வியாழன், 18 ஆகஸ்ட், 2011

Pramil.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்


சமுத்திரக் கரையின்

பூந்தோட்டத்து மலர்களிலே

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி...

வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல்நோக்கிப் பறந்து

நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்

உவர்த்த சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.







******



(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா“ என்று

அண்ணாந்தேன்...

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.



****



நன்றி: அரியவை