செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Thanjai Prakash Short story.



மேபல் - தஞ்சை பிரகாஷ்

வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 7:15 AM
வகை: கதைகள், தஞ்சை பிரகாஷ்



மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில் பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா? மேபலுக்குத் தெரியுமே அப்பா சிரித்துப் பார்த்ததேயில்லை. சர்ச்சுக்குப் போய் வரும்போது எல்லார் முகமும் திருப்தியாக இருக்கும். அப்பக்கூட அவள் அப்பாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல்தான் வருவாள். அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்திருக்கிறாள். மேபல், அண்ணனை, அக்காளை, பெரிய அத்தையைக் கூட அப்பா அடிப்பார். எல்லோருமே ரொம்பப் பயப்படுவார்கள். மேபல் கடைக்குட்டி. இயேசுநாதர் கையில் இருக்கும் ஆட்டுக்குட்டி மாதிரி. ஏதாவது தப்பு செய்துவிட்டால், அவளை அள்ளிக்கொண்டு மறைக்கும் அம்மா. திட்டு வாங்கிக் கொள்ள அப்பாவிடம் போகும் அண்ணன் ஃப்ரெடி. ஏதாவது தள்ளி உடைத்துவிட்டால் பாய்ந்து ஒளித்து வைத்து மேபலுக்குப் பதிலாக அப்பாவின் பலிபீடம் போகும் அக்கா நான்ஸினி. மேபலை இத்தனை பேரும் சேர்ந்து காப்பாற்றினாலும் அப்பாவின் அடி உதை நிச்சயம்.



ஞாயிற்றுக்கிழமை மேபலுக்கு நரகம். அப்பா ஆபிஸ் போகாத நாள். குடிப்பார். யாரும் சத்தம் போடக்கூடாது. மூச்சு விடக்கூடாது. காலையிலேயே குளித்து ஸூட் போட்டு டை கட்டி கோவிலுக்குப் புறப்பட்டுவிடுவார். அம்மா ஜோரான ஆப்பம் சுடுகிறாள். மேபலுக்கு ஆப்பம்ன்னா ரொம்ப இஷ்டம். கள் நுரை போல உப்பிய பஞ்சு பஞ்சாய் மெதுமெதுக்கும் ஆப்பம். அதையும் ஒரு நாளும் நிம்மதியாய்ச் சாப்பிட விடமாட்டார் அப்பா.



மேபலுக்கு அப்பா இஷ்டம் நிறைய, தஞ்சாவூர் மிஷன் மேட்டுத்தெருவில் வேறு யாருமே அப்பா மாதிரி ஆம்பிளை கிடையாது. பெண்கள் பார்த்தால் கண்களை எடுக்காமல் அப்பாவைப் பார்ப்பதை மேபல் வியப்பாகப் பார்த்திருக்கிறாள். ரொம்ப நாளாய் ஆப்பம் சாப்பிட எல்லாருடன் டைனிங் டேபிளில் உட்காரமாட்டாள். மேபலுக்கு நாலு ஆப்பம் வேணும். நிறைய தேங்காய்ப் பால் வேண்டும். நாக்கைத் தட்டிச் சப்புக் கொட்டி ருசித்து நக்கிச் சாப்பிட வேணுமே. அப்ப கொலுவீற்றிருக்கும் சாப்பாட்டு மேஜையில் எல்லாருடன் உட்கார்ந்தால் அப்பா கத்துவார். நக்கக் கூடாது; நாக்கைத் தட்டக்கூடாது. அசிங்கம்! டேபிளில் சாப்பிட ‘மானர்ஸ்’ வேண்டும். மிருகம் மாதிரி நாக்கைச் சொடுக்கி லப் லப் என்று விழுங்கிச் சப்தம் எழுப்பக் கூடாதாம். இதற்காக மேபல் குளிக்கிற அறையிலேயோ உடுத்துகிற சாக்கிலோ லெட்ரினிலோ நேரத்தைக் கடத்தி எல்லாருக்கும் பின்னால் லேட்டாக டேபிளுக்கு வருவாள். அப்பாவை ரொம்பப் பிடிக்கும். கட்டிப்பிடித்து அப்பாவை முத்தங்கொஞ்சி சிரிப்புத் தரவேண்டும் என்று மேபலுக்கு ஆசைதான். கூடாதாம் எச்சில் தப்பாம். கிறிஸ்தவர்கள் கிட்டதான் இந்த அசிங்கம் இருக்காம். வெள்ளைக்காரர்கள் வழியா இந்திய கிறிஸ்தவர்கள் படித்த கெட்ட வழக்கமாம். அப்பா அகராதி தனி. அவர் மட்டும் ராத்திரியில் பெட்ரூமுக்குப் போகும்போது எல்லாருக்கும் முன்னாலே கூட அம்மாவையும் அண்ணனையும் முத்தி விடுவது எதில் சேர்த்தி? அக்காவுக்கும் சின்னக்காவுக்கும் முத்தா தருவதில்லை! என்ன யோக்யதை இது. சர்ச் பக்கத்தில் இருந்ததால் இரண்டாம் மணி அடித்த பின்னர்தான் வீட்டைவிட்டுக் கிளம்ப வேண்டும். எரிச்சலுடன் கத்திக்கொண்டேயிருப்பார். ஒன்று அம்மா, இல்லை மேபல், இல்லாவிட்டால் அண்னன் ஃப்ரெடி. சின்னக்கா எப்போதும் பதுங்கிக்கொண்டே பின்னால் வருவாள். ஆனி எப்போதும் திட்டு வாங்கி உதை வாங்குகிறதில் புலி மூத்தவள். நேர் எதிர் சின்னக்கா மாகி! பதுங்கல் புலி! மேபல் தூரத்தில் வருவாள். ஆப்பம் ருசித்துச் சாப்பிடும்போதே வாசலில் அப்பா கூப்பாடு “மூணாம் மணியடிச்சாச்சு! ஏ கழுதெ! சீக்கிரம் உடுத்திட்டு வாடீ! நாங்க முன்னாலே போறோம்!” அப்பாவின் விஸ்கி மூச்சு ரூமுக்குள் வீசுகிற மாதிரி இருக்கும். கோவிலில் “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” ஞானப்பாட்டின் கோரஸ் கொயர் பாடகர்களுடைய கூட்டமான குரலில் இங்கு கேட்கும். திண்ணைக்கு ஓடிவந்து பார்க்கும் போதே அப்பாவுடன் குடும்பமே புதுச்சலவை உடுத்தி கோவிலை நோக்கி போகும் காட்சி மேபலுக்கு இனந்தெரியாத இன்பமாய் இருக்கும். அம்மா பட்டுப்புடவையில் தான் என்ன அழகாயிருக்கிறார்கள். குரலே எழுப்பாமல் அப்பாவுடன் குடும்பம் நடத்தும் ஆச்சர்யம் மேபலுக்குப் புரியாது. ஃப்ரெடி அண்ணனின் வெள்ளை பாண்ட் ஸூட் எத்தனை அருமையாய் இருக்கிறது. அம்மா சாயல் சிவப்பு பிள்ளை அண்ணன். அக்கா ஆனிரோஸ் அம்மாவை உரித்தெடுத்த வடிவு. சின்னக்கா மாக்னஸ் கூட அம்மா பிள்ளைதான். அதெப்படி? அவர்கள் எல்லாரும் அழகாய் அம்மா மாதிரி - மேபல் குட்டி மட்டும் எப்படி அம்மாவும் அப்பாவும் சேர்ந்த மாதிரி மங்கலானாள்? மேபல் கறுப்பில்லை - அப்பா சிவப்பா? புது நிறம்! சிவப்பும் கறுப்புமல்லாத பொன்னிறம், கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் கறுப்பு மாதிரி இருக்கும் வருத்தமாக. அம்மா திட்டுவார்கள் எப்போதும் கண்ணாடி பாத்துக்கிட்டே இருக்கப்டாதாம். மேபலை வீட்டில் கருப்பு குட்டீன்னுதான் கூப்பிடுவார்கள். அப்பா மட்டும்தான் மேபல்! அம்மா சாவு எதிர்பாராமல் நடந்தது. மேபலுக்குத் தெரியாது. தூங்கிப்போன நேரம். கண்விழித்துப் பார்த்தபோது அம்மா தூங்குவதுபோல் சம்மனசாகியிருந்தார்கள். பயந்து பயந்து பயந்தே ஹார்ட் அட்டாக் வந்திருக்க வேணும். அப்போது மேபலுக்கு வயசு பதினைந்து. இப்போது பத்து வருஷம் ஆகிவிட்டது. அம்மா இல்லாத பத்து வருடங்கள். பெரியக்கா ஆனி ரோஸ் கல்யாணம் ஆகி டெல்லி போய்விட்டாள். சின்னக்கா மாக்னஸ் ஆலமரத் தெருவிலிருந்த தாஸில்தார் மகன் ரூபனை லவ் பண்ணிவிட்டாள். மேபலுக்குக் கூட ரூபனைப் பிடிக்காது. கோவிலில் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் போது புளிய மரத்தடியில் சின்னக்காவை நிறுத்தி பேசிக்கொண்டிருப்பான். அப்பாவுக்குத் தெரிந்தால் பயத்தில் உடல் நடுங்கும். ரூபனுக்கும் மாக்னஸுக்கும் நல்ல பொருத்தம். ஏனோ மேபலுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அப்பா மாதிரி ரூபன் காலிப் பயலாம். வேலை வெட்டியில்லாத ராஸ்கலாம். அப்பா சொல்வார். மேபலுக்கு அடிவயிற்றை கலக்கும். சின்னக்கா மாக்னஸ் கொடி மாதிரி இருப்பாள். குளிக்கும்போதெல்லாம் மாக்னஸோட உடம்பு மேபலுக்கு ஆச்சர்யமாயிருக்கும். அம்மா, அம்மா! அப்படியே அம்மா மாதிரி. ஆனா வலுவா செழிப்பா எடுப்பா இருப்பா, மாக்னஸ் ரூபனோட பேசும்போது பூத்துப்போன மல்லிகை மரம் மாதிரி ஆச்சர்யமான அழகோட மாக்னஸைப் பார்த்தாலே தேவதை மாதிரியிருப்பா. இந்த உடம்பை அப்பா துவைத்து எடுத்து ரத்தவிளாராக்கி வீட்டுக்குள் அடைத்தபோது இரவெல்லாம் முனகிக் கிடந்தது மாக்னஸ் மட்டுமில்லை, மேபலும்தான். மாக்னஸை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த போது இடையில் மேபலையும் பிடித்து நாலு அறை வைத்தார் அப்பா, ரொம்ப திருப்தியாய் இருந்தது மேபலுக்கு. ரூபன் தேடித்தேடி வந்தான். ஒருநாள் வீட்டு வாசலிலேயே லாவிப் பிடித்து விட்டார் அப்பா. ரூபன் ரொம்ப தைரியம். அவனையும் அப்பா அடித்து நொறுக்கியதைத் தெருவே வேடிக்கை பார்த்தது. யாரும் தடுக்கவில்லை. அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருந்தார்களாம். ரூபன் பொறுக்கியாம். மாக்னஸ் மயிரைப் பிடித்துச் சுழற்றி அடித்தது போலவே ரூபனின் சுருள் முடியைப் பிடித்து அடிக்க அப்பாவுக்குக் கூச்சமேயில்லை. அம்மா இல்லை இதெல்லாம் பார்க்க. மேபல் கன்றிச் சிவந்த அடிபட்ட கன்னத்துடன் புளித்த நாக்குடன் கண்ணாடியில் பார்த்தபோது உதடு கிழிந்திருந்தது தெரிந்தது. ரூபன் செய்த தப்பு அப்பா அடித்தபோது விடாமல் திருப்பியடித்ததுதான். அப்பாவின் உக்கிரப்பிடியில் என்ன செய்ய முடியும்? மேபல் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பளார் பளாரென்று அறை விழும் சப்தம். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு மாதம் வீட்டுக்குள் யாரும் பேச முடியவில்லை. மாக்னஸ் ரூமிலிருந்து வெளியே வரவேமாட்டாள். அப்பா விஸ்கி பாட்டிலும் சோடாவுடனும் காமிரா அறையில் அல்லது ஹாலில் உட்கார்ந்திருப்பார். அண்ணன் பெரும்பாலும் வெளியில் கத்திக் கொண்டிருக்கும். ராத்திரி பத்து மணிக்கு மேல்தான் வருகிறதே. விடிந்தால் எழுந்து எங்கோ போய்விடும். சின்னத்தை மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வரும்போது வழியில் அண்ணனைப் பார்த்து அழுது.... பேசி... “உங்கப்பன் தாயழி இப்ப ஊட்டையே ரெண்டு படுத்தீட்டான்டா பாவீ.. நீயாவது ஒழுங்கா வேலை கண்ணிக்கிப் போயி உருப்பட்டா நானு ஏண்டா இவங்கிட்ட கெடந்து நெக்கிழயிறேன்”னு ஆரம்பித்து அப்பாவை நேரில் திட்ட முடியாத கூப்பாட்டையெல்லாம் ரோட்டில் அண்ணன் ஃப்ரெடியிடம் கொட்டி அழுது மூக்கைச் சிந்தி எறிந்துவிட்டு வீட்டுக்குள் வரும் சின்னத்தை. மேபலைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி “ங்கொப்பன் ஆபீஸ் போய்ட்டானா இருக்கானம்மா?” “போகல்லெத்தை. உள்ளதான் இருக்காங்க அப்பா!” என்று மேபல் சொன்னால் போதும். பதுங்கி வாசல் வழியாகப் போகாமல் காம்பவுண்டைச் சுற்றிக் கொல்லைப்பக்கமாகப் போவாள் சின்னத்தை. மேபல் ரகசியமாய்க் கொல்லைக் கதவைத் திறந்துவிட வேண்டும்.



அக்கா ஆனிரோஸ் கல்யாணமும் ரகளையாகத்தான் நடந்தது. சொன்ன டௌரிப்பணம் தரலை. இருபத்தைந்தாயிரம். வாழைப்படம் மட்டும் வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து இருபதாயிரம் ரூபாய் மட்டும் வைத்தார் அப்பா. மாப்பிள்ளை விட்டுக்காரங்க, “ஜேவியரு, பேசினது இருவத்தஞ்சி. தட்ல இருக்கிறது இருவது. பொண்ணு ரெயிலேறனுமா ஊட்லியே வெச்சிக்கிறாயா பொட்டணம் கட்டி” கேவலமா பேசி அப்பா கம்பை எடுத்துக்கிட்டு பாய பந்தல்லியே ஏக கலாட்டா. அப்பவே ரூபன் அதே பந்தல்ல நின்னவன்தான். அப்பவே மாக்னஸ் குட்டியோட பேச்சு ஆரமிச்சாச்சு. மூணு மாசம் கல்யாணப்பொண்ணு ஆனிரோஸ் புருஷன் வீட்டுக்குப் போகலெ. மூணு மாசமும் அப்பாகிட்ட அப்பப்ப அந்த எரிச்சல் கூட அடிவாங்கினா. அத்தைதான் காப்பாத்துவாங்க. அப்பாலே எல்லாரும் திட்டுவாங்க நேர இல்ல பின்னால. நேர யாருமே பேச முடியாது. அவன் கெடக்கான் முசுறு. வாய் கொழுத்தவன் அப்டீன்னு மிஷன் தெருவு பூராவும் சொல்வாங்க. ஆறுமாசம் ஆனப்புறம்தான் ஆனிரோஸெ ஹஸ்பெண்ட் வீட்டுக்கு அனுப்பி வெச்சார். செலவு பத்தாயிரம் சமாதானமெல்லாம் கெடையாது. ஐயாயிரம் குடுக்க வேண்டிய எடத்ல பத்தாயிரமா விட்டெறிஞ்சுட்டு “இவ இனிமே அங்க வரப்படாது இதோட சரி” என்று கத்திவிட்டு வந்தார். கூடப்போன மேபலுக்குத்தான் நடுக்கல். எங்கே திரும்பியும் அக்கா ‘வாழ’ மாட்டாளோ என்று. ஆனிரோஸ் வரவேயில்லை. அக்கா பேருதான் மேபலுக்குப் பத்து வருஷம் ஞாபகம்.



மேபல் வளர்ந்தது யாருக்கும் தெரியாமல் போச்சு. கடக்குட்டியா பொறந்தாலே கஷ்டம். எல்லாருக்கும் ஏவல், எல்லாருக்கும் எளப்பம், ஏ குட்டி தண்ணி கொண்டா, காலெப்புடி, ஏய்... எல்லாருக்கும் ஏதாவது உபதேசம். நிறம் செத்த கொறச்சல்தான். இல்லன்னு சொல்ல முடியுமா? ஆளு உடம்பு அப்பம் மாதிரி கைகால் எல்லாம் அளவா வலுவா செதுக்கி எடுத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பூசிப்பூசிப் பண்ணின மெழுகுப் பொம்மை மாதிரி. திடீர்னு எப்படி ‘பளிச்சினு” ஆகிப்போய்ட்டா? எல்லாருக்குமே அது ஞாபகமில்லே. அப்பாகூட இப்ப ஏதோ கூப்பிட்டு நிறுத்திப் பேசுறார். தெருவு பெரிய மனுஷங்க குட்டீன்னு கூப்புட்றதில்லெ. அப்பா அதிகமா திட்ற வேலெ வெச்சுக்கிறதில்லை. ஆனா சின்னத்தை மட்டும் கெட்ட வார்த்தை சொல்லித் திட்றாங்க. மேபலுக்கு உடம்பு பெரிய ஆச்சர்யமா இருக்கு. அண்ணன் பார்வெ கூட மாறிப் போயிருக்கு. மாசா மாசம் உடம்பே வற்றி, திரும்பியும் பூக்கிற மாதிரி வியர்வை கூட ஒரு நெடி, சுயமாவே மணக்கிற மாதிரி. ராத்திரியெல்லாம் உடம்புக்குள்ளே தேனீ ஒண்ணு குடைஞ்சு தேன் உறியிற மாதிரி உள்ளுக்குள்ளே அனல் படர்ற சுகம். யாருகிட்ட சொல்ல முடியும். புதுசு புதுசா பாவாடை தாவணி எல்லாம் போயி பெரிசு பெரிசா பட்டு ஜரின், கோட்டா வாயில், விமல், அமெரிக்கன் டிஷ்யூ, ஜப்பான் என்று புதுப்புது சேலைகள் வந்து சுற்றிக் கொண்டன. மேபல் கேட்காமலேயே அப்பாவின் நெருக்கம் ஜாஸ்தி. பணம் கொண்டு வந்து கொடுப்பதே அவள்கிட்டெதான். ஏதும் வேணுமா? அப்பாவுக்கு மேபல்தான் வேணும். காலையில எழுப்புறப்பக்கூட சின்னத்தை அப்பா கிட்ட வரப்படாது. வீட்டுக்குள் நுழையும்போதே ‘மேபல்’ங்கிற அப்பா அழைப்பு இனிக்கும். இதே மாதிரிதான் ஆனி அக்காவையும் மாக்னஸ் சின்னக்காவையும் இனிக் கடிச்சிருப்பாரோ இந்த அப்பா. மேபலுக்கு இந்த இனிப்பும் பயமாய்த்தான் இருக்கும். சின்னக்குட்டியாய் இருந்தப்போ இந்த அப்பா நெருக்கம் பிடித்தால் கூட கிடைத்ததில்லை. மேபலுக்கு வயசு பதினெட்டு ஆனப்போதான் அப்பா நெருக்கமும் அத்தையின் கெட்ட வார்த்தைகளும் கிடைக்க ஆரம்பித்தது. ஆச்சர்யம், “வாசல்லியே போயி ஏண்டி நிக்கிறே தேவுடியா? ஒன்னெ குளியில வக்ய. என்னடி பேசிட்டிருப்பே இருட்ல? உங்கப்பனாத்தான் இருக்கட்டுமேடி. ஆம்பளெல்லெ அவன். ஏந் தம்பித்தான் பெருசாய்டே, நெருப்புமாறி இருக்கணும்டீ. மாரெ நிமித்திட்டு நடக்காதே, ஆனிமுண்டெயும் அந்தத் தத்தாரி நாயி மாக்னஸும் இப்படிதான் அலஞ்சு குட்டிச் செவுரு ஆனாவள்டீ! நீயும் அழிஞ்சு போய்டாதே!” என்பாள் சின்னத்தே. அப்பா கூப்பிடும்போது அவர் ரூமுக்குள் போகும்போது விஸ்கி நெடி ரொம்ப இன்பமாயிருக்கும். சின்னத்தெ கிட்ட சொல்ல முடியாது. திட்டுவாங்க! பொட்டெச்சிக்கி இது எல்லாம் சந்தோஷம் வரப்படாதுடீ நாயெம்பாங்க. அப்பா கோல்ட் ஃப்ளேக் சிகரெட் குடிக்கும்போதும் ரம்யமான புகை மணம்.



ரூம் முழுசும் புஸ்தகங்கள், அப்பா படிச்சது. சுவரில் தொங்கும் மான் தலைகள் கொம்போடு பயமா இருக்கும். கோட் ஸ்டாண்ட் ஒன்றில் கோட்டுகள் தொங்கும். நரையும் கறுப்புமாய் அளவில் கலந்த முரட்டு முடிச்சுருள்கள் பளபளக்க அற்புதமாய் இளமை சொல்லும். இதுவரைக்கும் அப்பனைப் பார்க்காத செருக்கி அப்பா அப்பான்னு கொழைறாளே என்பார்கள் சின்னத்தை. மேபலுக்கும் இப்போது அதே சந்தேகம் உண்டு. அண்ணன் உட்பட எல்லா ஆம்பளையும் தேவையில்லாமெ கொழையிறது ஏன்? “ஏம்பா குடிக்கறீங்க?”ன்னு கேக்கனும்ன்னு ஆசைதான். கேக்க முடியாது. “மேபல்குட்டி அந்த பீர் கிளாஸ்ல பாதிக்கி கொஞ்சம் அதிகமா விஸ்க்கி ஊத்து” - “சோடாவும் வேணுமா?” - ஒரு ரவுண்ட் ஆனது - அப்பா ஆள் வேறயாகிக் கொண்டிருந்தார். பயம் அடிவயிற்றில், நகங்கள் பிறாண்ட புலி உலுக்கியது மேபலுக்கு. அப்பா ஆம்பளைன்னு சொன்னாங்களே சின்னத்தை - ஆம்பளையா? மேபல் பயத்தில் நடுங்கினாள். வியர்த்து பளபளத்த பயில்வான் உடம்போட விஸ்கி நெடியோடே சிகரெட் வாசனை மீறி அப்பாவை அந்த மங்கல் வெளிச்சத்தில் பயந்தாள் மேபல். “உங்கண்ணன் வீட்டுக்கு வர்றானா? இல்லெ ராத்திரிலேயும் ஊர்தான் சுத்தீட்டிருக்கானா? ஏம்மா மேபல்? வந்தா நான் பாக்கணும்ன்னு சொன்னேன்னு சொல்றியா?” அதே கரகரத்த குரல். குடியில் நெறிந்த மனசு! ஏன் இது? இவரையா ஆம்பளைன்னாங்க சின்னத்தை! ச்சீ! மேபலுக்கு இன்னும் புரியத்தான் இல்லை. அப்பா ஏன் இப்படி இருக்கணும்? ஆனாலும் அப்பாவெ ரொம்பப் பிடிக்கிறது. அவர் முரட்டுத்தனம் இப்ப இப்ப ஆச்சரியமா ஆனந்தமாயிருக்கு. இப்போவெல்லாம் அப்பா குளிச்சிட்டு வந்தா மேபல்தான் தலை துவட்டிவிடணும். பவுடர் கூட போட்டுவிடணும்! அண்ணன் ஃப்ரெடி எம்மெஸ்ஸி முடிச்சாச்சு. கிளாஸ் வாங்காததுனால வேலெ கிடைக்க மாட்டேங்குது! பாவம். அப்பா எப்போதும் போலத் திட்டித் தீக்கணும்! மேபல் சொல்லலே! கலெக்டர் ஆபிஸ்ல ஒரு ஸெக்‌ஷன் ஆபீஸ் அப்பா! ஜீப் தனிய்யா உண்டு. கலெக்டரோடயே சுத்தி அலையிற வேலை. ராத்திரிதான் வருவார். வந்ததும் மேபல்தான் வேணும் சாப்பாடு பரிமாற! சங்கதி பேச!



இப்ப பயம் ஜாஸ்த்தி மேபலுக்கு! சின்னத்தையோட நோட்டம் ஜாஸ்த்தியாப் போச்சு! ரூபன் வந்து காம்பவுண்ட் அந்தப் பக்கம் நின்னு கூப்புட்றதும் ஜாஸ்த்தியாத்தான் போச்சு. ரூபன் பழக்கம் பதினைஞ்சு வருஷம். அப்பா அடிச்சு நொறுக்கி அள்ளினாரே பத்து வருஷம். அப்பா பத்து வருஷம் ஓடிப்போச்சு! அதுக்கப்புறம் மாக்னஸ்ஸெ வலுக்கட்டாயமா அமுக்கி நிறுத்தி ஸ்டேட்ஸ் மாப்பிளை, ஒரு அமெரிக்கன் கிராஜ்வெட் - ‘லாஸ்ஸரஸ் மாணிக்கம்’ சொந்தமா அமெரிக்காவுல எலக்ட்ரானிக்ஸ் பார்ட் கம்பனி இருக்கு! பணம்! தடபுடலா கல்யாணமும் பண்ணி - ஊருக்குப் போகும்போது உள் அறையில கதறி அழுதாளே அவள் மாக்னஸ் சின்னக்கா! நெனைச்சாலே பயமும் எரிச்சலும் இப்பக்கூட மேபலுக்குத் தொண்டையடைக்கும். ரூபன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்த சங்கதி அப்பறம்தான் வெளிய தெரிஞ்சது! அதுகூட அப்பா பண்ணின வேலைன்னுதான் சொன்னாங்க. மேபலுக்கும் கேட்கப் பயம். ரூபன் மேபலைச் சந்திக்க ஆரமிச்சது பீட்டர் ஸ்கூல் க்ரவுண்டுல.



காலை நேரம் இப்பவெல்லாம் மேபல் தினமும் சர்ச் போறா! அழ நல்ல இடம் அதானே! யாரும் கேட்க மாட்டாங்க! ஜீஸஸ்! இதெல்லாம் ஏன் நடக்குது? அப்பா ஏன் இப்படி கல்நெஞ்சா இருக்கணும்? எங்களுக்கு மோட்சமேயில்லையா? கதறி அழமுடியாது. ஆனா அழுது கொட்டலாம். கிறிஸ்த்தவப் பொண்ணுக்கு இது ஒரு வசதி. ஜெபம் பண்றேன்னு அழுது கொட்டினா யாரும் கண்டுக்க மாட்டாங்க. பெரிய்ய ப்ளே க்ரவுண்ட குறுக்க கடந்து சர்ச்சுக்கு போக முடியும். ஏழுமணி சர்வீசுக்கு யாரும் வரமாட்டாங்க! இப்போ சர்ச்சுக்கே யாரும் அதிகமா வர்றதில்லே. வசதிதானே! மேபல்! அவளுக்கு இப்ப யார்? பயங்கரம்! அவளுக்கே புரியல. எப்படிப் புரியும். மாக்னஸ் சின்னக்காவுக்குப் புரிஞ்சுதா? பணிஞ்சு போயே குனிஞ்சு போன ஆனி அக்காவுக்கு தெர்ஞ்சுதா? வேலையில்லாமெத் திரிஞ்சு கஞ்சா நெடியோட ராத்திரித் திருடன் மாதிரி வர்றானே அண்ணன் ஃப்ரெட்ரிக்! அவனுக்குத்தான் புரியுமா? எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு ஏதாவது துணை இருக்கு. அப்பா குடிக்கிறார். என்ன தப்பு? சின்னத்தைக்குத் தெரியுமா? சொந்தத் தம்பியெ கீழபோட்டு மிதிச்சு அவர் நிழல்ல இருந்துகிட்டு அவர் உசிரை வாங்குறாங்க! மேபல் மட்டும் கோவில்ல அழுது தீக்குறது எதுக்கு? அவளுக்கே தெரியாதே! அதுக்குப் பேர்தான் ஜெபம்! அவளுக்குத் துணை ரூபன்! எப்போதும் இது சாத்தியமில்லேன்னு அவளுக்குத் தெரியும். ரூபன் அப்பாவுக்குப் பகைன்னு தெரியாதா? தெரியும். ஆனா ரூபன் யார்ன்னு மேபலுக்கு இப்பதான் தெரியும். ரூபன் அவளோட சின்னக்கா மாக்னஸ்ஸின் லவ்வர். ஆரம்பம் என்னமோ இதுதான். ஆனா... இப்ப மேபல் அவனோட லவ்! இதுதான் மேபலோட பயம்! ரூபன் மாக்னஸ் கல்யாணம் தடைப்பட்டதே, மேபல் ரூபன் கிட்ட விழுந்து போனதுக்கான காரணம்! காலை ஏழு மணி திருவிருந்து ஆராதனை நற்கருணையில் சேர்ந்து தினமும் அழுது புலம்பி விட்டு வருவதற்குமே இதுதான் காரணம். மேபலுக்கு ஆல்ட்டரியில் முழங்கால் படியிட்டு, “யேசுவே! இந்தப் பாத்திரத்தை என்னிடமிருந்து நீக்கி என்னை உம்மிடம் ஏத்துக் கொள்ளும் கர்த்தாவே! ரூபனை என் கண்களிலிருந்து மறையும் தேவனே! நான் ரூபனிடமிருந்து தப்ப வழி காட்டும் ஆண்டவரே!” என்று கதறி அழுது ஜெபம் செய்வாள் மேபல். டாண்டாண்டாண் என்ற மணியோசையுடன் தேவ சமூகத்து அப்பத்தை திருவிருந்தாய் அவள் கையில் இடுவார் பாதிரியார். ஏசுவின் ரத்தமாய் திராட்சை ரசமும் வெள்ளிக்கிண்ணத்தில் அவள் உதடுகளருகே பாதிரியார் கொண்டு வந்து வைக்க - கண்களில் நீர்வழிய அதனை அருந்தி சுத்தியும் சுகமும் ஆவாள் மேபல். கோவில் ஆராதனை முடிந்து அவள் வெளியே வரும் போது மைதானம் முழுவதும் பனியால் நனைந்திருக்கும். புல் நுனியெல்லாம் பனித்துளி காலை வெயிலில் மினுக்கும். மைதானத்தில் ஏறத்தாழ ஒரு பர்லாங்கு தூரம் தள்ளிக் குட்டைச்சுவர் ஒன்று. பழைய காலத்துக் கைப்பிடிச் சுவர். அதன் மேல் உட்கார்ந்திருப்பது யார்? ரூபன்! திரும்பிச் சுற்றிப் போகும் தார்ரோடு வழி நடக்கலாமா முடியாது. ரூபனுக்கு வயசு முப்பத்தேழு. ஒரு காலத்தில் நன்றாகப் படித்து ஓடியாடி விளையாடி அற்புதமான இளமை கொண்டிருந்தவன். மிஷன் தெருவிலேயே அவனைக் கண்டு மயங்காத பெண் யாரும் இல்லை. மாக்னஸ்ஸை அவளது சந்தோஷமாய் ரூபனைத் தரிசித்தவள் மேபல். துள்ளித்திரிந்தாள். அப்போதெல்லாம் மாக்னஸ் ரூபனைப் பார்க்கப் போவது எல்லாவற்றையும் அப்பாவிடம் காட்டிக் கொடுக்கிற வேலையைப் பதிமூணு வயதுக் குட்டி மேபல்தான் செய்வாள். அப்பாவின் பிடியில் மாக்னஸ் சிக்கியதே மேபலால்தான். நிஜமாகவே அக்காவை இந்தக் காலிப்பயல் கெடுத்து விடுவானாமே! ரூபன் வந்து கோவிலில் மாக்னஸ் சின்னக்காவுக்காக நின்றதும் உடனே மேபல் ஓடிப்போய் அப்பாவிடம் சொல்வாள். அக்காவையும் திட்டுவாள். சின்னத்தையிடமும் காட்டிக் கொடுப்பாள். ரூபனும் மாக்னஸும் அகப்படுவார்கள். மின்னல் வேகத்தில் ரூபன் தப்பி மறைவான்.



அப்படியிருந்தும் அப்பாவிடம் அடி வாங்கிச் சுருளும் மாக்னஸ் சின்னக்கா கண்ணீர் ததும்ப, “இல்லெப்பா இல்லெ! அவனோட எனக்கென்ன பேச்சு! ஒண்ணுமில்லே. பேசவேயில்லெ. அவன் தான் டைம் கேட்டான். நான் ஒண்ணும் பேசவேயில்லெப்பா!” என்று புரண்டு அழுதாள். ஆனா அப்பா விடவில்லை. மாக்னஸ் குட்டி உன்னே இஷ்டம் போல விடமாட்டேன் என்று கத்தியது ஞாபகம் இருக்கிறது. மாக்னஸ்ஸுக்கு அப்போதெல்லாம் என்ன நடந்தது, இந்தக் குடும்பத்துக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பது அப்போது மேபலுக்குப் புரியாது. புரிய முடியாது. இப்போது ரூபனை முழுதாகப் புரிந்தது. மாக்னஸ் குட்டி அக்காவுக்கு நேர்ந்த அதே கோளாறு அதே கோணல் அதே ரூபனுடன் இப்போது நேர்ந்திருப்பதை எப்படி யாரிடம் என்னவென்று சொல்வாள் மேபல்! அதோ கட்டைச் சுவரிலிருந்து குதித்து அருகே வருகிறான் ரூபன். மைதானத்தில் யாருமே இல்லை. ஒன்றிரண்டு கான்வெண்ட் பெண்கள் சுமந்த புத்தகங்களோடு முன் தள்ளி நடந்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவன் என்ன செய்யப் போகிறான்? படபடப்பும் பரிதவிப்பும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வித விருப்பமும் மகிழ்ச்சியும் மேபலாம் தாங்க முடியவில்லை. தொடப்போகிறான் ரூபன்! கலங்கல் சட்டை, பதினைந்து நாள் தாடி, அழுக்குப் பாண்ட், ஊத்தைப் பற்கள். கலைந்துபோய் காதோரம் நரையோடிய சுருண்ட முடி. இவனை மாக்னஸ் சின்னக்காவுடன் பார்த்தபோது இப்படியா இருந்தான். நாளுக்கொரு ஜீன்ஸ்! வேளைக்கொரு பார்லல் பாண்ட்ஸ். கட்டம் கட்டம் போட்ட டெர்லீன் சட்டை, ஸூட் கோட்! தூரத்திலிருந்தே வீசும் இன்பமான பாரீஸ் ஸெண்ட்! அப்போதும் இவனைப் போக்கிரி என்றார்கள் மிஷன் தெரு கிறிஸ்தவர்கள்! இன்றும் ரௌடிப்பயல் என்கிறார்கள்! மாக்னஸ் சின்னக்கா மயங்கினாள். ஆனால் பயம்! அப்பா பயம்! கிட்டே வந்து நின்றான் ரூபன்! என்ன தைரியம்! அவள் கையைக் கோர்த்துப் பிடித்தான். என்ன வலு! மார்பில் வெறுமையாகச் சுருண்ட முடிகளிடையே கறுப்புக்கயிறு ஒன்று வெறுமையாய்க் கிடந்தது. கையை விடுவிக்கவில்லை மேபல்! அவன் ஸ்பரிசம் அவளுக்கு வேண்டும். அவன் வேர்வை மணம். அவன் குடித்திருந்த விஸ்க்கியின் மணம், காலைப்பனியிலும் அவளுக்கு வந்து நாசியை மலர்த்தியது. அப்பாவின் அதே விஸ்கி! சிகரெட்! ரூபன்!



”தப்பிச்சுகிட்டு போலாம்ன்னு பாத்தியா மேபல்! விடமாட்டேன்!”



“யாராவது பாத்தா அப்பாகிட்ட சொல்லீடுவாங்க. உயிரெ எடுக்காம விடமாட்டாங்க அப்பா! என்னே உட்டுடுங்க...”



“அடெ! உன்னெ நானா புடிச்சு வெச்சிருக்கேன்!”



“பின்னெல்லியா? தினமும் யாரு வீட்டுக்காம்பவுண்ட் கொல்லையில் வந்து நிக்கிறதாம்?”



“நின்னா? உனக்காகவாக்கும்?”



“இல்லியா பின்னே? சுத்திச்சுத்தி வர்றீங்களே எதுக்காகவாம்?”



"வராம இருந்துட்றேனே! உன்னக்காவே நெனைச்சு....”



“என்னெச் சுத்தணுமாக்கும்.”



“ச்சீ”



“என்ன ச்சீ? ஏம் பொய் சொல்றீங்க! என்னெத் தொரத்தினா அப்பா விட்டுடுவாங்களா?”



“உங்கப்பா ஒரு அய்யோக்கிய ராஸ்க்கல்.”



”உங்களை மாதிரியா?”



“என்ன சொன்னே?”



பளீரென்று அறை விழுந்தது எதிர்பாராத இடத்திலிருந்து. கன்னம் சிவந்தது. அப்படியே நின்றாள் மேபல். அவளும் பேசியது எல்லாம் பொய்தானே. அவனுடன் பேசும்போதெல்லாம் இப்படித் தர்க்கம்தான் வருகிறது. அவன் மேல் எப்போது ஆசை வந்தது என்று இனம் தெரியவில்லை. அவனும் ஒப்புக் கொள்வதில்லை. தினமும் மாலை மயங்கும் வேளையில் வீட்டுக்காம்பவுண்ட் கொல்லைப்புறம் வெளியே காத்திருப்பதும் மேபல் ஓடி ஒவ்வொரு நாளும்... அவன் என்ன செய்து விட்டான்?! வெறும் பேச்சு! அவன் மௌனமாய் கேட்டுக் கேட்டு... மேபலுக்கு ரூபன், அவன் விஸ்க்கி வாசனை வியர்வை, முடி அடர்ந்த மார்பு, அவன் அடாவடித்தனம் அதே முரட்டுத்தனம்.... எல்லாமே வேண்டியதாகிவிட்டது. ரூபன்! பைத்தியமாய் அடித்தான். எப்படி என்றுதான் அவளுக்கே புரியவில்லை. புரியாததுதான் சந்தோஷமே. அவள் அப்பாவை அவளுக்குள் இணைத்திருக்கும் அதே புதிர்! நிச்சயம் ரெண்டு புதிரும் விடுவிக்கப்படப் போவதில்லை. மேபலின் பயம் தொடர்ந்தது. அப்பாவிடம் பயந்தாள். ரூபனிடம் சிக்கினாள். பயப்படுத்திக் கொண்டேயிருக்கிறான் ரூபன். அக்காவைத் தொடர்ந்தது. அப்பா மிஷன் தெரு பார்க்க அடித்து நொறுக்கியது. எல்லாம் கண் முன்னே பார்த்தும் எப்படி இந்த அபத்தம் தெரிந்தே எரியும் குப்பை! ஆ! இவனை அக்கா மாக்னஸ் நேசித்தாளா? இன்னுமா? மாக்னஸ் கல்யாணம் ஆனபோது லாரியில் அடிபடாமல் இருந்தால்... கல்யாணத்தில் கலாட்டா செய்து.. கல்யாணம் நின்று... அப்பா அவமானப்பட்டு... ஜீஸஸ்! இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும் ஆண்டவரே... இவன் பாவம் ஸ்வாமி! அக்கா மாக்னஸோட ஆத்மாவைக் காப்பாத்தியருளும் பிதாவே! என் உடம்பிலிருந்து வாலிபத்தின் முள்ளை எடுத்துப்போடும் ஜீவனுள்ள கர்த்தாவே!... உதடு முணுமுணுக்க அவன் முன்னிலையிலேயே மனசுக்குள் ஜெபம் செய்தாள் மேபல். கண்களில் கண்ணீர்.



அவன் கேலியாய்ச் சிரித்தான்.



“என்னடி ஜெபம் பண்றியா? நான் வேண்டாம்ன்னு? ராஸ்க்கல்!”



“எனக்கு இதெல்லாம் வேண்டாம் ரூபன்.”



“உங்கக்கா என்னெ நடுத்தெருவுல அலையவெச்சா... நீ என்னெ கால்ல போட்டு மிதிக்கிறெ. உங்கப்பன் என்னெ கொன்னு தீர்க்கலாம்னு அலையறான். இதுல பேசீட்டுருக்கும் போதே ஜெபம் வேற ஜெபம்.. நேரா மோஷத்துக்கு போறவள்கள்லெ?”



”ரூபன் டியர்! நான் நரகத்துக்குத்தாம் போவேன். அக்காவுக்கும் அப்பாவுக்கும் நான் செய்யிறது துரோகம் இல்லையா? சண்டாளி உங்களையா நானும் நேசிக்கணும்! ஆண்டவரே ஸ்வாமீ!”



“யேய்! அழுகையெ நிறுத்தடி பசப்பி! எனக்காக இதுவரைக்கும் என்ன பண்ணீருக்கே நீ! உங்கக்கா மாக்னஸ் மாதிரியே நீயும் இருக்கேன்னு என்னெ ஆட்டி வெக்யலாம்ன்னு பாக்றியா? உங்கக்கா அப்பா அப்பான்னு பயந்த மாதிரி நீயும் என்னெ ஏமாத்தி குழியில எறக்கலாம்ன்னு நெனைச்சே.. படவா ராஸ்க்கல் தேவுடியா ஒன்னெ குத்திக் கொன்னுட்டு உங்கொப்பனையும் என்னை மாறியே நடூ ரோட்ல திரிய உடாமெ நான் சாகமாட்டேன்டீ தெரிஞ்சுக்கோ!”



கண்களில் நீருடன் சிரித்தாள் மேபல்.



“இந்தத் திமிர் பேச்சு பேசியே என்னெ மயக்கீட்டிங்க!”



“உங்கப்பங்கிட்ட என்னடீ வெச்சிருக்கே?”



”அப்பாவெ உங்களுக்குத் தெரியாது!”



“களிமண்ல என்ன தெரிஞ்சுக்கணும்! களிமண் தான்!”



“எங்கப்பாவெ கேவலமா பேசுனா எனக்கும் பிடிக்காது. மாக்னஸ் சின்னக்காவுக்கும் பிடிக்காது தெரியுமா?”



”சரி! எப்பதான் வருவெ?”



“எஞ்ச?”



“என்னோட!”



“அதான் எஞ்சன்னு கேட்டேன்!”



”எங்கியாவது. உங்கப்பன் இல்லாத எடத்துக்கு!”



“எங்கப்பா இல்லென்னா நானும் வரமாட்டேன்! என்னெ உட்ருங்க!”



“யேய்! நிறுத்துடி உங்கொப்பம் புராணத்தெ!”



“எங்கப்பாவே உட்டுட்டு வர்றது இந்த ஜென்மத்ல இல்லே!”



“இப்டிப் பேசியேதாண்டி உங்கக்காவும் என்னெத் தெருவுல நிக்க வெச்சிட்டு அவ ஜாலியாப் போனா.... நீயும்....”



”வாய மூடுங்க!”



அவள் நடந்தாள். அவன் பின்னிட்டு நின்றான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மைதானத்தில் குறுக்கே நடந்து ரோட்டில் இறங்கும்வரை இடுப்பில் கை வைத்துக் கால்களை அகட்டி பார்த்தபடியே மிஷன் மேட்டுத் தெருவில் நடந்தாள் மேபல்! யாரும் பார்க்கும் முன் கண்களைத் துடைத்துக் கொண்டு படியேறினாள். அப்பா கட்டிய வீடு. புதுசாக கட்டியது. அப்பா ப்ளான். எல்லாருக்கும் தனித் தனி ரூம். கல்யாணமாகிப்போன ஆனி ரோஸ்க்கும் தனி வீட்டெ இந்த வீட்டில் இணைச்ச மாதிரி! மாக்னஸ் திரும்பி வந்தா அவளுக்கும் ஒரு தனி வீடு. அத்தைக்கும், அண்ணனுக்கும், மேபலுக்கும் கூட தனித்தனி வீடு. எல்லாம் ஒரு நடுக்கூடம் ஒன்றில் இணைந்து அற்புதமாய் அபூர்வமாய்ச் செய்திருந்தார். ஆனால் யாரையும் அண்டவிடவில்லை. அண்ணன் ஃப்ரெடி யாரிடமும் அண்டுவதில்லை. வரத்தும் போக்கும் எங்கேயென்று மேபலுக்கு மட்டும்தான் தெரியும். அத்தை அப்பாவுடன் பேசறதேயில்லை. மாக்னஸ் கல்யாணம் எல்லார் வாயையும் அடைச்சுப் போட்டுவிட்டது. எல்லாருக்கும் மேபல் மட்டும் வேணும். கல்யாணம் ஆகிப்போன பத்து வருஷத்தில் பத்துத் தட்வை மாக்னஸ் சின்னக்கா வந்து போயிருக்கா. அமெரிக்காவிலிருந்து வரணும்னு யாரும் கூப்பிட்டதில்ல. அப்பா இந்த பத்து வருஷத்துல மாக்னஸ் புருஷன் லாசரஸ் அமெரிக்கன் பேச்சு அப்பாகிட்ட மட்டும். மேபல் கிட்ட சிரிக்கிறதோட சரி. மாக்னஸ் வரும்போதெல்லாம் ரூபன் வீட்டுக்குத் தனியாப் போயி பேசீட்டு வருவா. என்ன பேசுவாளோ... என்ன சொல்வாளோ? கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் மேபலுக்கு. ரெண்டு குழந்தையும் பெத்திருந்தா! ஒரு ஆண் ஒரு பெண். வெரி ஸ்வீட் சில்ரன். நடுக்கூடத்திலிருந்து நாலு ஐந்து வீட்டுப் போர்ஷனிலும் ஓடிக் கூச்சலிடும் குழந்தைகள் ரெண்டும். ஒருத்தன் ஸ்சடோன் லாஸரஸ், பெண் ஹனி! ஸ்டேட்ஸ் போகப் புறப்பட்டபோது உள் அறைக்குள் மேபலை இழுத்துக்கொண்டு போய் மாக்னஸ் சொன்னாள், “த பார் மேபல்குட்டி! அப்பாவெச் சுத்திகிட்டெயிருக்காதே. உனக்குக் கல்யாணம் நடக்காது தெரியிதா? ரூபனோட புறப்பட்டு ஸ்டேட்ஸ் வந்துடுங்க. ரூபனுக்கு வேலை ஒண்ணு அவுங்கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணீடலாம். பணம் நான் அனுப்புறேன். உங்கப்பன் உனக்கு கல்றயிலதான் கல்யாணம் வெப்பான்! இஞ்சியே இருந்தீன்னா அதான் நடக்கும்!”



“ஏங்கா அப்டீச் சொல்றே. அப்பா இப்ப ரொம்ப மாறீட்டாஅரு..>!”



“ஆம்மா மாறீட்டான்! இந்த உத்யோகமும் பணமும் இல்லேன்னா இந்தக் குடிகாரனெ யாரு மதிப்பா.”



“அப்பாவெ ஒண்ணும் சொல்லாதேக்கா! அப்பா பாவம்!”



“பாவமா? அவம் பண்ண பாவத்துக்கு இன்னும் என்னன்ன பாடுபடப் போறாம் பாரு நீயே.”



“இப்ப என்ன பாடு பட்றாருங்கிறே நீ?”



”என்னெ இந்த நரகத்ல தள்னத்துக்கு ... அவன்...” மாக்னஸ் அழ ஆரம்பித்தாள். குமுறல் பகை அவள் கண்களில் எரிந்தது. ஆத்திரம் கத்தலில் முடிந்தது....



“நீயும் இஞ்ச இருக்காதெ! அழிச்சு ஒழிச்சுடுவாம் பாவி!”



’நான் எஞ்சியும் வல்லக்கா!”



”அடீப்பாவி! உனக்கு நல்லது தாண்டீ சொல்றேன்”



“இந்த நெனப்போட இஞ்ச வர்றதுன்னா நீ வரவே வாண்டாம்! அப்பாவெ உட்டுட்டு நான் எஞ்சியும் வல்லெ.”



“அப்ப ரூபனே நீ லவ் பண்ணல்லியா?” கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டாள்.



”சின்னக்கா நீயும் ரூபனெ எப்பமும் ‘லவ்’ பண்ணவேல்லெ...!”



“என்னெ சொன்னியாடீ பாவி நாயே! உனக்கு வந்து உதவி பண்ணனும்ன்னு நெனைச்ச என்னே!”



“கத்தாத சின்னக்கா! அப்பா காதுல உளுந்தா கொன்னுடுவாரு!”



“சின்னத்தெ சொன்னப்ப நான் நம்பல்லெ. இப்பல்லெ தெரியிது!”



“என்ன தெரியிது? எப்ப உனக்கு என்ன தெரிஞ்சுது. ரூபனே உட்டுட்டு லாஸரஸத்தானெ கல்யாணம் பண்ணிக் கிட்டப்ப இந்த ஞாயம்ல்லாம் தெரியாமெப் போச்சா?”



”என்னப் பேச்சுடீ பேசுறே பட்டி நாயே? தேவுடியா!”



கூச்சல் அதிகமானபோது கெட்ட வார்த்தைகள் சுழன்று எழும்பின. சின்னத்தை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் யாரோடும் அவளும் பேச்சில் அழுத்தம்தான். அவள் வீடும் அந்த வீட்டுக்குள் தனியே கட்டியிருந்தார் அப்பா.



மறுநாளே புறப்பட்டு விட்டாள் மாக்னஸ் ஸ்டேட்ஸ்க்கு!



****



வீட்டைப் பெரிசாக்கிக் கட்ட ஆரம்பித்தபோது மேபல் வீட்டை ரிப்பேர் செய்யப் போவதாகத்தான் நினைத்தாள். அப்பா ஆபிஸிலிருந்து ஆட்கள் வந்து அளந்து சுற்றிலும் ஆறு வீடுகள். நடுவில் கூடம், வாசலில் போர்ட்டிக்கோ என்று சுற்றுக் கட்டாக் கட்டி வந்தபோது இத்தனை பெரிய வீடுஎதுக்கு என்று மிஷன் தெருவில் எல்லாருக்கும் யோசனை. தைர்யமாய் எவன்போய் இவங்கிட்ட கேக்கிறது! உனக்கென்னம்பான்! என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.



வீட்டின் முன் போர்ஷன் மேபலுடையைது. எட்டு ஜன்னல். அழகான சின்ன வீடு அது! பக்கத்து வீடு அப்பாவுக்கு.



மேபல் அப்பா போர்ஷனில் நுழைந்தாள். மேஜை மேல் ஏகப்பட்ட ஃபைல்கள். ஏதோ ஒரு பைலில் தலையை நட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் சுவர்களில் மான் தலைகள் விழித்தன. தரையில் புலித்தோல். சுற்றிலும் கருங்காலி ஃபர்னிச்சர்கள். பீரோக்கள். தலையைத் தூக்கி “யாரது?” என்றார் அப்பா.



நரையோடிய சுருள் மீசையை நாக்கால் நக்கிவிட்டுக் கொண்டார் அவளைப் பார்த்தபடி “என்னம்மா” “அக்கா ஆனியே வரச்சொல்லி எழுதுங்கப்பா! ஞாபகப்படுத்தீட்டு போலாம்ன்னு வந்தேன்...!”



“அவ ஏம்மா இஞ்ச? வாண்டாம்!”



”எனக்கு பாக்கணும் போல இருக்குப்பா.”



அப்பா ஒண்ணுமே சொல்லல்லெ. கொஞ்ச நேரம் கழிச்சு “நீயே எழுதி வரச் சொல்லு மேபல்!” என்றார்.



"தாங்க்ஸ்ப்பா!” என்றாள் மேபல். அப்பா வசத்தில் இல்லை என்பது தெரிந்தது. எப்போதும் வசமில்லைதான்..!



“அந்த நாயி வரட்டும், ஆனால் ரெண்டு நாள்ல போயீறணும்! ஆமா!”



“பின்னே ஏம்பா ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடுகட்டி எல்லாத்தையும் ஒரே வீடாக்கினீங்க?”



“அதெல்லாம் பன்னிக் கூட்டம்மா! என்னெ யாரும் மதிச்சதில்லே! உங்கம்மா உள்பட எல்லாரும் ஏங்கிட்ட பயந்தாங்கம்மா யாரும் நேசிச்சதில்லை. பீ தின்றதுக்கு வர்ற பன்னிக் குட்டி எல்லாம் தின்னட்டும். என் ப்ராயாசையோட பலனெ அனுபவிச்சாங்க. பயந்துக்கிட்டே இஷ்ட்டம்போல ஆடுனாங்க. இன்னும் எத்தனை நாளம்மா மேபல்? அன்பில்லாத வீடு அட பெரிசாத்தான் இருக்கட்டுமே எனக்கென்ன? இன்னைக்கு நாளையோ நான் ஏன் விஸ்க்கியிலேயே ஊறிக்கிட்டு இருக்கேம்மா! நீ ஒருத்திதாண்டா என்னை மாதிரி! ஏங்கண்ணு உங்கம்மா பயந்துகிட்டேதான் ஏங்கிட்ட பெத்தா எல்லாத்தையும். எல்லாரும் ஏங்கிட்ட பயப்புட்றாங்களாம். நான் நம்பவேனா ராஸ்கல்ஸ்” உறுமினார்.



“நீங்க பேசுறது தப்புப்பா! எல்லாரும் உங்களை நேசிச்சாங்க. அம்மாவுக்கு உங்க மேல் உயிர்!”



“அட போடி கறுப்பி. உனக்கு யாரையும் தெரியாது. எல்லோருக்கும் பயம். அவ்வுளதான். என் ஆபிஸ்ல வேலக்காரங்க மாறி வீட்ல எம்பெண்டாட்டி எல்லாருக்கும் பயம். நடுக்கம் பயம்போனா எல்லாருக்கும் நான் அல்ப்பம்! இல்லியா? உங்கம்மா கல்யாணம் ஆன மறுநாள் வாய மூடினவதான், சாகும்போது கூட வாயெத் தொறக்கில்லெ. நீ ஒர்த்திதான் என்னோட நின்னுகேட்டு எதுத்து சண்டை போட்டு என் பொண்ணா எனக்காக நிக்கிறேம்மா.”



இல்லப்பா எனக்கும் பயந்தான்! நடுக்கந்தான்.



எதிரேயிருந்த விஸ்க்கி பாட்டிலெத் திறந்து நுரைக்க அப்படியே சோடா கலக்காமல்... “என்னப்பா ஆச்சு? இன்னைக்கு இப்படிக் குடிக்கிறீங்க?”



“என்னமா புதுச்சு? எப்போதும்தான் இது வேண்டியிருக்கு உனக்கு ஏது புதுசு!”

”இல்லெ அப்படியே ராவா கடகடன்னு..”



“எனக்கு உங்கிட்ட பேசணும்மா! பயம்மாயிருக்கு எனக்குப் பேச்சு வழக்கமில்லெ.”



“பயமா? உங்களுக்கா? என்னப்பாது?”



“என்னெ மொரடன்ங்கறாங்க? உங்கம்மாவும்கூட முசுடும்பா என்னெ! யாரு கிட்டியும் பேசறதில்லெ! ஏந் தெரியுமா? நிஜமாவே நான் முரடன். எல்லாரையும் அடிச்சு நொறுக்கி அசிங்கமான பேர் வாங்கிட்டேன். ஏன் தெரியுமா? யாரவது என்னெ நேசிக்கிறாங்களான்னு சந்தேகம்தான்!”



“எல்லாரும் வெலகி வெலகிப் போய்ட்டாங்க உன்னெத் தவிர. உங்கம்மாகூட பயந்துகிட்டே காலத்தெத் தள்ளீட்டுப் போய்ச் சேந்துட்டா. பாவம் ஏம்மா அவ என்னெ ஏங் கோபத்தெ எதுத்து என் மொரட்டுத்தனத்தெ எதுத்துப் போராடல்லெ? அவ பொய்ம்மா பொய். நீ மட்டும்தான் என்னெ எதுத்துப் போராடிட்டிருக்கே. எனக்குத் தெரியும். அவங்களுக்கெல்லாம் நான் வாண்டாம். இந்த தொரட்டுத் தாயழி வாண்டாம். போய்ட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவங்களே போது. அப்பன் வாண்டாம். ஆனிமுண்டெயக் கூப்படணுமிங்கிறியே அவளுக்கே ஏன் வரணும்ன்னு இல்லெ?”



“நானல்ல இருக்கே! இஞ்ச? வீடு கட்டினேன். அதனால்தான் யாரும் வரமாட்டாங்க. வர வேண்டாம். வரும்போது நான் இருக்க மாட்டேன். வீடு இருக்கும். ஆனா ஒரே வீடு ஆறுவீடானாலும் ஒரே வீடுதான். உடைக்கப் பிரிக்க முடியாது. உயில் அப்படி எழுதியிருக்கேன். இந்த கெழவன் சாகும்போது, குடிச்சு எரியும்போது நீ ஏம்பக்கம் இருப்பேடா கண்ணு. இருப்பே. ரூபன் வந்து கூப்பிட்டாலும் ஓடமாட்டேம்மா ராஜாத்தீ. தெரியும் எனக்கு. உன்னே யாரும் வளைக்க முடியாது. வாண்டாம்ன்னாலும் இந்தக் கெழவன் காலடீலயே நீ கெடப்பேம்மா. இந்தச் சிலுவெயெச் சொமந்துட்டே கடைசீ வரைக்கும் நடந்துடுவோம்மா கண்ணுமணீ. இந்தக் கழுதே மாக்னஸ் ரூபனெ கட்டிக்கணும்ன்னு ஏங்கிட்ட எப்பவாவது வந்து ஒருநாள் வந்து கேட்டாளா? ரூபன் நாயாவது அவளெ இழுத்துட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கிற துணிச்சல் உண்டாயிருந்தானா? நான் சொன்னப்போ முடியாது லாஸரஸ் கட்டிக்க மாட்டேன் ரூபனத்தான் பண்ணிக்குவேன்னு சண்டைபோட்டு அப்பாவெச் சம்மதிக்க வெக்க அப்பம் மேலே பிரியம் இருந்ததா? இல்லியேம்மா. இல்லே அப்பங்கிட்ட பயமாம்! உன்னப்பங்கிட்ட சண்டைபோட, கேட்டு வாங்க எதுக்காவுது வந்தியா? நீயும் லாஸரஸ்ஸெக் காட்டினதும் ஓடிப்போயி கட்டிக்கிட்டே. எனக்கென்ன உன் தலையெழுத்து. காசு! உத்தியோகம்! ஸ்டேட்ஸ்ல பெரிய வியாபாரம். அந்தஸ்து! ரூபன் வாண்டாம்! அப்பன்தானா காரணம்? ஏண்டி நாய்ங்களா? கேட்டு முட்டி மோதி வாங்கியிருக்க முடியாதா?”



”என்னப்பா நீங்க! இப்டி இருமி கக்கிகிட்டு பேசணுமா?”



“போதும் அப்புறம் நாளைக்குச் சொல்லுங்க.”



“மேபல்! கண்ணம்மா, நான் இனிமே பேச முடியாதும்மா. நான் காலமெல்லாம் பேசினவனுமில்லே. தஞ்சாவூர் பாரிஷ்ல என்னெ மதிச்சவனுமில்லெ. நான் மதிச்சவனுமில்லெ. உன்னெயும் நான் விட்டுட்டு ஒதுங்க முடியாது. என்னெ நீயும் பயந்து பயந்து ஒதுங்கிப்போயி கிட்டத்துல வந்து கட்டிப் பிடிச்சுகிட்டே. எங்கிட்ட எல்லாத்தையும் ஒடச்சு வெக்யிற. ரூபன் கோபிச்சுகிட்டு இருக்கான். பாவம்! அவனெ வந்து நேரா ஏங்கிட்ட பொண்ணு கேக்கச் சொல்லுவா! பாப்போம். நானா தூக்கி இந்தான்னு என் கண்ணுமணியெத் தர முடியுமா? ரூபன் கோழைப் பயல். அதுனாலதான் இன்னிக்கு வரைக்கும் உன்னையோ இதுக்கு முந்தி மாக்னஸையோ பொண்ணு கேக்க வர்லெ! இழுத்திட்டு ஓடலாம்ன்னு பாத்தா.. விடுவேனா? இது என்ன எல்லாருமே பயப்படுறோம் பயப்படுறோம்னு தாறுமாறா நடக்க முடியும்? ஜேவியரு பொண்ணுன்னா சாதாரணா? உனக்கு ஆசைன்னா நீ வேணும்ன்னா ரூபன் பயலோட ஓடு! ஆனா திருட்டுத்தனமா ஓடாதெ! அப்பா, நான் இவனோட போறேன்னு சொல்லீட்டு ஓடு! உங்கப்பன் வேட்டைக்காரம்மா! புலியையும் தெரியும் இந்த நரிகளையும் புரியும்....”



“என்னெ மன்னிச்சிருங்கப்பா! நான் ரூபனோட பேசித் திரியிறதெல்லாம் தப்புதாம்ப்பா!”



”தப்புன்னா என்னன்னே தெரியாதேடீம்மா மேபல் உனக்கு! ரூபன் பயலுக்கு மாக்னஸெ நான் ஏன் குடுக்கல? அவங்க ரெண்டு பேரும் ‘லவ்’ பண்ணலெ, ஏம் மேலே பழியப் போட்டா மாக்னஸ்! என்னெ யாரு வகை வெச்சான்ங்க? உண்மையிலேயே மாக்னஸ் ரூபனெ நேசிச்சது நிஜம்னா அவ என்னோட போராடி சம்மதம் வாங்கி ஜெயிச்சிருக்கணும். உங்கம்மாவெ நாப்பது வருஷம் முந்தி நானும் லவ் பண்ணுனேம்மா மேபல். தெரியுமா உனக்கு? இந்த மாக்னஸ்குட்டி மாதிரியே உங்கம்மா அவ அப்பன் மெரட்னதும் ஊட்டுக்குள்ற நாய்க்குட்டி மாதிரியே அவவூட்டுக்காரங்களுக்காகப் பயந்து வாலைச் சுழட்டிக்கிட்டுப் பதுங்கீட்டா! எனக்குத் தெரியும் அவ்வளவுதான்னு. உட்டேனா? பட்டப்பகல்ல அவ வூட்டுக்குள்ள போயி அவுங்கப்பனுக்கெதுர்க்கவே உங்கம்மாவெ இழுத்துக்கிட்டு வந்து பீட்டர்ஸ் சர்ச் ஆல்ட்டர்ல ஐயர் கூட இல்லாமெ நானே தாலியெ கட்டினேன். அப்றம்ல எல்லாருமா வந்து அழுது கெஞ்சி மொறையவும் திருப்பியும் அதே சர்ச்ல லாம்ப் ஐயர் தாலி குடுத்து நான் வாங்கிக் கட்டினேன். கல்யாணம் ஆச்சி! நாந்தாம்மா உங்கம்மாவெ ‘லவ்’ பண்ணினேன். அவ பொண்டாட்டியா இருந்தா, புள்ள பெத்தா, வளத்தா! எல்லாம் சரி, ஏங்கிட்ட பயம் எப்போதும்! நான் அடிப்பேனாம் உதைப்பேனாம் கொடுரமானவனாம்! நான் கோலியாத் மாதிரி ராட்சசனாப் போனேன்...”



“அப்டீல்லாம் நீங்க இருந்தீங்கதானேப்பா! அது உண்மையில்லையா அடிச்சுத் தொவைக்கலியா?”



“நாலஞ்சு புள்ளை பெத்தாளேம்மா உங்கம்மா! அதுமட்டும் ஐயமில்லாம எப்டி நடந்துதாம்? பயம் பயம்ங்கிறது அப்ப வல்லியா? ஏம் புருஷன் மொரடன்ங்கிறது ஒரு வசதி! யாரும் கிட்ட வராம ஒரு வழி. எங்கப்பா ஒரு கோலியாத் ராட்சசங்கிறது ஒரு தெம்பு! பண்ற தப்பு தெரியாம மத்தவங்ககிட்ட தப்பிச்சு தலையில சுமத்த ஒரு லாபம்! இல்லியா? அப்பன் எதுக்கும் விடமாட்டான்! அடாவடி புடிச்சவன்னா யாருகிட்ட வந்து பேசுவான். ஜேவியர் ரொம்ப கண்டிப்புன்னு ஆபீஸ்ல எல்லாப்பயலும் பேசியே ஒதுக்கிட்டா.. தப்பிகிட்டே ஒழுங்கீனம் பண்ணலாம்ல! அதான் பெத்த பொண்ணுங்க கூட, ஏன் கட்டின பொண்டாட்டி கூட ஒதுங்கியே தூரத்ல இருந்தே போய்ட்டாங்க... பெத்த பய தெருப் பொறுக்கி மாதிரி சுத்துகிறான். அவனுக்கும் அப்பன் வாண்டாம்!”



“நான் மட்டும் என்னப்பா ஒஸத்தி? நானும்தான் ரூபனெத் தேடீட்டு போய்க்கிட்டு இருக்கேன்!”



மேஜையில் இருந்த இன்னொரு கிளாஸ் திரவமஞ்சளும் ஜேவியர் தொண்டையை எரித்து உள்ளே கடந்தது. நிதானமாக மகளை உற்றுப் பார்த்தார். உடல் முழுவதும் ஆறாத வியர்வை. நீண்ட நேரம் பேசியதால் வந்த பதைபதைப்பு. மகள் அருகில் கண்ணீர் ததும்ப நிற்பதைப் பார்த்ததும் கலங்காது ஒரு கடுமை பறந்தது முகத்தில்...



“மேபல்! நீ உன்னெ மட்டும் நேசிக்கல்லெம்மா.. நீ இல்லாவிட்டால் ப்ரெட்ரிக் இந்த ஊரெ விட்டே எங்கியோ ஓடிப்போயிருப்பாம்மா. இஞ்ச நீதான் எனக்கும் அவனுக்கும் எடையில் இணைச்சுப் பிடிச்சுட்டு நிற்கிற. உங்கக்காமார் என்னெப் புழுதியா நெனைச்சுப் போய்ட்டாலும், அவங்களோட அப்பனை ஞாபகம் பண்ணி அவங்ககிட்ட எணைச்சிகிட்டு நிக்கிறது யாரும்மா? நீதானே எனக்கு மகன், மகள் எல்லாம் இல்லாமல் போய்டாமெ ஆவியோட சேத்து அப்பனை அவங்ககிட்ட விடாமெ உயிர் குடுத்துகிட்டு நிக்கிறது யாரும்மா? அட உங்க சின்னம்மா சின்னத்தை கூட யாரெ நெனச்சுகிட்டு இங்க வர்றாகடீ? பொண்ணே எங்கக்கா என்னெ இன்னும் நெனச்சி இஞ்சயே நிக்கிறாளே உங்களோட இந்த வூட்ல, ஏன்? உன்னாலம்மா உன்னால். நீ இல்லென்னா நான் கட்டின இந்த வூட்டெ பிரிச்சு வேண்டியதை எம்ப்பரயாசையோட பலனெயெல்லாம் அள்ளிகிட்டு போய்டுவாங்க. இஞ்ச ஒரு ஈ காக்கா இருக்காது. என்னெப்போல யாரும் இருக்கக்கூடாது. எனக்கு யாரும் இல்லெ. தெரியும் எனக்கு நாம் பொறந்ததுல இருந்தே, நானே வளந்து, மேபல் இதுல இனிமே நானே எப்டி மாறி, நானே எப்டி மத்தவங்களோட ஆசைக்கேத்தபடி மாறி திரும்பியும் வாழபோறம்மா? முடியாது. என்னைக்காவது அவங்க எல்லாரும் திரும்பி வரும்போது நானும் இருக்க மாட்டேன். இருக்கவும் கூடாது. ஆனா இந்தப் பெரியவீடும் நீயும் இருப்பீங்க. தேடி வரணும். நீ படிச்சவ. எல்லா க்ளாஸ்லியும் காலேஜிலியும் என்னெப் போலவே அபாரமா மார்க் எடுத்து டிஸ்டிங்ஷன்ல பாசானவ. சொத்தும் உனக்காக நான் நிறைய சேத்து வெச்சிருக்கேன். உன்னெ அவனுக்கு இல்லெ. எவனுக்குமே கொடுக்க ஏம்மனசு ஒப்பாதுதான். எனக்கு நீ மட்டும்தான் மிச்சம். என்னோட எல்லாமே மேபல் கண்ணுதான். ஆனா உனக்கு நான் ரூபனெத் தரத்தயார். ஏன் தெரியுமா! எனக்கு நீ தந்திருக்கிறது உன்னையேயல்ல. ஆனா ரூபனைப் போயி நீ கேக்கக்கூடாது? என்னெக் கல்யாணம் வந்து கேளுன்னு கூப்டக் கூடாது. நான் உங்கிட்ட சொன்ன எதையும் யாருகிட்டயும் - உங்க சின்னத்தைக்கிட்டக் கூட சொல்லக் கூடாது. உங்கப்பன் உங்கப்பன் தான்னு நீதான் நிரூபிக்கணும். ரூபனா வந்து பொண்ணு கேட்டு இந்த ஒலகமே எதுத்தாலும் என்னோட போராடி உன்னெ ஜெயிக்கணும்மா. உங்கப்பனெ இந்த உலகம் புரிஞ்சுக்காட்டி பரவால்லெ. நீ புரிஞ்சுக்கணும். உன்னோட வாழ்க்கைக்கு மட்டுமில்ல. உங்கம்மா, உங்கக்காமார், யாரோட வாழ்க்கைக்கும் உங்கப்பன் என்னைக்கும் தடையாயிருந்ததில்லே! அவங்களேதான் தடையாயிருந்தாங்க என்னோட வாழ்க்கைக்கும்.” இருமல் ஆரம்பித்த ஜேவியரு தொடர்ந்து இருமினார். மேலும் குடித்தார். மேபல் அழுதாள். இரண்டு பேரும் தழுவிக் கொண்டார்கள். மேபலை உச்சி முகர்ந்து முத்தமிட்டார். மேபல் பொருமிப் பொருமி அழுதாள். உதடுகளில் அப்பனின் முத்தங்கள். அவரது விஸ்க்கியின் சீற்றமும் அதிகப் பேச்சின் உக்ரமும் கொஞ்சமாய்த் தணிந்தன. அப்பாவின் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டபோது மேபலுக்கு நெஞ்சுபூராவும் நிரம்பியிருந்தது ரூபன் மட்டுமே. இதை ரூபன் தர வேணும். தருவானா? உலகம் தராவிட்டாலும் ரூபன் தரவேண்டும். அப்பா கேட்டதை அவன் அவளுக்கு தராவிட்டாள். பயங்கரமாய் இருந்தது. இது யாருக்கும் புரியப்போகிறதில்லை. அவள் இப்போது அப்பா சொத்தல்ல. ஆனாலும் ரூபனுக்கு அவள் வேண்டுமா வேண்டாமா? அவன் அவளை அப்பாவிடமிருந்து எடுத்துக் கொள்வானா?



காலம் முழுவதும் ரூபன் தேடியது, அப்பா தேடியது. அக்காமார், சின்னத்தை எல்லாம் தேடியதும் மேபல் வியந்து கண்ணீர் வடித்தாள். குழந்தைப் பருவமெல்லாம் அவள் ஏங்கியது கிடைத்துப் புரிந்துவிட்டது. இந்தப் புதையல் இத்தனை காலம் கண் முன்னேதான் இருந்தது. கனவாய் மயங்கியது. நிஜமாய்ச் சுட்டது. ரூபன் இது உனக்கு முடியுமா? அப்பா சொன்னதுபோல் மேபல் கேட்கமாட்டாள். உன்னிடம் மட்டுமில்லை எந்த ஆணிடமும் கேட்க மாட்டாள். மேபல் அப்பாவின் பெண். வாட்டசாட்டமாய் வளர்ந்துவிட்ட பெண். அவளது ஆகிருதி உயரம் எல்லாமே ஜேவியரதுதான். எம்.ஏ. பாஸ் செய்தாயிற்று. அப்பா தடுத்துக் கொண்டிருப்பதால் வேலைக்குப் போகவில்லை. மிஷன் சர்ச்சில் வேலை கிடைத்தும் தடுத்துவிட்டார். காரணம் பெரிய திட்டம்!



ஒரு முழு அலுவலகத்தைத் தாங்குகிற வேலை வருகிறதாம். பலத்த திட்டம் உட்பட அலுவலர்கள் குவார்ட்டஸ் எல்லாவற்றோடும் சீக்கிரமே வந்துவிடும். அப்பா ஏற்பாடு எல்லாம் சரி! ரூபன்? தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் கோவில் மைதானத்தில் நிற்பான். நாட்கள் ஓட ஓட ரூபனும் திரைந்து கொண்டிருந்தான். பெரிய்ய வீட்டில் அத்தையுடன் சமையல் செய்த நேரம் போக அண்ணன் ஃப்ரெட்ரிக்கை எதிர்பார்ப்பதும் கடிந்து கொள்வதும் காசு கொடுப்பதும் தவிர மேபலுக்கு வீட்டில் வேலை? அப்பாவின் புத்தகங்கள்தாம் துணை.



காலை ஆறு மணிக்கே கோவிலுக்குப் போகிறதில் நற்கருணை ஆராதனையில் கலந்து கொள்வதில் தவறுவதேயில்லை. அப்பாவின் ஆபிஸ் ஜீப் வாசலில் வருகிற சப்தம் போர்ட்டிக்கோவில் ஜீப் வந்து நிற்கும் சப்தம் போதும். மேபல் வாசலுக்கு ஓடி வந்தால் அப்புறம் இரவு வெகு நேரம் வரை அப்பாவுடன் தான் நேரம் கழியும். அப்பாவுக்கு எது பிடிக்கும் அதுதான் சமையல். அப்பா வேட்டைக்குப் போனால் இப்போது மேபலும் கூடப் போகிறாள். தடுமாற்றமில்லாமல் இப்போதும் துப்பாக்கி பிடிக்கிறார் ஜேவியர். அவளும் சுடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வேதாரண்யம் காட்டுக்குள் ஞாயிறுகள் கழியும். மூன்று ஜீப்புகள், அப்பாவின் ஆடர்லிகள் வேட்டைக்காரர்களுடனும் மேபலும் வியர்வையில் ஊறி ஆவி பறக்கத் திரிந்து தஞ்சாவூர் திரும்பும்போது ஜீப்பில் மான்கள் உயிரற்றுக் கிடக்கும். அப்பாவுடன் சீட்டு விளையாடுவது, அப்பாவுடன் குளிப்பது, காலையில் பனி மூட்டத்தில் வீட்டு மொட்டை மாடியில் எக்ஸர்ஸைஸ் செய்வது. வியர்த்து வடியவடிய டம்பல்ஸ், ஸ்கிப்பிங் பயிற்சி, பனியன் ஹாஃப் டிராயர்ஸ் வியர்வையில் ஊறிவிடும். பேய் மாதிரி கொட்டும் அருவிகளில் காட்டில் தலை கொடுத்து அப்பனின் எல்லா ஆட்ட பாட்டங்களுக்கும் துணை நிற்பது. இப்போதெல்லாம் மேபலுக்கு நேரமேயில்லை. கண்ணாடியில் பாத்ரூமில் உடம்பைப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கும். இப்போதெல்லாம் ரூபனைப் பார்க்க மறப்பதேயில்லை. முன்பெல்லாம் அவனிடம் தப்பினால் போதும் என்றிருக்கும். அவன் தொடும்போதெல்லாம் பயமாய் இருக்கும். காலையில் அவனைத் தாண்டுவது ஒரு பிரச்சனை. இப்போதோ ரூபன் ஒரு சுகம். அவனை எங்கு பார்த்தாலும் கூப்பிட்டு நிறுத்திப் பேசுகிறாள் மேபல். பேச்சின் தோரணையே தனி!



“என்ன மிஸ்டர் ரூபன்! எப்படியிருக்கீங்க. என்ன பண்ணிட்டிருக்கீங்க?”



”ம்! சும்மாதான் இருக்கேன்.. வந்து....”



“சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க!... இப்படியே திரிஞ்சிட்டிருந்தா எப்படி? உங்கம்மாவெக்கூட மானிங்ஸர்வீஸ்ல பாத்தேன். அழுதாங்க! சீக்கிரமா ஏதாவது வேலையில சேந்தா சந்தோஷப்படுவாங்க!”



“அழட்டுண்டி! உனக்கென்ன! உன் வேலையப் பாத்திட்டுப் போடீ”



“டீஸண்டாப் பேசக் கத்துக்குங்க ரூபன்”



“ஆமா! இனிமேத்தான்! உங்கிட்ட டீஸன்ஸி கத்துக்கப் போறேன்! அதுசரி நீ பெரிய வேலைக்கிப் போப்போறியாமே!”



”ஆமா! ஆமா!”



“எப்போ கல்யாணம்?”



“யாருக்கு?”



“ஏய் உனக்குத்தான்டீ!”



”ஏன் கேக்கிறீங்க?”



”ல்லெ... உனக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்ன்னுதான் கேக்கிறேன்!”



“ஜீஸஸ்! அப்பா! ரொம்ப நல்லதாப் போச்சு. இனிமே ஏம்பின்னாடி சுத்தமாட்டீங்கள்ல?”



”ஏங் கொப்பனோட போட்ற ஆட்டம் போதலையா? தொலைச்சுடுவேன் ஆமா!”



“ச்சீ உங்க அசிங்கம் இவ்வளவுதானா இன்னும் இருக்கா?”



”மேபல் இனிமேயும் உன்னெச் சும்மா விடமாட்டேன் ஆமா உன்னெ... உன்னெ...”



காலை நேரத்தில் அந்த மைதானத்தில் ரூபன் மேபலை இழுத்துத் தடவி.. வெட்ட வெளியில்.. மேபல் பதட்டமேயில்லாமல் அவனை விலக்கித் துரத்துவாள். லேசாக வரும் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு ரூபனைப் பார்த்து “ரூபன் என்ன இது? சும்மாயிருக்கமாட்டீங்களா? யாராவது பாத்தா என்ன ஆகும்? இப்டி முரட்டுத்தனம் பண்ணினா என்ன ஆகும்? நீங்க என்ன ஆம்பளை? ஸ்பரிசம் பட்டதும் மயங்கி ஒங்க கைல விழ எனக்கு உங்க ஸ்பர்சமும் புதுசு இல்ல வயசும் பதினாறு இல்லெ. நான் அரைக்கிழவி நீங்க முக்காகெழவன். இனிமே உங்களாலெ என்ன முடியும்? வேலையா ஒண்ணுமில்லெ. சம்பாத்யமும் இல்லெ. சுயமா ஒண்ணும் செய்ய முடியாது... ஒண்ணு பண்ணுவீங்க விட்டா.. ஒரு புள்ளே பெத்துக்குவீங்க. இல்லெ? என்ன முறைப்பு இது? உங்க சிரிப்பப்பாத்து மயங்கிட்டிருந்த மாக்னஸ் இல்ல நான். மூஞ்சியெல்லாம் தாடி அழுக்குப் பாட்டமா ஜீன்ஸ்பாண்ட் தொள தொளன்னு வியர்வை நாத்தம் பிடிச்ச ஜிப்ப.. பத்து பதினைஞ்சு வருஷமா என்னமும் மிச்சம் இருக்கா? அக்கால்லாம் போயாச்சு என்னெப் பிடிச்சீங்க இப்ப? தாடி கிருதா தலைமுடி எல்லாம் வளந்து ஒண்ணாப் போச்சு. வெட்டிப் பேச்சு இன்டீஸண்டா பிஹேவ் பண்றது கெட்டவார்த்தை பேசறது கஞ்சா அடிக்கிறது தெருச் சுத்தி வர்றது கேக்க ஆளு இல்லன்னா என்னெச் சுத்துறது. இதுக்குப் பேரு லவ்வா? மிஸ்டர் ரூபன் வேண்ணா சொல்லுங்க. அக்கா மாக்னஸ் உங்களெ லவ் பண்ணா நான் பண்ணலை.”



“ஒவ் அப்பனை லவ் பண்றியாக்கும்!”



“ஆம்மா! அப்பனை லவ் பண்ணத்தாம் பண்றேன். ஆனா உங்க மாக்னஸ்ஸெ பண்ணின மாதிரி லவ் இல்லெ. இது அப்பனை நேசிக்கிற லவ். உங்களுக்கெல்லாம் புரியிற லவ் இல்லெ!”



“தேவுடியா!”



“உங்ககிட்டருந்து வேற எனக்கு என்ன பட்டம் கிடைச்சிடும்! நிஜமா இதுதான் சரி! உங்களுக்கெல்லாம் உங்க மேலதான் லவ்! நிச்சயம் எங்க மேல இல்ல!”



மேபல் நடந்தாள். எப்போதும் போல மோனத்தில் நிற்கும் செய்ன்பீட்டர்ஸ் சர்ச்! கோழி முட்டை வடிவ கோபுரம் காலை வெயிலில் கோணலான நிழலை விழுத்தியது. மெல்லென நடந்தாள். ரூபன் பின்னால் வெறியுடன் அவளைப் பார்த்து நின்றான். அப்பா சொல்வது நிஜம். இவர்கள் எல்லாம் தன்னையே நேசித்து தன்னையே வளர்க்கிற கூட்டம். அம்மான்னும் அண்ணன்னும் அக்கான்னும் தங்கைன்னும் உறவு சொல்லி அதையே சொல்லி ஏமாத்தி காதல்ன்னும் பாசம்ன்னும் வார்த்தையவெச்சு வியாபாரம் பண்ற தன்னல கும்பல்! மைதானம் முழுவதும் இன்னும் பனி விலகல்லெ... எதிரே வர்றது யார்?



வெய்யிலும் பனியும் கலந்து ஒரு மாதிரி சாம்பல் நீலப்புகை மாதிரி எங்கும் படர்ந்து... எதிரில் வந்தது அண்ணன் ஃப்ரெட்ரிக். அட இவரும் காலையிலியே வர்ராறே என்ன கஷ்டமோ. வர்றதெல்லாம் பணம் வாங்கத்தானே?



”வாங்கண்ணே என்னது காலைல? கோயில் பக்கமா?.... ஆச்சர்யமாயிருக்கே...”



“உன்னெப் பாக்கத்தான்.. வந்த.. இது கல்யாண விஷயம்.. அதாவது?”



“கல்யாணமா? யாருக்குன்னே?”



“எனக்கும் ஒரு பொண்ணுக்கும்”



“யாரு அந்தப் பொண்ணு?”



“நீதான் அப்பாட்ட சொல்லி... எனக்கு பயம்.. நீயே சொல்லி.. எப்டியாவது....”



”நோ! நான் மாட்டேன்!... ஏண்ணே உங்களுக்கு இப்படி புத்திபோவுது? நீயே அப்பாட்ட கேளேன்.”



“முடியாதும்மா பதினைஞ்சு வருஷமாவுது அவர்ட்டெ பேசியே. அவரு நெனைச்சிருந்தா எனக்கு வேலையும் வாங்கி வைச்சு எங்கியோ கொண்டு போய் வெச்சு எப்படியோ உசத்தியிருக்கலாம். தன்னலம் புடிச்ச மனுஷன் செய்ய மாட்டார் தெரியும். நான் வாழ்றதே புடிக்காத மனுஷன். நீ இல்லென்னா நான் இருந்த எடத்ல புல்லுல்ல மொளைச்சிருக்கும்? ஆங்காரம் புடிச்ச அயோக்யன்....”



“அப்பாவெ நீ என்னைக்கி அப்பாவா நெனச்சிருக்கே? நீதான் இருக்கியே அப்பா பொண்ணா நான் இல்லெங்கறியே நான் அப்பா பொண்ணு மட்டுமில்ல உனக்கும் தங்கச்சிதான். அதான் கேக்கிறேன் ஒரு கல்யாணம் பண்ணி வெய்யின்னு.. ஏண்ணே இப்படி அப்பாவெ ஒதுக்கி வெக்கிறீங்க? உங்களுக்கெல்லாம் என்ன செய்யல்லெ அவரு? உங்களுக்கு எடையில நான் ஏண்ணே இப்டி அவதிப்படணும்? வீட்டுக்கு வரமாட்டெ.. பத்து வருஷமாச்சு.. ஒனக்கு ஒரு வீடே கட்டி வெச்சிருக்காங்க அப்பா...”



“ஏய் சும்மா அப்பனெப் பத்தி பேசாதே எனக்காக வீடு கட்டியிருக்கான் ராஸ்க்கல் உயிலெப் பாத்தேன். செத்தாக் கூட நான் எடுத்து விக்ய முடியாது தெரியும்ல்ல?”



“நீ விக்யறதிலியும் சுட்டு எரிக்கிறதிலியுமே இரு... பதினைஞ்சு வருஷமா நீ எம்மெஸ்ஸி பாஸ் போனதிலிருந்தே நீ என்னதாண்ணே பண்ணீட்டிருக்கியாம்? இந்த கஞ்சா அடிக்கறிதெத் தவிர தெனம் தெனம் ராத்ரி வந்து செலவுக்குப் பணம் வாங்கிட்டுப் போறியே அதெல்லாம் மட்டும் அப்பாவுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறியா? இல்லெ ரொம்ப ஞாயம்ங்கிறியா?”



“அவனுக்குத் தெரிஞ்சா எனக்கென்ன தெரியாட்டி எனக்கென்னடீ. எனக்கு வேணும்ங்கும்போது வருவேன். இப்ப எனக்கும் ஒருத்தன் பொண்ணு தர்றேங்கிறான். பண்ணி வெக்யச் சொல்லு அவ்வளவுதான்.”



“முடியாது”



“ஏம் முடியாதுங்கிறே”



”என்னால முடியாது நீயே போயி கேளு”



“ஓஹா சின்னத்தெ சொன்னது சரிதான். உன்னெ வெச்சிட்டிருக்க வரைக்கும் நாங்க தெருவுலதான் நிக்கணும். வர்றேன் ஒரு நாளைக்கி உங்கப்பனெ கண்டமாவெட்டி....”



அவன் வாயிலிருந்து அசிங்கங்களாய்ப் புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது. வழக்கம்தான் இதுவும். மேபல் நடந்தாள். இவுங்க யாரும் மாறமாட்டாங்க. ஏன் மாறணுமாம் இடையில நீ இருக்க வரைக்கும்.. இடையில இருந்தது இருக்கிறது எல்லாம் அவள். மேபல்தானே.. ஒருத்தன் அண்ணன்... ஒருத்தன் ஆசைப்பட்டவன்... ஒருத்தன்... அப்பன் ஜீஸஸ்.... இது என்ன சிலுவை இது எனக்கு ஏன், கண்ணீர் வழிய மேட்டுத்தெருவில் திரும்பினாள் மேபல். அவளுக்கும் தெரியும் இதெல்லாம் இப்படியே.. இப்படியே...



வாசலில் ஜீப் நின்றிருந்தது... ஆடர்லிகள் நின்று கொண்டிருந்தார்கள்.. ரெண்டு வேலைக்காரர்கள் துப்பாக்கிகளைத் துடைத்து க்ளீன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து சின்னத்தை தாளிக்கும் மணம் வீடு முழுவதும் கமழ்ந்தது. சின்னத்தை இருக்கிற வரைக்கும்... எதுவும்.. மாறாமல் எப்படியோ ரூபன் அவனும் அப்படியே. ப்ரெடி... அவனும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா.. வாம்மா வேட்டைக்கிப் பெறப்பட்டுகிட்டு இருக்கேன்! வர்றியா நீயும்...? போலாம்ப்பா அதுதான் சரி... வேட்டை மனுஷனுக்கும் மிருகத்துக்கும் பேதமில்லாத காடு வேதாரண்யம் காடு... சிங்கம் புலியெல்லாம் கிடையாது. ஆடு மான் முயல் காட்டுப் பன்றி கடுவா எல்லாம் உண்டு.... ஒண்ணை ஒண்ணு சாப்டும் ஆளு மனுஷனைக் கண்டா பதுங்கும். ஒளியும். பயம். பறவைக் கூட்டம் கொளம் குட்டை எல்லாம் உண்டு. மேடுகள் புகையிலைச் செடிகள் வளர்ந்து புதர்புதராய் சிட்டுக்கள் வலியன் குருவிகள் இடையில் கழுகுகள் செத்த மிருகங்களைத் தின்னும் நரிகள்.



ஜீப் பறந்து கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் செம்மண் மேடுகள் கள்ளிக் குப்பல்கள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாய் நனைப்பது போலிருந்தது மேபலுக்கு. முகத்தைத் துடைத்துக் கொள்ள முயன்றபோது கண்ணீரேயில்லை. அழுவது நன்றாய்ப் புரிந்தது. அவளுக்கு விம்மவேயில்லை. குரலே எழும்பவில்லை. கண்களிலிருந்து எதுவும் வடியவில்லை. அழுகை இல்லை. கண்ணீரில்லை. பக்கத்தில் அப்பாதான் ஜீப் ஓட்டினார். வேட்டை ஒன்றுதான் குறி. கடம்பைமான்கள் நான்காவது சுட்டுத் தள்ள வேண்டும். விடமாட்டார். மேபலுக்கும் அதே பரபரப்பு. எங்காவது மானின் கண்கள் தெரிகிறதா. உச்சிவேளை கடந்தும் ஜீப் காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டேயிருந்தது.



மேபல் கதறியழ முனைந்து பார்க்கிறாள். இனி அது முடியாது. கோவிலில் கூட முடியாதுதான். எப்போதும் இனி அப்பாவுடன் வேட்டைதான். இருட்டும் போது மிருகங்கள் வரும் எங்கும் பயம் பதிவிருக்கிறது. அப்பாவுடன் இருக்கும் வரை எந்த மிருகமும் வராது. முடியாது. மேபல் தப்ப முடியாது. அவள் இனி எங்கும் பறந்து போக முடியாது.



அப்பா இருக்கும் வரை மட்டுமல்ல அப்பாவுக்கு அப்புறமும். மேபலுக்கு மேபல் மட்டும் போதும்!



-கணையாழி, ஜனவரி 1988



G.Nagarajan.

ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 6:48 AM
வகை: கட்டுரை, சி. மோகன், ஜி. நாகராஜன்

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.



அனைவருக்கும் வணக்கம்.



என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.



எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.



இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.



க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



ஜி. நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.



தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.



பூக்களில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர்.



நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.



ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து ஒரு காட்சி:



அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’



ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.



எ ன் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.



ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.



1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.



மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.



மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.



***



நன்றி: குமுதம் தீராநதி

R.V.R.rajendiran Kavithaigal.

29

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

Sujatha.


February 25, 2009









சுஜாதா இல்லாமல் ஓராண்டு



தோற்றம் - மே 3, 1935 - - - - மறைவு - பெப்ரவரி 27, 2008





நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது

நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது



(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).







சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற போக்கில் 200 கதைகளும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை வாசித்தபோது இவர்கள் மாமரத்தின் பயன் என்ன என்று கேட்டால் கீழிருந்து சீட்டாடலாம் என்று எழுதுவார்களோ என்று தோன்றியது. சுஜாதாவிற்கு விஞ்ஞானி, ஓவியர், முகாமையாளர், இசைவல்லுனர், திரைப்பட வசனகர்த்தா, திரைக்கதையமைப்பாளர் என்று பல முகங்கள் இருந்தாலும் அவரது அடையாளம் அவரது எழுத்தும் இலக்கியப்பணிகளுமே.



இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கலைஞர் முதல் … என்று எழுதிய காரணம் தற்போது எழுது கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக நீண்டகாலமாக எழுதிக் கொண்டிருப்பவர் கலைஞர் என்பதும் எழுத்துப் பயணத்தில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத்தாளர்கள் என்பதுமேயாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இப்படி முதிர்ந்த, முதிர்ந்து வருகின்ற, முதிர போகின்ற பல தரப்பட்ட எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்த சுஜாதா, அதே சமயத்தில் அவர்களாலும் கவரப்பட்டு, அவ்விதம் தன்னை கவர்ந்த ஆக்கங்களை பரப்புகின்ற ஒரு இலக்கிய பிரச்சாரகராகவும் விளங்கியிருக்கிறார் என்பதேயாகும்.







புதிய அல்லது இளைய வாசகர்களை பொறுத்தவரை சுஜாதா ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி, நல்ல எழுத்துக்களை அறிமுகம் செய்து வைக்கின்ற ஒரு நண்பராக எடுத்த பங்கு மிக முக்கியமானது. என்னுடைய சொந்த அனுபவத்தில் சல்மா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கி.ரா, சாரு நிவேதிதா, மகுடேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை கூட சுஜாதா இல்லாவிட்டால் நான் தெரிந்துகொண்டிருக்கமாட்டேன். சுஜாதாவை வாசிக்க முன்பாக என்னுடைய இலக்கிய உலகம் என்பது தமிழ்வாணன், சிவசங்கரி, பாலகுமாரன் என்ற அளவில்தான் இருந்தது





திரைப்பட பாடல்களில்கூட வைரமுத்து பாடல்கள் புனைவது குறைந்த 2000களின் பின்னர் ஒரு வெறுமையை நான் உணர தொடங்கியிருந்த காலப்பகுதியில் அவர் காதல் திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதியிருந்த “ஒரு குழந்தை என நான் நினைத்திருந்தேன்; உன் கண்களிலே என் வயதறிந்தேன்” என்கிற வரிகளை சிலாகித்து எழுதியிருந்தார். பிற்பட்ட காலத்தில் நா. முத்துக்குமார் உண்மையாகவே மருதகாசி – கண்ணதாசன் – வைரமுத்து என்று தொடர்ந்த பாடலாசிரியர்கள் வரிசையிலே தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டார். (கவிஞர் வாலி பற்றி இங்கே குறிப்பிடவில்லை காரணம், கண்ணதாசனுக்கு சமகாலத்தவரான வாலி கண்ணதாசனுக்கு எதிர்கடை விரித்ததை போல வைரமுத்துவிற்கும் போட்டியாளராகவே திகழ்ந்தார். இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியது வெறும் 4 ஆண்டுகள் தான், ஆனால் இப்போதும் கூட இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்ற எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றார்கள்) அதேபோல யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மனதை திருடி விட்டாய் திரைப்படத்தில் வருகின்ற மஞ்சக் காட்டு மைனா… என்ற பாடலையும் வெடுவாக சிலாகித்து எழுதியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே யுவனும் ராம், காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி என்று இசையுலகின் உச்சத்தை எட்டினார்.

இவற்றிற்கெல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பாக கணையாழி இதழில் கமலஹாசன் பற்றி எழுதியபோது “தமிழின் நவ சினிமாவுக்கான எதிர்காலத்தை இந்த இளைஞரிடம் பார்க்கிறேன். இப்பாது அவருக்கு வயது 24” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோஜா திரைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் “குழந்தை முகம் கொண்ட இந்த இளைஞரிடம் அபார இசை ஞானம் இருக்கின்றது. He will go for places” என்று ஏ. ஆர். ரஹ்மான் பற்றி கூறியிருந்தார். சுஜாதா பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல அவருக்கு நல்ல கவிதைகளை (கவிதை என்று மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டிருந்தார், என்னை பொறுத்தளவில் எந்த ஒரு விடயத்திலும்) இனம் காணுகின்ற விசேஷமான மோப்ப சக்தி ஒன்று இருந்திருக்கவேண்டும்.







சுஜாதா என்றவுடன் குறும்பு கொப்பளிக்கின்ற அந்த வசன நடையையும் இளமையையும் அடுத்து ஞாபகம் நிற்பது மரபுகளை உடைத்தது. இன்று மிகப் பிரபலமாகியுள்ள பத்தி எழுத்தினை (Column writing / blogging) அறிமுகப்படுத்தியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் கூட சுஜாதாதான். என்ன இவர் டைரி எழுதுவது போல எழுதிகிறாரே, இதையெல்லாம் கூட பிரசுரிக்கின்றார்களே என்று விசனப்பட்டவர்கள் கூட இருக்கின்றார்கள். சுஜாதாவின் வண்ணான் கணக்கைகூட பிரசுரிக்ககூடிய வணிகப் பத்திரிகைகள் என்ற விமர்சனம் எழுந்தபோது சாவி உண்மையாகவே சுஜாதாவின் வண்ணான் கணக்கை வாங்கி பிரசுரித்தார் என்றும் சொல்வார்கள். சொல்லப்போனால், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றது பெற்றதும் போன்றனவே இன்றைய பத்தியெழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் மட்டுமல்ல முன் மாதிரிகளும் கூட.







அறிவியல் ரீதியான பார்வை கொண்ட சுஜாதா தமிழ் மொழி பற்றி தமிழர்களிடம் நிலவுகின்ற முட்டாள்தனமான சில கொள்கைகளை கேலி செய்தார். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது, முதல் மனிதன் பேசியது தமிழ் போன்ற கற்பிதங்கள் தமிழ் மொழிக்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்று டாப் 10 துரோகங்களில் பட்டியல் படுத்தினார். அளவுக்கு அதிகமாகப் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எந்த விடயத்தையும் மிகைப்படுத்திச்சொல்லுவது போன்ற தமிழர்களின் கல்யாண குணங்களையும் பலமுறை விமர்சனம் செய்தார். (எந்த விடயத்தையும் மிகைப்படுத்தும் பழக்கம் தமிழர்களிடம் கலிங்கத்துப் பரணி காலம் தொட்டு நிலவுகின்றது. அரங்கம் நிறைந்த கூட்டம் என்றால் மைக் செட் காரரையும் சேர்த்து ப்தினொரு பேர் என்று அர்த்தம்). இந்த குணங்களை சிலர் திரிவுபடுத்தி சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி எழுதுகிறார் என்றும் அவர் தமிழ் மொழிக்கு எதிரானவர் என்றும் சொன்னது உண்டு. சுஜாதாவின் பாணியில் சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். என்னை பொறுத்தவரை சுஜாதாவை ஜாதி ரீதியாக பிரிப்பது காற்றுக்கும் நீருக்கும் ஜாதி சொல்வது போன்றது.







ஏராளமான ஈழத்தமிழ் வாசகர்களை கொண்டிருந்தவர் சுஜாதா. அதே சமயம் ஈழத்து எழுத்துக்களை அவர் வெகுவாக நேசித்தும் இருக்கின்றார். மஹாகவி, ஜெயபாலன் ஆகியோரின் கவிதைகளை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டியும் வந்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அவர் எழுதிய “ஒரு லட்சம் புத்தகங்கள்” தமிழ் மக்களின் கண்ணீருக்கு சாட்சியாக காலமெல்லாம் இருக்கப்போகும் ஒரு படைப்பு. அதேபோல தமது சுய லாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை பலர் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய கொலை அரங்கம் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு குறுநாவல். (83ல் எழுதப்பட்ட இக்கதையில் வருகின்ற உத்தம் போன்ற கதாபாத்திரங்களை இப்போதும் கூட காணலாம்). சுஜாதா பங்கேற்ற “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காட்டமான விமர்சனம் பலரிடம் உண்டு. உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற மிகுந்த சென்சிட்டிவ் ஆன பிரச்சனைகளை பதிவு செய்வதில் நடைமுறையிலும் சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களாலும் மிகுந்த தடைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.





தனது ஆரம்பகால எழுத்துக்களில் மிக தீவிரமாகவும் வலுவாகவும் தனது கருத்துக்களை சொன்ன சுஜாதா தனது பிற்காலத்தில் தனது விமர்சனங்களை சற்று மென்மைப் படுத்திக்கொண்டார். இதைப்பற்றி கேட்டபோது நான் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இதைப்போன்ற இக்கட்டான தருணங்களை நடைமுறையில் நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம்.

சுஜாதா எல்லாவற்றையும் பற்றி எழுதுவார் ஆனால் எந்தப்பக்கமும் சார்பாகவும் எழுதமாட்டார் என்று அவர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஒரு பாராட்டாகவும் கருதலாம். இதைப்பற்றி ஒருமுறை “நாங்கள் எல்லாம் எழுதத்தொடங்கும் போது சூரியனை சுட்டெரிப்போம், பூமியை புதிதாக அமைப்போம் என்றுதான் எழுத தொடங்கினோம். ஆனால் ஒரு மண்புழுவை கூட எம்மால் மாற்றி அமைக்கமுடையாது என்று பின்னர்தான் புரிந்துகொண்டோம்” என்று கூறியிருந்தார்.





எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுஜாதா. அவருக்கு கட் அவுட்டுகள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் மத்தியில் நான், தயாபரன், குணாளன் மூவரும் தீவிர சுஜாதா ரசிகர்கள். ஒரு எட்டு வருடங்களின் முன்பாக கொழும்பில் இருந்த எனது நண்பனுடன் தொலைபேசிக்கொண்டிருந்தேன். அது மிக தீவிரமாக பாலகுமாரனை வாசித்துக்கொண்டிருந்த காலம். அப்போது என் நண்பன் கூறினான் “நீ போற போக்கில சுஜாதாவையே மறந்திடுவாய் போல இருக்கே” என்று. இல்லையடாப்பா, என்ன இருந்தாலும் அவர் தான் எங்கட குரு என்று. மின்சாரம் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணபகுதியில் எமது பொது அறிவு தேடல்களுக்கு ஒரே வடிகாலாய் இருந்தவை அவரது ஏன்? எதற்கு ? எப்படி?, தலைமைச்செயலகம், அறிவோம் சிந்திப்போம் போன்ற புத்தகங்கள் தான். அங்கே 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஏன்? எதற்கு? எப்படி? யில் படித்த குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி நானும் நண்பன் குணாளனும் பேசி பேசி ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எமக்கு பட்டப்பெயராகவும் மாறிவிட்டது. அந்நாட்களில் எல்லாம் குரு என்றுதான் சுஜாதாவை குறிப்பிடுவோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது, சுஜாதா எம்மை அணுகாது, அகலாது, குருவுமாகி நின்ற ஒரு தோழனாகத்தான் இருந்திருக்கிறார் என்று. என்ன, எனக்கும் அவருக்கும் ஆக நாற்பத்தைந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம்.

SUJATHA.




சொல்வதெல்லாம் உண்மை









May 2, 2008









பிள்ளைகள் கூடி பிதாமனுக்கு அஞ்சலி

நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது

நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது





(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).









சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற போக்கில் 200 கதைகளும் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை வாசித்தபோது இவர்கள் மாமரத்தின் பயன் என்ன என்று கேட்டால் கீழிருந்து சீட்டாடலாம் என்று எழுதுவார்களோ என்று தோன்றியது. சுஜாதாவிற்கு விஞ்ஞானி, ஓவியர், முகாமையாளர், இசைவல்லுனர், திரைப்பட வசனகர்த்தா, திரைக்கதையமைப்பாளர் என்று பல முகங்கள் இருந்தாலும் அவரது அடையாளம் அவரது எழுத்தும் இலக்கியப்பணிகளுமே.





இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கலைஞர் முதல் … என்று எழுதிய காரணம் தற்போது எழுது கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் மிக நீண்டகாலமாக எழுதிக் கொண்டிருப்பவர் கலைஞர் என்பதும் எழுத்துப் பயணத்தில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கையெழுத்துப்பிரதி எழுத்தாளர்கள் என்பதுமேயாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் இப்படி முதிர்ந்த, முதிர்ந்து வருகின்ற, முதிர போகின்ற பல தரப்பட்ட எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்த சுஜாதா, அதே சமயத்தில் அவர்களாலும் கவரப்பட்டு, அவ்விதம் தன்னை கவர்ந்த ஆக்கங்களை பரப்புகின்ற ஒரு இலக்கிய பிரச்சாரகராகவும் விளங்கியிருக்கிறார் என்பதேயாகும்.





புதிய அல்லது இளைய வாசகர்களை பொறுத்தவரை சுஜாதா ஒரு எழுத்தாளர் என்பதையும் தாண்டி, நல்ல எழுத்துக்களை அறிமுகம் செய்து வைக்கின்ற ஒரு நண்பராக எடுத்த பங்கு மிக முக்கியமானது. என்னுடைய சொந்த அனுபவத்தில் சல்மா, மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், கி.ரா, சாரு நிவேதிதா, மகுடேஸ்வரன் போன்றவர்களின் பெயர்களை கூட சுஜாதா இல்லாவிட்டால் நான் தெரிந்துகொண்டிருக்கமாட்டேன். சுஜாதாவை வாசிக்க முன்பாக என்னுடைய இலக்கிய உலகம் என்பது தமிழ்வாணன், சிவசங்கரி, பாலகுமாரன் என்ற அளவில்தான் இருந்தது.





திரைப்பட பாடல்களில்கூட வைரமுத்து பாடல்கள் புனைவது குறைந்த 2000களின் பின்னர் ஒரு வெறுமையை நான் உணர தொடங்கியிருந்த காலப்பகுதியில் அவர் காதல் திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதியிருந்த “ஒரு குழந்தை என நான் நினைத்திருந்தேன்; உன் கண்களிலே என் வயதறிந்தேன்” என்கிற வரிகளை சிலாகித்து எழுதியிருந்தார். பிற்பட்ட காலத்தில் நா. முத்துக்குமார் உண்மையாகவே மருதகாசி – கண்ணதாசன் – வைரமுத்து என்று தொடர்ந்த பாடலாசிரியர்கள் வரிசையிலே தன்னை பலமாக நிலை நிறுத்திக்கொண்டார். (கவிஞர் வாலி பற்றி இங்கே குறிப்பிடவில்லை காரணம், கண்ணதாசனுக்கு சமகாலத்தவரான வாலி கண்ணதாசனுக்கு எதிர்கடை விரித்ததை போல வைரமுத்துவிற்கும் போட்டியாளராகவே திகழ்ந்தார். இளையராஜா வைரமுத்துவுடன் இணைந்து பணியாற்றியது வெறும் 4 ஆண்டுகள் தான், ஆனால் இப்போதும் கூட இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற எத்தனையோ ரசிகர்கள் இருக்கின்றார்கள்)





அதேபோல யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மனதை திருடி விட்டாய் திரைப்படத்தில் வருகின்ற மஞ்சக் காட்டு மைனா… என்ற பாடலையும் வெடுவாக சிலாகித்து எழுதியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே யுவனும் ராம், காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலணி என்று இசையுலகின் உச்சத்தை எட்டினார். இவற்றிற்கெல்லாம் மிக நீண்ட காலத்திற்கு முன்பாக கணையாழி இதழில் கமலஹாசன் பற்றி எழுதியபோது “தமிழின் நவ சினிமாவுக்கான எதிர்காலத்தை இந்த இளைஞரிடம் பார்க்கிறேன். இப்பாது அவருக்கு வயது 24” என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல ரோஜா திரைப்படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் “குழந்தை முகம் கொண்ட இந்த இளைஞரிடம் அபார இசை ஞானம் இருக்கின்றது. He will go for places” என்று ஏ. ஆர். ரஹ்மான் பற்றி கூறியிருந்தார். சுஜாதா பற்றிய நினைவுக் கட்டுரை ஒன்றில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டது போல அவருக்கு நல்ல கவிதைகளை (கவிதை என்று மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்டிருந்தார், என்னை பொறுத்தளவில் எந்த ஒரு விடயத்திலும்) இனம் காணுகின்ற விசேஷமான மோப்ப சக்தி ஒன்று இருந்திருக்கவேண்டும்.





சுஜாதா என்றவுடன் குறும்பு கொப்பளிக்கின்ற அந்த வசன நடையையும் இளமையையும் அடுத்து ஞாபகம் நிற்பது மரபுகளை உடைத்தது. இன்று மிகப் பிரபலமாகியுள்ள பத்தி எழுத்தினை (Column writing / blogging) அறிமுகப்படுத்தியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் கூட சுஜாதாதான். என்ன இவர் டைரி எழுதுவது போல எழுதிகிறாரே, இதையெல்லாம் கூட பிரசுரிக்கின்றார்களே என்று விசனப்பட்டவர்கள் கூட இருக்கின்றார்கள். சுஜாதாவின் வண்ணான் கணக்கைகூட பிரசுரிக்ககூடிய வணிகப்பத்திரிகைகள் என்ற விமர்சனம் எழுந்தபோது சாவி உண்மையாகவே சுஜாதாவின் வண்ணான் கணக்கை வாங்கி பிரசுரித்தார் என்றும் சொல்வார்கள். சொல்லப்போனால், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றது பெற்றதும் போன்றனவே இன்றைய பத்தியெழுத்துக்களுக்கெல்லாம் முன்னோடிகள் மட்டுமல்ல முன்மாதிரிகளும் கூட.





அறிவியல் ரீதியான பார்வை கொண்ட சுஜாதா தமிழ் மொழி பற்றி தமிழர்களிடம் நிலவுகின்ற முட்டாள்தனமான சில கொள்கைகளை கேலி செய்தார். கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தமிழ் தோன்றியது, முதல் மனிதன் பேசியது தமிழ் போன்ற கற்பிதங்கள் தமிழ் மொழிக்கு செய்யப்பட்ட துரோகங்கள் என்று டாப் 10 துரோகங்களில் பட்டியல் படுத்தினார். அளவுக்கு அதிகமாகப் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எந்த விடயத்தையும் மிகைப்படுத்திச்சொல்லுவது போன்ற தமிழர்களின் கல்யாண குணங்களையும் பலமுறை விமர்சனம் செய்தார். (எந்த விடயத்தையும் மிகைப்படுத்தும் பழக்கம் தமிழர்களிடம் கலிங்கத்துப் பரணி காலம் தொட்டு நிலவுகின்றது. அரங்கம் நிறைந்த கூட்டம் என்றால் மைக் செட் காரரையும் சேர்த்து ப்தினொரு பேர் என்று அர்த்தம்). இந்த குணங்களை சிலர் திரிவுபடுத்தி சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இப்படி எழுதுகிறார் என்றும் அவர் தமிழ் மொழிக்கு எதிரானவர் என்றும் சொன்னது உண்டு. சுஜாதாவின் பாணியில் சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். என்னை பொறுத்தவரை சுஜாதாவை ஜாதி ரீதியாக பிரிப்பது காற்றுக்கும் நீருக்கும் ஜாதி சொல்வது போன்றது.





ஏராளமான ஈழத்தமிழ் வாசகர்களை கொண்டிருந்தவர் சுஜாதா. அதே சமயம் ஈழத்து எழுத்துக்களை அவர் வெகுவாக நேசித்தும் இருக்கின்றார். மஹாகவி, ஜெயபாலன் ஆகியோரின் கவிதைகளை அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டியும் வந்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அவர் எழுதிய “ஒரு லட்சம் புத்தகங்கள்” தமிழ் மக்களின் கண்ணீருக்கு சாட்சியாக காலமெல்லாம் இருக்கப்போகும் ஒரு படைப்பு. அதேபோல தமது சுயலாபங்களுக்காக ஈழத்தமிழர் பிரச்சனையை பலர் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய கொலை அரங்கம் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு குறுநாவல். (83ல் எழுதப்பட்ட இக்கதையில் வருகின்ற உத்தம் போன்ற கதாபாத்திரங்களை இப்போதும் கூட காணலாம்). சுஜாதா பங்கேற்ற “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்ற காட்டமான விமர்சனம் பலரிடம் உண்டு. உண்மையில் ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற மிகுந்த சென்சிட்டிவ் ஆன பிரச்சனைகளை பதிவு செய்வதில் நடைமுறையிலும் சில தவிர்க்க முடியாத அரசியல் காரணங்களாலும் மிகுந்த தடைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.





தனது ஆரம்பகால எழுத்துக்களில் மிக தீவிரமாகவும் வலுவாகவும் தனது கருத்துக்களை சொன்ன சுஜாதா தனது பிற்காலத்தில் தனது விமர்சனங்களை சற்று மென்மைப்படுத்திக்கொண்டார். இதைப்பற்றி கேட்டபோது நான் நண்பர்களை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தாராம். இதைப்போன்ற இக்கட்டான தருணங்களை நடைமுறையில் நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம். சுஜாதா எல்லாவற்றையும் பற்றி எழுதுவார் ஆனால் எந்தப்பக்கமும் சார்பாகவும் எழுதமாட்டார் என்று அவர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஒரு பாராட்டாகவும் கருதலாம். இதைப்பற்றி ஒருமுறை “நாங்கள் எல்லாம் எழுதத்தொடங்கும் போது சூரியனை சுட்டெரிப்போம், பூமியை புதிதாக அமைப்போம் என்றுதான் எழுத தொடங்கினோம். ஆனால் ஒரு மண்புழுவை கூட எம்மால் மாற்றி அமைக்கமுடையாது என்று பின்னர்தான் புரிந்துகொண்டோம்” என்று கூறியிருந்தார்.





எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் சுஜாதா. அவருக்கு கட் அவுட்டுகள் கூட வைக்கப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் மத்தியில் நான், தயாபரன், குணாளன் மூவரும் தீவிர சுஜாதா ரசிகர்கள். ஒரு எட்டு வருடங்களின் முன்பாக கொழும்பில் இருந்த எனது நண்பனுடன் தொலைபேசிக்கொண்டிருந்தேன். அது மிக தீவிரமாக பாலகுமாரனை வாசித்துக்கொண்டிருந்த காலம். அப்போது என் நண்பன் கூறினான் “நீ போற போக்கில சுஜாதாவையே மறந்திடுவாய் போல இருக்கே” என்று. இல்லையடாப்பா, என்ன இருந்தாலும் அவர் தான் எங்கட குரு என்று. மின்சாரம் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணபகுதியில் எமது பொது அறிவு தேடல்களுக்கு ஒரே வடிகாலாய் இருந்தவை அவரது ஏன்? எதற்கு ? எப்படி?, தலைமைச்செயலகம், அறிவோம் சிந்திப்போம் போன்ற புத்தகங்கள் தான். அங்கே 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஏன்? எதற்கு? எப்படி? யில் படித்த குவாண்டம் மெகானிக்ஸ் பற்றி நானும் நண்பன் குணாளனும் பேசி பேசி ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே எமக்கு பட்டப்பெயராகவும் மாறிவிட்டது. அந்நாட்களில் எல்லாம் குரு என்றுதான் சுஜாதாவை குறிப்பிடுவோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது, சுஜாதா எம்மை அணுகாது, அகலாது, குருவுமாகி நின்ற ஒரு தோழனாகத்தான் இருந்திருக்கிறார் என்று. என்ன, எனக்கும் அவருக்கும் ஆக நாற்பத்தைந்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவரது இழப்புதான் நான் முதன் முதல் உணர்ந்த தோழனின் மரணம்.





Posted by அருண்மொழிவர்மன் at 08:22


Gnani..!

November 3, 2008










ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்



அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.



ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர் பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.









அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.







தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????





முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)

சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்படாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா





Balakumaran.




சொல்வதெல்லாம் உண்மை









October 8, 2008









தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள்.



பாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். இக்காலகட்டத்தில் திரையுலகினாலும் அதில் கிடைக்கும் ஒரு விதமான புகழினாலும் தான் கவரப்பட்டதாக கூறியிருக்கிறார் பாலகுமாரன். பாக்கியராஜ் முந்தானை முடிச்சு திரைப்பட கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அக்காலத்தில் பாலகுமாரனும் கலந்து கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் கதைகளை படித்த எவருமே அவர் கதையை கொண்டு செல்லும் விதத்தையும், காட்சிகளை கோர்த்து கதையை கொண்டு செய்வதில் இருக்கும் கட்டுமானத்தையும் ரசித்தேயிருப்பார்கள். இந்த கதை விவாதங்களின் போது பாக்கியராஜும் பாலகுமாரனை திரையுலகுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். இதன்பிறகு முந்தானை முடிச்சு படத்தின் ப்ரீவியூ பார்த்தபோது அப்படத்தில் பாக்யராஜுடன் இணிந்து பணியாற்றவில்லையே என்று தான் வருந்தியதாகவும் பாலகுமாரன் கூறியிருக்கிறார். பாலகுமாரன் தான் அக்காலத்தில் புகழ் மீது பெரும் போதை கொண்டிருந்ததாக பலமுறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் போஸ்டர்களை பார்த்து அப்படி தனது போஸ்டர்களும் வரவேண்டும் என்று ஏங்கியதாகவும் சினிமாவின் ஜிகினா வெளிச்சம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும் ஓரிருமுறை எழுதியிருக்கிறார். காலச்சுசுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் புத்தக பதிப்பில் ஈடுபட முதல் வானதி, விசா (திருமகள்), பாரதி பதிப்பகம் போன்றவை புத்தகங்கள் வெளியிடும்போது பெரும் எழுத்தில் புத்தகத்தின் பெயரும் சிறிய எழுத்தில் எழுத்தாளரின் பெயரும் இருக்கும். இந்நிலையை மாற்றியது சுஜாதா, பின்னர் இது பாலகுமாரனுக்கும் தொடர்ந்தது.



இதன்பிறகு கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் பாலகுமாரன். “புகழுக்காக சினிமாவுக்கு வாரதீங்க பாலா, அந்த புகழ் உங்களுக்கு இப்பவே இருக்கு. உங்கட புத்தக வெளியீட்டு விழாவில (இரும்பு குதிரைகள்) வைரமுத்து உங்கள புகழ்ந்ததே இதுக்கு உதாரணம். அத தாண்டி வரணும்ணு நினச்சா இப்படி அட்வைஸ் கேக்காதீங்க,” என்று கமல் கூற அதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான சாருஹாசன், சுஹாசினி, அனந்து, சிவகுமார் என்று அனைவரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். பலதரப்பட்ட கருத்துகளால் அவர் குழம்பிபோயிருந்த நேரத்தில் சாருஹாசன் ஏற்பாடு செய்த seven samurai (Akira Kurasawa -1954) என்ற திரைப்படத்தை பார்த்து தான் திரைப்பட உலகின் நுழைய துடிப்பதற்கு தனக்குள் இருக்கும் போர்க்குணமும் காரணம் என்று தெளிந்து சினிமாவில் நுழைவதாக தீர்மானம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதனை தொடர்ந்து 1984/85ல் தான் பார்த்து வந்த ட்ராக்டர் கம்பனி வேலையை உதறிவிட்டு சினிமாவில் முழுநேரமாக நுழைகிறார்.



இது கூட அவரது ரசிகர்கள் / வாசகர்கள் உணர்ந்ததுதான். பாலகுமாரன் பிரபலமாக முன்னர் நடந்த நிகழ்வு இது. ஒரு இலக்கிய ஒன்று கூடலில் சுஜாதா பேசுகிறார், பாலகுமாரனும் சுப்ரமணிய ராஜுவும் (பாலகுமாரனின் மிக நெருங்கிய நண்பர். சிறந்த எழுத்தாளர். 1985 காலப்பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார். அவரை பற்றி “தாக்கம்” என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்) கலந்து கொள்ளுகிறார்கள். அப்போது சுஜாதாவை இடைமறித்து தகராறும், வாக்குவாதமும் செய்து அதனால் வெளியேற்றப்படுகிறார் பாலகுமாரன். இவருடன் சென்ற சுப்ரமணிய ராஜு உள்ளே நின்றுவிட, தான் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளராக தானும் வருவேன் என்று சபதம் செய்ததாகவும் கூறுகிறார் பாலா. இதனை தொடர்ந்து K. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சிந்து பைரவியில் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.



உதவி இயக்குனராக :

அடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் திரைத்துறையில் நுழைந்தபோது ஒரு டைரக்டராக வேண்டும் என்றுதான் நுழைந்தார். திரைத்துறையில் நுழைவதன் மூலம் புகழும் பிரபலமும் பெறுவது, தன்னை ஒரு சாதனையாளனாக நிலைநிறுத்துவது என்று நுழைந்த பாலகுமாரனை பொறுத்தவரை இது மிகப் பொருத்தமான முடிவுதான். தமிழ் சினிமாவில் கதாசிரியர் புகழ்பெறுவது என்பது மிகவும் கடினமானது. சுஜாதா கூட ஒருமுறை தமிழ்சினிமாவை பொறுத்தவரை கதாசிரியரின் வேலை “நொட் (முடிச்சு)” என்பதுடன் முடிந்துவிடுகிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஒரு நேர்முகத்தில் பாலகுமாரனிடம் அவரது மெர்க்குரிப் பூக்களை திரைப்படமாக்க முயற்சித்தபோது அவர் மறுத்ததாக வந்த செய்தி உண்மையா என்று கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சாவித்திரியின் காதலை, மற்ற கதாபாத்திரங்களை எவர் சரியாக திரையாக்கப்போகிறார்கள், அவர்களின் துடிப்பை யார் வெளிக்காட்டப்போகிறார்கள் என்பதாலேயே தான் மறுத்ததாக அவர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.



இவர் சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனகளு (கன்னடம்) முதலிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.





இயக்குனராக பணியாற்றிய படங்கள் :

ஒரு இயக்குனராகும் எண்ணத்துடன்தான் பாலசந்தரிடம் சேர்ந்து உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் அப்படியான ஒரு வாய்ப்புன் வந்தது. K பாக்கியராஜ் – ஷோபனா நடிக்க பாக்கியராஜ் இசையமைத்து 88/89ல் வெளியான படம் இது நம்ம ஆளு. பெரு வெற்றி பெற்ற படம். இத்திரைப்படத்தை பார்த்தால் டைரக்க்ஷன் – பாலகுமாரன் என்ற டைட்டிலை காணலாம். படம் வெளியான பின்னர் பிராமணர்கள் உட்பட சாதிய ரீதியான கடும் எதிர்ப்பை சந்தித்த படம் இது. அப்போது எல்லாம் பாலகுமாரனின் பெயர் ஒரு கேடயம் போல பயன்பட்டது. ஆனால் பாக்கியராஜ் தரப்பில் இருந்து பாக்கியராஜே படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டு படத்தின் பெருவெற்றியும் பாக்கியராஜின் திறனாகவே கருதப்பட்டது. இதனை தொடர்ந்து ராசுக்குட்டி என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாக்கியராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாலகுமாரன் உதவியாளராக பணிபுரிந்ததாகவும் ஆனால் அவரால் ஒரு சிறு காட்சியை கூட விவரிக்க முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கபட்ட பாலகுமாரன் தான் இனிமேல் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமே பணிபுரிவேன் என்றும் அறிவித்தார்.



நடிகராக :

ஒரு நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு போதும் இருந்ததாக தெரியாத போதும், புகழ் மீதான அவரது வேகம் அவர் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியதற்கு காரணமாக இருக்கலாம்.



இவரது நண்பர் வசந்த் முதன்முதலாக இயக்குனரானபோது கேளாடி கண்மணி திரைப்படத்தில் ஒரு ஆசிரம நிர்வாகியாகவும் (திரையில் கடைசி 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சி. தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கும்), இவரது பெரும் வாசகர்களான ஜேடி- ஜெர்ரி முதன் முதலில் இயக்கிய உல்லாசம் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராகவும் திரையில் தோன்றினார். அது போல மென்மையான படங்களை மட்டும் இயக்கிவந்த விக்கிரமன் முதன் முதலில் தனது பாணியை விட்டு விலகி புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தை அரசியல் பிண்ணனியில் இயக்கியபோது மாணவர்கள் அரசியலுக்கு வருவது போல வருகின்ற காட்சிகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி வந்தபோது பாலகுமாரன் உட்பட சில பிரபலங்கள் திரையில் தோன்றி தமது கருத்தை கூறுவது போல படமாக்கியிருப்பார். மேலும் முன்னர் குறிப்பிட்ட இது நம்ம ஆளு திரைப்படத்தில் கூட ஒரு றெஸ்டாரண்ட் மனேஜராகவும் நடித்திருந்தார்.





வசனகர்த்தா:

திரையுலகை பொறுத்தவரை பாலகுமாரன் பெரு வெற்றிபெற்றது ஒரு வசனகர்த்தாவாகத்தான். திரைப்படங்களை பொறுத்தவரை வசனகர்த்தாவின் பங்கென்ன என்று ஒரு முறை கேட்டபோது வசனம் எழுதுவதுடன் சில காட்சிகளை அமைக்கவும் அதாவது கதையை கொண்டு செல்ல உதவுவது என்றும் கூறினார். உண்மையிலேயே அவரது பெரும் பலமான கதைஜ்களை இறுக்கமாக கட்டியமைஇகும் திறன் இயக்குனர்களுக்கு பெரும் துணைதான். இவர் பணியாற்றிய படங்களே அதற்கு சாட்சி. அதிலும் ஷங்கர் தனது படங்களுக்கு இவரையும் சுஜாதாவையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது படங்களை மெருகேற்றி கொண்டது கவனிக்கதக்கது. அது போல பல இயக்குனர்கள் இவருடன் கைகொடுத்து அருமையான படங்களை தந்துள்ளனர். அவற்றின் முழு விபரம்

நாயகன் - (மணிரத்னம்)

குணா - (சந்தானபாரதி)

செண்பகத்தோட்டம்

மாதங்கள் ஏழு - (யூகி சேது)

கிழக்கு மலை (

ஜெண்டில்மேன்,காதலன், ஜீன்ஸ் - (ஷங்கர்)

பாட்ஷா - (சுரேஷ் கிருஷ்னா)

ரகசிய போலீஸ் - (சரத் குமார் நடித்தது)

சிவசக்தி - (சுரேஷ்கிருஷ்ணா)

வேலை - ( சுரேஷ் )

முகவரி, காதல் சடுகுடு - (துரை)

சிட்டிசன் - (சரவண சுப்பையா)

உல்லாசம் ( ஜேடி – ஜெர்ரி)

உயிரிலே கலந்தது (ஜெயா)

கிங் – (சாலமன்)

மன்மதன், வல்லவன் – (சிலம்பரசன்)

கலாபக் காதலன் – (இகோர்)

புதுப்பேட்டை – (செல்வராகவன்)

ஜனனம் – (ரமேஷ்)

ஜூன் ஜூலை – வெளியாகாத படம் / தயாரிப்பு நிறுத்தப்பட்டது

இது காதல் வரும் பருவம் – (கஸ்தூரி ராஜா)



திரைப்படமாக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் இவரது சில நாவல்கள்:

தாயுமானவன்

பயணிகள் கவனிக்கவும்

சினேகமுள்ள சிங்கம்

மெர்க்குரி பூக்கள்

அகல்யா

இரும்புக் குதிரைகள்

பொய்மான்

கரையோர முதலைகள்





ம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் நடிக்க, படம் எடுக்க இப்போது அல்லது இங்கே யார் இருக்கிறார்கள்… அவதாரங்கள் போலவே கையில் அரிவாளுடணும் உருட்டுக்கட்டையுடனும் துப்பாக்கியுடனும் திரியும் நம் திரை நாயகர்களுக்கு பாலகுமாரன் சொன்ன “என் அன்பு மந்திரம்” புரியுமா?



Posted by அருண்மொழிவர்மன் at 22:59

Labels: எழுத்தாளர்கள், திரைப்படம், பாலகுமாரன் 34 comments:

Bee'morgan said...

வாவ்.. அருமையான தொகுப்பு அருண்மொழிவர்மன்.. பாலகுமாரனின் திரைப்பங்களிப்பைப் பற்றி இவ்வளவு விலாவாரியாக இப்போதுதான் காண்கிறேன்.. பதிந்தமைக்கு நன்றி.. :)

அவர் கருத்துதான் எனக்கும்.. மெர்குரிப்பூக்களின் கண்ணியம் குறையாமல் காட்சியில் எடுக்கும் இயக்குனர் இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.. அல்லது, ஜெயகாந்தன் மாதிரி அவரே வந்து இயக்கினால்தான் உண்டு..



Thu Oct 09, 12:23:00 AM

குப்பன்_யாஹூ said...

நல்ல பதிவு, நல்ல எழுத்து நடை.



வாழ்த்துக்கள் நண்பரே.



இன்றைய வேகமான சூழ்லில் வேகமான திரை படங்கள் மத்தியில் பாலகுமாரனின் நிதானமான வசங்கள் மிகவும் தேவை.



தங்களது விருப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



குப்பன்_யாஹூ



Thu Oct 09, 12:24:00 AM

தமிழ் விரும்பி said...

நல்ல பதிவு. உங்களைபோல எனக்கு பாலகுமாரன் மீதான ஈடுபாடு இருக்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்றல்ல. வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்குமா என்று ஏங்குகிறேன்.



Thu Oct 09, 02:02:00 AM

விசாகன் said...

நன்றி நண்பா,



நீங்கள் எல்லோரும் பாலகுமாரன் பற்றி கதைக்கும் போது இருந்து கேட்ட கேள்வி ஞானமே உள்ளது. ஆனால் அவர் வசனம் எழுதிய படங்களைப்பார்த்து இருக்கிறேன். நறுக்கான வசனங்கள். அண்மையில் ஞாநி உடனான குமுதம் இணையத்தள பேட்டியில் கருத்துக்களை தனக்கே உரித்தான் முறையில் ஆணித்தரமாக முன்வைக்கிறார். ஞாநி தனிப்பட்ட வாழ்க்கையை கிளறினாலும், அவர் நிதானமாகவே பதில் அளிக்கிறார். மீண்டும் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. உங்களைப்போல் நண்பா எங்களால் முடியாது.



Thu Oct 09, 02:07:00 AM

நந்தா said...

நல்ல விவரத் தொகுப்பு. பல விஷயங்கள் புதிதாய் தெரிந்துக் கொண்டே. பாலுகுமாரனின் எழுத்துக்களின் மீதான காதலை பதிவைப் படிக்கையிலேயே தெரிகிறது.



http://blog.nandhaonline.com



Thu Oct 09, 07:21:00 AM

Bleachingpowder said...

இப்பதிவை எழுத நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.



குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.



Thu Oct 09, 08:20:00 AM

Thanjavurkaran said...

தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது.



அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்



Thu Oct 09, 09:21:00 AM

தமிழ்ப்பறவை said...

நல்ல விரிவான பதிவு. நான் தேடிக்கொண்டிருந்த பல தகவல்களை அநாயசமாகச் சொல்லிவிட்டீர்கள்.பழைய பாலகுமாரன் எழுத்துக்களுக்கு நான் வாசகன்.அவர் ஒரு சிறந்த இயக்குனராக முடியுமோ இல்லையோ...சிறந்த கதை,வசன,திரைக்கதை ஆசிரியராகச் சொலிக்கலாம்.அதாவது திரைத்துறையின் பேப்பர் வொர்க்கில்...



Thu Oct 09, 02:23:00 PM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் bee'morgan



வருகைக்கு நன்றி.

ஜெயகாந்தன் மாதிரை அவரே வந்து இயக்கினால் தான் முடியும். ஆனால் இப்பொது வரும் சில புதுமுக இயக்குனர்களும் நம்பிக்கை தருகிறார்கள். பார்ப்போம்.



Thu Oct 09, 06:15:00 PM

அருண்மொழிவர்மன் said...

குப்பன் யாஹூ



அவருடைய வசனங்கள் மற்றும் கதைகளில் கூட ஒரு நிதானம் காணப்படும். உதாரணமாக அகல்யாவில் வரும் சிவசு அல்லது அவர் வசனம் அமைத்த உல்லாசம் படத்தில் வருகின்ற விக்ரம் கதாபாத்திரம்



Thu Oct 09, 06:17:00 PM

அருண்மொழிவர்மன் said...

தமிழ் விரும்பி



தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள். எந்த ஒரு வாசகனும் வாழ்வில் கட்டாயம் பாலகுமாரனை கடந்து தான் வரவேண்டும். அது ரசனைக்கு மட்டுமல்ல, தெளிவுக்கும் நல்லது. முக்கியமாக அவரது கற்றுகொண்டால் குற்றமில்லை, உயிரில் கலந்து உணர்வில் நனைந்து புத்தகங்கள்.



Thu Oct 09, 06:19:00 PM

அருண்மொழிவர்மன் said...

விசாகன்

சிலருக்கு பற்றவர்காளின் ரணங்களை கீறி கீறி சந்தோஷப்படும் ஒரு வித மனோ வியாதி உள்ளது. அதில் ஞாநியும் அடக்கம். கலைஞரை துணைவி -மனைவி என்று இவர் செய்யாத கிண்டலில்லை,. ஆனால் தனது தந்தையை இவர் விட்டு கொடுத்ததும் இல்லை.



Thu Oct 09, 06:24:00 PM

அருண்மொழிவர்மன் said...

//குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.//



கமலின் பல படங்களுக்கு, டைட்டிலில் பெயர் வருகிறதோ இல்லையோ, சுஜாதா, பாலகுமாரனின் பங்உ இருந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கமல் மிக நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது .



ஆனால், நான் அறிந்தவரை பாபா படத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்குதான் இருந்திருக்கவேண்டும்.



Thu Oct 09, 06:39:00 PM

அருண்மொழிவர்மன் said...

//தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது.



அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்//



அப்படியா... யார் யார் நடித்தார்கள்...



Thu Oct 09, 06:41:00 PM

அருண்மொழிவர்மன் said...

தமிழ்ப்பறவை...



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு இயக்குனராகவேண்டும் என்ற ஆர்வத்தில் குறுகிய காலத்திலேயே சினிமாவின் பல துறைகளிலும் தீவிரமான அக்கறையை காட்டியிருக்கிறார் பாலா. அதை பார்க்கும்போது அவர் வென்றிருப்பார் என்றொரு நம்பிக்கை தோன்றுகிறது.



Thu Oct 09, 06:53:00 PM

கானா பிரபா said...

அருமையான கட்டுரை அருண்மொழி, இது இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்



Thu Oct 09, 10:30:00 PM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் பிரபா.



உங்கள் ஆதரவுக்கு



நான் பதிவுகள் எழுத தொடங்கிய நாட்களில் நீங்கள் தந்த ஆதரவு மிக முக்கியமானது. அது எனக்கு பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. இப்போது உங்கள் பதில்கள் காண்கையில் மிகுந்த உற்சாகம் கொள்கிறேன்.



தொடர்ந்து நான் எழுத அது என்னை இன்னும் தயார்படுத்தும்



நன்றிகள்



Thu Oct 09, 10:49:00 PM

சரவணகுமரன் said...

நல்ல பதிவு.



Fri Oct 10, 02:33:00 AM

K.Guruparan said...

Good ,Suthan keep it up!!



Sat Oct 11, 03:01:00 AM

கானா பிரபா said...

http://kanapraba.blogspot.com/2008/10/blog-post.html

இந்தச் சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு அன்பாக நான் அழைப்பவர்கள். அழைப்பினை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.



Tue Oct 14, 09:03:00 AM

முரளிகண்ணன் said...

super post. excellent narration



Fri Nov 21, 05:41:00 AM

அண்ணாகண்ணன் said...

நல்ல அலசல். பாலகுமாரனால் திரைப்பட இயக்குநராகவும் ஒளிர முடியும். ஆனால், அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்.



Tue Aug 03, 03:20:00 PM

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் அண்ணாகண்ணன்,



//அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்//



இதை பணம் உழைப்பது என்ற கருத்துடன் எழுதி இருந்தால் அதை ஏற்கச் சற்றுச் சிரமமாக உள்ளது,

ஒரு எழுத்தாளரால் இயக்குனரை விட அதிகமாக (தமிழ்ச்சூழலில்) பணம் உழைக்க முடியுமா?



Tue Aug 03, 08:38:00 PM

Muthu said...

இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.



அன்புடன்

முத்து



Thu Aug 12, 01:09:00 AM

Ravikutty said...

பாலகுமாரனின் எழுத்துக்களை அந்த கால கட்டத்தில் தேடிச் சென்று படித்த பலரில் நானும் ஒருவன். அவரது திரையுல முயற்ச்சிகள் பற்றி ஓரளவு தெரிந்தாலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பல விஷ்யங்கள் புதிது. ஒரு நல்ல‌

இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.



Thu Aug 12, 04:02:00 AM

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் முத்து



//இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.//



அதையும் நான் வாசித்திருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் அவரே இயக்குணர் தொழில் தந்திரம் மிகுந்தது என்று சொல்லி அதை விட்டு விலகியதாக சொல்லியிருக்கின்றா. இன்னமும் சொல்லப் போனால், பந்தயப் புறா நாவலில் 'வாழ்வில் தந்திரம் மிகும்போது நேர்மை விட்டு விலகிவிடுகின்றது' என்றும் சொல்லி இருக்கின்றார்



அவர் இயக்குணார் தொழில் பற்றிய விருப்பங்களில் இருந்தாலும், உதவி இயக்குணராக பணியாற்றிய காலங்கள் சலிப்புகளாலும், ஏமாற்றங்களாலுமே நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது



Fri Aug 13, 01:32:00 AM

அருண்மொழிவர்மன் said...

@ravikutty



//இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது//



இதே எண்ணம் எனக்கும் உண்டு



Fri Aug 13, 01:34:00 AM

Prasannaakumar MP said...

idhanudan THALAYANAI POOKAL naavalum serthukolungal nanbaa!!



Sun Aug 15, 12:58:00 AM

அருண்மொழிவர்மன் said...

தலையணைப் பூக்களை எத்தனை தூரம் ப்டமாக்க முடியும் எனத் தெரியவில்லை,உதாரணமா அதில அலைபாயுதே பாடல் பற்றி எழுதியதை எந்டஹ் ஒரு இயக்குண்ர் கொம்பனாலும் காட்சிப்படுத்த முடியாது



Sun Aug 15, 01:04:00 AM

பிரியமுடன் ரமேஷ் said...

மிகவும் அருமையான தொகுப்பு...பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே



Wed Aug 25, 07:54:00 AM

Erode Nagaraj... said...

:)

http://erodenagaraj.blogspot.com/2009/05/blog-post.html



Sat Aug 28, 03:32:00 PM

J. Ramki said...

..இரும்புக் குதிரைகள்..



இதில் க் கிடையாது. ஏன் கிடையாது என்பதற்கு நாவலில் அவரே ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். க்கை நீக்கிவிடவும். :-)



Fri Oct 08, 12:40:00 PM

thamizhan said...

பாலகுமாரனை சிம்சன் குருப்-டாபே-யில் வேலை செய்யும்போது-பிரதாபசந்திரன்-வழக்கின்போது-தெரியும்.koviexpress ல் இது நம்ம ஆளு படப்பிடிப்பிற்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது,நானும் பயணித்தேன் .பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.அவருடைய எழுத்துக்கள்,கதைகளில் அவருடைய அன்றன்றைய நிலையையே பிரதிபலித்து வந்தது என்பதே உண்மை.அவர் நாஞ்சில் பி,டி.சாமியைபோலவோ,ராஜேஷ்குமாரைப்போலவோ,சுஜாதவைப்போலவோ ஒரே நிலைப்பாட்டுடன் எழுதுபவர் இல்லை என்பதால்தான் முதல் கதைகளால் கவரப்பட்ட வாசகர்கள் பின்னர் வந்த எழுத்துக்களால்,கதைகளால் ஏமாற்றம் அடைந்தார்கள்.அவரால் இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.



Mon Dec 06, 04:44:00 AM

mp said...

மிகவும் அருமையான தொகுப்பு...பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.




Sanga kavithai...

நாராய் நாராய் செங்கால் நாராய்


by RV on April 6, 2011

(மீள்பதிவு)



எனக்கு கவிதை அலர்ஜி உண்டு என்றாலும் சில கவிதைகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த தமிழ் கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கூட போட்டிருந்தேன். அதில் விட்டுப் போன ஒரு கவிதை.



நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே



சிறு வயதிலேயே பிடித்துப்போன ஒரு கவிதை இது. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் என்ற வரிகளில் இருக்கும் அழகான படிமம், நனை சுவர் கூரை கனைபடு பல்லி, கையது கொண்டு மெய்யது பொத்தி ஆகியவை கொண்டு வரும் வறுமையின் காட்சிகள், பாட்டு பூராவும் இழைந்திருக்கும் சோகம், சந்தத்தை மொழி பெயர்க்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கக் கூடிய கருத்து எல்லாமே மிக அற்புதமாக இருக்கிறது.



கவிதையை எழுதியவர் பெயர் தெரியவில்லை. கவிதையில் சத்திமுத்த வாவி என்று ஒரு இடத்தில் வருகிறது, அதனால் எழுதியவரையும் சத்திமுத்தப் புலவர் என்றே குறிப்பிடுகிறார்கள்.



இன்னும் கோனார் நோட்ஸ் இல்லாமல் பாட்டு புரிகிறது. நான் மொழியை கருத்துகளை பரிமாறக் கொள்ள உதவும் ஒரு கருவி என்ற அளவில் மட்டுமே பார்ப்பவன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றால் கொஞ்சம் தள்ளிப் போய் முழங்குப்பா, காது ரொய்ங் என்கிறது என்று சொல்லக் கூடியவன். ஆனால் இதைப் படிக்கும்போது நான் தமிழன், இது என் மொழி, பல நூறு வருஷங்களுக்கு முன்னால் சாரமுள்ள இந்த கவிதையை இன்றும் புரியும் வார்த்தைகளில் எழுதியவன் என் பாட்டன் என்று ஒரு பெருமிதம் ஏற்படுகிறது என்று பீற்றிக்கொண்டேன். உடனே இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்ஸ் (பகவதி பெருமாள்) “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” என்று பாட ஆரம்பித்துவிட்டான். அவன் போன்றவர்களுக்காக எழுதிய நோட்ஸ் கீழே.



வரி பொருள்

நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற

பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே

நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்

வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்

எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி

நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட

பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்

எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்

கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி

காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி

பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்

ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்!



இது சங்கக் கவிதையா தனிப் பாட்டா எதுவும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!



ஒரு மங்கலான நினைவு -”எங்கள் வாத்தியார்” ஏதோ ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ரிடையர் ஆன ஏழை வாத்தியார்; ஏதோ பெரிய செலவுக்காக பழைய மாணவர்களிடம் பண உதவி கேட்கப் போவார். அப்போது நாராய் நாராய் செங்கால் நாராய் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார்.



தகவல் தந்த சாரதாவுக்கு நன்றி!

Jayamohan.

ஜெயமோகனுடன் கொஞ்ச நேரம்


by RV on பெப்ரவரி 18, 2011

சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சில கதைகளைப் படித்துவிட்டு மீண்டும் மீண்டும் அந்தக் கதைகளேதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. என்னை விடுங்கள், என் பனிரண்டு வயதுப் பெண்ணுக்கு வணங்கான் என்ற கதையை (பகுதி 1, பகுதி 2) சொல்ல ஆரம்பித்தேன், அவள் ஹோம்வொர்க் பண்ணமாட்டேன் கதையை சொல் என்கிறாள். அவளுக்கு ஜாதி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது, அவளையே கதை கட்டிப் போடுகிறது. (மொழிபெயர்த்து தருகிறேன், நீயே படித்துக் கொள் என்று கொஞ்சம் அடக்கி வைத்திருக்கிறேன்.)



ஜெயமோகன் எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் பிஸ்தாதான். அவர் அமெரிக்கா வந்தபோது அவரை சில சமயம் சந்திக்க முடிந்தது. சுவாரசியமான, எதிரில் இருப்பவர் லெவலில் பேசும், அதே நேரத்தில் அவர்களை patronize செய்யாமல் பேசுபவர். (ஆண்டன் செகாவும் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று படித்திருக்கிறேன்.) அப்போது எழுதிய பதிவை மீண்டும் மீள்பதித்திருக்கிறேன்.



ஜெயமோகன் ஃப்ரீமாண்டுக்கு வருகிறார் என்று தெரிந்தபோது அவரை சந்திக்கப் போவதா வேண்டாமா என்று எனக்கு இரண்டு மனதாக இருந்தது. காரணம் ரொம்ப சிம்பிள் – அவருடன் என்னத்தை பேசுவது? அவரிடம் எனக்கு விஷ்ணுபுரம், பி.தொ.நி. குரல், காடு போன்ற புத்தகங்கள் பெரும் சாதனைகளாக தெரிகின்றன என்று சொல்லலாம். அது அவருக்கு தெரியாமலா இருக்கும்? எனக்கு கன்யாகுமரி பிடிக்கவில்லை என்று சொல்லலாம் – அது அவ்வளவு மரியாதையாக இருக்குமா? வயதாக ஆக புதியவர்களுடன் small talk தவிர வேறு எதுவும் சாத்தியம் இல்லாமல் போகிறது.



அவரை சந்திக்க முக்கியமான காரணம் என் மனைவிதான். ஹேமா திருப்பி திருப்பி சொன்னாள் – அவர் புத்தகங்களை பற்றி நிறைய எழுதுகிறார், உங்களுக்கும் புத்தகப் பித்து அதிகம், போய்ப் பாருங்களேன் என்று ஹேமா கொடுத்த ப்ரெஷரில்தான் நான் அவரை சந்திக்க போனேன்.



நடுத்தர உயரம், பருமன். தலையில் இன்னும் நிறைய கருப்பு முடியும் கொஞ்சம் நரையும் இருக்கிறது, ஆனால் பின் தலையில் வழுக்கை லேசாக தெரிகிறது. (நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் முதலில் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்று கவனிப்பேன். சொந்தக் கதை சோகக் கதை) மீசையை எடுத்த பிறகு இன்னும் இளமையாக தெரிகிறார். மலையாள accent உள்ள பேச்சு – Condemborary என்றால் Contemporary என்று அர்த்தம். நாஞ்சில் நாட்டு பேச்சு அவ்வப்போது வருகிறது – சொல்லுதேன் என்பார்.



தங்கு தடையில்லாத பேச்சு. சொல்ல வரும் விஷயம் சாதாரண பேச்சில் கூட பல வருஷம் யோசித்து வைத்தது போல் செறிவாகவும், திட்டவட்டமாகவும் வந்து விழுகிறது. அடுத்தவர்கள் பேச்சை கவனிக்கிறார், பதில் சொல்கிறார் ஆனால் பெரும்பாலும் நடப்பது உரையாடல் இல்லை, லெக்சர்தான். ஒரு ப்ரொஃபஸர் – மாணவர்களோடு நன்றாக கலந்து பேசுபவர் – க்ளாஸ் எடுக்கிற மாதிரித்தான். அது பாந்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனிதர் படித்திருப்பது நிறைய. வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சிந்தனை மூலமும், புரிந்து கொண்டிருப்பதும் நிறைய. விஷயம் தெரிந்தாலும் பலரால் அதை கோர்வையாக எடுத்து சொல்ல முடியாது – இவருடைய பெரிய பலம் சொல்ல வரும் விஷயத்தை கோர்வையாக, ஒரு சதஸில் தன் கருத்தை எடுத்து வைப்பவர் போல் சொல்ல முடிவதுதான்.



தூணையும் பற்றி பேசுவார், துரும்பையும் பற்றி பேசுவார் – சுவாரசியமாக. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விருந்து உபசரிப்பு முறைகள், இந்திய பண்பாட்டின் கூறுகள், ஜாதியை பற்றி டி.டி. கோசாம்பி என்ன கூறுகிறார், காந்தளூர்சாலை கலமறுத்தருளி என்று ராஜ ராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் வருவதன் பொருள் என்ன என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பேப்பர், திருவண்ணாமலை தீபம் என்ற ஐதீகம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் எதை பற்றி வேண்டுமானாலும் பேச ரெடி. மார்க்சிய முறைப்படி வரலாற்று ஆய்வுகள், மலையாள சினிமா, மத்திய பிரதேசத்தில் இருக்கும் வறுமை, இலக்கிய சர்ச்சைகள், மேல் நாட்டு இலக்கியங்கள் எல்லாம் grist to his mill. அதே நேரத்தில் வெட்டி பேச்சு கிடையாது. நடிகை நிலாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் என்ன உறவு, நயனதாரா பிரபு தேவா கல்யாணம் நடந்துவிட்டதா என்றெல்லாம் பேசுவதில்லை. சுவாரசியமாக, அதே நேரத்தில் உருப்படியாக பேச வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாகவே வைத்திருக்கிறார்.



எப்படி மறுத்து பேசினாலும் கோபம் வருவது இல்லை. சுற்றி இருக்கும் யாருக்கும் தன்னை போல் படிப்பும் உழைப்பும் இல்லை, இந்திய வரலாற்றை, தத்துவத்தை, பண்பாட்டை மேலோட்டமாகவே அறிந்தவர்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் கேட்கும் எந்த இடக்கு மடக்கு கேள்விக்கும் சலிக்காமல் விளக்கம் சொல்கிறார். அவரை எரிச்சல் ஊட்டுவது இரண்டு விஷயங்கள் (எனக்கு தெரிந்து) – ஒன்று அவர் பேசும்போது கவனிக்காமல் பராக்கு பார்ப்பது; இரண்டு இந்தியாவை தாழ்த்தி பேசும் மனப்பான்மை. பலரும் நான் பெரிய பிஸ்தா, இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற ரேஞ்சில் இவரிடம் பேசி இருக்கிறார்கள் போல தெரிகிறது. நான் பார்த்த கூட்டத்தில் உண்மையில் பிஸ்தா அவர்தான்.



தான் பெரிய எழுத்தாளர், தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்ற பெருமிதம் அவரிடம் இருக்கிறது. (என் கண்ணில் அவர் உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.) ஆனால் கர்வம் என்பது கொஞ்சம் கூட இல்லை. எதிரில் இருப்பவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்பான்மை துளியும் இல்லாதவர். அடுத்தவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து அதை மறுத்தோ ஆமோதித்தோ விளக்கம் சொல்வார். நாம் ஏதாவது சொல்லும்போது கவனிக்காமல் பராக்கு பார்க்கும் பழக்கம் கிடையாது.



ராத்திரி தூங்கவே மாட்டாரோ என்று தோன்றியது உண்டு. ஒரு நாள் இரவு பனிரண்டு ஒரு மணி வரை பேசிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் நான் வீட்டுக்கு வந்த பதினைந்து நிமிஷத்துக்குள் இரண்டு பதிவு போஸ்ட் செய்திருக்கிறார். அட ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் அதை கடைசி ஒரு முறை சரி பார்க்க மாட்டாரா?



அவருடன் நாலைந்து முறை பேச முடிந்தது. ராஜன் வீட்டில் சில முறை சந்தித்தோம்; என் மற்றும் பக்ஸ் வீட்டுக்கு வந்தார். ஒரு கலந்துரையாடலில் வந்தவர்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டார். ஒரு உரை, மற்றும் கேள்வி பதில் நன்றாக அமைந்திருந்தது. இவரை மாதிரி ஒரு தமிழ் இல்லை சரித்திர வாத்தியார் இருந்தால் அது பெரிய அதிர்ஷ்டம்.



சுருக்கமாக சொன்னால் அவரை இன்னும் 4 முறை பார்த்திருக்கலாமே, இன்னும் பேசி இருக்கலாமே, பேசுவதை கேட்டிருக்கலாமே, என்று தோன்றுகிறது. மிக அபூர்வமான மனிதர். அவர் எழுத்துக்கள் மட்டும் இல்லை, அவர் பேச்சும் மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கிறது. என்னவோ ஊரிலிருந்து நிறைய நாளாக பார்க்காத ஒரு அதி புத்திசாலி ஒன்று விட்ட அண்ணன் வந்து போனது போல் இருக்கிறது.



சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்.


Bharathi mani.Top Ten Tamil Books.

படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்


by RV on அக்டோபர் 18, 2010

நான் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்களை இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன். இவற்றை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அல்லது பாதி படித்துவிட்டு வைத்திருக்கிறேன். (சில சமயம் நல்ல புத்தகம் என்று தெரிந்தும் முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்பதுண்டு.)



1.ஜெயமோகனின் கொற்றவை – ஆரம்பம் அற்புதமாக இருந்தது. முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன்.

2.ஜோ டி க்ரூஸின் ஆழி சூழ் உலகு – இதுவும் பாதி படித்து வைத்திருக்கும் புத்தகம்தான்.

3.ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் – இவை இரண்டையும் ஏனோ ஒரே புத்தகமாகத்தான் கருதத் தோன்றுகிறது.

4.சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்

5.பாலகுமாரனின் உடையார்

6.நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்

7.நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் – இது இயக்குனர் சேரன், மற்றும் ரதி நடித்து சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமாக வந்தது.

8.அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி

9.வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்

10.பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை

போனஸ்:



1.பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள்

2.கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள்

3.கிருத்திகாவின் வாசவேஸ்வரம்

4.தேவனின் சி.ஐ.டி. சந்துரு

5.அ.கா. பெருமாளின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி

இதைப் படிப்பவர்களும் தாங்கள் படிக்க விரும்பும் தமிழ் புத்தகங்களை சொல்லுங்களேன்!



வியாழன், 11 ஆகஸ்ட், 2011

Ramesh.(Prem).

மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 6:28 AM
வகை: கதைகள், ரமேஷ் : பிரேம்

1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.



குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் சப்தம். இடம் மாறும் காலடிகளின் ஓசை, கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வாகனங்கள் எழுப்பும் இரைச்சல்களும் அடங்கிவிட, சற்றுமுன் மணியோசையில் அதிர்ந்து கோபுரத்தை விட்டுப் பறந்த புறாக்கள் மீண்டும் வந்தடையும் சிறகோசை. எல்லாம் முடிந்துவிட்டது. ஆம் அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது. நீர் கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.



கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நனைந்தபடி நடந்துகொண்டிருக்கும்போது முதன்முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.



நெடிய உருவம். தமிழனா ஐரோப்பியனா என அறுதியிட இயலாதத் தோற்றம். கட்டுத் தளராத குரல். பிரெஞ்சு மொழி பேசிப் பழகிய வாய்க்கே உரித்தான கரகரப்போடு வெளிப்படும் தமிழ். எந்தவொரு அசைவிலும் அவசரங்காட்டாத ஒரே சீரான தாள கதி. பெர்னாரை இத்தனை சீக்கிரத்தில் இழந்துவிடுவேன் என நான் நினைத்ததில்லை.



கப்பித்தேன் மரியூஸ் ஸவியே தெருவில் வெளித்தோற்றத்தில் காரை பெயர்ந்து இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை. வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன் கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை. கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க, எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறு மரம்போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள். பெர்னார் குடும்பத்தினரின் பல்வேறு வடிவங்கள் கொண்ட தொப்பிகள். பல தொப்பிகள் தங்களுக்கானத் தலைகளை என்றோ இழந்துவிட்டதன் சோகத்தை என்னைக் கண்டதும் மீண்டும் பொருத்திக்கொண்டு அசைந்தன. உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம். தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற வெள்ளாடையுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள். அதற்கடுத்து சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் அவருடைய பூசையறை என்று சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமான ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில், புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஒரு முறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப்பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அதற்கு அவள், ‘மெர்ஸ்யே திட்டுவாரு’ எனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.



பெர்னாரின் வினோதமான பழக்கவழக்கங்களையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.



ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பெர்னார் ஒயினில் தனது சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கி அருந்தியதைக் கண்ட நாங்கள் எல்லோருமே திடுக்கிட்டோம். மேலும் அவர் புகையிலை ஊறிய ஒயினை அருந்துவதற்கு ஈடான ருசியும் போதையும் வேறெவற்றிலும் இல்லை எனவும் சொல்வார்.



பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.



பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார். விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார். மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்துத் தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.



எனக்கு எப்பொழுதுமே பிறருடைய வாழ்க்கை பற்றிய செய்திகளில் ஈடுபாடு இருந்ததில்லை. பெர்னாருடைய வாழ்க்கைக் கதையில் எனக்குத் தேவைப்படுவது எதுவுமே இல்லை என்றபோதும், என் மனைவிக்கு உதவுமே என அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன்.



அப்படித்தான் ஒருமுறை அவர் சொன்னார்: தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று. வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது, எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.



வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வள்ளலார் தான் நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார். கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் சொல்ல; தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேசவேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.



ஒருமுறை பெர்னாரிடம் நான் கேட்டேன், “உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன். உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்குத் திறந்து காட்டவில்லையே” என்று. அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு நிதானமாக, “வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்” என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். பிறகு அதையே தமிழிலும் சொல்ல எத்தனித்து சரியான சொற்கள் வந்து சேராமல் குழறினார்.



அவர் வீட்டில் குழல் விளக்குகளை பயன்படுத்துபவர் அல்லர். எல்லாயிடங்களிலும் குண்டு விளக்குகளையே பொருத்தியிருந்தார். வீட்டின் பழமையும் குண்டு விளக்கின் ஒளியும் நல்ல போதையில் ஒருவித மாயப் புதிரென மனசெல்லாம் படியும். அப்படித்தான் அன்றும் இருந்தது. மஞ்சள் மின்னொளியில் வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது. நான் பெர்னாரிடம் சொன்னேன், “வள்ளலார் இறக்கவில்லை. அவர் மறைந்துவிட்டார். சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள். நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்.”



பெர்னார் கடகடவென சிரித்து “போதையில் உனது பிரெஞ்சு மொழி அப்படியொன்றும் மோசமில்லை” என பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாகத் தெரிந்தது.



நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோ” எனக் கத்திவிட்டேன்.



கிழவர் ஆடிப்போய்விட்டார். தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்துசென்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூசையறைக்குள் சென்றார். பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்றுத் தெரிகின்றன. என் மனைவியிடன் நான் அதைச் சொல்ல அவள் கலவரத்தோடு என் மனோநிலையைச் சோதித்தாள். அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் எனக் கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக்கூடாது என என் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்தியைக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் அவர் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் பிரான்சிலிருந்து வந்த பிறகு ஈமக்கிரியையை முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை.



ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசினான். தான் இந்த வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி கட்ட இருப்பதாகவும் நான்தான் அவனுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டான். நான் கலவரப்படலானேன்.



“கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடைய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்தானே” என ஒருவிதக் கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.



நான் மௌனமாக இருந்தேன்.



“சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”



நான் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தேன். பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக்கொள்ளலாமா என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.



அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன்.



“நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டாள்.



மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் “என்ன முடிவு செய்தீர்கள்” எனப் பதறினான்.



”அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல, இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ, அற்புதமோ இதன் மூலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது” என நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.



நீண்டநேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான்.



விடிந்தால் போகி. விடிய விடிய குடித்தபடி இருந்தோம். என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம். சவப்பெட்டி ஒரு காவித்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கிவிட்டு ஆணியறையப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித்துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சடசடவென தீ எழுந்தது.



ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர். அரைமணி நேரத்ஹ்டில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்துகொண்டிருந்தது.