேன். ஏனெனில் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களிடத்து கட்டுடைப்பு வினையென்பது அவ்வளவு சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. ஏனெனில் அங்கு மொழிவிளையாட்டுக்கு, அர்த்தங்களை ஊகித்துச் செல்வதற்கு இடமேயில்லை. இங்கு அர்த்தங்களைச் சந்தேகப்படுத்தி, வேறுவேறு சூழமைவுகளில் இடப்படுத்தியணுகிற ஒரு தன்மை இருக்கிறது. இந்த நிலமையைத்தான் ‘நல்ல இலக்கியத்துக்கான’ தகுதியாக ரோலன் பார்த் குறிப்பிடுவது வழக்கம்.
இந்த மொழியை நாம் லா.சா.ராவிடத்து இன்னும் ஆழமாய் புரிந்து வாசிக்க முயல வேண்டும். அதே போல இந்த ஆண்மொழி முக்கியமானது. தி.ஜானகிராமன், நகுலன்(சுசீலா), லா.சா.ரா(அபிதா, ஏகா, ஜனனி) போன்றவர்களிடம் masculine language என்பது இயங்குகிற விதம், அதில் ‘பெண்மை’/”பெண்’ ஆகியவை எங்கனம் மற்றும் எவ்விதத்தில் இடப்படுத்தவும் இடமழிக்கவும் பட்டிருக்கின்றன என்பதை வாசிப்புச் செய்ய வேண்டும். இப்படியாக லா.சா.ராவை முன்வைத்து உரையாட ஏராளம் விடயங்கள் உண்டு; அவரது பிரதிகளுக்கும் கர்நாடக சங்க்கிதக் கட்டுமானத்துக்கும் இடையேயிருக்கிற இசைவிணைவுகள், அவரது பிரதிகளில் கையாளப்பட்ட நனவோடை உத்தியில் Continuity of conscience (பிரக்ஞையின் தொடர்ச்சி) மற்றும் Conscience of continuity (தொடர்ச்சி குறித்த பிரக்ஞை) எனுமிரண்டும் ஒன்றையொன்று குறுக்கீடு செய்கிற விதம், இப்படியான குறுக்கீட்டால் அமைக்கப்படுகிற அவரது narrative installments, இந்தக் கதைசொல்லல் துண்டுபடுத்தப்படுகிற விதம், இந்தத் துண்டுகள் தமக்கிடையிலாகப் பேணிக்கொள்கிற ஒருவித அதீத ஒழுங்கு(meta-structure of fragmented narratives)… இவை பற்றியெல்லாம் லா.சா.ரா பிரதிகளை முன்வைத்து உரையாட வேண்டும்; குறிப்பாகப் பெண்ணியர்கள் மற்றும் பின்நவீன பிரதியாளர்கள். எமது முன்னைய தலைமுறை லா.சா.ராவை நிராகரித்தது(கைலாசபதி), விளங்கவில்லை என்று அப்பால் வைத்தது. நாம் லா.சா.ராவை மீள வாசிக்க வேண்டும். மேலும் மேலும் சிக்கலடைந்து செல்கிற பிரதிகளை விளங்கிக் கொள்ள இதுபோன்ற மீள்வாசிப்புகள் அவசியமானவை. லா.சா.ராவின் பிரதிகள் பற்றிய உரையாடல் தமிழில் உரிய காலகட்டத்தில் நடந்திருந்தால் இன்றைக்குக் கோணங்கியை, பிரேம்-ரமேஷை விளங்கிக் கொள்வதில் நாம் இவ்வளவுக்குப் பின்நிற்கத் தேவையில்லை. மாறாக இன்னும் தீவிரமாக இவர்களது பிரதிகளை வாசிப்புச் செய்வதற்கான தகமைகளை பெற்றுக்கொண்டிருந்திருப்போம்.
லா.சா.ராவை வாசிப்பதென்பது அவ்வளவு கடினமான, சுமையான விடயமில்லை. அந்த அனுபவம் அலாதியானது. அதிலும் லா.சா.ராவும் அவரது பிரதிகளை வியாக்கியானப்படுத்துகிற பழைய தலைமுறையினரும் சொல்கிற மாதிரித்தான் லா.சா.ராவை நாமும் வாசிக்க வேண்டும் என்பது இல்லை. தலைமுறைகள், கோட்பாடுகள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் கடந்து, அவற்றை மீறி லா.சா.ராவின் மொழிக்கு இருக்கிற அந்த அரூபமான, மௌனமான இசை என்னை மிகவும் வசப்படுத்தி அலைக்கழித்தது. இப்போது அரசியல் புரிந்திருக்கிற நிலையிலும் அப்பிரதிகளை வாசிப்பது இன்பம்தருகிற ஒன்றாகவே இருக்கிறது. அந்த இசை ஓய்ந்து போய்விடவில்லை.
நகுலன் இறந்த போது ‘நகுலன் இறந்த பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ எனும் வாக்கியத்தை கோணங்கியின் ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’ தொகுப்பிலிருந்து எடுத்து முகப்பில் பிரசுரித்திருந்தது உயிர்மை இதழ். லா.சா.ரா இறந்துபோய்விட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்த ஒலிநாடா வாக்கியம்தான் உடனடியாய் நினைவில் வந்தது. இதை எழுதுவதற்காய் லா.சா.ராவின் பிரதிகள் சிலதை மீள வாசிக்கும்போது அப்போதெல்லாம் கேட்ட, நான் உபாசித்த, ரசிகனாயிருந்த அதே இசை கேட்கிறதா எனக் கவனித்தேன்: மௌனம், மௌனம் மேலும் குளிர்கிற மௌனம். எதிர் இருக்கையில் இருந்து உரையாடிக்கொண்டும் இசைத்துக்கொண்டும் இருந்த, பல காலம் பழகிய ஒருத்தர் எழுந்து போய்விட்டிருக்கிறார். அந்த இருக்கை வெறுமையாகவே இருக்கிறது, அப்படியான ஒரு வெறுமையை பிரதிகளை-குறிப்பாக அபிதாவை வாசிக்கும் போது மிகவும் பௌதீகமாகவே உணரக்கூடியதாய் இருந்தது. லா.சா.ரா என்கிற மனிதருடன் இவ்வளவு காலமும் உரையாடிக்கொண்டா இருந்திருக்கிறேன்?! அப்படியானால் ‘பிரதியாளரின் மரணம்’?? சொல்லத் தெரியவில்லை.